யூலியசு சீசர்
கையுசு யூலியசு சீசர், சுருக்கமாக யூலியசு சீசர் (ஜூலியஸ் சீசர்,Gaius Julius Caesar) (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) உரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். இலத்தீன் உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
உரோமைக் குடியரசின் வீழ்ச்சிக்கும் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51 இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை ஆங்கிலக் கால்வாய் மற்றும் ரைன் ஆறு வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத் தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார்.
கிமு 53 இல் கார்கெ போரில் கிராசசின் இறப்பிற்குப் பின்னர் பாம்பெ செனட்டுடன் ஒத்துழைக்கத் துவங்கினார்; தனது படைத்துறை சாதனைகளால் செல்வாக்குப் பெற்றிருந்த சீசர் பாம்பெயை எதிர்த்து நின்றார். கவுலில் போர் முடிவுற்றபோது செனட் சீசரை பதவி விலகி உரோமிற்குத் திரும்பப் பணித்தது. இதனை ஏற்க மறுத்த சீசர் கிமு 49 இல் ரூபிகான் ஆற்றைக் கடந்து உரோமானியப் படைகளுடன் கடந்து வந்து இத்தாலியை அடைந்தார். இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் வென்ற சீசர் எதிர்பற்ற சர்வாதிகாரியாக மாறினார்.
அரசை தன் வயப்படுத்திய சீசர், சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலானார். புதிய யூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். குடியரசின் அதிகாரங்களை மையப்படுத்தினார். எக்காலத்திற்கும் சர்வாதிகாரி என அறிவித்தார். இருப்பினும் அரசியல் கிளர்ச்சிகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை; நட்ட நடு மார்ச்சு (15 March) கிமு 44 இல், புரூட்டசின் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். தொடர்ந்து உரோமானிய உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன; இதன் பிறகு அரசியல் சட்டத்தின்படியான முழுமையான குடியரசு நிறுவப்படவில்லை. சீசரின் வளர்ப்பு மகனான ஓக்டோவியசு,பின்னாட்களில் அகஸ்ட்டஸ், உள்நாட்டுப் போர்களில் வென்று ஆட்சியமைத்தார். இவரது ஆட்சியில் உரோமைப் பேரரசு உருவாகத் தொடங்கியது.
ஆங்கில நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்.
யூலியசு சீசர் இளமைக்கால வாழ்வு :-
லூசியஸ் கொர்னேலியஸ் சுலா
யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப் பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.
யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் "Corona Civica" என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். பின்னர் மீண்டும் சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69 ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67 ஆம் ஆண்டில் சுல்லா என்பவரின் பேத்தியான பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப் பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.
ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.
கிளியோபட்ராவுடனான வாழ்க்கை:-
ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.
கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்பதினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு.
கவுல் போர்:-
கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப் பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைப் பெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார்.
கடற்கொள்ளையர்கள் :-
கி.மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப்பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார். ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும் பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.
ஜூலியஸ் சீசரின் மரணம் :-
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
சீசரின் தனிப்பட்ட வாழ்க்கை:-
முதல் திருமணம் கிமு 83 ல் கார்னெலியாவுடன் நடைப்பெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61 ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
மூன்றாவது திருமணம் கிமு 59 ல் Calpurnia Pisonis வுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.
சீசரின் குழந்தைகள்:-
ஜூலியா கிமு 83 அல்லது 82 ல் கார்னெலியா ஜூலியஸ் சீசர் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.
சிசேரியன் கிமு 47 ல் ஏழாம் கிளியோபாட்ரா மற்றும் ஜூலியஸ் சீசருக்கு பிறந்தவர். இவர் 17ம் வயதில் ஆக்டோவியஸ் என்ற சீசரின் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.
பேரரசர் அகஸ்டஸ் என அறியப்பட்ட ஜூலியஸ் சீசர் ஆக்டோவியஸ் சீசரின் வளர்ப்பு மகனாவார். இவர் சீசர் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சீசரின் இலக்கிய படைப்புகள்:-
ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார்.
சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள் :-
ஜூலியஸ் சீசர் - வில்லியம் ஷேக்ஸ்பியர்
சீசர் அன்ட் கிளியோபட்ரா - பெர்னாட்சா
