திரு அவதாரப் படலம் - 232
232.
அடைந்தனன். வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட. முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு.
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி. ஓர்
மடங்கல் - ஆதனத்திடை முனியை வைத்தனன்
வளநகர் அலங்கரித்து எதிர் மிடைந்திட - வளம் பொருந்திய
அந்நகரை (மன்னன் கட்டளைப்படி) அலங்கரித்து (அந்த நகரத்து
மக்கள்) எதிர்கொண்டழைத்துச் செல்வதற்குக் கூட்டமாய் நெருங்கி
வர; வேந்தன் முனியொடு - அவ்வரசன் கலைக்கோட்டு
முனிவனுடன்; அடைந்தனன் கோயில்புக்கு - அந்நகருள் சென்று
அரண்மனைக்குள் போய்; ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள்
எய்தி - குறைவுபடாத பொன் திணித்துப் புனைந்த ஒரு மண்டபத்தை
அடைந்து; ஓர் மடங்கல் ஆதனத்து இடை- ஒரு சிங்காதனத்தின்
மேலே; முனியை வைத்தனன் - அந்த முனிவனை அமரச் செய்தான்.
மிடைந்திட: நெருங்க. கோயில்: கோ+ இல் அரசமாளிகை.
பொன்குழாம்: பொன் மிகுதி. உறையுள்: இருப்பிடம் (மண்டபம்).
மடங்கல்: சிங்கம். ஆதனம்: ஆசனம். முனிவன் இருந்தான்
என்னாமல் அரசன் அமரச் செய்தான் என்று கூறியது. அரசனது
உபசரிப்பைக் கண்ட முனிவன் பிரமித்துச் செயலாற்றிருந்தான்
என்பதை உணர்த்தும். மாமுனிவனை நகரை அலங்கரித்து மக்கள்
அழைத்துச் செல்ல மண்டபம் அடைந்து அரியணையில்
இருத்தினான் 53
