திரு அவதாரப் படலம் - 233

bookmark

233.

‘அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி. வேறு
உரைக்குவது இலது என உவந்து. தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முகநலாள்தனை.
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்
 
வேறு உரைக்குவது  இலதென-  (முனிவனை  ஆசனத்தில் அமரச்
செய்த பின்னர்) இனி வேறு உரைப்பதற்கு  எதுவுமில்லை   என்னும்படி;
அருக்கியம்  முதலிய  கடன்கள்  ஆற்றி -  அருக்கியம் கொடுத்தல்
முதலான  கடமைகள் பலவும் செய்தளித்து; தான்  அருள் முருக்கிதழ்
சாந்தையாம்  முக  நலாள் தனை - மன்னன் தான்  பெற்ற முருக்கம்
பூப்   போன்ற   இதழ்களையுடைய    சாந்தை    என்னும்   அழகிய
பெண்ணரசியான  தன்  மகளை;  இருக்  கொடு  விதிமுறை  - வேத
நெறிப்படி  இருக்கு  முதலான  வேதமந்திரங்களைக்   கூறி;  இனிதின்
ஈந்தனன் - இனிமையாக மணம் செய்து கொடுத்தான்.

அருக்கியம்:     பதினாறு வகை  உபசாரங்களில்  முதன்மையானது.
கைகழுவ  நீர்  தருதல்  முதலியனவாம்.  கடன்:   கடமை.  ஆற்றுதல்:
செய்தல்.   உரைக்குவது:   உரைப்பது.    சாந்தையை    இம்மன்னன்.
தயரதனிடமிருந்து  பெற்று  வளர்த்து  வந்தான்   என்பது   வான்மீகம்
கூறும் கருத்தாம். நலாள்: நல்லாள் தொகுத்தல் விகாரம்.           54