நாயன்மார்

bookmark

சிவத் தொண்டு ஆற்றிய அறுபத்தி மூன்று தமிழ் பெருமக்கள் வரலாறு ஒரு சிறு பார்வை (அதாவது நாயன்மார்களின் வரலாறு) :-

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன.

சைவ நெறி போற்றும் சமயக் குரவர்கள்:-

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர் வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.

பெரியபுராணம்:-

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.

பெரியபுராணத்தின் காப்பியப் பகுப்பு:-

பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.

காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது.

மொத்தம் நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.

பெரிய புராண ஆராய்ச்சி:-

பிற்காலத்தில் அறிஞர் இராசமாணிக்கனார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி எனும் நூல் பெரியபுராணத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாட்டுடைமையாக்கப்பட்ட நூல் என்று கருதப்படுகிறது.

நாயன்மாரில் பெண்கள்:-

அறுபத்து மூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்று அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மாரின் பட்டியல் :-

நாயன்மாரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்று தான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார். பிற்பாடு ஒரு சிலர் வாரியார் சுவாமிகளையும் சேர்த்து அறுபத்தி நால்வர் என்று கூறுவர். ஆனால் அது பலரால் ஏற்புடையதாகக் கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரின் பட்டியலும் பின்வருமாறு:-

1     அதிபத்தர்     பரதவர் குலத்தில் ஆவணி மாதம் ஆயில்யம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

2     அப்பூதியடிகள் அந்தணர் குலத்தில் தை மாதம் சதயம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

3     அமர்நீதி நாயனார் வணிகர் குலத்தில் ஆனி மாதம் பூரம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

4     அரிவட்டாயர் வேளாளர் குலத்தில் தை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

5     ஆனாய நாயனார் இடையர் குலத்தில் கார்த்திகை மாதம் ஹஸ்தம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

6     இசைஞானியார்     ஆதி சைவர் குலத்தில் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

7     இடங்கழி நாயனார் வேளிர் குலத்தில் ஐப்பசி மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

8     இயற்பகை நாயனார் வணிகர் குலத்தில் மார்கழி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

9     இளையான்குடிமாறார் வேளாளர் குலத்தில் ஆவணி மாதம் மகம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

10     உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் குலத்தில் புரட்டாசி மாதம் அசுவினி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

11     எறிபத்த நாயனார் (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை)    மாசி மாதம் ஹஸ்தம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

12     ஏயர்கோன் கலிகாமர்     வேளாளர் குலத்தில் ஆனி மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

13     ஏனாதி நாதர் சான்றார் குலத்தில்     புரட்டாசி மாதம் உத்திராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

14     ஐயடிகள் காடவர்கோன் காடவர் குலத்தில் ஐப்பசி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

15     கணநாதர் அந்தணர் குலத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

16     கணம்புல்லர் செங்குந்தர் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

17     கண்ணப்பர் வேடர் குலத்தில் தை மாதம் மிருகசீருஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

18     கலிய நாயனார்     செக்கார் குலத்தில் ஆடி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

19     கழறிற்றறிவார்     (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) –அரசன் ஆடி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

20     கழற்சிங்கர் (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) –அரசன் வைகாசி மாதம் பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

21     காரி நாயனார் அந்தணர் குலத்தில் மாசி மாதம் பூராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

22     காரைக்கால் அம்மையார் வணிகர் குலத்தில்    பங்குனி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

23     குங்கிலியகலையனார்    அந்தணர் குலத்தில் ஆவணி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

24     குலச்சிறையார்     (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) ஆவணி மாதம் அனுஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

25     கூற்றுவர்     களப்பிரர் குலத்தில் ஆடி மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

26     கலிக்கம்ப நாயனார்     வணிகர் குலத்தில் தை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

27     கோச்செங்கட் சோழன் (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) -அரசன்     மாசி மாதம் சதயம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

28     கோட்புலி நாயனார் வேளாளர் குலத்தில் ஆடி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

29     சடைய நாயனார் ஆதி சைவர் குலத்தில் மார்கழி மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

30     சண்டேஸ்வர நாயனார் அந்தணர் குலத்தில் தை மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

31     சக்தி நாயனார் வேளாளர் குலத்தில் ஐப்பசி மாதம் பூரம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

32     சாக்கியர் வேளாளர் குலத்தில் மார்கழி மாதம் பூராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

33     சிறப்புலி நாயனார் அந்தணர் குலத்தில்     கார்த்திகை மாதம் பூராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

34     சிறுதொண்டர் மாமாத்திரர் குலத்தில் சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

35     சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர் குலத்தில் ஆடி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

36     செருத்துணை நாயனார் வேளாளர் குலத்தில்     ஆவணி மாதம் பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

37     சோமசிமாறர் அந்தணர் குலத்தில்    வைகாசி மாதம் ஆயிலியம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

38     தண்டியடிகள் செங்குந்தர் குலத்தில் பங்குனி மாதம் சதயம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

39     திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் குலத்தில் சித்திரை மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

40     திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் குலத்தில்    வைகாசி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

41     திருநாவுக்கரசர் வேளாளர் குலத்தில் சித்திரை மாதம் சதயம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

42     திருநாளை போவார் புலையர் குலத்தில் புரட்டாசி மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

43     திருநீலகண்டர் குயவர் குலத்தில்     தை மாதம் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

44     திருநீலகண்ட யாழ்ப்பாணர்     பாணர் குலத்தில் வைகாசி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

45     திருநீலநக்க நாயனார்    அந்தணர் குலத்தில் வைகாசி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

46     திருமூலர்     இடையர் குலத்தில் ஐப்பசி மாதம் அசுவினி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

47     நமிநந்தியடிகள்     அந்தணர் குலத்தில் வைகாசி மாதம் பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

48     நரசிங்க முனையர் முனையர் குலத்தில் புரட்டாசி மாதம் சதயம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

49     நின்றசீர் நெடுமாறன் அரசர் குலத்தில்    ஐப்பசி மாதம் பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

50     நேச நாயனார் சாலியர் குலத்தில்    பங்குனி மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

51     புகழ்சோழன் (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) – அரசன் ஆடி மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

52     புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் குலத்தில் ஆனி மாதம் ஆயிலியம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

53     பூசலார் அந்தணர் குலத்தில் ஐப்பசி மாதம் அனுஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

54     பெருமிழலைக் குறும்பர் குறும்பர் குலத்தில் ஆடி மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

55     மங்கையர்க்கரசியார்     (இவரது குலம் சரியாக அறியப்படவில்லை) -அரசர்     சித்திரை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

56     மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் குலத்தில் மார்கழி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

57     முருக நாயனார்     அந்தணர் குலத்தில் வைகாசி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

58     முனையடுவார் நாயனார் வேளாளர் குலத்தில் பங்குனி மாதம் பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

59     மூர்க்க நாயனார் வேளாளர் குலத்தில் கார்த்திகை மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

60     மூர்த்தி நாயனார் வணிகர் குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

61     மெய்ப்பொருள் நாயனார் வேளாளர் குலத்தில் கார்த்திகை மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

62     வாயிலார் நாயனார்     வேளாளர் குலத்தில் மார்கழி மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தார்.

63     விறன்மிண்ட நாயனார் வேளாளர் குலத்தில்    சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தார்.