மிதிலைக் காட்சிப் படலம் - 678

bookmark

கோசிகன் திரிசங்குவைத் தன் தவமகிமையால்
வானத்து ஏற்றுதல்

678.

“அரைசன் இப் புலையற்கு என்னே
   அனல்துறை முற்றி. எம்மை
விரைசுக வல்லை என்பான்!
   விழுமிது!” என்று இகழ்ந்து நக்கார்.
புரைசை மா களிற்று வேந்தை.
   “போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன். தவத்தின்” என்ன.
   ஓங்கினன் விமானத்து உம்பர்.
 
(அழைக்கப்பட்ட     தேவர்கள்) அரைசன் - விசுவாமித்திரன்; இப்
புலையற்கு  -  இந்தப் புலையனுக்காக;  அனல்  துறைமுற்றி - யாக
காரியத்தை  நிறைவேற்றத்  தொடங்கி;  எம்மை - எங்களை; வல்லை
விரைசுக  என்பான்  - விரைவில் வருவீராக என்று அழைக்கின்றான்;
என்னே விழுமிது - மிக நன்று இச்செயல்; என்று இகழ்ந்து - என்று
நிந்தித்து;  நக்கார்  -  ஏளனம்  செய்து  சிரித்தார்கள்  -  புரைசை
மாக்களிறு   -  (ஆயினும்  கோசிகன்  விடாமல்)  கழுத்திலே  கயிறு
கொண்ட யானைப்படையுடைய வேந்தை - அத் திரிசங்குவை  நோக்கி
நீ  துறக்கம்  போய்ச்  சேர்ந்திடுக; யானே தவத்தின் - நானே எனது
தவத்தால்; உரை செய்தேன் - கட்டளையிட்டுக் கூறுகிறேன்;  என்ன-
என்று சொல்ல (அவ்வாறே திரிசங்கு); விமானத்து உம்பர் -(கிடைத்த
ஒரு) விமானத்தின் மேல்; ஓங்கினன் - ஏறி உயரச் சென்றான். 

கோசிகன்     வெகுநேரமாக மந்திரங்களைச் சொல்லி அழைத்தும்
அவிர்ப்  பாகத்தைப்  பெறத்  தேவர்கள் வாராமையால் பெருஞ்சினம்
கொண்டான்;  ஓமம்  செய்யும்  அகப்பையை  உயர  எடுத்து. ‘யாகம்
இருக்கட்டும்  என்  தவத்தின்  பயனால்  இவ் வுடம்புடன்  சுவர்க்கம்
செல்லுக.  என்றான்;  முனிவர்  யாவரும் காணத் திரிசங்கு  சுவர்க்கம்
சென்றான்  என்பது.  விழுமிது  -  இகழ்ச்சிக்  குறிப்பு:  எதிர்  மறை
இலக்கணை.                                             115