பகுதி 23

bookmark

அன்றிரவு மனோன்மணி குடியிருந்த வீட்டுக் கொல்லைப் பக்கம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக பரவி முன் பக்கம் வந்தது. தூங்கிக் கொண்டிருந்த மனோன்மணி திடுக்கிட்டு விழித்தெழுந்தாள். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வதற்கே சிறிது நேரமாகி விட்டது. பிறகு கிழவனையும், கிழவியையும் தட்டி எழுப்பி விட்டாள். அவர்களை முடிந்தவரையில் சாமான்களைக் கொண்டு வந்து சேர்க்கும்படி சொல்லி விட்டுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசற்பக்கம் ஓடினாள். நடுங்கிய கையினால் வாசற் கதவின் உள் தாளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். பிறகு கதவைத் திறக்க முயன்றாள்; ஆனால் கதவு திறக்கவில்லை. இடித்தாள்; உதைத்தாள்; பிறாண்டினாள்! அப்படியும் கதவு திறக்கவில்லை, வெளியில் யாரோ கதவைப் பூட்டியிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவளுடைய பீதி அதிகமாயிற்று. கொல்லைப் புறமாக ஓடினாள். அங்கே நன்றாய்த் தீப்பிடித்துக் குப்குப் என்று எரிந்து கொண்டிருந்தது. பின்னர், மனோன்மணி பித்துப் பிடித்தவள் போல கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தலைவிரி கோலமாய் அலறிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் திடீரென்று வேட்டைக்கார சாயபு அவள் முன் தோன்றி, "குழந்தையை இப்படிக் கொடு!" என்றான். மனோன்மணி மேலும் வெறி கொண்டவளாய், "மாட்டேன்! மாட்டேன்!" என்றாள், சாயபு குழந்தையைப் பலாத்காரமாய்ப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். மனோன்மணி ஜன்னல் பக்கம் வந்து 'ஓ' என்று அலறினாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வாசற் கதவை யாரோ தடால் தடால் என்று மோதும் சத்தம் கேட்டது. பிறகு ஏதோ பிளந்தது, கதவு திறந்தது. "ஐயோ! குழந்தை!" என்று அலறிக் கொண்டு மனோன்மணி வெளியே ஓடிவந்தாள். சாயபுவையும் சந்திரசூடனையும் ஏக காலத்தில் பார்த்தாள். "சாயபு கொன்று விட்டான்!" என்று கத்தினாள். "அதோ குழந்தை பத்திரமாயிருக்கிறது!" என்றான் சாயபு. மனோன்மணி அந்தத் திசையை நோக்கி ஓடினாள். ஆம், குழந்தை பத்திரமாயிருந்தது. குழந்தையை வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுவதும் சிரிப்பதுமாயிருந்தாள். குழந்தை சிறிது அழுதுவிட்டு அப்படியே தூங்கிப் போய்விட்டது.

இதற்குள் பக்கத்திலிருந்த வீடுகளுக்கும் தீ பரவி விட்டது. ஊர் ஜனங்கள் எல்லாரும் வந்து கூடி விட்டார்கள். சிலர் தீயை அணைக்க முயன்றார்கள்; சிலர் வெறுங் கூச்சல் போட்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரசூடன் மனோன்மணி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

மனோன்மணி "நான் சந்தேகப்பட்டது சரியாய்ப் போய்விட்டது. சாயபு வீட்டுக்குத் தீ வைத்தான். சாயபு என் குழந்தையைக் கொல்லப் பார்த்தான்!" என்றான்.

"இல்லை அம்மா, இல்லை - சாயபுதான் உன் குழந்தையையும் உன்னையும் காப்பாற்றினவன். நாங்கள் எல்லோரும் கடைசியில் தான் வந்து சேர்ந்தோம்" என்றான் சந்திரசூடன்.

எவ்வளவு சொல்லியும் மனோன்மணி இதை நம்பவில்லை.

"எது எப்படியிருந்தாலும் சரி, நான் உடனே இந்த ஊரை விட்டுப் போய் விட வேண்டும்" என்றாள்.

சந்திரசூடன் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தான்; மனோன்மணி கேட்கவில்லை.

பண்ணையாரே தம் வீடுகளில் தீப்பிடித்த செய்தி அறிந்து வந்து பார்த்தார். மனோன்மணியையும் குழந்தையையும் தம் சொந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும்படி சொன்னார்.

அதையும் அவள் கேட்கவில்லை.

வெறி பிடித்தவள் போல், "ஊரை விட்டுக் கிளம்பி விட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் அவ்விதமே முதல் பஸ்ஸில் ஏறிச் சென்னைப் பட்டணத்துக்குப் போய்விட்டாள்.

சந்திரசூடன் பிறகு இரண்டு மூன்று நாள் புன்னைவனத்தில் இருந்தான். உயிலும் ரிஜிஸ்டர் ஆயிற்று.

இடையில் மனோகரனுக்கும் சந்திரசூடனுக்கும் ஒரு நாள் அடிதடி சண்டை நடந்தது. அப்துல் ஹமீது குறுக்கிட்டு அங்கே கொலை நிகழாமல் தடுத்தான்.

ஆனால் மனோகரனைக் கொலை வழக்கிலிருந்து தப்புவிக்க முடியவில்லை. பெங்களூரில் நடந்த ஒரு கொலை சம்பந்தமாக இரகசியப் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தது. கடைசியில் பெங்களூர் போலீஸாருக்குத் தடயம் கிடைத்தது. அவர்கள் வந்து மனோகரனைக் கைது செய்து கொண்டு போனார்கள்.

அன்றிரவு வீட்டுக்குத் தீ வைத்தவன் மனோகரனாய்த்தானிருக்க வேண்டும் என்று பண்ணையாருக்கு நிச்சயமாயிருந்தது. அவன் இரவில் திருட்டுத்தனமாக எழுந்து போனதையும், பிறகு திரும்பி வந்து படுத்ததையும் அவர் கவனித்திருந்தார்.

ஆகையினால் அவன் போனதே நல்லதாய்ப் போயிற்று என்று முடிவு செய்து கொண்டார்.

தம்மகனுடைய மனைவியைப் பற்றியும், அவர்களுக்குச் சந்ததி உண்டா என்பது பற்றியும் கூடிய சீக்கிரம் விசாரித்துத் தெரிவிக்கும்படி சந்திரசூடனிடம் கேட்டுக் கொண்டார்.

சந்திரசூடன் இது விஷயமாக ஸி.ஐ.டி. சாயபுவின் உதவியைக் கோரினான். "அதற்கென்ன பார்க்கலாம். சென்னையில் பின்னர் சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு அப்துல் ஹமீது சாயபு விடை பெற்றுச் சென்றான்.

பிறகு சந்திரசூடனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். சில நாளைக்குப் பிறகு மனோன்மணியிடம் கலியாணப் பேச்சை எடுத்தான். பெண்கள் தனிமையாக வாழ்வது இந்த பொல்லாத உலகத்தில் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருந்த மனோன்மணியும் ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக் கொண்டு கலியாணத்துக்குச் சம்மதித்தாள்.