தி. சதாசிவம்
"கல்கி" தியாகராஜன் சதாசிவம் (4 செப்டம்பர் 1902 – 22 நவம்பர் 1997) இந்தியாவின் முன்னணி விடுதலைப் போராட்ட வீரரும், பாடகரும், பத்திரிகையாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கல்கி வார இதழைத் தொடங்கியவர். கிருஷ்ணமூர்த்தியின் இறப்புக்குப் பின்னர் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் பிரபல கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் கணவர் ஆவார்.
தி. சதாசிவம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:-
கல்கி சதாசிவம் திருச்சி ஆங்கரை என்ற ஊரில் தியாகராஜன் ஐயர், மங்களம் ஆகியோரின் 16 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தார். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால், பால கங்காதர திலகர், அரவிந்தர் ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்ட சதாசிவம் இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவாவைக் குருவாக ஏற்றுக் கொண்டார். இதனால் பள்ளியில் இருந்து விலகி பாரத சமாச இயக்கத்தில் இணைந்தார். பின்னர் இராசகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி ஆகியோரின் பால் ஈர்க்கப்பட்டு அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மூத்த மனைவி அபிதக்குச்சம்பாள் வாயிலாக ராதா, விஜயா ஆகியோர் இவரின் பெண் பிள்ளைகள் ஆவர். 1936 சூலையில் சுப்புலட்சுமியை சந்தித்தார். முதல் மனைவி இறந்ததை அடுத்து சுப்புலட்சுமியை 10 சூலை 1940 அன்று மறுமணம் புரிந்தார்.
