பகுதி 22
பிறகு காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. சந்திரசூடன் மறுநாள் பண்ணையார் வீட்டுக்குப் போயிருந்த போது மனோகரன் அவனோடு வேண்டுமென்றே சண்டை பிடித்தான்.
"ஏதோ உயில் தயாராகிறதாமே! அது என்ன சமாசாரம்?" என்று கேட்டான்.
"என்னைக் கேட்கிறாயே! உன் தகப்பனாரைக் கேட்டுத் தெரிந்து கொள்" என்றான் சந்திரசூடன்.
அதன் பேரில் மனோகரன் சந்திரசூடனைக் கன்னாபின்னாவென்று திட்டி விட்டு, "ஜாக்கிரதை! நான் வலுச்சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையையும் விடமாட்டேன். என் வழியில் குறுக்கே வருகிறவர்களை இலேசில் விடமாட்டேன். உண்டு இல்லை என்று பார்த்து விடுவேன்" என்று பயமுறுத்தினான்.
இவ்வளவையும் சந்திரசூடன் பொறுத்துக் கொண்டு காரியத்திலேயே கண்ணாயிருந்தான். பண்ணையாரின் சொத்துக்களை அவருடைய மகனின் சந்ததிகளுக்கு உயில் எழுதுவிக்கச் செய்வது, பேரனைப் பண்ணையாரிடம் சேர்ப்பித்து விடுவது ஆகிய இரு நோக்கங்களுடன் அவன் வேலை செய்தான்.
பண்ணையார் தமது பாரியாளையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தடவை மனோன்மணியின் வீட்டுக்கு வந்தார். அநாதைக் குழந்தையைத் தங்களிடம் ஒப்புவித்துவிடும்படி மனோன்மணியைக் கேட்டுக் கொண்டார். யோசித்துப் பதில் சொல்லும்படி கூறி விட்டுப் போய்விட்டார்.
மனோன்மணிக்கு அவளுடைய நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்க நெருங்கப் பீதியும் அதிகரித்து வந்தது; "குழந்தையைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாது; என்னை அவர்களுடைய மருமகள் என்று தெரிவித்துக் கொள்ளவும் முடியாது" என்று பிடிவாதமாகச் சொன்னாள். சந்திரசூடனிடம், "உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. உங்களுடைய முயற்சியை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் நான் இந்த ஊரை விட்டே போய் விடுவேன்!" என்று வற்புறுத்தினாள்.
"இன்னும் ஒரு நாள், இருபத்து நாலு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு உயில் ரிஜிஸ்டர் ஆகிவிடும். அப்புறம் தீர யோசித்து உசிதப் படி முடிவு செய்து கொள்ளலாம்" என்றான் சந்திரசூடன்.
அந்த ஒரு நாள் - இருபத்து நாலு மணி நேரத்திற்குள் - மிகப் பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.
