பகுதி 21

bookmark

"மிஸ் மனோன்மணியா?" என்று பண்ணையார் சிறிது வியப்புடனே கேட்டு விட்டுக் குழந்தையைப் பார்த்தார். நல்ல வேளையாக, குழந்தை அதற்குள் மனோன்மணியின் மடியில் படுத்துத் தூங்கிப் போய் விட்டது.

"அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் குழந்தை இந்த அம்மாளுடைய சொந்தக் குழந்தை அல்ல. அநாதைக் குழந்தை. அதாவது ஒரு சிநேகிதியின் குழந்தை..."

பண்ணையார் மேலும் ஆச்சரியப்பட்டு, "அப்படியா? இந்தக் குழந்தைக்குத் தாய் தகப்பன் இரண்டு பேரும் இல்லையா?" என்று கேட்டார்.

"இல்லையென்று சொல்ல முடியாது. இந்த அம்மாளே தாயாராகவும், தகப்பனாராகவும் இருந்து குழந்தையை வளர்த்து வருகிறாள்..." என்றான் சந்திரசூடன்.

பண்ணையார் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல், "நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்தக் குழந்தையை என்னிடம் ஒப்புவித்துவிடுங்கள்" என்றார்.

"அதற்கென்ன நாட்டில் எத்தனையோ அநாதைக் குழந்தைகள் இருக்கின்றன. தங்களுக்கு முன்னமே சொன்னேன், தங்கள் சொத்தில் ஒரு பாதியையாவது அநாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைக்கும்படி. நூறு குழந்தைகள் வேணுமானாலும்..."

"நூறு குழந்தைகள் இருக்கட்டுங்காணும்! இந்தக் குழந்தையைக் கொடுப்பதாயிருந்தால் சொல்லுங்கள். எனக்கும் என் மனையாளுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்! கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து, எத்தனை பணம் வேணுமானாலும் செலவழித்துச் சரிப்படுத்துகிறோம். உங்கள் கலியாணத்துக்கும் ஒரு தடை இல்லாமற் போகும்."

"எங்கள் கலியாணத்துக்கு இந்தக் குழந்தையினால் தடை ஒன்றுமில்லை. வேறு தடைகள் இருக்கின்றன. இந்த அம்மாள் ஒரு கிறிஸ்துவப் பெண்."

"இருந்தால் என்ன? சாதியாவது மதமாவது? குணந்தான் பிரதானம். இந்த அனாதைக் குழந்தையை இவ்வளவு அருமையாக இந்தப் பெண் வளர்ந்து வருகிறாளே? வேறு யாருக்கு இப்பேர்ப்பட்ட தயாள குணம் இருக்கும்? இவள் மாதிரி ஒரு பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு நீர் ஏழு ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும். தெரிகிறதா? எல்லாவற்றுக்கும் சாயங்காலம் நம் வீட்டுக்கு வாரும். அப்போது பேசிக் கொள்ளலாம்!" என்று கூறிவிட்டுப் பண்ணையார் நடையைக் கட்டினார்.

அவர் போன பிறகு சந்திரசூடன், "தெய்வ சங்கற்பம் எப்படி இருக்கிறது, பார்த்தீங்களா? பண்ணையாரை நேரே இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது!" என்றான்.

மனோன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. "எனக்குச் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை" என்று விம்மினாள்.

"பெண்கள் சமாசாரமே இப்படித்தான்! எதற்காகத் துக்கப்பட வேண்டும்? துக்கப்படும்படி என்ன நேர்ந்து விட்டது? பேரனைப் பாட்டனிடம் சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு இதோ வழி பிறந்து விட்டது. தாங்கள் இஷ்டப்பட்டால், பண்ணையார் சொன்னது போல், 'மிஸ்' பட்டத்தை நீக்கிக் கொண்டு 'மிஸ்ஸஸ்' ஆகிவிடலாம். கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கிறேன்..!" என்றான் சந்திரசூடன்.

"ஐயா! தயவு செய்து அந்தப் பேச்சுப் பேசாதீர்கள். தாங்கள் எவ்வளவோ எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இனியும் தங்களை ஏமாற்றினால், பெரும் பாவியாவேன். நான் இந்தக் குழந்தையின் வளர்ப்புத் தாயார் அல்ல; பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்ற சொந்தத் தாயார்தான்!"

"அட கடவுளே! அப்படியானால் குழந்தை பண்ணையாரின் பேரன் அல்லவா? அது பொய்யா..?"

"பண்ணையாரின் பேரன் தான் இவன்! பண்ணையார் மகனைக் கலியாணம் செய்து கொண்ட பாவி நானே தான். அரண்மனையில் வாழ வேண்டியவரை ஆண்டியாக்கி, கடைசியில் அவருக்கு யமனாக முடிந்தவளும் இந்த மகா பாவி தான்!" என்று கூறிவிட்டு மனோன்மணி விம்மி அழுதாள்.

மனோன்மணியின் விம்மல் நிற்கும் வரையில் சந்திரசூடன் காத்துக் கொண்டிருந்தான்.

பிறகு, "தாங்கள் உண்மையை முழுவதும் இப்போதாவது சொன்னது பற்றிச் சந்தோஷம், மொத்தத்தில் பார்த்தால், வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. பண்ணையாருக்குத் தங்களை மருமகளாக ஏற்றுக் கொள்வதிலே கூட இப்போது ஆட்சேபம் அதிகமாயிராது..." என்றான்.

"கூடவே கூடாது! தங்கள் தலையின் மேல் ஆணை! அதை மட்டும் அவரிடம் சொல்ல வேண்டாம்; இந்தக் குழந்தையைச் சேர்ப்பித்தால் போதும்!" என்றாள்.

"சரி, சரி! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே செய்வோம். முதலில் உயில் ரிஜிஸ்டர் ஆகட்டும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன். எனக்குச் சாதி விட்டுச் சாதி கலியாணம் செய்வதிலும் ஆட்சேபம் இல்லை, விதவா விவாகத்திலும் ஆட்சேபம் கிடையாது!" என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் சந்திரசூடன் வெளியேறினான்.