தர்ம ஸம்ஹிதை
2. தர்ம ஸம்ஹிதை
காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் - ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் மனிதரில் சிறந்த உத்தமச் சைவரையும் சரஸ்வதி தேவியையும் வியாச பகவானையும் வணங்கிய பிறகு ஜெய சப்தத்தைச் சொல்லக் கடவன்.
பராசரருடைய குமாரரும் சத்யவதி தேவியின் மனதிற்கு மகிழ்ச்சியை தருபவருமான வியாசபகவான் யாவரினும் மேலாக விளங்குகின்றார் அத்தகைய வியாச பகவானுடைய முகத்தாமரையிலிருந்து பெருகுகிற சொற்களாகிய அமுதத்தை உலகம் பருகி மகிழ்கின்றது.
(எத்தகைய பகவான், ஸத்வகுணத்தையடைந்து, உலகங்களைக் காத்தும், ரஜோகுணத்தை அடைந்து உலகங்களைப் படைத்தும் தமோகுணத்தையடைந்து உலகங்களைச் சங்கரித்தும் இம் முக்குண ஸ்வரூபமாகவுள்ள மாயைக்கு அதீதப்பட்டும் விளங்குகிறாரோ, அத்தகைய சத்ய ஸ்வரூபியாயும் ஆத்ம ஸ்வரூபியாயும் பேரறிவாளராயும், தோஷரஹிதராயும் பிரமம் முதலிய திருநாமங்களுக்கு வாங்யராயும் நித்தியராயும் தத்துவ ஆராய்ச்சியால் அறியத் தக்கவராயும், ஸர்வ பரிபூரணராயும் விளங்கும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன்)
1. உபமன்யு முனிவர் எடுத்துரைத்த மகிமை
நைமிசாரணிய வாசிகளை நோக்கிச் சூதபுராணிகர் கூறலானார்.
முனிவர்களே! ஒரு காலத்தில் தேவகீ நந்தனரான கிருஷ்ண பரமாத்மா தமக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதை எவ்வாறு அடைவது என்று தனிமையில் யோசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது வியாக்ரபாத முனிவர் புத்திரரும் சிவபெருமானால் திருப்பாற்கடலை அருந்தியவருமான உபமன்யு முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் சாஸ்திர முறைப்படி அவரைப் பூஜித்து தகுந்ததொரு பீடத்தில் அமர்த்தி முனிவரே, நீங்கள் நாள்தோறும் அன்புடன் யாரைப் பூஜித்து அர்ச்சனை செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
உபமன்யு முனிவர் அகமிக மகிழ்ந்து, கிருஷ்ணா! நான் பூர்வத்தில் அதிகமான தவத்தை அநேக காலம் செய்யும்போது, பகவானாகிய சிவபெருமான் பெருங்கருணையோடு பிரத்யட்சமானார் அப்போது முத்தலையோடு விளங்குவதும் தன்னை எப்போதும் பணிவோருக்குச் சுகங்கொடுப்பதும் ஒரு காலையுடையதும் பயங்கரப் பற்களையுடையதும் ஜ்வாலையோடு கூடிய ஜோதி மயமான முகங்களையுடையதும், இரண்டாயிரம் கிரணங்களோடு விளங்குவதும் ஆயுதங்கள் யாவற்றிலும் சிறப்புடையதும் யாவற்றிலும் முதன்மையானதும் அநேகவித சின்னங்களையுடையதும் பலகோடிச் சத்துருக்களை அழிக்கத் தக்கதும் மஹேஸ்வரனால் பிரயோகிக்கப்படும் போது அண்டரண்ட பிரம்மாண்டங்களையெல்லாம் சங்கரிப்பதும் பிரம விஷ்ணுக்களாலும் தேவர்களாலும் ஜெயிக்கப்படாததுமாகிய குலத்தை அவர் புறத்தில் கண்டனே அதைவிட உயர்ந்த ஆயுதம் மூன்று உலகங்களிலுமில்லை அதைச் சர்வேஸ்வரனுடைய திரிசூலம் என்று யாவரும் பிரசித்தமாகப் புகழ்வார்கள். அது சமுத்திரங்களையெல்லாம் உலரச் செய்யவல்லது, அதை மாந்தாதா என்ற பேரரசன் சிவானுக்கிரகத்தால் அடைந்து, மன்னவர் அனைவரையும் வென்று அஸ்வமேதயாகம் செய்திருக்கிறான். இலவணாசுரன் சிவானுக்கிரகத்தால் அதைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டு, கர்வம் மிகுந்து சத்துருக்கினன் என்னும் அரசனைப் போருக்கு அறைகூவி அழைத்து அவனால் மாண்டான். சத்துருக்கினன் அவனை வென்ற பிறகு அவனுடைய பொருள்களைச் சுவாதீனம் செய்து கொண்ட போது அதி தீக்ஷண்யமானதும் யாவரையும் அஞ்சச் செய்வதும் சர்ப்பமணிந்ததும் சொல்ல முடியாத பிரவாகத்தையுடையதும் முத்தலைகளைப் புருவங்களாகக் கொண்டு பயமுறுத்துவதும், புகையில்லாத நெருப்பை போன்றதும் உதயசூரியனைப் போன்றதும் யமனைப் போன்றதுமான அந்தச் சூலாயுதம் அவனுக்குச் சுவாதீனமாகாமல் சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தது.
அடுத்து கூர்மையானதும் அநேக சர்ப்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரளய காலாக்கினியாலேயே புருஷ ரூபமடைந்துள்ளதுமான மழுவாயுதத்தை அந்த மஹாதேவரின் மற்றொரு புறத்தில் கண்டேன் இந்தப் பரசு என்ற ஆயுதத்தைப் பரசுராமன் அரசர்களை அழிக்கும் பொருட்டுச் சிவானுக்கிரகத்தால் பெற்று அது தன்னிடத்திருப்பதால் வலிமையும் ஆற்றலும் மிகுந்து எழுபத்து மூன்று முறை க்ஷத்திரிய குலத்தை நாசஞ் செய்தான்.
ஆயிரம் முகங்களையுடையதும் வியாப்தமானதும் இரண்டாயிரம் புஜங்களையுடையதும் புருஷாகிருதியானதும் இரண்டாயிரம் கண்களையுடையதும் ஆயிரம் கால்களையுடையதுமான சுதர்சனம் என்னும் சக்கரம் அப்பெருமானின் பக்கத்தில் விளங்கக் கண்டேன் இவை தவிர வஜ்ராயுதம், சக்தியாயுதம், தூணீரம், கட்கம், பாசம், அங்குசம் கதை, முதலிய திக்குப் பாலகர்களுடைய ஆயுதங்களும் அந்தச் சர்வேஸ்வரனின் அருகில் இருக்கக் கண்டேன். இவ்வாறு எனது திடபக்தியைப் பரீக்ஷிக்க வேண்டி, அப்பெருமான் பெருங்கோர உருவமாகக் காட்சித்தந்து அருளினார்.
அவருடைய வலது புறத்தில் அன்னவாகனத்தை தூரத்தில் இருத்தி நிற்கிற பிரமதேவனையும் இடது புறத்தில் சங்கு, சக்கர, கதை, கட்க, கோதண்டங்களை அணிந்து, கருட வாகனத்தைச் சமீபத்தில் இருத்தி நிற்கும் விஷ்ணுவையும், பராசக்தியாகிய பார்வதிதேவியையும், பார்வதிதேவியின் பக்கத்தில் மயூரவாஹனமும் திவ்ய தேஜஸோடுக்கூடிய வேலாயுதத்தை ஏந்திய சுப்பிரமணியரையும் சூலப்படையைக் கையில் ஏந்திய நந்தி தேவரையும் அங்குச பாசங்களை அணிந்து ஒரு புறத்திலிருக்கும் விநாயகரையும் பூதகணங்களையும் சப்தமாதர்களையும் கண்டேன் அவர்கள் சிவபெருமானின் பரிவாரங்களாகச் சூழ்ந்து துதி செய்யவும், உலகிலுள்ள யாவுமே அவரருகே விளங்கக்கண்டு ஆனந்தத்துடன் அதிசயித்துக் கைகூப்பி வணங்கினேன். அப்போது பகவான் சாம்பவமூர்த்தி புன்னகை செய்து, வேதியனே யான் எவ்வளவு பயங்கரமாகத் தரிசனம் கொடுத்ததும் உன் மனம் சலனமடையவில்லை, நீ நன்றாய்ப் பரீக்ஷிக்கப்பட்டவன். எனது நிரதிசயமான பக்தியை நீ அடைந்திருக்கிறாய். உனக்கு மங்களம் உண்டாகுக. தேவர்களுக்கும் அரிய வரத்தை விரைவில் கேள்! என்றார்.
நான் பரமபதியைப் பணிந்து பகவானே! உமக்குச் சந்தோஷம் உண்டானதால், அடியேனுக்குத் தங்களிடம் நீங்காத பக்தியிருக்கத் தயை செய்யவேண்டும் அத்தகையப் பக்தியால் திரிகால ஞானம் கைகூடும். என் வமிசத்தாரும் நானும் பாலும் அன்னமும் குறைவின்றிப் புசிக்க வரங்கொடுக்க வேண்டும் சர்வேஸ்வரரே! என்னுடைய ஆசிரமத்தில் தாங்கள் எக்காலமும் தரிசனமளித்துக் கொண்டிருக்கவேண்டும் என்று வேண்டினேன்.
அதற்குச் சிவபெருமான், நீ, நரை, திரை, மூப்புக்களை விலகுக முனிவர்களிலே புகழுடையவனாக அவர்களாலும் புகழத்தக்கவனாகுக சீலம் உருவம், குணம் செல்வம் முதலியவை என் கருணையால் உனக்கு மேன்மேலும் பெருகுக, நீ பாலைப்பருக விரும்பியதால் உனக்குப் பாற்கடலையே கொடுத்தோம் நீ விரும்பும்போது அது உன்னை அடைக. நீ விரும்பிய பொருள்களும் அப்போதே உன்னை அடையும் பாற்கடல் அமுத சொரூபமாகையால் அதை நீ அருந்துவதினால் வைவஸ்வத மநுவந்தரம் முடியும் வரை உன் வமிசத்தாருடன் கூடி வாழ்வாய் உன் கோத்திரம் எப்போதும் அபிவிருத்தியடையும். உன் ஆசிரமத்தில் எப்போதும் என் தரிசனத்தையும் உனக்கு நீங்காத பக்தியையும் கொடுப்போம். இன்னும் உனக்கு வேண்டிய வரம் ஏதேனுமிருப்பின் அதையும் தருவோம் நீ விரும்பத்தக்கது பிரிதொன்றும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளி திருவுரு மறைந்தார். கிருஷ்ணா இவ்வாறு சிவபெருமான் கோடி சூர்யப் பிரகாசமாய் திவ்யதரிசனம் தந்து வரங்களைக் கொடுத்து அருளினார்; அவரது கட்டளைப்படியே அவரது கருணையால் நானும் அனைத்தையும் அடைந்தேன் கந்தர்வாதி கணங்களுக்கும், முனிவர்களுக்கும், வித்தியாதரர்களுக்கும் மனோரம்மியமான மலர்ச் செவிடிகளையும் மணம் வீசுவதும் ஆண்டு முழுவதும் குறைவின்றி மலர்வதுமான உத்தியானவனத்தையும் பிறவற்றையும் பெற்றேன் சர்வேஸ்வரனாகிய அந்தச் சாம்பசிவமூர்த்தியின் திருவருளால் நினைத்தபோது நினைத்த பொருளை அடையும் வல்லவனானேன் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சொன்னார்.
2. உபமன்யு கிருஷ்ணர் சம்வாதம்
துவாரகாபுரி வாசியான கிருஷ்ணரை நோக்கி உபமன்யு முனிவர் மேலும் சொல்லுகிறார். ஸ்ரீ சர்வேஸ்வரரான சூலபாணியின் அனுக்கிரகத்தால் சர்வஞானமும், பூதபவிஷ்ய வார்த்தமானங்களும் உணர்ந்தேன் பிரம, விஷ்ணு முதலான தேவர்களாலும் பூஜித்ததற்கரிய அமர நாயகனாகிய அரவாபரணனை நான் பிரத்யக்ஷமாகத் தரிசித்தேன் என்னைவிடத் தன்னியர் திரிலோகங்களிலும் யார் உண்டு? இருபத்தாறாவது என்று பிரசித்தமானதும் நித்தியமானதும் வேத முனிவர்களால் தியானிக்கப்பட்டதும் நாசமற்றதுமாக விளங்குகிற பரதத்துவப் பொருள் எல்லாத் தத்துவங்களையும் படைத்து சாக்ஷிபூதமாக நின்று, ஷட்குண ஐஸ்வரிய ஸம்பந்தனான மகா தேவனேயாகும். அவனே பிரதான புருஷேஸ்வரன் அந்தக் கடவுளே, தன் வலது புறத்திலிருந்து உலகங்களுக்குச் சிருஷ்டி கர்த்தாவான பிரமனையும் இடது புறத்திலிருந்து உலகரக்ஷண கர்த்தாவான விஷ்ணுவையும் படைத்தவர் பிரளயகாலத்தில் தம் இதயத்திலிருந்து உலகச்சங்காரஞ் செய்யத்தக்க உருத்திரனைப் படைப்பவர் யுகமுடிவில் ஊழிக்காற்றாக இருப்பவர்; காலஸ்வரூபமாக இருந்து சகல பூதங்களையும் அழிப்பவர். சர்வவியாபியாயுள்ளவர் சர்வபூதாத்மகமானவர் சர்வ பூதங்களுக்கும் பிறப்பிடமானவர் அத்தகைய மஹேஸ்வரன் பெருந்தேவர்களாலும் தரிசிப்பதற்கு அரியவர் அந்த மஹாதேவரைப் புத்திர லாபம் உண்டாகும் பொருட்டு, நீ அவசியமாக ஆராதிக்கவேண்டும் கிருஷ்ணா! இதுவரையில் சிவபெருமானை ஆராதித்து அவர் அருளால் தமது மனோபீஷ்டங்களை அடைந்தவர்கள் சிலரது சரிதங்களை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.
பூர்வத்தில் ஹிரண்யகசிபன் பத்து லக்ஷம் வருஷம் சர்வ தேவர்களுடைய ஐஸ்வரியத்தையும் சர்வேஸ்வரனுடைய அனுக்கிரகத்தால் அடைந்தான் கடைசியில் இரண்டாயிரம் வருஷம் ஆயுளையுடைய பிரஹலாதனைப் புத்திரனாக அடைந்தான் அவன் சிவாநுக்கிரகத்தால் இந்திர நந்தனன் என்ற பெயரைப் பெற்று, விஷ்ணுவின் சுதரிசனச் சக்கிரமும் இருந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் தன் தேகத்தில் பட்டால் அவை பொடியாகவுதிர்ந்து போகத்தக்க திவ்விய தேகத்தைப் பெற்றான் சர்வேஸ்வரனுடைய வரத்தால் எந்த ஆயுதமும் அவன் தேகத்தை அணுகாத வரத்தைப் பெற்று, க்ருஹன் என்ற பெயரையுடைய மஹா பலசாலியாக இந்திரநந்தனன் விளங்கினான். அவன் ஈஸ்வர வரம் பெற்றுத் தன் பரிவாரத்துடன் தேவர்களை எதிர்த்துத் துன்புறுத்த தேவர்கள் அவனை ஜெயிக்கமுடியாமல் திகைத்தார்கள். அவன் சிறப்பாகச் செய்துவந்த சிவபூஜையினால் களிப்படைந்த சிவபெருமான் திரிலோக சம்பத்தும் லக்ஷவருஷ ராஜ்யபாரமும் அநேகம் புத்திரரும் உண்டாக அநுக்கிரகம் செய்து இறுதியில் சாயுஜ்யமும் குசத் வீபத்தில் சுபகரமான ராஜபோகமும் உண்டாகும்படி வரந்தந்தருளினார் கண்ணா! பிரமனால் படைக்கப்பட்ட சுதமகன் என்ற தைத்தியன் சிவபெருமானைக் குறித்து நூறாண்டுகள் கடுந்தவம் செய்து அவரருளால் ஆயிரம் நகரங்களை அடைந்தான் பூர்வத்தில் வேதங்களில் பிரசித்திப் பெற்ற யாஞ்ஞவல்க்கிய மஹரிஷி, சர்வேஸ்வரனை ஆராதித்து உத்தம ஞானத்தை அடைந்தார். வேதவியாச பகவான் சிவார்ச்சனைச் செய்து ஈடிணையற்ற புகழையும் ஞானத்தையும் அடைந்தார். இந்திரனால் அவமதிக்கப்பட்ட வாலகில்லியர்; சர்வேஸ்வரனை அர்ச்சித்து ஸோமஹர்த்தாவாக ஒருவராலும் ஜெயிக்க முடியாத கருடனை ஜெயித்தார் ஜடாதரனாகிய சிவபெருமானுடைய கோபாக்கினியால் ஜலம் முழுவதும் வறண்டு போக தேவர்கள் யாவரும் ஸப்தகபால புரோடாஸத்தால் சிவபெருமானை அர்ச்சித்து தங்கள் விருப்பம் போல மீண்டும் ஜலத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயை சிவபெருமானை குறித்து முந்நூறு ஆண்டுகள் கொம்பின் மேனிருந்து கடுந்தவம் செய்து, தத்தாத்திரேய முனிவரையும் சந்திரனையும், துர்வாச முனிவரையும் புத்திரர்களாகப் பெற்றாள். விகர்ணன் என்ற முனிவன் மஹாதேவனை ஆராதித்து இஷ்டசித்திகளை அடைந்தான். சாகல்லிய முனிவன் மகிழ்ச்சியுடன் ஒன்பதாயிரம் ஆண்டுகள் சிவராதனையை மானஸீகமாகச் செய்து இறையருளால், நீ கிரந்தகர்த்தன் ஆகுக! உன்கீர்த்தி அழியாது திரிலோகங்களிலும் விளங்குக மஹாருஷிகள் பலர் உன் குலத்தில் பிறக்கட்டும்! உன் குலத்தில் பிறந்தவன்ஸுத்ர கர்த்தா ஆவான்! அவன் ஸாவர்ணி என்னும் பெயரைப்பெறுவான்! அவன் கிருத யுகத்தில் முனிவனாக இருந்து அறுநூறு ஆண்டுகள் தவஞ்செய்வான்! என்றும் வரங்கொடுக்கப் பெற்றான் இவ்விதமாகச் சர்வேஸ்வரன் முன்னார்களான பெரியோர்களால் துதிக்கப் பெற்றவர் கிருஷ்ணா! நீயும் அவ்விதமே சங்கரபகவானை ஆராதிப்பாயானால் மனதிலுள்ள விருப்பங்கள் அனைத்தையும் அடைவாய். அவரது பெருமைகளை,ஒற்றை நாக்குடைய நான், ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது!
இவ்வாறு உபமன்யு முனிவர் கூறியதைக் கேட்டதும் கண்ணபிரான் பரமாச்சரியம் அடைந்து தூய உள்ளம் வாய்ந்த உபமன்யு முனிவரை நோக்கி தவஞானியே! அந்தணோத்தமரே! நீர் தன்னியர் உம் ஆசிரமத்தில் தேவாதி தேவனுடையஸாந்நித்யம் விளங்குகிறது உம்மைப் போன்ற பெரியோர்களின் தரிசனத்தால் சர்வேஸ்வரனாகிய பரமசிவன் எனக்கும் திருவருள் செய்வான்! என்று கூறினார்.
கிருஷ்ணா! நீ விரைவில் பரமேஸ்வரனைத் தரிசிக்கப்போகிறாய்! உமையொரு பாங்கரான அந்த எம்பெருமானால் நீ இருபத்து நான்கு வரங்களைப் பெறுவாய், நீயே சாக்ஷõத் விஷ்ணு வாகையால் அவர் உனக்கு நல்வரங்கள் கொடுப்பார். நீ தேவர்களில் எல்லாம் பூஜ்யனாவாய் அச்சுதா! சிரத்தையான மனமுடைய உனக்கு ஜெபஞ்செய்வதற்குத் தகுதியான ஒரு மந்திரத்தைநான் உபதேசிக்கப் போகிறேன் அந்த மந்திர உபாசனையால் நீ பிரம்ஹன்யனாகி நிச்சயமாகச்சர்வேஸ்வரனை விரைவில் தரிசித்து உனக்குச் சமமான வலிமையுள்ள புத்திரனைச் சிவனருளால் பெறுவாய் கிருஷ்ணா! நீ சிவபெருமானைத் தரிசித்து, மகேஸ்வரா! நான் உம்மைத் தரிசித்தேன். எனக்குப் பிள்ளைப் பேறு தந்தருள வேண்டும் என்று வரம் கேட்பாயாக! என்றார்.
இவ்வாறு உபமன்யு கிருஷ்ண சம்வாதத்தில் சிவப்பிரபாவங்களால் எட்டு நாட்கள் க்ஷணமாகக் கழிந்தன ஒன்பதாவது நாளன்று கிருஷ்ணமூர்த்தி உபமன்யு முனிவரால் தீøக்ஷ செய்யப்பட்டார் அதர்வசிகரமாக விளங்கும் சிறந்த ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்று கிருஷ்ணமூர்த்தி முன் ஜடாதராகிப் பிறகு முண்டிதம் செய்து கொண்டு, சிவ சம்பந்தமாகவே நிற்பேன்! என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஆசார நியமத்துடன் யோக தண்டம் ஏற்று, தர்ப்பையால் அரைஞாண் அணிந்து, சிவதீøக்ஷ செய்யப்பெற்றவராய் தவம் மேற்கொண்டார். முதல் மாதத்தில் ஆகாரமின்றி இருந்தும் இரண்டாவது மாதத்தில் நீர் மட்டும் அருந்தியும் மூன்று நான்கு ஐந்து ஆகிய மூன்று மாதங்களில் காற்றை மட்டும் உட்கொண்டும், கால் பெருவிரல்களின் மேல் நின்று கொண்டும் ஆறாவது மாதத்திலிருந்து பதினைந்தாவது மாதம் வரையில் தோள்களை உயர்த்திக் கைகளைக் குவித்துக் கொண்டும் தவமியற்றினார். பதினாறாவது மாதத்தில் இந்திரதனுசுடன் கூடிய மேகங்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கையில் சிவபெருமான் அவருக்குத் தரிசனம் தந்தார். பார்வதி சமேதராகவும் சந்திரசேகரராகவும், சர்வ ஆச்சரிய ஸ்வரூபியாகவும் விளங்கும் சர்வேஸ்வரனான சிவபெருமானைக் கிருஷ்ணமூர்த்தி தரிசித்து கைகூப்பி வணங்கியவாறு எதிரே நின்று பலவிதமான ஸ்தோத்திரங்களால் துதித்து சகஸ்ர நாமங்களால் சங்கரனைப் பூஜிக்கையில், வேத கந்தர்வ வித்தியாதரர்கள் மலர்மாரி பொழிந்தார்கள் பலமுறை பூமாரி பொழிந்து இறுதியில் கிருஷ்ணரின் சிரம் மீதும் புஷ்பமாரி பொழிந்தார்கள். சித்தர் முனிவர் அப்சரஸ்கள் முதலானவரால் சூழப்பெற்று விளங்கும் சிவபெருமான் தம் இடதுபுறத்தில் திகழும் பார்வதி தேவியின் திருமுகத்தைப் பக்தவாத்ஸல்யத்தோடு, பார்த்து இந்தக் கண்ணன் செய்த தவத்திற்கு நான் மகிழ்ந்தேன் என்று கூறி கிருஷ்ணரைப் பார்த்து, கிருஷ்ணா! நான் உன் பக்தியை அறிவேன் நீ திடவிரதத்தை உடையவன் என்றும் நான் அறிவேன். ஆகையால் மூவுலகத்திலும் கிடைப்பதற்கு அரிய வரங்களில் எட்டு வரங்களைக் கேள்! என்று கூறினார். கிருஷ்ணன் அஞ்சலி செய்து மகேஸ்வரா! என் மனம் எப்போதும் தர்ம நெறியிலேயே இருக்கவேண்டும். என் கீர்த்தி உலகில் உள்ளவருடையக் கீர்த்திக்கெல்லாம் சிறப்பானதாக இருக்கவேண்டும். நான் பெரும் பலசாலியாக இருக்க வேண்டும். உமது அருகிருப்பு (சாமீப்யம்) எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். உம்மிடம் எப்போதும் எனக்குத் திடபக்தி உண்டாயிருக்க வேண்டும். பத்துப் புத்திரர் எனக்கு நிஷ்க்குஷ்டமாக இருக்க வேண்டும். என் பகைவர்கள் பலவான்களாக இருந்தாலும் என்னை எதிர்த்தால் அழிய வேண்டும் யோகிகளுக்கெல்லாம் நான் தலைவனாக இருக்க வேண்டும் என்று எட்டு வரங்களை கேட்டார். சிவபெருமான் அவ்வரங்களை அவ்வாறே பெறுக என்று கூறி, உன் புத்திரர்களில் சாம்பன் என்ற மகாபராக்கிரம சாலியான ஒரு புத்திரன் ஒரு முனிவர் சாபத்தால் மானுடனாகப் பிறப்பான் இன்னும் நீ வேண்டியவை ஏதேனும் இருந்தால் அவற்றையும் அடைவாயாக என்று வரங்கொடுத்தார் அவரை ஸ்ரீகிருஷ்ணர் பலவிதமாக தோத்திரங்கொண்டு மகிழச் செய்தார்.
சவுனகாதி முனிவர்களே! அதன் பின்னர் கிருஷ்ணர் பார்வதி தேவியாரையும் வேதோக்தமான தோத்திரங்களால் துதித்துப் போற்றினார். பார்வதிதேவி அவரை நோக்கி கிருஷ்ணா! நீ பரமபக்தன் உலகத்தில் உள்ளவருக்குத் துர்லபமான வரங்களை நான் உனக்குக் கொடுக்கிறேன் வேண்டிய வரங்களைகேள் என்று கூறினாள். கிருஷ்ணர் கும்பிட்டு; மஹா தேவீதாயே! நீ மகிழ்வுறுவதானால் அவ்வண்ணமே அரியவரங்களை தந்தருள்க; ஜகத்ஸ்வரூபிணீ! எனக்கு வேண்டிய வரங்களாவன ஜீவஹிம்சையில்லாத விரதத்தால் பிராமண சமானனாகவும் எனக்கு எப்பொழுதும் சத்துருக்கன் இல்லாதவனாகவும் பிராமண பூஜை செய்யத்தக்க பக்தியை உடையவனாகவும் விளங்கவேண்டும், என் பெற்றோர் எப்போதும் மகிழ்ந்திருக்கவும்; சகல பூதங்ளும் என்னிடம் அனுகூல மனமுடையவையாக இருக்கவும் எவ்விடத்தும் என்னை எதிர்ப்பவர்கள் இல்லாமலிருக்கவும்; தங்கள் சேவை கிடைத்த எனது வமிச பரம்பரை சதாசார சம்பத்தையுடையதாக இருக்கவும் வேண்டும். நூறு யாகங்கள் செய்து இந்திராதிதேவர்களைத் திருப்தி செய்யவனாக நான் விளங்க வேண்டும். எங்கள் வீட்டில் எப்போதும் ஆயிரத்தேழுயதிகளும் ஆயிரத்தேழு அதிதிகளும் போஜனம் செய்து திருப்தியடையவும் உற்றார் உறவினரிடம் எனக்குப் பிரீதி உண்டாகியிருக்கவும். எப்போதும் எல்லாச் சுகங்களுமுண்டாகவும் வேண்டும். சுந்தரமான தேகத்தையுடைய ஆயிரம் மனைவியருக்கு நான் நாயகனாகவும் அக்ஷீணரேதசுடையவனாகவும் விளங்கவேண்டும் அன்னத்தைக் காட்டிலும் எனக்குச் சத்தியவான்கள் ப்ரீதியாக இருக்கவும் வரமளிக்க வேண்டும்! என்று வேண்டினார் மங்களம் அனைத்திற்கு அதிமுதல்வியான பார்வதிதேவி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக்கேட்டு மகிழ்ந்து அவ்வாறே ஆகுக என்று வரமளித்து உனக்கு மங்களம் உண்டாகுக என்று வாழ்த்தினாள் பிறகு பார்வதி பரமேஸ்வரர் அந்தர்த்தானமானார்கள்.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கேசி என்னும் அரக்கனைச் சங்கரித்து, பதரிகாசிரமத்தையடைந்து தம் தீக்ஷõ குருவான உபமன்யு முனிவரை வணங்கி நடந்தவைகளையெல்லாம் அவரிடம் விண்ணப்பித்தார். அவரை உபமன்யு முனிவர் நோக்கி கிருஷ்ணா! சிறந்த வரங்களால் உலகத்திலுள்ளவரைக் காத்தருள்பவர் சர்வேஸ்வரனான சிவபெருமானையன்றித் திரிலோகங்களிலும் யாவருளர்? ஒருவருமில்லை! அப்பரமசிவன் குரோத புத்தியுடை யாருக்கும் சிறிது கஷ்டத்துடன் தரிசனமளிப்பார். ஞானத்திலும் தபத்திலும் சவுகரியத்திலும், தைரியத்திலும் சம்புவினுடைய மேம்பாடுகளைச் சொல்கிறேன் எனக் கூறுகையில் கிருஷ்ணர் சிரத்தையோடு சந்திர மவுலியாகிய சிவபெருமானிடம் மனஞ் செலுத்தியிருந்தார். அவ்வாறிருக்கும் கண்ணனை நோக்கி உபமன்யு முனிவர் கூறலானார்.
கிருஷ்ணா! பகவானான சங்கரன் பூர்வத்தில் பிரமலோகத்தில் மகாத்மாவும் பிரம யோகவானுமாகிய தண்டி என்னும் மகரிஷியால் சகஸ்ர நாமங்களால் தோத்திரஞ் செய்யப்பட்டார். மகா விசாலமானதும் நிகண்டும் ஞானச் சாத்திரமுமாகவுள்ள அந்தத் தோத்திரம் சாங்கிய மதத்தர்களாகிய சிலரால் படனஞ் செய்யப்படுகின்றது. மானீடரோ அதைத் தோத்திரஞ் செய்ய அசக்தராயிருப்பார்கள். ஆயினும் உலகத்தில் ஒரே இடத்தில் சிலர் அதைப் படனஞ் செய்து அதனால் பெருமானை ஆராதித்துச் சர்வேஸ்வரா நுக்கிரகத்தால் இஷ்டமான வரங்களைப் பூர்வத்திற் பெற்றிருக்கின்றனர் அவ்வாறு வரம் பெற்ற மகரிஷிகளில் சிலருடைய சரிதங்களையும் உனக்குச் சொல்லுகிறேன். கேள் அத்திரி முனிவன் கோகர்ண ÷க்ஷத்திரத்தில் சர்வேஸ்வரனை நோக்கி நூறு வருடந் தவஞ்செய்து நூறு புத்திரர்களையும் அழியாத கீர்த்தியையும் பெற்று வாழ்ந்திருக்கிறான். பிறப்பு இறப்புப் பந்தங்களை ஒழித்தவர்களும், தர்மங்களை உணர்ந்தவர்களும் நூறாயிரவருட ஆயுளையுடையவர்களும், அயோனிஜர்களும் நூறாயிரவருட ஆயுளையுடைவர்களுமான அப்புத்திரர்களில் ஒருவன் நிலத்தின் எல்லையைக் குறிப்பதில் அக்கிரமமான விவாதஞ்செய்து பிரமஹத்தியடைந்தான் எல்லா ரிஷிகளும் அவனை பிரமஹத்தி செய்தவன், என்று விலக்கினார்கள். அவ்வாறு பாபியானவனைச் சிவபெருமான் பரமரகிதனும் சிரேஷ்டனுமாகச் செய்தார் பரசுராமன் சர்வவியாபகரான சிவபெருமானை ஆராதித்து க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட தன் தந்தையான ஜமதக்னி முனிவரைக் கருதிச் சிவசன்னதியில் துக்கித்து அவரது கண்ணோக்கால் மகா கடூரமான பரசு ஆயுதத்தைப் பெற்று எழுபத்து மூன்று தரம் க்ஷத்திரிய வமிசத்தை நாசஞ் செய்தான். பிரசன்னமாயிருக்கும் சிவபெருமானுடைய அநுக்கிரகத்தையடைந்து க்ஷத்திரிய வதையால் தனக்கு நேர்ந்த உபபாதகத்தை மகேந்திரகிரியில் தவஞ்செய்து விலக்கி, பிறரால் வெல்லமுடியாத சிரஞ்சீவியாகி இன்னும் தவஞ்செய்து கொண்டும் சிவலிங்கார்ச்சனை செய்து கொண்டும் சித்தர் சாரணர் முதலானாருடன் மகேந்திரகிரியில் காணப்படுகிறான். அவ்வகைய சிரஞ்சீவியான பரசுராமன் கல்பாந்தத்தில் மீண்டும் தன் வைகுண்டத்தை அடைவான். அஸித முனிவருக்குத் தம்பியான தேவலன் என்னும் முனிவன் முற்காலத்தில் இந்திரனால் சபிக்கப்பட்டு அஞ்ஞானத்தால் கோபமுற்று உலகத்திற்கெல்லாந் தொந்தரை செய்ய எத்தனித்து, அதர்மமான தபசை செய்து இறுதியில் இஷ்டகாமியங்களையெல்லாம் எளிதிற் கொடுக்கவல்ல சிவலிங்க பூஜை செய்து, நிலையான புகழையும் தர்மத்தையும் ஆயுளையும் அடைந்தான்.
மனுவிற்குக்கண்ணால் பிறந்த வசிஷ்டமுனிவர் சாமகானஞ் செய்வோர் சபையில் க்ருத்ஸமதன் என்னும் ரிஷியை நீ மனங்கெட்டு ரதந்தரம் என்னும் சாமத்தை அபஸ்வரமாக ஏன் கானஞ்செய்கிறாய்? என்று கோபித்து இருபத்தொன்பதாயிர வருஷம் நீர்த்துளியும் சருகுமில்லாததும் துஷ்ட மிருகங்கள் சஞ்சரிப்பதுமான தண்டகாரண்யத்தில் அறியாமையோடு துக்ககரமுள்ள ஒரு மிருகமாக இருக்கக்கடவாய் என்று சபித்தார். அந்தச் சாபத்தால் துன்பப்படும் க்ருத்ஸமதன் மகா பயங்கரமும் ஜலமற்றதும் பழந்தரும் மரங்கள் ஒன்றுமில்லாததுமான இடத்தில் அப்பொழுதே மிருகமாகச் சென்று, சிவபெருமானைத் தியானித்துப் பலவிதமாகப் பணிந்து, பெரும்பக்தியோடு பிரணவத்துடன் கூடிய சிவபஞ்சாக்ஷர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டிருந்தான். அதனால் களி கூர்ந்த சிவபெருமானால் மிருக முகமுடைய ஒரு கண நாதனாகிச் சிவபெருமானை அடைந்து சாபத்தை விலக்கிக்கொண்டு லம்போதராகணத்தை அடைந்தனன் சிவலிங்கார்ச்சனையே எப்பொழுதும் விரும்பிச் செய்த மகா தபசியான ஜவுகீஷவ்யன் என்னும் முனிவன் பூர்வத்தில் காசி÷க்ஷத்திரத்தில் சகல போகங்களையும் விடுத்து நிஷ்காமிய மணமுடையவனாய் சிவபெருமானை அர்ச்சித்து அவ்வெம்பெருமான் கடாக்ஷத்தால் அணிமாதி அஷ்ட-சித்திகளும் பெற்றுத் தவச் சிரமத்திலிருந்து நீங்கினான். சர்வேசுவரன் தன்னை நோக்கித் தவஞ்செய்த கர்க்கிய முனிவருக்கு மோட்சங் கொடுக்கத் தக்கதும் உலகத்தில் துர்லபமானது மான வரம் கொடுத்து. சரீர சம்பந்தமான பிரமாண்ய விஷயத்தால் பிரத்தியக்ஷமாகும் நான்கு ஸ்கந்தங்களையுடைய ஜோதிஷ சாஸ்திரம் என்னும் கணித சாஸ்திரத்தையும் நிலையான எல்லா வித்தைகளில் தேர்ச்சியையும் அவரைப் போன்ற ஆயிரம் புத்திரர்களையும் கொடுத்தருளினார்.
பராசர முனிவர் தன்னைத் தியானித்தபோது நரை திரை மூப்பில்லாத வேத வியாசர் என்னும் யோகியைப் புத்திரராகச் சந்தோஷத்துடன் கொடுத்தருளினார். மாண்டவிய முனிவர் பத்து லக்ஷவருஷம் சூலாக் கிரத்தினின்று பிராணனை விட்டுவிடுவேன் என்று தன்னுள் நியமணஞ் செய்துகொண்டு தவஞ்செய்து மனோவியாதி நீங்கிமிக்க சூலை வியாதிகளிலிருந்து விடுபட்டுச் சுகமுற்றார். தரித்திரனாகவுள்ள ஒரு பிராமணன் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் சபித்து சிவாநுக்கிரகத்தால் காலவன் என்னும் புத்திரனைக் குருவின் வீட்டில் விடுத்து, மகா இரகசியமாகவுள்ள யாகசாலையிலிருந்து தன் மனைவியை நோக்கி, பெண்ணே! யாராகிலும் அதிதிகள் வந்தால் நாம் தனமில்லாதிருத்தலின் வந்த அதிதியைப் பூஜிக்கச் சக்தியில்லையே அது பற்றி அவருக்கு நான் வெளியே போயிருக்கின்றேன் எனக் கூறுக! என்று கூறியிருந்தான். அப்படியிருக்கும் போது ஒரு சமயத்தில் மிகப் பசியால் வருந்தும் அதிதியொருவர் அங்குவர, அப்பார்ப்பினி அவரை நோக்கி, சுவாமி என் கணவர் எங்கேயோ போயிருக்கிறார் என்றாள். அதிதி தன் ஞானத்தால் உண்மையை உணர்ந்து கொண்டு பெண்ணே! அவன் அப்படியேயில்லாமல் போகுக! என்று கூறவே அப்போது அக்னிச்சாலையிலிருந்த வேதியன் அப்பொழுதே மரணமடைந்தான். பிறகு விஸ்வாமித்திர முனிவன் கருணையைப் பெற்று வந்த காலவன் என்னும் புதல்வன் தன் தாயால் நடந்த விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு சிவபெருமானையாராதித்து சாம்பவி என்னும் யாகத்தைச் செய்து அதனால் தன் தந்தை உயிர் பெற்று அந்த யாகசாலையினின்றும் புறம்பே வர அவனைக் கண்டு கைகுவித்து நின்றான். பிராமணன் அவ்வாறு பணிந்து நிற்குங்குமாரனைக் கண்டு நான் சிவாநுக்கிரகத்தால் கிருதார்த்தனானேன் தனவானாகவும் புத்திரவந்தனாகவுமானேன் உன்னைப் புதல்வனாகப் பெற்ற தால் இறந்தும் பிழைத்தேன் என்றான்.
கேட்டாயோ கிருஷ்ணா! நீயும் விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமானால் அடைந்தாய்! இனி உன்னிடத்திற்குச் செல்க! என்று உபமன்யு முனிவர் கட்டளையிட்டார். அவரைக் கிருஷ்ணமூர்த்தி சாஷ்டாங்கமாக வணங்கி விடைபெற்றுத் தம் துவாரகாபுரியை அடைந்தார்.
முனிவர்களே! அப்பரமசிவனது குணாநுபவங்களை முற்றும் எடுத்துரைப்பதற்கு ஆதிசேடன்போல் ஆயிரம் முகங்களையுடையவனாகயிருந்தாலுங்கூட என்னால் சிறிதுஞ் சொல்லிவிட முடியாது! இவ்வாறு சூதமுனிவர் நைமிசாரணிய வாசிகளை நோக்கிக் கூறினார்.
3. திரிபுரச் சங்காரம்
சவுனகாதி முனிவர்கள் சூத முனிவரை நோக்கி மகாத்மாவே! சிவபெருமான் திரிபுரச் சங்காரஞ் செய்ததை ஆதியில் வியாச மகரிஷியால் தாங்கள் கேள்வியுற்ற வண்ணம் எங்களுக்குச் சொல்லியிருப்பினும், அதை மீண்டும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் தயை வைத்து அதை சுருக்கிச் சொல்ல வேண்டும். மங்களகரமும் மனோகரமுமான சிவபெருமானுடைய அநந்தக் கல்யாணக் குணங்களை விசாரணை செய்வோருக்கும் சிவாராதனை செய்வோருக்கும் உண்டாகும் பலன்களையும் சங்கிரகமாகச் சொல்லியருள வேண்டும். திரிபுராசுரர் எந்த வமிசத்தில் பிறந்தவர்கள் என்பதையும், அப்புர மூன்றும் ஒரு காலத்தில் ஒன்று கூடியபொழுது ஒரே கணையால் மகாபலபராக்கிரமசாலியானச்சிவபெருமான் எவ்வாறு சங்கரித்தார் என்பதையும் கூறியருளவேண்டும் என்று வேண்டினார்கள் அவர்களை நோக்கிச் சூதபுராணிகர் கூறலானார்!
வேத வியாச பகவானால் கேள்விப்பட்ட வகையே உங்களுக்கு முன் கூறியவற்றைச் சுருக்கிச் சொல்லுகிறேன்; கேளுங்கள் திரிபுராசுரர்களில் தாரகாக்ஷன் மூத்தமவன் கமலாக்ஷன் இரண்டாமவன் வித்யுன்மாலி இளையவன், இவர்கள் மூவரும் சமானமான பலமுடையவர்களும் ஐம்புலன்களை வென்றவர்களும் உலகினை வெல்ல விரும்பினவர்களும், சமதமாதிகுண சம்பந்திகளும், சத்தியவான்களுமாக விளங்கினார்கள் அவர்கள் மேரு மலையை அடைந்து, வசந்தகாலத்தில் தவஞ்செய்தற்கு வேண்டி, புஷ்பம் முதலான போகங்களையும் வீணை மிருதங்கம் புல்லாங்குழல் முதலான நாதங்களையும் வெறுத்தும், கிரீஷ்ம காலத்தில் சூரியகாந்தியை லக்ஷியஞ் செய்யாமல் பஞ்சாக்கினி மத்தியில் இருந்தும் தங்கள் மனோபீஷ்டங்களைப் பெறும் வண்ணம் அன்போடு யாகஞ் செய்தார்கள். மகாப் பிரதாபத்துடன் மழைக் காலத்தில் ஆறுகள் தலைக்கு மேலே ஓடும்படியும், சரத்காலத்தில் மிக்க ரம்மியமான நெய் முதலியவற்றால் பக்குவஞ் செய்த மனதுக்கு விருப்பந்தரத்தக்க கிழங்குகளையும் பழங்களையும் சாப்பிட்டுக் கொண்டும்; புலன் உணர்ச்சிகளை நீக்கியும் பசி தாகங்களை வெறுத்தும், பசியுடையவர்களுக்கு கந்தமூல பழங்களைக் கொடுத்து உதவியும் கலங்காத மனத்துடன் ஆகாரத்தை வெறுத்தும் இருந்தார்கள். ஹேமந்தருதுவில் தைரியத்தால் மலை உச்சியில் பனிசலத்தால் உடல் நனையப் பெற்றும், மெல்லிய நனைந்த ஆடையுடுத்தியவராகியும் விளங்கினார்கள். சிசிருதுவில் ஜலத்திலிருந்து கொண்டும் மனவிருப்பங்கள் கைகூடுமென்று உற்சாகமுடையவர்களாய்க் கிரமங்கிரமமாகப் பெருந் தவஞ்செய்து இரவும் பகலும் பொழுது தெரியாமல் நூறாயிர வருஷங்களை நொடிப் பொழுதாகக் கழித்தார்கள் பிறகு பிரமன் தேவமுனி கணங்களால் புடைசூழப்பட்டு அவர்கள் தவத்திற்கு இரங்கிக் காட்சியளித்து சந்தோஷத்துடன் அவர்களை நோக்கி நல்ல வார்த்தைகளால் ஓ! தைத்திரிய சிரேஷ்டரே! நீங்கள் எதைக் கருதி இவ்வளவு கடுந்தவஞ் செய்கிறீர்களோ அதைச் சொல்ல வேண்டும். நான் உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பேன். உங்கள் கருத்தை வெளியிட வேண்டும்! என்று கேட்டார். அசுரர் மூவரும் உலகங்களுக்குப் பிதா மகனான பிரம தேவனை வணங்கிக் கைகட்டி நின்று சிருஷ்டி கர்த்தாவே! இவ்வளவு பலமுடைய எங்களுக்குத் தக்க வீடு ஒன்று வேண்டியிருக்கின்றது. பகைவர்களால் வெல்ல முடியாததும் சுகத்தைக் கொடுக்க வல்லதும் தேவர்களாலும் அழிக்க முடியாததும், பொன் மயமானதுமாக விளங்கும் பட்டணத்தை விரும்பினேன்! என்று தாரகாக்ஷன் வேண்டுமெனக் கமலாக்ஷன் கேட்டான்; வச்சிரம் போற்கட்டியாயிருக்கும் இரும்பால் செய்த பட்டணம் வேண்டும் என்று வித்யுன்மாலியுங் கேட்டான்.
தாரகாசுரன் புதல்வர்களாகிய அம்மூவருக்கும் கேட்டபடியே கைகூடும் என்று பிரமதேவர் கூறினார். மீண்டும் அம்மூவரும் எங்களை ஒருவருஞ் ஜெயிக்க முடியாதபடி எங்களுக்கு சாகாவரம் தரவேண்டும்! என்று வேண்டினார்கள் அதற்கு பிதா மகன், அசுரர்களே! மடியாதிருப்போர் வையகத்தில் ஒருவருமிலர். கற்ப காலங்கழியின் யானும் இந்திராதி தேவர்களும் திருமாலும் கூட மடிவோம் ஈசனொருவனே சாகாத தன்மையன் ஆதலின் சாகாவரத்தைத் தவிர வேறேதெனும் வேண்டியவற்றைக்கேளுங்கள்! என்று கூறினார். அதற்கு அசுரர்கள் அண்ணலே! அவ்வாறானால் பொன் வெள்ளி இரும்பினால் அமையும் எங்கள் மூன்று புரங்களும் பூமி அந்தரசுவர்க்கம் என்னும் திரிலோகங்களில் ஆயிரம் வருடத்திற்கொரு முறையொன்று சேர்வதும். மீண்டும் விரும்பியவிடத்திற்குச் செல்வதுமாக வரமளிக்க வேண்டும். அப்புரங்கள் மூன்றும் ஒன்றுபடும் போது உலகங்கட்கெல்லாஞ் சுத்த வீரராகவும் தன்னிகரற்றவருமாக விளங்கும் சங்கரபகவானே வருஷா காலத்தில் அபிஜித்முகூர்த்த நேரத்தில் அழித்தாலன்றி வேறொருவராலும் நாங்கள் சாகாதிருக்கவும் வரமருள வேண்டும் என்று கேட்டார்கள் கமலாசனன் அவ்வண்ணமே கைகூடுக! என்று கூறித் தம் சத்திய லோகஞ் சேர்ந்தார்.
தாரகாக்ஷன் முதலானோர் அளவிறந்த அவுணர் சேனையோடு மயன் என்னும் தானவத் தச்சனால் தங்கள் விருப்பின்படி முப்புரங்களைச் செய்து கொடுக்கப் பெற்று தங்களுக்கு வேண்டியதொன்று மின்றிச் சிவபூஜையைக் குறைவின்றிச் செய்து வந்தார்கள் தங்கள் குடிக்குணங்குறையாது வைகுண்ட முதலிய தேவநகரங்களையும் உலகத்திலுள்ள பல பட்டணங்களையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து வந்தமையால் திருமால் சினங்கொண்டு இந்திரன் முதலிய இமையவருடன் சென்று அசுரரை எதிர்த்துப் போர் புரிந்து ஆற்றாமல் தேவர்களுடன் புறமுதுகிட்டுத் திரும்பி மேருமலையில் தவஞ்செய்து சிவபெருமானைத் தரிசித்து முப்புராதிகள் செய்யுந் துன்பத்தைக் கூறினார். இறைவன் அவர்கள் எம்மடியாராதலின் அவர்களை அழிக்கப் படாது! என்று கூறி மறைந்தார். அதனால் மனம் வருந்திய விஷ்ணுமூர்த்தி புத்தவடிவேற்று நாரதமுனிவரைச் சீடராகக் கொண்டு திரிபுரத்தை அடைந்து அவர்களுக்குப் பலவகையாகப் போதித்து அவர்களைப் புறசமயவாதிகளாக்கினார். அவர்களில் மயங்காது நின்றோர் மூவரே நாரதமுனிவர் பதிவிரதா தர்மத்தால் பயனில்லையென்று போதித்து மங்கையரையெல்லாம் மதிமயங்கினார். புத்தனும் நாரதனும் தமது சீடர்களை நோக்கித் தமது மாயையில் அகப்படாத மூவரையுங் கொடியோர் என்று கூறி, அவர்களை முகாலம்பனஞ் செய்யாவண்ணம் வற்புறுத்தி விட்டு மேருமலையை அடைந்தார்கள். திருமால் சிவபெருமானைப் பணிந்து மகாதேவா! அவர்கள் வேதவிருத்தர்களாயிருத்தலின் இனியேனும் தேவரீர் அவர்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார். அதற்கு சிவபெருமான் விஷ்ணுவே! அவ்வாறாயின் விரைவிற் போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக்கடவை! என்று கட்டளையிட்டார். விஷ்ணுமூர்த்தி தேவர்களுடன் யோசித்து இரதம், வில், அம்பு குதிரை முதலியனவாகத் தேவர்களையும், இரதசாரதியாகப் பிரமனையும், பிறகருவிகளாகப் பிறதேவர்களையும் நியமித்துக் கொண்டு, சிவசன்னிதியில் விண்ணப்பித்தார்கள் தேவர் வேண்டு கோளுக்கு இரங்கிய சிவபெருமான் உமாதேவியாருடன் இரதத்தில் அமர்ந்து, விநாயகர், சுப்பிரமணியர், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் வாகனங்களில் ஏறிப் புடைசூழ்ந்து வரவும், சப்தரிஷிகள், ஆசீர்வதிக்கவும், ரிஷிகன்னியர் மங்கலப்பாட்டு பாடவும், நந்தி தேவர் பொற்பிரம்பு ஏந்தி முன் செல்லவும், பானு கம்பன் வாணன் சங்கு கர்ணன் முதலிய கணநாதர்கள்வாத்தியம் வாசிக்கவும், திரிபுரத்தை அடைந்தார். அப்பொழுது புரங்கள் மூன்றும் ஒன்று சேர்ந்து சரத்காலத்தில் அபிஜித முகூர்த்தமாயிருக்கவே தேவர்கள் சிவபெருமானை வணங்கி இவர்களை வெல்ல இதுவே சமயம்! என்றார்கள். சிவபெருமான் மேருவாகிய வில்லைவளைத்து வாசுகியாகிய நாணையேற்றி அக்கினியைக் கூர்வாயாகவும் வாயுவைச் சிறகாகவுஞ் சேர்க்கப்பட்டுள்ளன. திருமாலான அம்பைக்கையில் எடுத்தார். போர்க்கருவிகளாக அமைந்திருந்த இறுமாந்தார்கள் அதை உணர்ந்த எம் பெருமான் அந்த அஸ்திரத்தைப் பிரயோகஞ் செய்யாமல் புன்னகை செய்தார் அதனால் விஷயங்களைச்சுருக்கிச் சொன்னேன். இவ்வாறு சூத புராணிகர் கூறினார்.
4. அந்தகாசுரன் கதை
நைமிசாரணிய வாசிகளாகிய சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நோக்கி, சுவாமி தாங்கள் சொல்லிய சிவ சரித்திரங்களைக் கேட்டு ஆனந்தித்தோம், பரமாத்ம ஸ்வரூபியான சிவபெருமான் அந்தகாசுரனைச் சங்கரித்தாரல்லவா? அவ்வந்தகன் உலகத்திலே யார் வமிசத்தில் பிறந்தவன்? அவன் யாருடைய புதல்வன்? அவன் எவ்வாறு கொல்லப்பட்டான்? இந்த விபரங்களை எல்லாம் வேத வியாச பகவானால் தாங்கள் விசாரித்து உணர்ந்தவண்ணம் கிரமமாக எங்களுக்குச் சொல்லவேண்டும், என்று கேட்டார்கள். சூத முனிவர் கூறலானார்.
மகரிஷிகளே! அனைத்துலக நாதனான சிவபெருமானின் கண்களை முன்னொரு காலத்தில் மந்திரகிரியிலே ஜகன்மாதாவாகிய பார்வதிதேவியார் மாந்தளிர் போன்ற தன் கைகளால் வேடிக்கையாக மூடினாள். அவ்வாறு மூடிய ஓர் வினாடியிலே உலகமெங்கும் அந்தகாரம் நிறைந்தது. அவ்வாறு சிவபெருமானது கண்களை மூடிய பார்வதிதேவிக்கு உடனே உண்டான அச்சத்தால் வியர்வையுண்டாயிற்று, அவ்வியர்வையானது எம்பெருமானின் லலாடநேத்திரமாகிய அக்கினியாற் சூடுண்டு அவ்விரலிலேயே பயமுறத்தக்கதும் கொடூரமான குரூர புத்தியுடையதுமான ஒரு கர்ப்பமாயிற்று. அவ்வகைய கர்ப்பத்தில் விலக்ஷ்ணமும் விரூபமும், ஜடாமுடியும் தாடி மீசையும், கருமையும் சுருண்டு நெரிந்தமயிரும் அழுகையும் சிரிப்பும் பாடலும் நடித்தலும் பசித்தலும் பிரளயகாலமேகம் போன்ற குரலும் உடைய ஒருவன் பிறந்தான்.
மகா ஆச்சரியமான உருவத்தோடு பிறந்த அவனைச் சிவபெருமான் கண்டு பார்வதியை நோக்கிச் சிரித்து, பெண்ணே! என்விழிகளை நீ வேடிக்கையாக மூடி இவ்வகையாக ஒருவனைப் பிறப்பித்து என்னைப் பயப்படுத்துகிறாயா? என்று வினோதமாகக் கூறினார். பார்வதி அவ்வார்த்தைகளுக்குச் சிரித்து அவ்விழிகளில் பொத்தியதன் கைகளை எடுத்தாள். இவ்வகைய கோரரூபத்துடன் அந்தகாரத்தால், இருளால், பிறத்தலின் அவன் கண்ணிலாத அந்தகனாக இருந்தான். அப்பொழுது மகாதேவி மகாதேவனை நோக்கி சுவாமி இவன் யார்? குருடனையும் குரூபியாகவுமிருக்கிறான் எந்த நிமித்தத்தால் இவன் இவ்வாறு பிறந்தான்? இவன் யாருடைய புதல்வன்? இவ்வுண்மையைச் சொல்ல வேண்டும் என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், பார்வதி இவன் மகா பராக்கிரமசாலி என் விழிகளை நீ மூடினையே; அப்பொழுது உன் கை வியர்வையில் உண்டாகி அந்தகன் என்னும் பெயர் பெற்றான் இவனுக்குத் தந்தை நானே! நீ அனுகூலப் புத்தியோடு உன் கண் சகிதமாய் இவனை ஒரு வருடம் காக்க வேண்டும்! என்றார்.
பார்வதி தேவியும் சிவபெருமான் கட்டளைப்படித் தோழிகளோடு கூடி அவ்வந்தகனைத் தன் புத்திரன் போலவே பாதுகாத்து வந்தாள். சில நாட்கள் கழிந்த பின் உலகத்தில் ஹிரணியாக்ஷன் என்னும் அசுரன் தனக்குப் புத்திரரின்றி வனத்தையடைந்து தேகமெல்லாம் இளைக்க இராகத் துவேஷங்களின்றி சிவதரிசனத்தை விரும்பிப் பெருந்தவஞ் செய்தான். சிவபெருமான் அவன் தவத்திற்கு உள்ளம் கனிந்து அவன் தவஞ் செய்யுமிடத்தை அடைந்து நீ பஞ்சேந்திரியங்களை யடக்கி இவ்வகைய தவம் யாது கருதிச் செய்கிறாய்? உனக்கு வேண்டிய வரத்தைக் கேள், கொடுப்பேன்? என்றார்.
ஹிரணியாக்ஷன், சர்வேஸ்வரா! எனக்குப் பராக்கிரமசாலியும் அசுர குலத்தை ஆதரிப்பவனுமான புத்திரன் வேண்டும். ஆகவே இவ்வித விரதத்தை ஆச்சிரயிக்கிறேன். நான் விரும்பிய வண்ணமே அனுக்கிரகஞ் செய்ய வேண்டும். என் தமயனுக்கு பிரஹலாதன் முதலான நான்கு புதல்வர்கள் உண்டு! எனக்கு மட்டுஞ் சந்ததியில்லாவிடில் என் கஷ்டத்தால் சம்பாதித்த இராச்சியம் என்னவாகும்? பிறனொருவனுடைய ராஜ்யத்தைப் பராக்கிரமத்தால் சம்பாதித்து, தந்தையின் இராஜ்யத்தைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறவனே புதல்வன். அவ்வகைய புதல்வனாலேயே அவனைப் பெற்றோன் புகழ்பெறுவோன் தர்ம சிரேஷ்டர்களாகிய முனிவர்களாலே அபுத்ரஸ்ய கதிர் பத்தினியிடம் ஒரு புத்திரன் உண்டாகவேண்டும்! என்றான். அவ்வார்த்தைகளுக்கு சிவபெருமான் மனங்களித்து ஓ தைத்தியாதிபனே! உன் வீரியத்தால் சனித்த புத்திரன் உனக்கு இருக்க மாட்டானாகையால் எனக்குப் புத்திரனாயிருப்பதும், உனக்குச் சமான பராக்கிரம முடையவனும் பிறர் ஒருவராலும் ஜெயிக்கமுடியாத அந்தகன் என்னும் புத்திரனைப் பெறுக! துக்கத்தை விடுக! என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஹிரணியாக்ஷன் அந்தகனைப் புத்திரனாகப் பெற்றுக்கொண்டு பரமசிவனையும் பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து பலவிதமான தோத்திரங்களால் துதித்து சிவபெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு தன் இராஜ்யத்தை அடைந்து அந்தகனை ரஸாதலத்திலே நிறுத்தி தேவர்களையெல்லாம் ஜெயித்து உலக முழுவதையும் பாய்போலச் சுருட்டிக்கொண்டு தன் பாதாலலோகத்திற்குச் சென்றான். அதனால் தேவர்களும் மகரிஷிகளும் ஒன்றுகூடி விஷ்ணுமூர்த்தியை வேதமாகப் பூஜிக்கவே திருமால் ஸ்வேத வராக அவதாரஞ்செய்தார். அவர் மஹா பராக்கிரமசாலியாகத் தோன்றி மூக்கினருகுள்ள தந்தங்களால் தோண்டிக் கொண்டு பாதாளத்தையடைந்து, தனது தந்தம் முதலியவற்றாலும் கோரைப் பற்களாலும் பலமுறை அசுரரைச் சூர்ணித்து, வஜ்ராயுதத்திற்குச் சமானமான கால்களின் அடியால் அசுரச்சேனையை அநந்த முறை அழித்தார். கோடி சூரியப் பிரகாசமான காந்தியுடைய சுதரிசனம் என்னுஞ் சக்ரத்தால் ஹிரண்யாக்ஷனைச் சங்கரித்து அவனோடிருந்த துஷ்டர்கள் அனைவரையும் நாசஞ்செய்தொழித்து, இறந்த ஹிரண்யாக்ஷன் மகனாகிய அந்தகாசுரனைப் பாதாள லோகாதிபதியாய்ப் பட்டாபிஷேகஞ் செய்து நிறுத்தி, ஹிரண்யாக்ஷன் பாதாளத்திற்குக் கொண்டுபோன பூமியைத் தன் கொம்பின் மேல் வைத்து எடுத்துக்கொண்டு வந்து பழையபடியே இருத்தித் தன் வைகுண்ட பதவியை அடைந்தார்.
சவுனகாதி முனிவர்களே! அது முதல் அந்தகாசுரன் உலக முழுவதும் அரசு செலுத்திக் கொண்டிருந்தான். அந்நாட்களில் பிரமதேவர் அங்கு சென்று அந்தகனுக்குத் தரிசனங் கொடுத்தார். அவரை அந்தகாசுரன் பலவிதமாகத் துதித்து வணங்கினான். அதனால் நான்முகப் பிருமா அவனை நோக்கி, அந்தகனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார் அப்போது அந்தகன் அறியாமையால் பிதாமகரே! எப்பொழுதும் எவ்வகைய அஸ்திர சஸ்திர பாச வஜ்ர முதலிய ஆயுதங்களாலும் மரங்களாலும், மலைகளாலும் ஜலத்தினாலும் அக்னியினாலும், சத்துருக்களாலும், சுவர்க்க மத்திம பாதங்களிலும், இரவிலும், பகலிலும், சந்தியா காலங்களிலும் எனக்கு மரண பயமில்லாதிருக்க வரங் கொடுத்தருள வேண்டும்! என்று கோரினான்.
பிரம்ம தேவர் அவனை நோக்கி அந்தகா! நான் அவ்வாறே உனக்கு வரங்கொடுத்தேன். நீ எட்டுக் கோடி வருஷம் தானவராச்சிய பரிபாலனஞ் செய்வாய்! என்று கூறித் தன் சத்தியலோகம் அடைந்தார். இவ்வாறிருக்க ஹிரண்யாக்ஷன் இறந்தமையாலும் அந்தகாசுரன் இராச்சியாபிஷேகஞ் செய்யப்படினும் அந்தகனாயிருந்தமையாலும், ஹிரண்யாக்ஷன் தம்பியாகிய ஹிரண்யகசிபனே அரசனாயிருந்தமையின் அவன் கதையை இடையிலே சொல்கிறேன்; கேளுங்கள்.
முனிவர்களே ஹிரண்யகசிபன் தர்மங்களையெல்லாம் அழித்துப் போர் செய்து தேவர்களையெல்லாம் வென்றடக்கித் துன்புறுத்தினான். இந்திரன் முதலிய தேவர்கள் க்ஷீராப்தியை அடைந்து, அங்கே யோக நித்திரையிலிருந்த திருமாலைக் கண்டு பலவிதமான தோத்திரங்களால் துதி செய்தார்கள். திருமால் அகம்மகிழ்ந்து அமரர்களே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு உணர்ந்தார் சூரியகாந்தி போல் விளங்குந் திருமால் அவர்களை ஆதரித்த ஜடையும் வக்கிரதந்தங்களும் கோரைப் பற்களும், கூர்மையான நகங்களும் சிறந்த மூக்கும் குகைபோலத் திறந்து கொண்டிருக்கும் வாயும் கோடி சூர்யப் பிரகாசமும் நல்லகோர ஸ்வரூபமும் பிரளயகாலாக்கினி போன்ற ஸ்வரூபமுடைய வர்ணிக்கச் சாத்தியமில்லாத நரசிங்கவதாரம் எடுத்து சூரியாஸ்தமான வேளையில் அசுரர் புரத்தையடைந்து அங்கிருந்த அசுரர்களைப் போர் புரிந்து வதைத்தார். அகண்ட பராக்கிரமத்தைக் காண்பித்துக் கிறுகிறு வெனச் சுழன்று வனங்களையழித்தும் வனகாவலரை வதைத்தும் விளங்கும் விஷ்ணுமூர்த்தியை அங்கிருந்த அசுரர்கள் சிங்கமே என்று எண்ணித் திகைக்கையில் பக்தனாகிய பிரகலாதன் மாத்திரம் இவர் ஸ்ரீமந் நாராயணனே என்று கருதித் தன் தந்தையான ஹிரண்யகசிபனை நோக்கி, இது சிங்கமன்று யுத்தம் செய்வதில் பலனில்லை! இவர் விசேஷர் ஷட்குணை சுவரிய சம்பன்னர் முடிவில்லாதவர்! அவ்வகைய நாராயணனே உன் நகரத்தை அடைந்தார். ஆகவே யுத்தத்தை நிறுத்தி அந்நரசிங்கத்தை நீ சரணமடைந்தால் திரிலோகங்களிலும் அகண்டமான ராச்சியத்தையும் அனுபவிப்பாய் அவரைப் பணிய வேண்டும்! என்று கூறினான். ஹிரண்யகசிபன் கோபித்து அடா பிரகாதா! இந்நரசிங்கம் எனக்கெவ்வளவு? இதற்கு நீ பயந்தாயா? என்று சொல்லி தன்னருகே நிற்கும் சேவர்கர்களைப் பார்த்து, நீங்கள் இந்த சிங்கத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்! என்றான். சேவகர்கள் யாவரும் நரசிங்கத்தை அணுகித்தீயினையடைந்த சருகுபோலச் சாம்பலானார்கள். அதைக்கண்டதும் ஹிரண்யகசிபன் அஸ்திர சஸ்திர சத்திபாச அங்குச ஆக்நேயப்படை முதலிய படைகளால் நரசிங்கமூர்த்தியோடு ஒரு முகூர்த்தகாலம் யுத்தம் செய்து இறுதியில் இருவரும் கொடூரமான மல்யுத்தம் செய்தார்கள். அது உலகினருக்குப் பெருங் கஷ்டமாயிருந்தது. ஹிரண்யாக்ஷன் சூலத்தால் பெருங்கடினமான போர் செய்கையில் நரசிங்கமூர்த்தி கோபமிகுந்து தன் கைவிரல் நகங்களால் அவனைக் கழுத்திற் குத்திப் பிளந்து கொன்றார். இறந்து விழுந்த ஹிரணியனின் உடலை நரசிம்மமூர்த்தி பலவிதமாகத் துவம்சஞ்செய்து உதிரப்பெருக்கோடுகையில் அதனைச் சூர்ணஞ் செய்தார். ஹிரண்யகசிபன் இறந்த பின்னர், பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து கொண்டிருக்கும் பிரகலாதனைக் கண்டு களித்துக் கோபசாந்தியாய் அருகே அழைத்து அன்புடன் தனயனுக்குத் தந்தையின் இராச்சியத்தை முறைப்படி பட்டாபிஷேகம் செய்து வைத்து, உலக முழுதும் விஷ்ணு பக்தியைப் பிரசித்தஞ் செய்பவனை வாழ்த்தித் தன் வைகுண்ட பதவியை அடைந்தார்.
அதன் பின்னர் பிரகலாதன் முதலிய சகோதரர்கள் வேடிக்கையாக ஓ அந்தகா! உன் தந்தையான ஹிரண்யாக்ஷன் அஞ்ஞானத்தால் பலகாலம் மேருமலையின் குகையில் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்து அவரது கருணையால் விரூபமும் கோரமும் குருடுமாயிருக்கும் உன்னைப் புத்திரனாக வரம் பெற்றான்! நீ உன் தந்தையின் இராச்சியத்திற்குரியவனல்லன், தவறி யாருக்காவது புத்திரனாகாமற் போனாயே! என்று கூறினார்கள். அந்தகன் அவற்றைக் கேட்டு, மனதிலேயே யோசித்து வருந்தி, தன் வாய்மொழியால் அவர்களுக்கு ஏற்ற சமாதானஞ் சொல்லி ஒரு நாளிரவில் வனத்தையடைந்து அநேக வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று ஆகாரமின்றிக் கையையுயர வெடுத்து கொண்டு தேவாசுரர்களால் செய்யமுடியாத ஜபதபஞ்செய்தான். பிறகு ஒரு வருஷகாலம் கூர்மையான அம்புகளால் தன் தேகத்தைச் சிறிது சிறிதாகக் கொய்து தினந்தோறும் யாகத்திலிட்டுச் உதிரஞ் சொரியும் எலும்புமாத்திரமிருக்கப் பெற்றவனானான். அப்பொழுதும் பிரம்மன் பிரசன்னமாகாமையால் எஞ்சி நின்ற எலும்பினையும் ஹோமஞ் செய்ய உத்தேசித்திருந்தான் அதைக் கண்டதும் பிரம்ம தேவன் அவனுக்கு வரங்கொடுக்கக் கருதி வருகையில் வழியிற்கண்டதேவர்களும், முனிவர்களும், அன்னவாகனரே அந்த அந்தகாசுரன் மகாபாவி அவனுக்கு வரங்கொடுத்தால் பெருந்தீமைகள் உண்டாகும் கொடுக்காவிட்டால் அவன் எலும்புகளையும் நெருப்பில் போட்டொழிவான் என்று தடுத்தார்கள். ஆனால் அதைக் கேளாமல் பிருமா அந்தகனையடைந்து அந்தகா நீ வேண்டிய வரங்களை கேட்டுக் கொள்! என்றார் அந்தகன் அகங்களித்து நமஸ்கரித்து சிருஷ்டிகர்த்தாவே மகாபலசலிகளான பிரகலாதன் முதலான என் தம்பிமார்களால் என் இராச்சியம் கைக் கொள்ளப் பட்டதாதலின் அஃதெனக்குக் கைகூடவும் அவர்கள் என் சேவர்களாகவும் நான் கண் பார்வையும் நல்லுருவமும் பெறவும், இந்திராதி தேவர்கள் எனக்குக் கப்பங்கட்டவும் தேவராக்ஷச சுந்தர்வ யக்ஷமானிடர்களாலும் என் தந்தையைக் கொன்ற நாராயணனாலும் இன்னும் வேறு வகையாலும் நான் கைகூடுமாயினும் சாவாதிருக்க முடியாது அவ்வாறு இறவாதவர் திரிகாலங்களில் ஒருவருமிலர் உலகத்தில் சத்புருஷர்கள் தீர்க்காயுசை விரும்பமாட்டார்கள் என்று தந்திர வார்த்தை கூறினார்! அதனால் அந்தகன், சிருஷ்டி கர்த்தாவே! முக்காலத்திலும் உள்ளவளும், மிக உன்னதமும், உத்தம, மத்திம வயசும் அதி அழகும் வாய்ந்த மங்கையர்களுக்கிடையில் மகா அலங்கார பூதமாகியும் எனக்குத் தாயாகியும் மனவாக்குக் காயங்களாலும் பாவிக்கப்படாத ஸ்திரீயை நான் மோகிக்கையில் மட்டும் எனக்கு நாசமுண்டாகட்டும்! என்று வரம் கேட்டான். ஆகவே பிரம்மதேவன் புன்சிரிப்புடன் அவ்வாறே யாகுக! என்று வரங்கொடுத்து இனி தவச் செயலொழிக பலபராக்கிரமசாலியாய்ப் போர் செய்ய வல்லவனாவாய்! என்றார். அந்தகன் அவரை நோக்கி நான் அஸ்தி சேஷமாயிருப்பதால் என்னைத் தங்கள் திருக்கரத்தாற் பரிசித்தப் பூர்ண தேகமுடையவனாக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தான். பிரமன் அவ்வாறே செய்து, தனது சத்திய லோகம் அடைந்தான்.
அந்தகாசுரன் தான் பெற்றுக்கொண்டே வரத்தின் விசேஷத்தால் கண்களையும், பூர்ண தேகத்தையும் சிறந்த வல்லபத்தையும் பெற்றுத் தன் நகரத்தை அடைந்தான். அவனைக் கண்ட பிரகலாதனாதியோர் அவன் பிரமதேவனால் வரம் பெற்றுள்ளான் என்பதையுணர்ந்த அவனை எதிர்க்க முடியாமல் அரசாக்ஷி முழுவதையும் ஒப்படைத்துவிட்டு அவனுக்கடங்கியிருந்தார்கள். பிறகு அந்தகாசுரன் சுவர்க்கலோகத்தை ஜெயிக்கக் கருதி பரிசனங்களுடன் சுவர்க்கலோகத்தை அடைந்து, தேவர்களையும் அவர்கள் சைனியங்களையும் வென்று, இந்திரனைக் கப்பங்கொடுக்கச் செய்தான். நாகர்களையும் ஸுபர்வர்களையும், அசுரர்களையும், கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், மானிடரையும், பர்வதவிருஷ முதலிய எல்லாவற்றையும், சிங்க முதலிய சதுஷ்பாத ஜந்துக்களையும் பொருந்திய திரிலோகத்தையும் பரிபூரணமாக வென்றடக்கினான். அவர்களில் அதிரூப சவுந்தரியமும் இளவயதும் வாய்ந்த மங்கையர்கள் நூற்றுவரை அபகரித்து, ரசாதலத்து ஸ்திரீகளைப் பூலோகத்தில் கொண்டு வந்து சுவாதீனப்படுத்திக் கொண்டான். சுந்தரிகளோடு ஏகாந்தமான நதிதீரங்களிலும் பலவித பூக்களோடு பொலிவுறும் மலைச்சாரல்களிலும் பூந்தோட்டத்திலும் விளையாடிக் கொண்டு அவர்களோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்தான். அன்றியும் ருசியான பழங்களையும் மதுவையும் அம்மங்கையர்களுக்கு ஊட்டி அவர்கள் புசித்து எஞ்சியதைத் தான் உட்கொண்டும் களியாட்டம் நடத்தினான். விமான வாகனங்களில் பறந்தும், மயனால் நியமிக்கப்பட்டு மலர் மணங்கமழும் திவ்விய மாட மாளிகைகளில் மதனாகம முறைப்படி அச்சுந்தரிகளைக் கூடி மகிழ்ந்தும் ஆயிர வருஷங்கள் கழித்தான். இதுவரையில் அந்தகன் பரார்த்தமான கிரியை ஒரணுவளவும் செய்ததேயில்லை தன் புதல்வர்களில் சிறந்தவர்களைக் குதர்க்க வாதத்தால் வேதமார்க்க விரோதிகளாக்கினான். தனக்குற்ற ஐசுவரியத்தால் ஆணவம் மிகுந்து, வேதம் ஓதும் பிராமணர்களையும், தேவர்களையும், குருவையும் மதியாமலும் மரணம் அதிவிரைவில் வருகின்றதென்பதை உணராமல் உலகமுழுவதும் தன் சைனியங்களுடன் யாத்திரை செய்து அநேக கோடி வருஷங்கள் சந்தோஷமாகவே இருந்தான். அவ்வாறிருக்கையில் அவன் ஒரு சமயம் மந்தர மலையை அடைந்து, அங்கு மகாப்பிரகாசத்துடன் சுவர்க்கலோகத்தை யொத்த குகையொன்றைக் கண்டு தன் சைனியத்துடன் மதுபானஞ் செய்து வெறிகண்டு அங்கே ஆடியும் பாடியும் இது நாம் வசிப்பதற்குத் தக்கதென்று கருதி ஆங்கிருக்கத் தீர்மானித்தான். அங்கு அதி விநோதமான நகரமொன்று நியமித்துக் கொண்டு, அம்மந்திரகிரியில் குகையில் மயனால் நிர்மாணஞ் செய்யப்பெற்ற அந்நகரத்தில் நகரப் பிரவேசஞ் செய்தான்.
சவுனகாதி முனிவர்களே! அந்தகாசுரன் இவ்வாறு அந்நகரத்திற் சிறிது காலம் ஆனந்தத்தோடும் காமக்களியாட்டங்களோடும் கழித்த பிறகு அவன் மந்திரிகளாகிய துர்யோகதனன் வைபவஸன் ஹஸ்தி என்னும் மூவரும் அதிசுந்தரமான ஒரு மங்கையைக் கண்டு வினாடி காலத்திற்குள் விரைந்து வந்து அந்தகனை அணுகிச் சொல்லானார்கள். நாங்கள் விநோதமாக விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு குகையையும், அக்குகையில் தியான யோகத்தில் அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டிருக்கும் பேரழகுடைய ஒரு முனிவரைப் பார்த்தோம். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப் பெற்ற தலைமயிரும், இடையிற் புலித்தோலுடையும், ஆதிசேடனுடைய பணாமுடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேகமும், கபாலமாலிகாபரணமும், ஜடையும் கையில் ஜபமாலையும், கட்கமும், யோகதண்டமும், உடையவராக அம்முனிவன் விளங்கினான் அவன் அருகில் ரிஷிபமுகமும் அதிகோரமும் திறந்த வாயும் சர்வாபரணமும் தீக்ஷணமான காந்தியும் வெண்ணிறமுடைய ஒருவன் அம்முனிவனுக்குப் பணிவிடை செய்கிறான். அவ்வாறு தியான யோகத்திலிருக்கும் முனிவனுக்கருகில் ஒரு கட்டழகியையும் பார்த்தோம் அவள் நல்ல திவ்விய ரூபமும், யவ்வன பருவமும், மிருதுவான இனிய வசனமும் பவளம், நவமணிகள், முத்துக்கள், இரத்தினங்கள், வஸ்திரங்கள், பொன் மலர் மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திவ்ய தேகமுடையவளாக மாதர்களுக்குள் மிகச் சிறந்த இரத்தினம்போல் விளங்குகிறாள். அவ்வனிதையைக் கண்டவனே கண்களைப் பெற்றதனாலுண்டான பலனை அடைவான் அவளைக் காணாதவன் கண்கள் பயன் பெறாதவனே யாவான்! அம்முனி மங்கையை தேவலோக ஸ்திரீ என்று நாங்கள் நினைத்தோம்! என்றார்கள். இவ்வாறு கூறிய மந்திரிகளின் வார்த்தையைக் கேட்ட அந்தகாசுரன் மன்மத பாணங்களால் காமதுரனாகி மந்திரிகளே! நான் சொல்லும் வார்த்தைகளை அம்முனிவனிடஞ் சென்று சொல்லவேண்டும்! என்று கூறியனுப்பினான். அவர்கள் அவ்வாறே அம் முனிவனையடைந்து கூறலாயினர்.
முனிவனே! தைத்திய ராஜனான அந்தகாசுரன் சரிதத்தைச் சொல்கிறோம். அதைக் கேட்டுக்கொண்டு உன்னுடைய சமாசாரத்தையுஞ் சொல்ல வேண்டும் அந்தகாசுரனோ ஹிரண்யாக்ஷனுடைய குமாரன். மகாத்மா! நீ யார்? இங்கே ஏன் இருக்கிறாய்? இளம் பருவமும் பேரழகுமுடைய இப்பெண் யார்? யோசித்துப் பார்க்கையில் உன் மனைவி என்றே நினைக்கிறோம். இவளுடைய மெல்லிய தேகமோ அதிகோமளமானது நீயோ உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு எலும்பு மாலையை ஆபரணமாகப் பூண்டிருக்கிறாய், ஏ, விரூபி, அம்பறாத்தூணி, வில், அஸ்திரம், டமருகம், சூலம், மழு தோமரம் முதலியவற்றை ஏந்தியிருக்கிறாய்! உன் தேசத்தில் ஒரு நதி பிரவாகிக்கிறது சந்திரன் ஒருவன் இருக்கிறான். முகத்தில் கோரமான நெருப்புப் பிரகாசிக்கிறது சாப்பங்கள் உன்மீது உலாவுகின்றன எருது வாகனத்தை எதிரே நிற்க வைத்துக் கொண்டு அதை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! தர்மவான்போலத் தியான யோகத்திலிருக்கிறாய்! உன் உணவுகள் எவை என்றும் தெரியவில்லை இப்படிப்பட்ட சாமானியனான உனக்கு அந்த சவுந்தர்யமான மங்கையுடன் சம்பந்தமானது விருத்தமாகத் தோன்றுகிறது ஆகவே எங்கள் பிரபுவான அந்தகாசுரனுக்கு அவளை நன்மையாகவே கொடுத்துவிடு அப்படி நீ இப்பொழுதே கொடாவிடில் அவன் திரிலோகங்களையும் ஜெயித்தவனாதலின் அந்தக் கட்டழகியை பலாத்காரமாகக் கொண்டுபோய் விடுவான். இதில் தடையில்லை எங்கள் சொல்லைக் கேட்டு உன்னுடைய அஸ்திர சஸ்திரங்களை விடுத்து இவ்வணங்கை அந்தகனுக்கு உவந்தளித்து அதன் பின்னர் அருந்தவஞ்செய்க! இவ்விஷயத்தை நீ ஒப்பு கொள்ளவில்லையென்றால் நாங்கள் உன்னுடைய கருத்தை அந்தகாசுரனுக்கு அறிவிப்போம் அப்பொழுது உன் உடல் உனக்கு நிலைக்காது! என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் முனி வேடங்கொண்ட சிவபெருமான் புன்சிரிப்புடன் அசுரர்களே! சிவபெருமான் இருக்கும்போது என்னாலும் உங்களாலும் என்ன நடக்கலாம்? என் தந்தை என்று ஒருவருமில்லை அவனை நானறியேன் இக்குகையிலிருந்து ஏதோவொன்றை ஸ்மரித்துக் கொண்டிருக்கிறேன். இதுவே என் பாசுபத விரதம். நான் தாயை அறியேன் என் விரதமிது. இது விலக்கற்பாலதன்று என் தவத்திற்குச் சித்தி பூதமாக இருக்கும் இச்சுந்தரவதியே என் மனைவி உங்களுக்குச் சாத்தியமானால் அவளைக்கொண்டு போகலாம்! என்று கம்பீரமாகச் சொன்னார். அதைக்கேட்டதும் அசுரர்கள் அம்முனிவனைப் பணிந்து, திரிலோக நாசகனாக விளங்கும் தங்கள் அரசனான அந்தகாசுரனிடம் திரும்பி வந்து மதுபானத்தால் தன்னை மறந்து புரளும் அவனை நமஸ்கரித்துச் சொன்னார்கள்.
அசுராதிபனே! அங்கிருப்பவர்களும் அம்முனிவனும் ஆ ஆ! அந்த அந்தகாசுரன் எவ்வளவினன்? அவன் வலிமை எத்தகையது? என்று புன் சிரிப்புடன் கேலியாக, ஜயஜய வென்று கூறினார்கள் என்று மந்திரிகள் கூறினார்கள். அப்பேச்சைக் கேட்டு. குரூரனும் மகா பாபியுமான அந்தகாசுரன் சிரித்து, அசுரன் என்றால் சாமானியனா? என் பெயரைக் கேட்ட யமனும் அஞ்சுவான். இமாசலம் போன்ற புயங்களையுடைய எனக்குச் சமானமான வீரனொருவன் உலகில் இருக்கிறானா? என் பாணங்களுக்குச் சமானமான பாணங்கள் யாரிடம் இருக்கின்றன? யமனும் அஞ்சுமாறு போர் புரியவல்லேன் கிழப்பருவத்தால் உடன் வளைந்த அவ்வீரனாகிய சேவகன் எங்கே? மகாபலசாலியானவன் எங்கே மந்தபாக்கியனான அம்முனிவனுக்கு மகாரூபவதியான அந்தப் பெண் தகுதியா? என்று குமுறியெழுந்தான் மந்திரிகள் அவனை நோக்கி அரசனே அம்முனிவன் வார்த்தைகளையெல்லாம் அப்படியே சொல்லுகிறோம். உம்முடைய பலம் எவ்வளவு? நான் பெருந்தவஞ் செய்து சிறந்தபலனை அடைந்திருக்கிறேன் கூடுமானால் என்னை எதிர்த்து உங்கள் வலிமையைக் காட்டலாம். வஜ்ராயுதம் போன்ற பாணங்கள் என்னிடம் இருக்கின்றன உங்கள் தேகங்களோ மிருதுவானவையெனவும் அம்முனிவன் கூறினான். ஆகவே நீங்கள் அம்முனிவனுடன் அஸ்திர யுத்தஞ்செய்வது யுத்தமல்ல அம் முனிவன் மகா கர்வமுடையவன் பலவிதமான யோசனையால் பயனென்ன? அம் முனிவனை எதிர்த்தால் நீங்கள் அபஜயப்பட்டுப் பலராலும் ஸ்மரிக்கப்படுவராவீர், என்று கூறினார்கள் அவ்வார்த்தையால் அந்தகன் அவமானரோஷமுற்று நெய் சொரிந்த யாகாக்கினி போலக் கொதித்தெழுந்து அம்மந்திரிகள் சொரிந்த யாகாக்கினி போலக் கொதித்தெழுந்து அம்மந்திரிகள் வார்த்தை சத்தயமாயினும் தனக்கு இதமாயிராததால் கபடமாகக் கருதினான். உடனே அவன் கட்கத்தைக் கையிலேந்தி எனக்கு நிலையானவரம் இருக்கும்போது பயன் என்ன? என்று பெருந்தொனி செய்து மதுபானம் விசேஷமாகச் செய்து கட்குடியாலும் கோபத்தாலும் கண்கள் சிவந்து, மத யானைபோல நடந்து அக்குகையை அடைந்தான்.
