பகுதி 24
சந்திரசூடன் மேற்கூறிய விவரங்களையெல்லாம், கூறினான். "திருமணத்துக்கு அவசியம் வந்து சேர வேண்டும்" என்று வற்புறுத்தி என்னை அழைத்து விட்டுப் போனான். நானும் கலியாணத்துக்குப் போவதாகத்தான் இருந்தேன்.
இந்த நிலைமையில் ஒரு நாள், திருமணம் வைத்திருந்த தேதிக்கு இரண்டு நாளைக்கு முன்னால், "எதிர்பாராத காரணங்களினால் அழைப்பில் குறிப்பிட்டபடி என் திருமணம் நடைபெறாது, சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சந்திரசூடன் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. எனக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
மறுபடியும் சந்திரசூடனைக் கண்டு பிடித்து, "எனப்பா இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏன் கலியாணம் நின்று போயிற்று!" என்று கேட்டேன்.
"எல்லாம் அந்த சி.ஐ.டி சாயபுவினால் வந்த வினை!" என்றான் சந்திரசூடன்.
"முன்னால் அந்தப் பாதிக் கதையின் பேரில் பழியைப் போட்டாய். இப்போது சாயபுவின் பேரில் பழிபோடுகிறாயே!" என்று கேட்டேன்.
சந்திரசூடன் பின்வருமாறு கதை முடிவைக் கூறினான்:
சென்னைக்கு வந்த பிறகு சந்திரசூடன் பல முறை அந்த ஸி.ஐ.டி. சாயபுவைச் சந்திப்பதற்கு முயற்சி செய்தான்; அவன் அகப்படவேயில்லை. பின்னர் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினான்.
கலியாணத் தேதிக்கு நாலு நாளைக்கு முன்பு ஹமீது அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
"அந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கும் நீர் உதவி செய்ததெல்லாம் சரிதான். ஆனால் இப்போது செய்ய உத்தேசிக்கும் காரியம் சரியில்லை" என்றான்.
"ஏன்! என்ன தவறு? விதவா விவாகத்தை இப்போது எங்கள் ஹிந்து சமூகம் கூட ஒப்புக் கொள்கிறதே! உமக்கு என்ன ஆட்சேபணை!" என்றான் சந்திரசூடன்.
"அவள் விதவை என்பதற்கு என்ன ருசு! புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்...!"
"அது யோசிக்க வேண்டிய விஷயந்தான். புருஷன் உயிரோடிருந்தால் மறு கலியாணங்கூடச் சட்டப்படி செல்லாது! ஆனால் விமான விபத்தைப் பற்றித்தான் அப்போதே எல்லாப் பத்திரிகையிலும் விவரமாக வெளியாகி இருக்கிறதே!"
