திரு அவதாரப் படலம் - 221
221.
‘திருந்து இழையவர். சில தினங்கள் தீர்ந்துழி.
மருந்தினும் இனியன் வருக்கை. வாழை. மாத்
தருங் கனி பலவொடு. தாழை இன் கனி.
‘’அருந்தவ. அருந்து’’ என. அருந்தினான்அரோ
திருந்து இழையவர் - திருந்திய அணிகலன்களை
அணிந்திருப்பவர்களாகிய அப்பெண்கள்; சிலதினங்கள் தீர்ந்துழி
- சில நாட்கள் சென்ற பிறகு மருந்தினும் இனியன - அமுதத்தை
விட இனிமையாகிய; வருக்கை வாழை மா - பலா. வாழை. மா
(என்னும் மூவகை மரங்களும்; தரும்கனி பலவொடு - தருகின்ற
பழங்கள் பலவுடனே; தாழையின் கனி - தேங்காய்களையும்
(கொணர்ந்து); அருந்தவ அருந்தென - அரிய தவமுனிவரே !
இவற்றை அருந்துவீராக என வேண்ட; அருந்தினான் -
அம்முனிவனும் அவற்றை உண்டான்.
அரோ: அசை. இழை: மணிகள் பதித்துச் செய்யப்பட்டமையால்
இப்பெயர் பெற்றதென்பர். திருந்திழை: இப்போது அம்மகளிர்
திருத்தமான நகைகள் அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பு.
தீர்ந்துழி என்பதில் ‘உழி’ காலப் பொருளை உணர்த்தும். மருந்து:
அமுதம். வருக்கை: பலா. தாழை: தென்னை. தாழையின் கனி:
தேங்காய் “ தெங்கின் பழம் வீழ ’’ என்பது சிந்தாமணி. தமது
உறைவிடம் சென்ற மகளிர். சில நாட்கள் கழித்து மீண்டும்
முனிவனிடம் வந்து. பலவகைப் பழங்களைத் தந்து உண்ண
வேண்டினர். அம்முனிவனும் அவற்றை உண்டான். 42