அங்கு திரிநேத்திரதரனான சிவபெருமானது சார பூதமாகிய உமாபிராட்டியாரைக் கண்டு, சிவபெருமானையும் அவர் கரத்திலிருந்த அஸ்திர சஸ்திரங்களையும் நந்தி தேவரையும் ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு போகவேண்டுமென்று நினைத்தான். பார்வதி தேவியின் அழகைக் கண்டு மன்மத பாணங்களுக்கு ஆளாகி மதி மயங்கி, அக்கினியில் விழும் புழுவைப்போல் அந்தகாசுரன் துடித்தான் திருநந்தி தேவரால் காவல் செய்யப்பட்டிருக்குங் குகைக்குள் புகுந்தான். அந்தகன் அவ்வாறு நுழையும் போது நந்தி தேவர் பாறைகள் மரங்கள் வஜ்ரம் ஜலம் அக்கினி நாகாஸ்திரம் முதலிய பயங்கரமான பல பொருள்களால் பாதித்து அடா! நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்டார். அந்த வீர வாக்கியத்தைக் கேட்டு அந்தகன் கருத்தைக்கூறி இறுதியில் ஒரு முகூர்த்தகாலம் புத்திக்கு எட்டாத ஆச்சரியகரமான யுத்தம் செய்தான். பிறகு பராஜிதனாகி அவ்விடம் விட்டுப் பசிதாகங்களால் வருந்தி மது வெறி தெளிந்து புறங்காட்டி ஓடினான் கத்தி முதலிய பலபகைகளால் சின்னாபின்னஞ் செய்யப்பட்டதேகத்துடன் அவன் ஓடிப்போன பிறகு, விகஸாதன் முதலிய மந்திரிகளும் பிரகலாதனாதி வீரர்களும் நந்திதேவரோடு அஸ்திர சஸ்திரங்களால் பயங்கரமான யுத்தம் செய்து நாணமென்னும் அங்குசத்தாற் குத்தியிழுக்கப்பட்ட புத்தியையுடையவர்களாய்ப் பிரிந்தார்கள். பிறகு விரோசனன், பலி, பாணன், சஹஸ்ரபாஹு, ரஞ்சன், ஸுரஞ்சன், சங்கரன், விருத்திரன் முதலிய அசுரர்கள் பலர் நந்திபகவானோடு அகண்டமான யுத்தம் செய்து வென்றடக்கப் பட்டர்களாய் மடிந்தார்கள். இவ்வாறு போர்புரிந்திருந்த அசுரர் தொகையைக் கேட்ட சித்த சாரணர் ஜயஜய என்ற கோஷங்களோடு சிவபெருமானைப் புகழ்ந்தார்கள். கண்ட பேருண்ட பட்சிகளின் அபிநயமும் இராக்ஷல சமூகத்தால் வியாகூலமும் பயங்கரமும் இரத்தத்தால் சேறுபட்டும் மாமிசம் இரத்தம் முதலியவற்றின் துர்மணம் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. அங்கு சர்வகாலனாகிய பிநாகபாணி பார்வதி தேவியுடன் எழுந்தருளி உமாதேவியைப்பார்த்து நாயகியே! நான் எவ்வளவு கடினமான பாசுபதவிரதத்தை எடுத்திருந்தேனோ, அந்த விரதத்தின் பலன் இதுவே! என்று நன்மொழிகளால் கூறி நான் இன்னும் சிறிது காலம் இப்பாசுபத விரதத்தை ஆச்சிரயிக்க எண்ணினேன் ஆகையால் நான் வேறோரிடத்தை அடைகிறேன் நீ இவ்விடத்திலேயே இரு உன் குமாரனான நந்தி உன்னைக் காத்திருப்பான் நான் இவ்விரதத்தை முடித்து வருமளவுத் துக்கமின்றிச் சந்தோஷத்துடன் நிர்ப்பயமாக இருப்பாயாக! என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் புண்ணியமயமான வேறொரு வனத்தை அடைந்து தம்மைத்தாமே பூஜித்துக் கொண்டு ஆயிரம் வருஷகாலம் கழித்தார் பார்வதி தேவியோ எப்பொழுதும் தனித்திருந்த பயமுற்றுத் தன் புத்திரனான வீரகனோடு உரையாடிக் கொண்டும் தன் நாயகரின் வருகையைக் கருதித் துக்கித்துக் கொண்டும் அம்மந்தர பர்வதக்குகையில் சிவத்தியானத்தோடு தங்கியிருந்தாள்.
இவ்வாறு பார்வதிதேவி இருக்கையில் வர தானத்தால் மகாமத்தனான அந்தகாசுரன் பற்பல சைனியங்களுடன் பயமின்றி மீண்டும் போர் புரியக் கருதி அக்குகைக்கு வந்தான். நந்திதேவரோடு அவன் இரவும் பகலும் பசி தாகநித்திரைகளின்றி நூற்றைந்து வருஷங்கள் கடுங்கோபத்துடன் போரிட்டால்; கட்கம், குந்தம், பிண்டி, பாலம், கதை, புசுண்டி அஸ்திரங்கள், அர்த்தசந்திர, பாணங்கள் எரிந்து கொண்டிருக்கும் நாராசங்கள் தீக்ஷண்யமான சூலம், மழு, தோமரம், பர்வதம் விருக்ஷம் முதலிய பலதிறப் படைகளால் அதிவினோதமான யுத்தம் செய்தான். அவ்வாறு அவன் பிரயோகித்தப் பாணங்களால் நந்திதேவர் மிகவும் அடிபட்டு அக்குகை மார்க்கத்திலேயே தைத்தியர்கள் குதூகலிக்கும்படி க்ஷணநேரம் மூர்ச்சையானார். அசுரர்கள் ஆனந்தத்தால் குதித்து குகையின் கதவைத் திறக்க யத்தனித்து அது அசாத்தியம் என்று இருந்தார்கள். இதையெல்லாம் உணர்ந்த பார்வதிதேவி அச்சமுற்றுத் தோழிகளோடு சேர்ந்து கொண்டு, பிரம்ம விஷ்ணுக்களையும், வீரபத்திரரையும் அவரது சைனியங்களையும் அஷ்டதிக்குப் பாலகரையும் நினைத்து ஸ்மரித்தாள். இவ்வாறு நினைத்தவுடனேயே பிருமா விஷ்ணு முனிவர்கள், சித்தர்கள், நாகர்கள், குய்யகர்கள் யாவரும் வந்தார்கள். அந்தப்புரத்திலிருக்கும் மகாராணியாதலின் அம்மகா தேவியைத் தரிசிக்க எல்லோரும் பெண்வடிவங்களெடுத்து தங்கள் சைனீயங்களுடன் குகைகளுக்குச் சென்று தங்கள் திவ்விய ரூபங்களைக் காண்பித்தார்கள். பெண் வடிவேற்று வந்த தேவமுனி கணங்களும் பார்வதி தேவியோடு பெருந்தொனியுடன் உரையாடிய போது குகை முழுவதும் எதிரொலி உண்டாயிற்று அதன் பின்னர் பார்வதிதேவி அவர்களை எல்லாம் சேனையாகக்கொண்டு போர் புரியத் திருவுள்ளங்கொண்டாள். அப்பொழுது அவரவர் தங்கள் சங்கங்களைப் பூரித்து யுத்த பேரிகை முழங்கினார்கள். அவ்வோசையைக் கேட்ட நந்திதேவர் மூர்ச்சை தெளிந்தெழுந்து ரதத்தில் ஏறி அநேக வகையான ஆயுதங்களால் அசுரர்களை அடித்துக் கொண்டிருந்தார் இதற்குள் பிரமனிடத்திற்றோன்றிய குகை முகத்திலிருந்து புறம் போந்தாள் விஷ்ணுவினிடந் தோன்றிய நாராயணி என்னும் சக்தி, கதை, சங்கு, சக்கரம், வில் பழுக்கக் காய்ச்சின கத்தி முதலியவற்றை ஏந்திரத்த நிறத்தோடு வந்தாள்.
இந்திரனிடம் தோன்றிய சக்தி வஜ்ராயுதமேந்தி ஆயிரங்கண்களோடு அசுரர்கள் நடுங்கும்படித் தோன்றினாள். அக்கினியிடந் தோன்றிய சக்தி தண்டந்தாங்கி, கரத்தைதூக்கிக்கொண்டு வந்தாள். நிருதி, சம்பந்தமான நைஸாசர் மகா கொடூரத்துடன் கட்கமேந்திவந்தாள். யம சம்பந்தமான சக்தி காலதண்டந் தாங்கிப் புறப்பட்டாள் வருண சம்பந்தமான சக்தி வருணாஸ்திரத் தரித்து போர் புரியக் கருதியும், வாயு சம்பந்தமான சக்தி அங்குச பாசந்தரித்துப் பிரளய காலவாயுவை வீசிக்கொண்டும் குபேர சம்பந்தமான சக்தி(ய÷க்ஷசுவரி) ஊழித்தீயை நிகர்த்த கதையைக் கரத்திலேந்தியும் போராட வந்தாள். ஈசான சம்பந்தமான சக்தி தீக்ஷண்யமான முகமும் கோர ரூபமும் பாம்பும் பயப்படத்தக்க நகங்களே ஆயுதமுமகாக் கொண்டும் வந்தாள். அவ்வாறு அஷ்டதீக்குப் பாலர்கள் சக்தியும் பல தேவர்களால் தோன்றிய எண்ணிறந்த சக்திகளும் ஒரு சேர வந்து யுத்த பூமியையும் அபாரமான அசுரச் சேனையையும் கண்டும் ஆச்சரியமடைந்தார்கள். பிறகு அச்சக்திகள் திருநந்தி தேவரைச் சேனாதிபதியாகக் கொண்டு, முன்னொரு காலத்தும் நடந்திராததும், கண்டோர் அதிசயிக்கத் தக்கதும், இயமனும் அஞ்சத்தக்கதுமான யுத்தத்தைப் பார்வதி தேவியாருடன் சேர்ந்து செய்தார்கள் இவ்வாறு பெரும்போர் நிகழுகையில் சேனாதிபதியான நந்தி தேவர் பலவித யூகங்கள் கட்டியிருப்பதை அந்தகாசுரன் உணர்ந்து வேறொரு வகையான யூகம் வகுத்து கிலனென்னும் பெயருடன் உலகத்தையே விழுங்குவது போல் அங்காந்தவாயுடன் போர் புரிந்தான் அப்போது தம்மைத்தாமே பூஜித்துக் கொண்டிருந்த சிவபெருமான் சர்வ வியாபியாதலால் அதை உணர்ந்து தம் பூஜையை நிறுத்திவிட்டுப் புறப்பட்டார். பிரளயகால சூரியர் ஆயிரவர் ஒருங்கே உதித்தது போன்ற தேக காந்தியோடு போர்முனைக்கு வந்தார். சிவபெருமானது வருகையைக் கண்ட திருநந்தி தேவரும் ஸ்திரீபமுற்ற தேவர்களும் பெருங்களிப்புடன் பயமின்றிப் போர் புரிந்தார்கள் பார்வதி தேவியும் சிவபெருமானைச் சிரத்தால் பணிந்து விசேஷமான யுத்தம் செய்தாள். அப்போது சிவபெருமான் எல்லாவற்றையுங்கண்டு பர்வதராச புத்திரியான உமாதேவியைத் தம் திருக்கரத்தால் எடுத்துக் கொண்டு குகைக்குச் சென்றார். பிராமி நாராயணி முதலிய சக்திகளும் உடனே உட்சென்றார்கள் அப்பொழுது பார்வதி தேவியார் அச்சக்திகளுக்குத் தக்க துணிமணி முதலிய வெகுமதிகளை அளித்தாள் நந்திதேவர் ஒருவரே தனித்து நின்று அசுரர்களோடு போராட்டிப் பல காயங்கள் பட்டுச் சிவ சன்னிதியை அடைந்து தலைவணங்கி, சுவாமி! அந்தகாசுரன் தன் விகஸனென்னும் மந்திரியை அனுப்பினான் அந்தகனும் வருகிறான், அவன் சொன்னதை அப்படியே கூறுகிறேன்! பெண்ணால் உமக்குப் பிரயோசனமில்லையாகையால் அப்பெண்ணை எனக்குக் கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுத்த பிறகு உம்காரிங்களைச் செய்து கொள்ளலாம். அம்மங்கையைக் கொடுக்காவிட்டால் நீரே அவளை விடும்படிச் செய்வேன்! அப்பொழுது முனிவர் என்று அழைக்கப்படமாட்டாய்! சத்துருவாவாய் அசுரர்களுக்கு எப்பொழுதும் துன்பம் செய்து வருவதால் தடையின்றி நீ கொல்லப்படுவாய் ஆதலால் உன்னுடைய ஸ்திரீயை உடனே அனுப்பிவிட வேண்டும் என்று கூறினான்! என்றார்.
அசுர ராஜனான அந்தகாசுரன் குதூகலத்தோடு வரும் தன் மந்திரியான விகஸனுடைய கருத்தை அவன் வருகையிலேயே உணர்ந்து தன் சைனியங்களுடன் போர் புரியச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். சித்தம் செய்து கொண்டு தன் பாதி உடலை சிங்க உருவமாக்கிக் கொள்ள இந்திரன் முதலிய தேவர்களாலும் ஜயிக்க முடியாத வலிமையுடைய கிலாசுரன் என்னும் பெயர் வகித்துத் தன் பரிவாரங்களுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் குகையை அடைந்தான். அப்பொழுது அவர்களில் சில அசுரர்கள் அக்குகை வாயிலைத் தங்கள் ஆயுதங்களால் புடைத்தார்கள். சிலர் நந்திதேவரைப் பலவிதமான அம்புகளாற் பலவிதமாகவும் அடித்தார்கள் சிலர் பார்வதி தேவியைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அக்குகை வாயிலில் அன்னியர் வரவொட்டாமல் காவலாய் நின்றார்கள் சிலர் பழங்கள், கிழங்குகள் பலவிதப் புஷ்பங்களை எல்லாம் அழித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உத்தியான வனங்களையும் திவ்வியமான ஜலம் முதலானவற்றைக் கொடுத்தார்கள். சிலர் மகிழ்ச்சியால் மலையுச்சியில் ஏறி, அதன் சிகரங்களை உருட்டித் தள்ளினார்கள். இவ்வாறு அசுர சேனைகள் துவம்சஞ் செய்வதைக் கண்டதும் சிவகணங்களையும் பூதங்களையும் தத்தம் பரிவாரங்களோடு போர்க்கோலங் கொண்டு வரவேண்டுமென்று அவர் திருவுள்ளத்தில் நினைத்தார். உடனே கணநாதர்கள் யாவரும் தங்கள் படைவரிசைகளோடும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் விமானங்கள் குதிரைகள், ரிஷபங்கள், பசுக்கள், ஓட்டைகள், பறவைகள், சிங்கங்கள் முதலிய வாகனங்களிலிருந்தும் வந்தனர்கள். விஷ்ணுமூர்த்தி முதலிய தேவர்கள் தங்கள் சைனியங்களோடு புலி, மான், பன்றி, சர்ப்பம், பசாசம் விமான முதலியவற்றிலிருந்து வந்தார்கள். உருத்திரர்கள் நாகர்கள், யக்ஷர்கள், கருடர்கள் கின்னரர்கள், வித்தியாதரர்கள் நதி நதங்கள், முதலியயாவரும் கபர்த்தியாகிய கருணாமூர்த்தியின் திருச்சன்னி தானத்தினின்று நமஸ்கரித்துப் புறஞ்சூழ்ந்து நின்றார்கள். அப்போது சிவபெருமான் அங்கடைந்துள்ள அனைவரையுங் கண்டு நந்திதேவரை அவர்களுக்குத் தளபதியாக்கி போர் புரிக என்று கட்டளையிட்டு அனுப்பினார். இறையனாரின் கட்டளையை நந்திதேவர் சிரமேற்கொண்டு எம்பெருமானால் ஆசீர்வதிக்கப் பட்டமையால் நாம் தடையின்றி ஜயமடைவோம்! என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டு வந்தார். விகஸனென்னும் பெயரையுடைய அசுரனுடன் சொல்ல முடியாததும் யுகாந்தத்திற்குச் சமானமானதுமான யுத்தம் புரிந்தார். அப்போது விகஸன் சினந்து பயங்கரமான யுத்தம் செய்து தன்னோடு போர் புரிந்து கொண்டிருக்கும் திருமால் பிரமன், இந்திரன் முதலிய கணக்கிட்டுரைக்க முடியாத தேவாதிரளையும், பூதகூட்டங்களையும், சிவகணங்களையும் பசியுற்றவன் தன் கண் எதிர்ப்பட்ட உணவைக் கபளீகரிப்பதுபோல, அந்தகாசுரன் கட்டளைப்படி அந்தக்ஷணமே விழுங்கி விட்டான். விகஸனால் தன் சேனை முழுவதும் விழுக்கப்பட்டுத் தனித்து நின்ற நந்தியெம்பெருமான் உடனே ஒன்றும் தோன்றாமல் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் குகைக்குள் நுழைந்து சிவபெருமானை வணங்கி நடந்த விருத்தாந்தங்களை விண்ணப்பித்துத் துக்கித்து கூறலானார்.
சுவாமி! என் சேனை முற்றும் விகஸனால் விழுங்கப்பட்டது உலகத்திற்கு காத்தல் கடவுளாக விளங்குபவரும் அசுரச் சேனையை வினாடியில் துவம்சஞ் செய்ய வல்லவருமான திருமாலையும் அவன் விழுங்கினான். சூரிய சந்திர்களும் அவனால் விழுங்கப்பட்டார்கள் பிரம்மதேவனும், இந்திரனும், இயமனும், வருணனும், வாயுவும் விழுங்கப்பட்டார்கள். நானொருவனே எஞ்சி நிற்கிறேன் நான் தனியொருவனாக என்ன செய்த்தகும்? அந்தத் தைத்திய ராஜனான அந்தகாசுரன் மகா மகிழ்ச்சியோடு குதிக்கிறான். அவன் வாயு வேகத்துடன் விரைந்து அபஜயன் என்றறியாமல் தங்களிடமும் வருகிறான் ஆதலின் சர்வேஸ்வரா! யாது செய்யத்தக்கதோ அதை அதிவிரைவில் திருவுள்ளம் செய்ய வேண்டும், அந்தகன் சாமானியமானவன் அல்ல. அவன் மந்திரியாகிய விகஸனும் வெல்லுவதற்கு அசாத்தியமானவன் உலகப் பயங்கரமான ஹிரண்யகசிபனைத் தன் நகங்களால் கிழித்தெறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு மூர்த்தியும் அவன் கோபத்திற்கு அடங்கிவிட்டார். இவ்விகஸன் முன்பொரு சமயம் உலகங்களை விழுங்க வேண்டுமென்று வாயைத் திறந்து கொண்டு புறப்படுகையில் உலகங்களுக்கு புனிதரும் சிரேஷ்டருமாகவுள்ள வசிஷ்டர் முதலிய ஸப்தரிஷிகளால் சபிக்கப்பட்டான். பிறகு அவர்களைப் பிரிய வசனத்தால் அவன் வசீகரித்து சுவாமிகளே! இச்சாபம் எனக்கு எப்போது விலகும்? என்று வேண்டிக் கேட்க அவர்கள் விகஸா! நீ போர்க்களத்தில் சூரிய சந்திர்களைக் கஷ்டப்படுத்துவாய் அப்பொழுது பல வித பாணங்களாலும் முஷ்டிகளாலும் நன்றாய் அடிக்கப்பட்டு நரநாராயணருக்கு வாசஸ்தானமாகிய வதரீகாரண்யத்தில் பவித்திரர்களாகிய அந்நர நாராயணர்களால் உன் பாபங்களை ஒழித்துச் சிறந்த பதவியையடைவாய்! என்று கருணையோடு சாப விமோசனம் கூறினார்கள். அவர்கள் வாக்கியப்படி இவன் பெரும் பசியுடையவனாய் போர்க்களத்தில் திரிந்து கொண்டும் மகிழ்ந்து கொண்டும் அந்தகாசுரனுக்கு மந்திரியாயுமிருக்கின்றான். இவ்வகைய துஷ்டர்களாகிய அசுரர்களுக்குச் சுக்கிர பகவான் மிக நண்பராகவும் குருவாகவும் நம்மையொத்தவர்களுக்குச் சத்துருவாகவும் விளங்குகிறார். அமரர்களாற் சங்கரிக்கப்பட்ட அசுரர்களை அந்தசுக்கராச்சாரியார் மிருத்யுஞ்சய மந்திர சக்தியால் உயிர்ப்பித்து யுத்தகாயம் முதலியன ஒன்றுமில்லாதவர்களாகச் செய்கிறார். அவ்வாறு செய்து வருவதனாலேயே அசுரர்கள் உலக மாதாவாகிய உமாதேவியாரை எடுத்துக் கொண்டு போவார்கள். இவ்விஷயம் நடப்பதற்கு முன்னரே நான் மாண்டு விடுவதே உசிதம்! என்று நந்திதேவர் கூறினார்.
பூதபதியான சிவபெருமான் தீர்க்காலோசனை செய்து, திரிலோகங்களையுங் கண் கூசச்செய்யுங் கோடி சூரிய கிரணங்களின் காந்தியைப்போல ஒளியுள்ள ஸோம மென்னும் பெயரையுடைய சாமத்தைக் கானஞ் செய்தார். அப்பொழுது அந்தகாசுரன் சிறிது வலிகுன்றியவனாக இருந்தான். அவர் அச்சாமாகானத்தை நிறுத்தவே அந்தகன் பழையபடியே மகாபல பராக்கிரமசாலியாய் நந்தி பகவானை எதிர்த்து நானாவிதமாகப் போர் புரிந்தான். நந்தி தேவரோ அநேக காலம் ஜலத்திலிருந்து கடுந்தவஞ் செய்து யமனையும் வெல்லத்தக்க மகாவலிமை பெற்றவர். அத்தகைய நந்தி நாயனாரையும் கபளீகரித்து விட்டார்கள். பின்னர் சிவபெருமான் அதைக்கண்டு ஐயோ, பாணம், சூலம் கட்கம், முதலிய ஆயுதங்களை ஏந்தியவனும் போர், வீரர்களில் சிறந்தவனும் ரிஷிகளுக்கெல்லாம் மேலான மகிமையுடையவனும் வேத வேதாங்க முதலிய வித்தைகளுக்கெல்லாம் வாசஸ்தானமானவனும் சமதமதைரியாதி குணங்களால் நிரம்பப் பட்டுள்ளவனுமாகிய நந்தியையும் விழுங்கினானல்லவா? என்று கோபத்தோடு அந்தகனைப் பார்த்து ரிஷப வாகனத்தில் வந்து அவனை நெருங்கிபோருக்கு அறைகூவி அழைத்தார். இதுவரையில் விகஸ அந்தகரால் விழுங்கப் பட்டவர்கள் வெளியே வரும்படி ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, இடி போன்ற அம்பும் மகாமேருவைப் போன்ற வில்லும் தாங்கி நின்றார். விகஸனால் விழுங்கப்பட்ட வீரகனாகிய நந்தியும், விஷ்ணு, பிரமன் இந்திரன், முதலிய யாவரும் சிவபெருமானுடைய மந்திரஜபத்தால் அவர்கள் நெற்றி வழியாகப் புறம் வந்து சிவபெருமானை அடைந்து மகிழ்ச்சியுடன் விளங்கினார்கள். இவ்வாறு கூடிய சிவகணங்கள் முதலிய யாவரும் அந்தகனுடன் போர் புரிந்தார்கள். அசுரர்களில் சிலர் புறமுதுகிட்டோடினார்கள், அநேகர் இறந்தனர். அவ்வாறிருக்கும் அசுரர்களைச் சுக்கிரம் மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தான். இவனாலல்லவா நாமெல்லோரும் துன்புறுகிறோம்! என்று கோபித்து, சுக்கிரனைக் கைப்பிடியாகப் பிடித்து வந்து பூதபதிக்குப் பசுவைக் கொடுத்தாற் போலக் கொடுத்தனர். சுக்கிரன் அவ்வாறு நஷ்டமான பின்னர் அசுரச் சேனையில் பல மாண்டன. பல ஓடின பல காயமுற்றன. அந்த யுத்த பூமியில் பூதப்பிரேத பேதாள பிரமராக்ஷஸாதி கணங்களும் நரி முதலிய மிருகங்களும். அசுரர்கள் மாமிசத்தைப் புசித்து உதிரத்தைப் பருகிக் குதித்துக் கொக்கரித்துச் சந்தோஷித்துக் கானஞ் செய்து கொண்டிருந்தன. பிரஹலாதனாதி அந்தக சகோதரர்கள் நெடுங்காலம் விஷ்ணுவாதி தேவர்களோடு பெரும் போர் செய்து தோல்வியடைந்து அங்கிருப்பதற்குப் பயந்து ஜலமார்க்கத்திலும் பூ மார்க்கத்திலும் பாதாளலோகத்தை அடைந்தார்கள்.
அந்தகன் தன் சைனியங்கள் நாசமடைந்ததற்காகத் தேவர்கள் மீது பெருங்கோபங் கொண்டு திருநந்தி தேவரது சைனியங்களோடு பெரும் போர் செய்தான். அப்போது அச்சேனையில் ஒரு வீரனாக விளங்கும் விஷ்ணுமூர்த்தியால் தேகமுற்றும் காயமுறும்படி அடிக்கப்பட்டும் நான் இவர்களால் இறவாது பிரமனால் வரங் கொடுக்கப் பெற்றுள்ளவன் என்னும் தைரியத்தால் யுத்தத்தை விடாமல் நடத்தினான். அப்போது மகேந்திரனால் மீண்டும் மூர்ச்சையுறத்தக்க அடிபட்டான். அதனால் வீராவேசமுற்ற அந்தகன் தருக்கன்மலைகள் முதலியவற்றால் அவர்களை அடித்து விலக்கிச் சிவபெருமானையடைந்து, இனி நீ போருக்கு வா? என்று கூறினான் அருகிலுள்ள சிவகணங்கள் எதிர்த்தன. அவற்றையும் அந்தகன் வென்று சிவபெருமானை எதிர்த்தான். அப்பொழுது நந்தி பகவான் எதிர்க்க அவரையுஞ் ஜெயித்தான். சிவகடாக்ஷத்தால் நந்தி தேவர் மீண்டும் வலிமையும் அஸ்திர சஸ்திரங்களும் பெற்று அந்தகனைப்பலவாறு அடித்தார். அவன் உடலினின்றுஞ் சொரிந்த இரத்தத்திலிருந்து இராக்ஷஸ மாயையால் விஷ்ணு, பிரமன், இந்திரன் அந்தகன் முதலிய அநேக ரூபங்கள் தோன்றின. அப்போது சிவபெருமான் பிரளய காலாக்னி போலக் கொதித்து; அவர்களைச் சூலத்தாற்புடைத்தார். அவர்களுதிரங்களினின்றும் பலர் தோன்றிச்சைனியங்களுக்குச் சைனியங்களாய்ப் பெருகின. அவ்வாறு அசுரச்சேனைப் பெருகவொட்டாமல் சிவ பெருமான் விஷ்ணு யோகத்தாற் பயங்கரமான முகமும், அநேக புயங்களும் இரண்டு விழிகளும் சர்ப்பங்களாகிய உரோமமுடைய எண்ணிறந்த ஸ்திரீகணங்களைச் சிருஷ்டித்தார். அவ்வாறு சிருஷ்டி செய்த சாம்பவமூர்த்தியின் வலது தோளிலிருந்து நான்கு கால்களுடைய ஒரு சக்தி தோன்றி அந்த ஸ்திரீகணங்கட்குத் தலைவியாய் தேவர்களால் தோத்திரஞ் செய்யப்பட்டு சிவகடாக்ஷம் பெற்றுப் பெரும் பசியோடு அந்தகன் சைனியத்தை அழிப்பதனால் உண்டாகும் உதிரத்தைப் பானஞ்செய்து கொண்டிருந்தாள். அதனால் அந்தகன் பலமற்றவனாய் உடல் இளைத்துச் சிவபெருமானுடன் கத்தி, வேல், அம்பு, வாள்; தோமரம்; முசலம் பிண்டிபாலம் முதலிய ஆயுதங்களாலும் வச்சிராயுதம் போன்ற தனது நகங்களாலும், புயங்களாலும் க்ஷத்ரிய தருமம் விடாமல் போர்புரிந்தான் சிவபெருமான். அவனைத் தமது சூலத்தில் முனையில் குத்தி உயரத்தூக்கிச் சூரிய கிரணத்தால் தகிக்கச் செய்தும் அவன் உயிர் விடவில்லை விகஸன் முதலிய அந்தக சைனியம் அழிந்தது; யுத்தமுடிவில் தேவர்கள் யாவரும் சிவபெருமானைப் பணிந்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தத்தமக்குரிய தானங்களையடைந்தனர். சிவபெருமான் சக்திகளோடு தமது குகையையடைந்து பார்வதிதேவியைப் பார்த்து நடந்த விருத்தாந்தங்களைக் கூறிச் சந்தோஷத்துடன் வீற்றிருந்தார்.
5. ம்ருத்யுஞ்சய மந்திரமும் அந்தகாசுரன் முக்தியும்!
அந்தகாசுரனுடைய சரித்திரத்தைக் கேட்டுவந்த முனிவர்கள் புராணிகரை நோக்கி, ஞான சிரேஷ்டரே! தாங்கள் கூறி வந்த விஷயங்களால் நாங்கள் பரம சந்தோஷம் அடைந்தோம் முன் கூறிய அந்தகாசுர யுத்தத்தில் சுக்கிரன் சிவபெருமானால் விழுங்கப் பட்டார் அல்லவா? அந்தச் சர்வேசுவரனுடைய உதராக்கினி கல்பாந்தங்களை எல்லாம் வினாடியில் அழிக்கும் ஆற்றலுடையதல்லவா? அவ்வகைய அக்கினி மகா தபோ சம்பந்தரும் மகிமாதி ஐசுவரியமும் தேஜோருபமும் உடைய இக் கவியைத் தகிக்காத காரணம் யாது அவ்விறைவனின் திருவயிற்றினின்று சுக்கிரன் எவ்வாறு வெளிவந்தார்? எவ்வளவு காலம் எம்மந்திரத்தால் தியானித்தார்? அந்தகாசுரன் எவ்வாறு கணநாதனாக்கப்பட்டான், இவ்விஷயங்களைப் பூர்ணமாக உணரவேண்டுமென்று விரும்புகிறோம். எங்கட்குத் தெளிவாக விளக்கியருள வேண்டும்? என்றார்கள். உண்மையாக நடந்தவற்றைக் கூறுகின்றேன்! என்று புராணிகர் சொல்லத் தொடங்கினார்.
அந்தகனுடைய பெரும் போராட்டத்தில் சிவபெருமானால் விழுங்கப்பட்ட சுக்கிரன் பனித்துளி போன்றும் சந்திரன் போன்றுங்குளிர்ந்துள்ளதும், வருணதேவ தாகமானதும் பெருங் பயம் வளைக்கும் மிருத்யுவை நாசஞ் செய்யக்கூடியதும் எல்லாச் சித்திகளையும் கொடுக்கக் கூடியதும் மங்களகரமானதும் தொன்று தொட்டு ஆன்றோரால் உபாசிக்கப்பட்டதுமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தை அனுஷ்டித்தார் அந்த மந்திரம்.
ஓம் நமஸ்தே தேவேசாய ஸுராஸுர நமஸ்க்ருதாய பூதபவ்யமஹாதேவாய நம
ஓம் ஹரிபிங்களலோசனாய பலாய புத்திரூபிணே நம
ஓம் வையாக்ரவஸ நச்சதாய அரணேயாய நம
ஓம் த்ரை லோக்யப்ரபவே நம
ஓம் ஈசுவராயநம
ஓம் ஹராய ஹரித நேத்ராய நம
ஓம் யுகாந்தகரணாய நம
ஓம் அநலாய நம
ஓம் கணேசாய லோகம் பவே நம
ஓம் லோக பாலாய் நம 10
ஓம் மஹாபுஜாய மஹா ஹஸ்தாய நம
ஓம் சூலினே நம
ஓம் மஹாதம்ஷ்ட்ரிணே நம
ஓம் மஹேசுவராய காலாயநம
ஓம் காலரூபிணே நம
ஓம் நீலக்ரீவாய நம
ஓம் மஹாத்ராய கணாத்யக்ஷõய நம
ஓம் ஸர்வாத்மநே நம
ஓம் ஸர்வ பாவனாய நம
ஓம் ஸர்வகாய ம்ருத்யவே நம 20
ஓம் ம்ருத்யுதூதாய பாரியாத்ரஸுவ்ரதாய ப்ரஹ்மசாரிணே நம
ஓம் வேதாந்தகாய நம
ஓம் பசுபதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் சூலபாணிகனே நம
ஓம் வருஷ கேதவே நம
ஓம் ஹரயே நம
ஓம் ஜடினே நம
ஓம் முண்டினே நம
ஓம் கண்டினே நம 30
ஓம் லகுடினே நம
ஓம் மஹயஸெ நம
ஓம் பூதேசுவராய நம
ஓம் குஹாவாஸிநே நம
ஓம் வீணா பணவதூணவதே அமராய நம
ஓம் தாநீயாய பாலஸுர்ய நிபாய ஸ்மானசாரிணே பகவதே நம
ஓம் உமாபதயே நம
ஓம் அரிந்தமாய நம
ஓம் பகஸ்யாக்ஷி பாதினே நம
ஓம் பூஷ்ணோதன நம 40
ஓம் நானாய நம
ஓம் க்ரூரகர்த்ரே நம
ஓம் பாஹஸ்தாய நம
ஓம் பரளயகாலாய நம
ஓம் உலகாமுகாய நம
ஓம் அக்னிகேதவே முனயே நம
ஓம் தீப்தாய நம
ஓம் விரம்பதயே உன்மாதாய லேபனகாய நம
ஓம் சதுர்தகாய நம
ஓம் அரிந்தமாய நம 50
ஓம் பகஸ்யாக்ஷி பாதினே நம
ஓம் பூஷ்ணோதன நம
ஓம் நானாய நம
ஓம் க்ரூரகர்த்ரே நம
ஓம் பாஹஸ்தாய நம
ஓம் பரளயகாலாய நம
ஓம் உலகாமுகாய நம
ஓம் அக்னிகேதவே முனியே நம
ஓம் தீப்தாய நம
ஓம் விரம்தயே நம 60
ஓம் உன்மாதாய லேபனகாய சதுர்தகாய நம
ஓம் லோக ஸத்தமாய நம
ஓம் வாமனாய நம
ஓம் வாமதேவாய வாக்தாக்ஷியாய நம
ஓம் வாமதோபிக்ஷவே நம
ஓம் பிக்ஷரூபிணே நம
ஓம் ஜடினே நம
ஓம் ஸ்வயம் ஜடிலாய க்ரஹ ஸ்தப்ரதிஷ்டம்பகாய வஸுநாம்ஸ் தம்பகாய நம
ஓம் ருதவே நம
ஓம் ருதுகாரகாய நம 70
ஓம் காலாய மேதாவினே நம
ஓம் நித்ய மாரம பூஜிதாய நம
ஓம் ஜகத்தாத்ரே நம
ஓம் ஜகத்கர்த்ரே புருஷாய சாசுவதாய நம
ஓம் த்ருவாய நம
ஓம் தர்மாத்யக்ஷõய நம
ஓம் த்ரிவர்தமனே பூதபாவனாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் பஹுரூபாய நம
ஓம் ஸுர்யாயுதஸ மப்ரபாய நம 80
ஓம் தேவாய தேவாதி தேவாய நம
ஓம் சந்த்ராங்கித ஜடாய நர்த்தகாய நம
ஓம் லாஸகாய நம
ஓம் பூர்ணேந்துஸத்ருனானாய ப்ரஹ்மண்யாய நம
ஓம் ரண்யாய நம
ஓம் ஸர்வ தேவமயாய நம
ஓம் ஸர்வ தூர்யநிநாதினே! ஸர்வபந்த மோசனாய நம
ஓம் பந்தனாய நம
ஓம் ஸர்ப்பதாரிணே நம
ஓம் தர்மோத்தமாய நம 90
ஓம் புஷ்பதந்தாய பிங்களாய நம
ஓம் முக்யாய நம
ஓம் ஸர்வஹராய நம
ஓம் ஹிரண்யகசிரவனே நம
ஓம் த்யாரிணே நம
ஓம் ஸ்ரீமயாய நம
ஓம் பீமபராக்ரமாய நம
ஓம் நமோநம 98
இவ்வகைய சிவநாமஸ்வரூபமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து; சிவபெருமானது லிங்கக்குறி வழியாக சுக்கில ரூபமாகப் புறம்பே வந்தவரும்; நாசமற்றவரும் மகா சம்பத்துடைய வரும்; மூவாயிர வருஷங்கள் சிவபெருமானது கர்ப்பத்திலிருந்து வேத நிதியுமான சுக்கிரமுனி ஸ்ரீ பார்வதி தேவிக்குப் புத்திர ராகப் பரமேசுவரரால் படைக்கப்பட்டாற்போலப் பிறந்தார். இதுநிற்க: சூலாயுதத்தின் முனையிற்கிடந்தும் தன் தைரியத்தை விடாது தொங்கிக்கிடந்தான் அந்தகாசுரன்.
மஹா தேவம்: விருபாக்ஷம் சந்திரார்த்தக்ருத கேரம்: அம்ருதம்; சாசுவதம்; ஸ்தாணும்; நீலகண்டம்; பிநாகினம் வ்ருஷபாக்ஷம்; மஹாஜ்ஞேயம்; புருஷம்; ஸர்வகாமதம்; காமாரியம்; மஹாஜ்ஞேயம்; புருஷம்; ஸர்வகாமதம்; காமாரியம்; காமதஹநம்; காமரூபம்; கப்ர்த்திநம்; விரூபம்; கிரி ஸ்ரீமம் சிரக்விணம்; ரக்தவாஸஸம்; யோகிநம்; காலதஹநம்; த்ரிபுரக்நம்; கபாலிநம்; கூடவ்ரதம்; குப்தமந்தரம்; கம்பீரம்; பாவகோசரம்; அணி மாதிகுணாதாரம்; த்ரிலோகைசுவரிய தாயகம்; வீரம்; வீரஹணம்; கோரம்; விரூபம்; மாம்ஸலம் படும் மஹாமாம்ஸம் வஸோந்மத்தம் பைரவம்; பரமேசுவரம்; தரைலோக்ய டாமரம்; லுப்தம் லுப்தகம், யஞ்ஞஸுதநம், க்ருத்திகா நாம் ஸுதேரக்தம், உன்மத்தம் க்ருத்திவாஸஸம் கஜக்குரத்தி பரீதரகம், க்ஷúப்தம், புஜக பூஷணம், தத்தாலம்பம் சபேதாளம், கோரகோஷம் வநஸ்பதிம், பஸ்மாங்கம், ஜடிலம் சுத்தம், போண்டதஸே விதம், பூதேசுவரம், பூதநாதம், பஞ்சபூதாசிரிதம், ககம், க்ரோகிதம், நிஷ்குரம், சண்டம், சண்டீசம், சண்டிகாப்ரியம் சண்டதுண்டம், க்ருத்மந்தம், நிஸ்த்ரிம், சம், சம்போஜனம், லேலிஹாநம், மஹாரௌத்ரம், பத்யும் ருச்யோரம், கோசரம், ம்ருத்யோர் ம்ருத்யும், மஹசேநம், ஸ்மசாநாரண்ய வாசிநம் ராகம், விரேகம், ராகந்தம், வீதராகம். சதார்சிஷம், ஸத்வம், ரஜஸ்தமோ, தர்மம், அதர்மம், வாஸராநுஜம் ஸத்யம், அஸத்யம், ஸ்த்ரூபம், அஸத்ரூபம், அஹேதுகம், அர்த்தநாரீசுவரம் பாநும், பாநுகோடி, சதப்பிரபம், யஜ்ஞம், யக்ஞபதிம், ருத்ரம், ஈஸாநம், வரதம், சிவம், மஹாதேவம் என்று அஷ்டோத்தர சதநாமங்களையும் நூற்றெட்டு மூர்த்திகளாகத் தியானித்துக் கொண்டிருந்தார்.
சிவபெருமான் இத்தோத்திரத்தால் களிப்புற்றார் சூலத்தின் முனையில் குத்தி வைத்துக் கொண்டிருந்த அந்தகாசுரனை அச்சூலத்தினின்று நிலத்தில் இறக்கினார். அவனுக்கு உபதேசகரமாக தன் மொழிகளைச் சொல்லி அவனுடலைக் கையால் தொட்டு அந்தகனே! உனக்குண்டாகிய இந்திரிய நிக்கிரக(தபம்) த்தால் என்னையே இதுகாறும் தியானித்தாலும் சவுரிய தைரியாதி சம்பத்துக்களாலும், பல காலமாகப் பல ரூபமாக என்னையே துதித்தமையாலும் நான் உன் விஷயத்தில் பெருங்களிப்படைந்தேன். நீயும் இதுகாறுங் மதியீனத்தாற் செய்த பாவங்களை எல்லாம் விலகினவனாகுக. நல்ல விரதஞ் செய்தவனே. நீ விரும்பிய வரத்தைகேள். நானும் உன் விஷயத்தில் தடையின்றி வரங்கொடுப்பேன். நீயும் வரமேற்கத்தக்க பாத்திரவானாக இருக்கிறாய்! உயர் பதவியை இப்பொழுதே விரும்புக. மூவாயிர வருஷங்கட்குப் பின்னர் மோக்ஷம் உண்டாகும் என்றார்.
அந்தகன் அசக்தனாக இருந்தமையால் கைகால்களை நிலத்தில் ஊன்றிக் கொண்டெழுந்து உடல் நடுங்கிக் கைகுவித்து நின்று உமாபதியாகிய சிவபெருமானைப் பலவாறாகவும் துதித்து, பகவானே! மகா நீசனாயிருந்த நான் போர்களத்தில் செய்த துஷ்டச் செயல்களைப் பொறுத்தருள வேண்டும். காமதோஷத்தால் அடியேன் அறியாமையுற்று உலகமாதாவாகிய மகாதேவி விஷயத்தில் செய்த பெரிய அபராதத்தையும் மனம் பொறுத்தருள வேண்டும். உலகத்தில் கஷ்டத்தால் துக்க முற்றவன் விஷயத்தில் தயை செய்வது வழக்கம் அதிலும் பக்தி செய்து வரும் அடியார்களுக்கு விசேஷமாகச் செய்வது வழக்கம். ஆதலில் நான் பெருங்கஷ்ட மனுபவித்தவன். தங்களைத்தவிர எனக்கு வேறொருவருங்கதியிலர். தீனபாவமடைந்தவனாகவும், பக்தியுடையவனாகவும் உம் திருவருளின் மகிமையாலேயே இருக்கிறேன். தேவரீருக்கு நமஸ்காரம்! ஜகந் மாதாவாகிய பார்வதி தேவியாரும் நான் செய்த அபராதங்களை மன்னித்துச் சிறிதுங் குரோதமின்றித் தயை வைத்து அம்மகா தேவியாருடைய அடிமையாகிய என்னைப் புத்திர பாவத்துடன் பார்க்கவேண்டும். குரோதமூர்க்காதி குணங்களையுடைய நான் எங்கே? சந்திரசேகர பரமதயாளூவாய் லோகநாயகரான தாங்கள் எங்கே? காமாதி துர்க்குணங்களோடு கூடிய சாமானியனாகிய யானெங்கே மகாபலசாலியாகிய தங்கள் சேனாநாயகனாகிய நந்தி பகவானெங்கே? தங்கள் புதல்வராகிய நந்திதேவரும் அவரது கோபமொழிந்து தன் சேவகனாக என்னைக்கருணையோடு பார்க்கவேண்டுகிறேன்! என்று சொல்லி, பார்வதி தேவியாரைப் பார்த்து ஓ ஜகந்மாதா! இதுவரையில் நான் அநேக அபசாரங்கள் செய்திருப்பினும் நாணமின்றி வேண்டிக் கொள்கிறேன் தங்களுக்கு நந்திதேவர் எப்படி கணாதிபதியாய் இருக்கிறாரோ அது போலவே நானும் அவருக்குச் சமானனாக இருக்க வேண்டும். மகா கவுரவமான புத்தியோடு தங்களைத் தாயாகக் கருதியிருக்கவும் சிவபெருமானையும் தங்களையும் நாடோறும் போற்றிப் பணிசெய்யவும், தேவர்களுடன் விரோதமின்றி ஒத்திருக்கவும், ஞானவானாகவும், சிவகணங்களில் ஒருவனாகவும், மீண்டும் எக்காலத்திலும் ராக்ஷஸப் பிறவியை அடையாமலும் இருக்க அனுக்கிரகிக்க வேண்டும்! என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு, திரிலோசனனாகிய பரமேசுவரனையும் ஜகந்மாதாவாகிய பார்வதிதேவியாரையும், சாஷ்டாங்கமாகப் பணிந்து கைகட்டி நின்றான்.
சிவபெருமான் மகிழ்ச்சியில் புன்னகை செய்து அந்தகனைப் பார்த்து அந்தகன் பிறந்ததையும் அவன் வலிமை பெற்றதையும், அவன் செய்கைகளையும் சிந்தித்து. அந்தகன் நம்மிடத்திலேயே ஜனித்தவன்னறோ? அவன் அவ்வரங்களைப் பெறுக என்று அனுக்கிரத்தார். அதனால் அவன் அப்பொழுதே அவ்வண்ணமாயினான், அந்தகன் காணாபத்தியமடைந்து தனக்கு மாதாபிதாக்களாகிய பார்வதியையும் பரமசிவனையும் சாஷ்டாங்கமாகப் பணிந்து கிருத கிருத்தியனாயினான்; இத்தகைய குமாரனைப் பார்வதி பரமேசுவரர் இருவரும் மூர்த்தா க்ரஹணஞ் செய்து சந்தோஷித்திருந்தனர். சவுனகாதி முனிவர்களே! அந்தகாசுரனது சரிதத்தையும். ம்ருத்யுவை நாசஞ்செய்யும், ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் பக்தியோடு படனஞ்செய்தவர்கட்கு எல்லாக் கோரிக்கைகளும் கைகூடும்! என்று சூத முனிவர் கூறியருளினார்.
6. குருவின் மோகாந்தகாரக் கதை
நைமிசாரணிய வாசிகள் சூத முனிவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் கூறிய விஷயங்களால் பெருங்களிப்படைந்தோம்! ஆயினும் மகா பதிவிரதையாகவும் உலகங்கட்கெல்லாம் தாயாகவும் சத்தியமே விரதமாகியும்; தவசொரூபியாகவும் ஆத்மரக்ஷணஞ் செய்துகொள்ள அசக்தியாகவுமிருக்கும் பார்வதிதேவியைச் சிவபெருமான் எவ்வாறு ரக்ஷித்தார்? பார்வதிதேவியின் உக்கிரப் பிரபாவம் எத்தகையது? அதையும் தாங்கள் வியாச பகவானிடம் கேள்வியுற்றவிதமாகவே கூற வேண்டும்! என்று கேட்கவே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார்.
மாதவர்களே! எந்தக் காரணத்தால் எந்தக் காலத்தில் எந்த வகையாகத் தனக்கு இதமானதும் இதமற்றதுமாகவுள்ள நல்வினை தீவினைகளை எவன் செய்கிறானோ அவன் அந்தக் காரணத்தால் அந்தக் காலத்தில் அந்தவகையாக அவ்வக்காலம் வரையில் தெய்வ வசத்தால் அந்தக் கர்மபலனை அனுபவிக்கிறான் மனோஹரமான உருவமும் ஸ்தன கர்மபலனை அனுபவிக்கிறான் மனோஹரமான உருவமும் ஸ்தனபாரங்களால் முறியும் இடையும், காந்தி பொருந்திய உடலும், பிடியானையை யொத்த நடையும்; முழுநிலா போன்ற முகமும் வாய்ந்த லோகமாதாவான தாக்ஷõயணி தேவியைப் பொதியமலையில் ஒரு காலத்தில் ருரு என்னும் அசுரன் கண்டான். உடனே அவன் மதிமயங்கி மன்மத பாணங்கள் இதயத்தை ஊடுருவ மோக வசப்பட்டான். அதனால் அவன் தன் தாபம் தீரத்தவம் செய்ய நிச்சயித்தான் அதற்காகப் பல கோடி வருஷங்கள் சூரிய கிரணங்களால் தகிக்கப்பட்ட தேகமுடையவன் போன்றவனாகி ஆகார தேகாபி மானங்கள் நீக்கி, நிச்சலமான தபசு செய்து கொண்டிருந்தான். அப்போது தாமரைமலர் போன்ற தேக காந்தியுடைய பிரம தேவர் பிரசன்னமாகி, ஓ அசுரேசா! யாது கருதி இவ்வகைய கொடூரமான கடுந்தவஞ் செய்கிறாய்? அதைச் சொல்! என்று கேட்டார். அதனால் ருரு தியான யோகத்தால் அரைக்கண் மூடிக்கொண்டிருப்பவனாயிருந்து சதுர்முகப் பிதாவே! பேரழகியாயிருக்கும் தாக்ஷõயணி எனக்கு மனைவியாக வேண்டும் சிவபெருமான் என்னிடத்தில் விருப்பமுடையவராய் இருக்கவேண்டும்! மாதர்களின் காரணமாக எனக்கு மரணம் வராமலும் மங்கைப் பருவப் பெண்கள் அநேகர் எனக்கு ஆசை நாயகிகளாகவும் வேண்டும்! என்னைப் பகைத்தவர்கள் மகாதைரிய காம்பீரியவான்களாயிருந்தாலும் சாமானியர்களாய், எதிர்க்கும் சக்தியின்றிப் பலஹீனர்களாக வேண்டும்! இந்த வரங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கேட்டான்.
பிரமதேவர் புன்சிரிப்புடன் நீ விரும்பிய வரங்கள் திரிலோகங்களிலேயும் கிடைத்தற்கு அசாத்தியமானவை. இவற்றிற்சில பெருங்கஷ்டத்துடன் கிடைப்பினுங் கிடைக்கலாம். ஆயினும் உலக மாதாவாகிய தாக்ஷõயணி முக்காலங்களிலும் உனக்கு நாயகியாகக் கிடைப்பாள் என்பது நடக்கவே நடக்காது! அடா துர்ப்புத்தி! சிவபெருமானும் உனக்கு அடங்கியிருக்கப் போகிறதும் இல்லை. தாக்ஷõயணியாகிய பார்வதி உனக்கு மனைவியாகும் பக்ஷத்தில் சர்வேஸ்வரவாகிய சிவபெருமான் வேறொரு ஸ்தீரியைத் தேடிக்கொள்ள வேண்டும். அப்பெருமானே அம்மகா தேவியை மனைவியாகக் கொண்டமையால் அத்தேவிக்குச் சுகோதய நிமித்தமாகத் தம் விரிசடையில் கங்கையையும் சந்திரனையும் அணிந்து கொண்டு; அவ்வம்மைக்கு உபசாரஞ் செய்யும் பொருட்டு அநேக மாதர்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இத்தகைய பெருமாட்டி உனக்குச் சாத்தியமானவள் அல்ல! நீ அதி அழகான தேவ பிராணனைக் காத்துக்கொள் நான் கூறிய வார்த்தைகள் உனக்கு இதமாகக் காணப்படாவிட்டால் நீயே அம்மகாதேவியிடம் நேரில் சென்று துதித்து உன் விருப்பத்தை விண்ணப்பித்துக்கொள் அப்பொழுதே காள ராத்திரியான தாக்ஷõயணியும் திரிபுராரியான சிவபெருமானும் உன்னைச் சங்கரித்து விடுவார்கள்! என்று கூறி அந்தர்த்தானமானார்.
ருரு உடனே மலயாசலத்திற்குச் சென்று பரமசிவனை நோக்கி கடுந்தவஞ்செய்தான். ருருவின் தவத்தின் விசேடத்தால் தோன்றிய அக்கினியானது அந்தப் பர்வதம் முழுவதையும் தகிக்க ஆரம்பித்தது. சிவபெருமான் தாக்ஷõணியை அழைத்துக் கொண்டு அவனது தபோக்னிக்குப் பயந்தாற்போல வேறு இடத்திற்குச் செல்ல முயன்றார். அப்போது பார்வதிதேவி, சுவாமீ! என்ன காரணமாக இப்பொழுது இவ்விடம் விட்டுச் செல்கிறீர்கள்? லோகநாயகரான தங்களால் இவ்வக்கினியை அடக்கமுடியாதா? அவ்வாறு அடக்கிவிட்டால் வேறு இடத்திற்குச் செல்வானேன்? இதன் உண்மையைச் சொல்லுங்கள்! என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் ஓ பிரிய நாயகி! ருரு என்னும் அசுரன் உன்னை மனைவியாக அடையக் கருதி உக்கிரமான தவம்செய்கிறான் அவன் தவத்தாலெழுந்த தபோக்கினி திரிலோகங்களையும் கொளுத்துகிறது நான் அதை நிவாரணஞ் செய்து திரிலோகத்துதிலுமுள்ள சராசரங்களையும் காத்து ஆத்மரக்ஷணஞ் செய்து கொள்ளலாம் என்மீது கோபம் கொள்ள வேண்டாம். நீ வேற்றுருவெடுத்து அவனிடஞ் சென்று அவன் தவத்தையழிக்க வேண்டும்! என்று கூறினார்.
பார்வதிதேவி அதைக்கேட்டு முதலில் அச்சமுற்று உடனே ஆத்திரமும் தைரியமும் கொண்டு பெருங்கோபத்துடன் பொதிய மலையின் வனத்திற்குச் சென்றாள். அங்கு தேவி ஒரு யானை மத்தகத்தைக் கை முஷ்டியால் உடைத்து அதன் தோலை உரித்து அதன் சருமத்தைப் போர்த்திக் கொண்டாள். பல யானைகளைக் கொன்று புசித்து உடல் முழுதுந் தடவிச் சிவக்கச் செய்து கொண்டாள். பெருவயிற்றுடன் விகாரரூபம் எடுத்து அண்டமுகடு பிளவுறத்தக்க அநேக ஹுங் காரஞ் செய்து கொண்டு அவ்வசுரனிருக்கும் குகையையணுகினாள். தன் பாதங்களாலுங்கை முஷ்டிகளாலும் அக்குகையை அடைத்திருந்த கதவை உடைத்து, ஹ ஹ ஹ ஹ என்று அட்டகாசமாகச் சிரித்து, பிரளயகால மேக கோஷம் போலக் கர்ச்சித்தாள். பிறகு அரைக்கண் பார்வையிலிருக்கும் அவ்வசுரனை தேவி பார்த்து இதோ நீ கோரியிருந்த தாக்ஷõயணியாகிய நான் வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய்? இதற்காக ஏன் இன்னுங் கஷ்டமான தவஞ்செய்கிறாய்! உன் மனத்திலுள்ள கோரிக்கைகளைச் சொல் நீ தவம் செய்து அனுபவிக்கக் கருதிய கோரிக்கைகளை இப்பொழுதே சுலபமாக அனுபவிக்கலாம்! என்று சொன்னாள். கோரைப் பல்லோடு கூடிய மகா பயங்கர சுரூபமுடைய தாக்ஷõயணியைப் பார்த்து ருரு அசுரன் பயந்து உடல் நடுநடுங்கி நிலத்தில் விழுந்தான். பிறகு அவன் மீண்டுந் தைரியத்துடன் எழுந்து, நீ தாக்ஷõயணியன்று! உண்மையைச் சொல் காளராத்திரியே! தாக்ஷõயணியோ மிக மனோரம்மியமான தேகமும், முழுநிலாப்போன்ற முகமும், பேரழகும் இளமையின் பூரிப்பான ஸ்தன பாரங்களும் வாய்ந்திருப்பவள். நீயோ கோரரூபி! நீ பார்வதியில்லை நானே என் தபோக்னியால் மூன்று உலகங்களையும் சுட்டெரித்து விடுவேன். நீ எங்கிருந்தாலும் எரிந்து போவாய்! விரைவில் உயிர் பிழைத்தோடிப் போய்விடு, அப்படி நீ போகாவிட்டால் இப்பொழுதே உன்னை யமபுரத்திற்கு அனுப்பிவிடுவேன் என்று கூறிக் கதாயுதத்தால் பார்வதிதேவியையடித்தான். அதனால் பார்வதிதேவி கடுங்கோபங் கொண்டு தன்கை முஷ்டியால் அவ்வசுரனை அடித்தாள். ருரு ஆத்திரம் கொண்டுயுத்தம் புரிய முனைந்து அஸ்திர சஸ்திரங்களால் காளராத்திரி தேவியை, அடிக்கலானான் மாதேவி மலைப் பாறைகளாலும் மாபெரும் மரங்களாலும் அநேகவிதமான ஜலாக்னி வருஷங்களாலும், விஷ சர்ப்பங்களாலும், தந்தங்களாலும் நகங்களாலும் அவனைத் தாக்கினாள். குரூரனாகிய ருருவேதன் உடலிலிருந்து சிந்தும் உதிரத்துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு ருரு வடிவமாக உருவாக்கி பேருருவு உடையோரும் இளைத்தவுடலுடையோரும், கோரரூபமுடையயோரும் விகார ரூபமுடையோரும் இணையற்ற வலிமையுடையோருமாகப்பலரை மாயையால் காட்டினான்.
எண்ணிறந்த ருரு வடிவேற்ற ராக்ஷஸத் தொகுதியை மகாதேவி பார்த்து தன் நிஜயோகத்தால் அபாரமான சத்துருசேனையைப் பக்ஷிக்கத்தக்க வலிமையுடைய மகாவிகுர்த கோரரூபமுடைய சண்டிகா சைனியத்தைச் சிருஷ்டித்தாள். அச்சண்டிகாகணம் ராக்ஷஸத் தொகுதியைக் கொன்று அவர்கள் உதிரத்தை ஒரு துளிக்கூடக் கீழே விழாமற் பருகி பிரமத்தனாக இருக்கும் ருருவின் மாயையையும் அழித்தார்கள். பார்வதிதேவியும் அவ்வசுர இரத்தத்தை அருந்தி கோரரூபத்துடன் எண்ணிறந்த புயங்களோடு எஞ்சி நின்ற மாயையையும் விலக்கினாள். மீண்டும் அற்புதக் கணக்கான மாயைகள் படைத்த ருருவுடன் போர் புரிந்தாள். அதனால் ருரு பெருங் கோபங்கொண்டு பார்வதியைப் பிரமிக்கச் செய்ய வேண்டுமென்னுங் கருத்துடன் வாயுவேகமாய்த் திரிலோகங்களிலும் திரிந்து க்ஷணநேரத்தில் சுவர்க்கலோகத்தை அடைந்தான். ஆனால் அடுத்த க்ஷணமே பாதலலோகத்தை அடைந்து அங்கு மிங்கும் போவதும் வருவதுமாகத் திரிந்து ஒருவருக்கும் தெரியாமல் விரைந்து சென்று கொண்டிருந்தான். தேவி ஸ்தூலகாரமாய்ச் சிறிது நின்று பிரளயகால சூரியர் போன்ற அதியாச்சரியமும் பராக்கிரமமும் கணக்கிட்டு சொல்ல முடியாத ஒரு விசுவரூபம் எடுத்து நின்றாள். இந்தச் சண்டிகா நாயகியின் உருவம் இவ்வளவு பிரமாண மிருந்ததெனக் கூறச் சதுர்முகப் பிரமனுக்கும் சாத்தியப்படாது. இதுவரையில் இருந்தவர்களிலாவது, இப்பொழுதிருப்பவர்களிலாவது, இனிப் பிறப்பவர்களிலாவது ஒருவருக்கும் சாத்தியப்படாது, இந்தப் பிரமாண்ட விசுவரூபமான ஒரு சுவல்பவஸ்துவாயிருந்து, பிரளய கால ருத்திரனும், சிருஷ்டியாதிபஞ்சகிருத்தியத் தலைவர்களாகிய பிரமவிஷ்ணு ருத்திர மகேஸ்வராதிகளும் அவ்வுருவத்தின் முன் அணுவளவாகத் தோன்றினார்கள். இவ்வண்ணமாக ஜகதீசுவரியான பார்வதிதேவி விசுவரூங் கொண்டிருக்கையில் ருரு அசுரன் காலெடுத்து வைக்கவும் இடமற்றவனாய் அப்பொழுதும் தன் மூடத்தனத்தால் தன் பராக்கிரமத்தைக் காட்டக் கருதிப் பாய்ந்தான். மகாதேவி அவன் கைகளைப்படித்து வஜ்ராயுதம் போல் பிரகாசிக்கும் தமது கை நகத்தால் அவன் சிரசைக் கிள்ளி எறிந்து அவன் தோலையுரித்துத் தனது உடலின்மேல் போர்த்திக் கொண்ட ருருவின் உடலைக் கை முஷ்டிகளால் குத்தி அதினின்று கொப்புளித்துக் கொண்டு புறப்பட்ட இரத்தத்தை வாய் வைத்துப் பருகி, அவனது மாமிசத்தையும் புசித்துக் களிப்புற்றாள். ருருவின் தலையை மாமிசம் நீக்கிக் கபால ஓடாக்கிக் கரத்திற்றாங்கினாள். அநேக பிரமத கணங்கள் புடைசூழ ஷட்குணை சுவரிய சம்பன்னனாக விளங்கும் சிவபெருமான் இருக்குமிடத்திற்கு தேவி சென்றாள். கபாலமாலிகாபரணராகிய சிவபெருமான் பார்வதிதேவியைக் கண்டு மனங்களித்தார். தேவிக்கு அநேகவித உபசார வார்த்தைகள் கூறினார். தேவியின் கரத்தில் ஏந்தியிருக்கும் ருருவின் மண்டையோட்டைப் பார்த்தார் அதில் அம்மகாதேவி பானஞ்செய்து மிகுந்ததில் சிறிது தானும் பானஞ் செய்ய விரும்பினார். உமாதேவி அதைக்கொடுக்க சிவபெருமான் சிவபெருமான் வாங்கி இரத்த பானஞ் செய்தார். யானைத்தோலும் சிங்கத்தோலும் ருருவின் தோலுமணிந்துகொண்டு அவ்வசுரனின் உதிரத்தால் நனைந்து விளங்கும் உமாதேவியின் தேகத்தை, சிவபெருமான் தன் தேகத்தோடணைத்துக் கொண்டார் அத்தோற்றமானது பலாசக்காடு பூத்துள்ள இமாசலத்தையொத்திருந்தது. பின்னர் உமாதேவி விநோதார்த்தமாக சிங்கத்தோலையும், பெரிய யானைத் தோலையும் சந்தோஷபூர்வமாகச் சிவபெருமானுக்குக் கொடுத்தாள் சிவபெருமான். அந்த இரு சருமங்களையும் பெற்று, சிங்கத்தோலை இடையில் கட்டி விசாலமான யானைத்தோலை உடல் முழுதும் போர்த்துக் கொண்டார். பார்வதி தேவி தன் சத்துருவான ருருவின் சருமத்தைத் தரித்துக்கொண்டு சந்தோஷத்துடன் தன் தோழிமாரோடிருந்தாள்.
இவ்வாறிருக்கையில் அநேக சுராசுரர்கள், மகரிஷிகள், கின்னரர்; கிம்புருடர்; பிரமன்; திருமால் முதலிய யாவரும் தேவியிடம் வந்து; லோக ஸம்ரக்ஷண நிமித்தமாக ருரு என்னும் அசுரனைச் சங்கரித்து இத்தகைய சண்டிகாரூபத்தைத் தரித்தீர்கள், பயங்கரமான இவ்வுருவத்தைத் தாங்கள் இனி நீக்க வேண்டும்; சரத்கால சந்திரன் போன்ற காந்தியோடு விளங்க வேண்டும்! என்று பலவாறு பிரார்த்தித்துப் பூஜித்தார்கள். அதனால் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் திவ்ய சுந்தர வடிவம் தாங்கி மகிழ்ந்தார்கள்.
7. அப்சர கன்னிகளின் சோதனையும் உஷையின் சாதனையும்
நைமிசாரண்ய வாசிகளாகிய சவுனகர் முதலான முனிவர்கள் சூத புராணிகருக்கு நமஸ்காரம் செய்து; சுவாமி! சிவசக்தி ஸ்வரூபமாக இருக்கும் இப்பிரபஞ்சத்திற்குக் காரண பூதமாக உள்ளவர் சிவபெருமானோ? சக்தி தேவியா? குணச்சிறப்புகளால் இவ்விருவரில் சிறந்தவர் யார்? இவ்விஷயம் எங்களுக்குச் சந்தேகமாக இருத்தலின் இச்சந்தேகத்தை விளக்கியருள வேண்டும்! என்று பிரார்த்திக்கவே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். தவசீலர்களே! உலகத்தில் பெண்கள் சிறப்புடையவர்கள் அவர்களுக்குக் குணதோஷங்கள் அதிகம். அவர்களே மாயாஸ்வரூபிகள் இதில் ஓர் இரகசியம் உண்டு அது என்னவென்று விளக்குகிறேன். உலகத்திலுள்ள இப்பெண்கள் ஆண்கள், பசு, பறவை முதலான எல்லாப் பிராணிகளுக்கும் எழுபத்தீராயிரம் நாடிகள் இருக்கின்றன. இந்நாடிகளைத் தவிரப் பெண்களுக்கு மட்டும் ஜகன்யா என்னும் ஒரு நாடி விசேஷமாக உள்ளது. கர்ப்ப தாரணத்திற்கு அந்த நாடியே யோக்கியமானது. அந்நாடியிருப்பதால் குணதோஷங்களால் அதிகப்பட்டவளான பெண்ணை ஆடவன் மாயை வசப்பட்டு மோகிக்கிறான் ஸ்திரீ பாவத்தாலாவது புருஷ பாவத்தாலாவது இருவரும் கூடி மகிழ; பெண் குழந்தையாவது ஆண் குழந்தையாவது பிறக்கிறது. இத்தகைய விசேஷ நாடி வாய்க்கப் பெற்றிருக்கும் பெண் எப்பொழுதும் ஆடவனைத் தன் மாயையால் வசியம் செய்து கொள்கிறாள். அதனால் தான் பெண்களே உலகத்தில் சிறந்தவர்களாவார்கள். ஸ்திரீகளே மாயாசக்தியாற் சிறந்தவர்கள் என்பதற்கு புண்ணிய கரமும் செவிக்கினிமையாயுமான புராதனக் கதை ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பூர்வத்தில் பாணாசுரனது சோணிதபுரியை அடுத்த நதி தீரத்தில் சர்வேஸ்வரனான சிவபெருமான் தேவாசுரர்களோடுங் கூடி விநோதார்த்தமாக எழுந்தருளியிருந்தார். அப்சரசுகள் நடனமாடினார்கள். கந்தருவர்கள் கானம் இசைத்தார்கள். முனிவர்கள் பெருமானைப் பணிந்தும் பூஜித்தும் துதித்தும் இருந்தார்கள். எல்லாப் பிரமதகணங்களும் சேவித்துக் கொண்டிருந்தார்கள். மகரிஷிகள் ஹோமம் செய்தார்கள், சித்தர்கள் தமது மனதை சிவபிரானிடத்து நிறுத்தி வைத்தார்கள். ஈஸ்வரனே இல்லை என்று குதர்ககவாதம் செய்யும் நாஸ்திகர் சிவபெருமானைக் கண்டவுடனே சூரியனைக்கண்ட இருள்போலத் தம் அஞ்ஞான மொழிந்து ஆஸ்திகமதப்பிரவேசமானார்கள் பகைவர் பயந்து ஓடினார்கள் சப்தமாதர்கள் எதிரே நின்றார்கள். உலகத்துக்கு மகா பயங்கரமாயுள்ளவர்கள் சாந்த புத்தியடைந்தார்கள். சிவபக்தர்கள் ஸம்சார சம்பந்தமான தோஷங்கள் ஒழித்தார்கள். அங்கிருந்தை சபையோர் பரமானந்தத்தையடைந்தனர் அச் சபையில் தேவகன்னிகளான அப்சரஸ் முதலியோர் ஆடல் புரிவதைக்கண்டு அங்கிருந்த சித்தர் முதலானோர்கள் ஆனந்தப் பட்டார்கள்! வசந்தாதிருதுக்கள் ஆறும் தத்தம் புஷ்பித்தல் பழுத்தல் முதலிய செயல்களை இயற்றிக் கொண்டிருந்தன. மந்தமாருதம் சுகந்தமான மகரந்தத்தோடு, வீசியது புஷ்பபாரங்களால் வளைந்திருக்கும் விருஷங்களின் மலர்களிலிருந்து வண்டுகள் அவற்றின் தேனையுண்டு மகரந்தப் பொடிகளைப் பூசிக் கொண்டு ஆனந்த ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. விரக்தர்களும் மனம் மாறி மன்மதாகாரமடையும்படி தேமா மரங்களில் மதுரமான குரலுடன் குயில்கள் கூவின. அப்பொழுது இதன் முன்னரே காமதேவனான மன்மதனை ஜெயித்திருக்கும் சிவபெருமான் பார்வதிதேவியோடிருப்பது உசிதமென்று கருதினார். அவர் வினோதமாக நந்தியை அழைத்து, நீ கைலாயமடைந்து புனிதையாய் மகா அலங்காரத்துடன் விளங்கும் பார்வதியை நான் அழைத்ததாகக் கூறி அழைத்து வா! என்று கட்டளையிட்டார். உடனே நந்திதேவர் சிவாக்கினைப்படியே திருக்கைலாயகிரிக்குச் சென்று பார்வதிதேவியைச் சந்தித்து மகாதேவீ! சிவபெருமான் தங்களைச் சர்வாபரண பூஷிதையாகக் காண விரும்பினார்! என்று கூறினார். பார்வதிதேவியும் அவ்வாறேயாகுகவென்று தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். உடனே நந்திதேவர் சிவபெருமானிடம் விரைவாக வாயு வேகத்துடன் திரும்பி வந்தார், உமாதேவி அலங்காரம் முடிந்து வரவில்லை. சிவபெருமான் நந்தி! நீ உமையை விரைவில் அழைத்து வருக என்று மீண்டும் அனுப்பவே நந்திதேவர் கைலாயத்தை அடைந்து பார்வதியை நோக்கி, தாயே! அதிசுந்தரமாக அலங்காரம் செய்து கொண்டு விரைந்து வரவேண்டும்மென சிவபெருமான் விரும்புகிறார் என்று கூறினார். பார்வதிதேவி தம் தோழிகள் ஐவரை நந்திதேவருடன் அனுப்பி நான் விரைவில் வருகிறேன் எனக் கூறுங்கள் என்று கட்டளையிட்டனுப்பினாள்.
இந்நிலையில் அச்சபையிலிருந்து அப்சரசுகள் நம்மில் யாருக்குத் தேவதாசிகளில் எல்லாஞ் சிறந்தவளாயிருக்கும் பெருமை யுண்டாகும்? ஸப்த மாதர்களில் யார் கவுரீரூபமுடையவள்? என்றிவ்வண்ணம் யோசித்து கடைசியில் சிவபெருமானையே நாம் கேட்போமெனச் சமீபித்துச் சென்று ஒருத்தியும் வாய் திறந்து கேட்க வல்லமையில்லாமல் மவுனமாக இருந்தார்கள். பின்னர் பாணாசுரன் மந்திரியான குபாண்டன் என்பவனுடைய குமாரத்தியாகிய சித்திரலேகை, நானே கவுரீரூபம் வகித்துச் சிவபெருமானை இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்கிறேன்! என்று சொன்னாள். பிறகு அப்சரஸ்களை அழைத்து உங்களில் ஒருத்தி நந்தி கேஸ்வர வடிவமும், மற்றவர்கள் பார்வதியின் தோழிகள் வடிவமுமாக உருவெடுக்க வேண்டும்! என்று கூறினாள். அதைக் கேட்டு விஷ்ணுமூர்த்தியின் (ஊரு) தொடையிலிருந்து தோன்றியவளான ஊர்வசி என்னும் தேவகன்னி விஷ்ணு சம்பந்தமான மாயையால் நந்தி தேவரைப் போல் வடிவமெடுத்தாள். க்ருதாசி என்னும் அப்சரஸ் காளி உருவத்தையும், விசுவாசி என்பவள் சண்டிகா உருவத்தையும், பிலம்லோசை என்பவள் சாவித்திரி உருவத்தையும், மேனகை என்பவள் காயத்திரி உருவத்தையும் ஸஹஜந்யா என்பவள் ஜயை வடிவத்தையும், புஞ்ஜகஸ்தலீ என்பவள் விஜயை வடிவத்தையும், க்ரஸ்துதலி என்பவள் விநாயக ரூபத்தையும் வேறு சில அப்சரசுகள் ஸப்த மாதர் வடிவத்தையும் தரித்துக் கொண்டார்கள். அவ்வாறு வடிவேற்றவர்களைக் கண்ட குபாண்டன் புத்திரியாகிய சித்திரலேகை சரி என்று மனதைத் திடஞ்செய்து கொண்டு விஷ்ணு சம்பந்தமான ஆத்மயோகத்தாலடைந்த ஞானத்தால் அதியற்புத அழகுள்ள பார்வதி தேவியின் வடிவமெடுத்தாள். அம்மகா தேவியின் திவ்வியத் திருவுருவம் எப்படியிருந்தது என்பதை வர்ணிப்போம்; செந்தாமரை மலரின் காந்தியும் மேன்மையும் வாய்ந்த பாதங்கள், முறையே உயர்ந்த ரம்மியமான மாந்தளிர் போன்ற விரல்கள் , சந்திரகிரணங்களாற் பிறந்து சந்திரகையை வீசுகிற நகங்கள், எண்டிசையிலும் கல் கல் என்று ஒலிக்கும் நூபுரம், குறுகியுருண்ட பரடு, பொன்மலையாகிய மேருவைப் போன்ற புஷ்டங்கள் மிருதுவாகிய நுண்ணிய ரோம ரேகை, கனத்த வாழைத் தண்டுப் போன்ற தொடை, மதயானையின் கர்ச்சனை போன்ற ஒலியையுடைய மேகலாபரணம் விலையுயர்ந்த பலநிற சித்திரப்பட்டாடை, பாலசந்திர சூரியப் பிரதிமைகளாகிய தலையணிகள், சிறிது நாணமுற்றாற் போன்ற புன்சிரிப்புடன் கூடிய முகம், வச்சிர ரத்தினத்தால் செய்த மேகலையணிந்த உடுக்கை போன்ற இடை, பொன்னாற் செய்தபடியோவென்று சொல்லத்தக்க உந்தி, பொற்றாமரைத்தண்டு, போன்ற பூர்ணமான மூன்று (வயிற்று) ரேகையும், புடமிட்ட பொன் போன்ற வயிறும் ஜாதரூப நிறமுடைய மார்பும், கோடி சந்திரர்களுக்குச் சமானமானதும் முத்தாரங்களின் தேஜஸுடையதும் மிருதுவுமான புயங்கள் மலர் கொய்தலில் மிகவும் பழகிய கைநகங்கள் பிரகாசிக்கும் பலவிதமான விலையுயர்ந்த ஆபரணங்களும் பதக்கங்களும் அணிந்த கழுத்துச் செம்பவளத்துண்டு போன்ற மெல்லிய அதரம்; பாலசந்திரர்கள் வரிசையாக நிற்பது போன்ற பற்களின் வரிசை; செந்தாமைர மலர்மொட்டு போன்ற நிறமுடைய நாக்கு; எள்ளின் மலரையொத்த பொன்னிற நாசியும்; விகாரமற்ற சிறிய நாசிகாரந்திகள் சந்திரமண்டலமும் சாணைக் கல்லும் போன்ற கபோலங்கள்; ஆழமான வள்ளைக்கொடி போன்ற காதுகள்; இரத்தினமயமான பொன்னாற் செய்த குண்டலங்கள்; வெண்மை செம்மை; கருமைகள் கலந்து பிரகாசிக்கும் விழிகள்; மன்மதன் வில்லையொத்த புருவங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விழிகளில் சிருங்கார சேஷ்டைகள்; சிறிதே ஆடி அசைந்துப் பிரகாசித்துக் கறுத்த நெற்றி முன் கேசம் அஷ்டமிச் சந்திரன் போன்ற முகம் குங்குமம் முதலிய பரிமள வஸ்துக்களாலாகிய திலகம்; நெற்றிமுன் மயிரிற்கலந்திருக்கும் பொன்மணி பவளங்களால் செய்யப்பட்ட தலைச்சாமான் நவரத்தின கிரீடம்! நவராத்தினமயமான ஜடைநாகம் அதிலணிந்துள்ள மணிகளின் கோகிலசுரம் ஐவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தல்; மலர்மாலைகளும் உடைத்தாகி ஒவ்வோரணியையுங் கண்டோர் இது விசுவகர்மனாற் சிருஷ்டிக்கப்பட்டது. தானோ வென்று சொல்லத்தக்க சிறந்த அணிமணிகள் இவற்றோடு பார்வதி தேவியின் வடிவமெடுத்து சித்திர லேகை தனக்கேற்ப தன்னுடன் வருவோரெல்லோரும் அழகு வடிவேற்கச் செய்தாள். நந்தி வடிவேற்றிருக்கும் ஊர்வசி தன் கணங்களுடன் கூடி சர்வேஸ்வரனிடம் சென்று சுவாமி! கைலாசகிரியிலிருந்து பார்வதிதேவியை அழைத்துக் கொண்டு வந்தேன் ஸப்த மாதர்களும் சிவகணங்களும் வந்திருக்கிறார்கள்! என்று விண்ணப்பம் செய்தாள்.
சிவபெருமான் எல்லாம் உணர்ந்தவராயினும் அவர்களுக்கேற்பத் தாமும் ஒரு திருவிளையாடல் செய்ய விரும்பினார். அதனால் அவர் பெருங்களிப்புற்றாற் போலப் பீடத்திலிருந்து விரைந்தெழுந்து ஏழடி தூரம் எதிர்சென்று வரவேற்றார். அப்பொழுது அவருடன் பிரமாதி தேவர்களும் தைத்திய தானவராக்ஷஸர்களும், மகரிஷிகளும், சித்தர்களுந் தொடர்ந்து பார்வதி போலக் கபடவேடங் கொண்டிருப்பவள் முன் சென்று பல விதமான தோத்திரங்களால் துதித்து மகிழ்ந்தார்கள். அப்போது சிவபெருமான் பார்வதி வரவேற்று வந்திருக்குஞ் சித்திரலேகையைக் கைலாகு கொடுத்து அழைத்து வந்து நானாவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சப்பிரகூட மஞ்சத்திலேறி அநேகவிதமாகக் கூடியிருந்தார். கபடவேடமேற்ற ஸப்த மாதர்களில் சிலர் நடனமாடி நடித்தார்கள் சிலர் கானஞ் செய்தார்கள். சிலர் உருத்திர ஜெபஞ் செய்தார்கள். சிலர் விளையாடினார்கள், சிலர் நகைத்திருந்தார்கள். சிலர் இராகங்களை ஆலாபித்துக் கொண்டிருந்தார்கள். கபடவேடப் பார்வதியும் பலவித கானஞ் செய்தாள். யாவுஞ் சிருங்கார ரசகோஷ்டமாக நாட்டிய கானம் முதலியன நடந்து கொண்டிருந்தன இந்த அப்சர ஸ்திரீகள் செய்யும் கபடத்தை உணர்ந்தார் சிவபிரானையன்றிப் பிறரொருவருமிலர் கபடநந்தி முதலாயினோர் சிவார்ச்சனையில் ஆசக்தியுடையவராயிருந்தார்கள். இவ்வாறிருக்கையில் பார்வதிதேவி திருக்கைலாசகிரினின்றுஞ் சர்வாலங்கார பூஷிதையாய், பிருங்கி முனிவர், நந்தி, மகாகாளர்; தண்டீசர், லம்போதரர் முதலிய பிரமதகணங்களால் துதிசெய்யப்பட்டு ஆகாச வழியாகத் தன் நாயகரான சாம்பவமூர்த்தியின் சன்னிதானத்தை வந்தடைந்தாள். அங்கு அவள் விஷயத்தை யுணர்ந்தாள். ஆஹா இது யார்? என்னைப் போலவே ஒரு பார்வதியும் எனது பரிவாரங்களைப் போலவே பரிவாரங்களும், பிரமதகணங்களைப் போலவே கணங்களுமாகக் காணப்படுகிறார்களே? என்று ஆலோசித்திருந்தாள். இதைக் கண்டு கபடவேஷதாரிகள் பயந்தார்கள் அப்பொழுது கண்டவர்கள் இரண்டு பார்வதி தேவிகளுக்கும் இரண்டு ஸப்த மாதர்களுக்கும், நந்த முதலிய கணங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை, பின்னர் சிவபெருமானின் அருகிலிருக்கும் கபடவேஷப் பார்வதிதேவியைப் பார்த்து மனம் வருந்தி அஞ்சி நின்றாள். அதைக் கண்ட பார்வதி தேவி இது அப்சரஸ்திரீகளின் கபடச் செயலெனச் சிறுநகை செய்தாள் அப்பொழுது அங்கிருந்த கலகலவென்றுச் சிரித்தாரகள் இதைக்கண்டு சந்திரசேகரான சிவபெருமான் மாதர்களின் சமத்காரத்திற்காகப் பெருங்களிப்பெய்தினார். பின்னர் கபட பார்வதியாகிய சித்திரலேகையும் நந்தி முதலிய வடிவேற்று நின்ற அப்சரஸ்களும் தங்கள் நிஜ வடிவையடைந்து தங்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். மகரிஷிகளே! ஸ்திரீகளாலே சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் இவ்வாறு ஆனந்தப் படுத்தப்பட்டார்.
பார்வதிதேவி பரமேஸ்வரருடன் கூடி மகிழ்ந்திருக்கும் போது, பார்வதிதேவியைக் கண்ட வாணாசுரன் புதல்வியாகிய உஷை என்பவள் நானும் இவ்வாறு ஒரு நாயகனோடு சேர்ந்து இந்நதி தீரத்தில் கிரீடித்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமே இவ்வாறு வாழ்வோரே புண்ணியர்கள் எனக்கு இப்பேறு எப்பொழுது கிடைக்கும்? என்று தனக்குத்தானே துக்கித்து, நியமமாகப் பார்வதிதேவியை வணங்கிப் போற்றி இவ்வகைய கோரிக்கையை ஈடேறச் செய்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்தாள். அதனால் உஷை இந்திரிய நிக்கிரகஞ்செய்து விரதமிருந்து பார்வதிதேவியை ஆராதித்தாள். விதர சீலையாயிருக்கும் உஷையின் கருத்தையுணர்ந்த உமா தேவி உஷையை நோக்கி ஓ பாபமற்றவளே! இந்நதி தீரத்தில் அதிசீக்கிரத்தில் கணவனுடன் கூடிப் பலவிதமாகச் சுகமனுப்பவிப்பாய்! என்று கூறினாள். உஷை அதைக்கேட்டு மனத்தில் நம்பிக்கை கொண்டு, தாயே! நான் மந்த பாக்கியமுடையவள் எப்பொழுது கணவனுடன் கூடிச் சுகமுறுவேன்? அதைக் கூறவேண்டும் என்று கேட்டாள். அதற்குத் தேவி இது கார்த்திகை மாதமல்லவா? இதன்மேல் ஏழுமாதங்கள் சென்று வைகாசி மாதத்தில் சுக்ல பக்ஷத் துவாதசியில் உபவாசமிருந்து நடுராத்திரியில் நித்திரை செய்யும் உன்னை எவன் அநுபவிக்கிறானோ அவனே உன் கணவன் அவனுடனே சகல சுகங்களையும் அனுபவித்து அவனுடனே செல்லப் போகிறாய் நீ இளம் பருவத்திலிருந்து விஷ்ணு பக்தி செய்து வந்தால் உனக்கு இத்தகைய கணவன் பேறு உண்டாகும் என்று கூறினாள். உஷை நாணத்தால் தலை குனிந்து நின்றாள். சிறிதுகாலங்கழித்துச் சிவபெருமான் பார்வதி சிவகணங்களுடன் திருக்கைலாய கிரியை அடைந்தார். பின்னர் அங்கு வந்திருந்த தேவர்களும் அசுரர்களும் தத்தம் வாகனங்களில் அமர்ந்து ஆகாச மார்க்கமாகத் தங்கள் வாசுஸ்தலத்தை அடைந்தார்கள். சிறிது காலங் கழித்தபின்னர் வாணாசுரன் சிவபெருமானை அடைந்து கைகூப்பி நின்று பெருந்துக்கத்தோடும் தெய்வகதியாகக் கர்வத்தோடும் கூறலானான்.
