திரு அவதாரப் படலம் - 246

bookmark

தேவர்களின் மகிழ்ச்சி

246.

அந்தர துந்துபி முழக்கி. ஆய் மலர்
சிந்தினர். களித்தனர் - அறமும் தேவரும்-
‘வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்’ என்று எண்ணியே.
 
அறமும்   தேவரும் - அறக்கடவுளும்  தேவர்களும்; வெந்து எழு
கொடு  வினை வீட்டும் - வெந்து எழுந்து  நம்மை வருத்தும் கொடிய
துன்பங்களை  அழிக்கும்;  மெய்ம்  முதல் வந்து  எழ - மெய். முதற்
பொருளாகிய பரமன்  இங்கு வந்து தோன்ற; அருள்  தருவான் என்று
எண்ணி  -  இம்  முனிவன் அருள் புரிவான் என  நினைத்து; அந்தர
துந்துபி   முழக்கி   -  தேவ  வாத்தியங்களை முழக்கிக்   கொண்டு;
ஆய்மலர்   சிந்தினர்   -   ஆய்ந்தெடுத்த  நறுமண   மலர்களைத்
தூவினராக; களித்தனர் - மகிழ்ச்சி மிகக் கொண்டனர்.

அந்தரம்:     விண்ணுலகம்.  துந்துபி:  தேவ  வாத்தியம்.  முழக்கி:
வினையெச்சம்.  ஆய்மலர்:  வினைத்  தொகை.   சிந்துதல்:  சொரிதல்.
களித்தல்.   களி  கொண்டாடுதல்.  அறம்:  அறக்கடவுளைக்   குறித்து
நின்றது.  வெந்தெழுதல்:  வெப்பம்  கொண்டு ஓங்குதல்.  கொடுவினை:
பண்புத் தொகை. கொடுவினைகளை அழிக்கும் மெய்ம்  முதல்  என்பது.
பொருள்.

மெய்:     உண்மை. முதல்: காரணம். உலகுக்கு  முதற்  காரணமான
மெய்ப்   பொருளாகிய  பரமனைக்  குறித்தது.  இங்கு    ராமபிரானாக
அவதரிக்க இருக்கும் திருமாலை ‘மெய்ம்முதல்’ என்றார்.

வந்தெழ:     வந்து அவதரிக்க.  அறமும்  தேவரும்   மெய்ம்முதல்
வந்தெழ  -  அருள்  தருவான்  என்றெண்ணி   -  முழக்கி -  சிந்தி -
களித்தனர்   என்பது  கருத்து  முனிவன்  தேரேறி  வருதல்    கண்டு
அறமும் தேவரும் மகிழ்ந்தனர் என்பதாம்.                       67