மிதிலைக் காட்சிப் படலம் - 715

bookmark

715.

பண்டு வரும் குறி பகர்ந்து. பாசறையின்.
   பொருள் வயினின். பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியில் உயிர் அனைய
   கொழுநர் வர மணித் தேரோடும்.
கண்டு மனம் களி சிறப்ப. ஒளி சிறந்து.
   மெலிவு அகலும் கற்பினார்போல்.
புண்டரிகம் முகம் மலர. அகம் மலர்ந்து
   பொலிந்தன - பூம் பொய்கை எல்லாம்.
 
பண்டு - (தலைவியரைப் பிரிவதற்கு) முன்பு; வரும்குறி பகர்ந்து -
தாம்  மீண்டு  வரும்  காலத்தைக்  குறிப்பிட்டுக் கூறி; பாசறையின் -
போர் செய்யும் பொருட்டும்;  பொருள் வயினின் - பொருள் தேடல்
பொருட்டும்; பிரிந்துபோன  - தலைவியரைப் பிரிந்து சென்ற; வண்டு
தொடர்  -  வண்டுகள்  இடைவிடாது  மொய்ப்பதற்கு  உரிய;  நறுந்
தெரியல் -  மணமுள்ள  பூமாலைகளையுடைய;  உயிர்  அனைய  -
உயிரை  யொத்த; கொழுநர் - தலைவர்;  மணித் தேரோடும் வர -
(குறித்த  காலத்தில்)  அழகிய தேரிலே மீண்டு வர; கண்டு -  அதைப்
பார்த்து; மனம் களி சிறப்ப - மனம் பெரிதும் பூரித்து; ஒளி  சிறந்து
- (தலைவரைப் பிரிந்த  காலத்து  மங்கியிருந்த)  முகங்களின் பொலிவு
மிகக்  கூடி;  மெலிவு  அகலும் - தளர்வு நீங்கிய; கற்பினார் போல்
-கற்புடைய மனைவியர்  போல; புண்டரிகம் முகம் மலர - (தம்மைப்
பிரிந்து சென்ற கதிரவனாகிய தலைவன் தேரிலே வரக்  கண்டு பூரித்து)
முகங்களாகிய தாமரைகள் மலர; (அதனால்) பூம் பொய்கை -அழகிய
பொய்கைகள்;  எல்லாம் -  யாவும்;  அகம்  மலர்ந்து பொலிந்தன
- உள்ளிடம் செழித்துப் பொலிவுற்றன.    

பாசறை:    திய வீடு. பாசறையிற் பிரிதல் என்றதால் போர்  செய்ய
எழுதலாயிற்று.   மணித்தேர்:   ஒலிக்கும்  மணிகள்  கட்டிய   தேரும்
இரத்தினங்கள்  பதித்துள்ள  தேரும். பொருள் வயிற் பிரிவு:  இல்லறம்
இனிது   நடத்த   வேண்டிப்   பொருள்  ஈட்டற்குக்   கலத்திலேனும்
காலிலேனும்  பிரிதல்.  பிரிந்து  சென்ற தலைவர் தேரிலே  திரும்பிவர
மகிழ்ந்த  கற்புடை  மகளிரைக்  கதிரவன் தேரிலே வருவதைக்  கண்டு
முகம் மலர்ந்த தாமரைப் பொய்கைக்கு உவையாக்கினார்.          152