நகரப் படலம் - 120
120.
புள்ளிஅம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விருந்த போலுமே.
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன- நீக்குவதற்கரிய பொன்
தகடுகள் மேலே வேயப்பட்டனவாகிய; புள்ளி அம்புறவு இறை-
உடலில் புள்ளிகளை உடைய அழகிய மாடப் புறாக்கள்; பொருந்தும்
மாளிகை- தங்கியிருக்கின்ற மாளிகைகள்; வெள்ளி அங்கிரிமிசை-
அழகிய வெள்ளிமலையின் மீது; எல்ல அரும் கதிரவன்- இகழ்தற்கு
அரிய சூரிய தேவனது; இளவெயிற்குழாம் விரிந்தது போலும்-
இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.
வெண் சுதை பூசிய வெள்ளைநிற மாளிகைகளின் மீது, பொன் தகடு
வேய்ந்து பொலிவது, வெள்ளிமலை மீது, கதிரவனின் இளங்கதிர்கள்
விரிந்துகிடப்பது போன்று விளங்கியது என்கிறார். இதுவும்
தற்குறிப்பேற்ற அணியாகும். புள்ளி: உடலின் மீதுள்ள அழகிய
புள்ளிகள். புறவு இறை: புறாக்களுக்கு அரசன் (மாடப்புறா). தமனியம்:
தங்கம். வெயிற்குழாம்: கதிர்களின் தொகுதி. 28