சர்வேஸ்வரா! மலைகளைப்போல் பூரித்து வலிமைபெற்றிருக்கும் எனது ஆயிரம் புஜங்கட்கும் யுத்தமில்லாதிருத்தலின் யாது பிரயோசனம்? இந்திரன், அக்கினி யமன் முதலிய அட்டதிக்குப் பாலர்களையும் வென்றிருக்கிறேன். இவர்களில் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனை எனக்கு கப்பங்கட்ட வேண்டியவனாகவும் செய்திருக்கிறேன். யோக மாயைகளில் வல்லஸைரந்திரியையும் என் ஸ்வாதீனஞ் செய்து கொண்டேன் என் சத்துருக்கள் பிரயோகிக்கும் பாணங்களால் என் தோள் தினவு எப்பொழுது தீரப் போகிறது? எப்பொழுது பெரும்போர் சம்பவிக்கும்? இவ்விஷயத்தைச் சொல்ல வேண்டும்! என்று கேட்டான். அதை சிவபெருமான் கேட்டது, ஆஹா! இவனுக்கு இவ்வளவு கர்வமிருக்கிறதா? என்று கருதிச் சினந்து அட்டகாசஞ்செய்து, ஓ தைத்திய அதமனே! உன் கர்வம் அளவு மீறிவிட்டது உனக்குள்ள விசேஷ கர்வமானது பங்கப்படத்தக்க கடினமான யுத்தம் விரைவில் சம்பவிக்கப் போகிறது. சத்துருக்களுடைய பாணங்களால் உன் மலைபோன்ற ஆயிரம் தோள்களும் துண்டிக்கப்பட்டுத் தீயிற் சொரிந்த காஷ்டம் போல நிலத்தில் விழுந்து போகும் உனது மயூரத்துவஜம் காற்று முதலியன எதுவுமின்றி தானாகவே ஒடிந்து விழும். அதுவே பெரும்போர் நிகழுங்காலம் என்று தெரிந்து கொள்! அந்த யுத்தத்தில் நீ சர்வசைனியங்களோடும் தோல்வியடைவாய், இப்பொழுது அம்மயூரத்துவஜம் நாட்டப்பட்டுள்ள இடத்திற்கு விரைந்து செல்க நீ இன்னும் ஒரு மஹோத்பாதத்தையுங் காணப்போகிறாய்! என்று கூறினார். வாணாசுரனோ திவ்யமான மலர்களால் மகாதேவனை அருச்சித்து கைகூப்பி சம்போ சங்கர மஹாதேவா! என்று துதித்து விடைபெற்றுத் தன் ஆயுதச் சாலையையடைந்தான். நடந்தவிருத்தாந்தங்களை குபாண்டன் என்னும் தம் மந்திரியிடம் சொன்னான் என்னுடைய மயூரத்து வஜம் உடைந்தவுடனே எனது சைனியங்களுடன் புறப்பட்டுச் சங்கிராமயாகஞ் செய்து மாபெரும் யுத்தத்திற்கு நீ வரச்சித்தமாக இருக்கவேண்டும் என்று கூறினான். எக்காலத்தில் எல்லா அஸ்திரசஸ்திரங்களின் பிரயோகத்தையும் அறிந்து எவன் என்னோடு யுத்தம் செய்ய வரப்போகிறான்? எப்பொழுது என் தோள்களை வெட்டப்போகிறான், எப்பொழுது அவன் தலையை நான் வெட்டப் போகிறேன். என்று சிந்தித்தபடி காலத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
இப்படியிருக்கையில், முன் பார்வதிதேவி வாணபுத்திரியான உஷைக்கு வரமளித்த விதமே வைகாசியும் வந்தது. அம்மாதத்தில் விஷ்ணுபக்தியுடைய உஷை ஸ்நானஞ்செய்து, அணிமணிகளினால் அலங்கரித்துக் கொண்டு விஷ்ணுமூர்த்தியைப் பூஜித்து மகாராத்திரியில் அந்தப்புரத்தில் மோகாவஸ்தைப் பட்டுக்கொண்டு படுத்திருந்தாள். அப்பொழுது கிருஷ்ணபரமாத்மாவின் பேரனாகிய அநிருத்தன் என்பவன் பார்வதிதேவியின் யோகமாயையால் பிரேரேபிக்கப்பட்டவனாய் சோணிதபுரத்தையடைந்து அங்கு உப்பரிகையில் உறங்கும் உஷையைப் பலவந்தமாய் கனவிலே புணர்ந்து பலவிதமான சுகத்தை அனுபவித்து, நான் இப்பொழுது எங்கிருக்கிறேன், எப்படி இங்கு வந்தேன்? என்று துக்கித்துக் கொண்டிருந்தான். அப்போது மீண்டும் பார்வதிதேவியின் யோகமாயையால் துவாரகையில் கொண்டுபோய் விடப்பட்டான். பின்னர் உஷையானவள் சுரதலீலையால் மனவருத்தத்துடன் கண்விழித்துப் பார்த்து தன்னோடு கூடிமகிழ்ந்த ஆடவனை அருகில் காணாமல் தன் தோழிகளிடம் பலவிதமாகக் கூறி நான் இந்தக் கணத்திலேயே உயிர் விடுகிறேன் என்று மூர்ச்சித்து விழுந்தாள். அதை கண்டதும் அவள் தோழியான சித்திரலேகை பனிநீர் முதலியன தெளிந்து சைத்தியோபசாரங்களால் மூர்ச்சை தெளிவிக்க உஷை எழுந்திருந்து முன்பு நடந்த விருத்தாந்தங்களை எல்லாம் மனோகரமான வார்த்தைகளால் சொல்லி ஆனந்தப்பட்டாள். பிறகு அவள் தன் தோழியை நோக்கி சகியே! பூர்வத்தில் ஜகன் மாதாவாகிய பார்வதிதேவியாரை நோக்கி நான் விரதமிருந்த போது தேவி மகாதயாள பூதையாய், உஷையே! உன்னை நித்திரையில் வந்து உன்னோடு கூடிமகிழ்பவனே உனக்குக் கணவனாவான்! என்று வரம் கொடுத்திருக்கிறாள். உன்னுடைய உபாயத்தால் தான் நான் விதிபூர்வமாக அந்நாயகனையடைய வேண்டும் அவன் எக்குலத்தவனென்று அறிந்து கொள்ளாவிட்டாலும் என் மனது அவனால் கவரப்பட்டது! என்று சொன்னாள்.
சித்திரலேகை உஷையே! நீ சொப்பனத்திற் கண்டவன் இன்னவனென நான் அறியேன். ஆகவே அவன் யாரென்று எவ்வாறு கண்டுபிடிப்பேன்? என்றாள். அதற்கு உஷை, சகியே! நீ அவ்வாறு சொல்வாயானால். பிறரொருவரால் இது செய்ய முடியாதது பற்றி நான் காமவேதனை தாங்காமல் மடிந்துவிடுவேன்? என்றாள். அது உண்மையே என்று சித்திரலேகை உணர்ந்து உஷையை! நீ எதற்கும் கவலைப்படாதே. உன்னைக் கனவிற் புணர்ந்து சென்ற கணவனை நான் எவ்வகையிலேனும் ஏழுதினங்களிற் கொண்டுவந்து உன்னிடம் சேர்க்கிறேன்! என்று உறுதியாகக் கூறி தன் மாயையால் எல்லா அசுரர்களையும் துணையாகக் கட்டிக் கொண்டு கனவில் கூடிச்சென்ற ஆடவனைத் தேடிச் சென்றாள். கூடி மகிழ்ந்தவன் அநிருத்தன் என்று அறிந்து கொண்டு, மகா சந்தோஷத்துடன் நீ திருட்டுத்தனமாய் ஏதோவோர் உபாயத்தால் என் பிராண ரத்தினமாகவுள்ள உஷா கன்னிகையை ஸ்பரிசித்து அப்பொழுதே அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். நீ எந்த குலத்தவன் எவ்வமிசத்தவன் உன் பெயர் யாது? என்று கேட்டு அநிருத்தனின் விருத்தாந்தங்களைத் தெரிந்து கொண்டாள். எவனை நீங்கி என் தோழியாகிய உஷை க்ஷணநேரமும் பிழைத்திருக்க மாட்டாளோ, அவனைக் கொண்டு வரத்தக்க உபாயம் யாதென்று சிறிது தன்னுள்ளே யோசித்துத் தன் சிநேகிதியான வாணபுத்திரியுடன் நல்ல வார்த்தைகள் பேசி ஆனிமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் உதய முகூர்த்தத்தில் மனோவேகத்துடன் க்ஷணப்பொழுதில் யோக மாயையின் வன்மையால் ஆகாச மார்க்கமாக துவாரகையை அடைந்து அந்தப்புரத்திலுள்ள உத்தியான வனத்தில் பல மங்கையரோடு மதுபானஞ் செய்து விளையாடிக் கொண்டிருக்கும் அநிருத்தனைக் கண்டாள். அப்பொழுது அநிருத்தன் மலர்ப்பாயலும் பஞ்சணையுமுடைய தன் சப்ரகூட மஞ்சத்தில் ஏறினான்.
சித்திரலேகை அதைக் கண்டு அங்கிருப்பவரையும் அநிருத்தினையும் தனது மாயா சக்தியால் ஒன்றுமுணராதவர்களாகச் செய்து அநிருத்தனைக் கட்டிலுடன் தூக்கித் தன் சிரமேல் வைத்துக்கொண்டு வானவெளியில் பறந்தாள். காம மயக்கத்தால் ஒன்றுமுணராது பலவிதமான சிங்கார பாவங்களைப் பித்தம் பிடித்தவள் போலச் செய்து கொண்டிருக்கும் உஷா கன்னிகையிருக்குஞ் சோணிதபுரத்தை வினாடியிற் சேர்ந்தாள். சித்திரலேகையால் இவ்வண்ணங் கொண்டு வரப்பட்ட அநிருத்தனைக் கண்டதும் உஷை ஆனந்தப் பரவசமடைந்தாள் வலிமைமிக்க அசுரர்களாற் காக்கப்பட்டிருக்கும் அந்தப்புரத்தில் உஷை அநிருத்தனோடு பலவாறாகவும் கூடிக்குலாவிக் கிரீடித்துக் கொண்டிருந்தாள். அப்பகுதியில் ஆயுதங்கள் தாங்கிக் காவல் செய்யும் அசுரர்கள் அங்கே நடக்கும் இங்கிதங்களால் தங்களுக்குள் சந்தேகித்து உஷையின் நடத்தையைக் கண்டு பிடித்தார்கள். அதி திவ்விய தேகமும் இளம் பருவமும் கண்களுக்கு ரம்மியமான அழகும் யுத்தப் பிரீதியும் தீரமுமுடைய ஒரு மனிதன் நம்முடைய வாணாசுர புத்திரியுடன் அந்தப்புரத்தில் இருக்கிறான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு மாவலியின் புத்திரனும் தங்கள் ராஜனுமாகிய வாணாசுரனிடம் ஓடிச் சென்று மன்னவரே! எங்களாற் காக்கப்பட்டிருக்கும் அந்தப்புரத்தில் மகாபலசாலியாகிய தங்கள் புத்திரியை பலாத்காரமாக எவனோ ஒருவன் சுவாதீனஞ் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்திருக்கிறான். தாங்களே போய் அவனைக் காணலாம்! என்று கூறினார்கள். அவ்வாறு கூறிய அந்தப்புர துவாரபாலகர்களின் வார்த்தையைக் கேட்டதும் வாணாசுரன் அளவு கடந்த ஆத்திரம் கொண்டு உஷையின் அந்தப்புரத்திற்கு விரைந்து சென்றான். அங்கு நீலமேகம் போன்ற நிறமும் வாலிப வயதுமுடைய அநிருத்தனைக் கண்டு ஆச்சரியமும், குரோதமும், குரோதத்தாற் சிரிப்பும் கொண்டு இவன் எவ்வளவு பேரழகுடையவன்? எவ்வளவு தைரியசாலி?இவன் என் குல கவுரவத்தையும் என் வமிசத்தையும் என் குமாரத்தியையுங் கொடுத்து பலர் நகைக்கச் செய்தானன்றோ? என்று கருதி தன் வீரர்களை வருவித்து, நீங்கள் துன்மார்க்க சம்பன்னனான இவனை உடனே அஸ்திர சஸ்திரங்களால் நறுக்கி பாசத்தாற்கட்டிக் காராக்கிரகத்திற் சிறை செய்து காலம் வருமளவும ஓடிப்போக வொட்டாமல் காவல் புரியுங்கள்! என்று கூறினான். வாணவீரர்களின் ஒரு லக்ஷம் பேர் அநேக ஆயுதங்களைத் தாங்கி அநிருத்தனைப் பிடித்து வரச் சென்றார்கள். அதைக் கண்டதும் அநிருத்தன் கர்ச்சித்து அந்தப்புர வாயிற்படியிலிருந்த ஒரு கம்பத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். அக்கோலமானது இயமன் வச்சிராயுதம் ஏந்தி நிற்பது போலிருந்தது உடனே அநிருத்தன் அவ்வீரர்களையெல்லாங் கொன்றுவிட்டு மீண்டும் அந்தப்புர மடைந்து உஷையுடன் சேர்ந்திருந்தான்.
முனிசிரேஷ்டர்களே! கோபத்தால் உதிரம் போலச் செந்நிறம் வாய்ந்த பரந்த கண்களையுடைய அநிருத்தன் அவ்வீரர்களையெல்லாங் கொன்ற செய்தியை வாணாசுரன் அறிந்ததும் பெருங் கோபங் கொண்டு தன் மந்திரியான குபாண்டனைக் கூவியழைத்து நீ லக்ஷம் குதிரை வீரர்களுடன் போய் மகா பராக்கிரமசாலியான அத்தீயோனோடு தொந்த யுத்தஞ் செய்து ஜெயித்து வர வேண்டும்! என்று கட்டளையிட்டான். குபாண்டன் அவ்வண்ணமே பெருஞ்சேனையுடன் அநிருந்தன் மீது போருக்குச் சென்று அவனை எதிர்த்துப் போர் செய்தான். அநிருத்தன் அந்த யுத்தத்தில் தனக்குக் கிடைத்த ஒரு கட்கத்தால் அவர்களில் அநேகரைக் கொன்றான் சிலர் ஓடிப் போனார்கள். அதை வாணாசுரன் அறிந்ததும் பிரளய காலாக்கினி போன்ற சுவாலையையுடைய ஒரு சக்தியை அநிருத்தன் மீது பிரயோகித்தான். அநிருத்தனோ அச்சக்தியை விளையாட்டாகப் பிடித்துக் கொண்டு, அச்சக்தியாலேயே வாணாசுரனை யடித்தான் வாணன் அவ்வடியால் இரத நிழலில் மூர்ச்சித்து விழுந்தான். பிறகு தன் மந்திரி குபாண்டன் செய்த சைத்தியோபசாரங்களால் மூர்ச்சைத் தெளிந்து எழுந்திருந்தான். அவனை அசுரர்கள் உபசாரஞ் செய்து கொண்டு போனார்கள். அநிருத்தன் சிறிதுஞ் சலியாது நின்றான். அவ்வநிருத்தனது பராக்கிரமத்தை வாணனுடைய மந்திரியின் சேனைகளைக்கண்டு இவனோடு நியாயமாகப் போர் செய்தால் காரியங் கைகூடாது கபடமார்க்கமாகவே வெல்ல வேண்டும் என்று தீர்மானித்து பலவிதமான அஸ்திரசஸ்திரங்களால் துன்புறுத்தி வஞ்சகமாக வீரர்கள் அநேகர் முன்னும் பின்னும் நின்று அவனை நாகாஸ்திரத்தால் கட்டி வாணாசுரனிடம் இழுத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள்.
வாணன் கடுங் கோபங் கொண்டு இவன் தமது குலத்துக்கு அவமானம் விளைத்தவன்? இவனைச் சிரச்சேதஞ் செய்யுங்கள் இவனுடலைத் துண்டந் துண்டமாகச் செய்து அசுரர்கள் உண்ணும் படிக் கொடுத்து விடுங்கள், அல்லது நரிகளுக்காவது இரையாக்குங்கள் அல்லது இவனை ஆழமான பாழுங்கிணற்றினுள் தள்ளுங்கள்! என்று மிகக்கோபத்தோடு கூறினான். அதைக் கேட்டதும் மந்திரி குபாண்டன் மகா தர்மபுத்தியுடன் தலைவனே! இப்பொழுது தாங்கள் கோபசாந்தமாக வேண்டும், இவனை நாம் இப்படிக் கொல்வோமாயின் நம்முடைய உயிரை கொன்றவர்களாவோம். இவன் பராக்கிரமத்தால் விஷ்ணுவுக்கு சமானனாகவுஞ் சிவகடாக்ஷத்தைப் பெற்றவனாகவும் இருக்கிறான். இவ்வளவு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டும் வீரத்துடன் விளங்குகிறானேயன்றி மனம் வருந்தவில்லையே? மகா சர்ப்பங்களால் கடிக்கப்பட்டிருக்கும் இவன் பலபராக்கிரம சாலிகளாகிய நம்மையே ஒரு துருணமாக நினைக்கிறான் என்று கூறி, அநிருத்தனைப் பார்த்து நீ யாவன்? எக்குலத்தினன்! எந்த உபாயத்தால் இங்கு வந்தாய்? ஓ துராசார சம்பன்னா! ஓ நராதமா! தைத்திய ராஜனாகிய வாணாசுரனைத் தோத்திரஞ்செய் நமஸ்காரஞ்செய். அடிக்கடி நான் உங்களால் செயிக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொள். இவ்வாறு செய்வாயானால் நீ கட்டுத்தளையிலிருந்து நீக்கப்படுவாய்! என்று கூறினான். ஆனால் அநிருத்தனோ, அடா தைத்தியாதமா! பரபிண்டோப ஜீவிகா! நிசாசரா துராசார சம்பன்னா! க்ஷத்திரிய தருமத்தை அறியாமல் என்னைக் கேட்டுக் கொள்ளும்படி நீ கூறுகிறாய்! சூரனுக்கு மரணத்தைக் காட்டிலும் அவமானமும் தோல்வியும் புறங்கொடுத்தலுஞ் சிறந்தவையன்று வீணாக அபகீர்த்தியைத் தேடிக் கொள்வதைக் காட்டிலும் நேர்முகமாக நின்று போர் புரிந்து உயிர் துறத்தலே புகழைத்தரும். இழிவான வார்த்தைகள் கூறி உன்னை வேண்டிக்கொண்டு உலகத்தில் உயிர் வாழ வேண்டுமென்னுங் கருத்து எனக்கில்லை. இப்படி இழிவடைவதைக் காட்டிலும் மரணமாவது ஸந்நியாசமாவது பெறுவதே உசிதம் உனக்குப் பேசத் தெரியாவிட்டால் ஊமைபோல் ஒன்றும் சொல்லாமல் இரு அநேக ராக்ஷஸர்களும் திரிலோகங்களும் எப்பொழுதும் என் பாட்டனுக்குப் பணி செய்து துதிப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வகைய வமிசத்தவனான நானோ அறுத்தெறியப்பட்ட கைகளாகிய வனத்திற் சஞ்சரிக்கும் சிங்கம் போன்ற சுத்த வீரனென்றறிந்து கோள்! என்று கூறினான். வாணாசுரன் மந்திரியின் வார்த்தைகளால் அநிருத்தனைக் கொல்லாமல் அந்தப்புரத்தையடைந்து, வீரபானஞ் செய்திருந்தான்.
அநிருத்தன் மகா விஷத்தையுடைய நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டுத் தன் மனதை உஷையினிடத்தில் செலுத்தித் தன் இஷ்டதேவதையான பார்வதியைத் தியானித்துக் தாயே! நான் நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டு அதனாற் கடிக்கப்பட்டிருக்கிறேன். உன் பக்தர்களுக்குத் துவேஷிகளிடத்தில் உனக்கு ரோஷமிருந்தால் விரைவாக வந்து என்னைக் காக்கவேண்டும் என்று துதித்தான். அதனால் பார்வதிதேவி கருமலை போன்ற வடிவுடன் வந்து ஆனிமாத கிருஷ்ண சதுர்தசியில் நடுராத்திரியில் அநிருத்தனையடைந்து தன் வலிமை பொருந்திய கைமுஷ்டியால் நாகாஸ்திரத்தை உடைத்து, அந்த அஸ்திரத்தைப் பஸ்பஞ் செய்து, அவன் துயர்தீர்த்து அந்தப்புரத்தில் உஷையிடம் அவனைச் சேர்த்து விட்டு அந்தர்த்தானமானாள். அநிருத்தன் சந்தோஷத்துடன் வாணாபுத்திரியைக்கூடி இச்சைப்படியெல்லாம் மகிழ்ந்திருந்தான். அங்கிருக்கும் ஸ்திரீ ஜனங்கள் அவன் பட்ட கஷ்டங்களைக் கருதித் துக்கித்தனர். இவ்விஷயங்களையெல்லாந் துவாரகபுரியில் இருக்குங் கிருஷ்ணமூர்த்தி நாரத முனிவரால் கேள்வியுற்று பிரத்யும்னன் பலராமன் முதலிய வீரர்களுடன் எண்ணிறந்த சேனைகளைக் கூட்டிக் கொண்டு உடனே சோணிதபுரியை அடைந்தார். அக்கினி, யமன், சிவபெருமான் மூன்று சிரங்கள் மூன்று கால்களோடுங் கூடிய சுரன், குமாரக்கடவுள்; பிரமதகணங்கள் மகா பயங்கரமான சத்துருக்களின் வீரத்தைக் கொள்ளத்தக்க திகம்பர ஸ்தீரிகள்(நிர்வாணப் பெண்கள்) முதலானவர்களோடு சென்று மாபெரும் யுத்தம் புரிந்து இறுதியில் வாணாசுரனுடன் போர் புரிந்தனர். பின்னர் மஹேசுவர சம்பந்தமான ஜ்வரங்கட்கும் போர் நிகழ்ந்தன.
வாணன் கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்துத் தன் மந்திரி முதலான எண்ணிறந்த சேனையுடன் போர் புரிந்து தன் சைனியங்கள் யாவுமழியப் பெற்று இறுதியில் கண்ணனால் விடப்பட்ட சுதர்சனத்தால் தனது ஈராயிரம் புயங்களும் அறுபட்டான். கிருஷ்ணன் வாணன் சிரத்தைக் கொய்ய வேண்டுமெனக் கருதும் போது, சிவபெருமான் கண்ணனைப் பலவாறு சந்தோஷிக்கச் செய்து அவனைக் கொல்ல வேண்டாம். இதுவரையில் செய்தது போதும் உன் சுதரிசனத்தை வருவித்துக்கொள். இச்சுதரி சனத்தைப் பூர்வகாலத்தில் உனக்கு நான் கொடுத்தேன் நீயே ஜயமுற்றாய், நீ யோகவான், பக்திப் பிரியன் ஷட்குணைசுவரிய சம்பன்னனாகி யாவருக்கும் நன்மை செய்யக் கருதுகிறாய்! வாணனுக்கு மிருத்யு பயமின்றி வரங் கொடுத்திருக்கிறேன். நீ அவனைச் சங்கரிக்காவிடின் என் சொல்லைக் காப்பாய் என்று கூறினார். அதைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி தன் சக்கிராயுதத்தை வருவித்துக் கொண்டு தன் தேகத்தில் சிறிதுங்காயமின்றி ஜயமடைந்து தன் பேரனாகிய அநிருத்தனையும் அவன் காதல் நாயகியான உஷையையும் ஆசீர்வதித்து அழைத்துக் கொண்டு இரத்தினம் முதலியவற்றைக் கொள்ளை கொண்டு உஷையின் பிரியமுள்ள தோழியாகிய சித்திரலேகையையும் கூட்டிக் கொண்டு கிளம்பினார். தன் வாகனமான கருடனை விடுத்து ஓரிடத்தில் ஏறித் துவாரகாபுரியை யடைந்து சந்தோஷமாக வீற்றிருந்தார்.
கிருஷ்ணன் சென்ற பிறகு ரக்தமயமான தேகத்துடன் துக்கித்துக் கொண்டிருக்கும் வாணனை நந்திபகவான் பார்த்து நீ வருந்தற்க சிவபெருமான் சன்னதியில் நிருத்மகோற்சவஞ் செய்க! என்று கூறினார். வாணன் அவ்வாறே நடனம் செய்யக் கருதி தன் இரண்டு கரங்களோடு நின்று உவலிற்பட்ட காயங்களால் உதிரமொழுக்கி பூமியை நனைத்து பிரத்தியாலீட முதலிய நால்வகை நிலையினின்று புருவ முதலியவற்றின் செயல்களாகிய அபிநயங்களமைய ஸஹஸ்ர சிரக்கம்பனஞ் செய்து அநேக முறை பிரத்தியானீஞ் செய்து பலவிதமாகச் சுழன்று சிவபெருமான் கிருபை செய்யுமாறு நடனமாடினான். அன்பர்களிடத்தில் அதிக விசுவாசமும் நடன கீதங்களின் பேரானந்தமுமுடைய சிவபெருமான் அவ்வாணன் செய்த நிருத்தத்திற்கு ஆனந்த மிகுந்து வாணாசுரா! உன் கருத்திற்கிசைந்த வரம் ஏதேனுங் கோருக, எனக்கேட்டார். வாணன் சிவபெருமானைப் பணிந்து, சுவாமி! என் தோளிலுள்ள காயங்கள் நீங்க வேண்டும் அழிவில்லாத காணாபத்தியத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும். இச்சோணிதபுரியின் இராசிகத்திற்கு என் குமாரத்தியின் கணவனாகிய அநிருத்தனது புதல்வன் அரசனாகவேண்டும் எனக்குத் தேவர்களுடன் விரோதமில்லாதிருக்கவும் கல்பாந்தத்தில் விஷ்ணுமூர்த்தியால் எனக்கு மரணமுண்டாகவும், இராக்ஷஸத்துவம், எப்பொழுதும் இல்லாதிருக்கவும் விஷ்ணு ஆராதனை எனக்கு எப்பொழுதும் இருக்கவும், சர்வஜனமித்திரத்துவமும் வேண்டும்! என்று கோரினான்.
சிவபெருமான், அவ்வாறேயாகுக வென்று வரமளித்து அந்தர்த்தானமாயினர் பின்னர் வாணாசுரன் சிவகணத்தலைவர்களில் ஒருவனாயினான். அவன் குமாரி உஷையினிடம் விஸ்வஜித் என்னும் பெயரையுடைய ஒரு புத்திரன் தோன்றினான். கிருஷ்ணமூர்த்தியின் விருப்பத்தின்படி குபாண்டன் முதலிய மந்திரிகள் விஸ்வஜித்தை அரசனாக்கினார். அவ்வமிசத்தில் கல் பாந்தவரையில் பிறந்தவர்களும் பிறப்பவர்களும் உஷையும் சித்திரலேகையும் விஸ்வஜித்தும் சிவபெருமானுடைய திருவடிநிழலை அடைவார்கள். இவ்வண்ணமாக உலகத்திலுள்ள சகல குருவிற்குஞ் சற்குருவாய் சூலபாணியாய் மன்மதனென்னும் வனத்திற்கு அக்கினீ வடிவமாய் விளங்கும் திரிநேத்திரதரனாகிய சிவபெருமானின் சரித்திரத்தை என் புத்திக் கெட்டியவரையில் பெரியோர்களாற் கேள்விப்பட்டபடி உங்களுக்குச் சொன்னேன். இச்சரிதத்தால் காரியங்களையும் நடத்துவரென்று உணரவேண்டும். சிவமும் சக்தியும், பூவுமணமும்; மணியுமொலியும்; தீயும் உஷ்ணமும் நீருந்தட்பமும் போல அபேதமாக விளங்குவர். இவ்வாறு சூதமுனிவர் சவுனகாதி முனிவர்களை நோக்கி கூறினார்.
8. காமத்தின் கதை
சவுனகாதி முனிவர்கள் சூதமுனிவரை நோக்கி சுவாமி காமமாகிய வனத்திற்கு அக்கினி போன்ற சிவபெருமானும் காம இச்சைக்கு ஆளானார் என்றுத் தாங்கள் கூறியது மிகவும் ஆச்சரியகரமாயிருக்கிறது! ஆதலின் சிவபெருமானையும் மோகிக்கச் செய்ய வல்ல காமம் எத்தன்மையது? ஆகாயம் வாயு அக்கினி, ஜலம், பிருதிவி, புத்தி, மனம், சித்தம், அகங்காரம் முதலியன யாவும் பிரகிருதியால் உண்டாயின என்றும், புருஷன் அங்குஷ்டமாத்திரப் பிராமணமாக விளங்குகிறான் என்றும் கேட்டிருக்கிறோம், இவ்விஷயம் எங்களுக்குச் சந்தேகமாயிருப்பதால் எங்களுக்கு நன்கு விளங்கும்படி கூறியருள வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். மகரிஷிகளே! அளவிறந்த தேஜஸோடு கூடிய வியாஸபகவான் சொல்லிய வண்ணமே உங்களுக்குச் சொல்கிறேன்? கேளுங்கள் காமத்தின் சொரூபமானது பிரம்ம, விஷ்ணு ருத்திராதிகளின் சொரூபமாக இருப்பதும் எல்லா ஜீவ பூதங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபமாக இருப்பதும், ஸாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்னும் முக்குணங்களுடையதும், பிரபஞ்ச ரூபமாகப் பரிணமித்திருப்பது, அது தன்னைக் காட்டிலும் விரும்பத்தக்கது பிறிதொன்றுமில்லாததுமாக விளங்கும் சிவபெருமான் நிஷ்காமமாய் விளங்குகையில், காமமானது இல்லாததாக முடியும். சிவபெருமானும் விஷ்ணுவும்; பிரம்மனும், சூரியனும்; சந்திரனும் காமசொரூபிகளல்லர் எதை அவலம், பித்து, ஸ்நானம், தியானம்; யோகம்; இயமம்; தானம்; வேதபாதம்; ஸ்மிருதி; விசுத்தி; பரபீடை; சுவர்க்கம்; மோக்ஷம் சிநேகம் விரோதம் முதலியனவும் தேவர்களின் அஷ்டயோனிகள் மானிடயோனி பசு, பக்ஷி மிருகங்களின் ஐவகை யோனிகள் ஆகக்கூடிய பதினொரு யோனிகளில் பிறந்தனவும் பிறக்கின்றனவும் பிறப்பனவுமாக யாவும் உண்டாயினவோ அதுவே காமம் என்பதாகும். ஆதலின் அவ்வகைய காமத்தினாலேயே யாவுந்தோன்றிப் பெருகி நசிக்கின்றன பலவித யோனி பேதமான அன்னியோன்னிய புத்தியுடைய தம்பதிகளுக்குச் சிரமமாக உண்டாகும். இச்சாபேதத்தால் காமம் பல திறப்படும் அஃதெவ்வாறெனில் பிறப்பும் இறப்புமுடைய சம்சாரத்தில் சப்தாதிகளாயிருக்கும் விஷயங்களால் நிஸ்ஸாரமான சமுசார சுகத்தால் நான் பிரமன் யான், உபேந்திரன்; நான் உருத்திரன்; தேவன்; தானவன்; சுகவான்; கந்தர்வன் மனுஷன் பந்து; மித்திரன். ஆசாரியன் ரக்ஷணகர்த்தா செய்பவன், கொடையாளி குரு. கற்பகவிருக்ஷம், அண்ணன், தந்தை தாய்; யமன் என்று சொல்லிக்கொண்டு நரகபாதையின்றிச் சொர்க்கப் பிராப்தியுண்டாக வேண்டும் என்றிது போன்ற இச்சாவிசேஷம் பலவிதமாக விளங்கும் காமத்தின் குணத்தை இவ்வளவென்றும் இத்தகைய தென்றுஞ் சொல்ல ஒருவராலும் முடியாது.
முனிவர்களே! இந்திரியாதி தத்துவங்களுக்குப் பரமாயிருப்பதும் பூதங்கட்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பதும் புத்தியினால் மட்டுமே உணரத்தக்கதும் ஸ்பரிசத்தால் அனுபவிக்கத் தக்கதும் ஆனந்தங்களுக்கெல்லாம் ஆனந்தமானதும் அமிர்தமானதுமாக விளங்குவது பரம்பொருள், சூரிய சந்திராக்கினிகளின் தேஜஸ் எத்தேஜஸின் முன் இல்லாது மழுங்குமோ, எப்பொருளால் எல்லாவிகாரங்களும், சூரிய சந்திர, அக்கினி, பிரமன், விஷ்ணு. வாதியர் மனுஷர், மிருக பசு, பக்ஷியாதிகளும் பிறந்திறப்பரோ, அப்பொருளே பரம்பொருள் அப்பொருளைப் பரமாத்மா என்றும் பரமசிவம் என்றுங் கூறுவர். அப்பரம்பொருளாலேயே உண்டாகும் விகாரமானது காமம் என்று சொல்லப்படுகிறது சாக்கிர சொப்பனாதி அவஸ்தைகளையுற்றவரிடத்தெல்லாம் இருந்து எல்லாக் காரியங்களையுஞ் செய்யும் அப்பொருளே பரம் பொருள். இவ்வாறு சர்வேஸ்வரனால் செய்யப்பட்டக் காரியத்திற்கு காமம் என்று பெயர். சக்தி சக்திமானாகிய இவ்விருவராலேயே பிரபஞ்சமானது சிருஷ்டிக்கப் படுகிறது. பிரியமும் அப்பிரியமுமான வார்த்தைகளும் ஸ்பரிசமும் ரூபமும் ரசமும், கந்தமும் எவன் அறிகின்றானோ எவன் ஹிரண்ய கர்ப்ப பிபீலிகாதி ப்ரியந்தம் தானே விளங்குகிறானோ அவனே பரமாத்மா அவனே செய்பவனும் செய்பொருளும் என்று நூல்கள் கூறும் காரியங்களெல்லாம் இறுதியில் அழிவுறுமாயினும் அவற்றையெல்லாஞ் செய்து வரும் பரமாத்மா ஒரு காலத்தும் நசிக்க மாட்டார். சித்திர வேலைக்காரன் பலவிதமாக செயல்களைச் செய்யுமாறு சர்வேஸ்வரன் ஒருவனாயிருந்து பல காரியங்களைச் செய்து வருகிறான். சர்வேஸ்வரன் ஒருவனாயிருந்து பல காரியங்களைச் செய்துவருவதை உலகினர் உணராது பலர் பலப்பல காரியங்களைச் செய்வதாகக் கூறுகின்றனர். சுயேச்சையால் எல்லாக் காரியங்களுக்குங் கர்த்தாவாக விளங்குபவன் சிவபெருமான் ஒருவரே! உலகத்திலிருக்கும் எல்லாப் பொருள்களும் சர்வேஸ்வர ஸ்வரூபமேயென்று நினைக்க வேண்டும் இவ்வாறு சர்வேஸ்வரன் உலக ஸ்வரூபியாயுள்ளவன் தனக்குத் தானே தெரிந்து கொள்ளத் தக்கவன். பரதத்வஸ்வரூபன் அவ்வகைய சர்வேஸ்வரனாலேயே இவ்வுலகத்தில் காமமும் ஞானமும் பிறந்தன. சங்கல்பத்தாலேயே தோன்றியகாமமென்றுங் கூறப்படுவன் வெண்ணிறம் சதுர்புஜம் மனோகரம் சங்கு சக்கரதரருமாய் நான்கு முங்களுடன் விலையுயர்ந்த இரத்தின சுவர்ண புஷ்பங்களால் அலங்கரிப்பட்டு சரஸ்வதி இரதி முதலியவர்களுடன் பிரீதி, கீர்த்தி, சாந்தி, புஷ்டி, துஷ்டிகளோடும் கருடனுங் கூடிக் கிருதயுகத்தில் பிரத்யும்னன் எனப் புருஷனாகப் பிறந்தான்.
இலக்குமி சமேதனாகத் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்திரை செய்யும் விஷ்ணுமூர்த்திக்குப் புத்திரனாகத் தோன்றிய அக்காமனே உலகங்கட்கெல்லாம் பிரியவானாகி பூர்ணச்சந்திரன் போன்ற முகமும், சாமவர்ணமும், திவ்விய காந்தியையுடைய நேத்திரங்களும், வளைந்த தலைமயிரும், பொன்னாற் செய்த நவரத்திரனங்களிழைத்த ஆபரணங்களும், பாசாங்குசங்களும் பெற்று மன்மதனென்றும் பெயருடன் தோன்றினான். அவனைத் தேவர்கள் யாவரும் சமீபித்துக் பிரார்த்தித்துக் கைலாச சிகரத்தில் சந்திரப்பிரபை என்னும் பட்டணத்தில் யோக நிஷ்டையில் இருக்கும் சிவபெருமானை எவ்வகையிலேனும் மோகிக்கச் செய்ய வேண்டும்! என்று கூறினார்கள். மன்மதன் உடனே உம்பர் வேண்டுகோளுக்கிரங்கி அங்கிருந்து புறப்பட்டு அநேகவித மதுர சங்கீதத் தொனிகளுடன் புஷ்பபாணங்களைத் தாங்கி சிவபெருமானையடைந்து நீ யார்! என்று கேட்டான். சிவபெருமான் மன்மதனை நோக்கி, நீ யார்! என்று கேட்டார். நான் காமன்! என்றான் மன்மதன். யாது கூறினை? என்று மீண்டும் இறைவன் கேட்டார். அதற்கு மன்மதன் நீ என்னையறியாயா? அறியாயாகில் அறிவிக்கிறேன் என்றான். அவனைப் பார்த்து சிவபெருமான். இங்கு நீ யாது காரணமாக வந்தாய்? என்று வினவினார். அதற்கு மன்மதன் உன்னை மோகிக்கச் செய்ய வந்தேன் என்றான் எதனால் மோகிக்கச் செய்வாய்? என்றார் சிவபெருமான். பலத்தாற் செய்வேன், என்றான் மன்மதன். உவக்கவ்வளவு பலமுண்டா என்றார். இதோ பாணங்களாகிய மலர்களைப்பார் என்று மன்மதன் தன் புஷ்ப பாணங்களால் இறைவனை மோகிப்பிக்க முயன்றான். அப்பொழுது சிவனாரின் நெற்றிக் கண்ணினின்றுந் தோன்றிய அக்கினி ஜ்வாலையால் மன்மதன் சாம்பலானான். அவ்வாறு மன்மதன் மடிந்ததால் அவன் மனைவியான இரதி சிவபெருமானை வேண்டினாள். சிவபெருமான் நீ துவாபரயுக முடிவில் மயன் என்பவனுக்குப் புத்திரியாகப் பிறப்பாய்; சம்பரன் உன்னைக் கொண்டுபோவான் அப்பொழுது பிரத்யும்னன் என்னும் பெயரில் பிறந்திருக்கும் மன்மதன் அவனைச்சங்கரித்து உன்னை மனைவியாகக் கொள்வான் என்று வரங்கொடுத்தார் இது நிற்க.
முனிவர்களே! சிவபெருமானது தீ விழியாற் சாம்பராக்கப்பட்ட மன்மதன் துவாரகாபுரியில் கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் பிரத்யும்னன் என்னும் குழந்தையாகப் பிறந்தான். இரதியும் மயன் புத்திரியாகப் பிறந்து மாயாவதி என்னும் பெயருடன் பேரழகியாக வளர்ந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்ட சம்பரன் அவளது அழகுக்கு மனமகிழ்ந்து மனைவியாகச் செய்து கொள்ளக் கருதித்தன் நகரத்திற்கு அவளைத் தூக்கிக் கொண்டு போய் போஷித்து வந்தான். இவ்வாறிருக்கும் போது சம்பரன் பிரத்யும்னனையுங் கொண்டு போய் மாயாவதியிடம் விட்டு வளர்க்கச் சொன்னான். அவளும் அன்புடன் வளர்த்தாள் பின்னர் சம்பரனுக்கும் பிரத்யும்னனுக்கும் போர் நிகழ்ந்தது. அதில் சம்பரனை பிரத்யும்னன் கொன்று பூர்வம் சிவப்பிரசாதப்படி மாயாவதியை மனைவியாக்கிக் கொண்டு சம்பராரி என்னும் பெயர் பெற்று மாயாவதியை அழைத்துக் கொண்டு துவாரகையை அடைந்தான். சம்பரன் ராஜ்ஜீய முழுவதையும் தன் தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் கிருபையில் அங்கிருந்த படியே பரிபாலித்துக் கொண்டிருந்தான்.
துவாரகாபுரியில் உத்தியான வனத்தில் ஒரு காலத்தில் விநோதாற்புதமாக மனைவியுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்த பிரத்யும்னனை சும்பன் என்பவன் பிடித்துக் கொண்டு போய்த் தன் தமையனாகிய நிசும்பனிடம் விட்டு, இப்பசுவை நீ பக்ஷணஞ் செய்க என்றான். நிசும்பன் தன் தம்பி கொடுத்த இரையை ஆகாயமார்க்கமாக நெடுந்தூரங் கிளம்பி அங்கே விட்டான். பிரத்யும்னன் தெய்வயோகத்தால் வாயுவசமுற்று சும்பன் ப்வணத்திலிருக்கும் ஒரு பர்வதத்துச்சியில் விழுந்து மூர்ச்சித்துச் சிறிது நேரத்தில் தெளிந்து எழுந்தான் அவ்வுத்யானத்தில் உலாவிக்கொண்டிருந்த சும்பபுத்திரியாகிய லக்ஷ்மி என்னும் கன்னிகையைக் கைப்பற்றி க்ஷத்திரிய தர்மமாகிய காந்தர்வ மணத்தால் அவளோடு கூடிக் கலந்தான். இச்செய்தியையுணர்ந்த சும்பன் இருவரையும் நாகாஸ்திரங்களால் கட்டி விந்தகிரியின் உச்சியில் வைத்துக் கடைசியில் இமாசலத்திலுள்ள விதஸ்தாநதி தீரத்தில் வஜ்ர பஞ்சரங்கட்டி அதில் வைத்து அசுரச் சேனையால் காத்து வந்தான். விஷயத்தைச் சொரியும் நாகங்களால் கடிக்கப்படும் பிரத்யும்னன் மகாபலமுடைய விஷ்ணுசக்தியாகிய துர்க்கா தேவியை நோக்கி, இக்கஷ்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். உடனே பார்வதிதேவி, அங்கடைந்து அவ்வஜ்ர பஞ்சரத்தையுடைப்பது அருமையாயிருத்தலின் நாகணவாய்ப் பறவை வடிவேற்று உட்சென்று ஒரு திவ்யப் பேருருவம் எடுத்து பஞ்சரத்தைப் பஞ்சாக்கினாள் அதைக் கண்டதும் அசுரச்சேனை எதிர்த்து. பிரத்யும்னன் அவர்களோடு பெரும் யுத்தம் செய்து அனைவரையும் அரை வினாடியில் அழித்தான். இவ்விவரங்களையெல்லாம் ஒற்றராலுணர்ந்த சும்ப நிசும்பர்கள் தங்கள் சைணியங்களைக் கூட்டிக் கொண்டு போர் புரியவந்தார்கள். அங்கே துர்க்கையின் அழகைக் கண்டு அவர்கள் மதிமயங்கி மிகவும் மோகித்து துர்க்கையையடைந்து தம்மைக்கூடும்படி இருவருங் கேட்டார்கள். அதற்கு துர்க்கை உங்களிருவரில் வல்லவனெவனோ அவனே என்னை அடைக! என்று கூறினாள். சும்ப நிசும்பர் ஒருவரோடொருவர் எதிர்த்துப் பெரும் போர் புரிந்து இருவரும் ஒருவராலொருவர் வெட்டுப்பட்டு உயிரொழிந்தார்கள். துர்க்காதேவி பிரத்யும்னனை மனைவியோடு துவாரகையில் கொண்டு போய் விட்டு அந்தர்த்தானமானாள். பிரத்யும்னனுக்கும் சும்ப புத்திரியான லக்ஷ்மிக்கும் பிறந்த விஷ்வக்சேனன் சம்பரநகரத்திற்கு அரசனாக்கப்பட்டான். மாயாவதியிடம் பிறந்தவன் மயன் என வழங்கப்பட்டான். அவன் சம்பரபுரத்திற்கு மன்னனாக்கப்பட்டான். ரிஷிசிரேஷ்டர்களே! காதுக்கு இனிமையான வாக்குகளால் காமத்தின் மகத்துவத்தை யுங்களுக்குச் சொன்னேன் உலகத்தையெல்லாம் வருத்தும்படி பிறந்த மன்மதனுடைய பிரபாவத்தையுஞ் சொல்கிறேன் கேளுங்கள். இவ்வாறு சூத முனிவர் மேலும் சொல்லலாயினார்.
9. பாற்கடலில் பிறந்த பாவையரின் கதை
மச்சம், கூர்மம், வராகம், நரசிங்க, வாமனம், பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், கிருஷ்ணர், புத்தர், கலிபுருஷர் என அவதாரங்கள் செய்து பிரசித்தராயும், யோகநிஷ்டாபரரில் சிறந்தவராயும், சமுசாரத்தால் விளையுந்துன்பங்களை நாசஞ்செய்பவராயும், தீயோரைத் தீர்ப்பவராயும் விளங்கும் ஸ்ரீமகா விஷ்ணுவனாவர் காமதேவனான மன்மதனால் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுப் பாற்கடலின் குமாரத்தியாகிய லக்ஷ்மிதேவியைத் தன் திருமார்பிலேயே தரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சூத புராணிகர் கூறும்போது சவுனகாதி முனிவர்கள் குறுக்கிட்டு மகாஞானியே! ஸ்ரீமகாலக்ஷ்மி க்ஷீராப்திக்கு எவ்வாறு புத்திரியாயினாள் என்பதையும் கூறவேண்டும்! என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லலானார்.
மகரிஷிகளே! பூர்வத்தில் தேவர்களுக்கும் அவுணருக்கும் நேரிட்ட போரில் இருதிறத்தவரிலும் பலர் மடிந்ததால், யாங்கள் இறவாது நெடுநாள் போர் புரியக் கருதினோம் ஆகையால் பாற்கடலைக்கடைந்து அமுதளிக்க வேண்டும் என வேண்டினார்கள். பதுமன் திருமாலிடத்திற் கூறிக் கருதியது முடிப்பிப்பேன் என்றுரைத்து அவர்களுடன் க்ஷீராப்தியை (பாற்கடலை) அடைந்து சேஷ சயனத்திற் சனகனாதியர் பரமயோக நித்திரை புரியும் திருமாலை வணங்கி அவர்கள் விருப்பத்தை அறிவித்தார். விஷ்ணுமூர்த்தி அதற்கிணங்கினவராய் அவ்வாறே யாகுக என்று கூறினார். பிறகு மந்தரமலையை மத்தாக நட்டுச் சந்திரனை அடைதூணாக்கி அட்ட நாகங்களுளொன்றாகிய வாசுகி என்னும் சர்ப்பத்தை பாம்பாகப் பூட்டி தேவர் ஒரு புறமும் அசுரர் மறுபுறமுமாக ஈர்க்கும்படி கட்டளையிட்டு தாம் கூர்ம(ஆமை) வடிவேற்று மந்தரமலையின் அடியையும் முடியையும் முதுகினாலுங் கைகளாலும் பற்றி நின்றார். தேவாசுரர்களைப் பெய்தக்காலம் பல கடைந்தமையால் கயிறாகிய வாசுகி வருந்தமாற்றாது உடல் பதைத்து நாத்துடிக்கத் தனது ஆயிரம் வாய்களாலும் தனது விஷத்தைச் சிந்தியது. அவ்விஷம் எங்கும் இருளடையும்படிப் பரவியது தேவர் முதலாயினர் பயந்தோடினார்கள். அதைக்கண்ட விஷ்ணு அமரர்களைக் காப்பேனென்று ஆற்றல்கூறி அவர்கள் மேற்செல்லும் ஆலகால விஷத்தைத் தாமெதிர் சென்று பார்த்தார் அவ்விஷம் அவர் திருமேனியைக் கருநிறமாக்கவே அவரும் நிற்பதற்கஞ்சி ஓடினார். அப்பொழுது யாவரும் ஒருங்கு சென்று திருக்கைலாய கிரியை அணுகி, திருநந்திதேவரது ஆக்ஞையால் சிவ சன்னிதானத்தினுள் சென்று கருணாநிதியாகிய கண்ணுதல் பெருமானைத் தரிசித்துக் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றார்கள். சிவபெருமான் திருமாலை நோக்கி ஓ மாதவா! உருவம் வேறு பட்டுத்தேவர் குழுவுடன் வந்தது யார்? என்று அறியார் போல் வினவினார் அதற்கு மகாவிஷ்ணு பரமபதியே! தங்கள் கட்டளையின்றிப் பாற்கடலைக் கடைய முயன்றதால் அமுது பெறாதுவிஷம் பெற்றோம். எங்களைக் காத்தருள் புரிய வேண்டும் என்றிரந்து நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். சிவபிரான் தமது இடப்பக்கத்திலுள்ள பார்வதியை நோக்க உமையவள் இவர்களைக் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.
சர்வான்மாக்களின் இடுக்கண்களை அகற்றும் ஜம்புகேஸ்வரர் ஆலகால விஷத்தை வாங்கித் திருக்கரத்தில் வைத்துக் கொண்டு ஓ தேவர்களே! இதை உண்ணவா? விட்டு விடவா? என்றார் தேவர்கள் மகாதேவா! உம் திருக்கரத்தில் வரவே இது தன்னுருவஞ் சிறுத்தது. இதை விட்டால் உலகை அழிக்கும். எவ்வௌற்றினும் முற்பக்கம் உம்முடையதே யாதலிவ் விஷமாயிருப்பினும் இதைத்தேவரீர் உட்கொண்டருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள். சிவபெருமான் அவ்வாறே சம்மதித்து ஆலகால விஷத்தைத் திருவமுது செய்கையில் அது கண்டத்தளவு செல்ல அதனை அனைவருங்கண்டு, எங்கள் உயிர்களைக் காத்தற்குச் சாக்ஷியாக இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தரித்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள். சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி அங்கேயே ஒரு நீலமணி போன்று நிறுத்தி மணிகண்டர் நீலகண்டர் சீலகண்டர் முதலிய திருநாமங்களைப் பெற்றார். பிறகு பெருமானருள் பெற்றுப் பாற்கடலைக் கடையும் போது அக்கடலில் லக்ஷ்மிதேவி, தன்வந்தரி, சந்திர சூரியர், கல்பகத்தரு, உச்சைச்சிரவசு, காமதேனு, கவுத்தவம், அமிர்தம் முதலானவை பிறந்தன. அமிர்தம் பிறக்குங் காலத்தில் அமிர்தபிந்துக்கள் வெளியே சிந்தினபடியால் பார்ப்பதற்குச் சவுந்தரிய உருவமுள்ள அப்சரஸ்கள் தோன்றினார்கள். சரத்காலத்தில் பிரகாசிக்கும் பூரண சந்திரன் போன்ற முகமும், மின்னல், சூரியன், அக்னி, போலும் தேக காந்தியுமுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். அவர்களில் சிலர் நிலோத்பல நிறமும், சிலர் பொன்னிறமும் சிலர் பவள நிறமும், சிலர் இந்திர நீலநிறமும், சிலர் வெண்ணிறமும், சிலர் பதும் கர்ப்பம் போற் செம்மையும் வெண்மையுங் கலந்த நிறமும், சிலர் நீலமலர் நிறமும் வாய்ந்தவர்களாய் கணக்கில்லாத அநேகக் கோடு அப்சரசுகள் தோன்றி தாங்கள் தேககாந்தியால் பத்துத்திக்குகளையும் பிரகாசப் படுத்தினார்கள். வயோதிகம் துக்கம் சோகம், மரணம், ரோகம் முதலியன நீங்கி ஹாரங்கள் நூபுரங்கள் கடகங்கள் முதலிய இரத்தினாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாய் சிருங்காரம் முதலான ரசயுக்தமான மதுரமானகுரராய் அமிர்த்துல்யமான கண்பார்வையால் உலகமுழுவதையும் பிரமிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். பாற்கடலில் தோன்றி பல பொருள்களில் காமதேனு பாரிஜாதம், உச்சைச் சிரவசும் என்பனவற்றை தேவேந்திரன் பெற்றுக் கொண்டான். கவுத்துவ மணியையும் இலக்ஷ்மியையும் விஷ்ணுமூர்த்தி அடைந்தார். தன்வந்தரியை எல்லோரும் அடைந்தார்கள். அமிர்த்தம் எங்களுக்கு என்று தேவாசுரர்கள் பிரளய காலகோஷம் போற்கொதித்து அக்கினி சூரியன் போலக் குரூரத்துடன் கோபித்துப் போர் செய்து, அப்போரில் அசுரர்கள் தமது வலிமிகுதியால் அமிர்த்தத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனைக் கண்டதும் விஷ்ணுகாந்தியே சொரூபமாகவுள்ள லக்ஷ்மி என்னும் மாயையோடு மகாவிஷ்ணு கூடி, அசுரர்களை விளித்து நான் உங்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிப்பேன் என்றார்.
அசுரர்கள் சம்மதித்து அவ்வாறே சமபாகம் பெறத் தீர்மானித்தார்கள். பிறகு அவர்கள் தங்களை மோகிக்கச் செய்த விஷ்ணு மூர்த்தி கையில் அமிர்த கலசத்தைக் கொடுத்து விட்டு அப்பாற்கடலில் தோன்றிய அப்சரஸ்களைக் கண்டு மதிமயங்கி விஷ்ணுமாயையால் காமமிகுந்து அவர்களை உடன் கொண்டு சுவர்க்க லோகத்திலுஞ் சிறந்து விளங்கும் தங்கள் நகரங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவ்வாறு தங்கள் நகரங்களை அடைந்த பின்னர், ஐயோ அமிர்தத்தை மறந்துவிட்டு தேவர்கள் விட்டு விட்ட இந்த ஸ்திரீகளை வீணேகொண்டு வந்தோமே? என்று மனம் வருந்தி அக்கன்னிகைகளை விட்டுவிட்டு தங்கள் பட்டணங்களை அகழிமதில் முதலிய காவல்களிற் குறைவின்றி விளங்கச் செய்தார்கள், தங்களை வஞ்சித்து அமிர்தத்தைக் கைக் கொண்ட தேவர்களோடு யுத்தம் புரியக்கருதி ஆகாயமுழுதும் மறையும்படி புழுதியெழும்பக் கடுநடை நடந்து சங்கநாதமும் வாத்திய முழக்கமுஞ் செய்து கொண்டு, அமிர்தத்தில் பாகம்பெற வேண்டுமென்று புறப்பட்டு வந்தார்கள். அவ்வாறு போர்க்கோலங் கொண்டு வந்த அசுர சேனையைக் கண்டதும் அமரர்களும் போர்கோலங் கொண்டார்கள். அவ்விரு திறத்தவருக்கும் பெரும்போர் நிகழ்ந்து அநேகவிதமான அஸ்திரசஸ்திரங்களால் அடித்துக் கொண்டார்கள். அப்போரில் அநேகதானவரைத் தேவர்களும் அநேகந் தானவரைத் திருமாலுங் கொன்றார். இந்த யுத்தத்தில் உயிர் பிழைத்தாற் போதுமென்று சிலர் பாதாளத்திற்கு ஓடிவிட முயன்றார்கள் மகா பல பராக்ரமசாலியான விஷ்ணு மூர்த்தி தம் சக்ராயுதத்தைக் கையிற்றாங்கி அவ்வாறு ஓடுவோரையுங் கொல்ல வேண்டுமென்றும் உட்கிடையால் அவர்களைப்பின் தொடர்ந்து தாமும் பாதாள லோகத்தையடைந்தார். அங்கு ஒளிந்து கொண்டவர்களை அவர் தேடிக் கொண்டியிருக்கையில் அமிர்த சம்பவமும் பூர்ணசந்திரன் போன்ற முகமும், அதிக சவுந்தரியத்தால் தருக்கு முற்றிருக்கும் அநேக ஸ்திரீகளைக் கண்டு மோகமுற்று மன்மத பாணத்தால் அடிபட்டு தான் வந்த காரியத்தை மறந்து அம்மாதர்களுடன் விளையாடிக் கொண்டும் பலவிதமாகக் காமக் கிரீடை செய்து கொண்டும் அநேக காலமிருந்தார். அதன் விளைவாக உலகத்தில் கண்டோர் யாவரும் அஞ்சத்தக்க ஆண் தன்மையும் போர்த்திறமுமுடைய புத்திரர் பலரைப் பெற்றார்.
இவ்வாறிருகையில் பிரமதேவன் கைலாயகிரியையடைந்து சிவபெருமானைப் பணிந்து சுவாமி! தாங்கள் கட்டளையிட்டு அருளியபடி நான் சிருட்டியும் விஷ்ணு ஸ்திதியும் செய்ய வேண்டியவர்களன்றோ? விஷ்ணுமூர்த்தி இப்பொழுது காமாந்த காரத்தில் மூழ்கிப் பாதாளலோகத்தில் மங்கையர் பலருடன் விநோதமாகக் காலங்கழித்துக் கொண்டிருக்கிறார். அவரது காத்தல் தொழில் நடக்கும்படி தாங்கள் அங்கு சென்று திருமாலின் மனதைத் திருப்பியருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் அவ்வாறேயாகுகவென்று காளை உருவமெடுத்துப் பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டு பிநாகவில்லைத் தாங்கிப் பாதாளத்தை அணுகி மகா பயங்கரமான பலவிதத் தொனிகளைச் செய்தார். அவ்வொலியால் அங்கிருந்த புரங்கள் யாவும் அஞ்சின அப்பொழுது விஷ்ணு மூர்த்தியின் புதல்வர்கள் இவ்வாறு பேரொலியால் நம்மையும் நமது பட்டணத்தையும் பயமுறுத்துவோன் யார்? என்று கோபித்து யுத்தஞ் செய்யக் கருதி புறப்பட்டனர்; சர்வேசுவரனான உருத்திரபகவான் தம் குளம்புகளாலும் கொம்புகளாலும் அவர்கள் யாவரையுங் கொன்றார். அவ்வாறு புத்திரர் இறந்தனரென்னுஞ் செய்தியைக் கேள்வியுற்ற அச்சுதன் மகாகோபத்துடன் யுத்தம் செய்யச் சிவபெருமானைச் சமீபித்து! பலவிதமான அஸ்திர சஸ்திரங்களை ரிஷப ரூபமாக வந்திருக்கும் பெருமான் மீது பிரயோகித்தார். பகவான் அந்த எண்ணிறந்த திவ்யாஸ்திரர்களை விநோதார்த்தமாகக் கிரகித்துக் கொண்டார். அதைக்கண்டதும் விஷ்ணுமூர்த்தி ஓகோ! ஜகத்பதியாகவுள்ள உமாசமேதனே இங்கு இடபரூபமாக வந்திருக்கிறாரே தவிர வேறில்லை! என்று உணர்ந்து கம்பீரமான வாக்கால் சர்வேசுவரா! சங்கரா! பகவானே! ஷட்குணைசுவரிய சம்பன்னா! ஸ்வாமீ! நான் செய்த குற்றத்தை க்ஷமித்தருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். அந்தப் பிரார்த்தனைக்கு சிவபெருமான் இளகி கேசவா! நீ இரக்ஷித்தல்!தொழிலையுடையவன் என்பதை என்ன காரணத்தால் மறத்தாய்! இனி இப்பாதாளத்தில் ஸ்திரீலோலனாயிருப்பதை நீக்க வேண்டும்! எனக் கட்டளையிட்டார். அதைக் கேட்டவுடனே விஷ்ணுமூர்த்தி, ஆகா சிறியேனாகிய நான் செய்த இந்த அறிவீனமான காரியத்தை ஜகதீஸ்வரன் தெரிந்து கொண்டானால்லவா? என்று நாணமுற்று, சர்வேஸ்வரா! அடியேனுக்கு தேவரீர் பிரசாதித்தருளிய சுதர்சனமென்னுஞ் சக்ராயுதம் இவ்விடத்தில் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வினாடியில் வருகிறேன்! என்றார் சிவபெருமான். அதனைக்கேட்டு, நாரண! இப்பாதாளம் அநேக துஷ்டராக்ஷஸர்களுக்கு வாசஸ்தவமாயிருக்கிறது இவர்கள் எப்பொழுது கர்வித்துத் துன்மார்க்கஞ் செய்கிறார்களோ அப்பொழுது இவர்கள் நாணமுறும்படி சிøக்ஷ செய்ததற்காக இச்சக்கிராயுதம் இங்கேயே இருக்கட்டும், உனக்கு இதற்குச் சமானமானதும் மகா பயங்கரமானதுமாகிய மற்றொரு சக்கிராயுதத்தைக் கொடுக்கிறேன்! என்று கூறி, அவ்வாறு திருவுள்ளத்திற் சங்கற்பஞ் செய்த பொழுதே பிரளய காலாக்னி போன்ற காந்தியோடு கூடிய ஓர் சக்கிராயுதம் உண்டாயிற்று. அதைச் சிவபெருமான் மகாசந்தோஷத்துடன் பிரளய கால சூரியரின் கிரணங்களைப் போன்ற கிரணத்தையுடைய சக்கிராயுதத்தைச் சிவப்பிரசாதமாக பெற்றுக் கொண்டார். திருமாலும் சிவபெருமானும் பாதாளத்தை விலகித் தத்தம் பதவியடைந்தார்கள்.
முனிவர்களே! அதன் பின்னர் விஷ்ணுமூர்த்தி இந்திராதி தேவர்களைப் பார்த்து அமரர்களே! பாதாளத்தில் மகாயவுவனமான காந்தி லாவண்யங்களுடைய எண்ணிறந்த ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பலகாலம் பலவகையாகக் கல்வி செய்தவனே கல்வி செய்தவனாவான்! என்று கூறினார். அதைக் கேட்டதும் அமரர் காமாக்கினியால் தகிக்கப்பட்டு, எவ்வகையிலாவது பாதாளத்தையடைந்து அம்மங்கையர் சுகத்தை அனுபவிக்க வேண்டுமென்று உறுதி கொண்டு புறப்பட்டார்கள். அப்போது ஷட்குணைசுவரிய சம்பன்னனான சிவபெருமான் முற்றுணர்வுடையனாதலின் அவர்கள் கருத்தையுணர்ந்து, யாவனொருவன் இவ்வுலகை நீங்கிப் பாதாளஞ் செல்கிறானோ அவன் உடனே உயிரொழிக என்று கடுஞ்சாபமிட்டார். அதைக் கேட்டதும் அமரர்கள், ஐயோ! இவ்வகை கொடுஞ் சாபத்திற்கு யாது செய்வோம்? என்று தங்கள் மனதை திருப்பிக் கொண்டு தத்தம் புரத்தையடைந்தனர். சிறிது காலஞ் சென்ற பின்னர், சிவபெருமான் ஒரு காலத்தில் சிந்தாகுலமுற்றார் போன்றிருந்தார் அந்தச்சமயத்தில் உமாதேவி பெருமானைப் பார்த்து, சுவாமி! தாங்கள் எல்லாப் பூதங்களையும் படைத்தீர்கள் சராசரப் பிரபஞ்ச முடிவதற்கும் காரணமாக இருக்கிறீர்கள். இவ்வாறிருந்தும் தாங்கள் மனவருத்தமாக ஆலோசிக்க வேண்டிய காரணம் என்ன? என்று வினவினாள். அதற்கு சிவபெருமான் பிரியே! பாதாளத்திலிருக்கும் பெண்களின் திவ்யவடிவத்தைக் கருதிச் சிந்திக்கிறேன் திரிலோகங்களிலும் சிருஷ்டிமுதல் இது வரையில் அவ்விதமான சிறந்த அழகு வாய்ந்த ஸ்திரீகளே கிடையாது! என்றார். உடனே பார்வதி தேவி சுவாமி! தங்களுக்கும் வியப்பினையுண்டாக்கதக்க அழகுள்ள அப்பெண்களின் வடிவத்தைக் கட்டளையானால் நான் போய்க்கண்டு வருவேன் என்று கூறினான், அவ்வண்ணமே பார்த்து வருக என்று சிவபெருமான் அனுமதி கொடுக்க, பார்வதி விடை பெற்றுக்கொண்டு, கண்ணாடியில் முகபிம்பம் பிரதி பிம்பிக்குங்காலத்திற்குள் பாதாள லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தாள் அங்கிருக்கும் மங்கையர்கள் சூரியன்தான் இங்கு வந்ததோ என்று கூறத்தக்க பிரகாசமுள்ள பர்வதப் புத்திரியான பார்வதியைப் பார்த்தார்கள். ஆனால் தங்கள் ரூபலாவண்யத்தால் மகாகர்விகளாகி நல்லமொழிகளால் உபசரியாமலிருந்தார்கள். அம்மங்கையர் வடிவைப் பார்வதிதேவி பார்த்து பெண்களே! நீங்கள் திவ்யமான உருவத்தையடைந்திருக்கும் கணவரின்றிப் பலனற்றிருக்கிறீர்கள், அதியற்புத தேகமுடையவர்களாக இருந்தும், ஆகாயத்தில், புஷ்பங்களும் பழங்களுமிருந்தால் ஒருவருக்கும் பயன்படாத போலவும், ஆழமானதும் அகலமானதுமாகிய நீரில் பூத்திருக்கும் தாமரைகள் போலவும், நிஷ்ப்புருஷமாகிய இப்பாதாளத்திலிருந்து புருஷ சம்பவமின்றி உங்கள் வனப்பு அவலமாகிறது பிரமதேவன் பெண்களைப் புருஷர்களுக்கு உபயோகப்படும்படி படைத்திருந்தும் உங்களால் ஒருவருக்கும் பயனில்லை! என்று எடுத்துரைத்தாள். சுந்தரிகள் நெடுநேரம் யோசித்து பார்வதி என்று உணர்ந்து சாஷ்டாங்கமாகத் தண்டஞ் செய்து பலவிதமாகத் தோத்திரம் செய்து மகிழ்வூட்டுனார்கள். உமாதேவி திருவுள்ளங்களித்து ஓ கன்னிகைகளே, உங்களுக்குப் புருஷராயிருக்கத் தக்கவர்கள் உங்களைக் கருதிப் பாதாளத்துக்கு வர ஆயத்தமாயிருக்கையில், சிவபெருமான் அவர்களை நோக்கி, நீங்கள் பாதாளலோகஞ் சென்றால், உடனே இறப்பீர்களென்று சபித்துவிட்டார். எனவே அவர்களும் உங்களுக்குப் புருஷர்களாக மாட்டார்கள். ஞானவான்களாயும் மகாமந்திர பாராயண முடையவர்களாயும் தபோ நிஷ்டர்களாயும் மனுஷரூபம் வகித்து என் புதல்வர்களாகவும் சிவபெருமானுக்குக் கணங்களாகவுமிருக்கிறார்கள். அவர்கள் அதிரூபயவுவன சம்பன்னர்களாகவும் இருப்பதால் அவர்களைப் புருஷர்களாகக் கொண்டு பலவிதமான இரதி கேளிக்கைகளை அனுப்பவிப்பீர்களாக! என்று கூறி அந்தர்த்தானமானாள்.
முனிவர்களே! இவ்வண்ணமாக மகாவிஷ்ணுவும் ஒரு காலத்தில் தன் சகோதரர்களாகிய தைத்தியர்களைச் சங்கரித்து அவர்களில் ஓடினவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் ஸ்திரீகளைச் சரச சல்லாப உல்லாசமாக அநேககாலம் அனுபவித்து கொண்டிருந்தார், திரோதியுகத்தில் விஷ்ணுமூர்த்தி பிறகு ஸ்ரீராமவதாரஞ் செய்து சீதையை மணந்து அநேககாலங்கள் கூடி வாழ்ந்திருந்து அந்த சீதாதேவியின் தேகம் மறைந்த பிறகு மதனாவஸ்தையைத் தாளமாட்டாமல் பலவிதமாய்க் காம வேதனையை அனுவித்தாரல்லவா? துவாபரயுகாந்தத்தில் மீண்டும் அவ்விஷ்ணுவே மதுராபுரியில் வசுதேவனுக்கும் தேவகிக்கும் புத்திரனாகத் தோன்றி மகாபலவானாகி வாலிபத்திலேயே கோபிகாஸ்திரீகளுடன் பிருந்தாவனத்தில் விசேஷமான இரதிகிரீடையை நடத்தி, பத்துலக்ஷம் புத்திரரைப் பெற்று அதோடும் திருப்தியடையாமல் அதியவுவனத்தில் ருக்மணிதேவியைக் கவர்ந்து இராக்ஷஸ மணமாகக் கொண்டுவந்து மணஞ்செய்து பிரத்யும்னனாதி புத்திரரைப் பெற்று அதோடும் திருப்தியடையாமல் பிராக்ஜோதிஷபட்டணத்தின் மன்னனாகிய நரகாசுரனைப் பலாத்காரமாகச் சங்கரித்து அவனது ஆயிரம் மனைவியரையுங் கிரகித்துக்கொண்டு அவர்களோடு தொண்ணூறு புதல்வரைப் பெற்று மீண்டும் அத்தையாகிய ராதா என்னும் பெயரையுடைய ஸ்திரீயைக் கூடி, அநேகவிதமாகச் சுகமனுபவித்தும் இன்னும் எண்ணிறந்த பல பெண்களோடு பல வகையாகச் சுகமனுபவித்தும் திருப்தியடைந்திலர். சமானமான வயதுடைய ரூபயவுவன சம்பன்னர்களானஸ்திரீ புருஷர்கட்கு மன ஒற்றுமை உண்டாயிருக்கும் பொழுது அதுமோக்ஷ சுகத்தைக் காட்டிலும் விசேடித்த சுகமென்று நினைக்கும்படி இருக்கும். இவ்வாறு காமார்த்தமாயுள்ளவன் தர்மா தர்மத்தையுங் குலத்தையும் கவனிக்கமாட்டான் அது எப்படியென்றால் சாந்தமும் சர்வேஸ்வர தியானத்திலேயே பொருந்திய மனதும், மகத்துக்கட்கெல்லாம் மகத்தும், செந்நிற தேகமும் நான்கு முகங்களும் அயோ நிஜமும் வேதவேதங்கவுணர்ச்சியுமுடைய உலக குருவெல்லோருக்கும் பரமகுருவாகிய பிரமதேவன் ஒரு காலத்தில் திருமணக் கோலங் கொண்டிருந்த பார்வதிதேவியின் பாதத்தைக் கண்டு மனங்கலங்கி மீண்டும் ஜகன்மாதா விஷயத்தில் அபராதியானேனேயென்று பரிஹாரமாகப் பலவித விரதங்களிலிருந்து அம்மகாதேவியாரைப் பிரார்த்தித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டான், இவ்வாறு மகாவிஷ்ணுவுக்கும் மன்மதனால் விளையவிருந்த தீமையைச் செயித்த பிரமதேவனுக்கும் சம்பவித்த காம விசேஷங்களை உங்களுக்குச் சொன்னேன்.
10. மன்மதன் ஆற்றலுக்கு வசப்பட்ட மகேஸ்வரர் கதை
மகரிஷிகளே! வெண்மை, செம்மை, நீலம் முதலிய நிறங்களையுற்றுப் பலவிதரூபங்களையடைந்து சாந்தம், கோபம், குரோதம், இந்திரீய, நிக்கிரகம் இச்சையின்மை ஆகியவற்றையுடைய சிவபெருமானுக்குச் சிருஷ்டி செய்து வைத்து விருப்புண்டாக்கி ஜலமும் பிராணிகளின் இதயமுந் தானமாகவுடைய நாராயணனைச் சிருஷ்டித்தார். அவ்வாறு படைக்கப்பட்ட நாராயணன் தவஞ் செய்து இறுதியில் திருப்பாற்கடலில் அநேக காலஞ்சயனித்திருக்க, அந்நாராயணனது உந்தியினின்று ரஜோ குணத்தால் பிரமன் தோன்றினார். அவர் முதலில் விருக்ஷ முதலிய ஐவகைத் தாமஸ் சிருஷ்டியைச் செய்து பின்னர் மானிடர் முதலான ராஜஸ சிருஷ்டியைச் செய்து இறுதியில் தேவர் முதலிய எண்வகைச் சத்துவ சிருஷ்டியையும், பின்னர் உலகங்கள் தர்மங்கள் பரிபாலனங்கள் ஜீவிதங்கள் ஆகாரங்கள் முதலிய சிருஷ்டிகளையும் செய்தார். அச்சிருஷ்டிகளிலெல்லாம் பரமாத்மா பிரவேசித்து விளங்கினார், இச்செயல்களெல்லாம் முடிந்த பின்னர் நாராயணன் துயிலொழிந்து, தான் சிருஷ்டி காமியாய்யோக நித்திரையிலிருந்தமையால் படைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் கண்டு இச்சகத்து யாரால் படைக்கப்பட்டதென்று ஆலோசித்தார். அப்போது ஓர் அக்கினி மயமான தாணுலிங்கம் தோன்றியது.
அது ஜ்வாலாகாரமாயும் மகா பயங்கரமாயும் திரிலோகங்களுக்கும் ஒரே ஸ்தம்பாகாரமாயும் ஆதிமத்தியாந்த மறிய வசமில்லாததாயும் அளவிட்டுரைக்க முடியாததாயும் தேஜோமயமாயும் விளங்கியது. பிரம்ம விஷ்ணுக்களிலிருவரும் ஒரு காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்து நான் பரம் நான் பரம் என்று தருக்கெய்தி வாதாடினார்கள். பிறகு கடலிடையே ஜோதி மயமாக விளங்கும் அந்தத் தாணுலிங்கத்தை நோக்கி, இங்கிவ்வாறு விளங்குவது யாது? என்று நினைத்து, இது நம் மிருவராலும் படைக்கப்பட்டதன்று. இது தானாகவே உண்டானதாகக் காணப்படுகின்றது இது. ஆதலால் நாமிருவரும் ஜெகத்காரணரென்று சொல்லிக் கொள்வது அவலம்! என்று காலம் நீங்கி இருவரும் சிநேக பாவமாக ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு, இப்பொருள் என்ன? இதனது வரலாற்றினை உணர வேண்டும்! என்று அடிக்கடி யோசித்து, அதைக் கண்டறிவதே நலமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அப்பொழுது நான் இதன் அடியைக் காண்பேன்! என்று விஷ்ணுவும் முடியைக் காண்பேன் என்று பிரம்மனும் நியமித்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அசரீரி பிரம்ம விஷ்ணுக்களே! இது சிவபெருமானேயன்றி பிறிதன்று அவர் உங்கள் வல்லபத்தையறியக் கருதி ஜ்யோதிர் மயமாக நின்றார். இந்தத் தாணுலிங்கத்தை நீங்கள் பூஜித்தால் மகத்தான இஷ்ட சித்திகளை அடைவீர்கள். புஷ்பம், கந்தம், தூபம், தீபம், நிவேதனம் முதலியவற்றால் தன்னை ஆராதித்தவர்கட்குச் சிவபெருமான் சந்தோஷமுற்றுப் பக்தவத்சலனாதலின் இஷ்டகாமியங்களைக் கொடுத்தருள்வார் என்று கூறியது உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் மலர் முதலிய பூஜா உபகாரணங்களால் தாணுலிங்கத்தை விதிப்படி பூஜித்து, வேதோக்தமாகத் துதித்து இஷ்டசித்திகளையெல்லாம் அடைந்தார்கள். மற்றொரு பக்கத்தில் சர்வேஸ்வரனும், காமாரியுமாக விளங்குஞ் சிவபெருமானும், தம் தேவியான பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் பாதி சரீரம் கொடுத்து அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயரெய்தி அடியவர்கட்கெல்லாம் சேவையளித்துக் கொண்டு விளங்குகிறார்.
மற்றொரு காலத்தில் பார்வதிதேவியை சிவபெருமான் திருமணம் புரிந்து இமாசலத்திலுள்ள ஒரு குகையில் பூதசேனைகளுடன் அநேக காலம் எழுந்தருளியிருந்து விளையாடினார். அப்பொழுது பார்வதிதேவி தனக்கிருக்கும் காளவடிவம் நீக்கிக் கவுரவ வடிவத்தை அடைவதற்கு விரும்பி அதை எவ்வாறு அடைவது என்று யோசித்து, தவஞ் செய்வதாகத் தீர்மானித்தாள். தன் நாயகர் தன் திருமணத்திற்கு முன்னரே கங்கையை ஜடாமுடி மேல் அணிந்திருப்பதால் இதுபோல இன்னும் வேறெவரையேனும் விருப்பமுறாமல், தன் தோழியாகிய உத்தாம குஸுமை என்பவளையும் தன் புதல்வனாகிய வீரகனையும் ஒவ்வொரு வாசலில் காவலாக வைத்து வேறொரு ஸ்திரீயையும் உள்ளே விடக்கூடாதென்று உறுதியாகக் கட்டளையிட்டாள். அவர்கள் அவ்வாறே வாயில் காப்பதாகக் கூறியதும் பார்வதிதேவி தபோவனத்திற்குச் சென்று தடாகங்களுடையதும் அரசர்கள் பூர்வம் வசித்துத் தவஞ் செய்ததும் ஜபந்தியென்னும் பெயருடையதுமான அங்கிருக்கும் ஒரு குகையைக் கண்டு இதுவே நல்ல இடம் என்று துணிந்து அங்கேயே தவஞ்செய்து கொண்டிருந்தாள்.
முனிவர்களே! இவ்வாறு ஜகன்மாதாவாகிய பார்வதிதேவி தவஞ்செய்து கொண்டிருக்கையில், ஆடி என்னும் பெயருடைய அசுரனொருவன் பிரம்மனை நோக்கிப் பலவிதமாகத் தவஞ்செய்ய பிரமன் பிரத்தியக்ஷமாகி, யாது வரம் வேண்டும் என்று கேட்டார் அதற்கு ஆடி அசுரன் நான் இறவாதிருக்க வரமளிக்க வேண்டும்! என்று கோரினான். உனக்கு இவ்வுடம்புடனே இறவாத் தன்மை கைகூடாது. அது கைகூடுவதற்கு ஏதேனுங் காரணங் கோருக! என்றார். பிரம்மா அதைக் கேட்டதும் தைத்தியன் சிருஷ்டிகர்த்தாவே! சந்திர தேவதாகமான நக்ஷத்திரத்தோடு கூடிய உருத்திர தேவதாகமான முகூர்த்தத்தில் இந்திரன் மேக காலங்களாற் பெருமழை பெய்விக்கையில் நான் மகா கபடியாய் வேற்றுருவம் எப்பொழுதெடுப்பேனோ அப்பொழுது மரணமடைய வேண்டும்! என்றான். அவ்வாறே நடக்குமென்று பிரம்மதேவர் கூறிவிட்டு அந்தர்த்தானமானார். அவ்வரத்தால் இறுமாப்புற்ற அசுரன் மதுபானஞ் செய்து மதங் கொண்டு ஹிமாசலத்தையடைந்து சிவபெருமான் இருக்கும் குகையைக் கண்டு குகை வாசலில் காவலிருக்கும் வீரகனையும் உத்தாம குஸுமையையும் பார்த்து அவர்களோடு உரையாடினான் அவர்களால் பார்வதிதேவி தவஞ் செய்யச் சென்றிருப்பது முதலிய சங்கதிகளை அறிந்து கொண்டு இப்பொழுது சிவபெருமான் தன் மனைவியைப் பிரிந்திருப்பதால் மதன விரகமுற்றிருக்கலாமென்று நினைத்து நான் இவ்வலியவடிவுடன் உட்புகுவதானால் துவார பாலகர் தடுப்பார்கள் என்று கருதி அவ்வடிவை நீங்கி சர்ப்ப ரூபந்தரித்துத் துவாரபாலகரறிய வொட்டாமல் குகைக்குள் நுழைந்து விட்டான். பிறகு அவ்வசுரன் சர்ப்ப உருவத்தை நீக்கிவிட்டு திவ்யமான கவுரீ ரூபத்தை க்ஷண நேரத்தில் வகித்துக் கொண்டு, சிவபெருமான் அருகில் சென்று, விரகவாதனையுடைய மங்கை போல காம போதையோடு எதிர் நின்று, சந்திர சேகரா! நான் பார்வதிதேவி நான் அருந்தவஞ் செய்து பொன்னறிமான தேகம் பெற்று வந்திருக்கிறேன், நான் விரகமுற்றிருக்கிறேன். என்னைக் கலந்தணைய வேண்டும் என்று கொஞ்சினான்.
சிவபெருமானோ ஒன்றுமறியாமற்போன்று ஆகா! அப்படியா? நீ என் மனைவியா? வந்தனையா? என்று தம் திருக்கரத்தால் அந்தப் போலிப் பார்வதியைக் கட்டியணைத்து புறந்தொழிலியற்றிக் கிரீடிக்க முயன்றார். அப்போது மாயாவிகாரமான அந்த ஸ்திரீயிடம் மயனால் நிர்மிக்கப்பட்டு விளங்கும் ஆண் அம்சம் ஒன்றைக் கண்டார். மாயை செய்ய வந்தவன் மிக்க மதியீனனேயாம் இவனைத் திரிசூலத்தால் சங்கரிப்பேன்! என்று சிவபெருமான் நினைத்தார். ஆனால் அவ்வசுரன் விரும்பிய படியே தம்மைக் கூடியதாகத் திருப்தியடையட்டுமென்று திருவுள்ளங் கொண்டு விசேஷமாக ரதிக்கிரீடை செய்வார் போலத் தோற்றுவித்தார் ஸ்திரீ வேஷமுற்று வந்திருக்கும் அசுரன், இச்சமயத்தில் சிவபெருமானை எவ்வகையிலாவது சங்கரிக்க வேண்டும் என்று துன்மார்க்க எண்ணங்கொண்டு, இவருடைய ஆண் அம்சத்தை அறுக்கவேண்டுமென்று எத்தனித்தான். சிவபெருமான் அவன் கருத்தையுணர்ந்து தம்முடைய அந்த அம்சத்திலிருந்தே சூலம் பாசம் முதலியவற்றை உண்டாக்கினார் அதனையுணர்ந்த ஆடி அசுரன் தன் பெண் வடிவு நீங்கி ஆண்வடிவையடைந்தான். அவனைச் சிவபெருமான் அவ்வாயுதங்களாலடிக்க, அவன் சிவபெருமானை நோக்கி, சர்வேசுவரா! நான் துர்ப்புத்தியுடைய அசுரன் உம்மால் அடிபட்டேன் ஆனால் நான் மடிந்த செய்தியை என் தமையன் கேட்டு மகா பல பராக்கிரமசாலியாய், உம்மை சங்கரிக்கக் கருதி பார்வதிதேவியின் வடிவு கொண்டு, இங்கு வந்து உம்மை கொல்வான். அல்லது என்னைப் போலவே மடிவான்! என்று சொல்லிக் கொண்டே நிலமிசை விழுந்து உயிர் நீங்கினான். அவனது தேகத்தை அப்புறப்படுத்திப் புத்திரனாகிய நந்திதேவருக்கு இச்செய்தியையும் மாதர்கள் மாயையில் மிகவும் வல்லவர்கள் என்றுங்கூறி அவ்வசுரன் வழங்கிய வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சவுனகாதி முனிவர்களே! தவச்செயல் மேற்கொண்டிருந்த பார்வதிதேவி புடபாக சோபிதமான பொன் நிறமுற்றுக்கவுரி என்னும் பெயருடன் திருக்கைலாயகிரிக்குத் திரும்பி வந்தாள். உத்தாமகுஸ்மை என்னும் தோழியானவள் தன் தலைவியும் லோகநாயகியும் பசுமை நிறமொழிந்து பொன்னிறமுமாக விளங்கும் பார்வதிதேவியைப் பார்த்து சமீபித்து நமஸ்கரித்து தாயே! உன் நாயகராகிய சர்வேஸ்வரனைக் காமார்த்தனாகவொட்டாமற் காக்க எனக்குச் சக்தியில்லாமற் போயிற்று, உன் புத்திரனான வீரகேசனது அஜாக்கிரதையால் அதியவுவன மங்கை யொருத்தி சிவபெருமானை நெருங்கி விட்டாள். பிறை சூடிய நம் பெருமான் அவளுடன் அநேகடிதமாகக் கிரீடித்திருக்கையில் யானும் அந்த ரதி சின்னத்தைக்கண்டு நாணமுற்றேன்! என்று கூறினாள். அதைக் கேட்டதும் பார்வதிதேவி வீரகன்மீது கடுங்கோபங் கொண்டு அவனைச் சபிக்க வேண்டுமென்று கருதி கிழக்கு முகமாகத் திரும்பி நீர் கொண்டு ஆசமனீயஞ் செய்து, என் புதல்வனான வீரகன் பிற ஸ்திரீகளை உள்ளே அனுப்புவதில்லை என்று என்னிடம் நியமஞ் செய்துகொண்டு தவறிய குற்றத்தினால் நரை திரை மூப்பினையடையும் மானிட தேகமுற்று ஒரு பிரமாணனுக்குப் புத்திரனாகுக! என்று சபித்தாள். நான் இங்கே சிறுதுகாலம் இராததால இவ்வளவு காரியங்கள் நடந்தனவே என்று ஆச்சரியமுற்றுத் தன் அந்தப்புரத்தையடைந்து அங்கிருக்கும் தன் புத்திரனான வீரகனைக் கோபத்துடன் பார்த்தாள். வீரகன் பார்வதியின் கோபத்தைப் பார்வையாலேயே உணர்ந்து தாயின் திருவடிகளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தாயே! ஆடி என்னும் அசுரன் மாயையால் சர்வேஸ்வரன் நலிவுறாமல் பிழைத்தது உன் தவப்பலனே, நீயே பாக்யவதி! என்று கூறினான். அதைக் கேட்டதும் துக்கித்து, வீரகா! உன் அஜாக்கிரதையாலல்லவா இவ்வளவு தீமைகள் விளைந்தன. ஆதலின் நீ அஞ்ஞானத்துடன் உலகத்தில் சிலாதன் என்னும் வேதியனுக்குப் புத்திரனாகத் தோன்றி பன்னிரண்டு வருஷங்கள் அவனிடம் வளர்ந்து, பின்னர் சாபவிமோசனம் பெற்று அத்தேகத்துடனே எனக்கும் புத்திரனாவாய்! என்று கூறினாள். அவ்வாறே வீரகன் சிலாத முனிவன் புதல்வனாய் ஜெனித்து, தனக்கு நியமித்துள்ள பன்னிரு வருஷங்களும் தவஞ்செய்து கொண்டிருந்து கிரமமாகப் பார்வதிதேவியாரிடம் மீண்டும் புதல்வனாக வந்து சேர்ந்தான்.
இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, சுவாமி! வீரகன் சிலாத புத்திரனாகப் பிறந்த சரிதத்தையுஞ் சொல்லவேண்டும்! என்று கேட்டார்கள் சூதபுராணிகர் கூறத் தொடங்கினார். சிலாதர் என்றது காரணப் பெயர்! அவர் பிள்ளைப் பருவத்தில்கன் வீட்டிற்குப் பிச்சைக்கு வந்த வேதியனது அன்ன பாத்திரத்தில் அவ்வந்தணன் அறியாது ஒருசிறு கல்லை எறிந்தார். அந்தணன் அச்சிறு கல்லுடன் உணவைப் புசித்தார். அவர் வயது வளருந்தோறும் விவேகவானாகி ஞானம் முதலியன குறைவின்றிப் பெற்றுத் தமது தவப்பலனால் பரமலோகங்களைத் தோழர்களுடன் சென்று பார்த்துவந்தார். யம புரத்தில் அந்தகனது அரசிருக்கைக்கருகே ஒரு பெரும் பாறையிருப்பதை அவர் பார்த்து இதென்ன இந்நல்ல இடத்தில் பெரும் பாறையிருக்கிறதே! என்று விசாரித்தார். உலகத்தில் ஒருவன் சத்பாத்திரமான பிரமாணனது போஜனத்தில் அவிவேகத்தால் கல்லெறிந்தான். அதுவே இப்பெரும் பாறையாக வளர்ந்திருக்கிறது. அவ்வாறு கல்லைப் போட்டவன் மடிந்தபிறகு இவ்வளவையும் எங்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டு அவன் புசிக்க வேண்டும்! என்றார்கள். அப்பொழுது அவருக்கு இது தன்னுடைய செயலேயென்று தெரிந்து மனந்துடித்து, இதற்கு ஏதேனும் பரிகாரமுளதோ? என்று வினவினார் யமகிங்கரர். அவன் இவ்வளவு பாறையைப் பூமியிலேயே அரைத்துக் குடித்தால் இது கரையும்! என்றார்கள் அதைத் தெரிந்து கொண்டு சிலாத முனிவர் தம் நகரத்தையடைந்து வினையுடைய பாறையொன்றைக் குறிப்பிட்டு,. சிவயோகம்! என்று அதில் சிறிதுடைத்துப் பொடித்துக் கரைத்துக் குடிப்பதுமாக அம்மலைவடிவான பாறையைக் கரைத்து விட்டார். யமபுரத்தில் தனக்காக வளர்ந்திருந்த பாறைச்சிலையை ஹதஞ் செய்த காரணத்தால் சிலாதரெனப் பெயரெய்தினார். பின் ஒரு காலத்தில் அவர் சகல வேதாகமங்களையுணர்ந்த சிவஞானச் செல்வராயிருந்தும் புத்திரப் பேறில்லார்க்கு முத்தியில்லை என்பதை உணர்ந்தவராய் பிள்ளைப் பேற்றை விரும்பித் திருவையாற்றிற்குச் சென்றார். அங்கு அவர் அயனரி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவபெருமானுடைய திருமுன்னே நின்றுவணங்கி, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபித்துப் பஞ்சாக்கினி மத்தியில் ஒரு காலால் நின்று அநேக நாட்கள் தவம் செய்துகொண்டிருந்தார். சிவபெருமான் அத்தவத்திற்கிரங்கி ரிஷப வாகனத்தின் மீது பார்வதி சமேதராய் எழுந்தருளி வந்து, முனிவனே! நீ விரும்பிய வரத்தைக் கேள்! என்றார்.
