திரு அவதாரப் படலம் - 241

bookmark

தசரதன் அயோத்தி மீளுதல்

241.

செவ்வி நறுஞ் சாந்து அளித்து. தேர் வேந்தன்-
   தனை நோக்கி. ‘இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி’ என. நிகழ்ந்த பரிசு
   அரசர்பிரான் கழறலோடும்.
‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக்
   கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வு முடியோய்!’ எனலும். தேர் ஏறிச்
   சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
 
செவ்வி    நறும்  சாந்தளித்து-  (விருந்து  முடிந்தவுடன்) மணம்
மிகுந்த சந்தனம் அளித்த உரோமபதன்;தேர் வேந்தன்  தனைநோக்கி
-   தயரத   மன்னனைப்   பார்த்து;  நீ  இவண்  சேர்ந்த  கவ்வை
உரைத்தருள்தி   என   -   தாங்கள்   இங்கு   வந்த  காரியத்தைச்
சொல்லியருள  வேண்டுமென்றுரைக்க; அரசர் பிரான்  நிகழ்ந்த பரிசு
கழறலோடும்  -  அதற்கு.  அரசர்க்கு அரசனாகிய  தயரதன்  நிகழ்ந்த
செய்தியைச்  சொல்ல  லோடும்; அவ்வியம் நீத்து உயர்ந்த  மனத்து
அருந்தவனை   -   பொறாமை  முதலிய  தீய   குணங்களை நீக்கிய
மனத்தை   உடையவரான   கலைக்கோட்டு  முனிவரை;  கொணர்ந்து
ஆங்கண்  விடுப்பென்  -அயோத்திக்கு அழைத்து  வந்து  உன்னிடம்
சேர்த்து  விடுவேன்;  ஆன்ற செவ்வி முடியோய் எனலும் - உயர்ந்த
அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன்  கூறியதும்; தேர்
ஏறி.  சேனையொடும்   அயோத்தி  சேர்ந்தான் -உடனே  தயரதன்
தேரேறி. சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.

செவ்வி:     அழகு. இங்குப் பக்குவம் என்னும்  பொருளைத்  தந்து
நின்றது.  நறுமை:  மணம்.  சாந்து:  சந்தனம் முதலிய   மணப்பொருட்
கலவை.  கவ்வை:  காரியம்  பரிசு:  தன்மை. அவ்வியம்:   அழுக்காறு.
அங்கண்: அங்கே முதல் நீண்டு ‘ஆங்கண்’ என நின்றது.

நறுஞ்   சாந்து: பண்புத்தொகை. விருந்துண்டு  மகிழ்ந்ததும் சந்தனம்.
வெற்றிலை.  பாக்கு  ஆகியவை  தந்து  உபசரித்தல்  மரபு.   நிகழ்ந்த
பரிசாவது.  மக்கட்பேறளிக்கும்  வேள்வி  செய்ய  வசிட்டன்   கூறியது
முதல்   முனிவரை   அழைத்துப்   போக    வந்ததுவரை    நிகழ்ந்த
செய்தியைத் தயரதன் உரோமபத மன்னனுக்குக் கூறினன் என்பதே.

சாந்தளித்து     -  நோக்கி  -  அருள்தி  என.    நிகழ்ந்த  பரிசு
சுழறலோடும். அருந்தவனை - விடுப்பன் என்றும்  தேரேறி  அயோத்தி
சேர்ந்தான் என்றும் முடிக்க

உரைத்தருள்க:     உரைக்க என்பதாம். ‘அருள்’  மரியாதை குறித்து
வந்த பகுதிப் பொருள் விகுதி. கொணர்ந்து விடுப்பென்   எனப்பொருள்
முடிவுபெறும். ‘கொணர்ந்து வினையெச்சம்.                       62