நாட்டுப் படலம் - 70

bookmark

நாட்டவர் நல் ஒழுக்கம் (70-71)

70.

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
 
ஓர்   குற்றம்  இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு
குற்றமும்  இல்லாமையால்;  கூற்றம்  இல்லை- கூற்றுவனது கொடுமை
அந்நாட்டில்  இல்லை; தம்  சிந்தையின்  செம்மையால்-  அந்நாட்டு
மக்களின்  மனச்   செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில்
இல்லை; நல் அறம்  அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்
செயல்    செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம்
அல்லது  இழிதகவு  இல்லை-  மேன்மையைத்  தவிர  எவ்வகையான
இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

கூற்றம்     இல்லை   யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை
என்பது  பொருளாகாது.    இயற்கை  மரணமின்றி  இடையறவுபடுகின்ற
அற்பாயுட் சாவு இல்லை  என்பதே கருத்து. குற்றமே காக்க பொருளாக;
குற்றமே    அற்றம்   தரூஉம்   பகை   என்ற  குறள்  (434)  இங்கு
நினைவுகூரத் தக்கது.

   ஓர்- குறுக்கல் விகாரம்.                                   39