எம்பெருமானே! அடியேனுக்கு ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டும்! என்று சிலாதர் பிரார்த்தித்தார். சிவபெருமான் மகிழ்ந்து, சகல சற்குணங்களும் நிரம்பிய ஒரு புத்திரன் பதினாறு வயதுடையவனாய் நீ செய்யும் யாக பூமியில் உழுபடையின் மூலமாக வெளிப்படுவான் என்று கூறி மறைந்தார். பின்னர் சிலாதமுனிவர் யாகஞ் செய்யப் பொன்னேர் பூட்டியாக சாலையை உழுதபோது அக்கொழுவின் மூலமாக ஒரு மாணிக்கப் பெட்டித் தோன்றியது. அதை முனிவர் திறந்து பார்த்தார். அதனுள்ளே நெற்றிக் கண்ணும், இளம்பிறைத் தவழுஞ் சடையும் நான்கு தோள்களுமாக விளங்குஞ் சிவமூர்த்தத்தைக் கண்டு மயங்கித் தோத்திரஞ் செய்து நின்றார். அப்போது சிவபெருமான் அசரீரியாக முனிவனே! அப்பெட்டியை மூடித்திற! என்று கூறினார் அவ்வாறே மூடித்திறந்த பொழுது அவ்வெம்பெருமான் ஓர் இளங்குழந்தையாகி அழுதார். முனிவர் அக்குழந்தையை எடுத்து தமது மனைவியிடம் கொண்டு போய் பாலூட்டி வளர்த்து செப்பேசுவரருக்குப் பதினாறு வயதுவர அவரது தாய் தந்தையர் தம் புத்திரரது அற்ப ஆயுளைக் குறித்து வருந்துவதை உணர்ந்து, அஞ்சாதீர்கள், நாம் அழியாவரம் பெறுகிறேன் என்று தேறுதல் கூறித் திருக்கோயிலை அடைந்து அயனரி தீர்த்த மத்தியினின்று அருந்தவஞ் செய்தார். சிவபெருமான் ரிஷபவாகனத்தின் மேல் உமாதேவியாரோடு எழுந்தருளி செப்பேசுவரனுக்கு நித்திய தேகந்தந்து அவரது திருமுடியின் மேல் திருக்கரம் வைத்து தீøக்ஷ புரிந்து அவருக்குரிய பண்டைய சாரூப்பியமளித்து, திருநந்திதேவர் என்று அபிஷேகத் திருநாமஞ் சாத்தி, குருசதானம், விளங்க வேத சிவாகமங்களைச் சனத்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசிக்கக் கட்டளையிட்டார். பிறகு நந்திதேவனுக்கு சுயசை என்னும் கன்னிகையைத் திருமணம் புணர்த்திச் சிவகணங்களுக்குத் தலைவராயிருந்து சகல சிவாலயங்களிலும் அதிகாரஞ் செலுத்தும்படி சுரிகையும் பிரம்பும் கொடுத்தருளினார். முனிவர்களே! நந்தி எம்பெருமான் பார்வதி தேவியாருக்கு புத்திரராகத் தோன்றிய சரிதமுஞ் சொன்னேன் இது நிற்க! பொன்னிறத்துடன் வந்த பார்வதிதேவி திரிபுரதகனராகிய சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்தாள், சிவபெருமான் முன் ஆடி என்னும் அசுரன் கூறியபடி அவன் தமையன் வரவில்லை பார்வதியே வந்தாள் என்று சந்தோஷத்துடன் வரவழைத்து ஆனந்தித்திருந்தார்.
சிறிது காலஞ்சென்ற பின் தாருகாவன முனிபத்தினிகள் பேரழகிகளாய், கற்பில் மேம்பட்டு இறுமாப்பு அடைந்தார்கள். அவர்கள் கற்பையழித்துக் கர்வபங்கம் செய்ய வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தார். பிரதம கணங்களுடன் பச்சைகர்ப்பூரம் முதலியன கூட்டிய விபூதியை உடல் முழுதும் உத்தூளனமாக அணிந்து, திகம்பரராய்(நிர்வாணராய்) மயிற்பிஞ்ச புஞ்சங்களைக் கையில் தாங்கி யோகதண்டத்தில் கட்கம் கதை முதலியன கட்டித் தொங்கவிட்டுப் பூர்ணச் சந்திர கண்டமோ வென்று சொல்லத்தக்க கபாலத்தைக் கரத்திலேற்று காந்தியும் யவுவனமுற்றுச் சென்றார். அவர் ஸ்தீரிகளைப் பிரமிக்கச் செய்து புன்சிரிப்பாகிய சந்தோஷத்தால் விநோதங்கள் காட்டிக் கொண்டு ஆகாயத்தில் தோரணமாகக் கட்டிய நீலமலர்களோ வென்று சொல்லத்தக்க மனோரம்மியமான திருமுகமும், முனிமங்கையர் மோக முறும்படிப் பார்த்து அசைந்து கொண்டிருக்கும் மதர்த்துப் பரந்த விழிகளும், பூரித்த தேகமும் செங்கமலம் போன்ற கரங்களும், பாதங்களும், நல்ல மலர்மாலைகளும், ஆபரணங்களுமுடையவராய்த் தாருகாவனத்தை அடைந்தார். பதினான்கு தோஷங்களற்றதும், மந்தரதார மத்திம ஸ்வரங்களுடன் கூடியதும், பலவகைத் தாளங்களையுடையதும், ஆரோகண அவரோகணாதி மூர்ச்சைகளையுடையதும் இசை ஏழினையுடையதுமாய்ப் பலவித பாஷா பேதங்களோடு கூடிய தோற்கருவி, துறைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக் கருவியோடு கூடிய தாயுள்ள கானத்தைப் பூதகணங்களோடு பாடிக்கொண்டும் சிறிது நேரம் ஆடிக்கொண்டும் ஆச்சரியமாகச் சிரித்துக் கொண்டும் நதிகளின் கரையில் வசித்துக் கொண்டும் தன்கணங்களிலொருவராக வந்திருக்கும் விஷ்ணுமூர்த்திக்குத் தன்சாந்த ரஸத்தோடு கூடிய நாட்டியத்தைக் காட்டிக் கொண்டுமிருந்தார்.
அவ்வாறிருக்கையில், வசிஷ்டர் மனைவியான அருந்ததியைத்தவிர மற்ற ரிஷிபத்தினிகள் அனைவரும் இந்நிச்சலமான வனத்தில் யாரோ ஒருவன் ஒரு கிராத ஸ்திரீயுடன் வந்து மதுரமான திவ்யப் பாடல்களைப் பாடிக் கொண்டு முனிவர்கள் ஆச்சிரம மத்தியில் வெட்கமின்றி பிச்சையெடுக்கிறான். அழகோ அற்புதமானது! என்று ஆலோசித்தார்கள் அப்பத்தினிகளில் சிலர் மோக மயக்கத்தால் மூர்ச்சித்தார்கள். சிலர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பெருங்களிப்பால் கண்ணீர் விட்டார்கள். சிலர் காம விகாரத்தால் காம சேஷ்டை செய்து கொண்டுருந்தார்கள். சிலர் காமத்தால் உடை சேர்ந்தார்கள். இவ்வாறு அந்த ஸ்திரீகள் மன்மதாவஸ்தைப் பட்டுக்கொண்டு வசிஷ்ட பத்தினி நீங்கலாக மற்றெலோரும் காமக்கடலில் ஆழ்ந்து திகம்பரரோடு எவ்வாறாவது பேசவேண்டுமென்று சில வார்த்தைகள் பேசலானார்கள். ஓ சுந்தரா! ஏன் இந்த தவவேடம் தரித்தாய்? இத்தவத்தால் யாது பயன்? தவத்தை போக சித்தி கருதிச் செய்கிறது உலகவழக்காதலின் அவ்வகைய போக சித்தியும் உனக்குப் பரதாரங்களாகிய எங்களால் சித்தியாகும் புண்ணியஹீனனாகிப் புருஷனை பரஸ்திரீகள் ஒரு போதுங் கோர மாட்டார்கள். நாங்கள் உன்னிடத்தில் பெருவிருப்புடையோமாதலின் எங்களை நீ புறக்கணிக்க வேண்டாம், அநேக புண்ணியத்தால் கிடைக்க வேண்டியது உனக்குச் சுலபத்தில் கைகூடும்போது விட்டுவிட வேண்டாம். திவ்விய தேகமுடைய உன்னைக் காணுந்தோறும் எங்களுக்கு கிருபை உண்டாகிறது! இதுபோலப் பல பேச்சுகளைப் பேசிக் கொண்டும் இறைவன் பிக்ஷõர்த்தமாகச் செல்லுகையில் அவரைப் பின் தொடர்ந்தும் ரிஷிபத்தினிகள் செல்லலானார்கள். அத்தாருகவன ரிஷிகளோ தங்கள் மங்கையர் கற்புநிலை தவறியவற்றை அறிந்து மனந்தாளாராய் பலவித சாப மொழிகளைப் பகர்ந்தார்கள். அவை சிவபெருமானைச் சிறிதும் நெருங்கவில்லை. ஆனால் வசிஷ்டரும் அருந்ததியும் திகம்பரராக வந்தவர் சிவபெருமானென்றும் உடன் வந்த மாது-மலையரசன் புத்திரி என்றும் கணங்களாக வந்தோர் விஷ்ணுவாதி தேவர்களென்றும் உணர்ந்து பலவிதமாகப் பூசித்தார்கள். சிவபெருமான் அகமகிழ்ந்து அருந்ததியை நோக்கி, உன் கணவன் வாலிபனாகுக என்று வரங்கொடுத்தருளினார். தாருகவன முனிவர்கள் திகம்பரனாகிய சிவபெருமானை ஒன்றுஞ்செய்ய இயலாதவர்களாய் தங்கள் சாபங்கள் பலியாவாயினும் அதற்குப் பதிலாகப்பலவித ரோகங்களாலும் வறுமையாதிகளாலும் துன்பங்களாலும் பீடிக்கப்பட்டவர்களாய் யாது செய்வோம் என்றும் வசிட்ட முனிவரையும் பிரமதேவரையும் வினவி அது சிவ நிந்தையின் பலன்! என்று உணர்ந்து சிவலிங்கார்ச்சனை செய்து சிவபெருமானின் திருவருளை அடைந்தார்கள்.
முனிவர்களே! இதனால் காமஇச்சை சிவபெருமானைப் பாதித்ததென்று ஒருபோதுஞ் சொல்லக் கூடாது சப்தாதி விஷயங்களும், மாயா சம்பந்தமான போகங்களும் மாயையும் அச்சர்வேசுவரனிடத்து லயமடைய வேண்டியனவே யாதலின், காமரூபமான சாஞ்சல்லிய தோஷமானது ஆத்மஸ்வரூபியான பரமசிவத்துக்குத் தோஷமாகக் கொள்ளப்பட்டது உலகத்தில் பதிவிரதா ஸ்திரீகளும் சித்தர்களாகிய புருஷர்களும் இருவரும் இல்லற தருமம் நடத்தி, சற்பாத்திரமாகிய அதிதிகளைப் பூஜிக்கிறார்களேயன்றி நீசர்களாயும் தனவான்களாயும், அஞ்ஞானிகளாயும், மோக்ஷஞானமில்லாதவர்களாயும், ரோகவான்களாயும், பதிதர்களாயும் காமக் குரோதாதிகளாயும் சீதோஷணங்களாலும் எப்போதும் துக்கமனுபவித்துப் புத்திர வாஞ்சை முதலிய விருப்பத்தால் மனோசஞ்சலப்பட்டுக் கொண்டு அதிதி பூஜை முதலிய சத்கருமங்களைச் செய்யாது காமத்தாற் பீடிக்கப்பட்டிருக்கும் தீயோரைப் போன்று இல்லறத்தை மேற்கொண்டவர்களல்லர் உலகத்தில் கிரகஸ்தாச்சிரமத்தைச் சார்ந்தவர்களில் சிவபெருமானையே அதிதியாகக் கொண்டு பன்னிரண்டு வருஷகாலம் ஆசனம் போஜனம் ஸ்நானம் முதலியவற்றினால் உபசரித்தவர்கள் வசிஷ்டரையன்றியாவர் இருக்கின்றனர்! சிவபெருமானைக்கண்டு அவர் அழகில் மோகம் கொள்ளாத ரிஷிபத்தினிகளில் அவ்விசிஷ்ட முனிவர் மனைவியான அருந்ததியையன்றி யார் இருக்கிறார்கள்? இப்பொழுதும் உலகத்தில் விவாக காலத்தில் மணமக்கள் இருவரையும் அருந்ததியைப் பார்க்கச் சொல்லி, இவ்வருந்ததியைத் தரிசித்தால் உனக்கு மகாபதிவரதா ஸ்வரூபமும் புத்திரபாக்கியம் முதலியனவும் உண்டாகும். இந்த அருந்ததி பூர்வத்தில் சிவபெருமான் யவுவன வேடந்தரித்துத் திகம்பரராய் வந்த காலத்திலும் மனங்கலங்காதக் கற்பினையுடையவள் ஆதலின் அவ்வருத்ததியைத் தரிசித்து என் கணவன் எப்பொழுதும் என்னிடத்தில் அன்புடையவராகவும் தனவானகவும், பிற மகளிரைக் கலத்தலின்றி என்னையே கூடிவாழ்ந்து சந்ததி விருத்தியை உண்டாகவுந் தயை புரியவேண்டும் என்று கூறச்செய்து அவ்விருவரையும் நமஸ்கரிக்கச் செய்கிறார்கள். அவ்வருந்ததியின் கற்பின் பெருமையை யாதென்று சொல்லத் தகும்! சிவபெருமானும் விஷ்ணுமூர்த்தியும் பிரமதேவனும் மற்றெல்லோருங் காமத்தின் வழி மனஞ் செலுத்தினவர்களேயாவர். மகரிஷிகளே! எல்லா முனிவர்கட்குஞ் சற்குருவும் பார்வதிநாயகனும் மதனவிகார சூனியனும் தேவ தேவனுமாகிய சிவபெருமானுடைய லீலா காம விகாரம் முழுவதையும் உங்களுக்குச் சொன்னேன் இன்னுஞ் சிலவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
11. காமனுக்கு வசப்பட்டவர்களின் கதைகள்
முனிவர்களே! இந்திரன் பூர்வத்தில் யக்ஷர் தானவர் தைத்தியர் முதலானோரை ஜெயித்து தேவர், அசுரர் உரகர் முதலானவர்களைத் தன் சுவாதீனஞ் செய்துகொண்டு புலோமசை மனைவியோடும் பேரழகு வாய்ந்த எண்ணிறந்த அப்சரக் கன்னிகளோடும் இன்பந்துய்த்து, மூவுலகங்களையும் அரசு செய்து காமவிகாரத்தால் மோகமுற்றான். தவத்தால் என்பு மாத்திரமாயிருக்க இளைத்த தேகமுடைய கவுதம முனிவருடைய தர்மபத்தினியான அகல்யா தேவியை அனுபவிக்க இந்திரன் விரும்பி பர்ணசாலையில் அகல்யா தனித்திருக்கும் போது இந்திரன் அம்முனிவரை வஞ்சித்து அகல்யாவிடம் காமசுகத்தை அனுபவித்து, அவளை விட்டுப் பிரியமுடியாமல் மோகசித்தத்தால் அங்கேயே இருந்தான். இந்திரன் அகல்யைக் கூடிமகிழ்ந்து கொண்டிருக்கையில் கவுதம முனிவர் பழம், கிழங்கு முதலியனவற்றைச் சேகரஞ் செய்து கொண்டு தன் பர்ணசாலைக்குத் திரும்பி வரவே, அகல்யை ஐயோ! சர்வேசவரனே போன்ற என் கணவனை விட்டு மதியீனமாகக் கற்பிழந்தேனே! என்று பயமுற்று ஒன்றுஞ் செய்ய முடியாமல் ஸ்தம்பாகாரமாக நின்றாள். கவுதமர் ஆச்சரியமுங் கோபமுங் கொண்டார். இந்திரன், மகாமுனிவரின் மனைவியைக் கூடிக் கலந்தேனே! என்று பயமும் நாணமுமுற்றுத் துண்ணென்றெழுந்து சென்றான். கவுதமர் பிரளய காலாக்னி ருத்திரர் போலக் கொதித்து அடா துஷ்டா என்னை வஞ்சித்து என் மனைவியை நீ அந்தரங்கமாகக் கூடி மகிழ்ந்தாய் காமாதுரத்தாற் பரதார சம்போகஞ் செய்த உனது பீஜங்கள் நிலமிசை விழக் கடவன? என்று தன் கரத்தே வைத்திருந்த யோகதண்டத்தைப் பூமியிலடித்துச் சபித்தார். அவ்வண்ணமே இந்திரனுடைய விருஷணங்கள் விழுந்து போயின அதனால் அவன் ஆண்மையற்றவனானான். தேவர்கள் யாவருங் கூடி மேஷத்தின் அண்டத்தைக் கொண்டு வந்து இந்திரனுக்கு அண்டமாகச் சேர்த்து வீரிய வந்தனாகச் செய்வித்து மேஷபிருஷ்ணன் என்ற காரணப் பெயர் சூட்டினார்கள். இவ்வண்ணம் இந்திரன் மீண்டும் வீரிய வந்தனாகச் செய்யப் பட்டதைக் கேள்வியுற்ற கவுதம முனிவர், இவன் ஓர் பெண் உறுப்பைக் கருதி இவ்வளவு பாடுபட்டமையால் இவன் உடலெல்லாம் பகக்குறியும் (பெண் உறுப்பும்) இலங்கையிலிருக்கும் இராவணன் முதலிய ராக்ஷஸர்களால் சுமார் இலக்ஷ வருஷங்கள் சிறையிருப்பும் பெறுக என்று சபித்தார். அச்சாபத்தால் தேவேந்திரனுக்கு இந்திரப்பட்டம் ஸ்திரமில்லாததாயிற்று. பின் அதிரூபவதியாய்ப் பரபுருஷனைக் கூடி மகிழ்ந்த அகல்யையை, கவுதமர் பார்த்து பெண்ணே! நீ கல்லைப் போல பிறபுருஷன் கையில் கிடந்தாயாகையால் அப்படியே கல்லாகுக என்று சபித்தார். அகல்யை தன் கணவரைப் பணிந்து ஸ்வாமீ! இச் சாபம் எனக்கு எப்பொழுது நீங்கும்? அதை விரைவில் விலகும்படி கிருபை செய்தருள வேண்டும் என்று கேட்டாள்.
அசுரகுலமாகிய காட்டிற்கு அக்கினியாகிய திருமால் இராமாவதாரஞ் செய்யப் போகிறார். அக்காலத்தில் அவருடைய ஸ்பரிசத்தால் உன் நிஜவடிவை நீ மட்டும் அடைவாய் என்று சாபானுக்கிரகஞ் செய்ய அகல்யை அவ்வண்ணமே பாறையாய்க் கிடந்தாள். இந்திரனும் தான் பெற்ற சாபப்படி உடல் முழுதும் பெண் உறுப்புடையவனாகி காணுதற்கும் அருவருப்புடன் விஷ்ணு மூர்த்தியை ஆராதித்து அவர் கிருபையால் அக்கவுதமர் அனுக்கிரகிக்க அவை பிறர் கண்களுக்குக் கண்களாகவும் தன் கண்களுக்குமட்டும் குறிகளாகவும் காணுமாறு விமோசனம் பெற்று மகிழ்ந்தான். இந்திரன் கவுதம முனிவரால் இவ்வளவு துன்பத்தை அனுபவித்தும் புத்தி வராமல் மீண்டும் ஒரு காலத்தில் சுõமார்த்தனாகி பாரிக்ஷிதன் என்னும் அரசன் மனைவியும் ரூபலாவண்யங்களுடையளுமாகிய வபுஷ்டமை என்னும் பெயருடைய ஸ்திரீயைக் கண்டு அவளது இளமை வளத்தை மனத்திற் கொண்டான். எவ்வகையிலேனும் நான் இவளைக் கூடி மகிழ வேண்டும் என்று கருதிப் பலகையாக முயன்றும் பயனுறாது இறுதியில் மானிடதேகமெடுத்து அவளது அந்தப்புறத்திற் சென்று பலவிதமாகச் சமயம் பார்த்து வஞ்சிக்க யத்தனித்துத் தன் கோரிக்கை முடிவுறாது வருந்திக் கொண்டிருந்தான். அப்போது வபுஷ்டையின் கணவன் அசுவமேதயாகஞ் செய்ய உத்தம லக்ஷணம் அமைந்த யாகப் பசுவாகிய அப்புரவியைக் கொல்வதை இந்திரன் பார்த்து இதுவே நல்ல சமயம் இதை விட்டால் இனிக்கிட்டுமா காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கருதி, உயிர் நீத்த அப்புரவியின் தேகத்திற் புகுந்து நின்றான். யாக முறைப்படி இறந்த குதிரையின் களேபரத்திற்கும் யாககர்த்தாவின் மனைவிக்குந் தேகசம்பந்தஞ் செய்ய வேண்டி அவ்வாறு செய்ய குதிரையை அவ்விரஜஸ்திரீயோடு சேர்த்தார்கள். அப்போது குதிரையுட் பிரவேசித்திருந்த இந்திரன் தன் விருப்பம் கைகூடிற்று என்று சந்தோஷித்து அவ்வபுஷ்டமையைக் கூடித் திருப்தியடைந்தான். அந்த யாகத்திற்கு பசுவாக வந்த புரவியில் இந்திரன் புகுந்து விபசாரஞ் செய்தானாகையால் அவ்யாகம் பலனற்றதாயிற்று. இந்திரன் காமத்தால் இத்தகைய அடாத காரியங்களையுஞ் செய்தான்.
சவுனகாதி முனிவர்களே! இன்னும் பிறதேவர்களின் காமச் செயல்களையுஞ் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் அக்கினிதேவன் சப்தருக்ஷிகளின் மனைவியார் மீது மோகித்துக்காம விகார முற்றான். அம்மாதர்கள் தனக்குச் சுகங்கொடாமையால் விரக்தனாகி வனத்தையடைந்து மன்மத வேதனையால் தவித்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் தெய்வீகமாகவும் விதிவசமாகவுஞ் சம்பவித்த கிருத்திகைப் பெண்கள் அறுவரும், மகாபதி விரதையாகிய அருந்ததி நீங்கலாக ஏனைய ரிஷிபத்தினிகள் அறுவரது வேடந்தாங்கி, அக்கினி தேவனுடன் கூடி, அவனைக்காமதுரத்தினின்றும் தப்பிப் பிழைக்கச் செய்தார்கள். அக்கினியும் ஷட் கிருத்திகைகளுடன் கூடிக்களித்தது போல, தன் மனைவியாகிய ஸ்வாகாதேவியுடன் கூடியக்காலத்திலும் அவ்வளவு இன்பம் அனுபவித்ததில்லை சிறிது காலம் சென்ற பின்னர், தென்திசையிலுள்ள மாஹீஷ்மதி என்னும் பட்டணத்தை வேதியவடிவுடன் அடைந்து, அப்பட்டணத்தின் அரசனான நீலன் என்பவனின் அதி சவுந்தரிய யவுவனமுள்ள மனைவியருடன் கூடி மகிழக்கருதினான். அதையறிந்ததும் அரசன் நீலன் உடனே அக்கினி தேவனைப் பிடித்துத் தன் ஊழியக்காரனாகக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான். அக்கினிதேவன் அவ்வாறு அநேக காலம் இருந்துகொண்டு ஒரு சமயம் மாயையால் ஜ்வாலை வடிவமாகப் புறப்பட்டு விருப்பின் படி போனான்.
இனி வாயுதேவன் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் உலகங்களுக்கு ஆயிர்ப்பூதமும் மகா பலமுடையவனுமாவான். தாவர சங்கமங்களாகிய பிரபஞ்சத்தின் தேகத்தில் பிராணன் அபானன் வியானன், உதானன் சமானன் என ஐவகையாக இயங்குபவன். இந்திரனின் உலகம் முழுவதும் சஞ்சரிப்பவன் திதிபுத்திரனாக இருந்தும் இந்திரனின் இரக்கத்தால் தெய்வத்தன்மை பெற்றவன். எப்போதும் யோகியரால் பரமாத்மஸ்வரூபம் என்று தியானிக்கபட்டவன். நித்தியன் ஜகத்சிரேஷ்டன் அத்தகைய வாயுதேவனும் காமத்தால் பீடிக்கப்பட்டு பிருமாவின் பவுத்திரனான குசனாபன் என்பவனின் புத்திரிகள் நூற்றுவரைக் கண்டு மோகித்தான். அவர்களது இளமை கட்டழகு தேககாந்தி, நாணம் ஆகியவற்றைக் கண்டு அவர்களை எப்படியாயினும் கூடியனுபவிக்க வேண்டும் என்று காமம் மிகவும் கொண்டு, பலவித உபாயங்களையும் கையாண்டான். ஆனால் அவை எதுவும் பயன்தரவில்லை நூறு கன்னிகைகளும் ஒரே மாதிரியான குணப்பண்புகளோடும் அழகோடும் விளங்கினார்கள். எனவே வாயுத்தேவன் அவர்கள் முன்னால் தோன்றி நூற்றுவராக இருக்கும் கட்டிளம் பெண்களே! வாயுதேவனான நான் காற்றுக்கும் அதிபன் மூவுலகில் உள்ளவர் அனைவராலும் போற்றிப்பூஜிக்கப்படுபவன். பரமாத்ம ஸ்வரூபி! ஜகத்சிரேஷ்டன் கிழத்தன்மையும் மரணமும் இல்லாதவன் சகல பொருட்களையும் அனுபவிப்பவன் எல்லாஜந்துக்களையும் படைத்தவன் எல்லாப் பிராணிகளுக்கும் ஜீவபூதமாக இருப்பவன். அமிர்தமயமானவன் இத்தகைய சிறப்பு வாய்ந்த நான் உங்களிடம் யாசிக்கிறேன் நான் மிகவும் காமவயப்பட்டுத் தாபம் தணிவதற்காக உங்களிடம் நேரில் வந்திருக்கிறேன் எனக்கு உங்கள் தேகங்களைப் போகார்த்தமாகக் கொடுக்க வேண்டும் என்றான். அதைக் கேட்டதும் நூறு பெண்களும் கலகலவென்று சிரித்து ஏளனம் செய்து நீ எத்தகைய சிறப்புடையவனாயினும் பரமாத்மாவேயானாலும் எத்தகைய சிறப்புடன் பிறந்திருந்தாலும், எந்தப் பரமாத்மாவுக்குப் ப்ரீதியான பக்தனாயினும் பரமாத்மாவின் அபரரூபியாயினும் காரிய நிமித்தமாக ஜனித்தவனாயினும் ஆகுக ஓ, கிழவனே! நீ எங்களுக்குக் கணவனாக வேண்டாம் எங்கள் தந்தையின் கட்டளைப்படி நாங்கள் கன்னிப் பெண்களாகவே இருக்கிறோம். ஆகையால் எங்கள் தகப்பனார். எங்களை யாருக்குப் பத்தினிகளாகக் கொடுப்பாரோ அவருக்கே நாங்கள் வசியமாவோம்! என்றார்கள். அதைக்கேட்டதும் வாயுத்தேவன் கோபங்கொண்டு அவர்களையெல்லாம் குப்ஜர் (சிறிய தேகமுடையவர்) களாகவும் விகாரரூபிகளாகவும் ரோகிகளாகவும் மாறும்படி செய்தான். சில நாட்கள் சென்றன, அப்பெண்கள் பிதாமகனான குசமுனிவர் அவர்களது சரிதத்தைக் கேட்டு, தம் தவவலிமையினால் அவ்வனிதையர்கள் யாவரையும் முன்பு இருந்த சவுந்தரியத்தோடும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்தார். பிறகு அக்கன்னிகைகளை, வாயுதேவனுக்கேத் திருமணம் செய்து கொடுத்தார் இது நிகழ்ந்தராஜ்ஜியம் இன்றும் கன்னியாகுப்ஜம் என்று வழங்கப்படுகிறது.
முனிவர்களே! இனி சூரிய பகவானின் விஷயத்தைச்சொல்கிறேன் அவன் பிரளய காலப்பெருநெருப்பைப் போன்றவன். பிரசண்டமான கிரணங்களையுடையவன் பயங்கர ரோமங்கள் நிறைந்த நெருப்புமலை போன்ற விழிகளும் ஆகாயத்தில் வசித்தலும் யோகியரது தியானத்தால் புகழும் பிரமாதி தேவர்களால் சதா அர்ச்சனையும் கொண்டவன் அத்தகைய சூரியபகவானோ துவஷ்டா என்பவருடைய புதல்வியான சஞ்ஞிகையைக் கண்டு காம வசப்பட்டு அவளையே, மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையால், பலவிதமான இன் சொற்களால் சஞ்ஞிகையிடம் கெஞ்சிக் கூத்தாடினான். ஆனால் சஞ்ஞிகையோ சூரியனின் உருவத்தை உற்றுநோக்கி நீ தீக்ஷண்யமான தேகமுடையவன் ஆகையால் உன்னோடு கூடிச் சங்கமிக்க எனக்குச் சக்தியில்லை என்றாள். சூரியனோ பெண்ணே! நான் விரும்பும் வடிவை எடுப்பேன்! என்றான். உடனே சஞ்ஞிகை, புன்னகை செய்து நீ என் விருப்பத்திற்கு இணங்குவது உண்மையானால் என் தந்தையால் செய்யப்படும் சாணையில் ஏறவேண்டும்! உன்னை என் தந்தையும் தேவர்களும் சாணைபிடித்து, உன்னுடைய விசேஷமான தேஜஸை நீக்குவார்கள். அதனால் மந்ததேஜஸை அடைவாய் அப்போது நான் உன்னை மணப்பேன்! என்றாள் காமம் மிகவும் கொண்ட சூரியன் சம்மதித்தான். சாணையில் ஏறினான் தேவர்களும் துவஷ்டாவும் அவனைச் சாணைப்பிடித்துத் தேய்த்தார்கள். அப்போது சூரியனின் உடலிலிருந்து உதிர்ந்த பொடிகளைக் கொண்டு தேவர்கள் சுதர்சனம் முதலான ஆயுதங்களைச் செய்து கொண்டார்கள், அதன் பிறகு சூரியனை சஞ்ஞிகை மணந்து சிறிது காலம் இன்பத்தின் திளைத்து வந்தாள். மீண்டும் சூரியனின் உடல் வெப்பத்தைச் சகிக்கமுடியாமல் பெண்குதிரையின் வடிவமெடுத்து விலகி ஓடினாள். அதைக் கண்டதும் சூரியனும் ஆண் குதிரையின் வடிவமெடுத்து மோகத்தோடு பெண் குதிரையான சஞ்ஞிகைகையப் பின் தொடர்ந்து சென்றான். அதை சஞ்ஞிகை பார்த்ததும் தன் பெண் அம்சத்தை மறைத்துக் கொண்டு எதிர்முகமாக நின்றாள். அப்போது சூரியனின் தேஜஸ் பெண் குதிரையின் முகத்தில்விழ, அதை அவள் நாசிகாரந்திர வழியாக ஆக்கிரணித்தாள். அதனால் அவளுக்கு நாசிவழியாக இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள், அவர்களே தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள்! பிறகு, சில காலஞ்சென்றதும் சஞ்ஞிகை, வைவஸ்வதமனு, யமன், யமுனை ஆகியவர்களைப் பெற்றெடுத்தாள் பின்னரும் சூரியனது உடல் சூட்டைத் தாங்கமுடியாமல் தன் சாயையைத் தந்திரமாக நிறுத்தினாள் சூரியன் காமத்தால் சாயையைக் கூடியனுபவித்தான். அதனால் சாவணி மனு சனி என்பவர்களையும் பத்திரை என்ற பெண்ணையும் சாயாதேவி பெற்றெடுத்தாள், பிறகு சூரியன் ராஜகன்னிகையான குந்தியால் பிரார்த்திக்கப்பட்டு காமார்த்தனாக அவளுடன் கூடியனுபவித்தான் அதன் விளைவாக கவசகுண்டலங்களுடன் கூடிய ஒரு புத்திரன்(கர்ணன்) பிறந்தான். அப்புத்திரனை கன்னித்தாயான குந்தியிடமே விட்டு விட்டுச் சூரியன் போய் விட்டான்.
இனிச் சந்திரன் விஷயத்தைக் கூறுகிறேன். பாற்கடலைக் கடையும்போது அத்திரி முனிவரின் மனைவியான அநுசூயா தேவியின் கர்ப்பத்திலிருந்து தோன்றி உலகத்துக்கெல்லாம் ஆனந்தகரத்துடன் விளங்குபவன் சந்திரன். அவன் விஷ்ணு மூர்த்தியால் பயிர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பிராமணர்களுக்கும் பிரபுத்தன்மை பெற்று மகாபல பராக்கிரமசாலியாய் இராஜசூய யாகஞ்செய்து, தக்ஷனுடைய குமாரிகளான இருபத்தேழு பெண்களையும் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் அவ்விருபத்தி ஏழு பத்தினிகளிடமும் சமமான அன்பு காட்டாமல்,அவர்களில் ரோகிணி என்பவளிடம் மட்டுமே அளவிலாத காமம் கொண்டு அவளிடமே எப்போதும் அதிகமாகக் கூடிமகிழ்ந்தான். அதனால் தக்ஷன் அவனை சபித்தான் அந்தச் சாபத்தால் சந்திரன் க்ஷயரோகம் அடைந்தான் கிருஷ்ண பக்ஷத்தில் தேய்பவனாகவும் எப்பொழுதும் சுரதப் ப்ரீதியுடையவனாகவும் இருந்தான். அவன் வாலிப வயதில் பிரஹஸ்பதி முனிவருடைய தர்ம பத்தினியான தாரையை குருபத்தினி என்றும் கருதாமல் காமத்தால் களவாடிச் சென்றான். அதற்காகப் போர் புரிந்து இந்திராதி தேவர்களின் விருப்பப்படித் தாரையைப் பிரஹஸ்பதியிடமே திருப்பியனுப்பி விட்டுத் தன்புத்திரனாகத் தாரையிடம் தோன்றிய புதன் என்பவனை மட்டும் எடுத்துக் கொண்டான். இனி அகோர தவஞ்செய்த மித்ரா வருணர் என்ற இரு ரிஷிகளின் விஷயத்தைச் சொல்கிறேன். ஊர்வசி என்ற அப்சரஸ் விஷ்ணுவின் தொடையிலிருந்து தோன்றி யாகங்களுக்கு உதவியாக இருந்து வந்தாள். அந்த ஊர்வசியின் அதிமதுரமான மோகன அழகைக் கண்டு மித்ரா வருணர் இருவரும் அளவிலாத மோகம் கொண்டார்கள். அதன் விளைவாக ஒருவர் தமது ரேதஸைக் கும்பத்திலும் மற்றொருவர் ஜலத்திலுமாக விட்டார்கள். ஜலத்திலிருந்து வசிஷ்டர் தோன்றினார் கும்பத்திலிருந்து சப்தசமுத்திரங்களையும் ஆசமனீயம் செய்யத் தக்க வலிமையும் வடவாக்கினி போன்ற காந்தியுமுள்ள அகஸ்தியர் தோன்றினார் முனிவர்களே, இதுவரையில் நான் உங்களுக்கு இந்திரன், அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், மித்திரா, வருணர் ஆகியோர் காமங்கொண்டு வருந்திய சரிதங்களைச் சுருக்கமாகச் சொன்னேன், இனிமேலும் சொல்கிறேன் கேளுங்கள்.
12. முனிவர்களின் மோகதாபக் கதைகள்
மாதவர்களே! மென்மைத் தன்மை, உற்சாகம், பகவத் ஸ்மரணை, புஷ்டி, விரக்தி, சாந்தி ஸ்நானதானம் முதலியவற்றாலும் பிரம்மச்சரியம் முதலிய விரதங்களாலும் மேம்பட்டு விளங்கிய தக்ஷப்பிரஜாபதியும் பூர்வகாலத்தில் காமாந்தகாரனாக இருந்து, வித்யுத்பரணை என்ற பரஸ்தரீயை விரும்பினான். எல்லாவற்றிலும் விரக்தியும் எப்போதும் பகவத் ஸ்மரணையும் உள்ள நாரத முனிவருங்கூட அந்த வித்யுத்பரணை என்பவளைப் பிரமலோகத்தில் கண்டு காமங் கொண்டார். பிரமதேவனும் தன்னிடத்தில் சிறிதும் விருப்பமில்லாத அவளைக் கண்டு மோகித்தார். அவள் பிரம்மனை விரும்பவில்லை எனவே விக்யுத்பரணை கபிலவர்ணமுள்ள பசு வடிவம் கொண்டாள். அப்பொழுதும் நான்முகப்பிரமன் அவளை விடாமல் மோக வேட்கையால் துன்புறுத்தினார். அதன் பின்னும் தன் காமத்தைப் பிரமனால் அடக்க முடியவில்லை, அவர் படைத்த செல்வியான ஸரஸ்வதிதேவியையே மனைவியாக்கிக் கொண்டு மானச, வாசக, காயகச் சிருஷ்டிகளைச் செய்தார். காசிபர் வம்சத்தில் தோன்றிய மரீசி என்னும் மாமுனிவர் காம இச்சை வசப்பட்டு தக்ஷப்பிரஜாபதியை அடைந்து. அவரது புதல்வியைத் தமக்குக் கொடுக்கும்படிக் கோரினார். தக்ஷன் தன் புதல்விகளில் பதின்மூவரை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். மரீசி, அவர்களுடன் பலவிதமாகச் சுகித்து இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பூரணமாக விளங்கும் தேவாதிகளான புதல்வரைப் பெற்றார்.
மகாயோகியும் பிரளய காலாக்கினி போன்ற தேஜஸ் உள்ள வரும் சமுத்திர ஜலத்தை உளுந்து அளவாகக் கொண்டு, ஆகமனஞ் செய்தவரும் விந்நியமலையின் இறுமாப்பை அடக்கியவரும் வாதாபி என்ற வலிய அசுரனை விழுங்கியவருமான குறுமுனி அகஸ்தியருங் கூட காமவிருப்பத்தால், விதர்ப்பராஜனின் குமாரியான உலோபாமுத்திரையை மணந்து அவ்வம்மையாரின் சொற்படியே நடந்தார். தவத்தில் சிறந்த சகேரீஷி என்பவர் ஒருசமயம் ஆகாயத்திலிருந்து நீ எனக்குப் பிரியவானாக இருந்து உன் உயிரை எனக்குக் கொடுத்து என்னைக் காப்பாற்ற வேண்டும்! என்று எழுந்த மதுரமான வாக்கைக் கேட்டு, ஆஹா யாரோ ஒரு திவ்வியமான மங்கை, என்மீது மோகங்கொண்டு இப்படிக் கூறுகிறாளே என்று கருதி! மனத்திலே காமங்கொண்டார். அதன்விளைவாகத் தம் வீரியத்தை அருகிலுள்ள ஒரு உலர்ந்த சருகில் விட்டார். அந்த விரீயத்தில் மகாரோஷமுடைய பிருங்கீ என்பவர், ரிஷபமுகத்துடன் தோன்றினார். பிருகுவின் குலத்தினரும் ஆகாயத்தில் உதித்தவர்களுமான தவசிகள் என்னும் நக்ஷத்திரங்களுக்குச் சந்திரன் போன்ற ருரு என்னும் முனிவர் காமத்தால் பிரமத்வரை என்னும் கன்னிகையைக் கடிமணம் புரிந்து கொண்டு பல காலம் காமசுகத்தை அனுபவித்து வந்தார். பிறகு காமங்களஞ் சியமான அந்தப் பத்தினி விஷந்தீண்டியதால் உயிர் நீத்துவிடவே ருருமுனிவர் மிகவும் துக்கித்து என் ஆசை மனைவியை இழந்த பிறகு இனி நான் உயிர்தரியேன்! என்று தம் உயிரையும் போக்கிக் கொள்ள முயன்றார். அப்போது தேவர்கள் அவரை நோக்கி, நீ தற்கொலை செய்து கொண்டால் மகாபாவியாவாய்! ஆகையால் உயிர்விட வேண்டாம் நீ உன் ஆயுளில் பாதியை உன் மனைவிக்குக் கொடுத்தால் அவள் உயிர் பிழைப்பாள், நீயும் அவளை அனுபவித்துச் சுகமடையலாம் என்றார்கள். அதைக் கேட்டதும் ருரு மிகவும் மகிழ்ந்து அவர்கள் சொன்னவாறு தம் ஆயுளில் பாதியை மடிந்த மனைவிக்குக் கொடுத்தார். மனைவியும் உயிர் பெற்று எழுந்து, தன் கணவனை ஆலிங்கனம் செய்து கொண்டாள். அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்திருந்தார்கள்.
அந்தகரான சவனமுனிவர், மகாயோகத் தவசியாக இருக்க விரும்பினார். மழைக்காலத்தில் ஜலத்திலுள்ள தூய்மையான மிருத்திகையால் தம் உடலையெல்லாம் முத்திரை செய்து கொண்டு தம் விழிகளை நாசி முனையில் நிறுத்திப் பல ஆண்டுகள் தவஞ்செய்தார். அதனால் அவரது உடல் முழுவதும் மண்புற்றினால் மறைக்கப்பட்டது இவ்வாறு அவர் இருக்கும் போது மங்கைப்பருவமுடைய ஒரு கிராதமங்கை அந்தப்புற்றைத் தோண்டவே சவனமுனிவர் அதிலிருந்து எழுந்தார். உடனே வேடமங்கை அவரை அரசன் முன்பு கொண்டு நிறுத்தி நடந்தவற்றை அரசனிடம் வெளியிட்டாள். அரசன் முனிவரை மஹான் என்று அர்க்கியபாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து உயர்ந்த ஆசனத்தில் இருத்து இவர் இழந்த கண்களைத் திரும்பவும் பெற வேண்டும் என்று கருதி அஸ்வினி தேவர்களை வரவழைத்து. அவர்களால் சவனமுனிவர் கண்பார்வை பெறும்படிச் செய்தான். இத்தகைய சவனமகாமுனிவரும் பிறகு அந்த வேடமங்கையைக் கண்டு மோகங் கொண்டு வாலிப தேகமடைந்து அநேக காலம் கூடிமகிழ்ந்தார்.
இனி பக்ஷீஸ்வரன் என்பவனின் காமங் கதையைச் சொல்கிறேன், அவர் ஆமையைப் போலவே நீட்டுவதும் சருக்குவதுமான கழுத்து அமையப் பெற்றவர். காசியப மனைவியர் பதின் மூவரில் விந்தை என்பவளது புத்திரர் மகாயோகியும் பரமாத்ம ஞானமும் சாந்த சொரூபமும் எலும்பு மாத்திரமான தேகமும் கொண்டார். பாற்கடல் அலைநீர்த்துளிகள் சிலவற்றைப் பருகிவருவதால் உயிர் தாங்குபவர் அத்தகைய பக்ஷீஸ்வரன் என்னும் முனிவர், ஒரு காலத்தில் அந்தச் சமுத்திரத்திடையே ஆணினங்களாகிய, மீன், நண்டு தவளை முதலிய ஜலசரங்கள் பெண் இனங்களோடுக் கூடி இன்ப சுகம் அனுபவிப்பதைப் பார்த்துப் பார்த்து தாமும் அவ்வாறு ஸ்திரீகளுடன் கலந்து மகிழ வேண்டும் என்று நினைத்து சுதன்மன் என்னும் அரசனிடம் கன்னிகாதானம் யாசிக்கச் சென்றார். அரசன் அவரை வரவேற்று உபசரித்து அவர் வந்த விஷயத்தை விசாரித்தான். பக்ஷீஸ்வர முனிவர் மகிழ்ந்து அரசே நான் காசிப மகரிஷியின் குமாரன் ஸ்திரீகளைக் கோரி வந்திருக்கிறேன் உனக்குப் புதல்வி இருந்தால் அவளை எனக்குக் கொடுக்க வேண்டும்! என்று கேட்டார். அவரது வடிவை அரசன் உற்றுப் பார்த்து விட்டு மனம்குழம்பி இவருக்குப் பெண் கொடாவிட்டால் இவர் சபித்தாலும் சபித்து விடுவார்! பெண்ணைக் கொடுக்கலாம் என்றாலோ இவரது உருவம் அகோரமாக இருக்கிறதே! என்று சிந்தித்தான். பிறகு அவன் ஓர் உபாயத்துடன் அவரை நோக்கி மாமுனிவரே எனக்கு ஒரு பெண் மட்டுமல்ல பதினைந்து அழகான பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் தாமே விரும்பிய வரனை நான் மணஞ் செய்து கொடுக்க வேண்டியவனே தவிர என் இச்சையாக ஒருவருக்கும் மணஞ் செய்து கொடுக்க முடியாதவனாக இருக்கிறேன். நான் இப்படிச் சொல்கிறேனே என்று தாங்கள் கோபிக்க வேண்டாம் நீங்களே என் புதல்விகள் இருக்கும் அந்தப்புரத்திற்குச் சென்று தங்களை விரும்பும் பெண் இவள் என்று காட்டினால் நான் அவளை உங்களுக்கு மணஞ்செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி, அவரை அந்தப்புரத்தினுள்ளே கொண்டு விடச் செய்தான். அந்தப்புரத்தை அடைந்ததுமே முனிவர் தம் யோக வலிமையால் மன்மத வடிவம் எடுத்து ரூபலாவண்ய யவுவனங்களுடன் மிகவும் மினுமினுத்து அரசகுமாரிகளின் எதிரே நின்றார் அவரை ராஜகன்னிகைகள் ஆவலோடு உற்றுப் பார்த்து இத்தகைய அழகுடைய இவர் யார்? மன்மதனோ? என்று காதலால் உள்ளமுருகி ஒவ்வொரு கன்னிகையும் தன்னை மணஞ்செய்து கொள்ளும்படிஅவரை வேண்டினார்கள். இந்தச் செய்தியை கேள்வியுற்ற சுதன்மன் அக்கன்னியரை யெல்லாம் பக்ஷீஸ்வர முனிவருக்கேத் திருமணஞ் செய்து கொடுப்பேன்! என்றான். பிறகு சுக்கிரன் முதலிய கிரகங்கள் சுப÷க்ஷத்திரத்தில் உச்சமாகிய திரிகோணமுற்று, புத்திர சவுபாக்கியச் சம்பத்துகளைக் கொடுக்கத் தக்கதாக இருக்கும் நல்ல திவ்ய முகூர்த்தத்தில் திருமணஞ் செய்து கொடுத்தான். முனிவர் அம்மங்கையார்களைக் கூடி பெருங்களிப்புடன் இராஜபோகங்களை நெடுங்காலம் அனுபவித்து தன்னைப் போன்ற புதல்வர்கள் பலரைப் பெற்று ஆயுள் முடிவில் சொர்க்கத்தை அடைந்தார்.
இனிக் கருடனின் மோகத்தைக் கூறுகிறேன் ஹிமாசலமலையில் வசிக்கும் அதிரூபவதியும் அக்கினித் தேவனின் புத்திரியுமான சாண்டிலீ என்ற பெயருடைய பேரழகியைக் கருடன் கண்டான். உடனே அவள்மீது மோகங்கொண்டு இவளை எப்படியாவது சொர்க்கலோகத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் விட வேண்டும் என்று கருதினான். அதை சாண்டிலீ என்பவள் அறிந்து இந்தக் கருடன் கொடியவன்! என்று கருதிக் கோபத்தோடு உன் இறகுகள் அழிக! என்று சபித்தாள். கருடன் தன் இறகுகளை இழந்தான். பிறகு அவன் அந்த அக்கினி புத்திரியிடம் சிறகுகளை கெஞ்சி அவளது மனதை இளக்கித் தங்கமயமான சிறகுகளை அடைந்து, அவளைப் புகழ்ந்து விட்டுத் தன் நகரத்தை அடைந்தான்.
நீண்ட மீசையும் சடையும் சுஷ்கித்த உடலும் கூர்மையான நகங்களையும் உடைய விபாண்டக முனிவர் ஒரு காலத்தில் ஒரு புனிதநதியில் நீராடும்போது அதிதூரத்தில் வரும் ஒரு யவுவன மங்கையைக் கண்டு மன்மத விகாரமுற்று அதன் விளைவாகத் தம் வீரியத்தை அந்நதி நீரில் ஒழுக்கினார். தெய்வ கதியால் அந்த வீரிய சம்பந்தமான ஜலத்தை ஒரு பெண்மான் குடித்துக் கருவுற்று ரிஷ்யசிருங்க முனிவரைப் பெற்றது. அப்புத்திரனைக் கண்ட விபாண்டக முனிவர், அவனை வளர்த்து, முனிவர்களுக்குரிய உபநயனாதி கிரியைகளையும் வேத அத்தியயனத்தையும் செய்து வைத்தார், சிறுவனான ரிஷ்யசிருங்கர் இளமையிலேயே சாந்தம், இந்திரியநிக்கிரகம் முதலிய நற்குணங்களைப் பெற்றவராய் வளர்ந்து தக்க வயது வந்தவுடன் சுத்தசாந்த பிரம்ச்சாரியாகி, இலை கிழங்கு புன்செய் தானியங்களைச் சாப்பிட்டுக் கொண்டும் தம் தந்தைக்குப் பணிவிடைகள் செய்து கொண்டும் ஆண் பெண் பேதமே தெரியாமல் இருந்து வந்தார். அப்போது அங்கு தேசத்தில் மழை பெய்யாமல் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அந்தத் தேசத்து மன்னனான உரோமபாதன் யோசித்து ரிஷ்ய சிருங்க முனிவரைத் தன் தேசத்திற்கு அழைத்து வந்தால் மழை பெய்யும் என்று கருதி அவரை அழைத்து வந்தான். அங்கே பலவகை தாசிகளின் பலவித சிருங்காரங்களால் ரிஷ்யசிருங்கரை உபசரித்தான். ரிஷ்யசிருங்கரும் அத்தாசிகளின் காமவினோத சிருங்காரங்களை ரசித்து மகிழ்ந்தார்.
பராவசு என்ற முனிவர், ஓரரசனுக்கு யாகஞ் செய்விப்பதற்காகச் சென்றிருந்தபோது, அவரது பத்தினி தபோவனத்து ஆசிரமத்தில் தனித்திருந்தாள். அவள் மிக இளமையும் அதிஅழகும் வாய்ந்தவள் அவளை யவக்கிரீவன் என்ற முனிவன் கண்டு, காமசிந்தையுடன் அவளைக் கவர்ந்து மோகம் மூட்டி அவளோடு இரதி கேளிக்கைகளை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்போது பராவசு முனிவரின் தந்தையும் ரிஷிபத்தினியின் மாமனாருமான ஸாப்பிய முனிவர் என்பவர் அந்த முறை கெட்ட மோகலீலைகளை அறிந்து மருகியை அழைத்து கடுங்கோபத்துடன் அவள் உடலைவெட்டித் துண்டித்து. அவளுடைய மாமிசத்தையெல்லாம் அக்கினியில் ஹோமம் செய்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவர் தம்யோக மாயையால் மருகியில் தோலைச் சேர்த்து மகாக் கொடுமையுள்ள ஓர் அரக்க மங்கையை உற்பத்தி செய்து பெண்ணே! அயோக்கியனான அந்த யவக்கிரீவனை நீ விழுங்கி விடவேண்டும்! என்று கட்டளையிட்டு அனுப்பினார், அந்த கொடிய அரக்கி தன் மாயைத் திறமையால் தன் கோரரூபம் நீங்கி அந்த ரிஷபத்தினியின் வடிவமெடுத்துக் கொண்டு யவக்கிரீவனிடம் சென்று ஓ முனிவரே! என் மாமன் யாகசாலைக்கு வந்திருக்கிறான் நீ அவனைக் கொன்று விட்டால், நாம் பழையபடியே சுகித்திருக்கலாம் என்றாள். அவன் அவளது வஞ்சனையை அறியாமல் அவளுடன் வனத்தின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது அந்தக் காட்டில் சூலபாணியாக இருந்த அரசன் ஒருவன் யவக்கிரீவனைக் கொன்றுவிட்டு அந்த ஸ்திரீயைக் கொண்டு போனான். பிறகு யவக்ரீவனின் தந்தை அவ்விடம் வந்து இறந்து கிடக்கும் தம் குமாரனைப் பார்த்து புத்திர சோகத்தால் பெருங் கோபங் கொண்டு, ஸாப்யமுனிவரே தம் மைந்தனைக் கொன்றவர் என்று சிந்தித்து ஸாப்ய முனிவரிடம் சென்று நீ என் புத்திரனைக் கொன்றதால் நீ உன் புதல்வனால் உயிரை இழப்பாயாக! என்று சபித்து விட்டு அந்த வனத்திலேயே தீ மூட்டித் தன் மகனுடைய தேகத்தைத் தகனஞ் செய்தார். சிறிது தூரத்திலிருந்து தடாகத்திற்குச் சந்தியாவந்தனஞ் செய்யச் சென்றார். அப்போது மான் தோலை போர்த்திக் கொண்டு போனார். அவர் குமாரரான பராவசுமுனிவர் யாகத்தை முடித்து விட்டு அவ்வரசன் தானமாகக் கொடுத்த பலவகைப் பொருள்களையும் எடுத்து கொண்டு தம் ஆசிரமத்திற்குச் திரும்பி வந்து சேர்ந்தார். அதற்குள் அவருடைய தந்தை ஸாப்பிய முனிவர் தம் ஸந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு மான்தோலைப் போர்த்தியவண்ணமே தம் இருக்கைக்குத் திரும்பும்போது பராவசு அதைப் பார்த்து விட்டு மான் என்றே சந்தேகித்து, அந்த உருவத்தை நோக்கி அம்பெய்தார் அதனால் ஸாப்பியமுனிவர் மாண்டு விட்டார். பிறகு பராவசு தம் தந்தை இறந்துவிட்டதை அறிந்து கொண்டு, அன்றிரவே அவருடலைத் தகனஞ் செய்தார் பொழுது புலர்ந்ததும் பராவசு முனிவர் தம் சகோதரரான பாரத்வாஜ முனிவரிடம் சென்று நமது தந்தையை மிருகம் என்று கருதிப் பயந்து அஸ்திரப்பிரயோகஞ் செய்து கொன்று விட்டேன்! அந்தத் தோஷ நிவர்த்திக்காக என்ன பிராய்ச்சித்தம் செய்யத் தக்கதோ அதைக் கட்டளையிட்டு என்னை அனுப்பவேண்டும்! என்று கேட்டார். அதற்கு பாரத்வாஜ முனிவர் அந்தோ! இந்தப் பெரும்பாவத்தை நீக்க நீ வல்லவனவல்ல நீ இங்கேயே இரு! நான் உனக்காக வனத்திற்குச் சென்று அகோரமான தவம் இயற்றி உன் பிரமஹத்தி தோஷத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு வனத்தை அடைந்து கடுந்தவஞ் செய்து பிரமஹத்தியை ஒழியச்செய்து சிறிது காலத்தில் தம் சகோதரனின் ஜாகையை அடைந்தார். அவரைக் கண்டதும், பராவசு முனிவர், அடே துஷ்டா! தந்தையைக் கொன்று தவஞ்செய்யச் சென்ற நீ என் இருக்கையினுள்ளே நுழையாதே வெளியே போய் விடு! என்று கூச்சலிட்டார். பாரத்வாஜமுனிவர் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் ஸ்தம்பித்து நின்றார். அப்போது அரசனின் படை வீரர்கள் இதை அறிந்து, பாரத்வாஜ முனிவரைக் கட்டி இழுத்துக் கொண்டு போய் நரஹத்தி செய்தவன்! என்று பலவாறு அவரைத் துன்புறுத்தினார்கள். அவர் மஹாஞானியாகையால் சிறிதும் கோபம் கொள்ளாமல் தம் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்திக் குவித்து இந்திரா! அக்கினி; வருணா! தேவர்களே! நான் என் தந்தையைக் கொன்றிருப்பேனாகில் மஹாப்பாபியாகிய என்னை நீங்களே கொன்று விடுங்கள். அவ்வாறில்லையென்றால் அமிர்த்தாரைகளால் என்னை நனைத்து குளிர்ச்சியூட்டுங்கள். நான் இதுவரையில் காலாகாலத்தில் ஹோமஞ் செய்தும் பெரியோருக்குத் தொண்டு செய்தும் இருந்தால் இப்போது இறந்த ஸாப்பிய முனிவரும் யவக்ரீவ முனிவரும் உயிர் பெற்று வரட்டும்! என்று பிரார்த்தித்தார். தேவர்கள் அவருக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டிக் காட்சியளித்து, திவ்யமான அமிர்தத் துளிகளால் பாரத்வாஜரை நினைத்து, அவரது உடம்பில் பட்ட காயங்களை விலக்கி ஸாப்பிய முனிவரையும் யவக்ரீவ முனிவரையும் மீண்டும் உயிர் பெற்று வரச் செய்தார்கள். பாரத்வாஜ முனிவர் மகிழ்ச்சியுடன் தம் இருக்கையை அடைந்தார். காமத்தால் இத்தகைய தீமைகள் எண்ணற்றனவாக நிகழ்ந்துள்ளன.
எப்போதும் யோகசமாதியில் இருப்பவரும் பிரமநிஷ்டரும் சம்சார தோஷத்திலிருந்து நீங்கியவரும் வனத்திலேயே வசிப்பவருமான கவுதம முனிவர் ஒரு சமயம் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடுந்தவத்தை அறிந்த இந்திரன் இதனால் தன்பதவிக்கு என்ன தீங்குகள் விளையுமோ என்று பயந்து இந்த முனிவரின் தவத்தையழித்து இவரது மனதைச் சஞ்சலப்படுத்த வேண்டும் என்று நிலைத்தான். எனவே பலவித நறுமணமலர்கள் மலர்ந்து திவ்யமான மந்தமாருதம் வீசுகிற காலத்தில், ஓர் அப்ஸரஸ்திரீயைக் கூப்பிட்டு அந்தக் கவுதம முனிவர் மதிமயங்கி மனங்கலங்கினார் மேலும் அவரை மோகவசப்படுத்துவதற்காக அந்த அப்ஸரமங்கை, ஆடையின்றி அவர் முன்பு எதிரே நின்றாள் கவுதமர் அந்தத் திகம்பரியான தேவமங்கையைப் பார்த்துப் பார்த்து மன்மத÷க்ஷõபித மனசுடையவராய் தத்தளித்தார் அதன் விளைவாக உண்டான வீரியத்தை அவர் துரோணத்தில் (வில்லில்) விடவே அந்தத் துரோணத்திலிருந்து வில்லைப் பிடித்த வீரர்களுக்கெல்லாம் ஆசாரியரான துரோணர் பிறந்தார்.
ஒருகாலத்தில் பிரமதேவர் சூரியனைக் கண்டு, நீ பூமியில் அரசனாக இருந்து, பிரம்மச்சரியம் முதலிய ஆசிரம தர்மங்களை சம்ரக்ஷணை செய்து வரவேண்டும் என்று சொன்னார். அவ்வாறே தேவர்களில் உயர்ந்தவனான சூரியபகவான் அயோத்தியாபுரியில் உபரிசரவஸு என்னும் பெயர் பெற்ற மன்னனாக இருந்து ஆஸ்ரம தர்மங்களை நிலைநிறுத்தி புலி சிங்கம் முதலிய துஷ்டமிருகங்களையும் பகைவர்களையும் கொன்று ஆட்சி செய்து தர்மத்தை நடத்தி வந்தான். அவன் சேணம், வில், அம்பு முதலியவற்றை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஓர் விமானத்தில் ஏறி இராஜ்ஜியங்களைச் சுற்றிப் பார்த்து வருவான். ஒரு சமயம் அவன் வனத்தில் சஞ்சரிக்கும் போது வசந்த ருதுக்காலம் வரவே அவன் தன் மனைவியார் யாருமே அருகில் இல்லாததால் மதன விகாரமுற்று மனம் வருந்தித் தன்னிடமிருந்து வெளிப்பட்ட ரேதஸை ஒரு பலாஸ இலையாற் செய்த தொன்னையில் விட்டு ஐயோ! இவ்வீரியம் வீணாயிற்றே என் மனைவி அயோத்திலிருப்பதால் இது அவளை அடைந்தால் அவள் ஒரு புத்திரனைப் பெறுவாளே என்று யோசித்துக் குழம்பினான். அதைச் சேணம் என்ற பறவை உணர்ந்து அரசே! அதை என்னிடம் கொடுத்துக் கட்டளையிட்டால் நான் அயோத்தியை அடைந்து உன் மனைவியிடம் அதைக் கொடுப்பேன்! என்று கூறி வீரியமுள்ள தொன்னையை வாங்கித் தன் மூக்கால் கவ்விக்கொண்டு வான்வழியாகப் பறந்து அயோத்தியை நோக்கி வந்தது அப்போது அதன் மூக்கில் கவுவப்பெற்ற பலாசத் தொன்னையைக் கண்ட மற்றொருடேகை இது மாமிசமாக இருக்குமோ! இதை நாம் கைப்பற்ற வேண்டும்! என்று எண்ணமிட்டு அந்தச் சேணப் பறவையோடு சண்டையிட்டது.
அந்தச் சண்டையிலே, பலாஸத் தொன்னையிலிருந்த ரேதசு யமுனையாற்றில் விழுந்தது; அந்த யமுனையாற்றில் பிரம சாபத்தால் மீன் வடிவமுற்று இருந்த கிரிகை என்ற அப்சரஸ்திரீ அந்த ரேதஸைப் பானஞ் செய்து அப்போதே கர்ப்பமுற்றாள். பிறகு அவள் பிரசவவேதனைப்படும் போது வலைஞன் ஒருவன் எறிந்த வலையில் மீன் அகப்பட்டுக்கொண்டது வலைஞன் அதைத் தன் வீட்டிற்குக் கொண்டுவந்து மீனை இரண்டு துண்டாக வெட்டினான். அதன் கர்ப்பத்தில் ஆண் குழந்தையொன்றும் பெண் குழந்தையொன்றும் இருந்தன. அவற்றை வலைஞன் பார்த்து வியப்புற்றான். பிறகு தனக்குக் கிடைத்த பொருளில் சமபாகத்தை அரசனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நியதிப்படி விலையுயர்ந்த இரத்தினத்திலும் சிறந்த அந்தப் புத்திரனை உபரிசரவஸு மன்னனுக்கே கொடுத்து விட்டான் மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, அந்தக் குழந்தையிடம் ராஜ லட்சணங்கள் பொருந்தியிருப்பதைக் கண்டு தீர்க்க ஆலோசனை செய்து, இவன் ராஜபுத்திரன் என்பதில் சந்தேகமேயில்லை! என்று நினைத்து அந்தக் குழந்தையின் வரலாற்றைப் பற்றி வலைஞனிடம் விசாரித்தான் வலைஞன் தான் யமுனை நதியில் வலை வீசியதையும் அதில் கிடைத்த ஒரு மீனச் சோதித்ததில் அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன என்பதையும் எப்பொருள் ஒருவனுக்குக் கிடைத்தாலும் அதில் பாதியை அரசனுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் முறைப்படியே இரு குழந்தைகளில், ஆண் குழந்தையை அரசனிடம் ஒப்படைத்ததாகவும் சொன்னான். அதனால் அம்மன்னன் வீரியத்தைத் தன் சேணப் பறவையின் மூலமாக அனுப்பியபோது; அது யமுனை யாற்றில் விழுந்ததால் அதனின்று தோன்றிய குழந்தைகளே அவைகள் என்று தெரிந்து கொண்டும்; மிகவும் மகிழ்ந்து, ஆண் குழந்தையை அன்போடும் ஆசையோடும் வளர்த்து வேதிவிதிப்படி உபநயனஞ் செய்து தன் மச்சதேசத்திற்கு அவனை மன்னனாக்கி முடிசூட்டினான்.
வலைஞன் தனக்குரிய பெண் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து, தன் வமிசத்தில் இருந்த ஒரு முதியவனின் பெயரால் மார்த்தாண்டி என்றும் பெயர்களில் ஒன்றாகிய கோகினி என்றும், கிரிகை என்பவள் மச்சவடிவில் இருக்கும் பெற்றதால் கிரிஜா என்றும் பெயர் வரத்தக்க அந்தப் பெண்ணிற்குச் சத்தியவதி என்று பெயரிட்டான். அவள் தன் தந்தைக்குச் சொந்தமானதொரு படகை யமுனை ஆற்றில் ஓட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தெய்வகதியாய் பராசரமுனிவர் அந்த ஓடத்தில் ஏறி நதியைக் கடக்கையில், ஓடம் ஓட்டும் பெண்ணான சத்தியவதியின் மீது கண்ணோட்டம் செலுத்தினார். சத்தியவிதியின் பூரணச்சந்திரன் போன்ற முகமும் நீலோத்பல மலர் போன்ற தேககாந்தியும் செம்பவளத் தண்டு போன்ற அதரமும் வள்ளைக்கொடி போன்ற காதும் சேற்கொண்டை போன்றவிழியும் கமல மொட்டுக்கள் போன்ற கொங்கைகளும், சுருங்கிய இடையும், அதிசுந்தர அவயவங்களும் அவரது மனத்தைக் கவரவே அவர் காமவசப்பட்டு மன்மதவாதையுற்று தத்தளித்தார். மச்சகெந்தி என்று காரணப்பெயர் சொல்லும்படிமீன் வீச்சமான துர்நாற்றம் வீசும் உடலுள்ள சத்தியவதி என்ற அந்தச் சுந்தரமங்கையை பரிமளகெந்தி என்னும் காரணப்பெயரையுடையவளாக உடலில் நறுமணம் பரிமளிக்கும்படி செய்து அவளோடு கூடி மகிழ்ந்தார், அதன் விளைவாக சத்தியவாதி கருவுற்று அவளுக்குப் புத்திரராக வியாசபகவான் தோன்றினார். அந்தவியாசரோ சாந்திரமதமாதி சத்குணங்களையுடையவராக இருந்தும் தேவர்களுடைய நலனைக்கருதி, விசித்திவீரியன் சித்தராங்கதன் என்பவர்கள் இறந்த பிறகு, அவன் மனைவியைக் கூடி திருதராஷ்டிரன் பாண்டு, விதுரன் என்னும் மூன்று மன்னர்களை உற்பத்தி செய்தார். பிறகு வியாசர் ஒரு காலத்தில் ஆரணியத்தில் அரணியைக் கடைந்து அதனிடமாக அக்கினியோடு சாகர் என்ற பரிசுத்த பிரம்மஞானியைப் புத்திரராகப் பெற்றார். அந்தச் சுகமாக முனிவரோ கவுரவம், கபிலம், கிருஷ்ணம், நீலம் என்னும் பெயரையுடைய நான்கு புத்திரர்களையும் யோகசாலியான ஒரு புதல்வியையும் பெற்றார். உடல் முழுவதும் கபால மாலையணிந்துள்ள வாமசிரமுனிவர் என்பவர் பூர்வத்தில் நாகலோகத்திலிருந்த ஒரு கட்கத்தைக் கொண்டு வரமுயன்று, பாதாளத்தை அடைந்து. ஓர்வேள்விக் குண்டம் நியமித்து, சுற்றிலும் முளையடித்து. அதைக் சுற்றி பஞ்சவர்ணமான நூலைக்கட்டி, ஒரு வகையான ஜெபஹோமம் செய்து, அதனால் பாதாளலோகத்தைக் கஷ்கிக்கச் செய்தார். அதனால் அங்கிருந்த நாகங்கள் வருந்தி அந்தச் கட்கத்தை அவருக்கு அளித்தன அப்பொழுது அங்கிருந்த ஒரு வேசி ஆடையின்றி பிறந்த கோலமாக நிற்கவே அவளை வாமசிர முனிவர் பார்த்துக் காமத்தால் மோகமுற்று இந்தக் கட்கத்தால் எனக்கு என்ன பிரயோஜனம்? என்று நினைத்து தான் ஹோமஞ்செய்து கொண்டிருந்த ஸ்ருவத்தை விட்டு விட்டுப் பூரண ஆகுதியும் செய்யாமல் எழுந்து; வியாகூலமனத்துடன், அந்த நாகதாசியோடு கூடிக் கலந்து ஆனந்தம் அனுபவித்தார் இவ்வாறு மாமுனிவரான ஒருவர் காமத்தாலும் ஒரு தாசியாலும் வஞ்சிக்கப்பட்டாரல்லவா? அந்தச் சுரதமுடிவில் அவர் விரதம் பங்கமடைந்தால் நாகங்கள் அந்தக் கட்கத்தை முன்புபோலக் கொண்டுபோய் விட்டன. சவுனகாதி முனிவர்களே! மன்மதனால் காமாவஸ்தைப்பட்டுவருந்திய மாமுனிவர்களது சரித்திரங்களை யெல்லாம் ஒருவாறு உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன் இனியும் சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.
13. பிற மகளிரை விரும்பும் இராடணனின் மோகப் பித்து
முனிவர்களே! க்ஷத்திரிய குலமணியும் காசிராஜன் புத்திரனாகவும் விளங்கிய விஸ்வாமித்திர முனிவர் முன்பொரு சமயம் வசிஷ்ட முனிவருடைய விரதலக்ஷ்மியைக் கண்டு, மனத்தில் பொறாமை கொண்டு, தானும் பிராமணத்துவம் அடைந்து, மூவுலகங்களையும் வருத்தவேண்டும் என்று நினைத்து தீர்மானமாகத்தீøக்ஷ செய்து காட்டை அடைந்து உடல் முழுவதும் இளைக்கும்படி அநேக காலம் அருந்தவஞ் செய்தார், அப்போது தேவர்கள், இவர் செய்யும் தவத்தால் என்ன விபரீதம் விளையுமோ என்று பயந்து அவரது தவத்தைக் கலைக்க நினைத்து அவ்விஸ்வாமித்திரருடைய ஆஸ்ரமத்திற்கு மேனகை என்ற அப்சரமங்கையை அனுப்பினார்கள். அவர், அவளைக்கண்டு மோகங்கொண்டு அறிவிழந்தார் தவம் இழந்தார். அதுபோலவே தேவர் தானவர்களாகவும் வெல்லவதற்கு அரிய வல்லமையுடைய சும்ப நிசும்பர்கள் மஹாரூப யவுவன சுந்தரமுடைய கோபேந்திர கன்னியைக்கண்டு மோகித்து அவளை அடைவதற்காக இருவரும் மல்யுத்தப் போட்டியிட்டு அதிலே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டார்கள். அந்த சும்பநிசும்பரது புத்திரர்களான சுந்தோபசுந்தர் என்னும் இரு அரக்கர்களோ திலோத்தமை என்ற அப்ஸர மங்கையைக் கண்டு காமங்கொண்டு அவர்கள் இருவரும் ஒருவரோடுடொருவர் போர் புரிந்து மடிந்தார்கள். இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய ஒருவன் இந்திரபுரியைப் போன்ற இராஜ்யத்தை அரசு செய்து கொண்டிருந்து ஒருகாலத்தில் தண்டக ஆரணியஞ் சென்று, சுக்கிர பகவானின் குமாரியான சூரிய பிரபையைப் பார்த்து காமாவேசம் கொண்டு, அவளைக் காந்தர்வ மணத்தால் கலந்தான். அதை சுக்கிராச்சாரியார் தெரிந்து கொண்டு அவனோடு எட்டு நாட்கள் அகோர யுத்தம் புரிந்து, தேவாசுரர்களாலும் ஜெயிக்க முடியாத அவனைப் பாசத்தால் கட்டித் தண்டித்து இறுதியில் அவனை அவனுடைய இராஜ்யத்துடன் சுட்டு எரித்தார் அந்தப் போர்க்களம் பாணங்களால் சுடப்பட்டு நாளது வரையில் புல், பூண்டு, முதலியன ஒன்றும் முளையாமல் இருக்கிறது.
முன்பொரு சமயம் மன்மதன், சிவபெருமானது நெற்றிக் கண் நெருப்பால் எரிந்து சாம்பலான பிறகு, அவன் மனைவியான இரதிதேவி மயன் வீட்டில் சுந்தரவடிவோடு பிறந்து வளர்ந்தாள். அவளை சம்பரன் என்னும் அசுரன் பலாத்காரமாக தூக்கிக்கொண்டு போனான் இரதியோ மரத்தினால் பதுமை ஒன்றைச் செய்து அதனை மணியணிகளால் அலங்கரித்து தன் யோக மாயையால் தன்னைப் போன்ற வடிவம் உடையதாகச் செய்து, பிராணதாரணை செய்து தன் கணவனாகப்பிறந்திருக்கும் பிரத்யுமனனிடம் சென்றாள். அதன் பிறகு கபடவேடங் கொண்டிருந்த பதுமையை மயன் புத்திரியாகிய மாயாவதியே என்று கருதிய சம்பரன் மிகவும் காமமுடையவனாய், அதோடு இரவும் பகலும் கிரீடித்துக் கொண்டிருந்தான். இனி இராவணனின் காமக் கதையைச் சொல்கிறேன். கரியமலை போன்றமேனியும் பத்து முகமும் பார்ப்பதற்குப் பயங்கரமான அகோரரூபமும் இருபது புஜங்களும், பராக்கிரமம் கொண்டவனாய் விச்சிரவசுவுக்கும் கேசி என்பவளுக்கும் புத்திரனாகப் பிறந்தவன் இராவணனாகப் அவன் தனக்குச் சமானமான மேகநாதன் என்னும் புத்திரனைச் சகாயமாகக் கொண்டு, இந்திரனைப் பிடித்துப் பாசத்தால் கட்டிச் சிறையில் அடைத்து, மூவுலகத்திலும் ஏகபோக ஆட்சி செலுத்தி, அதிரூபசுந்தரிகளான அநேகம் அப்சரமங்கையருடன் கிரீடித்தும், மயன் என்பவளது புத்திரியாகிய மந்தோதரியை மணந்து அவளோடு சுகித்து கொண்டுமிருந்தான். இவ்வாறு பெருஞ்செல்வமும் பல சுந்தரிகளின் சுகமும் அனுபவிப்பவனாக இருந்தும் பரஸ்திரீகளையும் கூடியனுபவிக்க வேண்டும் என்று எண்ணமிட்டு காமமோகிதமான சித்தத்துடன் இருந்தான்.
சம்பரனுடைய மாயா மனைவியான மரப்பதுமையின் கட்டழகைத் தன் கண்கள் இருப்பதாலும் இராவணன் பார்த்து காமபோதை கொண்டு, எவ்வகையிலாவது அவளைக் கொண்டுவர வேண்டும் என்று கருதித் தன் படைவீரர்களோடு பாதாள லோகத்தை அடைந்து அங்கே விஸ்வக்கர்மனால் நிர்மிக்கப்பட்ட சம்பரனது இரத்தின மாளிகையில் நுழைந்தான். அங்கு நழைந்தவுடனேயே, அங்கு மயனால் நிர்மிக்கப்பட்டிருக்கும் சூத்திரபாசங்களால் கட்டப்பட்டு வஜ்ரமயமான காராக் கிரகத்தில் பந்திக்கப்பட்டு; அங்குள்ள சூத்திரங்களாகிய மேஷங்களால் முட்டப்பட்டும் மிதிக்கப்பட்டும் மிகவும் துன்பமடைந்தான். அதைக் கேள்விப்பட்டதும் அவன் பத்தினியான மந்தோதரி மிகவும் துக்கித்து பாதாளலோகம் சென்று தன் தந்தையாகிய மயனிடம் மிகவும் கெஞ்சி, தந்தையே! என் கணவனை எவ்விதத்திலாவது சைன்னிய சகிதமாய்ச் சிறையிலிருந்து விடுதலைசெய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தாள் அதனால் மயன் மாயாவதியைப் பார்த்து அந்த இராவணன் என் குமாரியான மண்டோதரியின் கணவனாதலின் நீயே உன் நாயகனுக்கு இதவார்த்தைகளைச் சொல்லி அவனை விடுதலை செய்து கொள்! என்றான் அவ்வாறே மாயாவதி சம்பரனிடம் சொல்லி, லஜ்ரமயமான சிறையிலிருந்த இராவணனை அவனது சைனீயங்களுடன் விடுதலை செய்தாள். இராவணன் பெருமூச்செறிந்து நாணத்தோடும் தாகத்தோடும் பசியோடும் வெளியே வந்து மாயாதேவியைக் கண்டான். அவள் அவனுடன் பேசத் தொடங்கினாள்.
இராவணா! உன்னடைய முகம் தசா என்னும் கரும்பாம்பு போல அகோரமாகவும் உன் ரூபம் பைசாசம் போலப் பரம விகாரமாகவும் இருக்கின்றன. இத்தகைய நீ தேவர்களுக்குங் கிடைத்தற்கரிய என்னைப் போன்ற பெண்மணியை அடைவதென்பது உனக்குச் சாத்தியமாகுமா? நிசாசரா உலகத்தில் தன் வீட்டில் கட்டிய மனைவியிருக்கப் பிறன் மனைவிகளை விரும்பிப் பாசபந்தமாகித் துன்பம் அடைவது ஏன்? அப்படிக் கோருவதற்காவது தன் நாயகியைக் காட்டிலும் பரஸ்திரீயிடத்தில் அப்படி யென்னவிசேஷம் இருக்கிறது? உன்னைப் போன்ற துஷ்டனுக்கும் பிறன் மகளிரிடம் விருப்பமுண்டாவது அவனுடைய ஆயுளைக் குன்றச் செய்து அவயங்களுக்கெல்லாம் உபாதையுண்டாக்குவதற்கேயல்லாமல் வேறெதற்குப் பயன்படும்? பரஸ்திரீகளே மனம் விரும்புவார்களானால் அப்பொழுது அவர்களை கூடியனுபவிப்பனுக்கு ஆயுள் குறைந்தாலும் சிறிதளவு சுகமாவது உண்டாகும் அப்படியில்லாமல் உலகத்தில் ரூபவதிகளாக இருக்கும் மங்கையர்களின் யுக்தா யுக்தம் பாராமல் அவர்களின் வெறும் உடல் அழகிற்காகவீணாக மோகிப்பவர்களுக்கு ஆயுள் க்ஷீணமாவதற்குத் திருஷ்டாந்தமாக அப்பொழுதே மரணம் ஏற்படும் மிக்க அருவருக்கத்தக்கதும் கிருமியாதிகளுக்கும் பிறப்பிடமானதும் பெண்கள் பார்ப்பதற்கும் அஸங்கியமானதுமாகி யதவளை போன்ற தேகமுடைய ஆடவர் சிலர், தமது தேக சுகத்தை விரும்பி பரதாரகமனம் முதலியமகா பாதங்களைத் தேடிக் கொள்ளுகிறார்கள். ஆடவருக்குப்பிறன் மனைவியை விரும்பி மோகிப்பதால் உண்டாகும் சுகம் அணுவளவாக இருந்து, பிறகு அது மலைப்போல் பரிணமித்துத் துக்க ஸ்வரூபமாகும். உலகத்தில் புருஷர்களாவது மாதர்களாவது இவ்வுண்மையை அறியாமலேயே உன்னைப் போலத் தீச்செயல்கள் புரிகிறார்கள். உடலைத்தரித்த புண்ணியசாலிகள் அப்பொழுது சிறிது துக்கமாக இருந்தாலும் அதுவே பின்னர் சுகாத்மமாயும் எண்ணிறந்ததாயும் விருத்தியடையத் தக்க நற்செயல்களையே செய்வார்கள். ஆகையால் உனக்கு இவை நன்கு விளங்க சிறிது எடுத்துச் சொன்னேன் இனி எப்போதும் இத்தகையச் செயலை விரும்பவேண்டாம் விரைவில் இங்கிருந்து ஓடிப்போய் விடு. இப்பாதாள உலகத்து மங்கையர்கள் எப்பொழுதும் துன்புறுத்துவர்களே ஒழியச் சுகம் உண்டாக்கமாட்டார்கள் இனி இவர்களைக் கனவிலும் நினைக்க வேண்டாம். இவர்கள் மேகத்தில் அக்கினி இருந்தாற்போன்றவர்கள். விஷசர்ப்பங்களையே கத்திகளாகக் கொண்டவர்கள் பலவித மாயைகளை அறிந்தவர்கள் துஷ்ட புத்தியை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய பாதாளலோகப் பாவையர்களை வஞ்சிக்க ஒருவனும் சாமர்த்தியம் உடையவனாக மாட்டான் ஆகையால், நீ உடனே இங்கிருந்து போய்விடு என்றாள். அவளிடம் இராவணன் ஒன்றும் பதில் சொல்லாமல் தன் சேனை பரிவாரங்களோடு அங்கிருந்து புறப்பட்டு ஒரு பிலத்தின் வழியாகப் பூலோகத்தையடைந்து அவிவேகியாகையால் உலகத்தில் பழைய புத்தியுடனேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
முனிவர்களே! இராவணன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துங்கூட பிற மகளிரை மோகிக்கும் பித்து அவனைவிட்டு அகலவில்லை. ஆங்கிரஸ முனிவரின் புத்திரியான வேதவதி என்பவள் அழகான கன்னிகையாயிருந்தும் மரவுரிதரித்து தவக்கோலம் பூண்டு விஷ்ணுமூர்த்தியையே எப்போதும் தியானித்துக் கொண்டு ஆனந்தத்தோடும் இந்திரிய நிக்கிரக சாமர்த்தியத்தோடும் இருந்து வந்தாள். தவக்கோலத்தில் மினுமினுக்கும் அவளது அழகை வழிப்போக்கனான இராவணன் கண்டு மீண்டும் காம மோகங்கொண்டவனாய், அவளிடம் தன் காமத்தைத் தீர்க்கும்படி கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். அப்போது இராவணன் பலாத்காரமாக அவளைப் பிடித்திழுத்தான். அதனால் வேதவதி வெகுண்டு மகாபாபியாகிய இவன் ஸ்பரிசித்த இந்தத் தேகம் இனி வேண்டியதில்லை என்று தன் பிராணனை அக்கினியில் விடுத்து, இராவணனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று மிதிலாபுரிக்கு அரசனாகிய ஜனக மகாராஜனின் யாககுண்டத்தில் புனர்ஜன்மம் எடுத்து சீதை என்ற பெயரில் வளர்ந்து விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானுக்கு ஏகபத்தினியாகி, பிரதிதினமும் தன் கணவனால் மகிழ்ச்சியடைந்து, முற்பிறவியில் தனக்குத் தீமை செய்த இராவணனைத் தன் கணவனால் கொல்வித்து, இரண்டு புதல்வரைப் பெற்று, இனித் திருப்பாற்கடலில் நமது நாதரான மகாவிஷ்ணுவோடு கூடி வாழ்ந்திருக்கவேண்டும் என்று நினைத்து பூமிவழியாகச் சென்று மறைந்தாள். ஸ்ரீராமமூர்த்தி சீதாதேவியின் பிரிவாற்றாதியை அடைந்து அவளுடன் கூடிச் சுகித்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அதற்கு முன் ஒரு சமயம் கையிலை மலைக்கு அருகில் குபேரனுடைய புத்திரனான களகூபரனைக் கட்டியணைக்க வேண்டும் என்று பேரழகியான அரம்பை அதிசுந்தரமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றாள். அப்போது இராவணன் அவளைப் பார்த்து விட்டான். பிற மகளிரை விரும்பும் மோகப் பித்தனான அவன் அப்போது மதுபானத்தால் மத்தனாக இருந்ததால், தன் மருகி என்றும் சிறிதும் யோசிக்காமல் அரம்பையை பலாத்காரமாக பிடித்து இழுத்து ஆசைதீர அனுபவித்து விட்டான். அதை அரம்பை தன் கணவனான களகூபரனிடம் சொல்ல, அவன் அப்போதே பெருங்கோபங்கொண்டு இனி இராவணன் பரஸ்திரீகளைப் பலாத்காரமாகக் கூடினால் உடனே அவன் சிரசு ஆயிரம் சுக்கல்களாகுக என்று சாபமிட்டான்.
