திரு அவதாரப் படலம் - 307

bookmark

எல்லாரும் குமாரர்களைவிரும்பி அணுகுதல்

307.

அரு மறை முனிவரும்.
   அமரரும். அவனித்
திருவும். அந் நகர் உறை
   செனமும். ‘ நம் இடரொடு
இரு வினை துணிதரும். இவர்களின்;
   இவண்நின்று
ஒரு பொழுது அகல்கிலம்.
   உறை’ என உறுவார்.
 
அருமறை   முனிவரும் அமரரும்  -  அரிய  மறைகளில் வல்ல
முனிவர்களும்   தேவர்களும்;  அவனித்  திருவும் அந்நகர்  உறை
செனமும் - நிலமகளும். அந்த நகரத்தில்  வாழுகின்ற பொதுமக்களும்;
இவர்களின்   -  இந்த  அரசிளங்  குமரரால்; நம் இடரொடு  இரு
வினைதுணிதரும்  -  நமது துன்பங்களும் அதற்குக் காரணமான இரு
வினைகளும் துணிக்கப்படும்; இவண் நின்று - இவர்கள் இருக்கு இந்த
இடத்திலிருந்து;  ஒருபொழுது அகல்கிலம் உறை  - சிறிதுபொழுதும்
அகலவே  மாட்டோம்; என  உறுவார்;  என.  அப்பிள்கைளுடனே
தங்கியிருப்பார்.

அமரர்:  தேவர் (அழிவில்லாதவர் என்பது பொருள்). அவனி: நிலம்.
‘’முனிவரும்.  தேவரும். நிலமகளும்.  நகரமக்களும்’ இவர்களால் நமது
இடர்  தீரும்’  வினையும்  நீங்கும் ஆதலால்  இங்கிருந்து ஒருபோதும்
அகலோம்  இவருடனே  உறைவோம்’’ என்று  உடன் உறைவாராயினர்
என்பது  கருத்து.  துணிதரும்:  துணியும்   இருவினை:   நல்வினையும்
தீவினையுமாம்.   இவர்களின்:  இவர்களால்.   அகல்கிலம்:   தன்மைப்
பன்மை    வினைமுற்று.    உறை   அகல்கிலம்:    உறைவதிலிருந்து
(உடனிருப்பது).   அகலமாட்டோம்.  முனிவர்   முதலினோர்  குமரரை
விரும்புதல் கூறப்பட்டது.                                   126