தாடகை வதைப் படலம் - 388
தாடகை வருதல் (388-389)
388.
கைவரை எனத் தகைய
காளை உரை கேளா.
ஐவரை அகத்திடை அடைத்த
முனி. ‘ஐய!
இவ் வரை இருப்பது அவள்’
என்பதனின் முன்பு. ஓர்
மை வரை நெருப்பு எரிய
வந்ததென. வந்தாள்.
கைவரை எனத்தகையகாளை - துதிக்கையையுடைய மலையை
ஒத்ததான யானை போன்றவனும். காளையை ஒத்தவனுமாகிய
இராமன்; உரைகேளா - உரையைக் கேட்டு; ஐவரை அகத்திடை
அடைத்தமுனி - இந்திரியங்கள் ஐந்தினையும் மனத்தில்
அடக்கியமுனிவன்; ஐய!அவள் இருப்பது இவ்வரை - இராம
அந்தத் தாடகை இருப்பது இந்த மலைதான்; என்பதனின் முன்பு -
என்று சுட்டிப் காட்டுவதற்கு முன்பாக; ஓர்மைவரை நெருப்பு
எரிய- ஒரு கரியமலை. உச்சியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க;
வந்தது என வந்தாள் - எதிரில் வந்தது போலத் தாடகை எதிரே
வந்தாள்.
கைவரை: கையையுடைய மலை (அதாவது யானை). உவமை
ஆகுபெயராய் ராமனை உணர்த்தும். ராமனுக்குக் காளை உவமையாம்.
உரை: முதனிலைத் தொழிற்பெயர். கேளா: செயா என்ற வாய்பாட்டு
வினையெச்சம். ஐவர்: ஐந்து இந்திரியங்கள். அர்: சிறப்பு விகுதி.
அகம்: மனம். ‘ஓர் மைவரை நெருப்பு எரிய வந்தது’ என்பது
உருவகம். மை:கருமை. இத்தொழில் இயற்றுபவள் எங்கு உறைவது
எனக்கேட்ட இராமபிரானுக்கு ‘அவள் இருப்பது இவ்வரை’ என
முனிவன் கூறுவதற்கு முன் தாடகை எதிரே வந்தாள் என்பது
பொருள். 29
