முதற் காட்சி

bookmark

நேரம் : காலை ஒன்பது மணி.

இடம் : மயிலாப்பூர், "பத்ம விலாசம்" பங்களாவில் முன்புறத்து ஹால்.

பாத்திரங்கள் : விநாயகராவ், எம்.எல்.சி., அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள்.

தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம்.

விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள்.]

விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே?

முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம்.

இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது.

முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.

விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம்.

தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். [போகிறார்கள்]

விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்...ஓஹோ! மணி பத்தாகி விட்டது. [எழுந்து உள்ளே செல்கிறார்.]