நகரப் படலம் - 109
அகழியில் முதலைகள் முழுகி எழும்புதல்
109.
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும்
முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து
பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப
ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது
அழுந்துகின்ற போலுமே.
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை- ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில்
முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த
மதிலின்; சுற்றும் முற்று பாரெலாம் - சுற்றிலும் நிறைந்திருக்கும்
பாறைகளையெல்லாம்; போழ்ந்து மா கிடங்கிடை- பிளந்து
அமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே; கிடந்து பொங்கு
இடங்கர்மா - தங்கி மேலே எழும் முதலைகள்; தாழ்ந்த வங்க
வாரியில் - ஆழமானதும், கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே;
தடுப்ப ஒணா மதத்தினால் - தடுக்க இயலாத மதத்தினாலே; ஆழ்ந்த
யானை மீள் இலாது - உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல்;
அழுந்துகின்ற போலும் - அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும்.
அகழியிலே முதலைகள் ஆழ்ந்து எழுவதற்கு, கடலிலே யானைகள்
ஆழ்ந்து எழுவதை உவமை கூறினார். கருமை, வலிமை, பருமை
இவைகளால் முதலைக்கு யானை பண்புவமை. நாஞ்சில்: ஏப்புழை
என்னும் மதிலின் உறுப்பு. முற்றும்: நிறைந்திருக்கும் பார்: பாசறை
“பாருடைத்த குண்டகழி” என்பது புறநானூறு. 14.மா: பொதுவாக
விலங்குகளைக் குறிக்கும் இச்சொல், நீரில் வாழும் உயிர்களையும்
பறவைகளையும் குறிப்பதுண்டு. 17
