தாடகை வதைப் படலம் - 350
350.
பாரும் ஓடாது. நீடாது எனும் பாலதே;
சூரும் ஓடாது கூடாதுஅரோ; சூரியன்
தேரும் ஓடாது. மா மாகம் மீ; தேரின். நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாதுஅரோ.
பாரும் ஓடாது - நிலமகளும் (வெப்பம் பொறுக்காது) அந்த
நிலத்தை விட்டு ஓடிப் போகநினைத்தாலும் இயலாது; நீடாது
எனும்பாலதே - ஏனெனில் இடத்தை விட்டுப் பெயராத தன்மை
உடையவளாதலாலே; சூரும் ஓடாது - பாலை நிலத்துகுரிய காளியும்
நீங்காள்; கூடாது அரோ - நிலத்தெய்வம் நிலத்தை விட்டு
நீங்கமுடியாது; மா மாகம் மீ - அந்நிலத்துக்கு மேலே பெரிய
வானத்திலே; சூரியன் தேரும் ஓடாது - பாலையின் வெப்பம் தாங்காது
குதிரைகள் சோர்ந்து போவதால் பரிதியின் தேரும் ஓடாது; தேரின்
நேர்காரும் ஓடாது- ஆராயின். அந்நிலத்துக்கு நேராக மேகமும்
ஓடாது; நீள் காலும் ஓடாது - வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.
‘உம்மை’ எல்லாம் எண்ணுப் பொருளன. பார்: நிலமகள். சூர்:
கொற்றவை. பாலது: தன்மையது. அரோ இரண்டு அசைகள். மாகம்:
வானம். கால்: காற்று. கார்: மேகம் (கருமையினடியாகப் பிறந்தது). 9
