திரு அவதாரப் படலம் - 238

bookmark

உரோமபதன் வணங்கத் தசரதன் தழுவுதல்

238.

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன்-
   தனைக் கண்ணுற்று. எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர்நின்று அரசர்பிரான்
   இழிந்துழி. சென்று அடியில் வீழ.
முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க.
   எடுத்து இறுக முயங்கலோடும்.
கதிர் கொண்ட சுடர் வேலான்தனை நோக்கி.
   இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்;
 
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை- தன்னை எதிர்
கொண்டு   அழைத்துச்   செல்ல   வருகின்ற    வெற்றி   பொருந்திய
உரோமபத   மன்னவனை;   கண்ணுற்று  எழிலிநாண   அதிர்கின்ற
பொலம் தேர் நின்று இழிந்துழி - பார்த்து. மேகமும்  நாணும்படியாக
முழங்குகின்ற  தனது  பொன்தேரிலிருந்து   தயரதன்  கீழே   இறங்கும்
போது;  சென்று  அடியின்  வீழ  -  உரோமபத  மன்னன்  சென்று
தயரதன்   பாதத்தில்  வீழ்ந்து  வணங்க;  முதிர்கின்ற  பெருங்காதல்
தழைத்து  ஓங்க  - மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி.  ஓங்க;
எடுத்து.  இறுக  முயங்கலோடும்  - உரோமபத  மன்னனைத்  (தன்
கைகளால்) வாரி எடுத்துத் தழுவியவுடன்;கதிர்கொண்ட சுடர் வேலான்
தனை  நோக்கி  -  கதிர்விட்டு  ஒளிரும் வேலையுடைய  தயரதனைப்
பார்த்து; களிப்பின் மிக்கான்  இவை உரைத்தான் -  மகிழ்ச்சி மிகக்
கொண்ட உரோமபதன் பின்வருமாறு கூறலானான்.

எதிர்கொள்வான்:   வானீற்று வினையெச்சம்.  ‘எதிர் கொள்ள’ என்ற
பொருளில்  வந்தது.  வயம்: வெற்றி. கண்ணுற்று:  மிகுந்த  ஆதரவுடன்
பார்த்து. எழிலி: மேகம். கதிர்: ஒளிக்கற்றை (கிரணம்)  பொலம்:  பொன்
(அழகு   என்பதும்   பொருளாம்)   உழி:   போது   எதிர்கொள்வான்
வருகின்ற   வேந்தனைக்   கண்ணுற்று.    அரசர்பிரான்    தேர்நின்று
இழிந்துழி.  அடியில்  வீழ.  எடுத்து  முயங்க.   சுடர்வேலான்   தனை
நோக்கி  -  இவை  உரைத்தான்  என்பது  பொருள்   முடிவு.  இவை:
பின்வரும்  புகழுரைக்  அடுத்த  பாடலில்  காணலாம்.  வேல்: வெல்லு
தலையுடையது  (ஒரு  கைப்படையாம்). ஆதலால் முதன்நிலை   திரிந்த
தொழிற் பெயராகும்.                                         59