பிறகு சிறிது காலம்கழித்து இராவணன் பாதாளலோகத்தை ஜெயிக்க வேண்டும் என்று அங்கு சென்றான். அங்கே பார்ப்பதற்கு மனோகரமான உருவமும் நீலமேகநிறமும் செவ்வரிபடர்ந்த விழிகளும் பிரளய காலாக்கினி ஜ்வாலையைப் போன்ற ரோம ரேகைகளும் மின்னல் போன்ற தேகமும் ஜடைகளும், ஆயிரஞ்சூரியர் போன்ற தேக காந்தியும் சர்ப்பங்களின் விஷத்தால் தோன்றிய அக்கினியையே வஸ்திரமாகக் கொண்டு விளங்கும் மகாவிஷ்ணுவைக் கண்டு. அப்புருஷனின் அருகில் இருக்கும் க்ஷீராப்தியின் புதல்வியாகிய மகாலக்ஷ்மியின் பேரழகை இராவணன் தன் இருபது கண்களாலும் கண்டு மையல் கொண்டான். இந்த ஸ்திரீயை எவ்வகையிலாவது அபகரித்துக்கொண்டு போக வேண்டும் என்று யோசித்தான். அப்போது அம்மகானுடைய நிசுவாச மூச்சால் இராவணன் நூறு காத தூரத்தில் எடுத்து எறியப்பட்டுச் செயலற்றுக் கிடந்தான். பிறகு விஷயம் இன்னது என்பதை அவன் உணர்ந்து, பயபக்தியுடன் அம்மகா விஷ்ணுவை அணுகி, பகவானே! அடியேனுக்கு உம்முடைய கையாலேயே மரணம் அடிக்கடி சம்பவிக்கும்படி அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டான் திருமால் அவ்வாறே உத்தரவு கொடுத்தார். அதை இராவணன் பெற்றுக்கொண்டு முன்னரே அங்கு சிறையிடப்பட்டிருக்கும் மாவலிச் சக்கரவர்த்தியை விடுதலை செய்யவேண்டும் என்று நினைத்து அவ்விடம் செல்ல அந்த வாசலில் பெருங்கருமையாய் இரண்டு கரங்களில் இரும்புலக்கைத் தாங்கி சங்குசக்கரங்களை ஏந்திக் காவலாக நிற்கும் துவார பாலகரைக் கண்டு, ஓஹோ! இவன் விஷ்ணுமூர்த்தி போல இருக்கிறான் நான் இங்கே இவனருகே சென்றால் தீமை விளையும், என்று பயந்து பாதாளத்தை விட்டு உடனே விலகிப் பூலோகத்தை அடைந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு க்ஷத்திரிய வம்சத்தில் அவதாரம் செய்திருந்த ஸ்ரீ ராமமூர்த்தியின் பத்தினியான சீதாதேவியுடன் சென்று வனவாசம் புறப்பட்டத் தன் கணவரைப் பெருவிருப்போடு பின் தொடர்ந்து தண்டகாரணியத்தில் மரவுரியுடுத்தி கந்தமூலபலாதிகளைப் புசித்துக் கொண்டும் உடல் முழுவதும் புழுதியாகத் திரித்து கொண்டும் பர்ணசாலையில் வசித்திருந்தாள். அப்பொழுது இராவணன் அவளைக் கண்டு காம மோகிதனாய் அவளை எப்படியாவது தூக்கிச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்து தன் அமைச்சனாகிய மாரீசனை அழைத்துத் தன் மோகத்தை அவனிடம் சொல்லி நீ பவளத்தால் கொம்புகளும் வைடூரியத்தால் விழிகளும் மரகதத்தால் பிருஷ்டபாகமும் பூர்ணசந்திரன் போன்ற முகமும் முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தேகமும் பத்மராகத்தால் கால்களும் உடைய ஓர் பொன்மானின் வடிவை எடுத்து, ராமபத்தினியாகிய சீதைகாணும்படி, அவள் முன்பு உலாவவேண்டும் அப்படிச் செய்தால், அவள் உன்னைப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று தன் கணவனைக் கேட்பாள். அப்பொழுது இராமன் உன்னைப்பின் தொடர்வான் அந்தச்சமயத்தில் நான் ஒரு சன்னியாசி வேடத்தில், அந்தப் பர்ணசாலையை அடைந்து சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன் என்றான். மாரீசன் அதற்கு இணங்கித் தன்னிடம் ராவணன் கூறியபடி பொன்மான் வடிவு எடுத்து, சீதை முன்பு விநோதமாக உலாவினான். சீதை அந்த மானை விரும்பி தன் கணவனாகிய இராமமூர்த்தியிடம் அதைத் தனக்குப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். இராமமூர்த்தி தன் தம்பி இலஷ்மணன் சீதைக்குக் காவலாகப் பர்ணசாலையில் நிறுத்தி வைத்துவிட்டு அந்தப் பொன்மானைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் பின் தொடர்ந்தும் அந்தமான் அகப்படாமையால் அஸ்திரப்பிரயோகம் செய்ய மாயமானான் மாரீசன். அடிப்பட்டு கீழே விழுந்து உயிர் துறக்கும் போது தான் இராவணனுக்கு நன்மை செய்வதாகக் கூறிவந்ததை நினைத்து வஞ்சகமா சகோதரா! நான் இறந்தேன்! என்று கூறியபடி உயிரைவிட்டான். இவ்வாக்கியத்தை பர்ணசாலையிலிருக்கும் சீதையும் லக்ஷ்மணனும் கேட்டார்கள். சீதை தன் கணவனுக்கு ஏதோவோர் அபாயம் சம்பவித்தது என்று தன் மைத்துனனாகிய இலக்ஷ்மணனை அனுப்ப அச்சமயத்தில் இராவணன் சன்னியாசிவேடம் தரித்துப் பர்ணசாலையை அடைந்து, க்ஷணகாலத்தில் சீதையைத் தூக்கிக் கொண்டுப்போய் இலங்கையை அடைந்து தன்னை விரும்பும்படி சீதையிடம் பலவாறாகவும் கெஞ்சினான். அநேகம் அசுரர்களையும் அசுரமங்கையரையும் அவளுக்கு காவலிட்டு அசோகவனத்தில் பாதுகாத்து வந்தான். அதை உணர்ந்த இராமன் தன்னைச் சந்தித்த அனுமன் சொற்படி சுக்ரீவனைக்கண்டு வாலியை வதைத்து சுக்ரீவனுக்கு முடிசூட்டி எழுபது வெள்ளம் வானரசேனைகளோடு தென்கடலை அடைந்து சேதுபந்தனம் செய்து அந்த இராவணனோடு போர் செய்யத் தொடங்கினார்.
அந்தச் சமயம் இராவணன் தம் தம்பியான கும்பகர்ணனின் உதவி இருந்தால் வெற்றி பெறலாம் என்று நினைத்தான். கும்பகர்ணனோ மது மாமிச பக்ஷணஞ் செய்து. வாயைத் திறந்து கொண்டு பிரளய காலாக்கினி போலத் தன் நாக்கைத் தொங்க வைத்துக்கொண்டு மஹாபயங்கர ஸ்வரூபத்துடன் நித்திரை செய்து கொண்டிருந்தான். இராவணன் தன் வீரர்களைக் கொண்டு பெருங்கோஷங்கள் போடச் செய்தான் குதிரைகள் முதலியவற்றால் கும்பகர்ணனை மிதிக்கச் செய்தான் கத்தி. கோடாரி அக்கினி ஜல முதலியவற்றால் அடித்தும் கும்பகர்ணனின் பேருறக்கம் தெளியவில்லை. எனவே ஸ்திரீகள் அவன் மேல் விழுந்து குசங்களாலும் உறுப்புகளாலும் தாடனம் செய்ய, கும்பகர்ணன் காமாக்கிராந்த சித்தமுடையவனாதலின் சிறிது கண் விழித்தான். அதைக் கண்ட இராவணன் மகிழ்ந்து தம் தம்பியான கும்பகர்ணனைத் துணையாகக் கொண்டு, இராமமூர்த்தியை எதிர்த்துப் பெரும்போர் புரிந்து அவன் புத்திர, மித்திர குடும்ப சகிதமாய் இராமபாணத்துக்கு இரையானான். அவ்வரக்கர்களில் இராமபிரானைச் சரண் அடைந்த விபீஷணன் ஒருவனே உயிர் பிழைத்தான் ஏனையோர் நெருப்பு பொறிபட்ட பஞ்சுபோலானார்கள் சவுனகாதி முனிவர்களே! காமக்குரோதாதிகளைக் களைந்து தர்ம புத்தியையுடைய மாமுனிவர்களும் அனுபவித்த மன்மதாவஸ்தைகளையும் விசுவாமித்திரரின் மோகவினோத காமப்பித்துகளையும் சும்பநிசும்பர்கள், அவர்கள் புத்திரராகிய சுந்தோபசுந்தரும் கொண்ட மன்மதவிகாரத்தையும் சக்கரவர்த்தித் திருமகனாகிய ஸ்ரீராம பிரானின் மனைவியைக் கண்டு காமுற்றுத் துன்புற்ற இராவணனுடைய காமாதூரத்தையும் கும்பகர்ணனின் மதனாவஸ்தைகளையும் உங்களுக்குச் சொன்னேன்.
14. எவரையும் வெல்லவல்ல மன்மதன்!
மாதவர்களே! இன்னுஞ் சில சரித்திரங்களைச் சொல்கிறேன் சூரியவமிசத்தில் பிறந்த தசரஞ் சக்கரவர்த்திமானுட தேகத்துடனேயே சொர்க்கலோகத்துக்குப் போவதும் வருவதுமாக இருந்து அங்கேயே தன் பிதுர்க்களுக்குத் திலோத பிண்டங்களைக் கொடுக்கும் சாமார்த்தியமுடையவராக இருந்து, அறுபதினாயிரம் ஆண்டுகள் ஏகச் சக்கராதிபதியாய் அரசு செலுத்தியும் காமாக்கிராந்தச் சித்திராய்த் தன் மனைவியாகிய கைகேயியின் சொற்களைக் கேட்டு தன் உயிரையும் இராஜ்யத்தையும் புத்திரனையும் துறந்தார். அவருக்குப் புத்திரனும் போர்க்களத்தில் சுத்தவீரனும் மஹா புத்திமானும் தர்மவானும் இந்திரிய நிக்கிரகமுடையவனும் எல்லோருடைய மனத்திற்கும் ரம்மியமானவனும் எல்லாப் பூதங்களுக்கும் பிரியவானும் மகாமானியும் மூவுலகங்களிலும் வெற்றியுடையவனுமாகிய இராமமூர்த்தியும் காமத்தால் மோகிக்கப்பட்டு கிஷ்கிந்தையின் வேந்தனான வாலி, தன் தம்பியாகிய சுக்ரீவனோடு பெரும்போர் செய்து. அவன் இராஜ்யத்தையும் மனைவியையும் அபகரித்துக் கொண்டான் என்பதைக் கேள்வியுற்று நிரபராதியாகிய வாலியை, பிரளயகாலாக்கினி போன்ற பாணத்தால் கொன்றான். அயோத்தியில் அரசுபுரிந்த சூரிய குலத்திற்கே ஒரு சூரியனைப் போன்ற தசரதச்சக்கரவர்த்தியும் தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் கீர்த்தியுள்ள, விஷ்ணுவின் அவதாரமாய் அந்தத் தசரதனின் மகனாகத்தோன்றிய இராமபிரானும் காமாக்கிராந்த சித்தமுற்ற சரித்திரங்களை உங்களுக்குச் சொன்னேன். ஆகையால் மன்மதன் எல்லாத் தேவர்களுக்கும் முதல்வனாய் தேவர், முனிவர், மானிடர், பசு, பக்ஷியாதி எல்லோருடைய இதயங்களிலும் இருந்து இவ்வாறு தன் செயலை நடத்திக் கொண்டு வருகிறான் என்று அறிய வேண்டும். உலகநாதனாகிய சிவபெருமான் அந்த மன்மதன் பிறரால் ஜெயிக்கப்படாதவன் என்று கருதி, உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு பார்வதியை மணந்து காண்பித்து இலிங்கஸ்வரூபமானார். இத்தகைய இலிங்கத்தைக் கண்ட ஆகாயவாணி முனிவர்களே! தேவர்களே! தைத்திரியர்களே! உத்தமமான பக்தியால் நீங்கள் இதைப் பூஜிக்கும் பக்ஷத்தில் உங்களுக்குள்ள இஷ்டகாமியங்களை அடைவீர்கள் என்று கூறினான். இவ்வாறு சூதமா முனிவர் நைமிசாரண்ய முனிவர்களிடம் கூறினார்.
15. நித்திய நைமித்திக பூஜாவிதிகள்
நைமிசாரணிய வாசிகளான சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நோக்கி, மகாத்மாவே பற்பலசாஸ்திரங்களிலிருந்து வியாசபகவான் தங்களுக்கு உபதேசித்த யாவற்றையும் எங்களுக்கு நீங்கள் சொன்னீர்கள்! நாங்கள் அவற்றைக்கேட்டுக் கிருதார்த்தர்களானோம். இகபரலாபங்களைக் கொடுக்க வல்ல சிவதர்மங்களை இப்போது நீங்கள் சிறிது சொன்னீர்கள். சிவலிங்கார்ச்சனை செய்வதால் வரும் பயனை வியாசபகவான் சொல்லக் கேட்ட நீங்கள், உலகிற்கு இதம் உண்டாகும்படிச் சவிஸ்தரமாக சொல்லியருள வேண்டும் உலகிற்காக ஹிதாஹிதங்களைச் சொல்பவன் தர்மார்த்த காமமோக்ஷங்களுக்கு உத்கிருஷ்டமான பயனை அடைவான் என்று மகாமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் தர்மங்களில் முக்கியமானது எது? சர்வேஸ்வரனுடைய வாக்கு எத்தகையது? இலிங்கமூர்த்தத்தில் எவ்விதியால் ஆவாஹனஞ் செய்து பூஜித்தால், சிவபெருமான் பிரசன்னமாவார்? சிவதானம், சிவயாகம் யாவை? இவ்விஷயங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் அவற்றை யாவருக்கும் விளங்கும்படித் தாங்கள் சொல்லியருள வேண்டும். புண்ணியங்களில் சிறந்தது எது? அதை எப்படி! அடையாலம்? சிருகஸ்தன் எந்தச் செயலால் சொர்க்கலோகத்தையடையலாம்? கிரகஸ்தன் எந்தச் செயலால் மானுடனாகப் பிறந்து ஈஸ்வர அனுக்கிரகத்தை அடைவான்? கர்மயாகம், தபோயாகம் ஸ்வாத்யாய யாகம், தியானயாகம், ஞானயாகம் என்ற ஐவகை யாகங்களில் எது உத்தமமானது? யாகங்களின் கதிகள் என்ன? இந்த யாகங்களால் என்ன பயன் கிடைக்கும்? தர்மாதர்மங்கள் எத்தனை வகைப்படும்? என்னென்ன பாவத்தால் எவ்வெவ்வினையை அனுபவிக்க வேண்டும் தர்மாதர்மங்களாகிய அலைகளால் கலக்கப் பெற்று, காமாதிகளால் உண்டான துக்கங்களாகிய நுரைகளால் பூரணமாக இருக்கும் சமுசாரமாகிய சமுத்திரத்திலிருந்து ஆன்மாக்கள் எவ்வாறு நீக்கமுறுகின்றன? இவற்றை யெல்லாம் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். மாமுனிவர்களே! பூர்வத்தில் இதே விஷயங்களைத் தத்துவதரிசிகளான மகரிஷிகள் வியாசபகவானை கேட்க அவர் சொல்லுகிறார். நான் பூர்வ காலத்தில் இந்த விஷயத்தை ஸனத்குமார முனிவரிடம் கேட்டேன் அப்போது ஸ்வர்க்க மோக்ஷ பயன்களைக் கொடுக்கத்தக்க சர்வேஸ்வரனைப் பணிந்து அவ்வெம்பெருமானால் சொல்லப்பட்ட வகையிலேயே சிவதர்மங்களைச் சொல்லுகிறேன் என்று சொல்லலானார்.
சிவதர்மம் சிரத்தை பூர்வமாகச் செய்ய வேண்டும் சிரத்தையே தர்மத்திற்கு ஆதரவாகும் சிரத்தையே பிரதிஷ்டையாகும் ஆகையால் சிரத்தை மயமாகவே சிவதர்மங்கள் விளங்குகின்றன அவை சிரவணஞ் செய்த மாத்திரத்தாலேயே ஆனந்தங் கொள்ளத்தக்கவை சூக்ஷ்மமானவை பாசம், பசு, பதி என்னும் இவற்றால் பிரதிபாதிக்கப்பட்டவை சிரத்தையாலன்றிக் கையல்ல தேக கஷ்டம் தானம் முதலியவற்றால் கிரகிக்கத் தக்கவையல்ல. தேவர்களானாலும் சிரத்தையன்றி இதனைக் கிரகிக்க அசாத்தியராவர் சிரத்தையேபரம தர்மமும் சூக்ஷ்ம தத்துவமும் தானமும், தவமும், சுவர்க்கமும், மோக்ஷமும், ஜகத்துமாகும் ஒருவன் சிரத்தையின்றிச் செல்வம் முழுவதையும் தன் பிராணனையும் தானஞ்செய்தாலும் சிறிது பயனும் பெறமாட்டான். ஆகையால் சிரத்தையே பரமபதம்! சிரத்தா ஸ்வரூபமாகவே சிவ தர்மங்கள் எல்லாமே சொல்லப்படுகின்றன சிரத்தையாலேயே சர்வேசுவரனாகிய சிவபெருமானை அடையவும் தியானிக்கவும் பூஜிக்கவும் கூடுமாகையால் மகா சாரமானதும் மோக்ஷம் அளிக்கத்தக்கதும் சிவாக்கினியின் சித்தி ரூபமானதும் மனோஹரமான வாக்கு மயமானதும் சர்வேஸ்வரப் பிரதிபாதமானதும் அநேகம் சித்திகளையளிப்பதும் உலகில் உள்ள யாவரும் விரும்பத் தக்கதும் உச்சரித்தற்குச் சுலபமானதும் எண்ணிறந்த பொருள்களைக் கொடுப்பதுமாக உள்ள சிவமூல மந்திரத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் அதிசூஷ்மமானதும் தர்மார்த்த காமமோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கையும் சம்பாதிக்கத் தக்கதும் ஆலவிருக்ஷத்தின் மரம் பெரிதும் விதை சிறியதாகவும் இருப்பது போல மந்திரம் சிறிதாயினும் உபாசிப்பவர்களுக்கு எல்லையற்ற பயனைக் கொடுக்கத்தக்கதும் ஆதி அக்ஷரத்துடன் ஆறு அக்ஷரங்களையுடையதும் ஆகிய ஓம் நமசிவாய என்பது சிவப்பிரதிபாதமான மூலமந்திரம் என்பதாம். உலகத்திலுள்ள சூக்ஷ்ம மந்திரங்களும் அலங்காரர்த்தமான விசேஷ மந்திரங்களும் இந்தச் சிவமந்திரத்தில் அடங்கியிருக்கின்றன. இவ்வகையான ஷடக்ஷரமுடைய சூஷ்மமாகப் பிரவேசித்திருப்பவருமாகிய ஜகதீஸ்வரன் பஞ்சப்பிரமதேகமுற்று வாச்சிய வாசக சம்பந்தத்தால் பிரத்யக்ஷமாக விளங்குகிறார். அநாதியாக உள்ள சிவபெருமான் அதை விலக்கும்படியிருக்கிறார். வியாதிக்கு வைத்தியனும் மருந்தும் போல சம்சார வியாதிக்கு சிவபெருமான் பரம அவுஷதமாகவும் பரம வைத்தியனாகவும் விளங்குகிறார். சூரியன் இல்லாத பிரபஞ்சம் இருள்மயமாவது போல ஜகதீஸ்வரன் இல்லை என்று சொல்லும் பக்ஷத்தில் உலக முழுவதும் தமோகுணமாகும். ஆகையால் அநாதியாயும் சர்வக்ஞராயும் இயல்பாகவே சர்வபரிபூரணரும் முக்தி காரணரும் ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்தவருமாகிய பரமசிவன் ஒருவன் இருக்கிறான். அப்பெருமானை அடையத்தக்கது இந்த மகாமந்திரமே! அம்மந்திரத்தின் பொருள் சிவபெருமானே! அபிதான அபிதேய சம்பந்தத்தால் சிவபெருமானே அம்மந்திரமாவான் முக்திகாமிகள் இம்மந்திரத்தை ஷடாக்ஷரரூபமாக ஜெபிக்க வேண்டும் உன்று வேதங் கூறும் அநேகவித மந்திரங்களாலும் சாஸ்திரவிசாரணையினாலும் பயனில்லை, இம்மந்திரம் ஸ்திரமாக மனத்தில் இருக்கப் பெற்றவன் யாவற்றையும் வாசித்தவனும் யாவற்றையும் கேட்டவனும் யாவற்றையும் அனுஷ்டித்தவனுமாவான். இம்மந்திரத்தை எப்போதும் பயின்றவன் உலகத்தில் பரம சிரேஷ்டனாவான். மற்ற ஞானமும் கல்வியும் தவமும் யாவும் இம்மந்திரத்திற்குப் பதினாறில் ஒரு கலைக்கும் ஈடாகாது. இந்த மந்திரம் சிவஸ்வரூபம் என்று உறுதிகொண்டிருக்கும் வரையில் அவன் பரமபதத்தில் இருப்பவனாவான் இவ்வாக்கியம் விதிவாக்கியமேயன்றி அர்த்தவாக்கியமன்று இது சத்தியம் உலகரக்ஷகனாகிய சிவபெருமான் சர்வக்ஞனும் பரிபூரணனும் சர்வதோஷ நிவர்ஜிதனுமாக இருந்து தீர்க்காலோசனை செய்து சொன்னது இந்த மந்திரம். உலக கர்த்தாவாக இருக்கும் இறைவன் புண்ணியபாப பயன்களை உண்மையாகச் சொல்வானேயன்றி அபத்தமாகச் சொல்ல மாட்டான். இதில் துவேஷ அபிமானிகளாய் ஈஸ்வரனிடத்தில் பக்தியின்றி இருப்பவர்கள் பலவாறு பொய் சொல்லுவார்கள் என்று இவையெல்லாம் புனிதராகிய சிவபெருமான் திருவாய் மலர்ந்தருள நாம் உணர்ந்தேன்.
இவையனைத்தும் பிரமாணம் இதில் சிறிதும் சந்தேகமில்லை பெரியவர்கள் சொன்ன விஷயங்களை ஈஸ்வர வாக்கியமாக நம்பி நடக்க வேண்டும் சிரத்தையில்லாமல் அசிரத்தையாயும் பிரமாணமாகக் கொள்ளாமல் சந்தேகிப்பவன் அதோகதியடைவான். தர்மமான ஞானோபதேசம் செய்யும் புராணிகனை சர்வேஸ்வரனாகிய சாம்பவமூர்த்தியைப் போலவே பூஜிப்பவன். தர்மத்தையும் ஞானத்தையும் அடைந்து இறுதியில் மோக்ஷத்தை அடைவான். உலகத்தில் பிரபுவாக இருப்பவன் இதஞ் செய்யவேண்டும் என்ற கருத்துடன் சுபகரமான தர்மங்களைப் பரோபகாரமாகச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு தானே தர்மதத்பரனாக இருக்கும்பட்சத்தில் அவன் கட்டளையில் அடங்கிய உலகினர் நமது இறைவனைப்போல நாமும் தக்க சிந்தனையை உடையவராக இருக்கவேண்டும். என்றாவது நமது தலைவன் கட்டளையை மீறி நடந்தால் நாம் தண்டனையடைவோம் என்ற அச்சத்தாலாவது தமக்குக் கட்டளையிடப் பட்டுள்ள நல்ல தருமங்களைச் செய்து வருவார்கள். ஆகையால் பிரபுவாக இருப்பவன் எப்போதும் தர்மத்தை முன்னிட்டே மக்களைப்பரிபாலித்தால் பிரஜைகளும் அவ்விறைவனது சுபகரமான கீர்த்தியைப் புகழ்ந்து தர்ம, அர்த்த காமங்களில் தாம் தாம் மனம் விரும்பியவற்றை அடைவார்கள் மக்கள் தர்மவான்களாயினும், அதர்மவான்களாயினுஞ்சரி அவர்களின் புண்ணிய பாவங்களில் அரசன் அரைக்கால் பங்கு புண்ணியத்தை அடைவதற்காக, யாவரையும் புண்ணியமானமார்க்கத்திலேயே நடக்கச் செய்யவல்ல அரசர்கள் கிருதயுகம் முதலிய நான்கு யுகங்களிலும் இருந்து மகாசமர்த்தராய் காமார்த்த சித்தமுடையவர்களாக இருப்பவர்களை தர்மார்த்தர்களாக்க வேண்டும். அரசன் இவ்வாறு தர்மவழியை விருத்தி செய்யாமல் பிரஜைகளுக்குப் பீடையுண்டு பண்ணும்படி நடப்பானாயின் அப்பிரஜா பீடையினால் உண்டாகிய அக்கினி அவ்வரசனது பிராணனையும் ஐஸ்வரியத்தையும் குலத்தையும் இராஜ்ஜியத்தையும் தகிக்காமல் விடாது. அரசன் தர்மவானாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தாலேயே சிவபெருமான் மந்திரவுஷதி முதலிய ஷடங்கரூபமாக வேதங்களை நிர்மித்திருக்கிறான். பிரகிருதி சாஸ்திர வாதத்தினால் காமமார்க்கத்தை மட்டுமே கைக்கொண்டு நடக்கும் மன்னனை யோகத்தால் தர்மமார்க்கத்தில் திருப்பவல்லவனாகிய சர்வேஸ்வரனே சிவபெருமான் அவனே மன்னருக்கும் மன்னவன், அவனே ஜகத்குரு ஒருவன் அத்தகைய ஜகத்குருவாகிய சிவபெருமானைத் தத்துவசொரூபத்தால் சர்வ பிரயத்தனத்தோடும் தெரிந்து கொண்டு சம்சாரமாகிய சேற்றில் மூழ்கியும் அஞ்ஞானமாகிய தீயினாற் சுடப்பட்டும் இருப்பவர்கள் ஞானமாகிய அமிர்தத்தால் நனைத்து சம்சாரபாதையை ஒழிப்பானாயின், அவனுக்கு ஈன்றெடுத்த தந்தையும் ஒப்பாகான்.
இத்தகைய சர்வேஸ்வரன், தேகசிரமம், யாகம், தானம் பெருஞ்செல்வம், அரசு முதலியவற்றால் அறியத்தக்கவன் அல்ல என்று வேதங்கள் முழங்குகின்றன; சாந்தசீலராகிய முனிவர்களால் சொர்க்கமோட்சங்கள் சிந்திக்கத்தக்க சோபனமான வஸ்து ஒன்று இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அர்த்தவாதத்தில்; ராக; த்வேஷ; க்ரோத அபத்தங்களோடுச் சேர்ந்துகொண்டு அவித்யாராக ஸ்வரூபமாகவும் மகாமிருதுவாகவும் பார்ப்பதற்குப் பலர் அனுஷ்டித்ததாகவும் சம்சாரத்தை உண்டு செய்வதற்குக் காரணமாகவும் விளங்கும் வாக்கியங்கள் சிலவும் இருக்கின்றன. அவை அதோகதியை உண்டு பண்ணத் தக்கவை எந்த வாக்கியத்தைக் கேட்ட மந்திரத்தில் காமக்குரோதாதிகள் ஒழிந்து ஜகதீஸ்வரனாகிய சிவபெருமானிடத்தில் அஹேதுகமாகிய பக்தி ஞானங்கள் உண்டாகுமோ, அவ்வாக்கியங்கள் காதுகளுக்கு இனிமையாக இல்லாவிட்டாலும் அவையே மங்களமானவை. பதினென் புராணங்களும் இதிகாசங்களும் தேவதங்களும் சாஸ்திரங்களும் அறநெறியை முன்னிட்டு முனிவர்களால் கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றும் ஆன்மாக்காளுக்குப் புத்திர, தார, சம்சாரபந்தம், சத்தியோகர்ப்பம் முதலியவற்றிற்குக் காரணமும் சொல்லபட்டிருக்கின்றன. இவை போன்றவை மோட்ச மார்க்கத்துக்குத் துணை செய்யமாட்டா உலகில் மக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஆயுள் இருந்தாலும் நூல்கள் யாவற்றையுமே ஆராய்ச்சி செய்ய முடியாது. நமக்கு இருக்கும் ஆயுளோ சொற்பகாலம் பண்டிதனும் சமர்த்தனுமாக இருப்பவன் சாஸ்திர சமூகங்களை யெல்லாம் ஒழித்து இகபரலோகங்களுக்குச் சுபகரமான அக்ஷர தம்மாத்திரையுள்ளதை உணர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் அவனே சாஸ்திரங்கள் யாவற்றையும் அறிந்தவனாவான். எல்லா நூல்களையும் கற்றறிவேன் என்று காலத்தைக்கழிப்பவனும் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன் என்பவனும் முழு மூடன். அவன் சக்தியடைந்திருப்பவனும் அசக்தனே! சம்சாரச் சேற்றிலிருந்து அவன் வெளியே வருவதற்கு ஒரு காலத்திலும் சமர்த்தனாகான் சிவஞானத்தைப் பக்தி சிரத்தையுடன் விசாரித்து அறிபவனே பண்டிதன். அவனே எல்லாச்சக்திகளையுடையவன். அவனே மஹாதபஸ்வி அவனே ஜிதேந்திரீயன் அவனே உலகம் முழுவதையும் மேருமலையுடன் கூட்டித்தானஞ் செய்தவன். அவன் அநியாயமாகச் சொன்னாலும் சர்வேஸ்வரன் அதை நியாயமானதாக அனுக்கிரகிப்பான், ஆகையால் நான் நியாயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சிவஞானத்தை உணர்ந்தவனே சிவசாயுஜ்ஜியத்தை அடைவான்.
முனிவர்களே இத்தகைய சிவஞானத்தை அடைவதற்கு முக்கிய சாதனமாக இருப்பது சிவலிங்கார்ச்சனையாகும், அந்தச் சிவலிங்க பூஜையோ நித்தியம், நைமித்திகம், காமியம் என்று மூவகைப்படும், அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். பஞ்சாமிர்தத்தாலும் ஸ்நானம் பாத்தியம் முதலியவற்றாலும் அச்சர்வேஸ்வரனை நித்யமாக ஆராதித்தால் அவர்கள் விரைவில் அனுக்கிரகிக்கப்படுவர் தேவாசுரர்களால் திருப்பாற்கடல் கடையப்பட்டக் காலத்தில் சகலலோகத்திற்கும் மாதுருபூதமாக நந்தை, பத்திரை, சுசிலை, சுரபி, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள் தோன்றின. அவ்வைந்தில் சுரபி என்பது தேவர் மானுடர் முனிவர் முதலிய யாவருக்கும் உதவி செய்யவேண்டும் என்ற கொள்கையோடு பூவுலகத்தை அடைந்து சர்வேஸ்வரனாகிய சிவபெருமானின் திருமஞ்சனத்திற்குப் பயன்படக் கருதிப் பூமியிலேயே தங்கிவிட்டது அப்பசுவின் கோமயமும் கோரோசனமும் கோசலமும் க்ஷீரமும் ததியும் நெய்யும் உலகத்தில் யாவற்றையும் பவித்திரமாகச் செய்யும் ஷடங்கங்கள் இந்த ஆறில் ஒன்றாகிய கோமயம் ஒன்றினாலேயே சிவப்ரீதியாகவுள்ள வில்வ மரமும் பத்மத்தின் விதைகளும் உதித்தன. இவற்றில் வில்வ மரத்தை லக்ஷ்மி முதலியவர்கள் ஸ்ரீவிருக்ஷம் என்று கூறினார்கள். பசுமையான கோரோசனம் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு உரிய சாமான்களில் சிறந்த ஒன்றாகும் கோசலத்திலிருந்தே சாம்பிராணியாகிய தூபத்திரவியம் தேவப்பிரீதியாகத் தோன்றியது. பிராணிகள் யாவற்றுக்கும் வீரியவிருத்தியை உண்டு செய்யும் தயிர் அப்பசுவின் பாலிலிருந்து உண்டாகிறது. அந்தத் ததியிலிருந்து நெய் உண்டாயிற்று. அந்த நெய்யிலிருந்து தேவர்களுக்குப் ப்ரீதியாகவுள்ள அமிர்த்தம் தோன்றியது. ஆகையால் நெய், பால் தயிர் முதலியவற்றால், இலிங்கரூபமாகவுள்ள சிவபெருமானைப் பக்தியோடு அபிஷேகம் செய்து பிறகு திவ்யமலர் மணம் பொருந்திய ஜலத்தினாலும் சிறிது உஷ்ணமாயுள்ள ஜலத்தினாலும் மங்களவாத்திய யுக்தமாக ஸ்நானம் செய்வித்து, சந்தனம் பச்சைக்கற்பூரம், முதலியவை கூட்டிய சீதோதகத்தால், அபிஷேகித்து கமலம், குற்றமற்ற மிருதுவான வில்வபத்திரம் முதலியவற்றால் பூஜித்து நெய் கலந்த பரிமளத் திரவியங்களால் தூபங் கொடுத்து க்ஷீரான்னமும் சமைத்த பலவித பக்ஷியங்களும் மஹாநிவேதனமாகச் சமர்ப்பித்து பலமுறை பிரதக்ஷினம் செய்து ஓம் ஹர ஹர நமசிவாய சர்வேஸ்வர சங்கர மஹாதேவா! என்று சாஷ்டாங்க தண்டம் செய்து பலவித பாபங்களைச் செய்க. பாபியாதலின் என்னை மன்னிக்க வேண்டும் என்று க்ஷமாபணம் செய்து இத்தகைய விதியால் சிவபெருமானை இலிங்கமூர்த்தத்தில் பூஜித்தால் அத்தகைய பக்தனின் விஷயத்தில் கிருபைகொண்டு பிரசன்னராய் இகலோக பரலோகங்களிலும் அடைதற்குரிய கோரிக்கைகளைக் கைகூடும்படி அனுக்கிரகிப்பான். இவ்வண்ணமே நாள்தோறும் பூஜிக்க வேண்டும் இவ்விதம் நித்தமும் பூஜிப்பவனும் சதுர்த்தசி அஷ்டமிகளில் பூஜிப்பவனும் விசேஷ சிவ பக்தியுடையவனாய் நரகத்தில் விழுந்து கிடக்கும் இருபத்தொரு தலைமுறை வரையிலும் அநாயசமாய் சொர்க்கத்தில் செலுத்த வல்லவனாய், இறுதியில் அவன் சிவபதவியை அடைவான் சிவார்ச்சனை செய்பவனிடத்தில் அவனுக்குப் பூஜா உபகரணங்களைச் சேகரம் செய்து கொடுத்த உறவின் முறையாகும் ஊழியக்காரரும் பக்தியோடு, பகவத் கைங்கரியஞ் செய்த பக்ஷத்தில் அவர்களும் இறுதியில் கைலாயத்தை அடைவார்கள்.
ஒருவன் பூர்வத்தில் சிவபெருமானுக்கு நானாவித மலர்களால் தொடுத்த மாலைகளைச் சிவசன்னிதியில் கொடுத்துக் கொண்டு, பக்தி செய்ததால், சிவகடாக்ஷமடைந்து, அவரது அனுக்கிரகத்தால் உலகத்தில் ஏகசக்கராதிபதியாய் அரசு செலுத்தி, ஆயுள் முடிவில் சிவசாயுஜ்யத்தை அடைந்தான். ஆகையால் உலகத்தில் மனிதப்பிறவியடைந்தோர் யாவரும் பக்தி பூர்வமாகச் சிவபரீதியாக இலிங்கார்ச்சனையை விதிப்படி செய்ய வேண்டும். ஷடக்ஷரங்களையுடைய மந்திரச் சிறப்புடைய பஞ்சாக்ஷர மந்திரத்தினால் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை ஏகாக்கிர சிந்தையோடு தியானஞ்செய்பவன் மஹாசிவ பக்தியுடையவனாய்த் தன் பிதுர்க்களை மோக்ஷத்தில் சேர்த்துத் தானும் சிவபதவியை அடைவான் அத்தகைய சிவாராதனைக்கு அனுகூலமாக இருப்பவனும் ஆயுள்வரையில் இவ்வுலக இன்பத்தை அனுபவித்து தான் அனுகூலம் செய்த பக்தனுடன் சிவசான்னித்தியத்தை அடைவான் சிவ நாமத்தை ஸ்பரித்துக்கொண்டு இருப்பவர்களும் சிவஸ்தோத்திரங்களை பண்ணோசையுடன் பாடுவோரும் விதிப்படி சிவபூஜை செய்யும் பயன்களை அடைவார்கள் இவ்வகையாக விதிப்படிப் பூஜிக்கப்படும் சிவலிங்கமூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவன் சமஸ்தமான யாக பயன்களையும் சந்தேகமின்றி அடைந்தவனாவான் சிவசரித்திரங்களைச் சொல்லவும் வசிக்கவும் செவிகொடுத்துப் பக்தியோடு கேட்டுக் கொண்டிருப்பவன் அந்த யாக பயனை அடைவான் என்பது சிவபெருமானின் திருவாக்கு, சிவபெருமானைப் பக்தி செய்து கொண்டும் அபிஷேகித்துக் கொண்டும் பூஜித்துக் கொண்டும் இருக்கும்போது சிவபெருமானையும் அவ்வாறு செய்பவனையும் கண்டு ஆனந்திப்பவன், மேற்கூறிய சிவாராதனை செய்வோன் அடையும் பயனை போன்ற பயனையடைவான். மனத்தில் பக்தியோடு சிவஸ்மரணை செய்பவனும் அத்தன்மையான பயனை சர்வேஸ்வரனுடைய கிருபையால் அடைகிறான் சிவ! ருத்ர ஹர என்னும் சிவநாமங்களாகவுள்ள இரண்டு எழுத்துப் பெயர்களில் ஒன்றை ஒரு காலத்தில் உச்சரித்தவனும் ருத்ரலோகத்தை அடைவான். முனிவர்களே! பலவிதமான சிவதர்மங்களும் மஹாசூக்ஷ்மமாக இருப்பினும் பெரும் பயன்களைக் கொடுக்கும் என்று அந்தச் சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். நீங்கள் நித்ய பூஜை செய்பவர்களாதலால் சுருக்கமாக அவற்றைச் சொன்னேன்.
16. சிவலிங்க பூஜையின் பயன்
சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய கிரியாயோகத்தை ஸநத்குமார முனிவர் வியாசபகவானுக்கு உபதேசித்த வகையே, தாங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றைக் கேட்க, நாங்கள் பேராவல் கொண்டவர்களாக இருக்கிறோம் என்றார்கள். சூத புராணிகர் கூறலானார். மாதவர்களே, சிவபெருமானின் கிரியாயோகத்தை வியாச முனிவருக்கு ஸநத்குமார முனிவர் கூறியவகையிலேயே சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் வியாசர் ஸநத்குமாரரை அடைந்து அவரது திருவடிகளை வணங்கிப் பணிந்து சுவாமி, சிவபெருமானின் கிரியாயோகத்தையும் அதனால் வரும் பயனையும் வேதாந்யாசத்தையும் மானசீக பூஜையையும் பாஹ்ம பூஜையையும் இவ்வகையானது என்று திருவாய் மலர்ந்தருள வேண்டும் அன்றியும் பிரமசரிய மனத்தாலும் புண்ணியகரமானவாக்கு காயங்களாலும் கிரியாயோகத்தைப் பெரியோர்கள் அனுஷ்டித்த முறைப்படி அனுஷ்டிப்பவன் எவ்வகைப் பயனை அடைந்து எப்படிச் சிவபதமடைவான்? சிவரூபமாகிய லிங்கத்தை விதிப்படி அபிஷேகித்தவனும் அர்ச்சனை செய்தவனும் பெறும் பயன்யாது? மலர்களில் எவை சிவபூஜைக்குரியவை? எம்மலர்கள் சிவபூஜைக்கு உரியனவல்ல? கனிகளில் எவை சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்யத் தக்கவை? எவை தகாதவை வாத்தியங்களில் சிவசன்னிதியில் வாசிக்கத் தக்கவை யாவை எவை நீக்கத்தக்கவை நெய், பால், முதலியவற்றால் அபிஷேகம் செய்தவன் அடையும் பயன் என்ன? சந்தனம் கஸ்தூரி முதலியவற்றால் சிவபிரானுக்கு யலேபனை செய்தவன் பெறும் பயன் யாது? மற்றைய சிவபணிவிடைகளின் பயன்கள் யாவன? இவற்றை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்? என்று கேட்க ஸநத்குமாரர் சொல்லுகிறார்.
சத்தியவதி மைந்தனே! வியாச முனிவனே! நீ என்னைக் கேட்ட சிவபூஜா விஷயங்களையெல்லாம் தெளிவாகச் சொல்லுகிறேன் முழுமனதுடன் கேள் பரமாத்மாவாகிய பரமசிவனிடத்தில் சித்தத்தைச் செலுத்தி நிற்பதே ஞானயோகம். பரமசிவத்தின் பாஹ்யமாகிய அர்ச்சா ரூபத்தில் எப்பொழுதும் பூஜை முதலிய உபசாரங்களைச் செய்வதே கிரியாயோகம் இதுவே சிவபெருமானைத் தியானிப்பதற்கு முக்கிய சாதனம், இஷ்டகாமியங்களைக் கருதி, சிவாலய நிர்மாணம் முதலிய சிவபுண்ணியங்களைச் செய்தவர்கள் அடையும் பயன்களையும் சொல்லுகிறேன்.
சிவபெருமானுக்குக் கருங்கல்லாலோ அல்லது மரத்தாலோ அல்லது பொன் வெள்ளி முதலிய உலோகங்களாலோ அல்லது மண்ணாலோ திருக்கோயில் கட்டுவித்தவன் நாள்தோறும் சிவயோகத்தால் அந்தச் சர்வேஸ்வரனைப் பூஜித்தவன் அடையும் பயனை அடைந்து தன் குலத்தில் இறந்த பிதுர்க்களை நூறு தலைமுறை வரையிலும் என்றும் ஆனந்தமயமான சிவலோகத்தை அடையச் செய்வான். சிவாலயம் ஒன்றைப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ நிர்மாணஞ் செய்ய வேண்டும் என்று ஒருவன்தன் மனத்தால் நினைத்தவுடனே, தான் ஏழு ஜனங்களிற் செய்த பாவங்களிலிருந்தும் புனிதமடைவான் சர்வகர்த்தாவான சிவபெருமானுக்கு ஆலயம் கட்டுவித்து அதில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லவுகீகபோகங்களையும் அனுபவிப்பான். புண்ணிய ஸ்தலங்களில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லோகங்களிலும் சிறந்த முக்தியை அடைவான். கருங்கல்லால் சிவாலயம் செய்வித்தவன் அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் வசிப்பவன். சிவபெருமானது அர்ச்சாரூபங்களாகிய லிங்க மூர்த்தத்தைச் செய்வித்தவன் ஒருகாலத்தும் அழிவில்லாத சிவலோகத்தை அடைந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் பலவித சுகங்களை அனுபவித்து, அப்படியே ஒவ்வொரு பதவியிலும் அறுபதினாயிரம் ஆண்டுகள் வசித்திருப்பான். புண்ணியகரமான சிவலிங்க பிரதிஷ்டை மட்டுமே செய்தால் இறந்த பின்னரும் இறவாதவனாகவே இருந்து, தன் வம்சத்தில் இறந்தவர்களையும் இனி பிறப்பவர்களையும் கற்பாந்தகாலம் வரையில் புனிதர்களாகச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்தவன் தன் பிதுர்க்களை எட்டுத் தலைமுறை வரையிலும் தன்னோடு சிவசாயுஜ்யம் பெறச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவனைக் கண்டு, தானும் அவ்வாறு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தால் நற்கதியையடைலாம் என்று நினைத்தவன் அப்போதே பரமபுண்ணியனாகித் தான் முன்பு செய்த பாவங்களையெல்லாம் ஒழித்து முக்திக்கு அருகனாவான்.
முனிவர்களே! பூர்வத்தில் பிரமதேவன் இயமனுக்குப் பாசத்தையும் தண்டத்தையும் அதிகாரத்தையும் கிங்கரர்களோடு கொடுத்து நீ உலகத்தில் சஞ்சரித்து தர்ம அதர்மங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு சொல்லத் துவங்கினார். இயமனே! பிற தேவர்களைப் பணியாமல் தேவதேவனாகிய சிவபக்தனையே பரம்பொருள் என்று உணர்ந்து அப்பெருமானையே சரணாகதி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சிவ பக்தர்களையும் உலகத்தில் மஹேஸ்வரனை மனதில் தியானித்துக் கொண்டிருப்பவர்களையும் நித்திரையிலும் நடக்கையிலும் இருக்கையிலும் இரவும் பகலும் யாது செய்கையிலும் சிவத்யானம் அகலாது சிவா மஹா தேவா! சந்திரசேகரா! நீலகண்டா! சங்கரமஹேஸ்வரா! ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா! என்று சங்கராமஹேஸ்வரா! ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா! என்று பஜனை செய்பவர்களையும், சிவபெருமானை நித்திய நைமித்திக பூஜைகளால் மகிழச் செய்பவர்களையும் சிவபெருமானைப் புஷ்பம், தூபம், தீபம் முதலியவற்றால் ஆராதிப்பவர்களையும் சிவாலயத்தை ஜீர்னோதாரணம் செய்பவர்களையும் சிவாலயத்தைக் காலையிலும் மாலையிலும் திருவலகிட்டுச் சுத்தஞ் செய்பவர்களையும் அவர்கள் முன்னோரது மூன்று தலைமுறையினரையும் சிவாலயத்தைக் கட்டுவிப்போர்களையும், அவர்கள் வமிசத்தில் பிறக்கும் நூறு தலைமுறையினரையும் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்வித்தவர்களையும் அவர்கள் வம்சத்தில் பிறக்கும் ஆயுத புருஷர்களையும் நீ நெருங்கக் கூடாது. அவர்கள் சிவகணங்களுக்குச் சமமானவர். அவர்களை நீ தண்டிக்க முடியாது என்று பிரமதேவன் கூற, இயமன் அதற்கு இணங்கித் தனது சேவகர்களாகிய கிங்கரர்களுக்கு நாள்தோறும் இந்த விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முறைப்படிப் பூஜை செய்தவன் தன் மனத்தில் விரும்பிய கோரிக்கைகளையெல்லாம் சந்தேகமில்லாமல் சிந்திக்கப் பெறுவான். தேவர்களால் அர்ச்சிப்பதற்கு உரிய அர்ச்சாரூபமான சிவலிங்கத்தை தேன், பால், நெய், தயிர் முதலியவற்றால் அபிஷேகஞ் செய்தவன் ஆயிரம் பசுக்களை அருமையாளருக்குத் தானமளித்தவன் பெறும் பயன்களை வேதியருக்குப் பசு நெய்யைத் தானஞ் செய்தவன் பெறும் பயனைப் பெறுவான். ஆடகப் பிரமாணமான நெய்யினால் அபிஷேகித்தவன் தான் செய்த பாவங்களிலிருந்து விலகுவான், பூரணை அமாவாசைகளில் அர்ச்சாரூபமான சிவலிங்கத்தை பிரயத்தன பூர்வமாகப் பூஜித்தவன் சர்வபாபங்களிலிருந்தும் நீக்கப்படுவான். ஞானத்தாலாவது அஞ்ஞானத்தாலாவது ஒருவன் செய்த பாபங்கள் சிவபெருமானுக்குப் பிரதோஷங்காலத்தில் நெய்யபிஷேகம் செய்த அந்த க்ஷணமே அவனை விட்டு அகன்று போகும். தேவர்களால் சிறந்தவன் சிவபெருமான், அவ்யங்களில் சிறந்தது நெய். இந்தச் சர்வேஸ்வரகிருத சம்பந்தம் பாபங்களை வேரோடு அறுக்க வல்லது சிவபெருமானுக்குப் பசுவின் பாலால் சிறப்பாக அபிஷேகஞ் செய்தவன் இந்தவுலக்தை விட்டு நீங்கும் பொழுது, பாலே ஜலமாகப் பெருக்கெடுக்கும் நதியையும் பால் சம்பந்தமான சேற்றையுமுடைய வழியாகச் சிவலோகத்தை அடைந்து மகிழ்ச்சியும் சுகமும் ஸ்வஸ்தசித்தமும் ரோகமின்மையும் நல்ல உருவமும் பெற்று வாழ்ந்திருப்பான், தயிர் முதலிய பொருள்கள் பாலிலிருந்து உண்டாவதுபோல பெரும் போகங்கள் எல்லாம் சிவார்ப்பணமாக அபிஷேகித்த பாலினாலேயே உண்டாகும் தேகப் புஷ்டியை உண்டு பண்ணும் பாலினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தவன் திவ்யமான ஞானவிருத்தியை அடைவான். சிவபெருமான் பால் அபிஷேகத்தால் களிப்படைந்து அவ்வாறு அபிஷேகஞ் செய்தவனுக்கு நவக்கிரகங்களின் அனுகூலமும் புஷ்டியும் யாவரிடத்திலும் கிருபையும் உண்டாகும். நெய்யும் பாலும் சிவபெருமானுக்கு அபிஷேகித்தவுடன் சிவபெருமான் அருள் புரிவார் சிவபெருமானை எப்பொழுதும் நெய்யினாலும் பாலினாலும் அபிஷேகித்தவனுக்கு உலகில் யாவும் நன்மையாகவே அமையும் இதற்கு உதாரணமாக ஒரு பூர்வ சரிதத்தைச் சொல்லுகிறேன். பூர்வத்தில், பூஷ்ணன் என்பவனும் அவனது அதிரூபலாவண்யமான சுமதி என்னும் யவுவனமுடைய மனைவியும் சுவர்க்கலோகத்தை அடைந்து அங்கு பலவிதமாகக் கூடிமகிழ்ந்து சுகம் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கவுதமி என்பவள் அவர்களைக்கண்டு வியந்து, சுமதியைப்பார்த்து சுமதி! இந்தச் சொர்க்கலோகத்தில் இந்திராதி தேவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் கூட உனக்குள்ள காந்தியும் உன்னைப்போன்ற தேகமணமும் அதிக அழகும் அருவிலைப் பணிகளும் பட்டாடைகளும் இல்லை. இவை எல்லாவற்றையும் விட இந்திராதி தேவர்களையும் விட நீங்கள் மேம்பட்டிருக்கிறீர்கள்! உங்கள் மன ஒற்றுமையும் அவர்களுக்கு இல்லை இத்தகைய சிறப்புகளையெல்லாம் ஒருங்கேயடைந்த நீ உன் கணவனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாயே? இது உனக்குத் தவத்தால் கை கூடியதான பலத்தால் கிடைத்ததா? யாகாதி கிருத்தியங்களால் சம்பவித்ததா? அதை நீ எனக்கு முழுமையாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டாள்.
அதற்கு சுமதி சொன்னாள். என் கணவரின் மூதாதையர் யாவரும், குல பூர்வமாகச் சிவபெருமானை ஆராதித்து வந்து கடைசியில் என் கணவர் அந்த சாம்பவமூர்த்தியைக் குறித்து அநேகம் யாகங்களைச் செய்ய அந்த யாகத்தால் யாகபதியாகிய சங்கர பகவான் திருவுளங்களித்து, அனுக்கிரகஞ் செய்ததால், சுவர்க்க பிராப்தி உண்டாயிற்று. அந்த யாகத்தில் தீர்த்தோக ஸ்நானமும் கிருதஸ்நானமும் கணக்கின்றிச் செய்ததால் எங்கள் இருவருக்கும் திவ்யமான தேககாந்தியும் மனவொற்றுமையும் மிருது தன்மையும் சுகமும் யாவருக்கும் விருப்பமும் உண்டாயின. இவை யாவும் நெய்யினால் அபிஷேகம் செய்த பயனாகவே கிடைத்தன. அந்த யாகத்தில் மனோபீஷ்டமான விலையுயர்ந்த வஸ்திரங்களையும் நவரத்தின பூஷணங்களையும் சந்தனம் முதலிய பரிமள வஸ்துக்களையும் அநேக விதமான மலர் மாலைகளையும் சிவார்ப்பணமாக்கினோம். ஆகையால் சிவார்ப்பணம் செய்தவை யாவும் இப்பொழுது எங்களுக்குக் கிடைத்துள்ளன. சிவபெருமானை நானாவித நைவேத்தியங்களால் திருப்தி செய்வித்தோம். ஆகவே நாங்கள் இங்கு எப்போதும் திருப்தியாகவே இருக்கிறோம். சுவர்க்க காமியாகிய என் கணவர் சிவார்ச்சனை செய்யும்போது, நானும் அவருடன் இருந்து அர்ச்சனை செய்ததால் எனக்கு அற்புதமான புஷ்டி உண்டாகியிருக்கிறது. மனோ வாக்கு காயங்களால் எந்தெந்த கோரிக்கையோடு ஒருவன் சிவபெருமானது அர்ச்சாரூபமான இலிங்கத்தைப் பூஜித்தால், அவன் அவ்வக் கோரிக்கையை விரும்பியவாறே அடைவான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று கவுதமியைநோக்கி சுமதி சொன்னாள். ஆகையால் ஒருவன் சிவபெருமானைப் பக்தி பூர்வமாக அர்ச்சனை செய்பவனாயின் அவன் தேவர்களுக்கும் துர்லபமான போகபோக்கியங்களை அனுபவிப்பான். சந்தனம், குங்குமப்பூ, அகரு கர்ப்பூரம் முதலிய சுகந்தத் திரவியங்களால் சிவலிங்கத்தை உபலேபனம் (பூசுதம்) செய்தவன், அப்போதே சுபகரமான வரங்களைப் பெறுவான். சிவபெருமானுக்குக் கருஞ்சந்தனமும் கருந்தூபமும் விநியோகித்தவன் யோகியாவான் நல்ல சுகந்தமுடைய வேத உக்தமான சாம்பிராணி முதலியவற்றை நெய் கூட்டித் தூபங் கொடுத்தவன் துஷ்டி புஷ்டிகள் உண்டாக்கப் பெறுவான்.
மனத்திற்கு ரம்மியமில்லாத மலர்மாலைகளைச் சிவபெருமானுக்குச் சாற்றக்கூடாது. மனோஹரமான மலர்களால் தொடுத்த மாலைகளையே தேவதேவனுக்குச் சாற்றலாம். சிவபெருமானுக்கு விருப்பத்தைத் தரத்தக்கமலர்கள் மிருதுவானதாகவும் மனமுடையதாகவும் இருக்க வேண்டும். தாமரை மலரும் உலர்ந்திருப்பினும் வில்வபத்திரமும் நீலோத்பலமும் ஜாதி புஷ்பமும் மல்லிகையும், பாடலமும், கரவீரமும், ஆத்தியும் கொன்றையும் கோங்கும் சதபத்திரமும், துளசியும், அகத்திப்பூவும் முல்லையும் இருவாட்சியும் பலாசமும் உகந்தவை, இவ்வகை மலர்களிலேயே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். இவையேயன்றி மனத்துக்கும் பார்வைக்கும் ரம்மியமான மலர்கள் சிவராதனைக்குத் தக்கவையாகும். சிவந்த மலர்களும் கறுத்த மலர்களும் சிவலிங்கரூபத்தில் பூஷணார்த்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும், சிவபெருமானைச் சிவந்த மலர்களால் தினந்தோறும் பூஜிப்பவன் சித்தர். வித்தியாதரர் அப்சரஸ் கணங்கள் முதலானவருடன் பலகாலம் வாழ்ந்து மகிழ்ந்திருப்பான். முள்ளையுடையதும் உக்கிரகந்தமுடையதுமான ஊமத்தை மலர்களால் சிவலிங்கத்தைப் பூஜித்தவன். சிவகணங்களுக்குப் ப்ரீதிவானவான் மலர்கள் கிடைக்காவிட்டால் அறுகம்புல், ப்ருங்க ராஜபத்திரம் (கரசராங்கண்ணி) சமீபத்திரம், தமாலம், முதலியவற்றால் பூஜிக்கலாம். இவ்வாறு தினமும் இலிங்கமூர்த்தத்தில் பூஜிப்பவன். அப்சரஸ்கணங்களில் பூஜிக்கப்பட்டு சிவலோகவாசியாவான். அவனுக்கு ஒரு காலத்தில் உலகத்திலே பிறவியுண்டாயினும் பேரரசனாய் பெருஞ்செல்வத்துடன் ஏகசக்கராதிபதியாய் கிரமமாகமுக்தியடைவான். தாழை மலர்களால் சிவபெருமானை அர்ச்சிக்கக் கூடாது. மருதோன்றி மலர்களால் பூஜித்தவன் மிலேச்சனாவான். சுகந்தமான மலர்களாலும் சுகந்த கர்ப்பூர சந்தனங்களாலும் பரிசுத்தமான ஜலத்தினாலும் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை அபிஷேகம் செய்து பட்டினாலாவது பருத்தியினாலாவது நெய்யப்பட்ட ஆடை தரித்து மனோகரமான ருசியுள்ள விரும்பத்தக்க பக்ஷியங்களையும் சிறந்தவையான பலவகைப் பழங்களையும் சுவர்ண பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்து, சுவர்ணம், நவரத்தினம் முதலியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு மகாயோகியும் சதாசாரசம்பன்னுமான பிராமணனைச் சிவபெருமானாகவே பாவித்து ஸர்வாய வ்யக்த ரூபாய நாமநாதஸ்மை என்று சொல்லிக் கொண்டே சிவார்ப்பணம் செய்த பொருள்களில் சிலவற்றை அவ்வேதியனுக்குக் கொடுக்க வேண்டும். சங்கிராந்தி, லிஷுவத் புண்ணியகாலம், வ்யதிபாதம் தக்ஷிணயன, உத்தராயணங்கள், கிரஹணகாலம், பூரணை, அமாவாசை, சதுர்த்தசி அஷ்டமி முதலிய புண்ணிய காலங்களில் செய்யப்படும் பூஜை நைமித்திக பூஜை ஆகவே அந்தக் காலங்களில் சிவார்ச்சனை செய்தவர்கள் நித்திய பூஜை செய்வோரைவிட; ஆயிரம் பங்கு அதிகப்பயனை அடைவார்கள் இது சிவபெருமானாலேயே கூறப்பட்டது இவற்றை உள்ளது உள்ளபடி உமக்குச் சொன்னேன் என்று சநத்குமார முனிவர் வியாச மகரிஷிக்குச் சொன்னார். இவ்வாறு புராணிகர் நைமிசாரணிய வாசிகளுக்குக் கூறினார்.
17. யாகம், ஞானம், தியானம், தானம்
சவுனகாதி முனிவர்களே! வியாசபகவான் ஸநத்குமார முனிவரைப்பணிந்து மஹரிஷியே சிவபெருமானுக்குப் பரமபக்தராக இருந்து, வேதாகமங்களில் விதித்த முறைப்படி பக்தி செய்யும் சிவபக்தர்களைப் பூஜை செய்தவன், என்ன பயனை அடைவான் என்பதைச் சங்கரகமாக எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்க. ஸநத்குமாரமுனிவர் சொல்லுகிறார். வியாசமுனிவனே! சிவபெருமானிடத்திலேயே எப்போதும் தமது மன, வாக்கு, காயங்களை ஒப்புவித்த சிவபக்தர்களை; அச்சிவபெருமானாகவே பாவித்து பூஜித்தவன் எண்ணற்ற போகங்களை அனுபவித்து ஆயுள் முடிவில் சிவகடாஷத்தால் கைலாயப் பதவியை அடைவான். ஆகையால், சிறந்த போகங்களை அனுபவிக்க வேண்டும் என்று கருதுவோன் சிவபக்தர்களுக்குத் தனது சக்திக்கு இயன்றவரை வஞ்சனையில்லாமல் வஸ்திரம், ஆபரணம் அன்னம் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்துப் பக்தியோடு பூஜிக்கவேண்டும் சிவபக்தனுக்கு வஞ்சனையின்றித் தன்னால் இயன்றவரை விதிப்படிப் பணிவிடை செய்தவன் பிரபுவாயினும் ஏழையாயினும், அவன் அடையும் பயனைச் சொல்லுகிறேன். அவன் உயிர் நீங்கியவுடன் சூரியகிரணங்களைப் போன்ற ஒளியையுடைய விமானத்தில் ஏறித் தன் முன்னோரில் ஏழுதலை முறை வரையிலும் அதோகதியில் இருப்பவரையும் உடன் கொண்டு சிவமந்திரத்தையடைந்து மனோஹரமான போகங்களை அனுபவித்து தேவமான கணிதமான அநேகமாயிரம் ஆண்டுகள் பலரால் சேவிக்கப்பட்டுப் பின்னர் விஷ்ணுப்பதவியை அடைந்து அங்குள்ள போகங்களை அனுபவித்து மேற்கூறிய கால அளவு அங்குள்ளவரால் சேவிக்கப்பட்டுப் பிறகு பிரமலோகத்தையடைந்து அங்குள்ள விமலமான ஸ்திரீ முதலிய போகங்களை மேற் குறித்த கால அளவு வரை அனுபவித்து முறையே கந்தர்வலோகம் இந்திரலோகம் யஷலோகம் ஆகியவற்றையடைந்து ஆங்காங்குள்ள அளவற்ற போகங்களை அனுபவித்து மீண்டும் பூவுலகில் சிரேஷ்டமான வேதிய குலத்தில் தான் முன்பு அடைந்த விசேஷஞான குணமுடையவனாய்த் தோன்றி ஜன்மாந்தர புண்ணியவசத்தால் சற்குருவையுபாசித்து அக்குருவின் அருளால் சம்சாரபந்தத்திலிருந்து நீங்கி, சிவசாயுஜ்யத்தை அடைவான்.
வியாசரே! யாகம், கர்மயாகம், ஞானயாகம் என்ற இருவகைப்படும். அவற்றில் கர்மயாகமானது பலவிதமான தானம், பூஜை அக்கினி காரியம் முதலியவையாகும். தியானம், என்பது சர்வேஸ்வரனையடைய வேண்டும் என்னும் கொள்கையோடும் சாந்திராயணா சரணமும் சுவாத்தியாயமும் ஜெபமும் என மூவகையாகும். இதில் ஜெபம் என்பது எப்போதும் அடிக்கடிச் சிவ சிந்தனையுடன் இருப்பதால் அது ஞானயாகம் எனப்பெயர் வியாக்கியானம், சிரவணம், சிந்தித்தில் என்று ஐவகையாகும், இந்த ஐந்தில் முதலாகிய அத்தியாயனத்தைக் காட்டிலும் அத்தியயனமும், அத்தியயனத்தை விட வியாக்கியானமும், வியாக்கியானத்தை விட சிரவணமும், சிரவணத்தைவிட சிந்தித்தலும் ஒன்றுக் கொன்று அதிகமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஞானயாகத்தின் ஐவகையில் சிந்தித்தலே சிவபெருமான் திருவருளால் முக்தியைக் கொடுக்கத் தக்கது. ஞானமின்றித் தியானம் கைகூடாது யோக மார்க்கத்தாலேயே, ஞானம் பெறப்படும். ஆகையால் ஞானமும் தியானமும் கொண்டவன் சம்சாரமின்மையும் விகாரமற்ற மனமும் அநித்தியப் பொருள்களில் அவாவின்மையும் உடையது, அத்தகைய ஞானமும் எப்பொழுதும் யோகசாதனமுடைய பரிபூரண விரக்தனுக்கே உண்டாகும். அந்த ஞானமே முக்தி மார்க்கத்தைக் கொடுக்க வல்லது ஒருவர் சொல்வதைக் கேட்டு உண்டான ஞானமானது விகல்பபுத்தியை உண்டாக்கி இராகத் துவேஷாதிகளைக் கொண்டு சஞ்சலத்தை உண்டாக்கும். ஆகவே அது மோக்ஷத்தைக் கொடுக்கமாட்டாது யோக மார்க்கத்தால் சுத்தமாகவும் இராகத் துவேஷாதிகளின்றி விளக்கும் ஞானத்தைப் பண்டிதனானவன் சிறிது சிறிதாக அப்பியசிக்க வேண்டும். கேள்வியால் வரும் ஞானமானது ஆரம்பத்திலும் சிரவணத்திலும் அப்பியாசத்தாலும் நிஷ்டையாலும் இராகத் துவேஷாதிகளால் பலவகையாகிப் பரிசுத்தமான ஞானம் உண்டாவதற்கு வழியாகும். பாத்திர சுத்தஞ் செய்ய வேண்டியவர் முதலில் அழுக்கு ஜலத்தாலும் பிறகு சுத்த ஜலத்தாலும் கழுவும் போது முதலில் கழுவிய நீரால் சிறிது அழுக்குப் போவது போலச் சிறிது பயன் தரும் என்று கொள்ள வேண்டும். புழுதியால் மூடப்பட்ட ஆகாயமானது முறையே சிறிது சிறிதாகத் தோன்றி இறுதியில் பரிசுத்த ஞானத்தை உண்டாக்கும். அலைகளால் கலக்கப்பட்ட சமுத்திரம், அசைவற்று நிற்பது போல விஷயவாதனைகளால் அலையும் மனம் சலனமற்று இருப்பதே ஞானம் எனப்படும். மற்றவை அஞ்ஞானம் இராகத் துவேஷாதிகள் இல்லாததும் பாவனமயமுமாகிய சிரேஷ்ட ஞானமே முக்தியை அளிக்கக் கூடியது. அஞ்ஞானமாகிய பாசத்தால் கட்டப்பட்டுள்ள புருஷன் அமுக்தன் எனப்படுவான். ஆயினும் ஞானத்தால் அஞ்ஞானத்தை அகற்றிய பிறகு அந்தப் புருஷனே முக்தன் என வழங்கப்படுவான். சமுசாரத்திற்குக் காரணமாக இருப்பது அஞ்ஞானம். அஞ்ஞானியே சம்சாரச் சேற்றில் அழுந்திக் கிடப்பான். அகண்ட தேஜஸால் தமஸ் நசிப்பது போல ஞானத்தால் அஞ்ஞானம் ஒழியும்; அஞ்ஞானம் உள்ள வரையில் இராகத்துவேஷாதிகளால் தர்மா தர்மங்கள் உண்டாகின்றன. தர்மா தர்மங்கள் உள்ளவரையில் அவனுக்கு சரீரம் உண்டாகும் சரீரம் உள்ளவரையில் கிலேசங்களால் பாதிக்கப்படுவான் கிலேசத்தை ஒழிப்பதற்காக மீண்டும் பிறவியை அடையாத உபாயத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
அஃது எவ்வாறு எனில் தத்துவ ஞானம் அடைந்தாலன்றி அஞ்ஞானம் நசிக்காது. அஞ்ஞான நாசமுண்டான அந்த க்ஷணத்திலேயே இராகத்துவேஷாதிகள் உண்டாகாது அவை ஒழிந்தவுடனே புண்ணிய பாப பரிக்ஷயத்தால் பிறவி இல்லையாகும். பிறவியில்லாத பொழுது கிலேசம் முதலானவை உண்டாவதற்கு இடமில்லை. கிலேசங்கள் அற்ற இடத்தில் முக்தன் என்று சொல்லப்படுவான். ஆகையால் மனிதருக்குப் பலவிதத் துக்கங்களும் அஞ்ஞானத்தினாலேயே உண்டாகின்றன, அந்த அஞ்ஞானத்தை ஞானத்தாலன்றி கர்மாதிகளால் நசிக்க செய்யமுடியாது. ஞானத்தாலன்றி மற்றொன்றால் புண்ணிய பாப பரிக்ஷயமுண்டாகாது. ஆகையால் மோக்ஷத்தையடைய வேண்டியவன் ஞானத்தையே அடைய வேண்டும். வெண்கலம் புளியினால் சுத்தமாவதைப் போல ஒருவனது மனம் அவனது ஞானத்தால் புனிதமாகும். ஞானம் என்ற அமிர்த ரசத்தை ஒருமுறை அருந்தியவன். எல்லாக் காரியங்களையும் விடுத்து மீண்டும் அதையே அருந்தவே எப்போதும் விரும்புவான் அதன் தன்மை உணராது மற்ற விஷயங்களிலேயே மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பான். ஞானாம்ருதத்தால் திருப்தியடைந்த கிருதகிருத்தியனான சிவயோகி உலகத்தில் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமிராது. அப்படிச் செய்யத் தக்கது ஒன்று இருக்குமாயின் அவன் உண்மையான தத்துவஞானியல்லன் இதலோக பரலோகங்களில் அவன் செய்தற்குரிய காரியம் சிறிதுமில்லை. ஆகவே அவன் இவ்வுலகத்திலேயே முக்ததசையை அடைந்து பரிபூரணனாக விளங்குவான் ஞானத்தை விடப் பரிசுத்தமானதும் பரிசுத்தமாக்குவதும் வேறொன்றில்லை. அதைப் படிப்படியாக அப்பியசித்த பக்ஷத்தில் ஆத்ம சொரூபம் நன்றாக விளங்கும். விரதாசரணங்கள் தானங்கள் தவங்கள் நன்றாக விளங்கும். யாகங்கள் ஸந்நியாசம் முதலிய ஆசிரமதர்மங்கள் தீர்த்த யாத்திரைகள் முதலிய யாவும் சுவர்க்க பதவியை மட்டுமே உண்டு பண்ணவல்லவையேயன்றி பிறவியை ஒழிக்க வல்லவையன்று சாந்தியை அளிக்கும் சிறந்த ஞானம் ஒன்றே புனர்ஜன்ம நாசஞ்செய்ய வல்லதாகும். எப்பொழுதும் இந்திரிய நிக்கிரகமும் ஒரே மனமும் மாமுனிவர்களால் கூறப்பட்ட புராண தர்ம சிரவணமும் படனமும் உண்டாயிருக்கும் பக்ஷத்தில் பாபக்ஷய முண்டாகி அவ்வகை ஞானம் தோன்றி அதனால் முக்தி கைகூடும். யாகஞ்செய்தவன் தேவபோகங்களையடைவான். தவஞ்செய்தவன் பிரமபதவியை அடைவான் தானஞ் செய்தவன் பலவிதபோகங்களை அடைவான். ஞானப்பியாசம் செய்தவன் மோக்ஷத்தை அடைவான். அஞ்ஞானியோ புண்ணிய பாவங்களால் துன்பம் அடைவான் ஞானியோ தனது ஞானமாகிய கத்தியால் தன்னைப் பிறவிக்கு இழுக்கும் புண்ணிய பாவங்கள் ஆகிய சூத்திரத்தை அறுத்து பரம்பொருளாகிய சிவத்தை அடைவான் ஞானிகளுக்குச் சுபா சுப கர்மங்களால் பந்தம் உண்டானால் வினைக்கயிறால் கட்டப்பட்ட அவர்களுக்கு எவ்வாறு ரமுத்தி கைகூடும் என்று கேட்பீராகில் சொல்கிறேன் கேளும்.
தேகம் உள்ள வரையில் சுபாசுபகர்மங்களை இகலோகத்திலாவது பரலோகத்திலாவது அனுபவித்தே தீரவேண்டும். தர்மாதர்ம பரிக்ஷயத்தால் முக்தி கைகூடும் என்றதால், தர்மத்தைச் செய்யாமலும் அதர்மத்தைச் செய்யாமலும் இருப்பவன், முக்தியைப் பெறுவானோ என்றால் பெறமாட்டான் எவ்வாறு எனில் தர்மஞ் செய்யாதபோது அதர்மம் சித்தித்து நிச்சலத்துவம் உண்டாகாது. அதர்மம் செய்யாதபோது தர்மமும் கைகூடாது, ஆதலால் தர்மாதர்மங்களைப்பயன் விரும்பாது செய்து, அதனால் விளையும் புண்ணியபாபங்களை ஞானமாகிய அசியினால் நீக்கி, முக்தியை அடையவேண்டும். வியாச முனிவரே! அக்கினியானது உலர்ந்த விறகைத் தகிப்பதுபோல, ஞானம் என்னும் தீ, சுபாசுபங்களாலுண்டான தர்மாதர்மங்களாகிய விறகைத் தகித்து விடுகிறது. மணிமந்திர அவுதங்களையுடையவன் பாம்போடு பழகிக் கொண்டிருந்தாலும் விஷ உபாதையை அடையாததைப்போல் ஞானமுடையவன் இந்திரியங்களாகிய பாம்புகளுடன் கூடியிருப்பினும் அவற்றால் ஒரு துன்பமும் அடையமாட்டான். மந்திர அவுஷதிகளையுடையவன் விஷபானஞ் செய்தாலும் துன்பமடைய மாட்டான் அதுபோல ஞானமுடையவனாய் பாபங்கள் துன்புறுத்த மாட்டா. ஞானத்தைப் போலவே தியானமும் விளங்கும் அவையிரண்டும் சமமானவை. ஞானதியானங்களையுடைய முனிவன் சவுக்கியம் அடைந்து, ஆயுளின் முடிவில் மோக்ஷத்தை அடைவான். தியானத்தால் அகண்ட ஐஸ்வரியமும் ஐசுவரியத்தால் உத்தமமான சுகமும் உண்டாகும். பிறகு ஞானத்தால் அந்தச் சுகத்தை வெறுத்துப் பிறவியை ஒழித்து முக்தியை அடைவான் உத்கீதாதி பாசனைகள், யாகதானாதி அனுஷ்டானங்கள் தியான சமாதி முதலியவற்றால் உண்டாகத் தக்கஞானமானது நித்தமும் சுத்தமும் சூக்ஷ்மமும் பிரசன்னமும் தோஷகிதமும் சிரேஷ்டமும் முக்திஹேது மானதாகும். தியானயாகமே பிறயாகங்களைக் காட்டிலும் சிறந்ததென்று கொள்ள வேண்டும். அந்தர் யோகமான இந்தத் தியான யாகத்தால் எப்பொழுதும் சிவபெருமானைப் பூஜை செய்பவன் அடைதற்கரிய உயர்கதியை அடைவான். புலன்களை அடக்கி மனத்தைச் சிவபெருமானிடத்தில் இருத்தி, பத்துத்திசைகளிலும் நடுவிலும் இன்னும் பிறவிடங்களிலும் அச்சிவபிரானே இருக்கிறார் என்று தியானிப்பவனைப் பரமயோகி என்று உணரவேண்டும். கர்மயாகத்தைவிடத் தியானயாகம் நூறு பங்கு உயர்ந்தது, ஞானத்தியான சொரூபமும் சூக்ஷ்மமுமான சிவயோகமே சிறந்த மஹாயாகமாகும்.
சிவபூஜை செய்தவன், அகண்டமான பிரபல ராஜபோகமும் அக்கினி காரியஞ் செய்தவன் சம்பத்தும், ஜபம் செய்தவன் பாபநிவாரணமும், ஞானத்தியானங்களைச் செய்தவன் முக்தியும் பெறுவான். பாபத்தை ஒழித்தவனுக்கே ஞானத்தியானங்களில் மனஞ்செல்லும் ஒரு கோடி வருஷப் பியத்தனத்தால் யோக சித்தியும் அரைக்கோடி வருஷப் பிரயத்தனத்தால் அக்கினிகாரியச் சித்தியும், காற்கோடி வருஷ முயற்சியால் புண்ணியஸ்தல வாஸமும் புண்ணிய தீர்த்த ஸ்நானமும் கைகூடும், அக்கினி காரியஞ் செய்பவனுக்குப் பகவான் அக்கினியிலும் பண்டிதர்களுக்கு அவர்களது இதயத்திலும் அஞ்ஞானிகளுக்கு விக்கிரஹங்களிலும், ஞானவான்களுக்கு எல்லாப் பொருள்களிலும் விளங்குவதாகக் கொள்ளும் மகாயோகிகள் தங்கள் ஆன்மாவே பரமசிவம் என்று கொள்வார்களே தவிர விக்கிரகங்களில் தியானஞ் செய்யமாட்டார்கள். அந்த விக்கிரகங்களும் யோகிகளின் மனத்தால் தரிசித்தவாறே நிர்மணஞ் செய்யப்பட்டுள்ள சாந்தஸ்வரூபியாகிய சிவபெருமானைச் சர்வவியாபகன் என்று உணர்ந்து ஸ்மரணை செய்பவன் எவனோ அவன் இதயத்திலேயே சங்கரபகவானும் நீக்கமற எழுந்தருளியிருப்பார். இதயத்தில் தன்னுள்ளேயே விளங்கும் தலைவனைக் காணமுடியாதவர்கள் இறைவன் எங்கேயோ இருக்கிறான் என்று தேடித் திரிகிறார்கள், சர்வாந்தர் யாமியாய் எல்லாப் பொருள்களிலும் சிவபெருமான் நிறைந்திருக்கிறார் என்று உணர்ந்த சிவயோகிகள் ஒரு நாளாகிலும் அரைநாளாகிலும் வசித்த இடத்தின் பாக்கியமே பாக்கியம் அதுவே தீர்த்தம் அதுவே தபோவனம்! யோகம் செய்ய வேண்டும்! என்று கருதியவன் அவ்வாறு நினைத்தவுடனேயே அடையும் பயனை அநேகம் யாகங்களைச் செய்தவனும் அடையமாட்டான். நவமணியும் கற்களும் இரண்டும் கற்களாயினும் கல்லைச் சுமந்தவன் கஷ்டம் முதலியவற்றை அனுபவிக்கிறான் மணியைச் சுமந்தவன் சுகத்தை அடைகிறான். அதுபோலக் கர்மயாகஞ் செய்தவன் கஷ்டம் அனுபவித்தும் விசேஷ பயனையடையாமல் ஞானத் தியானயாகஞ்செய்பவன் சிறந்த பயனை அடைவான் உலகத்தின் அரசனாயிருப்பவனுக்கு அவன் அருகில் இருக்கும் அமைச்சர் முதலியோர் பிரீதி செய்தும் பிறர் பிரீதி செய்யாததும் போல, தியானயோகஞ் செய்யாதவர்கள் சிவபெருமானுக்குப் பிரியர்களாக மாட்டார்கள். யானையின் தந்தங்களில் உள்ளேயிருப்பவை அறுக்கப்படாமல் சுகமாயிருப்பதையும் வெளியே தோன்றுபவை அடிக்கடி அறுபட்டக் கஷ்டமடைவதும் போலவே சிவபெருமானை அந்தரங்கமானத் தியானயாகத்தால் பக்தி செய்பவர்கள் சுகமடைபவர்களாகவும் புறம்பேகர்ம யாகத்தால் பக்தி செய்பவர்கள் கஷ்டமடைபவர்களாகவும் கொள்ள வேண்டும்.
ஆகவே தியானயோகத்தால் மனதிற்கு மட்டுமே விஷயமாகவும் மகத்துவமும் உடையஞானம் உண்டாகும். அத்தகைய ஞானயோகத்தை அறிவுள்ளவன் எப்போதும் சிவார்ச்சனையாக செய்ய வேண்டும் ஆனால் கர்ம யாகத்தால் பயன் இல்லையோ என்று கேட்பீராயின் வியாச முனிவரே கர்மயாகத்தாலும் பயன் இருக்கிறது. அது எவ்வாறு? யானையைப் பிடிக்க வேண்டியவன் தன்னிடத்தில் நெடுநாளாய்ப்பழகி வந்த ஒரு யானையை தன்னுடன் கொண்டு கட்டளையடைந்து, ஆங்குப் பல காட்டு யானைகளுடன் போர் செய்து கொண்டிருக்கும் முரட்டு யானையைத் தன் யானையால் பிடித்துக் கொண்டு வருவதைப் போல அடைவதற்கு அரிய ஞான யாகத்தைத் தான் நெடுநாள் பழகிய கர்ம யாகத்தினாலேயே அடையலாம். ஆகாயத்தில் பறக்க விரும்பும் பறவையானது தன் ஒரு சிறகினால் சாத்தியப்படாமல் இரண்டு சிறகுகளாலும் பறப்பதைபோல, சிவசாயுஜ்யத்தை அடையவேண்டியவன் கர்மயாகத்தால் அடைந்தத் தியானயாக உதவியினால் அடைய வேண்டும் என்று பெரியோர்களால் சிலர் சொல்லுவார்கள். ஒரு முகூர்த்த காலம் சிவபெருமானைத் தியான யாகத்தால் அர்ச்சனை செய்தவன் பெறுகின்றபேற்றை அளவிட்டுச் சொல்ல இயலாது. தியான யாகம் செய்ய முயல்பவனுக்குத் தெய்வீகமாக அநேக விக்கினங்கள் சம்பவித்தபோதிலும் சிரத்தையும் குருபக்தியும் மட்டும் உண்டாயிருப்பது பற்றி, உருத்திர லோகத்தை அடைந்து அங்குள்ள சகல சுகங்களையும் அனுபவித்து; யோகிகளது புனிதமான குலத்தில் ஜனித்து ஞானயாகம் பெற்று சமுசார விரக்தியடைவான் அதமம் மத்திமம் உத்தமம் என்று சிரத்தை மூவகைப்படும் ஞானயோகமானது மூன்று பிறவிகளிலும் கைகூடப் பெறாதவனுக்கு அசிரத்தையுண்டென்று கருத வேண்டும். பக்தியோடு சிவபெருமானைத் தியானஞ்செய்பவன் விரதத்தாலும் தவத்தாலும் விரும்பத்தக்கவையாவும் பெற்றுஞானம் அடைந்து நித்தியமான மோக்ஷசுத்தை அடைவான் வியாசமுனிவனே இவ்வகையில் தியான யோகமகிமையையும் அந்த ஞானயோகத்தை அப்பியசிக்கும் சாந்த முடைய முனிவர்களுடைய பிரபாவத்தையும் சொன்னேன். இனி, அத்தகைய ஞானயாகஞ் செய்வோருக்குத் தானஞ் செய்தவன் பெறும் பேற்றினையும் சொல்லுகிறேன்.
வியாச முனிவனே! கர்மயாகஞ் செய்வோருக்கு ஒரு தரம் தானம் செய்தால் சாதாரணமாக தேவியாருக்குப் பத்து ஜனனங்களில் தானஞ் செய்த பயனும் தபோநிஷ்டர்களுக்குத் தானம் செய்தால் நூறு ஜனனங்களில் தானம் செய்த பயனும் கர்ம யாக தபோ யாகமுடையவருக்குத் தானம் செய்தால் ஆயிரம் ஜனனங்களில் செய்த பயனும், சிவபக்தர்களான தியானயாகமுடையவர்களுக்குத் தானஞ்செய்தால் லக்ஷம் ஜனனங்களில் செய்த பயனும் உண்டாகும். அற்பதான மாயினும் எக்காலங்களிலும் பயனளிக்கத்தக்கதாக முடியும். இதில் தேசம், காலம், விதி, சிரத்தை முதலியவற்றால் சத்பாத்திரமான சிவபக்தனுக்கு அற்பமாயினும் விசேஷமாயினும் சக்திக்கு ஏற்பச் செய்த தானமானது அக்ஷயமான பதவியைக் கொடுக்கும். தேச, காலங்களைக் கவனித்து விதிப்படிச் சிரத்தையோடு சத்பாத்திரனுக்குத் தானம் செய்தவனும் ஹோமஞ் செய்தவனும் அக்ஷயமான பயனடைவதில் சிறிதும் ஐயமில்லை. ஞானமாகிய ஜலத்தால் புனிதமாக்கப்பட்ட மனத்துடன் ஆசாரம், வமிசம், விபூதிதாரணம் முதலியனவுடையவன் சத்பாத்திர சிரேஷ்டனும் தானஞ் செய்தவனது கோரிக்கைகளைக் குறைவறக் கொடுக்கவல்லவனாவான். ஞானமின்மையாகிய நுரையையுடைய சமுசாரமாகிய சாகரத்தில் ஞானமாகிய தெப்பத்தால் தாண்டித்தன்னுடன் பலரையும் தாண்டச் செய்கிறவனும் பெரும் பாவமாகிய சமுத்திரத்தை ஞானமாகிய படகினால் எண்ணிறந்தோரையும் கரை காணச் செய்விக்கிறவனும் உத்தம பாத்திரமாவர், சிவயோகியானவன் எவன் வீட்டில் ஒரு வேளை பிøக்ஷ ஏற்கிறானோ, அவனுடைய வமிசத்திலிருப்பவர்கள் யாவரையும் முக்திக்கு அனுப்புவான். யாகத்தினாலும் தீர்த்த யாத்திரை முதலியவற்றாலும் உண்டாகும் பயன்கள் யாவும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் செய்தவனாலேயே உண்டாகும் சாந்தமும் சிவத்தியானமுமுடைய ஞானவானுக்கு சிரத்தையோடு ஒருமுறை அன்னமளித்தவன் தன்பாவங்களை எல்லாம் அப்போதே ஒழித்து இஷ்டகாமியங்களையெல்லாம் குறைவின்றி அடைவான்.
