நாட்டுப் படலம் - 36
வண்டு முதலியன தங்கும் இடங்கள்
36.
தாமரைப் படுவ, வண்டும்
தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர்
கண்களும் காமன் அன்பும்;
மா முகில் படுவ, வாரிப்
பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும்
நாம நூல் பொருளும் மன்னோ.
வண்டும் தகை வரும் திருவும்- வண்டுகளும் அழகு வளர்கின்ற
திருமகளும்; தாமரைப் படுவ- தாமரை மலர்களில் தகியிருப்பனவாம்;
மாதர் கண்களும் காமன் அன்பும்- விலைமாதர் கண்களும் மன்மதன்
அம்புகளும்; தாண்தார்க் காமுகப் படுவ- குளிர்ந்த மாலை அணிந்த
காமுகர்களை தாக்குவனவாம்; வாரிப் பவளமும் வயங்கு முத்தும்-
கடலில் விளையும் பவளமும் ஒளியால் விளங்குகின்ற முத்துகளும்;
மாமுகில் படுவ- கார்மேகங்களில் தங்குவனவாம்; மெய்யும் நாம நூல்
பொருளும்- உண்மையும் புகழ் வாய்ந்த நூல்கள் கூறும் பொருளும்:
நா முதல் படுவ- கோசல நாட்டு மக்களின் நாவிலே தங்குவனவாம்.
தாக்கப்பெறுவோர் காமுகராக கூறப்படுதலின் ‘மாதர்’ இங்கே
விலைமாதர் எனப் பொருள்பட்டது. கடல் நீரைப் பருகிய மேகம்
உடன் பவளங்களையும் முத்தையும் கொண்டன; மன்னுயிர்க்கு
இன்றியமையா நீரைப் பொழிந்துவிட்டுப் பவளத்தையும் முத்தையும்
தன்னிடத்து வைத்துக்கொண்டது. கோசல நாட்டு மக்கள்
வாய்மையுடையவர், நண்ணூற் பொருளே நவில்வர் என்ற கருத்து
மிகவும் பேணத்தக்கது. ‘படுவ’ - சொற்பொருட் பின்வரு
நிலையணியாக வந்தது. 5
