நகரப் படலம் - 125
மாளிகையில் வாழ்வார் இயல்பும் அணிகளும்
125.
அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி, தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில; பகலை வென்றன.
அணி இழை மகளிரும் - அழகிய அணிகலன்களை அணிந்த
பெண்களும்; அலங்கல் வீரரும்- மாலையணிந்த மார்பினரான
வீரர்களும்; துணிவன அறநெறி- அற நெறியினையே துணிவுடன்
பற்றுவர்; மணியினும் பொன்னினும் வனைந்து- மணிகளாலும்,
பொன்னாலும் புனையப்பட்டுள்ள மாளிகைகள்; தணிவு இலாதன-
என்றும் அறநெறிகளில் குறையாது நிறைந்திருப்பவை; பிறிது பணி
இயன்றில- வேறுகல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை
அல்ல; பகலை வென்றன- தம் ஒளியால் சூரியனையும் வென்று
விளங்குபவை.
மாளிகைகள் என்ற எழுவாய், தொடர்ச்சி நோக்கி வரவழைத்து
உரைக்கப்பட்டது. பொன்னாலும், மணியாலும் இயன்றன ஆதலால்
அம்மாளிகைகள் சூரியனைவிட ஒளிபொருந்தியனவாக ஒளிர்கின்றன
என்கிறார். மாளிகைகளில் வாழும் மகளிரும் ஆடவரும்
அறநெறியிலேயே நிற்பவர்; ஆதலின் அவர் மாளிகைகளும்
அறநெறியில் தணிவு இலாதன ஆயின. புறவொளியால் கதிரவனை
வென்றவை மாளிகைகள்; ஆயினும் அகவொளியாகிய அறநெறியால்
சிறந்தவை. ஆக, பெருமைக்கு உரியது என்பது கவிஞர் குறிப்பு. 33