பிதுர்க்களை உத்தேசித்துச் சிரார்த்த காலங்களில் சிவபக்தர்களுக்கு அன்னமளித்தவன், தன் குலத்தவர்களைப் பதினோரு தலைமுறைவரை உடன்கொண்டு சிவலோகம் அடைவான். போஜன காலத்தில் சிவா! சங்கரா! என்று பகவன் நாமத்தைத் தியானஞ் செய்தவன் புசித்த உணவுகள் எல்லாம் சிவப்பிரீதியான பயனை ஏற்படுத்தும், சாஸ்திரோக்தப்படி சிவநிவேதனம் செய்து, அக்கினி காரியம் முடித்துத் தன் குருபாகத்தைக் குருவுக்குக் கொடுத்து, அங்கு வந்த பிராமண அதிதிகளுக்கும் அன்னமளித்துப் பிறகு புசிக்க வேண்டும் அல்லாதவன் அன்னம் புசித்தவனாகாமல் சமஸ்த பாவங்களையும் பக்ஷித்தவனாவான். அது எவ்வாறு என்றால், க்ருக்ஷி, விருத்தி, வர்த்தகம், கோபம், ஸம்மார்ஜனம் முதலியவற்றால் பலவிதமான பாவங்கள் புருஷர்களுக்கு விருத்தியாகிக் கொண்டிருக்கின்றன. அப்பாவங்களின் விருத்தியால் ஸம்மார்ஜனம் அஞ்சனம் தோயம் அக்னி குண்டம் நிபேஷனம் என்னும் பஞ்சசுகங்கள் எப்போதும் இல்லறத் தாரை அனுசரித்திருக்கின்றன. தான் புசிக்கும் பக்குவான்னங்கள் யாவும் சிவ அக்கினி குரு அதிதிகளுக்கு நிவேதித்துப் புசித்தால் இந்தப் பஞ்ச சுகங்களும் இதர பாவங்களும் இல்லறத் தோரை அடையாது, ஆகையால் அந்த உணவைச் சிவாதிகளுக்கு ஆராதித்தே புசிக்க வேண்டும். சிவ அக்கினி, குரு முதலியவர்களுக்கு எத்தனை பருக்கை நிவேதிக்கிறார்களோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் சிவபுரத்தில் வசிப்பார்கள். நெய் பக்ஷியங்கள் அன்னம் ஆகியவற்றை நிவேதித்தவன் நூறு பங்கு விசேஷப் பயனை அடைவான். சாஷ்டிகோதன நிவேதனம் செய்தவன் ஆயிரம் பங்கு பயனையடைவான் செஞ்சாலியன்னம் படைத்தவன் முன் கூறியதைவிடப் பத்துப் பங்கு அதிகப்பயனை அடைவான் கலம்சாலி யன்னம் படைத்தவன் லக்ஷக்கணக்கான பயனைப் பெறுவான். இவ்வாறு ஒன்றுக்கொன்று விசேஷ பயனைத் தரத்தக்கவை நல்ல பதார்த்தங்களோடு கூட்டி அன்னம் படைத்தவன், புண்ணிய விருத்தியை அடைவான். பாலன்ன நிவேதனத்தால் முந்தையதை விடப் பத்துப் பங்குப்பயன் உண்டு. நல்ல சுவையும் குளிர்ச்சியும் பச்சைக்கர்ப்பூரம் முதலியனவற்றின் மணமுமுடைய அறுசுவையுடன் கூடிய அன்னம் படைத்தவன். பத்துக் கோடிப் பங்கு விசேஷ புண்ணியத்தை அடைவான். இவ்விதமாக ருசியை உடையதும் நெய்யால் செய்ததும் மணமுடையதுமான இவற்றைப் பயபக்தியுடன் சிவ, அக்கினி, குரு, பந்துக்களுக்குச் சமர்ப்பித்துப் பிறகு தான் புசித்தமளவில் அக்ஷயமான பயனையடைவான். பிதுர்த்தினத்தில் சிவயோகிகளை வரவழைத்து இப்படிச் சுவையோடு கூடிய உணவைப்பக்தி பூர்வமாக அவர்களுக்குப் படைத்தவன் தன் பிதுர்க்கள் செய்த பாவங்களை நீக்கி சுவர்க்கத்தை அடையச் செய்வான் வஸ்திரம் அன்னம், பானம் முதலியவற்றைச் சிரத்தையுடன் சிவயோகிகளுக்கு ஒரு முறையாவது கொடுத்துப் பூஜித்தவன் அப்போதே பிரம விஷ்ணு, ருத்திரர்களைப் பூஜித்த பயனையடைவான். சிரார்த்த தினத்தில் சிவனை ஆராதித்து சிவ யோகிகளைப் பிஷை கொள்ள அழைத்தவுடனேயே அவனுடைய பிதுர்க்கள் ஆனந்தித்து நடனஞ் செய்தும் கானஞ் செய்தும் அவனை ஆசீர்வதிப்பார்கள்.
வியாசமுனிவனே! விபூதியை உத்தூளனம் செய்து கொண்டு உருத்திராஷ மணிமாலையணிந்து சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு சிவயோகி ஒருவன் வந்து வாசலில் நின்றவுடனேயே அந்த வீட்டிற்குத் தன தானிய சம்பத்துகள் சேரும். ஆகையால் அதிதி வருவதை உணர்ந்தவன் அவனைக்கும்பிட்டு எதிர் கொண்டு அழைத்து வந்து தன் சக்திக்கு ஏற்றபடி பக்தியுடன் அன்னபானாதிகளால் அவனைத் திருப்தி செய்ய வேண்டும். அந்த அதிதி தேஜோரூபமுடையவனாயினும் விரூபியாயினும் மலினனாயினும் மலின வஸ்திரமுடையவனாயினும் அவன் இப்படியிருக்கிறானே என்று யோசிக்காமல் இவன் சிவயோகியே என்று உள்ளத்தில் கருதி உபசரிக்க வேண்டும். தன் வீட்டுக்கு வந்த அதிதியைத் துவேஷித்த இல்லறத்தோன் சாஷாத் சிவபெருமானையும் எல்லாத் தேவர்களையும் வேதங்களையும் யாகங்களையும் ஆகமங்களையும் துவேஷித்தவனாகி அதோமுகனாகவும் ஊர்த்துவ பாதனாகவும் நகரத்தில் பெருந்துயர் அனுபவித்து பலவித புழுக்களால் கடிக்கப்பட்டு அக்கினியால் தகிக்கப்பட்டு, கல்பாந்தம் வரையில் அநேக கோரமான நரகங்களில் பாதிக்கப்படுவான். சிவயோகிகளை அபராதிகள் என்று ஒருவன் சொல்லும்போது கேட்டுக் கொண்டிருந்தவன் இன்னும் விசேஷ நரகங்களில் இவ்வுலகம் உள்ள வரையில் பாதிக்கப்படுவான் சிவயோகியை அபராதிஎன்று சொல்பவன் விசேஷமான பாவங்களை அனுபவிப்பான் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஆயினும் சொல்பவனைக் காட்டிலும் கேட்பவன் இரட்டிப்புப் பாவத்தை அனுபவிப்பான் தூஷிப்பவன் தூஷணையைக் கேட்டவன் அதை அங்கீகரிப்பவன் தூஷிக்காலம் என்றவன், அவர்களுடன் கூடியவன் ஆகிய இவர்கள் ஐவரும் பஞ்சமாபாவிகள் என்று வழங்கப்படுவர்.
அஞ்ஞானமாகியச் சேற்றில் அழுந்தித் தன்னை இரட்சித்துக் கொள்ள சக்தியற்றுப் பாவமாகிய மலைகளால் மறைக்கப்பட்டுச் சற்குணம் சிறிதுமில்லாதவன் அபாத்திரவான் என்று அறிந்து கொள்ள வேண்டும். அபாத்திரனுக்குத் தானம் கொடுத்த பக்ஷத்தில் சுடாத பச்சை மண்ணால் செய்த பாத்திரத்தில் சொரிந்த ஜலமானது அதில் நிற்காது. பாத்திரத்தை விரித்துக் கொண்டு கீழே போய் விடுவதைப் போல, அந்தத் தானமும் பயனற்றதாகி விடும் அத்தானம் வாங்கியதைப் பறிக்க வல்லமையில்லாமல் தானம் ஏற்ற அபாத்திரனும் அழிவான். மேலும் அபாத்திரனுக்குக் கொடுத்த தானம் களர் நிலத்தில் விதைத்த விதையையும் சாம்பலறிச் சொரிந்த ஹோம திரவியத்தையும் போலப் பயனின்றி முடியும். ஞானஹீனனாகிய அபாத்திர வேதியனுடைய ஜன்மமானது ஸ்திரீயை அடைந்த நபும்ஸகனைப் போல நிஷ்பலமாகும். அபாத்திரனும் அவனுக்குத் தானங் கொடுத்தவனும் இரும்புத் தெப்பத்தில் ஏறிச் சலத்தைத் தாண்ட வேண்டியவன் தெப்பமும் தானும் மூழ்கி ஒழிவது போல, இருவரும் அஞ்ஞானத்தில் அழுந்திவருந்துவார்கள். காருணியமாகவும் சிரத்தா பக்தியோடும் சத்பாத்திரத்தில் தானஞ் செய்பவனது தானமே உத்தமக் கோரிக்கைகளையெல்லாம் கொடுப்பதாகும். குருடர், தரித்திரர், முடவர் திக்கற்றவர், பாலர்கள் விருத்தர்கள், யோகிகள், இவர்களை இல்வாழ்வோன் அதிதிகளைப் போஷிப்பதைப் போலவே தன் சக்திகேற்ற உதவி செய்ய வேண்டும். ஞானிகளை அவர்களது யோக்கியதைக்காகவும் பிறரை அவ்வாறில்லாதவராயினும் மானிடப்பிறவிவகித்ததற்கு ஏற்பப் பரோபகாரச் சிந்தனையோடும் உதவி புரிய வேண்டும். அதிதிகளும் சற்பாத்திரரும் தமக்குத்தானம் கொடுப்பவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தால் யாசிக்கின்றனரேயன்றித் தமது சுயப்பிரயோஜனத்திற்காக மட்டும் யாசிப்பவர்களல்லர் ஆகையால் தரித்திரனும் சாதுவுமாக இருப்பவனை அதிகப்பிரயத்தனத்தோடும் தயையோடும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பவனே இல்வாழ்வோன் எனப்படுவான். தானஞ் செய்யாமையினாலேயே ஒருவனுக்குத் தரித்திரமும் தானஞ் செய்வதனாலே சம்பத்தும் உண்டாகின்றன, அதிதியானவன் கொடையாளிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையினாலேயே தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அதனால் கொடுப்பவன் மேல் உலகத்திலும் வாங்குபவன் கீழ் உலகத்திலும் இருப்பார்கள். யாசகன் எனக்குக் கொடு! என்று கேட்பது தாதாவுக்குச் சில விஷயங்களைப் போதிப்பான். அவை யாசிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அது முற்பிறவியில் தானஞ் செய்யாமையாலேயே உண்டானது. ஆகையால் இவனுக்குத் தானம் கொடுக்காத பட்சத்தில் இவனைப் போலவே நமக்கும் சம்பவிக்கும் ஆகையால் யாசகனைப் பூஜிக்காதவன்யாவன்? தானஞ் செய்ததனாலேயே சொர்க்கத்தை அடைவான். இந்த உலகத்தில் அதிதிகளைவிடப் பந்துக்கள் யாவருளர்? கொடையாளிக்கு இகலோகத்திலும் பரலோகத்திலும் பயனடையச் செய்பவர்களே யாசகர்கள் என்று உணர வேண்டும் நாள்தோறும் வந்து யாசிப்பவர்கள் அதிதிகள் அல்லர் திரவியவான்கள் யாசிக்க வருவாரானால் அவர்களும் அதிதிகள் அல்லர்.
ஸ்படிகத்துக்கு உற்ற அழுக்கைத் துடைத்தவுடனேயே நீங்குவது போல அப்போதைக்கு அப்போது தனக்குக் கிடைத்தப் பாவங்களைப் பரிகரிப்பவர்களே அதிதிகள். அத்தகைய அதிதி தானம் ஏற்றானாயின் தானும் தாதாவும் ஊர்த்துவலோகப் பிராப்தி அடைவர். தானம் கொடுப்பவனும் ஏற்போனுமாகிய இருவரில் கொடுப்போன் மேல் உலகத்தையும் ஏற்போன் கீழ் உலகத்தையும் பெறுவார் என்பதைத் தானகாலத்தில் அவர்கள் கைகளே உணர்த்துகின்றன. ஏழையாகிய யாசகன் தன் வீட்டை அடைந்து யாசிக்கையில் வணிகதர்மத்தை அனுசரித்து அவனைத் திரஸ்கரித்து, பிறரை எதிர்பார்ப்பவன் கொடையாளி யாகமாட்டான். உலகத்தில் யாசகர் இல்லாவிட்டால் தர்மம் என்பதே கிடையாது. ஆகையால் யாசகர் இருக்கவேண்டுவது தான் சாதுக்களான அதிதிகளுக்குத் தானஞ் செய்வதால் பெறும் பயனை, யாசகருக்கு உதவி செய்வதாலும் அடையலாம் சாதுக்களை வித்யா விஷயமாகப் பரீக்ஷிப்பவன் உலுத்தன். அவனுக்குச் சத்பாத்திரத்தாலாவது துஷ்பாத்திரத்திலாவது ஏழைகளிடத்தாவது தானம், தயை, பரோபகாரம் முதலியன சிறிதும் உண்டாகாது. இல்வாழ்வோரில் சிலர், வாயினால் மட்டும் மரியாதை பேசி, உபசா! வார்த்தைகள் சொல்லி கடைசியில் ஒன்றும் கொடுக்காமல் அனுப்புவோரும் இருக்கிறார்கள். அதிதிகளைக் கண்டவுடனே எழுந்திருத்தல் எதிர் செல்லல் ÷க்ஷமம் விசாரித்தல், ஆசனம் கொடுத்து அதில் இருக்கச் செய்தல், கால்கழுவச் செய்தல் பிரியமான வார்த்தைகளைக் கூறல், அவர்கள் செல்லும் போது பின்தொடர்தல் என்னும் ஏழும் இல்வாழ்வோனைச் சுவர்க்கமடையச் செய்யும் சோபனங்களாகும். பொருளுள்ள வரையில் தன் சக்திக்கு ஏற்பத் தானஞ் செய்யவேண்டும் என்ற யோசனை உண்டான பொழுதே யாசகனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இது தர்மராஜனான யமனுக்குத் துணையான தர்மமாக முன்னின்று அவனை நரகத்தில் தள்ளாமல் தர்மத்திற்குச் செலுத்தும், தானஞ் செய்வதிலேயே விருப்பமுடையவன் சொர்க்கவாசியேயாவான். பிரிய வார்த்தையோடு செய்த தானம் சிறந்தது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள் ÷க்ஷமத்தை அடைய விரும்புபவன் ஒரு காலத்திலாவது அன்பு பாராட்டி சத்பாத்திரனாகவுள்ள ஒரு வேதியனுக்கு உபசார பூர்வமாகத் தன்னால் இயன்றமட்டும் தானஞ்செய்தால் இஷ்டமான கோரிக்கையையும் சிறந்த கீர்த்தியையும் அடைவான். தானஞ் செய்யச்சிறிதும் சக்தியில்லாதவன் தன் வீட்டுக்கு வந்த யாசகனுக்கு நல்லவார்த்தைகள் சொல்லி செல்லவிடுவதும் சிறிது பயன் தரும் என்று பெரியோர் கூறுவார்கள். ஒருவன் வீட்டுக்கு வந்தவனை கடினமான வார்த்தைகளால் மனம் நோகச் செய்து. அதிகமாகத் தானம் செய்தாலும் அது தான் பயனைச் சிறிதும் கொடுக்கமாட்டாது. தானம், விரதம், நியமம், யாகம். தியானம் தவம் இவையாவுமே மனப்பூர்வமாகச் செய்யத் தக்கவை. அவ்வாறில்லாமல் நிர்பந்தத்தால் செய்தவன் சிறிய பயனையும் அடையமாட்டான் தானத்தைச் சிரத்தையோடு செய்தவனும் பரிசுத்தமான மனத்துடன் தானம் ஏற்றவனும் சுவர்க்கத்தை அடைவார்கள். நரகம் ஒரு காலத்திலும் அவர்கள் கண்களில் புலப்படாது, உதாரகுணம் சத்சாவகாசம் சிநேகத் தன்மை! அசூயையின்மை ஆகிய ஐந்தும் வள்ளற்குரிய குணங்களாலும் இவை பெரும் பயன்களைக் கொடுக்கக் கூடியவை. காசி, குரு÷க்ஷத்திரம், பிரயாகை, புஷ்கரம், கங்கா சமுத்திர சங்கமம் நைமிசாரண்யம். ஸ்ரீ பர்வதம், மஹா புண்ணியகரமான கோகர்ணம்; ஞானபர்வதம் இவை சுரர்சித்தர் முதலியோரால் எப்போதும் சேவிக்கப்படும் புண்ணிய ÷க்ஷத்திரங்கள் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடங்களெல்லாம் புண்ணிய ÷க்ஷத்திரங்களே! பசுக்கள் சித்தர்கள் முனிவர்கள் வசிக்கும் இடங்கள் யாவும் புண்ணிய ÷க்ஷத்தரங்களேயாகும். சிவ÷க்ஷத்திரங்களில் எவ்விடத்திலாவது அற்பதானம் கொடுத்தாலும் அது சிவ÷க்ஷத்திர மகிமையால் எண்ணற்ற பயன்களைத் தருவதாகும் சந்திர சூரியர் கிரகண காலமும் விஷ்வத்புண்ணிய காலமும், உத்தராயண, தக்ஷிணாயன காலமும் வியதிபாதமும் ஷடசீத் முதலிய காலங்களும் மாதப் பிறப்பும் புண்ணியத்தை விருத்தி செய்யத்தக்க காலங்கள் என்று சொல்லப்படும். இத்தகைய புண்ணிய காலங்களில் மகாபக்தியோடு தானஞ் செய்தால் அது அக்ஷயமாகும் ஞானத்துக்கும் சுகிர்தத்துக்கும் சிரத்தையே தாயாகும். ஆகையால் சிரத்தையுடன் கூடிய மனமுடையவனாய் ÷க்ஷமத்தைக் கோருகிறவன் தானஞ் செய்ய வேண்டும் சத்பாத்திரமானவனுக்குத் தேசமும் காலமும் உணர்ந்து. சிரத்தையோடு செய்த தானம் சமஸ்த காமியங்களையும் அவன் விரும்பிய வகையிலேயே அடையச் செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் சிரத்தையேயாகும் என்று ஸநத்குமார முனிவர் வியாச மகரிஷிக்குக் கூறினார். இவ்வாறு சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.
18. பாப விவரணம்
சூத முனிவர், சவுனகாதி முனிவர்களை நோக்கி கூறலானார். மனம், வாக்கு, காயம், ஆகியவற்றால் தோன்றுவதும் நரகத்திற்கு ஏதுவுமாகிய பெரிய பாபங்களைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். பரஸ்திரீகளை அடைய விரும்புதல், அன்னியர் பொருள்களை அபகரிக்க எண்ணுதல், அபகாரஞ் செய்யவேண்டும் என்றே நினைத்தல், செய்யத்தகாத காரியங்களையெல்லாம் செய்ய விரும்புதல் ஆகிய இந்த நான்கும் மானஸீக பாபங்கள் எனப்படும். சம்பந்தமின்றிப் பேசுதல் பிரியமற்ற சம்பாஷணை பொய் பேசுதல், புறங்கூறுதல் ஆகிய இந்த நான்கும் வாசிகபாபங்கள் எனப்படும். புசிக்கத் தகாதவற்றைப் புசித்தல், ஜீவஹிம்சை, நிஷித்தகாரியா சரணம், பிறர்பொருள் அபகரித்தல் ஆகிய இந்த நான்கும் காயிகபாவங்கள் எனப்படும். இந்தப் பாபங்கள் பன்னிரண்டும் மானுடருக்கு நகரத்தை உண்டுபண்ணச் சாதகமானவை எண்ணற்ற துஷ்கர்மப் பயனைக் கொடுக்கத்தக்க இப்பாபங்களின் பயன்களைச் சொல்லுகிறேன். முனிவர்களே, சம்சாரமாகிய வனத்தைக் கடக்கச் செய்யும் சர்வேஸ்வரனைத் தூஷிப்பவர்கள் மஹாபாபிகள். ஈஸ்வரனையும் சாஸ்திரங்களையும் சர்வார்த்த ஞானத்தையும் தூஷிப்பவர்கள் மஹாபாதகர்கள். ஆகையால் அகோர நரகத்தையடைந்து அவர்கள் படும்பாட்டினை ஒருவராலும் சொல்ல முடியாது. சிவஞானத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் தபோ நிஷ்டனையும் குருவையும் பிதுர்க்களையும் நிந்திப்பவர்கள் சிறந்த நரகமான அதோகதியை அடைவார்கள். சிவநிந்தை குருநிந்தை, சிவஞான தேவர் பொருளை அபகரித்தல் வேதியர் பொருளை அழித்தல், ஆகிய இவை மகாபாதகங்கள் மூர்க்கர்கள் சிவஞானத்தை உணர்த்தும் நூல்கள் அபகரித்ததனால் அடையும் பாதகங்களும் மஹாபாதகங்களேயாகும். சர்வேஸ்வரனைப் பூஜித்துக் கொண்டிருக்கக் கண்டு மகிழ்ச்சியடையாதவர்களும் நமஸ்கரியாதவர்களும் பயபக்தியற்றிருப்பவர்களும் இஷ்டப்படி நடப்பவர்களும் குருசந்தியிலும் அக்கினி சந்நியிலும் இவ்வாறு இருப்பவர்களும் மகாபாதகர்களேயாவர். பருவகாலங்களில் சிவாலயத்தில் திருத்தொண்டினை விதிப்படிச் செய்யாதவர்களும் குருபூஜை செய்யாதவர்களும் ஞானயோகிகளின்றிக் கர்மயோகிகளாக இருந்தால் மகாபாதகர்களேயாவர். சிவாசாரநிவாரணம் சிவபக்த நிந்தை சிவாகமங்களைப் பூஜியாமை அத்தியயனஞ் செய்யாமை எழுதாமை அஞ்ஞானத்தால் சீலமில்லாத மொழிகளைக் கேட்டல் உச்சரித்தல் பொருள் ஆகையினால் நீடித்தமான உபசாரங்களைச் செய்தல், பரிசுத்தமில்லாத இடங்களில் ஞானபாகமாகிய வேதம் முதலியவற்றைச் சொல்லுதல், பொய்பேசுதல், சக்தியிருந்தும் தானஞ் செய்யாமை, சுத்தமான இடங்களில் சிவசரிதம் சொல்லும்போது அசுத்தமாக அங்கு சென்று சிரவணஞ் செய்தல், குருவினால் நூல் ஆராய்ச்சியுற்று யுக்தா யுக்தம் உணர்ந்து அந்தக் குருவுக்குப் பக்திசெய்யாமல் அவரை அவமதித்து, அவர் கட்டளையைக் கடந்து எதிர்த்துப் பேசுதல், குருபூஜை செய்யும்போது அலக்ஷியம் ரோகியும் அசக்தனும் பரதேசியும் சத்துரு பாதையுற்றவனுமாகிய குருவை அல்லது ஒருவனைப் புறக்கணித்தல், குரு பத்தினி, புத்திர மித்திரரிடத்தில் அவமானஞ் செய்தல் தர்ம மார்க்கத்தை உணர்த்தும் குருவுக்கு விசேஷ அவமானஞ் செய்தல் ஆகிய இவை ஒவ்வொன்றும் செய்தோர் சிவநிந்தையால் அடையத் தக்கப் பாவத்தை அடைவார்கள்.
முனிவர்களே, பிரமஹத்தி செய்தவனும் பொன் திருடியவனும் மதுபானஞ் செய்தவனும், குருபத்தினியைக் கூடியவனும் இவர்களோடு சேர்ந்தவனும் ஆகிய ஐவரும் பஞ்சமகாபாதகர்கள், குரோதம், லோபம், பயம், துவேஷம் முதலியவற்றால் வேதியனைக் கொல்ல வேண்டும் என்று கருதியவன், பொருள் கொடுப்பேன் என்று வேதியனை அழைத்துப் பிறகு கொடாதவன், காரணமின்றி ஒருவனைத் தூஷிப்பவன், வித்யாபிமானத்தால் சபா நாயகனாக அமர்ந்திருக்கும் சத்பிராமணனை இறுமாப்பால் எதிர்த்து அவமதிப்பவன், தானே யாவற்றிலும் வல்லவன் என்று பிறரிடம் தற்புகழ்ச்சி செய்து கொள்பவன், பிறருடைய நற்குணங்களை, மறைந்து அவர்களுக்கு இல்லாத துர்க்குணங்களையெல்லாம் உடையோன் என்று கூறுவோன் பசிதாகத்தால் வருந்திய சத்புருஷனைத் தன் வீட்டினுள்ளே சேர்க்காதவன் பிறருக்குப் பயத்தையே ஏற்படுத்துவோன் பாவசுபாவத்தால் பிறர் தோஷங்களை மன்னனிடம் சொல்லி, அவன் ஜீவனத்தைக் கெடுப்பவன், பசியால் வருந்திய, பசு பார்ப்பார். குரு முதலியோரை விக்கினமுறச் செய்பவன், தேவபூமி பிராமணபூமி கோபூமியாகவுள்ளவற்றைத் தன் பலத்தால் கிரஹித்துக் கொள்பவன் முதலியோர் பிரமஹத்தி செய்தவர்களுக்குச் சமமாவார்கள். தேவ வேதியரின் சொத்துக்களைக்கிரகித்தல் பிரமஹத்திக்குச் சமானமான பாவமென்று உணரவேண்டும் இதற்குச் சந்தேமேயில்லை வேதத்தையும் சிவஞானத்தையும் அறிந்தும் மூடனாய் அவற்றை விடுத்த வேதியனும் அனுசிதமானப் பூஜையைக் கைக்கொண்டு நியதியான பூஜையை விட்டவனும் பஞ்சயக்ஞங்களை விட்டவனும் சுராபானம் செய்ததற்குச் சரியான பாபத்தை அடைவான், தாய் தகப்பனை நீங்கியதால் வரும் பாபமும் வேதியனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொன்ன பாவமும், சிவபக்தர்களை நிந்திப்பதால் வரும் பாபமும் புசிக்கத்தகாதவற்றைப் புசித்ததால் பாபமும் வனத்தில் திரியும் மான் முதலிய மிருகங்களையும் பறவைகளையும் நிரபராதிகளாக இருக்கையில் கொன்றதால் வரும் பாபமும் சிவபக்தனைச் சாதாரண வேதியனுக்குப் பணி செய்க என்று பணிப்பதால் வரும் பாபமும், பசுக்கள் செல்லும் வழியிலும், வனத்திலும், கிராமத்திலும் நெருப்பு வைப்பதால் வரும் பாபமும் மகாகோரமானவை. அவை பிரமஹத்திக்குச் சமானமானவை அறிவு முதலியவற்றால் குறைந்த ஒருவனுடைய செல்வத்தை அபகரித்தல், புருஷர்கள் ஸ்திரீகள் யானைகள் குதிரைகள், பசுக்கள் பூமி, வெள்ளி, வஸ்திரம், தானியம், இரசப் பொருள்கள், சந்தனம், அகரு, கர்ப்பூரம், கஸ்தூரி தூப திரவியங்கள் முதலியவற்றைத் திருடல், பொன், திருடலுக்குச் சமமான பாபங்கள் விவாக தசையடைந்த கன்னிகையைக் கோரிவந்த தக்கவனுக்குக் கொடுக்காமல் வீட்டில் வைத்திருந்தல், புத்திரன் மனைவியாகிய மருகியோடும் நண்பனின் மனைவியோடும், உடன் பிறந்தவளோடும் புஷ்பவதியாகாத பெண்ணோடும் சண்டாளஸ்திரீயோடும் புஷ்பவதியாகாத பெண்ணோடும் கூடி மகிழ நினைத்தல் முதலியவற்றால் வரும் பாபங்கள்யாவும் குரு பத்தினியைக் கூடுவதான பாவத்திற்குச் சமமானவை இனி இவற்றிற்கு இயைந்த உபபாதகங்களையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.
சவுனகாதி முனிவர்களே! வேதியனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிய பொருளை அவனுக்குக் கொடாமல் நிறுத்திக் கொள்வதும் பிராமணனுக்குத் தானங்கொடுத்த பிறகு கொடுத்து விட்டேனே என்று நினைப்பதும் வேதியன் பொருளை அபகரிப்பதும் சமயாசாரத் தர்மங்களைக் கைவிடுவதும் மகாமானியாக இருப்பதும் கோபியாக இருப்பதும் டம்பமாக இருப்பதும் செய்ந்நன்றி மறப்பதும் மங்கை புஷ்பம் சந்தனம் முதலியவற்றில் பெருவிருப்பமும் கிருபையின்மையும் வஞ்சனையும் பொறாமையும், பரதார கமனம் பதிவிரதைகளைத் தூஷித்தல், மூத்தவன் மணஞ்செய்து கொள்வதற்கு முன்னால் இளையவன் மணமுடித்துக் கொள்ளுதல் இளையவன் மணஞ்செய்து கொண்டதைக் கண்டு மூத்தவன் வருந்துதல், இத்தகைய இருவருக்கும் தானம் கொடுத்தல், பிறரைவஞ்சித்தல், புத்திரர் மித்திரர் களத்திரர், யஜமானர், சாது பந்துக்கள், தவசிகள் முதலியோரைத் தனலோபத்தால் கைவிடுதல் பசுக்கள், மன்னர்கள் வைசியர்கள் இவர்களை வதைத்தல் சிவாலயத்திலுள்ள விருக்ஷத்தைச் சேதித்தல், நந்தவனத்தை அழித்தல் சிவ ÷க்ஷத்திர வாசிகளுக்குத் தோஷம் செய்தல், பசு, தனம், தானியம் முதலியவற்றை அபாத்திரனுக்குத் தானஞ் செய்தல் ஸ்வர்ணம், பசு முதலியவற்றைத் திருடுதல் சொல்லத் தகாதவரிடத்தில் வேதம் சொல்லுதல், யாக விக்கிரயம் தர்மவனத்தை விற்றல், தர்ம தடாகங்களை விற்றல், மனைவி புத்திரர் முதலானோரை விற்றல், தீர்த்தயாத்திரை செய்வோருடைய விரதங்களை விக்கினஞ் செய்தல், ஸ்திரீதனத்தால் ஜீவனம் செய்தல், கர்மத்தால் பெண்களுக்குச் சுவாதீனப்படுதல், விபசாரி சாவகாசஞ் செய்தல், இழிகுலமாதர் மீது விருப்பங்கொள்ளல் வயோதிகத் தசையில் மணம் புரிந்து கொள்ளுதல், எருதை வாகனமாகக் கொள்ளல் உச்சாண்டம் செய்தல், முறையறியாமல் வைத்தியம் செய்தல், சிவஞானப்பிரதி பாதகமான வேதத்தைப் பொருள் வாங்கிக் கொண்டு செல்லுதல் விரதங்களை விடுதல், குலாசார தர்மங்களைக்கைவிடுதல் பொய் நூல்களைப்பயிலல் ஸ்ருதி ஸ்மிருதிகளுக்கு விரோதமாக வாதித்தல், தேவநிந்தை குருநிந்தை, சத்ஜனநிந்தை கோநிந்தை பிராமண நிந்தை இராஜ நிந்தை தேவபூஜா நிக்கிரகம் குருபூஜா நிக்கிரகம், சீல மற்ற நாஸ்திகருடன் சேருதல், பருவகாலத்திலாவது பகற்காலத்திலாவது ஜலத்திலாவது ஸ்திரீ சங்கமம் செய்தல், மனைவி புத்திரர்மித்திரர் முதலானோரைக் கடிந்து பேசுதல், தந்தையை வெறுத்தல் காலத்தில் கெடுத்தல், ஏரி, குளம் முதலியவற்றின் கரையை இடித்தல் உடன் உண்ணும் உறவினரைப் பிரியச் செய்தல் முதலியவற்றால் உண்டாகும் பாபங்களை அடைந்த ஸ்திரீகளாவது புருஷர்களாவது உபபாதகர்கள் எனப்படுவர் இன்னும் இவற்றுக்குச் சமமான சில பாவங்களைச் சொல்லுகிறேன்.
பசு பிராமணன், கன்னிகை; சுவாமி மித்திரன், தவசி முதலானோருடைய காரியங்களை அழித்தல், பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுதல், பிறருடையப் பொருளை அபகரிக்கத் திட்டமிடுதல், பிறரைக் கெடுக்கத் தந்திரஞ் செய்தல், பிராமணனுக்குத் துக்கம் உண்டாக்குதல், ஒருவனைப் பாணத்தால் குத்தித் தொந்தரவு செய்தல், வேதியன் சூத்தர சேவை செய்தல், விருப்பத்தால் மதுவாசனையைக் காணுதல் ஹிம்சை செய்வதிலே மனங்கொண்டிருத்தல், அயோக்கியனாக இருந்தும் பிறர் மதிக்கும் படித்தானம் யாகம் முதலியவற்றைச் செய்தல், பசு கட்டும் இடத்திலும் அக்கினி காரியம் செய்யுமிடத்திலும் ஜலத்திலும் வழியிலும் மரநிழலிலும்மலைகளிலும் வனத்திலும் சிவாலயங்களிலும் ஜலாசயத்திலும் சத்திரத்திலும் மலமூத்திரங்களை கழித்தல், மதுபானஞ்செய்ய விரும்புதல் பாம்புகளை ஆட்டிப் பிறரைப் பயமுறுத்தல், பிறரது குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலேயே விருப்பமாக இருத்தல், மூங்கில் செங்கல் கருங்கல் விறகு முள் முதலியவற்றால் வழியை அடைத்தல் அன்னியனுடைய புலத்தில் தன்புலத்துக்கு வரப்புப் போடுதல். கபடமாகத் தண்டித்தல் கபடகாரியங்களையே செய்யவிரும்புதல் கபடமாகப் போர் செய்தல், தகாத அன்னத்தைப் பிச்சை கொடுத்தல், தகுதியில்லாத வஸ்திரத்தைப் பிறருக்குக் கொடுத்தல், பெருலாபந்தேடி மோச வர்த்தகஞ் செய்தல், ஊழியக்காரரிடம் எப்போதுமே நிர்த்தயையாக இருத்தல், பசுக்களைப்பட்டியில் அடைத்தல் ஸ்வாமி, குரு, மித்திரர்களுக்குத் துரோகஞ் செய்தல், சஞ்சல புத்தியால் துன்மார்க்கமாக நடத்தல், மனைவிபுத்திரி ஆப்தர், மித்திரர் பாலர் ரோகிகள் முதலானோரையும் ஊழியக்காரரையும் பசியுற்றத் தன்னிடம் வந்த அதிதிகளையுமொழித்துப் புசித்தல் பல வேதியர் தன் வாசலில் வந்து புசிக்கக்கருதியிருக்க அவர்களை ஒழித்துத் தன்வரையில் திருப்திகரமாக உருசியுள்ள பதார்த்தங்களோடு புசித்தல் சன்னியாசம் ஏற்றுப்பிரஷ்டத்துவம் அடைதல், அந்தரங்கமான சங்கதிகளை வெளிப்படுத்துதல் பசுக்களை அடித்தல் வலிமையற்றவரை மனங்களிக்கச் செய்யாமல் எப்போதும் இழித்தும் பழித்தும் பேசுதல் தன்னை அடைந்த ஏழைகளைக் கஷ்டப்படுத்தி வேலை வாங்குதல், வண்டியில் கட்டிய குதிரை மாடுகளை இரண்டொரு நாழிகையில் அவிழ்த்து விடாமல் எந்த நேரமும் சவாரி செய்தல், தன் வீட்டில் சுமையெடுத்து அலுத்துக் கிழப்பருவமடைந்த எருதைப் புல் முதலியவற்றால் காப்பாற்றாமல் கைவிடுதல், எருதுகளை விதையடித்தல் மலட்டுப் பசுவைச் சுமையெடுப்பித்தல், பசிதாகத்தால் சிரமப்பட்டு ஆதரவு விரும்பித் தன் வீட்டுக்கு வந்த அதிதிகள் சத் புருஷர்கள் ஏழைகள் பாலகர்கள் ரோகிகள் விருத்தர்கள் முதலானோரை மூடப்புத்தியால் தயவுவையாமை முதலிய காரணங்களால் உண்டாகும் பாபங்கள் யாவும் உபபாதங்களே யாகும்.
ஒருவன் மரணம் அடைந்து ஸ்தூல தேகத்தை விட்டுச் செல்லும்போது அவனது தன, தானியச் சம்பந்துக்கள் யாவும் வீட்டிலேயே இருக்கின்றன. புத்திர, மித்திர, களத்திராதியர் மயானம் வரையில்வருவார்கள். அவன் செய்த சத்கர் மதுஷ்கர்ம பயன்கள் மட்டுமே அதற்கு மேலும் அவனுடன் வரும் அதனால் யோக்கியனாகவுள்ள மனிதன் இதனையறிந்து நடக்க வேண்டும். பிரமணராகப் பிறந்தும் ஆடு வியாபாரம் செய்தல், எருமை வியாபாரம் செய்தல், கடற்பயனம் செய்தல், சூத்திரப் பெண்ணோடு கூடிக்குலாவுதல், க்ஷத்திரிய விருத்தியால் ஜீவித்தல், முதலிய பாபங்களைச் செய்யும் பிராமணர்கள், பிராமண அதமர்கள் லக்ஷணமறியாமல் சிற்பத் தொழில் புரிதல், பொன் வேலை செய்து வஞ்சித்தல், முறையறியாமல் வைத்தியம் செய்தல், பொருள் வாங்கிக் கொண்டு தன் தேகத்தை ஸ்வாதீனம் செய்தல், துராலோசனை கொண்டவர்களுடனேயே கூடியிருத்தல் முதலியவற்றால் வரும் பாபங்களும் உபபாதகங்கள் ஆகும். இவற்றை செய்பவர்கள் மகாநரகிகள் எனப்படுவர். தன் நகரத்தில் வசிக்கும் குடிமக்களை வருத்திக் கிரமமான வரிப்பணத்தைக் காட்டிலும் விசேஷமாக வரிவாங்கி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கிராமாதி காரியானவன் அரசனால் தண்டிக்கப்பட்டு தன் செல்வத்தைக் கள்வர் அபகரித்துக் கொள்ள துக்கங்கொண்டு, ஆயுள் முடிவில் நரகலோகத்தை அடைவான். நரகத்தை அடையத் தக்கப் பாப கிருத்தியங்களைச் செய்வோரிடமும் அத்தகைய குடிமக்களை ஆண்டு வரும் மன்னவரிடத்திலும் தானம் வாங்கிய வேதியரும் கோரமான நரகத்தை அடைவார்கள். குடிகள் பொருளை அநியாயமாக அபகரித்து வேதியருக்குத் தானஞ் செய்யும் வேந்தனானவன் நரகவாதனையை அவ்வுலகில் அடைந்துத் துன்புறுதல் போல, குடிமக்களால் அவ்வரசன் இங்கேயே பாதிக்கப்படுவான். செங்கோல் முறைப்படி அரசு செலுத்தாத க்ஷத்திரியனுக்கும் பரதார கமனஞ் செய்வோனுக்கும் சோரனுக்கும் பெரும் பாவம் சம்பவிக்கும் அஞ்ஞானமுடைய அரசன் கள்வனல்ல வென்று கருதியும் விசாரணைக் குறைவால் திருடனை விடுவித்துத் திருடனல்லாதவனைத் தண்டித்த அபராதியானால் அவ்வரசன் பெருநரகையடைவான். நெய், எண்ணெய், அன்னம், பானம், மது, மாமிசம், கள், வெல்லம், கரும்பு, சர்க்கரை, தயிர், கிழங்குகள், பழங்கள், விறகுகள், இலைகள், புஷ்பங்கள், மருந்துகள், வாகனங்கள், குடைகள், வண்டிகள், பீடங்கள், பாத்திரங்கள், ஈயம், தாமிரம், பித்தளை, ஜலத்தில் தோன்றிய சங்கு முதலியவை வீணை முதலிய இசைக்கருவிகள் பட்டாடைகள், பருத்தியாடைகள் முதலியவற்றை விரும்பிப் பிறரை வஞ்சித்துக் களவாடுகிறவர்கள் நரகத்தை அடைவார்கள். அது எவ்வாறு இருப்பினும் இருக்கட்டும் பிறர் பொருளைக் கடுகளவேனும் அபகரித்தவன் சந்தேகமின்றி நரகமடைவான் என்பது சத்தியம். இவை போன்றப் பாவங்களும் மஹாபாதகத்திற்குச் சமமான பாதகங்களும் உபபாதகங்களும் உபபாதகத்துக்குச் சமமான பாதகங்களும் அவற்றைச் செய்தவன் உயிர்நீங்கியபின் யாதனா சரீரமடைந்து, யமலோகத்தையடைந்து பெருந்துக்கத்தை அனுபவிப்பான்! அதர்மத்திலேயே மனமுடைய தேவர் மானுடர் பசு, பக்ஷியாதிகளுக்கு இயமதர்மனே விசாரணைக் கர்த்தாவாக இருந்து பலவிதமான தண்டனைகளைக் கட்டளையிடுவான். வேதோக்தமான ஆசாரமுடையவர்களாக இருந்து, ஒரு காலத்தில் நீதி தவறியவர்களாயின் அவர்களுக்குக் குருவே தண்டனை கர்த்தாவாக இருந்துப் பிராயச்சித்தம் முதலியவற்றைக் கட்டளையிடுவான். அவ்வாறில்லாமல் மனப்பூர்வமாகச் செய்திருப்பார்களானால் இயமனே தண்டனை கர்த்தாவாக இருப்பான். பரதாரகமனஞ் செய்வோர் கோரர்கள். அநியாயக்காரர்கள் இவர்களுக்கு அரசனே தண்டனை கர்த்தாவாவான். ஒருவர் கண்ணுக்கும் புலப்படாத வஞ்சனையாகப் பாவங்களைச் செய்வோருக்கு யமனே சிக்ஷகன் ஆகையால் ஒருவன் செய்த பாபத்திற்கு அவசியம், பிராயச்சித்தம் செய்ய வேண்டும் அரசன். குரு, பிராயச்சித்தம் முதலிய வழியாகப் போக்கிக் கொள்ளாதவனுடையப் பாவமானது கற்பகோடி காலம் கழிந்தாலும் அவனை விட்டு நீங்காது பாவஞ் செய்வோனும் பாவஞ் செய்விப்போனும் பாவம் செய்கையில் ஆமோதிப்பவனும் பாவபயனை அனுபவிப்பது சத்தியம்!
19. பாவிகள் பெறும் தண்டனைகள்
ஸநத்குமார முனிவர் வியாச பகவானுக்குச் சொன்ன வகையே பின்னும் சொல்லுகிறேன் கேளுங்கள். மாமுனிவர்களே! மேலே சொன்ன நால்வகைப்பட்ட பாவியர்கள் பயத்தை உண்டுபண்ணும் மஹாகோரமான யமலோகத்திற்குக் கோரமான இயமபடர்களால் அடித்துப் பிடித்துக் கட்டிக் கொண்டு போகப்படுவார்கள். கர்ப்பத்தில் இருப்பவர்களாயினும் பிறந்தவர்களாயினும் பாலர்களாயினும் யவ்வனர்களாயினும் பெண்களாயினும் ஆடவர்களாயினும் நல்வினை தீவினை புரிந்ததற்கு ஏற்ப அனுபவித்தே தீரவேண்டும் என்று சித்திரகுப்தாதிகளும் வசிஷ்டாதி மாமுனிவர்களும் இதுவரை விசாரித்து அறிந்திருக்கிறார்கள். உலகிலுள்ள பிராணிகள் யாவும் யமதேவனின் சன்னிதானத்தைக் காணாமற் போவதில்லை. அங்கு சென்றதும் தங்கள் புண்ணிய பாபங்களை ஒப்புவித்து, இயமதர்மனால் சுவர்க்கநரகங்களை அடைய விதிக்கப்படுவார்கள். அவர்கள் இயமலோகத்தை அடைவது எப்படியென்றால். அதையுஞ் சொல்கிறேன்.
சாந்த சித்தர்களும் தயானர்களும் புண்ணியர்களும் கிழக்கு வழியாக யமபுரத்தை அடைவார்கள். பாவிகளும் தானாதிகள் செய்யாதவர்களும். பயங்கர தக்ஷிண வழியாக யமபுரத்தை அடைவார்கள். இப்பாவிகளுக்கு இயமாலயம் எண்பத்தாறாயிரம் யோஜனை தூரமாகக் காணப்படும் அநேகவித கோரஸ்வ ரூபமாகவும் தோன்றும் , புண்ணியர்களுக்கு அது சமீபத்தல் இருப்பதாகவும் அலங்காரரூபமுடையதாகவும் தோன்றும், அது ஏன் எனில் பாவிகள் செல்லும் வழி பயங்கரமானதும் சுற்று வழியுடையதும் ஊசிபோன்ற கூர்மையான முட்களும், இலந்தை முதலிய முள் மரங்களிலுள்ள முட்களால் செல்வோரைப் பிடித்து இழுப்பதும், கத்தியைப் போலக் கூர்மையும் கடினமான பாறைக் கற்களும், அதிகபந்தமானச் சேற்றில் சிறிது தூரம் காலடி பெயர்ந்து வைக்க முடியாததும், சிறிது தூரம் இரும்பு ஊசிகளைப் பதித்ததும், சிறிது தூரம் ஆழமான குளம் முதலிய ஜலாசயங்களும், சிறிது தூரம் உயர்ந்த மலைகளும் சிறிது தூரம் புல்முளைத்திருப்பது போலத் தோன்றிக் கால்வைத்தவுடன் சுருக்கி அளவு கடந்த ஆழத்தில் வீழத்தக்கமாயா ஜலாசயமும், சிறிது தூரம் பழுக்கக்காய்ச்சி நடப்பட்ட இரும்பு முளைகளும். சிறிது தூரம் தழைத்த மூங்கிற்புதரும் சிறிது தூரம் இருள் வழியும் சிறிது சிறுவழியாய்த் தவறினால் இருபுறத்திலும் விழத் தக்கப்பெரும் பள்ளங்களும், சிறிது தூரம் தாவானலமும் சிறிது தூரம் சுடும்பாகைகளும், சிறிது தூரம் மிகக் குளிர்ந்த பனிக் கட்டிகளும், சிறிது தூரம் கால்வைத்தவுடன் கழுத்து வரையில் பூமியில் இறங்கி விடத்தக்க வெண்மணலும், சிறிது தூரம் கொதிஜலமும், சிறிது தூரம் வரட்டி நெருப்பும், சிறிது தூரம் சிங்கங்கள், ஓநாய்கள், பெரும் புலிகள் பெருங்கொசுகள், அட்டைகள், மலைப்பாம்புகள்,கடூரமான ஈக்கள், விஷசர்ப்பங்கள், மத்தகஜங்கள் காட்டுப்பன்றிகள், நெடுங்கொம்புகளையுடைய எருமைகள், கனத்துப் பருத்த ஒட்டகங்கள் பயங்கரமான டாகினியாதி பைசாசங்கள், கோரைப்பற்களையுடைய ராக்ஷசர்கள், வியாதிகள் தூளிமயமான சுழற்காற்றுகள் முதலியன இடையிடையேவந்து தத்தம் இயற்கைக் குணங்களால் அவ்வழியே இயமபடர்கள் கொண்டுவரும் யாதனாசரீரத்தை துன்புறுத்த தக்கதுமான அவ்வழியிலுள்ள இன்னல்களை யெல்லாம் அனுபவித்துக் கொண்டும் மேலே இன்னமும் சொல்ல நேரிடும் அப்போதும் தாமொரு துன்பமும் அனுபவியாமல் உடன்வரும் தூதர்கள் அனுபவி! அனுபவி! என்று சொல்லிக்கொண்டே வர பாறை மழை சொரிந்தாற்போலக் காற்றினால் எறியப்படும் பாறைகளும் பயமுறக் குமுறி விழும் இடிகளும். அவயவம் முழுதும் காயப்படத்தக்க அம்பு மழையும், கண்களைத் திறக்கமுடியாத மின்னல்களும், நக்ஷத்திர விழுகைகளும், நெருப்புமழையும், பெருங்காற்றினால் புழுதிகள் நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு வழி தெரியாமல் திக்பிரமை செய்தலும் மோககர்ஜனையும், ஆயுத மழையும் உப்பு நீர் மழையும் அதிசீரளமான காற்றும் அதி உஷ்ணமான காற்றும் சிறிது சிறிது யோசனையில் பல விதபேதங்களையுடைய வழியில் அன்னபானாதிகள் இன்று மூடர்களாகிய பாவிகளை நிர்த்தாக்ஷணியமுடைய இயமகிங்கரர்கள் பலாத்காரமாக இழுத்துக் கொண்டு செல்வார்கள். அப்போது, பாவிகள் திக்கற்றுத் தேற்றுவாரில்லாமல் தாம் செய்த பாவச் செயல்களை நினைத்தும் சொல்லியும் துக்கித்துப் பிரேதத்துவம் அடைந்து வஸ்திரமில்லாமல் பெருந்தாகத்தால் நாவும் நெஞ்சும் உலர்ந்து சுருங்கிய தேகமுடையவர்களாய் இயமதூதர்களுடைய அடிஉதை குத்துகளுக்கு அவ்வப்போது பயந்து பசியாகிய அக்கினியால் தபிக்கப்பட்டு இயமபுரத்தை அடைகையில் அவர்களை இயமகிங்கரர் செய்யும் செயல்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.
முனிவர்களே! இத்தகைய உபாதிகளையுடைய மார்க்கத்தில் பாவிகளை யமகிங்கரர்கள் எவ்வாறு கொண்டு போவார்கள் என்றால் சிலரை இரும்புச் சங்கிலியால் பிணித்தும் சிலரை சங்கிலி பாசக்கயிறு முதலியவற்றால் கட்டியும் சிலரை நெற்றியில் அங்கு சத்தால் குத்தி அதனைப்பற்றியும் சில பாபிகளை முட்களால் குத்தியும் சிலரை நெருப்பினால் வீழ்த்தி இழுத்தும், சிலரைத் தோள்களிற்பிணித்தும், சிலரை வயிற்றில் அங்குசத்தால் குத்தியும் சிலதீயோரைக் கையிலே கனமான இரும்புக் கட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டும்; சிலரைக் கழுத்தில் அங்குசத்தைச் சேர்த்தும் சிலரை நாவில் அங்குசத்தால் குத்தியும் சிலரை மூக்கிலே குத்திக் கயிறு கட்டியும், சிலரைக் காதைப் பிடித்தும் சில துன்மார்க்கரை மோவாயைப் பற்றியும் சிலரைக் கைகால்களையும் காதுகளையும் உதடுகளையும் நாசியையும் சிசனத்தையும் விருஷணத்தையும் அறுத்து ஹிம்சை செய்து கொண்டும் குந்தத்தால் செய்தும் சிலரை முசலத்தால் அடித்தும் சிலரை செஞ்சூரியனைப் போலப் பிரகாசிக்கும் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முட்களால் குத்தியும் பிண்டி பாலம் முதலிய ஆயுதங்களால் அடித்து உதிரம் ஒழுக இலந்தை முட்புதரில் தள்ளியும் அங்கிருக்கும் நானாவிதமான கிருமிகளை விட்டுப் பக்ஷிக்கச் செய்தும் மூர்ச்சையுற்றப் பிறகு கீழே வீழ்த்திச் சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்து படுதாகமுற்று அன்னம் வேண்டும் பானம் வேண்டும்! நிழல் வேண்டும்! என்று கதறிக்கதறிக் கேட்கும்படி பாவிகள் யமதூதர்களால் அந்தக் கொடிய வழியில் கொண்டு போகப்படுவார்கள். தானதருமங்களையும் நற்செயல்களையும் புரிந்த புண்ணியர்களோ பசி தாகம் முதலிய தொந்தரவுகள் இல்லாமல் வேண்டிய இடங்களில் எல்லாம் அன்னம், ஆகாரம், நிழல் முதலியன குறைவின்றியும் மனத்துயர் சிறிதும் இல்லாமலும் சித்த சாந்தத்துடன் இயமபுரத்தை அடைவார்கள். அவ்வாறு புண்ணியர்களும் பாவிகளும் யமாலயத்தை அடைந்த பிறகு தூதர்கள் தம் தலைவனாகிய யமதர்மராஜனிடம் சென்று பிராணிகள் வந்திருப்பதைத் தெரிவிப்பார்கள். இயமன் அந்த ஜீவன்களைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டதும், தூதர்கள் தாம் கொண்டு வந்த பிராணிகளை யமன் சன்னிதியில் நிறுத்துவார்கள் அப்போது யமன் அவர்களில் புண்ணியவான்களாக உள்ளவர்களைக் கண்டு மகிழ்ந்து. ÷க்ஷமலாபங்களை விசாரித்து அவரவருக்குத்தக்கவாறு ஆசனம் முதலியன கொடுத்து நீங்கள் புண்ணியர்களாகையால் மேம்பட்டவர்கள். நீங்கள் சிறந்த போகபாக்கியங்களை அனுபவிக்க வேண்டியவர்கள்! என்று பலவிதமாக நன்மொழிகளால் உபசரித்துப் பேசிப் புகழ்வான். பிறகு திவ்விய விமானங்களில் ஏறிச் சுவர்க்க லோகத்தை அடைந்து எண்ணற்ற போகங்களை அனுபவித்து புண்ணியம் முடிந்த பிறகு சிறிது பாவச் செயலிருப்பின் இங்கு வந்து அதன் பயனை அனுபவியுங்கள் என்று சொல்லுவான், ஏனென்றால் ஆன்மாக்களுக்கு மித்திர பூதமான புருஷர்கள் இயமதர்மனை இவ்வாறு சாந்தமாகவும் தயாள புருஷனாகவும் காண்கிறார்கள்.
பாவச் செயல்களையே செய்து வந்த பாவிகளோ எவ்வாறு யமதரிசனம் செய்வார்கள். எனில், கோரமான வக்கிரதந்தங்களுடன் திறந்த வாயும் கோபம் மிகுதியால் நெரித்த புருவமும், ஊர்த்துவகேசமும் பெரிய நீண்ட மீசையும் உதறிக்கொண்டிருக்கும் பூரித்த உதடுகளையும் மலைபோன்று பருத்த, பதினென் புயங்களும் நீலமலைபோன்ற திடகாத்திரதேகமும், சர்வாயுதங்களையும் தாங்கி நிற்கும் கைகளும் பலவிதமானத் தண்டனாசக்தியும் மதித்த மகிஷவாகனமும், எரிந்து கொண்டிருக்கும் பெருநெருப்புப் போன்ற விழிகளும், செந்நிறமான வஸ்திரமும் சிவந்த மலர் மாலையும் மேருமலைபோன்று உயர்ந்த தேகமும், பிரளயகால மேகத்துவனி போன்ற கர்ஜனையும், சமுத்திரம் முழுவதையும் க்ஷணநேரத்தில் உறிஞ்சிக் குடிக்கவல்ல ஆற்றலும் பிரளயகாலாக்கினிக்குச் சமமான காலமிருத்யு, அஞ்சன நிறமான காலபாசன் கிரிநாந்தன், மாரீசன், கிரஹமாரி, காளராத்ரி; நானாவித பயங்கரமுண்டு செய்யும் வியாதிருபங்கள் முதலியன சமீபத்தில் விளங்கவும்; சக்தி சூலம், அங்குசம், பாசம், சக்கிரம், கத்தி, வஜ்ஜிரம், துண்டம், அம்புறாத்தூணிவில் முதலியவற்றைத் தரித்தும் பயங்கரமான கணக்கில்லாத கரியமலைகள் போலத் தேகமுடைய பல ஆயுதங்களை ஏந்திய மகாவீரர்களான இயமதூதர்களால் புடை சூழப்பட்டும் விளங்குவதாக இயமதர்மராஜனையும் சித்திரகுப்தனையும் காண்பார்கள். அப்போது இயமன் அவைகளை நோக்கிக் கடுஞ்சொல் கூறுவான். பிறர் பொருளை அபகரிக்க விரும்பியவர்களே! உருவச் சிறப்பால் அன்னிய ஸ்திரீகளைக் கூடி ரமித்தவர்களே! நீங்கள் செய்த கர்மங்களை நீங்களே அனுபவிக்கவேண்டும் உங்கள் ஆன்மாவை நாசஞ் செய்வதற்காகப் பாவகாரியங்களை செய்திருக்கிறீர்கள். இப்போது ஏன் தவிக்கிறீர்கள்! அவரவர் பாபத்திற்கேற்ப அவரவர்களே அனுபவிக்க வேண்டும் இங்குயாவரும் ஒருவரை வீணாகத் துன்புறுத்தமாட்டார்கள் என்று இயமதர்மன் கூறுவான். பாவிகளான அரசர்களும் இயமபுரத்தை இவ்வாறு வழிவருத்தத்துடன் சென்று இயமாலயத்தையடைந்தபோது, இயமதர்மன் அவர்களை நோக்கி. குடிமக்களைத் துன்புறுத்திய துராசாரமுடைய அரசர்களே! அற்பகாலம் அனுபவிக்கத் தக்க ஒரு ராஜ்ஜியத்தைக் கருதி இராஜ்யபோகத்தால் பிரஜைகளை அநியாயமாகப் பீடித்தபடியால் உங்களுக்கு விசேஷ பாவம் சம்பவித்தது. அதன் பயனை விஷயமாகவும் புத்திர மித்திர விஷயமாகவும் இந்தப் பெருந்தீமைகளைச் செய்து இப்போது அவர்களையெல்லாம் விடுத்துத் தனித்து வந்தீர்களே! குடிகளைத் துன்புறுத்தும் போது உங்களுக்கு இருந்த வல்லபம் எல்லாம் தூதர் கையில் அகப்பட்ட பொழுதே போய் விட்டனவே? என்று இவ்விதமாகப் பலவகையாக அவர்களை நிந்தித்து. உங்கள் கர்மங்களை அணுபவியுங்கள் என்பான். துஷ்ட மன்னர்கள் ஒன்றுஞ் சொல்ல முடியாமல் அழுது கொண்டு போய் முறைப்படி நரகாக்கினியில் வீழ்த்தி பரிசுத்தம் செய்யுங்கள்! என்று கட்டளையிடுவான் அவர்கள் அவ்வரசர்களது கால்களைப் பற்றிக்கொண்டு கிருகிருவென்று வேகத்துடன் சுழற்றிக் கீழே வீழ்த்துவதும் மேலே தூக்குவதுமாகச் செய் சுடுபாறைகளில் கிடத்திப் புரட்டி, இரத்தப் பிரபையிலிட்டு முழுக்கி செயலற்றவர்களாக்கி மீண்டும் மூர்ச்சை தெளிந்த பிறகு அவர்களைப் பாவ நீக்கம் செய்வதற்காக நரகத்தில் தள்ளுவார்கள்.
முனிவர்களே! நரகங்களில் சிறந்தவை இருபத்தெட்டு. அவை ஸப்தலோகங்கள் வரையிலும் தாழ்ந்து ஆழமாயிருக்கும். முதலில் உள்ளது கோரம், இரண்டாவது சுகோரம், மூன்றாவது அதிகோரம், நான்காவது அகோரம், ஐந்தாவது கோரரூபம், ஆறாவது தலாதலம், ஏழாவது பயாநகம், எட்டாவது காளராத்திரி, ஒன்பதாவது பயோத்கடம், பத்தாவது சண்டம், பதினொன்றாவது மகாசண்டம், பன்னிரண்டாவது சண்ட கோலாகலம், பதின் மூன்றாவது பிரசண்ட தரநாயகம், பதினான்காவது பத்மம், பதினைந்தாவது பத்மவதி, பதினாறாவது பிஷ்டை, பதினேழாவது பீமப் பிரணாயகம், பதினெட்டாவது கராளம், பத்தொன்பதாவது விகராளம், இருபதாவது வச்சிரம், இருபத்தொன்றாவது திரிகோணம், இருபத்திரண்டாவது பஞ்சகோணம், இருபத்து மூன்றாவது சுதீர்க்கம், இருபத்து நான்காவது பரிவர்த்துவம், இருபத்தைந்தாவது ஸப்தபவுமம், இருபத்தாறாவது அஷ்ட பவுமம், இருபத்தேழாவது தீப்தம், இருபத்தெட்டாவது மாயை என்னும் பெயர்களோடு ஒன்றன் கீழ் ஒன்றாக விளங்கும் இந்த நரகங்கள் தம்தம் பெயராலேயே பெருந்தீமை விளைக்கத்தக்கவை என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவையோ, யாதனாசரீரத்துடன் பாவிகள் தங்கள் பாவத்தின் பயனை அனுபவிக்கும் ஸ்தானங்கள் இன்னும் இந்நரகங்கள் இருபத்தெட்டினுள்ளும் ஐயைந்து முக்கிய யாதனா ஸ்தானங்கள் உண்டு. அவை யாவன ரவுரவம், மகாரவுரவம், தமசு சீதம் உஷ்ணம் சகோரம் மகாதீக்ஷண, பத்மஸஞ்சீவனம். சிவம் மகாதமவிலேபம் சுலோமம் கண்டகம் தீவிரவேகம். கராளம், விகராளம் பிரகம்பனம், மகாவிக்கிரம் விக்கிரம் காலம், பிரகர்ஜனம் ஸுசிமுகம் ஸுநேமி காதகம் சுப்பிரபீடனம், கும்பீபாகம் சுபாகம், கிரகசம் தாருணம் அங்காரராசி பவனம், மேதப் பிரஹிதம், அஸ்ருக்பிரஹிதம் தீக்ஷணதுண்டம் சகுனி. மகாசம்பவர்த்தகம், சிரது ஸப்தஜந்து பங்கலேபம், பிரதிமாசஸ்ரம் பூத்பவம் உச்வாஸம் நிருச்வாசம் ஸுதீர்க்கம் கூடசால்மலி பிரதீபத்மம் ஸுமஹாநாதம், பிரவாஹம், சுப்பிரவாகனம் மேகம் விருக்ஷம் சல்வியம் சிம்ஹம் வியாக்கிரம் கஜம் சுவராஜம் சூகராஜம் மகிஷம், அவிகாரம், விருகரணனம் கிருஹாக்கியம் மீனவக்திரம் சர்ப்பம் கூர்மம், வாயசம், குர்த்ரம்(பருந்து) உலூகம் (ஆந்தை) ஜலவுகம் (அட்டை) சார்த்தூலம் விகர்க்கடகம் மண்டூகம் பூதிமுகம் அக்னிகாஸம் பிரதிஷ்டம் ருதிராம்பம் ஸ்வபோஜனம் லாலாபக்ஷணம், ஆத்மபக்ஷணம் ஸர்வபக்ஷணம் ஸுதாருணம் ஸுகண்டம் ஸுவிசாலம் விகடம் கடபூதனம் அம்பரீஷம் கடாஹம் கஷ்டம் வைதரணிநதி சுதப்லலோகசயனம் ஏகபாதம் பிரபூரணம் அசிதாலவனம் கோரம் அஸ்திபங்கம் ஸுபூரணம் கிலோதசி சுயந்திரம் கூடபாசம் பிரமர்த்தனம் மகாசூர்ணி சசூர்ணி தப்தலோக மயம் பர்வதத்திலிருந்து விழும் ஜலப்பெருக்கு மலவார்த்ததம் மூத்திரவிஷ்டம் சுக்லபம் தாரகூபம் சீதலம் முசலம் உலூகம் யந்திரம் சிலை, சாகடம், லாங்கலம் தாலபத்திரம் கஹணம் மகாசகட மண்டபம் ஸம்மோஹம்ஹஸ்தி பங்கம் தப்தம் மலயம் குடம் பஹீதுக்கம் மகாதுக்கம் கஸ்மலம் ஸ்யமலம், மலம், ஹாலஹலம் விரூபம், கரூபம் யமானுகம் ஏகபாதம் திரிபாதம், தீவிரம் அர்வீசரம் என்று சொல்லப்பட்டப் பெயருடையனவாய் முறையே அவ்விருபத்தெட்டிலும் வகைக்கு ஒரு கோடியுண்டு, ஆகையால் நரகங்கள் இருபத்தெட்டுக் கோடி என்பர்.
இத்தகைய இருபத்தெட்டுக் கோடி நரகங்களிலும் ஒவ்வொன்றும் ஐயைந்துப் பிரதான ஸ்தானங்களாக ரவுரவம் முதல் அர்வீசரம் இறுதியாக முக்கிய ஸ்தானங்கள் நூற்றுநாற்பது கோடி இந்த நரகங்களிலே பாவிகள் பதை பதைப்பார்கள். அவரவர்கள் கர்ம நாசமடையும் வரையில் நானாவித உபாதைகளை அனுபவிப்பதில் மனஞ்சகியாமல் இங்கும் அங்கும் ஓடியலைவார்கள். அவர்கள் கர்மத்துக்கு ஏற்ப இயமதூதர்கள் அவர்களது கால் கைகளை உறுதியாக பிடித்துக் கொண்டு பழுக்கக் காய்ச்சிய இரும்பு சங்கிலிகளில் கட்டி பெருமரத்தின் உயர்ந்த கிளைகளில் தூக்கி முழு பலத்துடன் ஊசலாட்டுவதால் அவர்கள் பத்துக்காத தூரத்துக்கும் குறையாமல் ஒவ்வொருபுறமும் போயும் திரும்பியும் மூர்ச்சையடைவார்கள், இதுவுமின்றி இரும்புபாறைகளை அவர்களுடையகால் கைகளில் கட்டிச் சுமக்க செய்வார்கள் அப்போது அடிக்கடித் தாங்கள் செய்த பாவச் செயல்களை எண்ணிப் பரிதவிப்பார்கள். எரிந்து கொண்டிருக்கும் அங்குசத்தாலும் இரும்புத் தண்டங்களாலும் உடல் முழுவதும் நறுக்குவார்கள். பிறகு நெருப்புப் போலச் சுடும்படியான ஒரு வகைப் பொடியைத் தேகத்தில் பூசுவார்கள் அதனால் பின்னவகைப் பொடியைத் தேகத்தில் பூசுவார்கள் அதனால் பின்னதேகமடைவார்கள். மீண்டும் அப்பாவிகளின் அவயவங்களைத் தனித்தனியாகக் கொய்து காய்ச்சியுள்ள இரும்புக் கூடாரங்களில் புரட்டுவார்கள். மலகூபங்களிலும் கிருமி கூபங்களிலும் மேதைக் கிணற்றிலும் உதிரவாவிகளிலும் கிருமிகளும் இரும்பு துண்டங்களையுடைய காகங்களும் அவர்களைப் புசிக்கும் நாய்கள் ஓநாய்கள் புலிகள் பயங்கரமான சிங்கம் முதலிய மிருகங்கள் பலவிதமாகக் கடித்துத் துன்புறுத்தும் பிறகு அங்காரராசியென்னும் நரகத்தில் அவர்களை மீன் போலச் சமைப்பார்கள். செக்கில் எண்ணெய் ஆட்டுவது போலச் சக்கிரகம் என்னும் நரகத்தில் இவர்களைப் போட்டுத் திருப்பி உருண்டையாக்குவார்கள். மீண்டும் அவ்வுருண்டையை மிகவும் சுடுகையுடைய இருப்புச்சட்டியிற்போட்டு வறுப்பார்கள். அதன் பின்னர் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் போடுவார்கள். அசத்திய வார்த்தைகள் சொன்னவனுடைய நாக்கை அநேகம் துண்டுகளாகக் கொய்து பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சலாகையால் நாவிலும் மார்பிலும் குத்துவார்கள். பொய் நூல்களைப் பழக்குவித்தவனுடைய நாவை சுடுகின்றன. சூட்டுக் கோலினால் பலவிதமாகத் தண்டிப்பார்கள். தாய், தந்தை, குரு முதலிய பெரியோரை பயமுறுத்திய பாவிகளது மூக்கை வஜ்ஜிர மூக்குகளையுடை நீர் அட்டைகளைக் குத்தவிட்டு நெருப்புப் பொடிகளை அவர்கள் உடல் முழுவதும் பூசித்தகித்து கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஒழுக்கி அநேகவிதமான ஆயுதங்களால் அடித்து மலமூத்திரக் குழிகளில் தள்ளிவிடுவார்கள். சிலரை விரைவில் துண்டு செய்யத்தக்க கிரகசநரகத்தில் இடுவார்கள். அப்போதே அதில் இருக்கும் அரங்கள் அவர்கள் வினைக்கேற்ப துண்டு துண்டாகச் செய்து தங்கள் மாமிசத்தைத் தாங்களே புசித்து, தங்கள் உதிரத்தையே பானஞ் செய்வார்கள். அதிதி முதலானோருக்கு அன்னாபானாதிகள் உதவாமல் தன்வரைக்கும் குடும்ப சகிதமாய்ப் போஷணை செய்து கொண்ட பாவிகளை வாளினால் கரும்பைத் துண்டிப்பது போலத் துண்டித்து அசிதாலவனம் என்ற நரக விசேஷத்தில் இட்டு ஊசிகளால் உடல் முழுதும் குத்தி எரிந்து கொண்டிருக்கும் சூலத்தின் முனையில் ஏற்றிப்பல விதமாகக் கஷ்டப்படுத்துவார்கள், பின்னர் நிகுச்வாசம் என்ற நரகத்தில் வீழ்த்தி சுவாசமும் விடவொட்டாமல் வைத்திருப்பார்கள். அப்பொழுது பாவிகள் இறக்கமாட்டார்கள். யாதனா தேகமானது துன்பம் அனுபவிக்கவும் சுகம் அனுபவிக்கவும் பாத்திரமாக இருக்குமேயன்றி, துண்டந்துண்டமாக வெட்டினாலும் பொடியாக சூரணித்தாலும் மொத்தமாக அரைத்தாலும் அழியும் தன்மையுடையதன்று.
பிறகு அவர்களை எடுத்துப் பிரக்ஞை வரச்செய்து வாலுகரவிதனம் என்ற நரகத்தில் சிறிது காலம் இருக்க வைத்து, அதற்குப் பிறகு கனவான்களும் விழுந்து கிடந்து துன்பமடையும் இரவுரவம் என்னும் மகாநரகத்தில் வீழ்த்தி, அப்பாவிகள் துக்கமடையும் படிப் பலவித வாதைகளைச் செய்து அவர்களது பாதம், முகம், குய்யம் விழி கழுத்து, மார்பு, தலை முதலிய அவயவங்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முனைகளைக் கொண்டு குத்தி அடிக்கடி நெருப்புக்குச் சமானமான சுடுகையடைய மணலில் வீழ்த்தி உருட்டி எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் அரக்குக் கூடாரத்திலிடுவார்கள். பரதார சங்கமம் செய்தவர்களை, இயமதூதர்கள் அழைத்து, பூர்வத்தில் அவன் அவணந்த பெண் வடிவமாகவே எஃகினால் செய்யப்பட்டுப் பழுக்கக்காய்ச்சியப் பதுமையை முன்னம் இவளை ஆலிங்கனம் செய்து கொள்! என்று அணையச் செய்வார்கள். அதுபோலவே அன்னிய புருஷணை அணைந்த ஸ்திரீயையும் அழைத்து அந்த ஆடவன் உருவம் போலவே எஃகினால் செய்து பதுமையை பழுக்கக் காய்ச்சி அவளை அந்தப் பதுமையை அணைத்து கொள்ளச் செய்வார்கள். அவள் அந்த உபாதையை சகிக்காமல் இங்கும் அங்கும் ஓட இமயதூதர்கள் அவளைப் பிடித்து வந்து, நீ உன் கணவனை வஞ்சித்துப் பிறர் புருஷனை இச்சித்தாய் அல்லவா? இப்போதும் அவனை கட்டியணைந்து கொள் என்று அணைந்து கொள்ளச் செய்து பிறகு அவளை இருப்புப் பாத்திரத்திலே ஏற்றித் தீயிட்டு எரிப்பார்கள். வேறு சிலபாவிகளை உரலிலிட்டு பொடியாக இடித்து அந்கரமான கிணறுகளில் வீழ்த்துவார்கள். அங்கிருக்கும் கிருமிகள் அவர்களைப் பலவிதமாக துளைக்கும் அதன் பின்னர் க்ஷராகூபத்தில் தள்ளுவார்கள் மீண்டும் அவர்களை அனந்தமாகத் துன்புறுத்தி அவர்கள் சகிக்காமல் ஓடும்போது கட்டிக் கொண்டு வந்து வீழ்த்துவார்கள். அவமானிகள் துன்மார்க்கர்கள் சேரர்கள் ஒருவர் கீர்த்தியைக் கெடுத்தவர்கள் முதலானோரை, நரகவிசேஷங்களைச் சிறப்பாக அனுபவீக்கச் செய்து இரும்புச் சங்கிலிகளால் கட்டி மஹாஜ்வாலம் என்னும் நரகத்தில் கிருமியாதி ஜந்துக்களால் பலவிதமான துக்கங்களையெல்லாம் அனுபவிக்கச் செய்து அவர்கள் உயிர் வருந்த எண்ணெய்க் கொப்பரைகளில் ஏற்றி எரித்து மகா உப்பு மிகுந்த நீரைக் குடிக்கச் செய்து, அவர்கள் பாவம் ஒழியும் வரையிலும் முள்மயமான பாறைக் கற்களிலிட்டுச் சந்தனம் அரைப்பதுபோல அரைப்பார்கள். அப்பொழுது அவர்களுடையத் தேகங்களிலிருந்து நசுங்கி விழுந்த துண்டுகளில் தோன்றிய புழுக்கள் அவர்களைப் பற்பலவிதமாகக் கடித்துத் துன்புறுத்தும் பிறகு துர்க்கந்தம் மிகுந்த மாமிச ராசியாகிய நரகத்தில் வீழ்ந்துவார்கள்.
அதன் பிறகு மலைப்பாறைகளை அடித்தும் மீண்டும் அதோமுகமாகவும் ஊர்த்துவ பாதமாகவும் அப்பாவிகளை நிறுத்தி அடியில் அக்கினியைக் கொளுத்தியும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டுகளை விழுங்கச் செய்தும், விழுங்காவிட்டால் உலக்கையால் இடித்துவாயினுள்ளே புகுத்தியும் துன்புறுத்துவார்கள். சிவபெருமானுடைய திருக்கோயில் புஷ்பவனம் தடாகம் கிணறு முதலியவற்றிற்கும் நல்வேதியரின் வீட்டுக்கும் உபத்திரவம் உண்டுபண்ணி அவ்விடங்களை அபகரித்துக் கொண்டு தங்கள் உபயோகமாக ஸ்நானம் பானம் அப்பியங்கனம் செய்து கொண்டிருந்த பாவிகள், அநேகவித கோரமான கரும்பாலை போன்ற நரகங்களை அடைந்து பிரளய காலம் வரையில் கோரமான நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். பெரியோர்களை நிந்தனை செய்யும்போது ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவனுடைய காதுகளில் உஷ்ணமேறிய இரும்பு முறைகளை அடித்து இறக்கி, ஈயம் முதலிய உலோகங்களை உருக்கி அவனது காதில் வார்த்து, அநேகவிதமானத் துன்பங்களை அனுபவிக்கச் செய்வார்கள். பரஸ்திரீகளை விரும்பி அவர்களைப் பெறுதல் அசாத்தியமென்று கைகளால் சமயத்தில் ஸ்பரிசித்தல் முதலியவற்றைச் செய்தவர்கள் அக்கினிமயமான இரும்புப் பொடிகளைக் கையில் தாங்கி க்ஷõராதிகளால் உடல் முழுவதும் பூசப்பெற்று பலவித யாதனா ஸ்தானங்களில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருந்துவார்கள். தாய் தந்தையரைக் கையால் அடித்தும், காலால் உதைத்தும், கண்ணால் பயமுறுத்தியும் துன்புறச் செய்தவர்களும் பரஸ்திரீகளைக் காமதூரத்தால் பார்த்தவர்களுமான பாவிகளில் விழிகளில் நெருப்பு மயமான ஊசிகளால் குத்தி க்ஷõராதிகளை உடல் முழுவதும் பூசி முறையே அநேக நரகங்களில் அநேகவிதமான உபாதைகளை அனுபவிக்கச் செய்வார்கள். தேவர், குரு, அக்கினி, பிராமணர் முதலியோருக்குச் சமர்ப்பணம் செய்யாமல் முறை தவறிப் புசித்தவனும் தீவினையாளனுமான பாபியின் தாவையும் முகத்தையும் காய்ச்சிய இரும்புச் சலாகை முதலியவற்றால் குத்துவார்கள். சிவபெருமானுடையத் திருநந்தவனத்திலுள்ள மலரைத் திருடிக் கொண்டு போய் தலையிற் சூடிக் கொண்டவர் சிரத்தையும் நாவையும் அநேகம் இருப்பு முனைகளால் குத்தி க்ஷõராதிகளைப் பூசி சகல வேதனைகளையும் அக்கினியையும் சிவபெருமானையும் சாஸ்வதமான மனுவாதி தர்ம சாஸ்திரங்களையும் நிந்தித்தவர்களுடைய மார்பு, கழுத்து, நாக்கு, பற்சந்துகள், தவடை, உதடு, சிரம் முதலிய அவயவங்களில் அக்கினி வர்ணமான முத்தலையுடைய இரும்பு முளைகளை வைத்து இருப்புத் தண்டங்களால் மேலே அடித்து இறக்குவார்கள். பிறகு எரிந்து கொண்டு இருக்கும் க்ஷõரத்தாற் பூசி,உடல் முழுவதும் கித்திரவதைகள் செய்து எல்லா நரகங்களிலும் எல்லாம் துன்பங்களையும் அனுபவிக்கச் செய்வார்கள். அன்னியருடைய பொருளைத் திருடியவனும் பிராமணனுடைய பொருளையும் சிவபெருமானுடைய கைமுஷ்டிகளாலும் கால்களாலும் இடிக்கப்பட்டும் உதைக்கப்பட்டும் தத்தமது கை கால்களில் உண்டாகிய அதிக கஷ்டமான துன்பமாகிய நரக வாதனைகளை நுகர்வார்கள். சிவாலயத்திற்கு அருகிலும் நந்தவனத்திற்கு அருகிலும் மலமூத்திர விசர்ஜனஞ் செய்த பாவிகள் இரும்பு உலக்கைகளால் தங்கள் சிசின விருஷணங்களைப் பொடிக்கப்பட்டு இரும்பு ஊசிகளால் குத்தப்பட்டு க்ஷõரம்பூசப் பெற்றுக் காய்ந்திருக்கிற எண்ணெயை அவ்விரண்டு இடங்களிலும் ஊற்றப்பெறுவார்கள். மனதுக்கு விருப்பம் உண்டாக வேண்டும் என்னும் இச்சையே காரணமாக ஜனங்கள் பாவங்களைச் செய்து அவற்றால் விளைந்த நரக வேதனைக்கு ஆளாகிறார்கள் பொருள் இருந்தும் உலோபத்தால் தானஞ் செய்யாமலும் அதிகக் கஷ்டப்பட்டுவந்து தன் வீட்டை அடைந்த அதிதியை அவமதித்தும் இருப்பவன் மனம் வாக்கு காயங்களுக்கும் பொருந்தாத பெருங்கஷ்டமான நரகத்தை அடைவான் சுவானங்களுக்கும் காகங்களுக்கும் பலியிடாமல் அன்னத்தைப் புசித்தவனுடைய முகமானது வஜ்ஜிரத்தால் விகாரமடையச் செய்யப்பட்டு பலவிதமான புழுக்களாலும், இரும்புத் துண்டுகளாகிய மூக்கினையுடைய காகங்களாலும் பக்ஷிக்கப்பட்டும் பலவித உபத்திரவத்துடன் வருந்துவான். சுநகத்துக்குப் பலியிடும் போது,
ச்யாமஸ்சச் பவ ச்சைவ யமமார்க்காறுரோத கௌயென
ஸ்வஸ்தாப்யாம் ப்ரயச்யாமி தௌக்ருண்ஹீ தமிமம் பலிம்
(யமமார்க்கத்தைத் தடை செய்யும் ஸ்யாமம், சபளம் என்று இரண்டு சுநகங்களின் நிமித்தமாகப் பலியை கொடுக்கிறேன். அந்தப் பலியை அவ்விரண்டும் கிரகிக்குமாக) என்று சொல்லிக் கொண்டு பலியிட வேண்டும். வாயஸத்துக்குப் பலியிடும்போது
ஐந்த்ர வாருண வாயவ்ய யாம்பாநைர் ருதவாயஸா
வாயஸா புண்யகர்மான ஸ்தேமேக்ருண ஹந்த்விமம்பலிம்
(ஐந்திரம் வாருணம் வாயவ்யம் யாம்யம் என்னும் பெயருடன் கறைந்து கொண்டிருக்கும் புண்ணிய கர்மங்களைச் செய்த வாயஸங்கள் யான் கொடுக்கும் பலியை கிரகிக்குமாக என்று சொல்லிக் கொண்டு பலியிட வேண்டும். பிரயத்தன பூர்வமாக சிவமூல மந்திரங்களால் சிவபெருமானை ஆராதித்துப் பிறகு விதிப்படி அக்கினி காரியம் முடித்து, அதன் பிறகு பலியைக் கொடுத்தவர்கள் இயம தண்டனையைப் பெறமாட்டார்கள். அவர்கள் சொர்க்க பதவியை அடைவார்கள். ஆகையால் நாள் தோறும் பூமியில் நான்கு முலைகளையுடைய மண்டலத்தைச் செய்து அந்த மண்டலத்தைக் கந்த புஷ்ப தூப தீபங்களால் பூசித்து ஈஸான திக்கில் தன்வந்திரீக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் தென் திசையில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் தக்ஷிணத்தில் பிதுரர்க்கும் கிழக்கில் சூரியனுக்கும், பூமியில் தாதா, விதாதா, துவாரபாலகர், சுவானங்கள், சுவபதிகள், வாயஸங்கள் முதலானோருக்கும் பலியைக் கொடுக்க வேண்டும்.
தேவர், பிதுரர், மானுடர் காணப்படாத பிரேதத்துவமடைந்து, வாயஸரூபமாக இல்வாழ்வோனை ஆஸ்ரயித்து இருப்பதால் வாயஸம் முதலானவற்றுக்கும் பலியிட வேண்டியது அவசியமாகும். சுவாஹாகாரம், சுவதாகாரம், வஷட்காரம், ஹந்தகாரம் என்னும் நான்கு தேனுவினுடைய ஸ்தனங்கள், அவற்றுள் சுவாஹாகாரம் என்னும் ஸ்தனத்தை தேவர்களும், சுவதாகாரத்தைப் பிதுரர்களும், வஷட்காரத்தை பூதேசுவரர் முதலிய இதர தேவர்களும், ஹந்தகாரத்தை மாநுடரும் எப்போதும் பானஞ் செய்கிறார்கள். ஆகையால் மனிதன், பசுவை சிரத்தையாக நாள்தோறும் விதிபூர்வமாகப் பூஜிக்க வேண்டும். அவ்வாறு செய்பவனுக்கு அத்தேனு அக்கினி காரியத்துக்குப் பஞ்ச கவுவியங்களைக் கொடுக்கும் தேனுவைப் பூஜிக்காத கிரகஸ்தன் தாமிசிரம்(அஞ்ஞானம்) என்ற நரகத்தை அடைவான். ஆகையால் அவசிய மாகக் கோபூஜை செய்து பின்னர் ஒரு க்ஷணநேரமாவது அதிதியின் வருகையை எதிர்பார்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கிராமத்தில் வசிக்கும் அதிதியைத் திவ்வியமான அன்னபானாதிகளுடன் தனது சக்திக்கு ஏற்றபடித் தன்னுடன் போஜனம் செய்விக்க வேண்டும் ஒருவன் வீட்டுக்கு வந்த அதிதி உணவின்றிச் செல்வானாயின் அவ்வதிதியின் பாவம் கிரகஸ்தனையும் கிரகஸ்தன் பெற்ற புண்ணியம் அதிதியையும் சேரும். அதிதி பூஜை செய்யாமல் ஆவலோடு தான் மட்டும் புசித்தவன் நரகத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு நெடுங்காலம் துன்புற்று வீழ்ந்து கிடப்பான். அப்போது இயமதண்டலாளர் அவன் மாமிசத்தையே அறுத்து அவனை உண்ணச்செய்தும் அவன் இரத்தத்தையே அவனைப் பானஞ் செய்யச் செய்தும் கஷ்டப்படுத்துவார்கள். பாவி பசிதாகங்களுடன் பலவித நரகவேதனையை அடைவான். விசேஷமான பாவத்தையும் சிறிது புண்ணியத்தையும் செய்தவனும், விசேஷமான புண்ணியத்தையும் சிறிது பாவத்தையும் செய்தவனும் அடையும் கதியைச் சொல்லுகிறேன். அதிகப் பாவஞ் செய்தவன், தான் செய்த சுவலப் புண்ணியத்தின் பயனை முதலில் அனுபவிப்பான். அவன் புண்ணிய பயனை அனுபவித்தாலும் அது அவனுக்குச் சுகமாகத் தோன்றாது. அவன் புண்ணியம் குறையக் குறையச் சுகமும் குறைந்து பாவ அனுபவம் பின்னர் விரைவில் சம்பவிக்கும். உபவாசம் இருந்து மகா புண்ணியங்களைச் செய்த இல்வாழ்வோன் தான் செய்த சொற்பப் பாவபலனை முதலில் அனுபவித்தாலும் மகா தனவந்தனுக்கு கொஞ்சம் கஷ்டம் அடைந்த காலத்தில் அதுதோன்றாதது போலவே இலேசாக அனுபவித்து, பிறகு புண்ணிய வசத்தால் விசேஷமான சுகங்களை அனுபவிப்பான். புண்ணிய பாவங்கள் இரண்டும் தம்மைச் செய்தவர்கள் அனுபவிக்கும்படி ஒன்று பலவாக விருத்தியாகும்.
20. புண்ணியசாலிகள் பெறும் பதவிகள்
வேதவியாசர், ஸனத்குமார முனிவரைப் பார்த்து மாமுனிவரே! பாவிகள் பெருந்துக்கம் அனுபவித்துக் கொண்டு இயமபுரத்தை அடைவார்கள், என்று சொன்னீர்களே? இயமலோகத்துக்குச் செல்வோரைச் சுகமாகச் செலுத்தத்தக்க தருமங்கள் இவையென்று கூறியருள வேண்டும்! என்று கேட்டார், அதற்கு ஸனத்குமார முனிவர், வியாசரை நோக்கி, வியாசரே! அவற்றையுஞ் சொல்லுகிறேன் நிதானமாகக் கேளுங்கள் என்று சொல்லத் துவங்கினார். வியாசரே! சாஸ்திரங்களை அதிக்கிரமித்துச் செய்கிற அசுப கர்மங்களும் சாஸ்திரயுக்தமாக விளங்கும் சுபகர்மங்களும் செய்தவர்கள். அவற்றின் பயன்களை அனுபவித்தே தீரவேண்டும் ஆகையால் சுகத்தைக் கொடுக்கத் தர்மங்களைச் சொல்லுகிறேன் கேளும்.
