பகுதி 12

bookmark

"இந்த விஷயத்தை தங்களிடம் கிரஹிப்பதற்குள், புன்னைவனத்துப் புலியைக் கூடப் பிடித்துவிடலாம் என்று ஆகி விட்டது. இந்த ஊருக்குத் தாங்கள் வந்ததே அந்த உத்வேகத்துடன் தான் என்று சொல்லுங்கள்!"

"ஆம், ஐயா! எனக்கு உதவி செய்ய முடியுமா?"

"ஒரு சிநேகிதியின் குழந்தைக்காகத் தாங்கள் செய்துவரும் தியாகத்தை நினைக்கும் போது எனக்கு இது 'கலியுகம்' என்றே தோன்றவில்லை. 'சத்திய யுகம்' பிறந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். பண்ணையாரின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கரைக்க வேண்டும். மனோஹரிடம் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையென்பது நிச்சயம்தானே?"

"நிச்சயந்தான். இரண்டு மூன்று தடவை சொல்லலாமா என்று எண்ணிப் பிறகு தயங்கி நிறுத்திக் கொண்டு விட்டேன்."

"இனியும் சொல்ல வேண்டாம், பண்ணையாரைப் பார்ப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்."

"பண்ணையார் உயில் எழுதுவது பற்றி யோசிக்கிறார் என்கிறீர்களே? அதை நினைத்தால் கவலையாயிருக்கிறது..."

"அதே காரணத்துக்காகத்தான் நானும் சொல்கிறேன். உயில் விஷயமாகப் பண்ணையார் என்னிடந்தான் யோசனை கேட்கிறார். இந்தக் குழந்தையின் உரிமையைப் பாதுகாப்பது என் பொறுப்பு!" என்றான் சந்திரசூடன்.