திரு அவதாரப் படலம் - 236
தசரதன் உரோமபதனை அடைதல்
236.
காகளமும் பல் இயமும் கனை கடலின்
மேல் முழங்க. கானம் பாட.
மாகதர்கள். அரு மறை நுல் வேதியர்கள்.
வாழ்த்து எடுப்ப. மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப. கடல் - தானை
புடை சூழ. சுடரோன் என்ன
ஏகி. அரு நெறி நீங்கி. உரோமபதன்
திருநாட்டை எதிர்ந்தான் அன்றே.
காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க-
எக்காளமும். வேறுபல வாத்தியங்களும் ஒலிக்கின்ற கடலை விடப்
போரொலி செய்து முழங்கவும்; மாகதர்கள் கானம் பாட - பாடகர்கள்
இன்னிசை பாடவும்; அருமறை நுல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப -
அரிய மறைவல்ல அந்தணர்கள் வேத மந்திரங்களைக் கூறி
வாழ்த்திசைக்கவும்; மதுரச் செவ்வாய்த் தோகையர் பல்லாண்டு
இசைப்ப - இன்மொழி கூறும் வாயினரான மயில் போன்ற மங்கையர்
பல்லாண்டு பாடவும்; கடல் தானைபுடை சூழ - கடல் போன்ற
படைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; சுடரோன் என்ன ஏகி -
சூரியனைப் போல விரைந்து சென்று; அரு நெறி நீங்கி -
அரியநெறிகளையெல்லாம் கடந்து சென்று; உரோமபதன் திருநாட்டை
எதிர்ந்தான் - உரோமபத மன்னனது அழகிய நாட்டை அடைந்தான்.
அன்றே: அசை. காகளம்: எக்காளம் என்னும் ஒருவகைக் கொம்பு.
கனை கடல்: வினைத்தொகை. கானம்: இன்னிசை. மாகதர்: பாடகர்கள்.
அரசனுக்கு மெய்க்கீர்த்தி பாடுதல மாகதர் தொழில். மதுரம்: இனிமை
குணவாகு பெயராய்க் குரலைக் குறித்து நின்றது. தோகை: மயில்
தோகையர்: பெண்கள் உவமையாகு பெயர். பல்லாண்டு: பல
ஆண்டுகள் வாழ்க எனக் குறிக்கும் வாழ்த்துப்பாடல். கடல்தானை:
உவமைத் தொகை. உரோமபதன் ஆண்ட நாடு ‘அங்க நாடு’
எனப்படும்’. எதிர்தல்: அடைதல்.
பலவகை வாத்தியங்கள் முழங்க - மாகதர் பாட. வேதியர் வாழ்த்த.
தோகையர் பல்லாண்டிசைப்ப - தானை புடை சூழ - நெறி நீங்கி -
திருநாட்டை அடைந்தான். 57