இவ்வுலகத்தில் சாந்தமான மனசோடு, தயையுடன் சாஸ்திர சம்பந்தமான கர்மங்களைச் செய்பவர்கள் யாவரும் இயமமார்க்கம் மஹா பயங்கரமாக இருப்பினும் தாம் செல்லும் போது சுகத்துடனேயே காணப்படுவார். அத்தகைய சுகமான வழியிலேயே இயமபுரத்தை அடைவார்கள். வேதியருக்குச் செருப்பையாவது பாதுகையையாவது தானஞ் செய்தவன். சிறந்தவொரு குதிரையில் ஏறிச் சுகமாக யமபுரத்தை அடைவான். பிராமணருக்குப் பக்தி சிரத்தையுடன் குடையைத் தானஞ் செய்தவன் பட்டுக்குடை பிடித்துக் கொண்டும் இயமமார்க்கத்தைக் கடப்பான். பல்லாக்குத் தானஞ் செய்தவன் திவ்வியமான இரதத்தில் ஏறிக்கொண்டு இயமமார்க்கத்தைத் தாண்டுவான். கட்டில் முதலிய படுக்கைகளைத் தானஞ் செய்தவன் சுகமாக யமமார்க்கத்தைத் தாண்டுவான். வீதிகளில் மரங்களை வைத்து வளர்த்தவனும் நந்தவனங்களை உண்டு பண்ணினவனும் தோப்புகள் வைத்து நிழல் உண்டாக்கியவனும் புஷ்ப விமானங்களில் ஏறி இயம மார்க்கத்தை கடந்து யமபுரத்தை அடைவான். தேவாலயங்களையும் அநாத மண்டபங்களையும் சத்திரங்களையும் முனிவர்களுடைய ஆசிரமங்களையும் செவ்வையாகச் செய்வித்தவர்களும், தேவர் அக்கினி, குரு பிராமணர்,தாய் தந்தையர் முதலானோரை நாள்தோறும் பூஜித்தவர்களும் தாம் விரும்பியவகையில் சுகமாக இயமமார்க்கத்தைக் கடந்து செல்வார்கள். சத்திரஞ் சாவடிகள் கட்டுவித்து விழச்செல்வோரை ஆதரித்தவர்கள் சிறிதும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியாக இயம வழியைத் தாண்டுவார்கள் மந்திர உபதேசம் செய்த குருவுக்குப் பக்தியோடு பணிவிடை செய்துவந்தவன் இயமமார்க்கத்தில் தாம் விரும்பியபடித் திவ்வியமான தோப்பு, குளம் பூந்தோட்டம் முதலியன விளங்கச் சந்தோஷத்துடன் போவான். நோயுற்றுத் துக்கத்துடன் தன் வீடு வந்த சேர்ந்த ஒருவனை ஆதரித்தவனும் மருந்து முதலியவற்றால் அவனைக் குணப்படுத்தியவனும் சுகத்தோடு இயமமார்க்கத்தைக் கடப்பான். வேதியருக்குக் கோதானம் செய்தவனும் வேதியர்களை அன்னபானதிகளால் திருப்தி செய்தவனும் இயம மார்க்கம் முழுவதிலும் தன் இஷ்ட காமியங்களை அனுபிவித்துக் கொண்டே செல்வான். வேதியனுடைய கால்களைச் சுத்தஜலத்தால் கழுவிப் புனிதஞ் செய்தவர்கள் குளிர்ந்த பூஞ்சோலைகள் வழியாகக் குதிரையின் மீதேறி இயமவழியைக் கடப்பார்கள். வேதியருடைய கால்களைக் கழுவி, வஸ்திரங்களால் துடைத்து அன்னபானாதிகளை அளித்து உபசாரஞ் செய்தவன் சந்தோஷமாக இயமமார்க்கத்தைத் தாண்டி இயமனால் மரியாதை செய்யப் பெறுவான். நவரத்தினங்களையும் சுவர்ணத்தையும் அந்தணோத்தமருக்குத் தானம் செய்தவர்கள். கஷ்டமான வழி முழுவதும் சுகமாகத் தாண்டிச் செல்வார்கள். வெள்ளியால் செய்த ரிஷபத்தைத் தானஞ் செய்தவன் திவ்வியமான வாகனங்களில் ஏறிச் செல்வான். பூமிதானஞ் செய்தவன் அருமையான வழியில் போவான். இவ்வாறு நல்ல சவுக்கியத்துடன் சென்று யமதரிசனம் செய்து சுவர்க்க போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். முன்பு சொல்லி வந்த எல்லாத் தானங்களிலும் அன்னதானமே சிறந்தது. ஏனென்றால் அப்போதே பிரீதியையும் திருப்தியையும் உண்டு செய்யவல்லதும்மனோகரமானதும் உடலுக்கு வலிமையும் புத்தி விருத்தியையும் உண்டாக்கத் தக்கதும் அதுவேயாகும்.
ஆகையால் வியாச முனிவரே! அன்னதானத்துக்கு ஈடானதானம் உலகத்தில் வேறொன்றும் இல்லை, அன்னத்தினாலேயே பூதங்கள் எல்லாம் ஜீவிக்கின்றன அன்னமில்லையென்றால் சகல பூதங்களும் அழியும். உதிரம், மாமிசம், நிணம், சுக்கிலம், முதலியன அன்னத்தாலேயே பெருகுகின்றன அன்னத்தால் உண்டான சுக்கிலத்தினாலேயே பூதங்கள் உண்டாகின்றன. இத்தியாதி நியாயங்களால் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் அன்னமயமாகவே விளங்கும். அன்னமின்றிப் பசியாக இருப்பவர்களுக்கு பொன், இரத்தினங்கள், குதிரைகள், யானைகள், ஸ்திரீகள் கொடுத்தாலும் ஆனந்தம் உண்டாகாது. வயிற்றில் இருப்போரும் பிறந்தவர்களும் பாலர்களும் வாலிபர்களும் விருத்தர்களும் தேவர்களும் அசுரர்களும் ஆகாரத்தையே கோருகிறார்கள். எல்லா நோய்களையும் விடப் பசிநோயே சிறந்து முற்பட்டுள்ளது. பசியாகிய வியாதி அன்னமாகிய மருந்தால் நசிக்கிறது. பசிக்குச் சமமான வியாதியும் துக்கமும் கிடையாது நோயற்று இருப்பது போன்ற சவுக்கியமும் குரோதத்தைப் போன்ற சத்துருவும் கிடையாது. அன்னதானத்தினால் உண்டாகும் புண்ணியம் அளவிட்டுச் சொல்ல முடியாதது. பசியாகிய அக்கினியால் தகிக்கப்பட்டுப் பிராணிகள்யாவும் இறக்க வேண்டியதுதான். ஆகையால் அன்னத்தை கொடுத்தவனே பிராணத்தைக் கொடுத்தவன். பிராணனைக் கொடுத்தவன். எல்லாவற்றையும் கொடுத்தவனாகிறான். ஆகையால் அன்னதானம் செய்தவன் தானங்கள் எல்லாவற்றையுஞ் செய்த பயனை அடைவான். ஒருவனுடைய அன்னத்தைப் புசித்துச் சீவித்துத் தர்ம மார்க்கத்தில் நடப்பவன் சம்பாதித்த தர்மத்தில் பாதிதர்மம் அன்னம் அளித்தவனுக்கும் பாதிதருமம் அதைச் செய்தவனுக்கும் சித்திக்கும் என்று அறநூல்கள் சொல்லுகின்றன. மூவுலகிலுள்ள இரத்தினங்கள், ஸ்திரீகள், வாகனங்கள் முதலிய சிறப்பான பொருள்கள் யாவும் அன்ன தாதாவுக்கு இவ்வுலகத்திலேயே கைகூடும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களையும் அடைவதற்குத் தேகமே முக்கிய சாதனம் அன்னமே பிரமம்; அன்னமே விஷ்ணு, அன்னமே சிவம், ஆகையால் அன்னதானத்தைப் போன்ற சிறந்த தானம் மூவுலகிலும் முக்காலத்திலும் கிடையாது. திரிலோகங்களுக்கும் ஜலமே பிராணமயம் அது புனிதமானது. அமிர்தமானது எல்லா ரசங்களுக்கும் பிராண பூதமானது. ஒருவன் எல்லா பாவங்களையும் செய்தவனாயினும் பின்னர் அன்னபானாதிகளைத் தானஞ் செய்வானாயின் அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு ஸ்வர்கலோகத்துக்குப் போவான். அன்ன தானம், பான தானம், கோதானம், வஸ்திரதானம், படுக்கை தானம், குடைதானம், ஆதன தானம், பாதுகாதானம் என்ற எட்டும் பிரேத லோகத்தில் சிறந்த பயனையளிக்கும் தானங்கள் என்று சொல்லப்படும்; இவை போன்ற விசேஷ தானங்கள் இயமபுரத்தில் சுகத்தை அனுபவிக்கத்தக்க பயனளிக்க வல்லவையாகவும் உள்ளன என்று கூறினார். ஸனத்குமார முனிவர், அவரை வியாசர் நோக்கி, மகா ஞானியே! அந்தப் பிரேத லோகம் மகாக் கஷ்டமானது. அத்தகைய லோகத்தில் சுகத்தை அடைய வேண்டியவர்கள் மேலே சொன்ன சிறந்த தானங்களைச் செய்து அப்பெருங் கஷ்டங்களிலிருந்து நீங்குவர் என்பதைக் கேட்டு மிகவும் அஞ்சுகிறேன். ஆகையால் சுகமானது எதனால் உண்டாகுமோ அதை எனக்குப் போதித்தருள வேண்டும்! என்றார். அதற்கு ஸனத்குமார முனிவர் சொல்லுகிறார்.
வியாசரே நீர் ஆச்சரியகரமான விஷயத்தைக் கேட்டு விட்டீர்! நீர் விரும்பியபடி அதற்கும் நான் பதில் சொல்லுகிறேன். எவன் எத்தகைய கர்மத்தால் எத்தகைய கதியை அடைகிறானோ அக்கர்மத்தால் அவன் அக்கதியையே மரணமடைந்த பிறகும் அனுபவிப்பான், தவஞ் செய்வதால், சுவர்க்கம் கீர்த்தி ஆயுள் விருத்தி, மகிழ்ச்சி, கோபம், ஞானம், விஞ்ஞானம் ஆரோக்கியம் அழகு, சவுக்கியம்; சுகம் முதலியன கைகூடும். தவம் செய்யாதவர்களுக்கு உயர்கதியாகிய சிவலோகம் சம்பவிக்காது. தவஞ் செய்வதால் சுவர்க்காதி பதவிகள், கஷ்ட சாத்தியமான ஞானம் அதிதுர்லபமான சிவலோக பதவி, பாவநாசம் முதலிய யாவும் சுலபமாக கிடைக்கக் கூடும். அரும்பெரும் கஷ்டத்தால் அடையக் கூடிய செல்வமும் சகலரும் மதிக்கத்தக்க மதிப்பும் தவத்தாலேயே கிடைக்கத் தக்கவை, உலகத்தில் தானஞ் செய்வதால் செய்தவனுக்குச் சரியாக நடத்தியவன் ஆயுள் விருத்தியை அடைவான். அஹிம்சையால் வலிமையும் திவ்விய ரூபமும் உண்டாகும். சிவ தீøக்ஷயால் நற்குடிப் பிறப்பு உண்டாகும். பழங்கள் கிழங்குகளை புசிப்பதால் அரசுரிமை கைககூடும் . இலைகளைப் புசித்துத் தவஞ்செய்தவர்களுக்குச் சுவர்க்கம் கைகூடும். பாலைப் பருகித் தவஞ் செய்தவர்களுக்கு உயர் பதவி சித்திக்கும். குருவுக்குப் பணிவிடை செய்தவன் விசேஷ வித்தியாவனாவான். சிரார்த்தாதிகளால் பிதுர்த் தேவர்களைத் திருப்தி செய்பவனுக்குச் சந்ததி விருத்தி அடையும். ராகதீøக்ஷ செய்து கொண்டவர்களுக்குப் பசுக்கள் அபிவிருத்தியாகும். புல் முதலியவற்றைப் புசித்துத் தவஞ் செய்தவன் சுவர்க்கம் அடைவான். காலை உச்சி மாலைகளில் முறைப்படி ஸ்நானஞ் செய்யும் நியதியுடையவனுக்கு ஸ்திரீ லாபம் உண்டாகும் வாயு பக்ஷணம் செய்து கொண்டுத் தவத்தில் இருப்பவனுக்கு யாகபலன் சம்பவிக்கும். காலை உச்சி மாலைகளில் ஜபம் செய்தவனுக்கு நித்திய ஸ்நானம் செய்த பயனுண்டாகும் மவுனமாகத் தியானம் செய்வோனுக்கு இராஜ்ய சம்பத்து உண்டாகும். அன்னத்தை வெறுத்து தவஞ் செய்பவனுக்குச் சுவர்க்க பதவி சித்திக்கும், நில மிசை படுத்து (ஸ்தண்டலசாயி) தவஞ் செய்வோனுக்கு திவ்வியமான வாகனமும் நல்ல வீடுகளும் கைகூடும். மரவுரி உடுத்துவோருக்குத் திவ்வியமான பட்டு வஸ்திரங்கள் உண்டாகும் படுக்கை ஆசனம் முதலியவற்றைத் தவசிக்குத் தானம் செய்தவனுக்கும் நியதியாகி, அக்கினி காரியஞ் செய்தவனுக்கும் பிரமலோகம் கைகூடும் மதுரம் முதலிய அறுசுவைகளை வெறுத்தவர்களுக்குச் சம்பத்துகள் உண்டாகும். மாமிச பக்ஷணத்தை விட்டவனுடைய புத்திரர் முதலானவர்கள் ஆயுள்விருத்தி அடைவார்கள். உதயகாலத்தில் விழித்துக்கொண்டு இருப்பவன் இராஜ்யாதி காரியாவான் சத்தியவானாக இருப்பவன் தேவர்களுக்குப் பிரியவானாவான் எந்தப் பொருளையாவது தானஞ் செய்தவன் கீர்த்தியை அடைவான். ஜீவஹிம்சையை ஒரு காலத்திலும் செய்யாதவன் ஆரோக்கியத்தை அடைவான் வேதியர் பக்தியை உடையவன் பெரிய ராஜ்ஜியத்தை அடைவான். அல்லது வேதிய வமிசத்தில் தோன்றி நல்ல நடத்தையோடு விளங்குவான். சுத்த ஜலத்தை நல்ல வேனிற்காலத்தில் தானஞ் செய்தவனுக்கு இஷ்டகாமியங்கள் கைகூடும். சமஸ்தபூதங்களிடத்தும் பச்சாதாபமுடையவன் சகல துக்கங்களையும் ஒழிவான், வேதபக்தி செய்பவன் அகண்ட ராஜ்யாதி பத்தியத்தையாவது தேவபதவியையாவது அடைவான். தீபதானஞ் செய்தவன் பிரபுவாகி, நேத்திர வியாதியை ஒரு காலத்திலும் அடையமாட்டான். சர்வேஸ்வர ஞானப் பிரதிபாகமான சாஸ்திரங்களைத் தானஞ் செய்தவன் விசேஷ ஞானியாவான்.
கந்தபுஷ்ப சந்தனாதிகளைத் தானஞ் செய்தவன் கீர்த்தியை அடைவான். வானப்பிரஸ்த ஆச்சிரமத்தை மேற்கொண்டு சடைமுடிமுதலியவற்றை வளர்த்தவன். சிரேஷ்டமான சந்தானத்தை அடைவான். உபவாசம் இருத்தல், சிவதீøக்ஷ தரித்தல், சிவார்ச்சனை செய்தல் முதலிய கர்மங்களில் இருந்தவர்கள் யுத்த பூமியில் உயிர் இழந்து வீரசுவர்க்கமடைவோர் போல அந்தப் பதவியில் பன்னிரண்டு ஆண்டுகள் வீற்றிருப்பார்கள் வேதோக்தப்படி சத்பாத்திரனுக்குத் தனது கன்னிகையை தானஞ் செய்து பணி மகளிர் தாசர்கள், பூமி, பொன், அசுவம் முதலியவற்றை ஸ்திரீ தனமாகக் கொடுத்தவன் உத்தமமான கதியை அடைவான். பொன்னால் செய்த கொம்பணி பூட்டிய ஆயிரம் பசுக்களைத் தானஞ் செய்தவன் தேவலோகத்திலும் புகழ்ந்து பேசத் தக்க சிறந்த கதியை அடைவான். பொன் முதலியவற்றால் நன்றாக அலங்கரித்த காராம் பசுவைக் கன்றுடன் தானஞ்செய்தவன் தான் விரும்பிய இஷ்டச் சித்திகளையெல்லாம் அடைவான். ஒருவன் கோதானம் செய்த பசுவானது அத்தானவானையும் அவன் சந்ததியில் வரும் ஏழுதலைமுறையாரையும் தனக்குள்ள உரோமம் ஒன்றிற்கு ஒருவருஷம் தேவ பதவியில் இருத்த வல்லதாகும், பொன்னால் கொம்பும் வெண்கலத்தால் தேகமும். விலை உயர்ந்த வஸ்திரமும் தக்ஷிணையும் வைத்துச் சத் பிராமணனுக்குத் தத்தம் செய்தவன் வசுலோகத்தைச் சுலபமாக அடைவான். தமது வினைக்கு ஏற்ப அந்தகாரமான நரகத்தில் விழுந்து பரிதவிப்பவனுக்குச் சமுத்திரத்தைத் தாண்ட ஓடம் பயன்படுவதுபோல, கோதானமே அவனைக் கஷ்டத்திலிருந்து கரையேற்றத்தக்கது. கன்னிகாதானம் செய்தவனும் நானாவித திரவியங்களைத் தானஞ் செய்தவனும் இந்திரலோகத்தை அடைவார்கள். எல்லாப் பொருள்களும் நிறைந்துள்ள வீடு முதலியவற்றை வேதபாரகனாகிய வேதியனுக்குத் தானம் செய்தவன் குதிரை முதலியவற்றைத் தானஞ் செய்தவனும் விசுலோகத்தை அடைவார்கள் வெள்ளி, பொன் முதலியவற்றைத் தானஞ் செய்வோருக்குச் சுவர்க்க பதவி உண்டாகும் என்று சொல்கிறார்கள். குடைகளைத் தானஞ் செய்தோருக்கு நல்ல வீடு கிடைக்கும். பாதரøக்ஷ முதலியவற்றைத் தானஞ் செய்தவன் விசேஷமான வாகனங்கள் கிடைக்கும் வஸ்திர தானஞ் செய்தவன் நல்ல அழகினை அடைவான் கந்ததானஞ் செய்தவன் திவ்விய தேகத்தை அடைவான். புஷ்பம், பழம் முதலியவற்றோடு கூடிய விருக்ஷத்தை வேதியனுக்குத் தானஞ் செய்தவன் நல்ல வீட்டையும் மங்கையையும் செல்வத்தையும் பெறுவான். நல்ல வீட்டையும் மங்கையையும் செல்வத்தையும் பெறுவான். பக்ஷியம் அன்னம் பானம் முதலியவற்றைத் தானஞ் செய்தவன், மறைவு, கட்டிக்கொடுத்தல் முதலியவற்றைச் செய்தவன். மறு பிறவியில் விசேஷமான போகபாக்கியங்களை அடைவான். புஷ்பமாலை, சந்தனம், கண்ணப் பொடி முதலியவற்றைத் தானஞ்செய்தவனும் மகா ஆரோக்கியர்களாகி நல்ல ரூபத்துடன் அரசனைப் போன்ற சம்பத்தை அடைவான் தானியங்களை நிரம்பக் கொண்டதாய், பாத்திரங்கள் நிறைந்த ஒரு வீட்டை உத்தம வேதியனுக்குத் தானஞ் செய்தவன் நல்ல உத்தியான வனத்திற்குச் சமமான சிறந்த மாளிகையை அடைவான். மெத்தை. தலையணை, திண்டு முதலியவற்றுடன் கூடிய கட்டிலைத் தானஞ்செய்தவன் ரூபவதியும் புத்திரவதியுமாகிய மனைவியை பிரயத்தனமின்றிப் பெறுவான் என்று கூறினார். ஸனத்குமார முனிவரைப் பார்த்து, வியாசர் கேட்டார்.
சுவாமி! அடியேன் அறிந்து கொள்ளும்படிச் சிறந்தானங்களைப்பற்றிச் சொன்னீர்கள். ஆயினும் இவற்றில் முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய தானங்கள் எவையோ, அவற்றைத் தயவு செய்து சொல்லவேண்டும் என்று வியாசர் கேட்கவே ஸனத்குமார முனிவர் கூறலானார். வியாசரே சகல பிராணிகளுக்கும் துன்பம் உண்டாயிருக்கும்போது அபயம் கொடுத்து அருள் புரிவதும் தன்னை வந்துயாசித்தவனுடைய விருப்பத்தையறிந்து அவன் விரும்பிய பொருளை அவனுக்குத் தானம் செய்வதும் தானஞ்செய்தவனுக்குத் துணையாகி நின்று அவனுக்கு உதவி செய்தலின் இவையே சிறந்தவை இன்னும்கேளும் மதிவாணரே! சவர்ணதானம் கோதானம், பூதானம், கன்னிகாதானம் என்று சொல்லப்பட்டவை ஒருவன் செய்த பாவங்களை விலக்கத்தக்கவை இந்தத் தானங்களைச் சத் புருஷருக்குச் செய்யும் பட்சத்தில் அதிகஷ்டமான நரகத்திலிருந்து நீங்குவான். உலகத்தில் சிறந்த பொருளையாவது தன் வீட்டில் உள்ளவற்றில் சிறந்ததாக மதித்திருக்கும் பொருளையாவது குணவானுக்குத் தானம் செய்தால், அழியாத பதவி கிடைக்கும் வாங்குவோனுக்கு விருப்பமான பொருளை யடைந்து, இகலோகத்திலும், பரலோகத்திலும் சகல பூதங்களுக்கும் பிரியமானவனாவான். யாசியாதவனும் தேகாபிமானம் விடுத்தவனும் தரித்திரனமாகிய யாசகனுக்குச் சக்தியானுசாரம் பூஜைசெய்து உதவி செய்யாதவன் நர அதமனும் மகா பாவியுமாவான். சத்துருவாக இருந்தாலும் ஆபத்து வேளையில் ஆதரிப்பவனே புருஷன் என்று உலகில் சொல்லப்படுவான், ஏழையும் அபிமானியும் ஜீவனோபாயம் இல்லாதவனுமாகிய ஒருவனைக் காத்து வந்தவனும் புருஷனேயாவான், தரித்திரத்தால் துன்பம் அடைந்தவனும் மனைவி புத்திரர்களையுடையவனும் நியதவிரதமுடையவனும் நாணத்தால் யாசியாதவனுமாகவுள்ள சத்புருஷனை நல்ல தானகாலத்தில் எல்லா உபசாரங்களோடும் உபசாரஞ் செய்தவன் பெரும்புகழை உலகில் மானுடரும் தேவரும் பெறமாட்டார்கள். உண்மையைச் சொல்லுவோரும் நியாயவழியிலே ஜீவிப்போரும் முறைப்படி வேத ஆராய்ச்சியோடும் விரதங்களை அனுஷ்டித்தவரும் முக்திமார்க்கத்தையே விரும்பியவரும், பெருமை கருதாமல் தவஞ்செய்வோரும், பிற மகளிரைக் கூடி மகிழாதவரும் சக்திக்கு ஏற்பத் தானஞ்செய்வோரும் ஸ்ருதி, ஸ்மிருதி புராணங்களை உணர்ந்தவரும், யாகாதி காரியங்களைச் செய்தோரும் ஆகிய மகாத்மாக்களும் அவர்களது ஆசாரியர்களும் புரோஹிதர்களும் எப்போதும் பூஜிக்கத்தக்கவர்கள். ஆகையால் தர்மத்தையே செய்ய விருப்பம் தரகொண்டு, இவரைத் தமது புத்திரர் போலப் பரிபாலனஞ்செய்வோரும் சுபகாரிங்களையே செய்வோரும் பூஜிதர்கள் தன்னுடைய தர்மங்களை நியதியாக அனுஷ்டிப்பவன் வேதியரை எப்போதும் நமஸ்கரிக்க வேண்டும் வேதியனைத் தாயைப்போல மரியாதை பாராட்டிப்பணிபவனுடைய பாவங்கள் அவனுடைய பக்தியாகிய கத்தியினாலே கழிக்கப்படும் க்ஷத்திரியர்களும் உத்தம வேதியர்களை நமஸ்கரித்தே சிறந்த பயனை அடையவேண்டும். வேதியரிடம் பக்தி வையாமலும் பூஜியாமலும் திரஸ்கரித்தவனை உலகத்தார் நிந்திப்பார்கள். அவர்கள் மறுபிறவியிலும் கஷ்டம் அனுபவிப்பார்கள். இது அனாதியாக உள்ள தருமம். ஆகையால் இதை உமக்குச் சொன்னேன் க்ஷத்திரியன் எப்போதும் மறையவனைப் பணிய வேண்டும். வைசியன் க்ஷத்திரியனையும் வேதியனையும் வணங்க வேண்டும். சூத்திரன், வைசிய, க்ஷத்திரிய பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும் இத்தகையவர்ணத்தவர்களும் மேன்மைத் தன்மையும் சத்திய குணமும் தர்மானுஷ்டானமும் உள்ளவர்களைக் குடிப்பிறப்பு நோக்காமல் வணங்கத் தகும் என்று ஸனத்குமாரர் கூறினார்.
வியாசர், ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி வித்தையில் மேம்பட்டவனும் வயதில் மேம்பட்டவனுமாகிய இருவரில், தானபாத்திரனாக உள்ளவன் யாவன்? என்னும் விஷயத்தை அடியேனுக்கு விளக்கியருளவேண்டும் என்று கேட்க ஸனத்குமார முனிவர் கூறுகிறார். வியாசரே! வித்தையால் சிறந்தவனும் வயதில் மூத்தவனும் சிறந்த தான பாத்திரர்களாகமாட்டார்கள். சதாசார சம்பத்தையுடைய அந்தணோத்தமனே தானம் பெறத்தக்கவரில் உயர்ந்தவன் யாசித்தவனுக்குக் கொடுக்கும் தானத்தைவிட யாசியாதிருந்த பிராமணனுடைய விருப்பத்தையறிந்து கொடுக்கும் தானமே சிறந்தது அப்படி யாசியாதிருப்பவர்களிலேயும் தேகாபிமானத்தால் மிக்க சிரமத்தை அனுபவிப்பவனை விட விரக்தனாக இருப்பவன் சத்பாத்திரன் யுத்தத்தில் பெரு விருப்பமுடைய க்ஷத்திரியனும் யாக காரியத்திலேயே மனமுடைய பிராமணனும் தேவர்களைத் திருப்தி செய்பவர்களாவார்கள். பிராமணன் ஒரு பொருளை யாசித்தலால் திருடன் ஊராரைத் தொந்தரவு செய்வது போல, பிறருடைய பஞ்சேந்திரிங்களைத் துன்புறுத்துகிறான். ஆனால் யாசித்தவன் மரணத்துத்குச் சமமான துக்கத்தை அடைகிறான். அவ்வாறு யாசித்தவனுக்கு இல்லை என்று சொல்வது! அதைக் காட்டிலும் துக்ககரமானது கொடையாளியோ தன்னால் இயன்ற வரையில் தானஞ் செய்து தன் ஆன்மாவை உஜ்ஜீவிக்கச் செய்கிறான். ஜீவஹிம்சை செய்யாதிருப்பதே உத்தமமான தர்மம் குடும்பம் வருத்தமடையும் பொழுதும் யாசிக்கப்படாதென்னும் கொள்கையால் துக்கமடைந்திருப்போரைக் கண்டுபிடித்து, முயற்சி பூர்வமாகத் தானஞ்செய்ய வேண்டும். எந்த ஆட்சியில் யாசியாத விரதம் பூண்ட வேதியர் வாழ்ந்திருப்பார்களோ, அந்த அரசாட்சியில் உள்ளோர் நீறு பூத்த நெருப்புப் போல விளங்குவார்கள். அவர்களுடைய தரிசனத்தால் தங்கள் பாவங்களை ஒழித்து கிருதார்த்தர்களாக்கப்படுவார்கள். ஞானம் விஞ்ஞானம் பிரபாவம் அந்தகரமான தவம் வேதவேதாகம உணர்ச்சி விரதாசரணம். சந்ததி விருத்திக்காக ஸ்திரீசங்கமம் முதலிய செயல்களையுடைய நல்ல பிராமணர்களைப் பிரியமான உபசாரங்களால் உத்தமமான தான காலங்களில் பூஜிக்க வேண்டும். அவ்வகையில் சக்திக்கேற்ப தானம் கொடுக்கும்போது வாங்குவோன் பொருளாசையுடன் வாங்காமல் கொடுப்போனை உஜ்ஜீவிக்கச் செய்யவேண்டும் என்னும் கருத்தோடு வாங்கிக்கொள்ள வேண்டும். பயிரானது வாட்டமடைந்த மேகமானது எப்போது மழை பொழியும் என்று எதிர் பார்த்துக்கொண்டிருப்பது போல, தானவான் சத்பாத்திரமானவன் எப்போது வருவான் என்று எதிர்பார்த்தவனாக இருக்க வேண்டும். இத்தகைய வள்ளலுக்குச் சந்தேகமின்றி மோக்ஷம் கரதலாமலகமாகச் சித்திக்கும்.
முனிவரே! க்ஷத்திரியனானவன் அரசியல் விஷயத்தில் பரிபாலிக்க வேண்டி அநேகத் தீயசெயல்களைச் செய்தாலும் அதனால் விளையும் பாபங்களை ஒழிக்க அநேகம் யாகங்களையும் சிறந்த தானங்களையும் செய்ய வேண்டும் பாவிகளான அரசர்கள் கொடுக்கும் தானத்தைப்புண்ணிய சீலர்களாகிய அந்தணர்கள் பெறமாட்டார்கள். பாவிகளான அரசர்கள் நாள்தோறும் தானஞ்செய்து நமது பாவங்களைப் போக்கிக் கொண்டு வருவார்களானால் புண்ணியர்களான அந்தணரும் அவர்களிடம் தானம் பெறுவார்கள். தனவான்மித்திரனையும் புத்திரனையும் வேதபாரகரையும் சதாசர சம்பன்னரையும் விசேஷமாகச் சன்மானித்து தன் வீட்டையடைந்த விப்பிரனுக்குத் தானம் செய்ய வேண்டும் பசுக்கள், எருதுகள் அன்னம்; குடை வஸ்திரம் பாதுகை குதிரை முதலிய வாகனங்கள் வீடுகள். சயனங்கள் என்பவை சிரேஷ்டமான பயனைக்கொடுக்கத் தக்கவை. பிழைக்க வழி இல்லாத பிராமணருக்குப் பிழைக்கவழி செய்வானாகில் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கி சுவர்க்கம் அடைவான். தன் ஊழியக்காரரைப் புத்திரரைப் போல அன்புபாராட்டி நடத்தவேண்டும் வேதியர் யோக÷க்ஷமங்களை நாள்தோறும் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும் குடிகளை வருத்தி விசேஷமாக வரி முதலியவற்றை வாங்கிக் கஷ்டப்படுத்தும் மன்னன் பெரும்பாவியாக அழைக்கப்படுவான். நியாமார்க்கமாக வரி வாங்கித் தான தருமங்களைச் செய்யும் அரசன் கொடுத்த தானம் சிறிதாயினும் மேலோர் அதையே அனந்தமாகக் கொள்வார்கள் நல்லமுறைப்படி தேடிய பொருளால் செய்த யாகத்தால் தேவர்கள் திருப்தியடைவார்கள். சமுத்திர ஜலத்தைப் பானஞ் செய்து சூல் கொண்டு எழுந்த மேகமானது, பெருமழையை பெய்வித்தது போல, மன்னன் குடிகளிடத்தில் தேடிய பொருளைக்கொண்டு யாகஞ்செய்து அந்தணருக்கு அபரிமிதமாகத் தானம் கொடுக்க வேண்டும். பாலர், விருத்தர், அந்தகர், விவேகஹீனர் முதலானோருடைய பொருளை அரசனே காத்து அவர்களுக்கே பயன்படுத்துவது பெரியோராவது தானஞ்செய்த பொருளையும் அரசன் ஏற்கக் கூடாது. இவ்வண்ணம் செய்யாமல் அதிக்கிரமத்துப் பொருள் தேடும் மன்னன் தன் இராஜ்ஜியத்தைத்தானே அழிப்பவனாவான். பண்டிதரும் தேவபாரகரும் ஜீவனமில்லாமல் தன் இராஜ்ஜியத்தில் இருக்கும்படி ஆட்சி செய்வோன் உயிர் பிழைத்திருத்தல் அவலம் அவ்வரசன் வேதோக்தமாக பண்டிதர் முதலோனாருக்குச் சீவனோ பாயம் உண்டு செய்ய வேண்டும் என்று சிபிச் சக்கரவர்த்தி முதலியோர் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு செய்யாதவனுடைய இராஜ்ஜியத்தையும் குடும்பத்தையும் வடவாமுகாக்கினி தகித்து விடும் பதிவிரதா தர்மங் கெட்ட மங்கையர்கள் வாழும் இராஜ்யாதிகாரி மஹா நரகத்தை அடைவான். தானம், யாகம், நீதி முதலிய நற்செய்கைகள் இல்லாத அரசனை அவனது ஆட்சியிலுள்ளவர்கள் பலரும் நிந்தித்து அவமானப்படுத்துவார்கள் நன்றாக ஆட்சி புரிவேன் என்று கூறி முறை தவறி நடத்தும் அரசனைப் பலரும் கூடி அடித்துக் கொல்லுவார்கள், அரசனது ஆக்ஞைக்குறைவால் குடி மக்கள் செய்யும் பாவத்தில் அந்த மன்னன் காற்பங்கு பெறுவான் என்று கூறுகிறார்கள் ஆயினும் அது என் மதமன்று அவன் அந்தப் பாவம் முழுவதையும் அல்லது அரைப்பங்கையாவது அடையவேண்டும். வேந்தன் சரிவர ஆட்சி நடத்துவதால் குடி மக்கள் செய்யும் புண்ணியத்தில் அவன் காற்பங்கு பெறுவான் என்பதில் ஐயமில்லை! என்று ஸனத்குமார முனிவர், வியாச முனிவருக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.
பிதுர்களும் தேவர்களும் வேதியர்களும் அதிதிகளுமாகிய இவர்களை அன்னத்தால் ஆனந்திக்கச் செய்பவன் அளவற்ற புண்ணியத்தை அடைவான், பெரும்பாவியாக இருந்தாலும் அதிதிக்கு அன்னம் அளித்தவனுடைய பாவங்கள் எல்லாம் நெருப்புப் பொறிபட்டபஞ்சுப் பொதிபோல் ஒழிந்துபோம், அதிலும் அந்த அதிதி அந்தணனாக இருப்பின், விசேஷமான பலன் கைகூடும். சூத்திரனுக்கு அன்னபானங்களைத் தானஞ் செய்தால் அவை சிறந்த பயனை விளைவிக்கும் அதுவே பிராமணருக்குக் கொடுக்க நேர்ந்தால் அக்ஷயமாகும். ஆதரவற்று வந்த அதிதியை, குலம் கோத்திரம் விசாரியாமல் அந்த அதிதிக்கு அன்னதானஞ் செய்யவேண்டும் அன்னதானம் செய்தவன் திவ்வியமான சம்பத்துகள் உண்டாகப் பெற்று, தன் பிள்ளைகள் நண்பர்கள் முதலானவர்களால் உபசரிக்கப் பெற்று, அவ்வாறே சுவர்க்கலோகத்திலும் காமதேனு, கற்பக விருக்ஷம் முதலியவற்றால் தன் பணிகள் செய்யப்பெறுவான். வியாசரே! அன்னதானத்தினால் சுவர்க்கலோகத்தை அடைந்து அதைப் பிரகாசிக்கச் செய்வார்கள். அங்கு அவர்கள் விரும்பிய சுகங்கள் யாவும் சித்திக்கும் பொன்னாலான கிணறுகளும் மனோகரமான தடாகங்களும் மலர்ச்சோலைகளும் எண்ணற்ற வாகனங்களும் சிறந்த பக்ஷியங்களும் தேவான்னமும் சீனி சீனாம் பரங்களும் நவரத்தின ஆபரணங்களும் அவர்களுக்கு உண்டாகும். அங்கு நதியாகப் பால் பெருக்கெடுத்து ஓடும் பவளமாளிகைகள் பொன் நிறக்கட்டில்கள் முதலானவற்றோடு விரும்பிய இடங்களிலெல்லாம் சஞ்சரிப்பார்கள். புண்ணியகரமான அன்னதானத்தால் இத்தகைய சிறந்த பதவிகள் கைகூடுவதால் அன்னதானமே விசேஷமாகச் செய்யத்தக்கது.சிரார்த்த காலத்தில் நல்லவனான வேதியனுக்குப் பக்தியோடு, அன்னதானம் செய்தவன் தன் பிதுர்க்களை குறைவற்ற பதவியில் இருத்துவான்.
21. நீர்வழங்கல், மரம்வெட்டல் வாய்மை தவம்
நீர்த்தானம் எல்லாத் தானங்களிலும் சிறந்தது. ஆகையால் வாவி, சுபம், தடாகம் முதலியவற்றை ஒருவர் ஏற்படுத்த வேண்டும் கிணறு வெட்டவேண்டும் என்று கருதியவனுக்கு அப்போதே அவனிடமுள்ள பாவத்தில் பாதி தொலையும். பசுக்கள், விப்பிரர், நல்லோர் சாதாரண மனிதர்கள் முதலிய எல்லோருக்கும் பயன்படும்படி ஒரு நீர்த் துறையைத் தோண்டுவித்தவன் தன் வம்சத்தார்கள் எல்லோரையும் புனிதர்களாக்க வல்லவனாவான். அந்த நீர்த்துறை வேனிற்காலத்திலும் வற்றாத தண்ணீர் உள்ளதாகவும் சாதாரணமாக ஏறி இறங்கக்கூடிய தாகவும் இருக்க வேண்டும். தடாகம் நிர்மாணஞ் செய்தவன் மூவுலகங்களிலும் மற்றெவ்விடத்திலும் பூஜிக்கத் தக்கவனாகவாவது சூரிய லோகத்திலாவது வீற்றிருப்பான். இவ்வுலகில் அவனுக்குப் புகழ் உண்டாகும் திருத்தலங்களில் விசாலமான ஒரு தடாகத்தையாவது, கிணற்றையாவது பலருக்கும் பயன்படும்படி ஏற்படுத்தியவனுக்கு அறம், பொருள், இன்பம் என்பன கைகூடுவதுடன் உத்தமமான சம்பத்தும் கைகூடும். இத்தகைய ஜலாசயத்தைத் தேவர்களும் மனிதரும் கந்தர்வரும் பிதுரரும் உரகரும் ராட்சசரும் தாவரங்களும் எப்போதும் விரும்புகிறார்கள். வருஷருதுவில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு எப்போதும் நிக்தியாக்னியை வளர்த்த பயன் சித்திக்கும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். சரத்காலத்தில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு ஆயிரம் கோதானம் செய்த பயன் சந்தேகமில்லாமல் கிடைக்கும்.
ஏமந்த சிசிரருதுக்கில் முழுநீருள்ள கிணற்றை எடுப்பித்தவனுக்கு, சிறப்பான பொன் தக்ஷிணை கொடுத்து மகாயாகம் செய்வித்த கிணற்றை எடுப்பித்தவனுக்கு அதிராத்திரம் அஸ்வமேதம் என்ற யாகங்களைச் செய்த பயன் உண்டாகும். பலவிதமான மரங்களை நிழல் இல்லாத இடங்களில் உண்டாக்கி வளர்த்து வழிப் போக்கர்களுக்கு நிழலுண்டாக்கியவன் தன் வமிசத்தில் இறந்தவர்களையும் இனி பிறப்பவர்களையும் பாவிகளாக இருந்தாலும் தூய்மைப்படுத்த பிதுரர்களுக்குப் பிரீதி உண்டாக்குபவனாவான். ஒருவன் இறந்து பிறகு, அவனது புத்திரர் அவனைச் சந்ததியடையும் படிப் பலவித கிரியைகளைச் செய்வது போல், ஒருவன் வளர்த்த மரங்களும் அவனைச் சந்ததியடையச் செய்விக்கும். மரங்கள் மலர்களினால் தேவகணங்களையும் பழங்களினால் பிதுர்த்தேவர்களையும் நிழலினால் அதிதிகளையும் பூஜிக்கின்றன, மலர், பழம் முதலியவற்றுடன் கூடி நின்று, பூவுலகத்தில் இருப்பவர்களையும் திருப்தி செய்விக்கின்றன. கின்னரர், உரகர் இராக்ஷசர் தேவர், கந்தருவர், மானவர், ரிஷிகணங்கள் முதலிய யாவரும் விருக்ஷங்கள் விரும்புகிறார்கள் இகத்திலும் பரத்திலும் இம்மரங்கள் தம்மை வளர்த்தவனுக்குப் புத்திரர்கள் என்று சொல்லப்படுகின்றன. நீர்த் துறைகளை உண்டாக்குபவர்களும் மரங்களை நட்டுவளர்ப்பவர்களும் யாகங்களைச் செய்த வேதியர்களும் சத்தியவான்களும் ஒரு காலத்திலும் ஸ்வர்க்க லோகத்தை விட்டு நீங்கமாட்டார்கள்.
வியாச முனிவரே! மேலும் கேளும். சத்தியமே பரப்பிரம்ம சொரூபம், சத்தியமே சிறந்த தவம் சத்தியமே சிறந்த யாகம், சத்தியமே சிறந்தது என்று சொல்லப்படுகிறது. சத்தியமே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, சத்தியமே மேம்பட்ட பதவி சத்தியமே தேவரிஷி, பிதுர் பூஜைக்கு உரியதாக இருப்பது, சத்தியமே, விரதாசரணம், சத்தியஸ்வரூபமே, ஓங்காரம் சத்தியத்தினாலேயே காற்று வீசுதலும் சூரியன் தகித்தலும் அக்கினி எரிதலும் என்று உணரவேண்டும், சத்தியத்திலேயே சுவர்க்கம் நிலை பெற்றுள்ளது. சத்தியவானுக்கு சர்வவேத பாராயணமும் சகல தீர்த்தஸ்நானமுஞ் செய்த பயன் கைகூடுவதுடன் தன் கோரிக்கைகள் யாவற்றையும் அடையக்கூடும். ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்த பயனையும் சத்தியத்தின் பயனையும் நிறுத்தால் சத்தியத்தின் பயனே விசேஷமாக இருக்கும் சத்தியத்தினாலேயே தேவர்களும் முனிவர்களும் திருப்தியடைகிறார்கள் சத்தியமே கவனிக்கத்தக்கது, முனிவர்கள் சத்தியத்தினாலேயே சிறந்த சித்திகளை அடைந்து, அப்சரசுகளுடன் கூடி திவ்விய விமானங்களில் ஏறி விரும்பிய இடங்களில் சென்று திரும்புகிறார்கள். ஆழ்ந்தும் பரந்தும் வணங்கும் புண்ணிய தீர்த்தமான சத்தியத்தில் நல்ல மனத்தோடு மூழ்கவேண்டும். அதுவே தூய்மையான நீராடலாகும்; தன்னை முன்னிட்டோ பிறரை முன்னிட்டோ பொய் சொல்லாமல் சத்தியத்தையே சொல்பவர்கள் எப்பொழுதும் சுவர்க்க பதவியிலேயே இருப்பார்கள். பிராமணரிடத்தில் வேதம் யாகம் மந்திரம் முதலியன எப்போதும் இருக்கின்றன எனினும் அவர்கள் சத்தியமற்றவர்களானால் ஒரு புல்லையும் அடையமாட்டார்கள். ஆகையால் மனநிறைவாக மக்கள் அனைவரும் வாய்மையே உறுதியாக கொள்ள வேண்டும். இவ்வாறு கூறிய குமார முனிவரை நோக்கி வியாச முனிவர் பிரம்ம புத்திரராகிய ஸநத்குமார முனிவரே! எல்லா வருணத்தவர்களுக்கும் விசேஷமாகப் பிராமணர்களுக்கும் நிதியாக விளங்கும் தவத்தின் பிரபாவத்தை விவரிக்கச் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டார் ஸநத்குமார முனிவர் கூறலானார்.
வியாசரே! எல்லா விருப்பங்களையும் கொடுக்கவல்லதும் பிராமணர்களால் பெருங்கஷ்டத்துடன் செய்யத்தக்கதுமான தவத்தின் மகிமையைச் சொல்லுகிறேன் கேளும். தவமே பரப்பிரம ஸ்வரூபம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். தவத்தினாலேயே பெரும் பயன்கள் சுகமனுபவிப்பார்கள். விருப்பமுடையவர் தேவர்களுடன் கூடிச் சுகமனுபவிப்பார்கள். தவத்தாலேயே சுவர்க்கம் புகழ் மோட்சம் இறைவன் தரிசனம் ஞானம், அஞ்ஞானம், சவுபாக்கியம் உருவம் இஷ்ட சித்திகள் முதலியன கைகூடும். தவஞ்செய்யாதவர்கள் ஒரு காலத்திலும் பிரமலோகத்தைக் காணமாட்டார்கள் எந்தக் கோரிக்கையோடு தவஞ்செய்தாலும் அது அந்தக் கோரிக்கையை ஈடேற்றுங்கள் பிரமச்சரியத்தை மேற்கொண்ட எண்பத்தாறாயிரம் முனிவர்களும் தவத்தை அனுசரித்தே சுவர்க்கத்தில் தேவர்களுடன் கூடி ஆனந்தப்படுகிறார்கள். இந்திரன் எண்ணிறந்தக் காலம் பெருந் தவஞ் செய்து உலகங்களைப் பிரகாசிக்கச் செய்கிறார்கள். தவத்தைச் செய்யா விட்டால் இகத்திலும் பரத்திலும் சிறிதும் சுகம் என்பது உண்டாகாது. தவத்தையே கடைப்பிடித்துச் செய்தவர்கள் பலவிதமான பயன்களை அடைவார்கள். எல்லாவற்றையும் மனிதன் தவத்தாலேயே அடைய வேண்டும். காட்டிலுள்ள கந்த மூலங்களையே சாப்பிட்டுத் தபோ வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பவன் மிகவும் பரிசுத்தனாக வேதத்தை முறைப்படி அத்தியயனம் செய்தவன் பெறும் பயனை அடைவான்.
ஸத்யவதி புதல்வரே இவற்றையெல்லாம் முறைப்படி அறிந்து கொள்வதற்குப் புராணங்கள் சிறப்பானவை, புராணம் கேட்பதினால் பரத்தின் தன்மை இத்தகையது, என்று ஒருவன் உணரக்கூடும். புராணம் சொல்லுதலும் சத்தியவானாகித் தவத்தை மேற்கொண்டு வனத்தில் இருக்கும் புண்ணிய வடிவமான வேதியனால் சொல்லத்தகும். புராணங்களின் விஷயங்களையெல்லாம் உணர்ந்த குருவே, நல்லோருக்குள் உயர்ந்தவன். பாவத்தால் நரகம் அடைய வேண்டியவனிடம் சிறிது பொருளைப் பெற்று அவனுடைய பாவத்தை விலக்கிப்புண்ணியத்தை உண்டு செய்ய வல்லவன் என்பதே அதற்குப் பொருள்படும் தனம், தானியம் இளமை தீரம் முதலியவற்றை உத்தமனுக்குத் தானம் செய்தவன் உன்னதமான கதியை அடைவான். பகவும் இரதமும் எருமையும் குதிரையும் சத்பாத்திரன் பெறும்படித் தானஞ்செய்தவன் எல்லாப் பயன்களையும் கொடுக்கத்தக்க அஸ்வமேத யாகம் செய்த பயனை அடைவான். கருமையாயும் விசேஷ விளைவைக் கொடுப்பதாகமுள்ள பூமியைத் தானஞ் செய்தவன். தன் வம்சத்தில் முன் சென்ற பத்துத் தலைமுறைகளையும் பின்வரும் பத்துத் தலைமுறையினரையும் கடைத்தேறச் செய்து தானும் திவ்வியமான விமானத்தில் ஏறிச் சிவலோகத்தை அடைவான். புராணம் கேட்பதால் திருப்தியடைவதைப் போல் யாகத்தாலோ புஷ்ப பூஜையாலோ கூடத்தேவர்கள் திருப்தியடையமாட்டார்கள். சிவாலயத்திலோ பெருமாள் கோவிலிலோ சூரியனின் எதிரிலோ பிறதேவர் சந்நிதியிலோ புராணத்தைத் திகழச் செய்பவன் இராஜசூய அஸ்வமேதயாகங்கள் செய்த பயனைப் பெறுவான். புராண இதிகாசங்கள் படிப்பதால் விரும்பியவற்றையெல்லாம் பெற்று சூரிய மண்டல பூவுலகில் பேரரசனாகப் பிறப்பான் தேவர் சன்னிதியில் ஜெய ஜெயவென்று புகழ்ந்தோர் ஆயிரம் அஸ்வமேத பயனை அடைவார்கள் ஆகையால் எல்லா ஆலயத்தில் புராண இதிகாசங்களைக் கேட்டால் சிவபெருமானுக்கும் பிறதேவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியுண்டாகும். இவ்வாறு ஸநத்குமாரமுனிவர் வியாசமுனிவருக்குச் சொன்னதாக சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.
22. புராணம் கேட்பதின் பலன்கள்!
புராணம் படித்தலின் பலன் எத்தகையது என்று எனக்குச் சொல்லவேண்டும் என ஸநத்குமாரமுனிவர் தம் தந்தையான பிரமதேவரைக் கேட்டார் பிரமதேவர் அதை ஸநத்குமாரமுனிவருக்குச் சொன்னார். ஸநத்குமாரர் அதையே பின்னொரு காலத்தில் வியாசருக்கு வெளியிட்டார். அவ்வியாச பகவான் எனக்கு கூறியருளிய வகையிலேயே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் கேட்பீர்களாக என்று சூத புராணிகர் சொல்லத் தொடங்கினார். பிரமதேவர், ஸநத்குமார முனிவரை நோக்கி, மகனே! நான் ஒரு காலத்தில் இயமலோகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றேன். அப்போது யமதர்மராஜன் என்னைப் பூஜித்து அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் உபசரித்தான். பிறகு ஒரு திவ்வியமான பீடத்தில் இருவரும் அமர்ந்து உரையாடினோம் அப்போது அற்புதம் ஒன்றைக் கண்டேன். அதாவது வைடூரிய மணிகளால் உருவாக்கிய ஓரங்கள் உள்ளதும் பலவித இரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் மணி மலைகள் கட்டபட்டுக் கணகணவென்று ஒலிப்பதுமான திவ்விய விமானம் ஒன்றில் ஒரு திவ்விய புருஷன் வந்தான் அவனை யமன்கண்டதும் எழுந்து நல்வார்த்தைகளைச் சொல்லி, சுகமா? என்று விசாரித்து தர்மம் உணர்ந்தவனே! உன் தரிசனத்தால் மகிழ்ந்தேன். உனக்கு இங்கு இருக்க விருப்பம் உள்ள வரையில் இங்கிருந்து, பிறகு நீ பரமலோகத்திற்குப் போகலாம் என்று சொன்னான். அப்பொழுதே மற்றொருவன் அது போன்ற ஒரு விமானத்தில் வந்தான். இயமன் அவனையும் அன்புடன் பூசித்து முன்வந்தவனுக்குக் கூறியதைப் போலவே, உபசார வார்த்தைகளைக் கூறி நலம் விசாரித்தான் அதைக்கண்டு நான் வியப்புற்று. இயமனை நோக்கி, உன்னிடம் இப்போது வந்த இருவரும் யார்? அவர்கள் செய்துள்ள நற்கர்மங்கள் யாவை? நீ அவர்களை மதித்த காரணம் என்ன? தேவர்களால் பூஜிக்கப்பட்ட அவர்கள் யார் என்று கேட்டேன் அதற்கு இயமதர்மன் கூறினான்.
பூவுலகில் வைதிசம் என்ற நகரத்தில் தராபாலன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அந்தச் சமயத்தில் பார்வதி தேவி தனக்கு அபகாரம் செய்த ஒரு தோழியைப் பன்னிரண்டு ஆண்டுகள் நரியாகத் திரியும்படிச் சாபமிட்டாள். பிறகு விதஸ்தா வேத்திரவதி என்ற நதி சங்கம தீரத்தில் உன் சாபம் ஒழிக! என்று சாபவிமோசனமும் கூறினாள். அதனால் அந்தத் தோழி நரிவடிவம் பெற்று உலகில் பன்னிரண்டு ஆண்டுகள் சஞ்சரித்து, ஒரு காலத்தில் நதிகளின் சங்கம÷க்ஷத்திரத்தை அடைந்து அங்கு உணவு எதுவும் கிடைக்காமல் உயிர் நீங்கித் திவ்விய சரீரம் பெற்று விமானத்தில் ஏறிச் சிவசன்னிதியை யடைந்து, பண்டைய பணிவிடைகள் புரிந்து வந்தாள். அதை அச்சமயத்தில் அருகிருந்து கண்ட தராபாலன் என்ற மன்னன். ஆஹா இந்த நரி உயிர் விட்டவுடனே திவ்வியவிமானம் ஏறி நற்கதி அடைந்தது அல்லவா? இது உத்தம ÷க்ஷத்திரம் என்று கருதி அங்கு ஓர் ஆலயம் கட்டி, அதில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பரிவார தேவதைகளையும் நிறுத்தி, திவ்வியமான மண்டபம், கோபுரம் பிரகாரம் முதலியயாவையும் முடித்து அனைவரும் வழிபடச் செய்தான். இந்நிலையில் புராண இதிகாசங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்து பிறருக்குரைத்து பிரமஞானம் பெற்ற வேதியர் ஒருவர் வந்தார். அரசன் அவரை பூஜித்து அவனிடமிருந்த புராணப் புத்தகத்தையும் கந்த புஷ்ப தூப தீபங்களால் பூஜித்து வினையமாக அவ்வேதியரை நோக்கி, நான் சிவாலயம் ஒன்றை இங்கு கட்டியிருக்கிறேன் அச்சிவ சன்னிதானத்தில் புராணம் கேட்க வேண்டும் என்று கருதும் நாற்குலத்தார்களும் கேட்கும்படி புராணச் சொல்லும்போது வருஷம் ஒன்றுக்கு நூறு பொன் நிஷ்கம் ஜீவனத்திற்காகக் கொடுத்து வருகிறேன். உமக்கும் இது ஒரு நல்ல உத்தியோகம்! என்று கூறி அவரைச் சம்மதிக்கச் செய்துப் புராணஞ் சொல்லுவிக்கத் துவங்கி ஆறுமாதம் ஊராருடன் தானும் இருந்து புராணம் கேட்டான், பிறகு தன் ஆயுள் முடிந்ததால் அரசன் காலகதியடைந்தான். அப்பொழுதே சிவனருனால் திவ்வியமான விமானத்தைக் கொண்டு சென்று அவனை நான் அழைத்துக் கொண்டு வந்தேன் இது இவனுடைய சுககர்ம பலன்! இது புண்ணிய சரிதம் புராணம் கேட்டால் எல்லாத் தேவர்களுக்கும் திருப்தியுண்டாவது போல் கந்த புஷ்பாதி உபகரணங்களால் செய்த பூஜையாலும், கோதானம் சொர்ணதானம் வெள்ளிதானம் வஸ்திரதானம் முதலிய தானத்தாலும் திருப்தியுண்டாகாது, தர்மங்களைச் சொல்லும் புராணம் கேட்பதாலேயே தேவர்கள் பிரீதியை அடைவார்கள். புராண இதிகாச சிரவணத்தால் நானும் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் அதையே நானும் புகழ்வேன். இவன் இவ்வாறு புராண சிரவணம் செய்த புண்ணியன் நல்லோர் உறவால் அறவுணர்வு உண்டாகி, தர்மங்களை யெல்லாம் நன்கு உணரப்புராணம் கேட்க வேண்டும் என்ற இச்சையால் சிரத்தை பக்திகளுடன் கூடிப் புராணஞ் சொல்லிச் செய்து அதைக் கேட்டு விசேஷமான பக்தியை அடைந்தான் ஆகையால், மனிதன் புராணஞ்சொல்லும் பெரியோரிடம் சென்று வலம் சுற்றி வணங்கி கருமித்தனமின்றிப் பொன்னைத் தக்ஷிணயாகக் கொடுத்தால் சாசுவதமாகப் பிரமபதவியை அடைவான்.
இரண்டாவது விமானத்தில் வந்தவனும் அதே நற்செயல் செய்தவனேயாகும். அவன் புராணிகனுக்கு விசேஷ பூஜை செய்திருக்கிறான் ஆகையால் அதைக் கருதியே நான் அவனையும் பூஜித்தேன் புராணஞ் சொல்பவனைப் பூஜித்தலால் நானும் பிரமவிஷ்ணு ருத்திரர்களும் பூஜிக்கப் பட்டவர்களாவோம் சிரார்த்தாதி காலங்களில் உத்தமமான பக்ஷிய போஜனங்களுடன் ஒருமுறை பூஜிப்பவர்கள் என்னைப் பதினைந்து ஆண்டுகள் பூஜித்த பயனை அடைவார்கள் புராணப் பிரசங்கியை ஒருமுறை திருப்தி செய்தால் பல ஆண்டுகள் நான் திருப்தியடைவேன் நான் மட்டுமல்ல. இந்திராதி தேவர்களும் பிருமா திருமால் சிவபெருமான் முதலானவர்களும் திருப்தியடைவார்கள். புராணப் பிரசங்கி மகிழ்ச்சியடைவானாயின் எல்லாத் தேவர்களும் மும்மூர்த்திகளும் சந்திர சூரியர்களும் கிரகங்களும் மகிழ்ச்சியடைவார்கள் ஸ்நானம், பூஜை, ஜபம் ஹோமம், சாஸ்திரம், சவுசம் அஹிம்சை, விரதாசரணம், உபவாசம், தைரியம், மவுனவிரதம், புலனடக்கம், பிரமஞானம், குரோதமின்மை, தானம், சாந்தி, தயை நீர்த்துறைகளை நிலைநாட்டல் சாந்திராயணம், யாகங்கள் தீர்த்தங்கள் ஆசிரமங்கள் முதலியனவெல்லாம் தர்ம சாதனத்திற்காகவே இருக்கின்றன என்று பெரியோர் கூறுவார்கள். தர்மத்தாலேயே பொருளும் காமமும் மோக்ஷமும் உண்டாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு விதப் புருஷார்த்தங்களாலேயே இக பரங்களில் நிலையான சுகம் ஏற்படும் பவத்தால் துக்கம் உண்டாகும். ஆகையால் பாவத்தைச் செய்யாமல் தர்மத்தைக் கடைப்பிடித்துப் புண்ணிய கர்மங்களையே செய்ய வேண்டும். அத்தகைய தர்மமும், ஸத்வமயம், ரஜோமயம், தமோமயம், என்று மூவகைப்படும், சத்வமயமான தர்மம், தவத்தால் பிரமஞானமடைந்த முனிவர் சித்தர்கள் போன்றோரிடம் எப்போதும் நிலையாக இருக்கும். ரஜோமயமான தர்மம், தேவர்களிடம் இருக்கும், தமோமயமான தர்மம், தானவ தைத்தியர்களிடம் இருக்கும் பரிசுத்தமான இவர்களுடையச் சத்கர்மம் சொல்லப்பட்டது இது சத்தியம் அத்திவ்விய புருஷர்கள் இருவரும் மஹா புண்ணியர்கள். அவர்களுடைய சரிதத்தை நீ கேட்டதால் நீயும் புண்ணிய புருஷன் என்பதில் சந்தேகமில்லை! இவ்வாறு இயமன் கூறியவை யாவும் சத்தியமே என்று யாவரும் நம்ப வேண்டும்.
மைந்தனே! எனக்கு ஐந்தாவதுமுகம் ஒன்று இருந்தது, அந்த முகத்திலிருந்தே புராணங்கள் பலவிதமாக வெளிப்பட்டு உலகத்திற்கு இதத்தைச் செய்கின்றன. புராணங்கள் எனக்குப் பிரியமானவை வேத வேதாங்கங்களும் எனக்குப் புராணங்களைப் போல் பிரியமானவையல்ல. இந்தப் புராண இதிகாசங்களைச் சிரத்தை பக்திகளுடன் சொல்லும் புராணிகனுக்கு வாழ்க்கை வசதிகள் உண்டாக்கி எப்போதும் புராணம் கேட்டு வருபவர்கள் உத்தமமான கதியை அடைவார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை பூவுலகில் நன்றாக விளங்குவதற்காகவே புராண இதிகாசங்கள் யாவற்றையும் சொன்னேன். இவை வேதப் பொருளை விளக்கமாகச் சொல்லத் தக்கவை. புலமை உடையவர்களே வேதப் பொருளை உணர முடியும் ஆகையால் எல்லோரும் நன்கு உணருமாறு விரிவான புராண இதிகாசங்களைச் சொன்னேன். புராண இதிகாச்களை கேட்பவனும் பக்தியோடுப் பாராயணஞ் செய்பவனும் உன்னதமானப் பதவியை அடைவார்கள். தக்ஷிணத்தைக் கொடுத்துப் புராணம் கேட்டால் பரம்பொருள் வடிவத்தில் ஐக்கியமாகிறான் இது ஓர் ஆச்சரியமல்ல. தீர்õத்தங்களில் கேதாரம், விரதங்களில் மஹாவிரதம் பர்வதங்களில் மேரு, பறவைகளில் கருடன், நதிகளில் கங்கை, தேவர்களில் சர்வேஸ்வரனாகிய சிவபெருமான். பாத்திரங்களில் வாசகன்(புராணிகன்) சிறப்பாகும். இவ்விஷயத்தில் சிறிதுஞ் சந்தேகமில்லை புராணஞ் சொல்லும்போது பக்தியோடு பூஜை செய்தவன் சகல தேவர்களையும் பூஜை செய்தவனாவான்: புராண பாராயணம் செய்தவர்கள் பெறும் புண்ணியம் விந்தையானது; நாள் தோறும் பக்தி சிரத்தையோடு சிவ சந்நிதானத்திலிருந்து புராணம் கேட்பவள் சிவசாயுச்சியத்தை அடைவதில் சிறிதும் சந்தேகமில்லை இது சத்தியம்!
23. தானம் செய்தவர்களின் கதைகள்
நைத்குமாரர் மேலும் கூறலானார்.
வியாச முனிவரே! நல்லோருக்கே தானம் வழங்க வேண்டும் சுவர்ண(பொன்) தானம், கோ(பசு) தானம், பூ (நில) தானம் முதலியவற்றை வாங்குவோர் தானஞ் செய்வோரைப் பவித்திரர் ஆக்குவதோடு தாங்களும் பவித்திரராவார்கள். இத்தானங்களை செய்தோர் எல்லா பாவங்களிலிருந்தும் நீங்குவார்கள். கோ தானம், பூதானம், வித்தியாதானம் ஆகிய மூன்றும் சமமான பயனைக் கொடுக்கக் கூடியவை. இவற்றில் கோதானம், பூதானம் என்பவற்றைக் காட்டிலும் வித்தியா தானம் சிறிது சிறந்ததேயாகும். எருது, பசு, குடை, பாதுகை, பானம், அன்னம் இவற்றைத் தக்கவர்களுக்கு நல்ல மனத்துடன் தானம் செய்தால் சிரத்தையுடன் பெருந் தக்ஷிணை வைத்துச் செய்த யாகமாகும். அசூயையில்லாமல் தானஞ் செய்வதே எல்லா யாகங்களிலும் சிறந்தது. தானம் வாங்கத் தக்க நல்லோரின் பிராமணத் தன்மையையும் நீக்கிவிடத் தக்க கோரமான தானங்களைப் பற்றி இனிச் சொல்கிறேன். செத்தவனின் படுக்கை மான்தோல், சண்டாளன். கைப்பொருள், மிலேச்சன் கைப்பொருள் உபயகோமுகி திராசில் ஏறிய பொருள் குரு÷க்ஷத்திரத்தில் தானம் வாங்குதல் எள் பதிதன் கைப்பொருள், விசேஷ தக்ஷிணையை விரும்பி ஒருவன் பாவத்தை வாங்கல் என்ற இவை பத்தும் கெட்ட தானங்கள் ஆகையால் இவற்றில் ஒன்றை வாங்கிய வேதியன் ஞானஹீனனாகிக் கோரமான நரகத்தை அடைவான். இவற்றைத் தானஞ் செய்தவன் களிமண்ணில் கல்லை வைத்துக் காலையூன்றி அதைக் கடந்து செல்பவன் போல், தன் பாவகர்மத்தில் அவ்வேதியனை வைத்து தான் உத்தம பதவியை அடைவான். தானம் கொடுப்பவனும் வாங்குபவனும் அடையும் பயனைச் சொன்னேன் இன்னும் பெருந்தானங்களையும் கெட்ட தானங்களையும் வாங்குவோனின் நிலையாக விரித்துச் சொல்கிறேன்.
வியாசரே! புத்திமானாகிய கொடையாளி எப்பொழுதும் சத்பாத்திரனான வேதியனுக்குத் தானஞ் செய்து கொண்டேயிருக்கிறான். ஆயினும் வாங்குவோன் பொன் வெண்மையான எள், யானை, கன்னிகை, பணிமகள், வீடு, இரதம், அஸ்வம், பூமிகாரம் பசு என்னும் பத்துச் சிறந்த தானங்களையும் வாங்குவானாயின் தானஞ் செய்தவனைப் பரிசுத்தமாக்குவதுடன் தானும் ஞான வளர்ச்சி பெற்றுப் புனிதனாவான். பொன் முதன்மையானது, அதுவே, சிறந்த தக்ஷிணை அதுவே உன்னதமானது. மங்களகரமானது அதைத் தானம் கொடுப்பவன் தன் முன்னோர் பதின்மரும் பின்னோர் பதின்மரும் தான் ஒருவனுமாகிய இருபத்தோரு தலைமுறையினரையும் பாவம் கழிந்தவர்களாக்குகிறான். சுவர்ணத்தைச் சுத்தமான மனத்துடன் தானஞ் செய்தவன் சகல தேவர்களாலும் சகல கோரிக்கைகளையும் ஈடேறப் பெறுவான். அக்கினி முதலான தேவர்கள் அனைவரும் பொன்வடிவமாக இருக்கிறார்கள். புனிதமான சுவர்ணமானது(தங்கமானது) புனிதமற்ற பிறபொருள்களோடு கூடும்போது அவற்றையும் புனிதமாக்கிவிடும். பிதுரர்க்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பொன்னே எப்போதும் பிரியமானது உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தூய்மையாக்குவது தண்ணீர் எனினும் அந்த நீரையும் பொன்னே தூய்மையாக்கி விடும் நாள்தோறும் விடியற் காலத்தில் அக்கினி காரியத்தை முடித்துப் பொன் தானஞ் செய்தவர்கள் தாம் விரும்பிய பொருள்களையெல்லாம் அடைவார்கள் பொன் தானஞ் செய்தவன் சகல தானங்களையும் செய்த பயனை தானஞ் செய்த பயனை இந்த நிலவுலகிலேயே அடைவான். அப்சரஸ்மங்கையர் கந்தர்வர்கள் முதலானவர்கள் ஆடல் பாடல்கள் புரிய, அன்னங்களால் சுமக்கப்பட்டு விரும்பிய இடத்துக்குச் செல்லத் தக்க பொன் விமானத்தில் ஏறிச் சுவர்க்க லோகத்தில் தான் விரும்பிய இடத்தில் தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் அனுபவிப்பான். ஆகையால் சக்திக்கு ஏற்ப அதிதிகளுக்குப் பொன் தானஞ் செய்ய வேண்டும் பொன் தானம் செய்தவன் புனிதமான இதயத்தோடு எண்ணற்ற வருஷங்கள் தேவபோகங்கள் அனுபவிப்பான்.
இனி பூதானம் பற்றி ஒரு முன் கதையைச் சொல்கிறேன். முன்பு சித்திராதன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன் ஏழு தீவுகளுக்கும் தலைவனாகி எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்து. ஒரு காலத்தில் திவ்வியமான இரதத்தில் ஏறிச் சுவர்க்கம் லோகத்தையடைந்து, தேவ சைனியங்களோடு கூடிய இந்திரன் வென்று தன் ஆணையை அங்கும் பரவச் செய்தான் மூவுலகங்களுக்கும் அதிபதியாகத் திகழ்ந்தான். பிறகு இப்பெரு நிலையும் செல்வமும் எப்படி உண்டாயின என்று யோசித்து வியப்புற்றான். ஆறாயிரம் புதல்வரைப் பெற்றான். குறைதலற்றப் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு, குடிமக்களுக்கு உதவியாக இருந்தான். சிறந்த வாகனங்களை அடைந்து அகாலமரணம் முதலியன வின்றி நீதியோடு அரசாட்சி செய்து வந்தான். அவனுக்கு அதிமோகனத் தோற்றமுள்ள மனைவியும் இருந்தாள். அவ்வாறு இருக்கும் போது, அந்த மன்னன் இதகைய பெருஞ்செல்வத்தை மறு பிறவியிலும் அடையக்கூடிய வழிவகைகள் என்ன என்று சிந்தித்தான். எனவே அறங்களை யெல்லாம் நன்கு உணர்ந்து வசிஷ்டமுனிவரை அவன் அணுகி அவரை வணங்கி தவஞானியே உம் அருளால் நான் அளவற்ற செல்வத்தை அனுபவிப்பதோடு மனோகரமான மனைவி தானம் வழங்கும் வல்லமை, செல்வம், பல பெண்மணிகள் அன்னபானங்களை அனைவருக்கும் வழங்கும் சாமர்த்தியமும் ஆயிரம் யானைகளின் வலிமை, பகைவர் நாசமும் நல்ல புத்திரர்கள் உத்தமமான பணியாட்கள் அநுராகம் முதலான தோஷமற்ற குடிமக்கள், தர்மமுறைப்படி அரசாளும் ஆற்றல் முதலானவற்றையும் அடைந்திருக்கிறேன். நான் விரும்பிய யாவும் தடையின்றி அப்போதே கைகூடுகின்றன. இவையாவும் முற்பிறவிகளில் நான் செய்த தர்மமாசரணத்தால் உண்டானவை என்று தெரிந்து கொண்டேன். ஆயினும் நான் செய்த புண்ணிய கருமம் யாதென எனக்கு விளக்கியருள வேண்டும் என்று கேட்டான். வசிஷ்டமுனிவர் சிறிது யோசித்து விட்டு கூறலானார்.
அரசனே, நீ முற்பிறவியில் தாழ்ந்த குலத்தில் தோன்றி அவந்தி என்ற பட்டணத்தில் இருந்தாய். அந்த நகரத்தில் தர்மபாலன் என்ற மன்னன் தர்மம் செய்பவனாக இருந்தும் நீ அவனை அடையக் கூடாமல் உன் குலத்தின் இயற்கைப்படி வாழ்ந்து வந்தாய் நீ அங்கு இருக்கும்போது பல ஆண்டுகள் மழையின்றி பஞ்சம் உண்டாயிற்று அதனால் உனக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை காட்டுக்குச் சென்றாய். அந்தக் காட்டில் கந்த மூலபங்களைப் புசித்துக் கொண்டிருக்கும் பெரியோர் பலர் இருந்தார்கள். அங்கு பலர் வந்து சேர்ந்தாலும் பஞ்சத்தினாலும் அந்தக் காட்டிலும் உண்ணும் உணவின்றிக் கஷ்டப்பட்டு நேர்ந்தது. அப்போது நீ உன் மனைவியோடு மரங்களைகொளுத்தி அந்தக் கரியை விற்றுக்காலம் கழித்து வந்தாய் ஒரு காலத்தில் ஒரு சுமை விறகைத் தலையில் சுமந்து அந்த நரகத்து வீதிகளில் விலை கூறித் திரிந்தாய். தெருக்கள் எங்கும் சுற்றியும் அந்த விறகு விலைபோகவில்லை. அந்தத் தினமோ மாசி மாச பூரணையும் இராகு கிரஸ்த சந்திரக்கிரகணமுமாக இருந்தது. அதனால் அந்த நகரத்திலிருந்த வேதியர் சிலர் ஒரு வைசியன் வீட்டில் ஓமம் செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து விறகு தலையனான நீ உன் மனைவியுடன் அங்கு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விலையாக விறகை அந்த ஓமகுண்டத்தில் இட்டு அவ்வந்தணருக்குச் சீதநிவாரணஞ் செய்து அங்கேயேயிருந்தாய். அப்போது தனவானான அந்த வைசியன் நூறு பலம் எடையுள்ள பொன்னைப் பூதானப் பிரதிநிதியாக அவ்வந்தணருக்குத் தானம் கொடுத்தான். அதை கண்ட நீ அந்தோ! இது நல்ல உத்தம புண்ணிய காலமாயிற்றே? இந்தக் காலத்தில் வேதியருக்கு இப்படி தானம் கொடுக்க நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்று மனம் விருந்தி, நான் ஏழையாகையால் மானசீகமாகத் தானம் செய்தேன்! என்று உனக்குள் நீயே கழிவிரக்கத்தோடும் கற்பனைத் தானத்தை நினைத்துக் கொண்டாய் அதனால் உனக்கு இந்தப் பிறவியில் இத்தகைய சிறந்த போகங்கள் யாவும் உண்டாயின ஆகையால் நீ இப்போதும் பூதானம் செய்து கொண்டிரு பூதானம் செய்தால் தேவர்களுக்கும் எட்டாத பதவியை அடைவாய் உன் முற்பிறவி வரலாறு முழுவதையும் நான் சொல்லக் கேட்டாய் அல்லவா? அரசனே! நிலதானம் எப்போதும் சுவர்க்கத்திலிருந்து உன்னை அகற்றாது அத்தகையத் தானத்தையே செய்து கொண்டிரு! தம் உள்ளத்தில் கருதியவர்களே சிறந்த பயனை அடைவார்களாயின் பூதானம் செய்தவர்கள் பெறும் பெற்றினைச் சொல்ல முடியுமோ?
முன்னொரு காலத்தில் தேவர் மனிதர் அரக்கர் முதலானவர்களையெல்லாம் அடக்கி உலக முழுவதையும் ஏகசக்கராதி அன்னபானம் முதலானவற்றை அருந்திய உரகர், சித்தர், முனிவர் முதலியவர்களால் புகழப்பெற்றான். ஏழுதீவுகளிலும் தன் செங்கோலைச் செலுத்தி நீதியுடன் அரசு செலுத்தியதால் பரிசுத்தமற்றவர்கள் நோயாளிகள் திருடர்கள், வஞ்சகர்கள், அங்கஹீனர்கள் முதலியோர் அவன் ஆட்சியில் இருக்கவில்லை. அந்தச் சிறப்பான அற்புதங்களைக் கண்ட அவ்வரசனின் மனைவி மிகவும் வியப்புற்று இத்தகைய பெருஞ் செல்வங்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த எத்தகைய புண்ணியத்தால் கிடைத்தன என்று யோசித்து, தன் கணவனிடம் தன் எண்ணத்தை உணர்த்தினான். பிருது மன்னனும் உண்மையை உணர முடியாமல் வியந்து எல்லாமுணர்ந்த வேதியரை அணுகி, நன்கு வணங்கி வேதிய உத்தமர்களே! நீங்கள் என்னிடம் தயையுடையவர்களாயின் உங்கள் சிறந்தஞான நான் உங்களுக்கு வேண்டுவனவற்றையும் குறைவில்லாமல் கொடுப்பவனல்லவா? நீங்களும் யாவருக்கும் உதவிசெய்யும் தயாளர்களல்லவா? என்றான். முனிவர்களே, அரசனே! உன் மனத்திலுள்ள சந்தேகம் என்ன என்று எங்களுக்கு உணர்த்துவையானால் நாங்கள் அதன் விபரத்தை வெளியிடுவோம், நீ ஏழுதீவுகளையும் முறைப்படி அரசு செய்வதால் உன்னிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தக்க நியமமுடைய முனிவர்களிடமே தர்மங்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உன் கருத்து என்ன என்று சொல் என்று கேட்டார்கள். ஆதி அரசனான பிருதுச்சக்கரவர்த்தி வேதியரைப்பணிந்து நான் பூர்வத்தில் செய்த நல்வினையையும் என் முற்பிறப்பையும் அதிசவுந்தரியமுடைய என் மனைவி செய்துள்ள நற் செயல்களையும் எங்கள் இருவருக்கும் நீங்காத பெருவிருப்புற்று இருப்பதற்குக் காரணத்தையும் அறம், பொருள், இன்பம் முதலான புருஷார்த்தங்கள் உண்டான வரலாற்றையும் மன்னர்கள் யாவரும் எனக்குக் கப்பங்கட்ட நேர்ந்தவகையையும் அளவிட முடியாமல் என் பொக்கிஷம் பெருகியிருப்பதில் காரணத்தையும் தோள் வலிமையிற் சிறந்து நோயற்றவாழ்வு பெற்ற என் வரலாற்றையும் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை விவரமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். மகரிஷிகள் யாவரும் ஒன்றுகூடி மரீசிமுனிவரை அணுகி அரசனது கேள்விகளுக்கு அவரே விடையளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். மரீசி முனிவர், சிறிது நேரம் யோக நிஷ்டையிலிருந்து விருத்தாந்தங்கள் யாவற்றையும் உணர்ந்து கைகட்டி தம் முன்பு நிற்கும் மன்னர் மன்னனை நோக்கிக் கூறலாயினர்.
சக்கரவர்த்தியே! நீ எல்லாப் போகங்களையும் இப்போது அனுபவிப்பதற்குக் காரணம் நீ பூர்வ ஜன்மத்தில் உன் மனைவியுடன் கூடிச் செய்த நல்வினைகளின் பயனேயன்றி வேறல்ல. அதையும் விவரமாகச் சொல்லுகிறேன். சாவதானமாகக் கேள் நீ முற்பிறவியில் ஜீவஹிம்சை செய்வதிலேயே விருப்பமுடைய ஒரு சூத்திரன் உன் மனைவியோ மஹாப்பதிவிரதை ஆகையால் அவள் உன் விருப்பப்படி நடந்து உனக்குப் பணி விடை செய்வதிலேயே மனமுடையவளாக இருந்தாள் நீ உன் ஏழ்மையின் காரணமாக உன் மனைவியை நீங்கி ஒருவனிடம் ஊழியத்துக்கு அமர்ந்தாய் நீ உன் மனைவியை பிரிந்த போதிலும் அவள் உன்னைப் பிரியாது அவ்வப்போது உன்னைக்கண்டு உனக்குப் பணி செய்வதையே உறுதியாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள். அப்படியிருக்கும்போது அயோத்தியில் பெரும் தனவானாக விளங்கிய மன்னன் ஒருவன். பக்தி சிரத்தைகளோடு அங்கு ஒரு விஷ்ணு ஆலயம் கட்டி அதில் விஷ்ணுமூர்த்தியைப்பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தான். அப்போது பொன் மயமான பூதானத்தை நல்ல வேதியருக்கே வழங்கி அந்தக் கோயில் முழுவதும் பொன் மயமாக்கினான். அந்தத் தேவாலயத்தில் நடந்தவற்றை நீயும் உன் மனைவியும் அதி ஆவலுடன் பார்த்து கொண்டும் இருந்தீர்கள் ஆலயத்தில் அலகிடுதல் முதலிய தொண்டுகளைச் செய்து வந்ததால் அப்போதே உங்களிடமிருந்த பாவங்கள் எல்லாம் அகன்றொழிந்தன. அன்றியும் பொன்னால் செய்த பசுவைத் தானஞ்செய்த பயனை அடைந்தாய். அதனால் இந்தப் பிறவியில் உனக்கு இவ்வளவு செல்வ போகங்களும் பெரும் நிலப்பரப்பும் உனக்குச் சொந்தமாயின் முற்பிறவியில் சூத்திரனாக இருந்து நீ செய்த நற்பணியால் இந்தப் பிறவியில் பேரரசனாய் இனி இப்பிறவியில் சிறந்த நிலதானம் செய்! வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எவன் சுவர்ண விகாரமான பூதானத்தைச் சத்பாத்திரனுக்குக் கொடுப்பானோ அவன் தன் பிதுரர்களையும் தன் வம்சத்தில் இனிமேல் பிறப்பவர்களையும் தன்னுடன் கொண்டு சூரியர், சந்திரர் உள்ளவரையில் சுவர்க்க லோகத்திலேயே வாழ்ந்திருப்பான் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவும் பூதானத்திலேயே கைகூடும். உன் முற்பிறப்பை உனக்கு நன்கு உணர்த்தினேன் அல்லவா? எல்லாக் காலத்திலும் பூதானம் செய்வாயாகின் உன்கோரிக்கைகள் எல்லாம் ஈடேறும் துவிஜர்களேயன்றி சூத்திரராயினும் பூதானஞ் செய்ய வேண்டும் என்று மனத்தில் கருதியவனும் சுவர்க்கப் பதவியை படித்தவர்களும் எல்லாப் பாவங்களும் ஒழிந்து சுவர்க்கப் பதவியை அடைவார்கள் என்று பிரம்மபுத்திரராகிய மரீசி முனிவர் கூறியருளினார்.
24. பூதான விதிகள்
வியாசரே! சக்திக்கு வஞ்சனையின்றித் தானஞ் செய்வோரில் உத்தமர், மத்திமர், அதமர் என்று மூன்று வகையினர் உண்டு. அவர்கள் தம்வகைக்கேற்ற பயன்களை அனுபவிப்பார்கள் சுவர்ணப் பொடிகளையாவது தாமிரப் பொடியையாவது, பிருத்வியையாவது தன் கையால் மூன்று கையாவது இருகையாவது, ஒருகையாவது குப்பலாக வைத்து, அதன்மேல் தக்ஷிணையாகச் சுவர்ண நிஷ்கங்கள் இலக்ஷமாவது ஆயிரமாவது நூறாவது ஐம்பதாவது வைத்து, அதன்மீது நவரத்தினங்களையாவது பொற் பொடியையாவது வைத்து, அந்தப் பொற்குவியலை மேருமலையாகக் கொண்டு, அதன் கிழக்கில் மந்தரமும் தெற்கில் கந்தமாதனமும் மேற்கில் நீலமும், வடக்கில் விபுலமும் அந்தமேருவின் உச்சியில் வைடூரிய மயமான வீடும், அந்த வீட்டின் கிழக்கில் நானாவித வடக்கில் பத்மராகமும் வீட்டின் மேல் பலவிதமான ரத்தினங்களும் அல்லது சுகந்த சுண்ணங்களும், தாம்பூலமும் வைத்து அவற்றைப் பூமண்டலமாகக் கொண்டு, அதைச் சுற்றிலும் உப்புக்கடல் இருப்பதாக உப்பைப் பெய்தால் அது ஜம்புத் திவீபமாகும், அதைச் சுற்றிச் சிறிது தூரத்தில் கரும்புரசத்தைப் பெய்தால் அது பிலக்ஷத் தீவாகும். அதன் வெளியே நெய்யைச் சொரிந்தால் சான்மலித் தீவாகும். அதன் புறம்பே தயிரை ஒழுக்கக் குசைத் தீவீபமாம். அதைச் சுற்றிலும் பாலைச் சொரிந்தால் அது சாகத்வீபமாம். அதன் வெளியே நல்ல நீரை வார்த்தால் புஷ்கரவீபமாகும். இத்தகைய ஏழு தீவுகளோடு கூடியதாகச் செய்து அந்தப் பூமியை வைதீகனாகவுள்ள தானபாத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.
வியாச முனிவரே! உத்தமமான நில தானத்தின் முறைமையை உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இந்தத் தானத்தைச் செய்த பிறகு தாதாவின் கையளவாக ஒரு குண்டம் உண்டாக்கி அதில் அக்கினியை வளர்த்து யவை, கடுகு, எள் இவற்றைக் கலந்து, திக்குப் பாலகர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் அவரவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி மும்முறையும் விஷ்ணு ப்ரீதியாக மும்முறையும் வருணனுக்கும் வசுவுக்கும் மும்முறையும் ஹோமஞ் செய்ய வேண்டும். அதன் பிறகு பிருத்வியைக் குறித்து ஒருமுறை ஹோமஞ் செய்ய வேண்டும், அதன்பிறகு சிவபெருமானைக் குறித்து அவரே உலகுக்கு ஆதரவாக இருப்பவர் என்றும் யாவராலும் துதிக்கதக்கவர் என்றும் தேவ தேவர் என்றும் பயபக்தியுடன் உம்மை நான் பூஜிக்கிறேன்! நீரே உலகினைப் படைத்துக் காத்துத் தானஞ் செய்து. அதைப் பெற்றுக் கொண்டவர்! என்று கூறித் தானம் வாங்கிய பிராமணரை ஆராதித்து ஆடை அணிமணிகளையும் சிறப்பாக வழங்கி என் கோரிக்கைகள் எல்லாம் ஈடேறுமாக! என்று நமஸ்கரிக்க வேண்டும். உன்னதமான தானகாலத்தில் நற்பத்திரனுக்கு இவ்வாறு தானஞ் செய்தால் தன் முன்னோர் நூற்றுவரையும் தனக்குப்பின் பிறப்போர் நூற்றுவரையும் சுவர்க்கம் ஏற்றி, தானும் சொர்க்கப் பதவியை அடைவான். இந்த வகையாகச் செய்யப்படும் பூதானத்தால் அடைய முடியாத விருப்பங்களே எதுவும் கிடையாது!
25. திலஹஸ்திதானம்!
