நெய் அபிஷேகம் :

bookmark

சபரிமலைக்கு சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.

ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக் கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள்:சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு உணவைக்குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14ம் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.