மிதிலைக் காட்சிப் படலம் - 587
கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு (587-593)
587.
செப்பும்காலை. செங்கம
லத்தோன் முதல் யாரும்.
எப் பெண்பாலும் கொண்டு
உவமிப்போர் உவமிக்கும்.
அப் பெண் தானே ஆயின
போது. இங்கு. அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை
நாடி. உரை செய்வோம்?
செப்புங்காலை - (அச்சீதைக்கு உவமை) சொல்லுமிடத்து;
செங்கமலத்தோன் முதல் - செந்தாமரை மலரில் வாழும் பிரமன்
முதலாக; யாரும் - (எளிய மாந்தர் இறுதியாக) உள்ளவர் எவரும்;
எப்பெண்பாலும் கொண்டு - எந்தப் பெண்ணுக்கும் எண்ணத்தகுந்த
பகுதிகள் எல்லாவற்றிலும் ஒப்புப் பொருளை ஆராய்ந்து;
உவமிப்போர் - உவமிப்பவர்கள்; உவமிக்கும் - உவமானமாக
எடுத்துச் சொல்கிற; அப்பெண் தானே - (அப்பெண்களிலே சிறந்த)
அத்திருமகளே; ஆயின போது - (சீதையாக அந்த இடத்திற்கு)
வந்துள்ளதால்; இங்கு - இந்த இடத்தில்; அயல் வேறு ஓர் ஒப்பு
- அத்திருமகளைவிட வேறு ஓர் உவமைப் பொருளை; எங்கே
நாடி - எந்த இடத்திலே; எவ்வகை கொண்டு உரைசெய்வேம்
- கண்டு எவ்வாறு எடுத்து உரைப்போம்?
சீதைக்கு உவமை கூற இயலாது: ஏனென்றால் அவள் உவமை
கடந்தவள். எவ்வாறெனில். எல்லாப் பெண்களுக்கும் எல்லாராலும்
உவமையாக எடுத்துச் சொல்லப்படுகிறவள் திருமகள். அவளே
இப்போது மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க
அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்? 24
