நாட்டுப் படலம் - 34

bookmark

மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலத்தல்

மருத வளம்
 
34.

ஆறு பாய் அரவம், மள்ளர்
   ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச்
   சாங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில்
   எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில்
   மயங்கும் - மா மருத வேலி.
 
மா மருத வேலி- பெருமைக்குரிய (கோசல நாட்டின்) மருத நிலத்து
எல்லைக்குள்;  ஆறு  பாய்  அரவம்-  ஆற்று நீர் பாய்வதால் எழும்
ஓசையும்;  மள்ளர்    ஆலை    பாய்    அமலை-    உழவர்கள்
ஆலையாடுதலால்  உண்டாகும்  ஓசையும்; ஆலைச் சாறு பாய் ஓசை-
அக்    கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும்;
வேலைச் சங்கின் வாய்ப்  பொங்கும் ஓசை- நீர்க் கரைகளில் உள்ள
சங்குகளிடமிருந்து   பெருகும்  ஓசையும்;  ஏறுபாய் தமரம்- எருதுகள்
தம்முள்  மோதிப்  பாயும்போது எழும் ஓசையும்; நீரில் எருமை பாய்
துழனி-  நீர்நிலைகளில்  எருமைகள் பாய்வதால் உண்டாகும் ஓசையும்;
இன்ன-  ஆகிய இத்தகைய ஓசைகள்; மாறு மாறு ஆகி- வெவ்வேறாக
அமைந்தனவாகி;   தம்மில்  மயங்கும்-  தமக்குள்  ஒன்றோடொன்று
கலந்து ஒலிக்கும்.

ஓரிடத்து     எழும் ஓசை கொண்டு   அவ்விடத்தின்   இயல்பினை
அறியலாகும்.   சங்கு  கடலுக்கு  உரியது;   புதுவெள்ளப்   பெருக்கில்
எதிரேறி  மருத  நிலத்து  வந்தது.  தனித்தனியே    பிறக்கும் ஓசைகள்
பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித்   தம்மில் மயங்கும்’
என  விளக்கினார்.  அரவம்,  அமலை,  ஓதை, ஓசை, தமரம்,   துழனி;
இவை ஒரு பொருட் சொற்கள், பொருட் பின்வருநிலையணி.         3