லின் சீசு
லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின், குவங்தோவ் மகாணத்தின் சிறப்பு ஆளுநராக (Special Commissioner of Guangzhou) 19ம் நூற்றாண்டில் இருந்தவராவர். இவர் பிரித்தானியாவினால், சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைப்பெற்று வந்த அபின் போதைப்பொருள் வணிகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஆவார். இதனால் ஏற்பட்ட முதலாம் அபின் போரிற்கு காரணமானவரும் ஆவர். இன்றும் சீன மக்களால் மாவீரனாகப் போற்றப்படுகிறார்.
போதைப்பொருள் வணிகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
பிரித்தானியா தனது சொந்த நாட்டிற்குள் அபின் போதைப்பொருள் வணிகத்தை தடை செய்தது, எனினும் அதே அபின் வணிகத்தை சீனாவின் தடையுத்தரவையும் மீறி அந்நாட்டில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதனால் சீன மக்கள் பலர் இதற்கு அடிமை ஆகினர். இதனைக் கண்டித்து, அதனை இடைநிறுத்தக் கடும் முயற்சிகளை எடுத்தார். பிரித்தானியரின் ஆதரவுடனும், அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் அபின் வணகத்தில் ஈடுப்பட்டோரின், அபின் போதைப்பொருள் கிடங்குகளை தேடித் தேடி அழித்ததுடன், இப்போதைப்பொருள் வணிகத்தில் ஈடுப்பட்டோருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்துடன் அபின் போதைப் பொருட்களை ஏற்றிவரும் பிரித்தானியப் போதைப்பொருள் கப்பல்களையும் தாக்கியழித்தார்.
மக்கள் செல்வாக்கு
இவரது அதிரடி நடவடிக்கைகளால் சீனப் பொது மக்களிடையே லின் சிசு ஒரு துணிச்சல் மிக்க மாவீரராக மதிப்பு பெற்றார். இன்றும் இவரை சீன மக்கள் இன்றும் ஒரு வரலாற்று வீரனாகவே போற்றி வருகின்றனர். இவரது பெயரிலேயே இவரது துணிகர நடவடிக்கைகளை விவரிக்கும் வண்ணம் திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
லின் சீசுவின் நினைவுச் சிலைகள்
லின் சீசுவின் உருவச் சிலைகளும் நினைவு மண்டபங்களும் சீனாவில் பல இடங்களில் எழுப்பப்பட்டன. அமெரிக்கா, நியூ யோர்க் நகரிலும் இவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது. குவிங் பேரரசு பிரித்தானியாவின் படை நடவடிக்கைகளுக்கு பணிந்து செயல்பட்டதால், சீன மக்களிடையே குவிங் பேரரசு செல்வாக்கு இழந்தப்போதும், சீன மக்களிடையே லின் சீசு ஒரு மாவீரனாக இன்றும் போற்றப்பட்டு வருகின்றார். சீனாவில் மட்டுமன்றி சீனர்கள் வாழும் நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும், இவரை ஒரு வரலாற்று வீரனாக நினைவுக்கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
