நகரப் படலம் - 98
அயோத்தியை ஒக்கும்நகரம்
அமரர் நாட்டிலும் இல்லையெனல்
அமரர் நகரினும் சிறந்தது
98.
தங்கு பேர் அருளும் தருமமும், துணையாத்
தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர்
யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு அளப்ப அருங்காலம்
திருவின் வீற்றிருந்தனன் என்றால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும்
பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?
தங்கு பேரருளும் தருமமும் துணையா- தம்மிடம் தங்கிய மிகுந்த
கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு; தம்பகைப் புலன்கள்
ஐந்து அவிக்கும்- தமக்குப் பகையாகிய புலன்களைக்
கட்டுப்படுத்துபவராகி; பொங்குமா தவமும் ஞானமும் புணர்ந்தோர்-
மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும் மெய்யறிவையும் பெற்றிருக்கும்
மேலோர்கள்; யாவர்க்கும் புகலிடம் ஆன- யாவருக்கும்
அடைக்கலமாக அடையத்தக்க; செங்கண்மால் பிறந்து- அழகிய
கண்களை உடைய திருமால் அவதரித்து; ஆண்டு அளப்ப
அருங்காலம்- அங்கு (அயோத்தி நகரில்) அளவிட இயலாத பல
காலம்; திருவின் வீற்றிருந்தனன் என்றால்- இலக்குமி தேவயின்
(அவதாரமான சீதா பிராட்டியுடன் சிறப்போடு தங்கி இருந்தான்
என்றால்; அங்கண்மா ஞாலத்து- அழகிய விசாலமான இவ்வுலகிலே;
இந்நகர் ஒக்கும் பொன்நகர்- இந்த அயோத்திக்கு நிகரான அழகிய
நகரம்; அமரர் நாட்டு யாதோ?- தேவ உலகில்தான் எது இருக்கிறது?
இல்லை என்றபடி.
“தம் புலன்களை அடக்கி அருளும் அறமும் துணையாகச் சிறந்த
தவத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் பெற்றிருக்கும் மேலோர்கள்
புகலடைதற்குரிய இடமான திருமாலே இராமனாக அவதரித்து,
அளவிலாக் காலம் அரசு புரிந்த இந்த அயோத்தி நகருக்கு நிகரான
நகரம் தேவ உலகிலும் இல்லை” என்பது கருத்து. முந்தியப் பாடலில்
கூறிய கருத்தினையே இப்பாடலில் வேறு விதமாகக் கூறினார்.
“அளப்பருங்காலம்” என்றது பதினோராயிரம் ஆண்டுகள் என்பர்.
புலன்கள் மெய்யறிவுக்குப் பகை யாதலின் “பகைப்புலன்” என்றார்.
அருளும் தருமமும் தவமும் ஞானமும் ஆகிய இவையே இறைவனை
அடைதற்குரியன என்பதால் “அருளும்.......... ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகலிடம்”என்றர். 6
