வனம் புகு படலம் - 2108
பரத்துவாச முனிவன் இயல்பு (2108-2109)
2108.
குடையினன்; நிமிர் கோலன்;
குண்டிகையினன்; மூரிச்
சடையினன்; உரி மானின்
சருமன்; நல் மர நாரின்
உடையினன்; மயிர் நாலும்
உருவினன்; நெறி பேணும்
நடையினன்; மறை நாலும்
நடம் நவில்தரு நாவான்;
குடையினன் - குடை உடையவன்; நிமிர் கோலன் - உயர்ந்த
தண்டத்தைஏந்தி இருப்பவன்; குண்டிகையினன் - கமண்டலம் உடையவன்;
மூரிச் சடையினன் -மிகுந்த சடைமுடியை உடையவன்; உரிமானின்
சருமன் - உரிக்கப்பெற்ற மான்தோலைப்போர்த்திருப்பவன்; நல் மர
நாரின் உடையினன் - அழகிய மரவுரி ஆடையை உடைவன்; மயிர்
நாலும் உருவினன் - மயிர் தொங்குகின்ற வடிவத்தை உடையவன்; நெறி
பேணும்நடையினன் - நன்னெறியைப் பாதுகாக்கும் ஒழுக்கத்தை
உடையவன்; மறை நாலும் உருவினன் -மயிர் தொங்குகின்ற வடிவத்தை
உடையவன்; நெறி பேணும் நடையினன் - நன்னெறியைப்பாதுகாக்கும்
ஒழுக்கத்தை உடையவன்; மறை நாலும் நடம் நவில்தரு நாவான் -
நான்குவேதங்களும் எப்போதும் நடனம் இடுகின்ற நாக்கினை உடையவன்.
பரத்துவாச முனிவன் முந்நூறு வருஷ காலம் பிரமசரிய விரதம் பூண்டு
வசித்தான் என்று வேதங்கூறுதற்கேற்ப இங்ஙனம் கூறினார். ‘நூலே கரகம்
முக்கோல் மணையே, ஆயுங்காலை அந்தணர்க்குரிய’என்னும்
தொல்காப்பியத்தின் படி (தொல். பொருள், மரபு. 71) அந்தண முனிவனாகிய
பரத்துவாசனை வருணித்தாராம். உடம்பெல்லாம் மயிர் நிறைந்திருத்தலை
‘மயிர் நாலும் உருவினன்’என்றார். வேதத்தில் நிறைந்த பாண்டித்யமும்,
எப்போது எங்கே எதைக் கேட்டாலும்சொல்லத்தகும் ஆற்றலும் உடையான்
என்பது தோன்ற, ‘மறைநாலும் நடம் நவில்தரு நாவான்’என்றார். 21
