பகுதி 13
மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில் சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்தான்.
இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.
மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.
சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். "அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?" என்றான் மனோகரன்.
"அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்" என்றான் சந்திரசூடன்.
