பகுதி 14

bookmark

அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, "நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் 'புலி! புலி' என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் 'ஓ!' என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.

மனோன்மணி வீட்டில் இருந்தாள். "என்ன? என்ன?" என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!" என்றான்.

மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், "ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?" என்று கேட்டாள்.

"ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி" என்றான் சந்திரசூடன்.

"அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!" என்றாள் மனோன்மணி.

"ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!" என்றான் சந்திரசூடன்.

"மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?"

"அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!"

புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.

"நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்றாள்.

"எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்று கேட்டாள் மனோன்மணி.

"பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றாள்.