வியாச முனிவர் ஸநத்குமாரரை நோக்கி, சுவாமி! சிறந்த தானத்தையோ அல்லது தவத்தையோ செய்யச் சக்தியில்லாதவனுக்குப் பிரமஹஸ்தி முதலான தோஷங்கள் எப்படி ஒழியும்? இதை நீங்கள் பிரமதேவரிடம் கேட்டு உணர்ந்தவாறு அடியேனுக்கு எடுத்துரைக்க வேண்டும்! என்று கேட்டார். ஸநத்குமாரர் கூறலானார். ஒருவனுடைய உடல் தூய்மையடைந்தால் அவனுடைய எல்லாப் பாவங்களும் சிறிது சிறிதாகக் கழித்து போகும் என்று முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா? உடலின் நடுவே இருக்கும் பிராணனே ஜீவன் எனப்படும். உடலின் வெளியே உள்ள தனமும் பிராணனேயாகும். ஜீவனைக் கஷ்டப்படுத்தித் தவஞ்செய்தாவது பொருளை விரையப்படுத்தித் தானஞ் செய்தாவது முக்தியை அடைய வேண்டும். முனிவர்களில் உயர்ந்த வியாசரே! இன்னும் நீர் அறிய வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் அதையும் கேளும்! என்றார். ஸநத்குமாரர் வியாசர் அவரை நோக்கி, பாவங்களைச் செய்வதிலேயே நாட்டமுடையவர்களாகவும் ஞானமற்றவர்களாகவும் இருந்து பலவித பாவங்களைச் செய்து ரவுரவாதி நரகங்களில் விழுந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய நரகவேதனையை அடையாமல் தப்பித்துக் கொள்ளத் தக்க தானம் எது? எந்த தானத்தைச் செய்தால் நரகத்தைக் கண்ணிலும் காணாமல் இருக்கலாம். இவற்றைச் சொல்லவேண்டும்! என்று வியாசர் கேட்க ஸந்தகுமார முனிவர் பின்வருமாறு சொன்னார்.
நல்ல விரதத்தையுடையவரே! கேளும் கார்த்திகை மாத பூரணையிலாவது நாக சதுர்த்தியிலாவது. எள்ளைக்கொண்டு யானை வடிவமாகச் செய்து, விஷ்ணுபூஜை இயற்ற வேண்டும். கன்றுள்ள பசுவை ஒரு பக்கமாகக் கட்டி தீபம் வைத்து எள்ளாற் செய்த யானையின் கண்களில் முத்துக்களும் பற்களில் வெள்ளியும் சுற்றிலும் பவளமும் நெற்றியில் திலகமாகப் பொன்னும் கர்ணங்களில் சாமரையும் வெண்கலமணி இரண்டும் உடலில் பட்டாடையும் கும்பஸ்தானத்தில் முத்துக்களும் சிரசில் சிந்தூரமும் வைத்து, முத்துமாலை பாதுகை, குடை, கிண்ணம், ஆசனம், கண்ணாடி முதலியவற்றைச் சக்திக்கேற்பப் பொன்னால் செய்து வைத்து, அந்த யானையின் முன்பு குங்குமத்தால் அஷ்ட தனக் கமலம் வரைந்து அதன் இடையே சர்வலோக காரண பூதரான சிவபெருமானையும் விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அந்த அஷ்டத்தளத் தாமரையின் கிழக்கே தேவர் தலைவனான இந்திரனையும் அதன் பக்கத்திலுள்ள தளத்தில் அக்கினியையும் தென் பக்கத்தில் பிதுர்தேவப் பிரபுவும் தர்மவான்களுக்கு இன்பங்கொடுப்பவனுமாகிய இயமனையும் அதற்கு அடுத்த தளத்தில் இராக்ஷப் பிரபுவாகி நரகலோகத்துக்குச் சமீபமாகவுள்ள லோகத்தில் வசிக்கும் நிருதியையும் அதற்குப் பக்கத்தில் ஜலத்துக்கு நாயகனும் சவுக்கியத்தை ஏற்படுத்துவோனுமாகிய வருணனையும், அதற்குப் பக்கத்தில் பொன் விமானத்தில் சஞ்சரிப்பவனும் எல்லோருக்கும் ஆயுர்ப்பூதமாக இருப்பவனுமான வாயுவையும், அதன் பக்கத்தில் தனாதிபதியான குபேரனையும் அதன் பக்கத்தில் பசுக்களான பிராணிகளுக்கெல்லாம் பதியாகவுள்ள ஈசானனையும் தனித்தனி நமஸ்காரம் என்று துதித்து முறையே ஆவாஹனம் செய்ய வேண்டும். தீய வழியிலிருந்து காக்கத்தக்கவனும் மும்மூர்த்தி வடிவாகவும் விஸ்வரூபமாகவும் விளங்குபவனும் சுகத்தைக் கொடுப்பவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம் என்று துதித்து பரிவார தேவர்களைப் பூஜித்து உலகபாலன் கர்த்தாவாகிய திருமாலை மீண்டும் பூஜித்து கைகூப்பிக் கும்பிட்ட வண்ணம் இந்த யானை என்னை யமலோகத்துக் கொடிய வழியில் சுகமாகச் செலுத்தி எனக்கு மங்களபலமான பூரண கும்பமும் காமதேனுவும் கற்பக வருக்ஷமும் சிந்தாமணியும் ஐராவதமும் உண்டாக்குமாக! என்று சொல்லிக் கொண்டு சக்திகேற்ப, நற்பாத்திரனான வேதியனுக்குப் பொன் ஆபரணங்களை வழங்கி அத்திலஹஸ்தியையும் தானஞ்செய்து அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் தீபதானம் செய்து, அதற்குப் பிறகு போஜனம் செய்ய வேண்டும்.
வியாச முனிவரே! இத்தகைய விதிப்படி அவரவர்சக்திக்கு ஏற்ப திலஹஸ்தி தானம் செய்தவர்கள் கோரமான நரக ஸ்வரூபமாக விளங்கும் இயம மார்க்கத்தைக் காணாமலேயே, எல்லாப் பாவங்களையும் ஒழித்து உற்றார் நண்பர்களோடுக் கூடிச் சுவர்க்க லோகத்தில் பதினான்கு இந்திரபட்டம் கழியும் வரையில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் ஜோதிஷ்டாபுஷ்கரத்தில் காராம் பசுக்கள் ஆயிரம் தானம் செய்த பலனும் உபயமுகி கோதானம் நூறு செய்த பலனையும் அடைவார்கள். இராகு கிரஸ்தமான சூரியக் கிரஹண காலத்தில் பூதானம் செய்த பயனும் இதற்கு ஈடானதல்ல. இந்தத் தானமானது கிருஷ்ணாசன் தானத்தால் உண்டாகும் பயனைவிட நூறு பங்கு சிறப்பான பயனை அளிக்கும் யானை குதிரை இரதம் எருது முதலியவற்றை ஒரே காலத்தில் தானஞ் செய்த பயனைக் கொடுக்கும் எள், நெய், ஜலம், பசு முதலிய தானபயனைக் காட்டிலும் நூறு பங்கு சிறப்பான பயனைக்கொடுக்கும், இந்த விதியை உணர்ந்து திலஹஸ்தியைப் பூஜித்து, மஹேஸ ஸ்வரூபமானதும் திக்குகஜஸ்வரூபமான இந்த யானையைத் தானம் செய்கிறேன்! என்று சங்கல்பம் செய்து காந்தாரஸ்தியைத் தானம் செய்தான். சர்வேஸ்வரனாகிய சிவபெருமானும் தைத்திய சங்கரானாகிய திருமாலும் மகிழ்வார்கள். குடும்பஸ்தனாகவும் ஏழையாகவும் இருக்கும் உத்தமமான வேதியனுக்கு இதைத் தானம் செய்ய வேண்டும் இந்தத் தானம் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைக் கொடுப்பதும் நரகத்தை ஒழித்து மோட்சத்தைக் கொடுப்பதுமாகும். இதைப் படித்தும் வாசித்தும், சிந்தித்தும் உள்ளவர்கள் சுவர்க்க பதவியை அடைவார்கள்.
26. பார்க்கவர் பயணக் கதையும் சதுர்த்தி விரத மகிமையும்
பிரமபுத்திரரான ஸநத்குமார முனிவரை வியாசர் நோக்கி, பிரம்ம நிஷ்டரே! சர்வேஸ்வரனான சாம்பவமூர்த்தியை ஒரு நாள் பூஜித்து உபவாசமிருப்பதில், எல்லா விரதங்களையும் அனுஷ்டித்து எல்லாத் தானங்களையும் செய்த பயனை அடையத்தக்க ஒரு விரதத்தைச் சொல்லுங்கள்! குருக்களுக்கெல்லாம் குருவான தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் பெரும் பயனைத் தரவல்லவையாக இருக்கும். ஆகையால் அத்தகைய விரதம் ஒன்றையும் அதை விளக்கிக் காட்டக் கூடிய ஒரு வரலாற்றையும் சொல்ல வேண்டுகிறேன்! என்று கேட்டார். ஸநத்குமாரர் கூறலானார். வியாசரே! சிவபெருமானை நியமத்துடன் ஒருநாள் ஆராதித்தால் அவருடைய அருளைப் பெறலாம். உடலுக்குச் சிரமமான பலவித விரதங்களைச் செய்து. அதனால் அடையும் பயன்கள் அனைத்தையும் சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் சிவார்ச்சனை செய்வதாலேயே இரத்தின வியாபாரி ஒரே பொருளால் பெரிய லாபத்தைத் தேடிக் கொள்வதைப் போல, அதி சுலபமாக அடைந்து விடலாம்.
ஸத்யவாதி புத்திரரே! பூர்வயுகத்தில் ஜம்புத் தீவில் ஒருமா மன்னன் இருந்தான் அவன் தர்மவான். நூறு அக்குரோணி சேனைகளையுடையவன் வில்லாளர்களில் மேம்பட்டவன் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையும் சக்தியவாக்கும் ஈகைத்தன்மையும் வாய்ந்தவன். எல்லாபோக அனுபவமும் அதிதிகளிடம் விருப்பமும் உள்ளவன் பொன், ஆடை முதலியவற்றை நாள்தோறும் அவன் தானஞ் செய்வான். அவனுக்கு எண்ணற்ற வீரப்படைகள் இருந்தும் சதாநீகன் என்பது பெயராக இருந்தது. அவன் தன் இராஜ்ஜியத்தைப் பலகாலம் அரசாண்டு ஒரு புத்திரனைப் பெற்று மரணமடைந்தான். அப்புதல்வன் குலமுறையாக அனுபவித்து வந்த ராஜ்ஜியத்தை தர்ம முறைப்படி காத்து வந்தான். பிரதாபத்தால் சூரியனையும் காந்தியால் சந்திரனையும் போன்று பகைவர் பயமின்றி ஆட்சிபுரிந்த அவன். தன் தந்தையைப் போலத் தானஞ்செய்தல் ஒன்று மட்டும் இல்லாதவனாக இருந்தான்.
நியதியான விரதமுடைய வேதியர் அனைவரும் யோசித்தார்கள் அரசனிடம் தானச் செயல் இன்மையால் ஏழைகளாகிய நாம் எல்லோரும் அவனைக் கண்டு இவ்விஷயத்தைப்பற்றிக் கேட்க வேண்டும்! என்று தீர்மானித்து அரசனிடம் சென்றார்கள். அரசன் அவ்வந்தணர்களை முறைப்படிப் பூஜித்து ஆசனமளித்தான் அவனை வேதியர்கள் பார்த்து, அரசனே! நாங்கள் ஒரு விஷயத்தை வெளியிடக் கருதியிருக்கிறோம். அதை நிதானமாகக் கேட்க வேண்டும். உன் தந்தை நாள்தோறும் ஆடை அன்னம் பொன் முதலானவற்றை எங்களுக்குத்தானங் கொடுத்துத் திருப்தி செய்து வந்தார் நீயோ சிறிதும் தானஞ் செய்யாமையால் அந்தணர் பலர் அன்னமில்லாமல் தேசாந்திரம் போய் விட்டார்கள் நாங்களோ பெரியகுடும்பஸ்தர்கள். உன்னிடத்தில் இதைச் சொல்லி விட்டு நாங்களும் இன்னுஞ் சில தினங்களில் நாடுகடந்து செல்லக் கருதியிருக்கிறோம் எங்களுக்கு உள்ள வறுமையாலேயே இந்த யோசனை எங்களுக்குத் தோன்றியது! என்றார்கள். அதைக்கேட்டதும் மன்னன் புன்னகை செய்து வேதியர்களே! அந்தணர்க்குத் தானங் கொடுப்பதால் புண்ணியம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரிந்திருப்பினும் நான் கேட்கத் தக்கது ஒன்று உண்டு. அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்; தானஞ் செய்பவன் இவ்வுலகிலிருந்து சுவர்க்கத்துக்குச் சென்று அங்குள்ள போகங்களை நுகர்ந்து மீண்டும் பூமியை அடைந்து சுகமாக வாழ்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா? பிராமணர்களே! என் தந்தை தானஞ்செய்து வந்தவர் அல்லவா? அவர் இப்போது சுவர்க்கத்தில் எவ்வாறாக இருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொண்டு அதை எனக்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றான். வேதியர்கள் ஒன்றும் தோன்றாமல் அரசன் முகத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் புறத்தே சென்று, ஒருவரோடொருவர் யோசிக்கலானார்கள். இவ்வரசனின் தந்தை மகாதார்மீகன் ஆகையால் இப்போது அவன் எவ்வுலகில் இருக்கிறானோ? அதை நாம் எப்படி இவனுக்குச் சொல்ல முடியும் என்று எவ்வாறு யோசித்து அவன் யோசனையிலே ஆழ்ந்திருந்ததால் நெடுநாள்வரை தங்கள் நித்யகர்ம சந்தியாவந்தன அக்கினி காரியாதிகளையெல்லாம் மறந்தார்கள்.
முனிவரே! வேதியர் ஒழுக்கங்குன்றியதால் சூரியன் முதலியகோள்கள் நிலைதவறி மழையின்மையால் பஞ்சம் உண்டாயிற்று. அக்கினியில் ஹோமம் செய்தவை சூரியனை அடையும். சூரியன் அந்த ஆகுதியால் மகிழ்ந்து, மழை பொழிய செய்வான். அந்த மழையால் ஜீவகோடிகளுக்கெல்லாம் ஆகாரம் உண்டாகும். அன்னத்தால் உலகுக்கு எப்போதும் திருப்தியுண்டாகும். அவ்வாறின்றி நிலைமாறியதால் உலகத்தில் வேதியர் யாககர்மங்களைச் செய்யாது மழை மாறி உலகம் அழியும் அவர்களைக் கண்டு பேசி அவர்கள் கருத்தை அறிய வேண்டும் என்று சூரிய பகவான் கருதினான். எனவே அவன் பிராமண வடிவம் பூண்டு பூலோகத்திற்கு வந்து வேதியர்களை அணுகி, நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள் உங்கள் குலாச்சார தருமங்களை ஏன் கைவிட்டீர்கள்? பஞ்ச யக்ஞங்களின் பயன் எண்ணிறைந்த தல்லவா? நித்திய கர்மம் செய்யாது நைவித்திக கர்மத்தைச் செய்து பயனடையக் கருதுவோர் அந்தப் பயனை அடையமாட்டார்கள் ஸ்வதர்மங்களை விட்டவர் தீர்த்த யாத்திரை செய்தாலும் பயனடைய மாட்டார்கள். நால்வகை ஆச்சரமத்தவர்க்கும் பஞ்சயக்ஞபயன் நித்தியமானதும் புக்தி முக்திகளைக்கொடுப்பதுமாகும் ஆகையால் நீங்கள் அதை விடக் கூடாது. நித்திய கர்மத்தை அனுஷ்டித்து நைமித்திகத்தைச் செய்வோர் நூறு பங்கு பயனையும் அடைவார்கள். தானங்கொடாத அரசனை உயிரிழந்தவனாக நினைத்து தானத்தை விரும்பாமல் தவத்தை மேற் கொண்டு ஒழுகும் அந்தணன் மிகவும் சிறந்தவனாவன். அத்தகைய அந்தணனை உபசரித்தால் எல்லாப் போகங்களும் கிடைக்கும்! என்றான்.
அதைக் கேட்டதும் வேதியர் யாவரும் மனம் திரும்பியவர்களாய் தானம் ஏற்காது. தவஞ் செய்யும் மறையோனை வழிபடுவதே சிறந்ததாகக் கருதி வேதியவடிவில் வந்த சூரிய பகவானை வணங்கினார்கள். பிறகு நாற்றிசையும் சென்று அத்தகைய பிராமணனை எங்கெங்கோ தேடிக்கொண்டு அலைந்தார்கள். இறுதியில் ஓரிடத்தில் கைகளை மேலெடுத்து உயர்த்தி ஒரு காலில் நின்று மற்றொரு காலை மடக்கிக் கொண்டு தவத்திலிருந்த பார்க்கவ முனிவரைக்கண்டு வலம் சுற்றி வணங்கி எதிரே நின்றார்கள் பார்க்கவ முனிவர் சூரியன் மேற்கே திரும்பிய போது கண் விழித்து தேவ பிதுர்த் தர்ப்பணங்களைச் செய்து முடித்து தம் எதிரே நிற்கும் வேதியர்களைக் கண்டு கைகூப்பி சாஸ்திர முறைப்படி அவர்களைப் பூஜித்து கந்தமூல பலங்களை அளித்து மகிழ்ந்தார். அப்பொழுது வேதியர்கள் அனைவரும் தங்கள் அரசனின் செயலைப்பார்க்கவ முனிவருக்கு எடுத்துரைத்தார்கள். அவ்வரசனுடையத் துர்க்குணங்களைக் கேட்ட பார்க்கவ முனிவர் நான் இதுவரை செய்த தவத்தைவிடச் சிறந்தது பயமுற்றவருக்கு அபயம் அளித்தலால் சகல தானங்களுஞ் செய்த பயன் கிடைக்கும். தயையே சிறந்த குணம்? என்று தமக்குள் யோசித்து, தற்கால மன்னனுடைய தந்தை எந்த உலகத்தில் இருக்கிறானோ அந்த உலகத்தை நான் அடைவேன்! என்று மனவுறுதிகொண்டு புறப்பட்டார்.
பார்க்கவ முனிவருடையத் தவப்பயனால் சூரியபகவான் சாந்தமுடையவனாய் வேதிய வடிவேற்று அவருக்கு வழிகாட்டுவான் போல முன்னே சென்றான். இவ்வாறு பார்க்கவ முனிவர் புறப்பட்டு, எண்பத்தெட்டுகாத தூரம் சென்று, தண்ணீரும் மரநிழலும் இல்லாதலும் சீதோஷ்ணங்களால் துன்பகரமானதும் தேவ தானவர்களாலும் சகிக்க முடியாததுமான வழியைக் கடந்து. இருபத்தெட்டுக்கோடி நரகங்களையும் அதில் வேதனைப்படுவோரையும் பார்த்துக் கொண்டே சூரியன் முன்னே செல்ல முனிவர் பின்னே சென்றார் நரகவேதனைகளை அனுபவிப்போரது கூக்குரலைக் கேட்டுக் கொண்டே அவ்விடத்தை அதில் மஹாபதவியைக் காணச்செல்லும்போது, பார்க்கவ முனிவரை ஒரு வேதியன் தன் கையில் பெரியதொரு தண்டந்தாங்கி, நான் முன்பு உனக்குக் கொடுத்தவற்றை இப்போது எனக்குக் கொடுத்து விட்டுதான் இங்கிருந்து செல்ல வேண்டும்! என்று தடுத்தான்.
பார்க்கவர் தன்னைத் தடுத்தவனை நோக்கி, நீ எந்தக் காலத்தில் என்னக் கொடுத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவ்வந்தணன் நான் முற்பிறவியில் உனக்கு ஒரு புராணம் உரைத்தினேன். அதை நீ கேட்டுச் செல்லும்போது எனக்கொன்றும் கொடுத்திலையே என்று நான் கேட்க, நீ என் வீட்டிற்குச் சென்று ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பேன் என்று சொல்லிவிட்டுப் போனாயே தவிர மீண்டும் என் கண்ணில் புலப்படாமல் ஒழிந்தாய்! என்றான். அதைக்கேட்டு பார்க்கவர் வியப்புற்று, ஒருவேளை நான் சொல்லித் தவறியிருக்கலாம். ஆனால் அது மத்திய லோகத்தில் நடந்ததாகையால், நாம் அங்கே போய்த் தீர்த்துக் கொள்ளலாம் இங்கு என் கையில் ஒன்றுமில்லை என்று கூறினார். அவ்வேதியன் பார்க்கவரை நோக்கி, நீ செய்த புண்ணியத்தில் பாதியை எனக்கு கொடுத்ததாகச் சொல்! என்றான். ஆனால் பார்க்கவர் என் தர்மபயனில் பாதியை உனக்குக் கொடுக்கமாட்டேன்! என்றார். அவ்வுரையாடலைக் கேட்ட வண்ணம் வேதியர் வடிவில் இருந்த சூரிய பகவான் அவர்கள் இருவரையும் நன்மொழியால் சமாதானஞ் செய்து, அவ்வேதியன் புராணஞ் சொன்னதும் நீ அதைக் காதில் கேட்டதும் பின்னர் நீ பொருள் கொடுப்பதாகக் கூறியதும் உண்மையே! ஆகையால் உன் தர்மத்தில் அரைப்பங்கு கொடுக்காமல் ஆறில் ஒரு பங்கைக் கொடுக்கலாம்! என்று கூறினார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கினார்கள். பார்க்கவர் தம் புண்ணியத்தில் ஆறில் ஒரு பாகத்தைக் கொடுத்தார். அவரை வழிமறித்த வேதியன் அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
மீண்டும் சூரியனைப் பின் தொடர்ந்து பார்க்கவர் செல்லும் போது ஒரு யாதவன் அவரைத் தடுத்து நான் முற்பிறவியில் உன் பசுக்களை மேய்த்ததில் நீ எனக்கு எட்டு கவுடிகள்(நாணயங்கள்) கொடுப்பதாகச் சொல்லி கணக்குத் தீர்த்துக் கொடுக்காமற் போய் விட்டாய். அதை இப்போது கொடுத்து விட்டுப் போ! என்று கூறினான். அதற்கு பார்க்கவர், ஐயோ! சுலபமானதையும் கடனாக்கிக் கொண்டேனே! இது எம்மாத்திரம்? என்று யோசித்தார். உடனே யாதவன் உன் தர்மத்தை எனக்கு கொடு என்று கேட்டான். பார்க்கவர் துக்கமடைந்து சூரிய பகவான் தீர்மானித்தபடி மற்றும் ஆறில் ஒரு பங்கு புண்ணியத்தை அவனுக்குக் கொடுத்து அவனை விட்டு விலகி மேலே தொடர்ந்து சென்றார். அப்போது ஒரு சாலியன் அவரைத் தடுத்து. நீ என்னிடம் ஆடைகள் வாங்கியதில் விசேஷ பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய். அதைத் தீர்த்து விட்டுப் போ! என்றான். முன்போலவே இருவரும் விவாதிக்கவே சூரியபகவான் தீர்மானித்தபடி விசேஷ பாக்கிக்காக தன் புண்ணிய மிச்சத்தை அவனுக்குக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு, தன் புண்ணியம் முழுவதும் போய்விட்டதால் பிரம்ம தேஜஸ் நீங்கி அதற்கு அவர் மேலே செல்வதற்கு சக்தியற்றவராக தத்தளித்தார். அப்போது அவர் பார்க்கப் புறப்பட்ட அரசனிருக்கும் இடத்திற்கு பார்க்கவரின் கையைப் பற்றிக் கொண்டு சூரிய பகவான் அழைத்துச் சென்றார்.
அச்சமயத்தில் இயமகிங்கரர்கள் அந்த அரசனை ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சமைத்துக் கொண்டிருந்தார்கள், அதைக் கண்ட பார்க்கவ முனிவர், ஐயோ! மகா புண்ணியவனான இவனுக்கும் இத்தகைய துன்பம் வந்து சேர்ந்ததே! என்று வியப்புற்று சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, சதாநீக மகாராஜனே! நீ சோடச மகாதானங்களையும் நற்பிராமணருக்குச் செய்தாய் என்றும் இரத்தினங்கள், ஆடைகள், கிரமங்கள் முதலியவற்றைத் தானம் செய்தவன் என்றும் அந்தணோத்தமர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்! தவஞ் செய்தாலும் பகவத் பக்தி செய்தாலும் தானஞ் செய்தாலும் சுவர்க்கம் அடைய வேண்டியிருக்க மாபெரும் தானங்களைச் செய்த உனக்கு எந்தப் பாவபலனால் இங்கு சுடப்பட்டிருக்கிறாய்? அது உனக்குத் தெரியுமே! அதைச் சொல்லுக! என்று கேட்டார். உடனே சதாநீசன் அவரை நோக்கி, வேதியனே! என் வரலாற்றைக் கேள்! நான் பலவிதமான தானங்களை அந்தணருக்குப் பரிபூரணமாகக் கொடுத்தேன். ஆயினும் அஞ்ஞானத்தினால் பிரஜா பீடையால் பொருள் தேடினேன். அதனால் தான் இந்தப் பாவத்தை அனுபவிக்கிறேன். என் விஷயத்தில் நீர் தயவு காட்டி, பூவுலகிலுள்ள என் புத்திரனிடம் சென்று நான் விழுக்தனாகும்படி நற்சுகிர்த விசேஷத்தை அனுஷ்டிக்கும்படிச் சொல்லியருள வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பாவத்தை அனுபவித்தல் பெருங் கஷ்டமாகும். நல்லோர் கூட்டுறவாலே இது நீங்க வேண்டும், தாங்களும் இச்சமயத்தில் இங்கு வந்தீர்கள்! என்றான்.
பார்க்கவர் தம் புண்ணியங்கள் ஒழித்தும் தமக்கு இதமுண்டாகவும் அவ்வரசனது வாதனை நீங்கவும் உலகின் சுலபமாக நற்கதியடையவும் விரும்பினார். எனவே அவர் வேதிய வடிவிலுள்ள சூரிய தேவனை நோக்கி, சுவாமி! சத்ஜன தரிசனம் மகா புண்ணியகரமானது சத்ஜனர் புண்ணிய தீர்த்தங்களுக்கு ஒப்பான வரல்லவா? தீர்த்த யாத்திரை காலக்கிரமமாகப் பயனளிக்கும் புண்ணியம் இல்லாதவனுக்கும் சர்வேஸ்வரனான சிவபெருமானிடமும் வேதியர்களிடமும் சத்ஜனரிடமும் தவசிககளிடமும் பக்தி என்பது ஏற்படாது ஒருவனுக்குப் பாபம் குறையும்போதே தானம், தியானம், முதலியன செய்ய வேண்டும் என்ற நினைப்பு உண்டாகும், நான் தங்களைத் தேவதேவனாக சந்தேகமில்லாமல் நினைக்கிறேன். தங்கள் தரிசனத்தாலேயே இந்த நரக வாசிகள் அனைவரும் சுகமடைவார்கள். நான் தங்கள் சந்நிதியிலிருந்தும் சுகமடையவில்லை ஆகையால் சிறிதும் தர்மம் எனபதில்லாத எனக்குத் தர்மத்தை உண்டாக்குவதும் அதை அனுசரிப்பவர்கள் யாவரும் சொர்க்கமடையச் செய்ய வல்லதும் மண், பெண், பொன் என்னும் ஈஷணாத்திரவியங்களால் துன்புறுவோர்களைக் கடைத்தேற்றுவம் தர்மாசரணையற்றவர்களையும் உய்விக்கவல்லதுமான விரதம் ஒன்றைச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார், அதனால் சூரியதேவனை மகிழ்ந்து முனிவரே! உலகத்திற்கு இதமுண்டாக்க நீ என்னை இந்தக் கேள்வி கேட்டாய். உன் தர்மம் வளர்ச்சியுறத்தக்க விரதம் ஒன்றைச் சொல்லுகிறேன் கேள்.
பார்க்கவ முனிவனே! தர்மத்தைப் பிறருக்குக் கூறுவோன் அந்தத் தருமத்தைச் செய்த பயனை அடைவான். தர்மத்தைச் சொல்லும் நாவே சிறந்தது. உலகத்திற்கு இதமுண்டாக்கத்தக்க தர்ம மார்க்கஞ் செல்ல வேண்டுவதேயாகும். ஆதலின் பாவங்கள் அனைத்தையும் நலியச் செய்யக்கூடிய விரதத்தை சொல்லுகிறேன். ஆண்டு முழுவதும் முதற்பாகமாகிய சித்திரை மாசமானது சிவபெருமானுக்கும் மற்ற தேவர்களுக்கும் பிரியமானது. அந்த மாதத்தில் தேவர்கள் வினோதத்தை முன்னிட்டு ஆனந்தித்து பூமியில் வந்து தங்கள் ஸ்தானத்தை அடைகிறார்கள். சிவபெருமானும் இளமை வடிவத்தோடு பார்வதி தேவியாருடன் விளையாடிக் கொண்டிருப்பார் பார்வதி தேவியின் தோழியர்கள் சிறந்த ஆடையாபரண அலங்காரங்களுடன் அந்த மகாதேவிக்கு உபசாரஞ் செய்வார்கள். இந்தச் சித்திரை மாதத்துச் சதுர்த்தசி திதியில் தீபதானஞ் செய்து வருவோர், சிவபெருமான் முதலிய எல்லாத் தேவர்களுக்கும் கண் கொடுத்த பயனையும் மோக்ஷத்தையும் அடைவார்கள். அதன் விதியையும் சொல்லுகிறேன்.
சித்திரை மாதத்தில் பூர்வபக்ஷத்திலாவது அப்ரபக்ஷத்திலாவது சம்பவிக்கும் சதுர்த்தசியில் உபவாசமிருந்து சர்வேசுவரனான சிவபெருமானைக் குறித்து ஒரு கோதானஞ் செய்து, தீப தானம் முதலியன செய்தவன் எல்லாப் பாவங்களையும் ஒழித்து சுவர்க்க பதவியைச் சந்தேகமின்றி அடைவான் என்று சூரிய பகவான் சொன்னார். அவரிடம் பார்க்கவமுனிவர் விடைபெற்று சென்று ஜம்புதவிபத்தையடைந்தார். பிறகு அங்குள்ள வேதியர்களோடு சென்று மன்னனின் புதல்வனைச் சந்தித்தார். அவனும் அவன் மதியமைச்சர்களும் அவனது கொலுமண்டபத்தில் இருந்தவர்களுமான அனைவரும் அறியும்படி மன்னனின் தந்தையான சதாநீக ராஜன் நரகத்தில் துன்புறும் நிலையையும் அவன் அந்தத் துன்பத்திலிருந்து நீங்கத் தக்க வழியையும் சதுர்த்தசி விரத பயனையும் அதன் முறைமையையும் விவரமாக எடுத்துரைத்தார், பார்க்கவர் சொன்னதைக் கேட்டதும் புரவலன் அப்பொழுதே புறப்பட்டுச் சொன்று அருகிலுள்ள ஒரு புண்ணிய தவத்தை அடைந்து பெரும் பொருள் செலவில் ஒரு தடாகம் அமைத்து. பலவித கோதானம் பூதானம் முதலியவற்றைச் செய்து பார்க்கவ முனிவர் கூறியபடி சதுர்த்தசி விரதத்தை அனுசரித்து மகிழ்ச்சியுடன் தன் நகரத்தை அடைந்தான். அவன் முறைப்படி சதுர்த்தசி விரதாசரணஞ் செய்து, பலவகைத் தானங்களையும் கொடுத்ததால் அவன் தந்தை தனக்குற்றிருந்த நரக வேதனைகளிலிருந்து, நீங்கிச் சுவர்க்கமடைந்து தன் மூதாதையருடன் ஒரு பகல் உபவாசம் இருக்க வேண்டிய இந்த விரதத்தை அனுஷ்டித்தவன் சகல பாவங்களும் நீங்கிச் சுவர்க்கத்தை அடைவான்.
வியாசரே! சித்திரை மாதச் சதுர்த்தசியில் சிவபெருமானை வழிபட்டு உபவாசம் இருந்த உத்தமனான வேதியனுக்கு கோதானமாவது, நெய் நிறைந்த யாத்திர தானமாவது, கொடுத்து அன்னபானம் ஆடை முதலானவற்றால் உபசரித்தால், எல்லாப் பாவங்களுளம் நீங்கி சுவர்க்கத்தையும் பிறகு உருத்திரலோகத்தையும் அடைந்து அநேககாலம் அங்குள்ள சுகத்தை அனுபவித்து மீண்டும் இவ்வுலகில் தர்மசீலனான அரசனாகப் பிறப்பான் வசந்தருதுவில் சிவசங்கரருக்குப் பிரியமான சதுர்த்தி விரதத்துக்குரிய மந்திர விசேஷத்தைச் சொல்லுகிறேன் மந்திரத்தைவிட வேதியன் சிறந்தவன் க்ஷத்திரியனும் வைசியனும் சுத்தர்களே! மந்திரபலம் இல்லாவிட்டாலும் தானவிருப்பம் உடையனாயின் சூத்திரனும் பரிசுத்தனே இவர்கள் அனைவரும் மரியாதை செய்கிறார்கள். மந்திரம் அறியாதவர்களை யாரும் அவமதிக்கிறார்கள். ஆகையால் உமாபதியின் விரதம் முழுவதும் மந்திரபூர்வமாகவே செய்ய வேண்டும் பாவங்களை ஒழித்து சுவர்க்கத்தை அடையச் செய்யும் மந்திரம் முதலான விதிகளைச் சொல்கிறேன்.
முதலாவது ஏகாதசியில் ஒரே வேளை உணவும் நீரும் அருந்தி துவாதிசியில் யாசிக்காமல் உண்டு, திரயோகதசியில் இரவில் மட்டும் உணவருந்தி, சதுர்த்தசியில் உண்ணாத விரதம் இருந்து பூரணையில் கோதானஞ் செய்தால் அந்தச் சதுர்த்தி விரதபயனை அடையலாம். அதனால் சிவபெருமான் பெரிதும் மகிழ்வார். அவனுக்குச் சிறந்த பயன்கள் கைகூடும். இந்த விரதத்தை முறைப்படிச் செயயப் பொருளும் தேகவலிமையும் இல்லாவிடில் ஒரு பொற்கிண்ணம் செய்து அது நிறைய நெய்யை விட்டு, அதற்கு ஆடையாவது நூலாவது சுற்றி, ஸ்தாணுவும் ஈசனும் ஜகத்பிரபவும் சூலபாணியும் உலக நாயகனும் பூதநாதனும் கபால மாலிகாபரணனும் கட்வாங்கதாரியும் ஜகந்நாதனும் பிறை நிலா சூடியபெருமானும் சர்வாபரண பூஷிதனும் உமாநாதனும் ஞானிகளின் மனத்தில் விளங்குபவனும் என் இதயத்தில் இருப்பவனும் அகங்கார மற்றவனாகவும் உள்ள சர்வேஸ்வரனை நான் நமஸ்கரிக்கின்றேன்! அவன் என் பாபங்களை ஒழிப்பானாக! என்ற அர்த்தமுள்ள மந்திரத்தைக் கூறிச் சிவபெருமானைப் பூஜித்து அந்தணோத்தமனுக்கு அந்த நெய்ப் பாத்திரத்தைச் சர்வேஸ்வரன் மகிழ்வானாக என்று சொல்லிக் கொண்டு தானஞ் செய்ய வேண்டும். அதனால் திவ்விய தேஜோ ரூபம் பெற்றுத் தனவான்களாவார்கள். மனவாக்குக் காயங்களால் காலை உச்சி மாலை எனப்படும் சந்தியாதி காலங்களில் மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம். இந்த விரதத்தை அனுஷ்டித்தவுடனே தண்ணீரில் போட்ட உப்பைப் போலாகி சுகவான்களாக இருப்பார்கள்.
முன் யுகத்தில் குமுதன் என்ற மன்னன் இந்த விரதத்தைக் கடைப் பிடித்துத் தன் பாவங்களை ஒழித்துச் சுவர்க்கத்தை அடைந்தான். இந்த விரதத்தை அனுஷ்டித்தவன் அடையும் புண்ணியத்தை அளவிட்டுச் சொல்லி முடியாது. நியமம், ஆசாரம் முதலியவற்றுடன் சிவபெருமானிடமே தன்மனத்தை நிலைநிறுத்தி அவ்விறைவனது ஆயிரம் திருநாமங்களையும் துதித்துக் கொண்டிருப்பவன் பாவம் ஒழிந்து சிவலோகத்தை அடைவானாகையால் அவன் பெறும் பயனுக்குச் சமமாகச் சொல்லக்கூடியது வேறொன்றுமில்லை! இவ்வாறு ஸநத்குமார முனிவர் சொன்னார்.
27. சதுர்த்தசி விரத சமானம்
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, மாதவரே இகலோகத்திலும் பரலோகத்திலும் பயனைக் கொடுக்கத்தக்க சிவ சஹஸ்ர நாமங்களைச் சொல்லி அருளவேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் மகிழ்ச்சியோடு கூறலானார். வியாசரே! பாவங்கள் அனைத்தையும் ஒழிக்கத்தக்க சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லுகிறேன் அது நானாகச் சொல்லுவதல்ல. சிவபெருமானது திருநாமங்களையெல்லாம் சொல்வதற்கு அவ்விறைவனின் திருவருளே அவசியம் இருக்க வேண்டும் ஆகையால் வரதனும்; விஸ்வேஸ்வரனும் சாந்தனும் சர்வகர்த்தனும் அவ்யயனும் சர்வக்ஞனும் ஸ்வபாவதப்பிரகாசனும் சாந்தனும் சர்வகர்த்தனும்; அவ்யயனும் சர்வக்ஞனும் ஸ்வபாவதப்பிரகாசனும் அசலானும் அமேயனும் அநாதியும் அதுலனும் சூக்ஷ்மனும், மஹானும் சித்கனனும் வியாபியும் முக்தப் பிரியனும் அமலனும் சதாசிவனும், பூதநாதனும் சர்வவேதாகமப் பிரதிபாதகனும் தைரியவானுமாவார் அந்தச் சர்வேஸ்வரன் அவரை ஸ்படிகநிறம் சடைமுடி, ஐந்து திருமுகம், பத்துக் கரங்கள், ஒருதேகம், இருதிருவடிகள், வலக்கரத்து இச்சாஞானக் கிரியை என்னும் மூவிலைச்சூலமும், பராசக்தி ரூபமான மழுவும் கர்த்துருபாவமான கட்வங்கமும் வாஜம் பீஜா பூரகமும் வஜ்ரமும், ஜனன பயத்தைப்போக்குவதான அபயமும் இடக்கரத்து ரித்து குணமாகிய நாகமும் ஸ்தூலசூக்கும் பூதங்களை நடத்தும் மாயாரூபமாகிய பாசமும், குணமாகிய நீலோத் பலமும், அங்குசமும் சுத்தாசுத்த அத்துவாவைப் பிரவர்த்திக்கும் குணமான தமருகமும் போகத்தைத் தரும் வரதமும், நாத குணமாகிய மணியும் சங்கார குணமாகிய அக்கினியும் திரோதாயியென்னும் பரிவட்டமும், அருளாகிய சுகந்தமும்
பரையாகிய மாலையும் அநுக்கிரக காங்குரமான சிறுநகையும், பொருந்தியவனாகச் சிவ தியானஞ் செய்ய வேண்டும். என் தந்தை எனக்கு உபதேசித்த சிவநாமங்கள் ஆயிரத்தையும் சொல்லுகிறேன். அவை பதினாயிரம் திருநாமங்களாக இருந்தவை. அவற்றை என் தந்தையாகிய பிரம்ம தேவர் கண்டு, மனத்தால் அவற்றின் பொருளைக் கிரஹித்து அவற்றின் சாரபூதமான இந்த ஆயிரம் திருநாமங்களை, தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்போரைப் போலவும் பர்வதத்தை இடித்து அதனுள் இருக்கும் சாரமாகிய பொன்னை எடுப்பார் போலவும் நான்கு வேதங்களுக்கும் சம்மதமாகவுள்ளவையாய் எடுத்து இவ்வண்ணமாகத் துதிப்போர் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பர் என்று சொன்னார். உலகினர் பெருந்தவஞ் செய்தாலன்றி இந்நாமங்களைப் படனம் செய்வதற்கு இயலாது இது சாந்தியையும் புஷ்டியையும் கொடுக்கவல்லது. யக்ஷ ரக்ஷ பிசாசங்களையெல்லாம் விலக்கவல்லது. இவை மிகவும் புனிதமானவை. பக்திமானும் ஆஸ்திகனும், சிரத்தையுடையவனுமாகிய புருஷனுக்கு உபதேசிக்கத் தக்கதேயன்றிச் சிரத்தையற்றவர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் புலனடக்க மற்றவர்களுக்கும் உபதேசிக்கத்தக்கதன்று பூதாத்மகனும் தேவதேவனும் பிநாக பாணியுமான சிவபெருமான் விஷயத்தில் அசூயையுடையவன் தன் மூதாதையர்கள் அதிக புண்ணியஞ் செய்து, சுவர்க்கம் முதலான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் தன் பகவத் அபசார தோஷத்தால் அவர்களையும் தன்னோடு நரகவேதனையை அடையச் செய்வான். இதுவே ஞானம், தியானம், யோகம் இதுவே தியானிக்கத் தக்கது இது ஒருவனுடைய ஆயுள் முடிவில் ஸ்மரிக்கும் படி ஜன்மாந்தர புண்ணிய வசத்தால் நிகழ்ந்தால் அவன் பெரும்பாவியாக இருந்தாலும் உத்தம கதியை அடைவான். இது புண்ணியகரமானது உத்தமமானது மங்களகரமானது இந்த ஸஹஸ்ர நாமங்களே எல்லா ஸ்தோத்திரங்களிலும் உத்தமமான ஸ்தோத்திரமாகும் இதைச் சொல்லுகிறேன் கேளும்.
இதையும் இன்னும் அநேக ஸ்தோத்திரங்களையும் ஆதியில் பிரமதேவன் வைத்துக் கொண்டு இவற்றின் தாரதம்மியங்களை விசாரித்து, இதுவே எல்லாவற்றிற்கும் மேன்மையான அரசன் என்று அரசத் தன்மையும் கொடுத்திருக்கிறான் அது முதல் மகாத்மாவான சிவபெருமானுடைய இந்த ஸ்தோத்திரம் உலகத்தில் மனிதர்களாலும் சுவர்க்கத்தில் தேவர்களாலும் பூஜிக்கப் பெற்று ஸ்தஸராஜம் என்று புகழ் பெற்றிருக்கிறது இத்தவராஜம் முதலில் பிரமலோகத்திலிருந்து தோன்றி, அங்கிருந்து இவ்வுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது அதனால் இதுபரமான தோத்திரங்களிலும் பரமானது தேஜஸ்களுக்கெல்லாம் தேஜஸானது தவத்துக்கெல்லாம் தவமானது சாந்திக்கெல்லாம் சாந்தியானது தைத்திற்கெல்லாம் தைரியமானது யோகத்திற் கெல்லாம் யோகமானது காரணத்துக்கெல்லாம் காரணமானது சத்தியத்துக்கெல்லாம் சத்தியமானது. சிறந்தவற்றில் எல்லாம் சிறந்தது. எதனால் உலகங்கள் எல்லாம் பிறக்கின்றனவோ. எதனால் உலகங்கள் பிறவாதிருக்கின்றனவோ அதுவே இதுவாகும். இது சர்வேஸ்வரனுடையதேஜோஸ்வரூபம் இத்தகையப் பிரபாவமுடைய சாம்பவமூர்த்தியின் ஸஹஸ்ரநாமங்களையும் சொல்லுகிறேன். பக்தி சிரத்தையுடன் இதைக் கேட்டால் எல்லாக்கோரிக்கைகளையும் சிறிதும் ஐயமின்றிப் பெறுவீர்கள் என்று கூறத்துவங்கினார்.
ஓம் அஸ்திராய நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பாநவே நம:
ஓம் ப்ரவராய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வராய நம:
ஓம் சர்வாத்மனே நம:
ஓம் சர்வ விக்யாலாய நம:
ஓம் சர்வாய நம: 10
ஓம் சர்வகாய நம:
ஓம் உத்பவாய நம:
ஓம் ஜடிநேவர்மிணே நம:
ஓம் ஸிகினே நம:
ஓம் கட்கினே நம:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வ நம
ஓம் பாவநாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் ஹரிணாக்ஷõய நம: 20
ஓம் ஸர்வ பூதஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ப்ர வ்ருகதயே நம:
ஓம் நிவ்ருத்தயே நம:
ஓம் நியதாய நம:
ஓம் சாசுவதாய நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ஸ்மசான சாரிணே நம:
ஓம் பகவதே நம:
ஓம் கேசராய நம: 30
ஓம் கசரோத்பவாய நம:
ஓம் அபிவந்த்யாய நம:
ஓம் மகாகர்மணே நம:
ஓம் தபஸ்விநே நம:
ஓம் பூதபாவனாய நம:
ஓம் உன்மத்த வேஷாய நம:
ஓம் ப்ரசன்னாய நம:
ஓம் சர்வலோகப் பிரஜாபதயே நம:
ஓம் மஹி ரூபாய நம:
ஓம் மஹாகாயாய நம: 40
ஓம் ஸர்வரூபாய நம:
ஓம் மகாசனாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விரூபயே நம:
ஓம் விசவ நம:
ஓம் புஜேவாமனாய நம:
ஓம் மனவே நம:
ஓம் லோக பாலாந்தர் நம:
ஓம் ஹ்தாத்மனே நம:
ஓம் ப்ரசாதாயஹயாய நம: 50
ஓம் கர்த்தபிநே நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் மகதே நம:
ஓம் நியமாய நம:
ஓம் நியமாஸ்ரயாய நம:
ஓம் ஸர்வவர்மணே நம:
ஓம் ஸ்வயம்புவே நம:
ஓம் அநாதயே நம:
ஓம் ஆதயே நம:
ஓம் அவ்யாய நம: 60
ஓம் ஸெளக்யரூபாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் நக்ஷத்த சாதகாய நம:
ஓம் சந்த்ராய நம:
ஓம் ஸூர்யாய நம:
ஓம் சந்யே நம:
ஓம் கேது க்ரஹாய நம:
ஓம் க்ரஹபதயே நம:
ஓம் வராய நம: 70
ஓம் அத்ரயே நம:
ஓம் அத்ரியாலயாய நம:
ஓம் கர்த்தே நம:
ஓம் ம்ருகபரணார் பணாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் மஹாதபசே நம:
ஓம் தீர்க்க தபஸே நம:
ஓம் அதீனாய நம:
ஓம் தீன சாதகாய நம:
ஓம் சம்வத்சரகரிய நம: 80
ஓம் மந்த்ராய நம:
ஓம் ப்ரமாணாய நம:
ஓம் பரமாய நம:
ஓம் தபஸே நம:
ஓம் யோகீனே நம:
ஓம் யாஜ்யாய நம:
ஓம் மகச்பீஜ்யாய நம:
ஓம் மகாமாத்ராய நம:
ஓம் மகாத்பஸே நம:
ஓம் ஸ்வர்ணரேதஸே நம: 90
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் கபிநாய நம:
ஓம் வ்ருஷவாகநயே நம:
ஓம் தஸபாகவே நம:
ஓம் அநிமிஷாய நம:
ஓம் நீலகண்டாய நம:
ஓம் உமாபதயே நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் ஸ்வயம் சிரேஷ்டாய நம:
ஓம் பலயே நம: 100
ஓம் வைரோசனாய நம:
ஓம் சரிக்னே நம:
ஓம் கணகர்த்ரே நம:
ஓம் கணபதயே நம:
ஓம் திக்வாஸஸே நம:
ஓம் காம்யாய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் பரமாய நம:
ஓம் மர்த்ராய நம:
ஓம் ஸர்வ பாவ ஹராய நம: 110
ஓம் ஹராய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் தந்விநே நம:
ஓம் பாண நம:
ஓம் ஹஸ்தாய நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் அசநயேஸதக்நயே நம:
ஓம் கட்கிநே நம:
ஓம் பட்டிசிரே நம:
ஓம் ஆயுதிநே நம: 120
ஓம் மகதே நம:
ஓம் சுருவ ஹஸ்தாய நம:
ஓம் சுரூபாய நம:
ஓம் தேஜஸே நம:
ஓம் தேஜஸ்கராய நம:
ஓம் மஹதே நம:
ஓம் உஷ்ணீசிணே நம:
ஓம் சுவக்த்ராய நம:
ஓம் அத்யுக்ராய நம:
ஓம் விந்தாய நம: 130
ஓம் தீர்க்காய நம:
ஓம் ஹரிநேத்ராய நம:
ஓம் சுதீர்த்தாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் ஸ்ருகால ரூபாய நம:
ஓம் ஸாவார்த்தாய நம:
ஓம் முண்டாய நம:
ஓம் குண்டிநே நம:
ஓம் கமண்டலவே நம:
ஓம் அஜாய நம: 140
ஓம் ம்ருகரூபாய நம:
ஓம் கந்தமாலினே நம:
ஓம் கபர்த்திநே நம:
ஓம் ஊர்த்வரேதஸே நம:
ஓம் ஊர்த்வலிங்காய நம:
ஓம் ஊர்த்வசாயினே நம:
ஓம் நமஸ்தலாய நம:
ஓம் த்ரிஜடினே நம:
ஓம் சீர் வாசஸே நம:
ஓம் ருத்ராய நம: 150
ஓம் சேனாபதயே நம:
ஓம் விபவே அஹஸ் சாராய நம:
ஓம் நந்தஞ்சராய நம:
ஓம் கால யோகிநே நம:
ஓம் மகாநாதாய நம:
ஓம் சர்வாசாய நம:
ஓம் சதுர்பதாய நம:
ஓம் நிசாசராய நம:
ஓம் ப்ரேதசாரிணே நம:
ஓம் பூதசாரிணே நம: 160
ஓம் மகேசுவராய நம:
ஓம் பகுபூதாய நம:
ஓம் பகுதனாய நம:
ஓம் சர்வதாராய நம:
ஓம் அமிதாயகதயே நம:
ஓம் ந்ருத்ய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ந்ருத்யத்ருப்தாய நம:
ஓம் தர்த்தகாயஞ் நம:
ஓம் விலாசகாய நம: 170
ஓம் போஷாய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் ப்ராம் ஸுவே நம:
ஓம் நித்யாய நம:
ஓம் கிரிசராய நம:
ஓம் நபஸே நம:
ஓம் ஸகஸ்ரஹ ஸ்தாய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் வ்யவசாயாய நம:
ஓம் அநிச்சிதாய நம: 180
ஓம் அமர்ஷணாய நம:
ஓம் மர்ஷணாத்மனே நம:
ஓம் யக்ஞக்நே நம:
ஓம் காமநாசகாய நம:
ஓம் தக்ஷயக்ஞாப நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் சுபதாய நம:
ஓம் மத்யமாய நம:
ஓம் தபோ பஹாரிணே நம:
ஓம் பலவதே முத்தாய நம: 190
ஓம் அர்த்தினே நம:
ஓம் அஜீதாய நம:
ஓம் வராய நம:
ஓம் கம்பீரகோஷாய நம:
ஓம் கம்பீராய நம:
ஓம் கம்பீர நம:
ஓம் பலவாகனயே நம:
ஓம் ந்யக்ரோதாய நம:
ஓம் வ்ருஷகர்ணாய நம:
ஓம் அபியே நம: 200
ஓம் விபவே நம:
ஓம் ஸுதீக்ஷணதஸநாய நம:
ஓம் மகாகாயாய நம:
ஓம் மகானனாய நம:
ஓம் விஷ்வக் சேனாய நம:
ஓம் அரயே நம:
ஓம் யக்ஞாய நம:
ஓம் ஸம்யுகாபீடவாகநாய நம:
ஓம் தீக்ஷண பாஹவே நம:
ஓம் ஹர்யக்ஷõய நம: 210
ஓம் மகாங்காய நம:
ஓம் கர்மகால விதே நம:
ஓம் விஷ்ணு ப்ரஸாதிதாய நம:
ஓம் யஞ்ஞாய நம:
ஓம் ஸமுத்ராய நம:
ஓம் வடவாமுகாய நம:
ஓம் லம்பனாய நம:
ஓம் லம்பிதோஷ்டாய நம:
ஓம் பகுமாயா நம:
ஓம் பயோநிதயே நம: 220
ஓம் மகாதம்ஷ்ட்ராய நம:
ஓம் மஹாஜிஹ்வாய நம:
ஓம் மஹாமஹாய நம:
ஓம் மஹாநகாய நம:
ஓம் மகாரேம்ணே நம:
ஓம் மகாகே ஸாய நம:
ஓம் மஹாஜடாய நம:
ஓம் அஸபத்னாய நம:
ஓம் ப்ரஸாதாய நம:
ஓம் பரத்யயாய நம: 230
ஓம் கிரிஸாதகாய நம:
ஓம் ஸ்நேஹனாய நம:
ஓம் அஸ்நேகனாய நம:
ஓம் அஜதாய நம:
ஓம் மஹா முநயே நம:
ஓம் வ்ருஷகாராய நம:
ஓம் வ்ருக்ஷகேதவே நம:
ஓம் தரளாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் மண்டலினே நம: 240
ஓம் வாயுதாம்னே நம:
ஓம் தேவதானவ தர்ப்பக்னே நம:
ஓம் அதர்வ சீர்ஷாய நம:
ஓம் ஸாமா ஸ்யாய நம:
ஓம் ரிபுஹஸ்தாய நம:
ஓம் மிதக்ஷணாய நம:
ஓம் யஜுஷே நம:
ஓம் பாதபுஜாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் ப்ரகாசாய நம: 250
ஓம் ஜங்கமாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் அர்த்த ப்ரசாதாய நம:
ஓம் அபிகம்பாய நம:
ஓம் ஸுதர்சனாய நம:
ஓம் உபாகாராய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் கநகாய நம:
ஓம் காஞான ஸ்திராய நம: 260
ஓம் நநீதினே நம:
ஓம் நந்திகராய நம:
ஓம் பவ்யாய நம:
ஓம் புஷ்கராயாயஸ் நம:
ஓம் தபதயே நம:
ஓம் ஸ்திராய நம:
ஓம் தபனாட நம:
ஓம் தாபனாய நம:
ஓம் ஆத்யாய நம:
ஓம் க்ரிணினே நம: 270
ஓம் யக்ஞாய நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் நகதாய நம:
ஓம் கலயே நம:
ஓம் காலாய நம:
ஓம் மகராய நம:
ஓம் கால பூஜிகாய நம:
ஓம் கருணாய நம:
ஓம் கணகாராய நம:
ஓம் பூதபாவனாய நம: 280
ஓம் சாரதயே நம:
ஓம் பஸ்மசாயீனே நம:
ஓம் பஸ்ம ரூக்ஷõய நம:
ஓம் பஸ்மரூபாய நம:
ஓம் தாங்கணாய நம:
ஓம் அகணாய நம:
ஓம் லோபாய நம:
ஓம் மகாத்மனே நம:
ஓம் ஸர்வபூஜிதாய நம:
ஓம் சங்கவே நம: 290
ஓம் சங்குசம்பன்னாய நம:
ஓம் கசயே நம:
ஓம் பூதநிஷேவிதாய நம:
ஓம் ஆஸ்ரமஸ்தாய நம:
ஓம் கபோதஸ்தாய நம:
ஓம் விஸ்வகர்மபதயே நம:
ஓம் வராய நம:
ஓம் சாகாய நம:
ஓம் வீசாகாய நம:
ஓம் கும்பாண்டாய நம: 300
ஓம் அர்த்தஜாலாய நம:
ஓம் ஸூநிச்சயாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் அகபிலாய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஆயுஷே நம:
ஓம் அபராய நம:
ஓம் உரகாய நம:
ஓம் கந்தர்வாய நம:
ஓம் அதிதயே நம: 310
ஓம் தார்க்ஷ்யாய நம:
ஓம் அவிஞ்ஞேயாய நம:
ஓம் சுகாரதயே நம:
ஓம் பரஸ்வதாயுநாய நம:
ஓம் தேவாம நம:
ஓம் அர்த்தகராய நம:
ஓம் ஸுதியே நம:
ஓம் வராய நம:
ஓம் தும்பவீணாய நம:
ஓம் மஹாகோபாய நம: 320
ஓம் ஊர்த்துவரேதஸே நம:
ஓம் ஜலேஸயாய நம:
ஓம் உக்ரவம்ஸகராய நம:
ஓம் வம்சாய நம:
ஓம் வம்சதராய நம:
ஓம் அநிந்தியாய நம:
ஓம் சர்வாங்க ரூபாய நம:
ஓம் மாயாவிநே நம:
ஓம் சுகிர்தாய நம:
ஓம் அநியாய நம: 330
ஓம் அநலாய நம:
ஓம் பாந்தவாய நம:
ஓம் பந்துகர்த்ரே நம:
ஓம் ஸுபந்தவே நம:
ஓம் அவிலோசனாய நம:
ஓம் சுயக்ஞாரயே நம:
ஓம் சுகாமாரயே நம:
ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
ஓம் அஸமாய நம:
ஓம் பாஹவே நம: 340
ஓம் அநிந்த்யாய நம:
ஓம் சாவாய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் தனதாயதனாய நம:
ஓம் அமரேசாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் விசுவதேவாய நம:
ஓம் சுராரிக்நே நம:
ஓம் தீதிதயே நம:
ஓம் வஜ்ரஸ்தம்பனாய நம: 350
ஓம் அஹிர்புதன்யாய நம:
ஓம் சேகிதானாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் அஜாய நம:
ஓம் ஏகபாதாய நம:
ஓம் கபாலிநே நம:
ஓம் த்ரிஸங்கவே நம:
ஓம் அஜிதாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் தந்வந்த்ரிணே நம: 360
ஓம் தூமகேதவே நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் வைசிரவணாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் ஸக்ராய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் மித்ராய நம:
ஓம் த்வஷ்ட்ரே த்ருவாய நம:
ஓம் தனாய நம:
ஓம் ப்ரபாவாய நம: 370
ஓம் ஸர்வகாய நம:
ஓம் வாயவே நம:
ஓம் அர்யமாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் ரவயே நம:
ஓம் உதக்ராய நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் மாந்தாத்ரே நம:
ஓம் பூதபாவனாய நம:
ஓம் ஸுததீர்த்தாய நம: 380
ஓம் வாக்மினே நம:
ஓம் ஸர்வமால குணாவஹாய நம:
ஓம் பத்மவக்த்ராய நம:
ஓம் மஹாவக்த்ராய நம:
ஓம் சந்த்ரவக்த்ராய நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பலவதே நம:
ஓம் உபசாந்தாய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புண்ய சஞ்சரிணே நம: 390
ஓம் குரவே நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் கால ரூபிணே நம:
ஓம் குருபூதாய நம:
ஓம் மஹேஸ்வராய நம:
ஓம் சர்வாசனாய நம:
ஓம் தர்ஸு பாயினே நம:
ஓம் சர்வபிராணிபதயே நம:
ஓம் தேவ தேவாய நம:
ஓம் ஸுகாஸக்தாய நம: 400
ஓம் ஸதே நம:
ஓம் அஸாத நம:
ஓம் ஸர்வரத்னவிதே நம:
ஓம் கைலாச கிரிவாசினே நம:
ஓம் ஹிமவத்கிரி ஸம்ஸ்ரரயாய நம:
ஓம் கூலஹாரிணே நம:
ஓம் கூலகர்த்ரே நம:
ஓம் பகுபீஜா நம:
ஓம் பகுப்ரதயா நம:
ஓம் வணிஜாய நம: 410
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வ்ருக்ஷõய நம:
ஓம் நகுலாய நம:
ஓம் சந்தனச்சதாய நம:
ஓம் ஸார பீடாய நம:
ஓம் மஹாஜந்த்வே நம:
ஓம் அலோகாய நம:
ஓம் மஹெளஷதாய நம:
ஓம் சித்தார்த்த காரிணே நம:
ஓம் சித்தார்த்தாய நம: 420
ஓம் சந்தாய நம:
ஓம் வ்யாகரணாந்தராய நம:
ஓம் ஸிங்கநாதாய நம:
ஓம் ஸிங்க த்மஸ்ட்ராய நம:
ஓம் ஸிங்ககாய நம:
ஓம் ஸிங்கவாகனாய நம:
ஓம் ப்ரபாவாத்மனே நம:
ஓம் ஜகத்காலாய நம:
ஓம் தலாய நம:
ஓம் லோகஹிதாய நம: 430
ஓம் ஜ்ஞானசாராய நம:
ஓம் நவக்ர காங்காய நம:
ஓம் கேதுமாலினே நம:
ஓம் சுபாவனாய நம:
ஓம் பூதாஸயாய நம:
ஓம் பூதபதயே நம:
ஓம் அகோராத்ராய நம:
ஓம் அநிந்திதாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் ஸர்வபூதாத்மனே நம: 440
ஓம் நிலயாய நம:
ஓம் விபவே நம:
ஓம் பவாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் ஸஞ்சயாய நம:
ஓம் பார்ஸ்வாய நம:
ஓம் ஜீவனாய நம:
ஓம் ப்ராணதாரணாய நம:
ஓம் த்ருதிமதே நம:
ஓம் ஆத்மவதே நம: 450
ஓம் தக்ஷõய நம:
ஓம் ஸத்க்ருதாய நம:
ஓம் யுகாதிகாயா நம:
ஓம் கோபாலாய நம:
ஓம் கோயுத்யே நம:
ஓம் க்ராஹாய நம:
ஓம் கோசர்மவசனாய நம:
ஓம் அராய நம:
ஓம் ஹிரண்யபாகவே நம:
ஓம் குஹாபாலாய நம: 460
ஓம் ப்ரவேசிதாய நம:
ஓம் ப்ரதிஷ்டாயினே நம:
ஓம் மகாஹர்ஷாய நம:
ஓம் ஜிதகாமாய நம:
ஓம் ஜிதேநத்ரியாய நம:
ஓம் காந்தராய நம:
ஓம் ஸுராலாய நம:
ஓம் தனவே நம:
ஓம் ஆத்மனே நம:
ஓம் சுதயே நம: 470
ஓம் வராய நம:
ஓம் மஹாகீதாய நம:
ஓம் மகாந்ருத்யாய நம:
ஓம் அப்சரோகண நம:
ஓம் சேவிதாய நம:
ஓம் மஹாகேதவே நம:
ஓம் தனுஷேதாதவே நம:
ஓம் விகர்த்ரே நம:
ஓம் ச்ரேசுவராய நம:
ஓம் ஆவேதநீயா நம: 480
ஓம் ஆவாஸாய நம:
ஓம் ஸர்வகந்த சுகரவஹாய நம:
ஓம் தோரணாய நம:
ஓம் தாரணாய நம:
ஓம் வாயவே நம:
ஓம் பர்ஜன்யாய நம:
ஓம் ஹுதா ஸனஸஹாயாய நம:
ஓம் ப்ரசாந்தாத்மனே நம:
ஓம் ஹுதாஸனாய நம:
ஓம் உக்ரதே ஜஸே நம: 490
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் ஜ்யாய நம:
ஓம் விஜய காலவிதே நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் அயனாய நம:
ஓம் சித்தயே நம:
ஓம் ஸந்தி விக்ரகாய நம:
ஓம் ஸிகிநே நம:
ஓம் தண்டிநே நம:
ஓம் ஜடிநே நம: 500
ஓம் ஜ்வாலினே நம:
ஓம் மூர்த்திஜாய நம:
ஓம் துர்த்தராய நம:
ஓம் வணிஜே நம:
ஓம் வைணவினே நம:
ஓம் வணவினே நம:
ஓம் தாளினே நம:
ஓம் காலாய நம:
ஓம் காலகடங்கராய நம:
ஓம் நக்ஷத்ராய நம: 510
ஓம் விக்ரகாய நம:
ஓம் வ்ருத்தயே நம:
ஓம் குணவ்ருத்தயே நம:
ஓம் அயோகமாய நம:
ஓம் பிரஜாபதயே நம:
ஓம் திஸாபாஹவே நம:
ஓம் விபாகாய நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் விமோசனாய நம:
ஓம் சுரகணாய நம: 520
ஓம் ஹிரண்யகவ சோத்பவாய நம:
ஓம் மேட்ரஜாய நம:
ஓம் பலசாரிணே நம:
ஓம் மஹாசாரிணே நம:
ஓம் ஸுதாய நம:
ஓம் சர்வதுர்வ நிநாதினே நம:
ஓம் சர்வ வாத்ய பரிக்ரஹாய நம:
ஓம் பாலரூபாய நம:
ஓம் பிலாவாசாய நம:
ஓம் ஏமமாலினே நம: 530
ஓம் தாங்கவிதே த்ரிதஸாயத்ரு நம:
ஓம் விருதாய நம:
ஓம் சந்தஸே நம:
ஓம் சர்வபந்த விமோசனாய நம:
ஓம் பந்தனாய நம:
ஓம் சுரேந்தராய நம:
ஓம் சத்ருவிநாயனாய நம:
ஓம் சாங்க்ய நம:
ஓம் ப்ரசாதாய நம:
ஓம் துர்வாசசே நம: 540
ஓம் சர்வ சாதுநியே நம:
ஓம் விதாய நம:
ஓம் ப்ரஸ்கந்தனாய நம:
ஓம் விபாகாய நம:
ஓம் அதுலாய நம:
ஓம் யக்ஞசாமவிதே நம:
ஓம் சர்வாஸாய நம:
ஓம் சர்வசாரிணே நம:
ஓம் துர்வாசசே நம:
ஓம் வாசவாய அமராய நம: 550
ஓம் ஏமாய நம:
ஓம் ஏமகராய நம:
ஓம் யக்ஞாய நம:
ஓம் சர்வதாரிணே நம:
ஓம் தரோந் தமாய நம:
ஓம் லோகிதாக்ஷõய நம:
ஓம் மகாக்ஷõய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் சங்கரகாய நம: 560
ஓம் விக்ரகாய நம:
ஓம் காமாய நம:
ஓம் சர்ப்ப நம:
ஓம் சீர நிவாஸநாய நம:
ஓம் முக்யாய நம:
ஓம் வியுக்த தேகாய நம:
ஓம் தேகாரயே நம:
ஓம் சர்வ காமதாய நம:
ஓம் சர்வகாலப்ரசதாய நம:
ஓம் சுபலாய நம: 570
ஓம் பலரூபத்ருஸே நம:
ஓம் சதாகாசாய நம:
ஓம் நிரூபாய நம:
ஓம் நிபாஸ்யே நம:
ஓம் உரணாய நம:
ஓம் சுகாய நம:
ஓம் ரௌத்ர ரூபாம்ஸ்வே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் வசவே நம:
ஓம் அக்னயே நம: 580
ஓம் சுவர்ச்சிநே நம:
ஓம் வசுவேகாய நம:
ஓம் மகாவேஹாய நம:
ஓம் மனோவேஹாய நம:
ஓம் நிசாகராய நம:
ஓம் சர்வா வாசாய நம:
ஓம் ப்ரியா வாசினே நம:
ஓம் உபதேசகராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் முநயே நம: 590
ஓம் ஆத்மாகராய நம:
ஓம் லோகாய நம:
ஓம் ஸம்போஜ்யாய நம:
ஓம் ஸகஸ்ரபுஜே நம:
ஓம் பக்ஷிணே நம:
ஓம் பக்ஷிரூபிணே நம:
ஓம் விசுவதீபாய நம:
ஓம் விஸாமபதயே நம:
ஓம் உன்மாதாய நம:
ஓம் தேனாகாராய நம: 600
ஓம் அர்த்தகராய நம:
ஓம் நாமதேவாய நம:
ஓம் வாமாய நம:
ஓம் ப்ராக்தேவாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் சுத்தயோகாபசாரிணே நம:
ஓம் சித்தாய நம:
ஓம் சித்தார்த்த நம:
ஓம் சரதகாய நம:
ஓம் பிக்ஷவே நம: 610
ஓம் பிக்ஷúரூபிணே நம:
ஓம் விஷாணினே நம:
ஓம் ம்ருதவே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் மஹாசேனாய நம:
ஓம் விசாகாய நம:
ஓம் சஷ்டி நாகாய நம:
ஓம் திசாம்பதயே நம:
ஓம் வஜ்ர ஹஸ்த நம:
ஓம் ப்ரதி ஷ்டம்ஹினே நம: 620
ஓம் ஸ்தம்பனாய நம:
ஓம் க்ஷமாவ் ருத்தாய நம:
ஓம் காலாய நம:
ஓம் மனவே நம:
ஓம் மதுகராய நம:
ஓம் சலாய நம:
ஓம் வானஸ்பத்ராய நம:
ஓம் வாஜி மேகாய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் ஆசிரம பூஜிதாய நம: 630
ஓம் பிரஹ்ம சாரிணே நம:
ஓம் லோக சாரிணே நம:
ஓம் சர்வசாரிணே நம:
ஓம் சுசாரவிதே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈசுவராய நம:
ஓம் காலாய நம:
ஓம் நிசாசாரிணே நம:
ஓம் அநேக த்ருவே நம:
ஓம் நிமித்தஸ்தாய நம: 640
ஓம் நிமித்தாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நந்திகராய ஹராய நம:
ஓம் நந்திசுவராய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நந்திவதே நம:
ஓம் நந்திவர்த்தனாய நம:
ஓம் பகஸ்யாக்ஷி நம:
ஓம் நிஹந்த்ரே நம:
ஓம் காலாய நம: 650
ஓம் பிரம விதாம்வராய நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் மகாலிங்காய நம:
ஓம் சதுர்லிங்காய நம:
ஓம் லிங்காத்யக்ஷ்யாய நம:
ஓம் மகாத் யக்ஷ்யாய நம:
ஓம் லோகாத்யக்ஷ்யாய நம:
ஓம் யுகாவஹாய நம:
ஓம் பீஜாத்யக்ஷ்யாய நம:
ஓம் பீஜகர்த்ரே நம: 660
ஓம் அத்யாத் மாநுகதாயபலாய நம:
ஓம் இதிகாஸ நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் கல்யாய நம:
ஓம் ஸோத்தமாய நம:
ஓம் ஜ்லேசுவராய நம:
ஓம் தம்பாய நம:
ஓம் தம்பகராய நம:
ஓம் ரம்ஹாய நம:
ஓம் வசியாய நம: 670
ஓம் வசியகராய நம:
ஓம் கலயே நம:
ஓம் லோக கர்த்ரே நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் மகர கர்த்ரே நம:
ஓம் மகௌவதாய நம:
ஓம் அக்ஷராய நம:
ஓம் பரமாய நம:
ஓம் பலவதே நம:
ஓம் சுக்ராய நம: 680
ஓம் நீதயே நம:
ஓம் அநீதயே நம:
ஓம் சுததாத்மனே நம:
ஓம் சுத்தமானாய நம:
ஓம் கதிப்ரதாய நம:
ஓம் பருப்ர சாதாய நம:
ஓம் கஸ்வப்னாய நம:
ஓம் தக்ஷிணௌகாய நம:
ஓம் அமித்ரஜிதே நம:
ஓம் வேதகராய நம: 690
ஓம் ருத்ரகாராய நம:
ஓம் வித்வாம்சாய நம:
ஓம் பரமாய நம:
ஓம் தபஸே நம:
ஓம் மஹாமேக நினாதினே நம:
ஓம் மஹா கோரவ சீகராய நம:
ஓம் அக்னி ஜ்வாலினே நம:
ஓம் மஹாஜ்வாலினே நம:
ஓம் அதிதூமாய நம:
ஓம் ஹுதாய நம: 700
ஓம் ஹவிஷே விருஷணாய நம:
ஓம் ஸங்கராய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் வாசஸ்வினே நம:
ஓம் தூம கேதனாய நம:
ஓம் நீலாய நம:
ஓம் ஸதத்தாங்கலுத்தாய நம:
ஓம் சோபனாய நம:
ஓம் நிரவக்ரஹாய நம:
ஓம் ஸ்வஸ்திதாய நம: 710
ஓம் ஸ்வஸ்தி பாகாய நம:
ஓம் பாகினே நம:
ஓம் பாககராய நம:
ஓம் பகவே நம:
ஓம் உத்ஸங்காய நம:
ஓம் மகாங்காய நம:
ஓம் மஹா கர்ப்புராய நம:
ஓம் பகுனே நம:
ஓம் க்ருஷ்ணவர்ணாய நம:
ஓம் சுவர்ணாய நம: 720
ஓம் சர்வதேஹினா மிந்திரியாய நம:
ஓம் மஹாபாதாய நம:
ஓம் மஹா ஹஸ்தாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாயஸஸே நம:
ஓம் மஹாமூர்த்தனே நம:
ஓம் மஹாநேத்ராய நம:
ஓம் மஹாமாத்ராய நம:
ஓம் விசாலாய நம:
ஓம் மஹாதந்தாய நம: 730
ஓம் மஹாகர்ணாய நம:
ஓம் மகேஷவே நம:
ஓம் மகாநுகாய நம:
ஓம் மஹாநாதாய நம:
ஓம் மஹாகம்பவே நம:
ஓம் மஹாக்ரீவாய நம:
ஓம் சுசாந் தத்ருஸே நம:
ஓம் மஹாசக்ஷúஷே நம:
ஓம் மஹா வக்த்தாய நம:
ஓம் அந்தராத்மனே நம: 740
ஓம் ம்ருகரலயாய நம:
ஓம் மஹாகடினே நம:
ஓம் மஹாக்ரீவாய நம:
ஓம் மஹா பாஹவே நம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் ஸம்யோகாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வ்ருத்தாய நம:
ஓம் நித்யவ்ருத்தாய நம:
ஓம் குணாதிகாய நம: 750
ஓம் நித்யாய நம:
ஓம் தர்மஸகாயாய நம:
ஓம் தேவாசுரபதயே நம:
ஓம் பதயே நம:
ஓம் அயுக்தாய நம:
ஓம் யுக்தபாஹவே நம:
ஓம் த்விவிதாய நம:
ஓம் சுபர்வணாய நம:
ஓம் ஆஷாடாய நம:
ஓம் சுஷாடாய நம: 760
ஓம் த்ருவாய நம:
ஓம் ஹரிஹராய நம:
ஓம் வஸவே நம:
ஓம் ஆவ்ருத்திமதே நம:
ஓம் நித்யாய நம:
ஓம் வசுஸ்ரேஷ்டாய நம:
ஓம் மஹா ரதயே நம:
ஓம் சிரோ ஹாரிணே நம:
ஓம் ஜலோத்பவாய நம:
ஓம் விஸர்ப்பிணே நம: 770
ஓம் ஸர்வலக்ஷண பூஷிதாய நம:
ஓம் அக்ஷராய நம:
ஓம் க்ஷராய நம:
ஓம் யோகினே நம:
ஓம் சர்வ யோகினே நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் சமாம்னாயாய நம:
ஓம் தீர்த்த சேவினே நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் மகாரதாய நம: 780
ஓம் நிர்ஜீவாய நம:
ஓம் ஜீவனாய வாசினே நம:
ஓம் நீரசாய நம:
ஓம் பஹுகர்க்க நம:
ஓம் சாயரத்னப் பிரபுதாய நம:
ஓம் ரத்னாங்காய நம:
ஓம் மஹா ஹ்ருதநிகாத நம:
ஓம் க்ருதே நம:
ஓம் முலாய நம:
ஓம் விசாகாய நம: 790
ஓம் நிரவருத்தாய நம:
ஓம் யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் நிதயே நம:
ஓம் ஆரோஹணாய நம:
ஓம் நிருஹாய நம:
ஓம் சயிலஹாரிணே நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் சேனாகல்பாய நம:
ஓம் மஹாகல்பாய நம: 800
ஓம் யோகாய நம:
ஓம் யோககராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் யுகரூபாய நம:
ஓம் மஹாரூபாய நம:
ஓம் அயனாய நம:
ஓம் ககனாய நம:
ஓம் நராய நம:
ஓம் நாட்யநிர்வாமணாய நம:
ஓம் பாதாய நம: 810
ஓம் பண்டிதாய நம:
ஓம் விஸ்வலோசனாய நம:
ஓம் பஹுமாலாய நம:
ஓம் மஹாமாலாய நம:
ஓம் சுமாலாய நம:
ஓம் பஹுலோசனாய நம:
ஓம் விஸ்தாராய நம:
ஓம் பவனாய நம:
ஓம் க்ரூராய நம:
ஓம் குசுமாய நம: 820
ஓம் சுபலோதயாய நம:
ஓம் வ்ருஷபாய நம:
ஓம் வ்ருஷபாங்காய நம:
ஓம் மலலி பில்வாய நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் இந்தவே நம:
ஓம் விசர்க்காய நம:
ஓம் சுமுகாய நம:
ஓம் சுகாய நம:
ஓம் சுவாயுததராய நம: 830
ஓம் நிவேதனாய நம:
ஓம் சுதன்மனே நம:
ஓம் ஸங்கா தாராய நம:
ஓம் மஹாஹனுஷே நம:
ஓம் கந்தமாலினே நம:
ஓம் பகவதே நம:
ஓம் உத்தானாய நம:
ஓம் மந்தானாய நம:
ஓம் பஹுளாய நம:
ஓம் பாஹவே நம: 840
ஓம் சகலாய நம:
ஓம் சர்வலோசனாய நம:
ஓம் உரஸ்தாளீகராய நம:
ஓம் தானினே நம:
ஓம் ஊர்த்வ ஸம்ஹனனாய நம:
ஓம் வடவே நம:
ஓம் சத்ரபத்ர சுவிக்யாதாய நம:
ஓம் சர்வலோகாஸ்ரயாய நம:
ஓம் மகதே நம:
ஓம் முண்டாய நம: 850
ஓம் விரூபாய நம:
ஓம் விகிர்தாய நம:
ஓம் தண்டினே நம:
ஓம் முண்டாய நம:
ஓம் விகர்ஷ்ணாய நம:
ஓம் ஹரியக்ஷõய நம:
ஓம் கோகசாய நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் தீப்த ஜிஹ்வாய நம:
ஓம் ஸகஸ்ரபாதே நம: 860
ஓம் ஸகஸ்ரமூர்த்னே நம:
ஓம் தேவேந்த்ராய நம:
ஓம் சர்வ பூதமயாய நம:
ஓம் குரவே நம:
ஓம் ஸகஸ்ர பாஹவே நம:
ஓம் சர்வாங்ககாய நம:
ஓம் சண்யாய நம:
ஓம் சர்வலோகச்ருதே நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் த்ருமதவே நம: 870
ஓம் மந்த்ராய நம:
ஓம் கனிஷ்டாய நம:
ஓம் கிருஷ்ண பிங்களாய நம:
ஓம் பிரஹ்ம தண்டவி நம:
ஓம் நிர்மாத்ரே நம:
ஓம் சதக்னினே நம:
ஓம் சதபாகத்ருதே நம:
ஓம் பத்ம கர்ப்பாய நம:
ஓம் பிரமகர்ப்பாய நம:
ஓம் ஜலகர்ப்பாய நம: 880
ஓம் கர்ப்பஸ்தாய நம:
ஓம் ப்ரஹ்மவிதே நம:
ஓம் பிரஹ்மணே நம:
ஓம் பிரமயக்ஞாய நம:
ஓம் பிராஹ்மணாய நம:
ஓம் கதயே நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் நௌகாத்மனே நம:
ஓம் திக்மதேஜஸே நம:
ஓம் தமோநுதாய நம: 890
ஓம் ஊர்த்துவகாத்மனே நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் வாதரம்ஹஸே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் சந்தனினே நம:
ஓம் பத்ம நாளாக்ராய நம:
ஓம் சுரப்யுத்தரணாய நம:
ஓம் நராய நம:
ஓம் கர்ணிகாராய நம:
ஓம் மகாசக்கராய நம: 900
ஓம் நீலமால பிநாகத்ருதே நம:
ஓம் உமாபதயே நம:
ஓம் உமாகாந்தாய நம:
ஓம் ஜான்ன வீஹ்ருதயங்காய நம:
ஓம் வராய நம:
ஓம் வராகாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வரேசாய நம:
ஓம் சுமகாசுவனாய நம:
ஓம் மஹாப் பிரசாதாய நம: 910
ஓம் அநகாய நம:
ஓம் சக்ரக்னே நம:
ஓம் சுவேத பிங்களாய நம:
ஓம் பீதாத்மனே நம:
ஓம் ப்ரயதாத்மனே நம:
ஓம் ஸம்யதாத்மனே நம:
ஓம் பிரதான விதே நம:
ஓம் சர்வபார் சுவசுதாய நம:
ஓம் தார்க்ஷ்யாய நம:
ஓம் தர்ம சாதாராணாய நம: 920
ஓம் தராய நம:
ஓம் சராசராத்மனே நம:
ஓம் சூக்ஷ்மாத்மனே நம:
ஓம் சுவர்ஷாங்காய நம:
ஓம் வ்ருஷேசுவராய நம:
ஓம் சாத்யாய நம:
ஓம் வருஷயே நம:
ஓம் வசவே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் விவசுவதே நம: 930
ஓம் சவித்ரே நம:
ஓம் அர்ச்சிதாய நம:
ஓம் வியாசாய நம:
ஓம் சர்வார்த்த சம்÷க்ஷபாய நம:
ஓம் விஸ்தாராய நம:
ஓம் பரியாய நம:
ஓம் பயாய நம:
ஓம் ருதவே நம:
ஓம் ஸம்வத்சராய நம:
ஓம் மாசாய நம: 940
ஓம் பக்ஷõய நம:
ஓம் ஸந்த்யாஸ நம:
ஓம் மாபகாய நம:
ஓம் கலாய நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் லவாய நம:
ஓம் மாத்ராய நம:
ஓம் முகூர்த்தாய நம:
ஓம் அவ்னே நம:
ஓம் க்ஷபாய நம: 950
ஓம் க்ஷணாய நம:
ஓம் விசுவ÷க்ஷத்ராய நம:
ஓம் பீஜலிங்காய நம:
ஓம் பீஜாய நம:
ஓம் ஆத்யாய நம:
ஓம் அநிந்திதாய நம:
ஓம் சர்வதயே நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் வியக்தாய நம: 960
ஓம் பித்ரே நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் பிதா மஹாய நம:
ஓம் சுவர்க்கத்வாராய நம:
ஓம் பிரஜாந்வராய நம:
ஓம் திரிவிஷ்டபாய நம:
ஓம் நிர்வாணாய நம:
ஓம் ஹ்லாதனாய நம:
ஓம் ப்ரஹ்ம லோக நம:
ஓம் பராகதயே நம: 970
ஓம் தேவாசுர விநிர்மாத்ரே நம:
ஓம் தேவாசுரபராயணாய நம:
ஓம் சுராசுர கதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் தேவாசுர நமஸ் க்ருதாய நம:
ஓம் தேவாசுர மஹா மாத்ராய நம:
ஓம் தேவாசுர சாஸ்ர யாய நம:
ஓம் தேவாசுர கணாத்யக்ஷõய நம:
ஓம் தேவாசுரகணாத்ரத்ணயே நம:
ஓம் தேவாசுரகுரவே நம: 980
ஓம் தேவாய நம:
ஓம் தேவாசுர ப்ரிஷ்க்ருதாய நம:
ஓம் தேவேசுர மகாமந்த்ராய நம:
ஓம் தேவாசுரமகேசுவராய நம:
ஓம் சர்வதேவமயாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் சிந்த்யாய நம:
ஓம் தேவாத் சமம்பவாய நம:
ஓம் உத்பூஜாய நம:
ஓம் சுக்ராய நம: 990
ஓம் ஆவேத்யாய நம:
ஓம் விரஜாய நம:
ஓம் விரஜாம்பராய நம:
ஓம் ஈஜ்யாய நம:
ஓம் ஹஸ்தினேசுர நம:
ஓம் வியாக்ராய நம:
ஓம் தேவ சிங்காய நம:
ஓம் நரர்ஷ்பாய நம:
ஓம் நிராயுதாய நம:
ஓம் வரஸ்ரேஷ்டாய நம: 1000
ஓம் சர்வ தேவோத்த மோத்தமாய நம:
ஓம் குரவே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் நிஜாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் சர்வவாகனாய நம:
ஓம் ப்ரயுக்தாய நம:
ஓம் சோபனாய நம:
ஓம் வஜ்ராய நம: 1010
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் சிருங்கிணே நம:
ஓம் சிருங்கப்ரியாய நம:
ஓம் ராஜ்ஞே நம:
ஓம் ராஜ ராஜாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் அபிராமாய நம:
ஓம் சுரகணாய நம: 1020
ஓம் விராமாய நம:
ஓம் சுவர்க்க சாதனாய நம:
ஓம் லலாடாக்ஷõய நம:
ஓம் விசுவ தேவாய நம:
ஓம் ஹரிணாய நம:
ஓம் ப்ரஹ் மவர்ச் சஸாய நம:
ஓம் ஸ்தாவரணாம்பதயே நம:
ஓம் நியா மந்த்ரியாய நம:
ஓம் வர்த்தநாய நம:
ஓம் ஸித்தார்த்தாய நம: 1030
ஓம் ஸித்த பூதார்த்தாய நம:
ஓம் ஸத்யவ்ரதாயத் ஸுசயே நம:
ஓம் வ்ரதாதியாய நம:
ஓம் பரஸ்மை ப்ரஹ்மணோ நம:
ஓம் பக்தா நுக்ரஹ காரகாய நம:
ஓம் விமுக்தாய நம:
ஓம் முக்த தேஜஸ் ஸ்ரீமதே ஸ்ரீவர்த்தநாய நம:
ஓம் ஜகதே ஸ்ரீஸாம்பஸ் தாஸிவாய நம: 1038
சிவ சஹஸ்ர நாமங்கள் முற்றிற்று.
வியாச முனிவரே! பிருமா இந்திரன் முதலான தேவர்களும் காண்பதற்கரிய சிவபெருமானை முன்பொரு காலத்தில் நான் இந்த ஆயிரம் திருநாமங்களால் சிரத்தை பக்தியாக ஸ்தோத்திரம் செய்தேன். இந்த ஸ்தோத்திரத்தால் நாள்தோறும் பக்தியோடு துதிசெய்வோன் மேலான பதவியை அடைவான். இது பிரமதேவரால் சொல்லப்பட்டது முனிவர்களும், தேவர்களும் நாள்தோறும் இந்தத் திருநாமங்களால் துதிக்கிறார்கள் தினந்தோறும் பக்தியுடன் இதனால் துதித்தவர்களைச் சிவபெருமான் கருணையோடு தம்மிடம் சேரச் செய்கிறார். பூவுலகில் ஆஸ்திகர்களான நம்பிக்கையுடைய சாதுக்கள் பலர் இந்த சிவ சஹஸ்ர நாமத்தைச் சொல்லிச் சற்கதியடைந்திருக்கிறார்கள். இதையே ஸ்தோத்திரஞ் செய்து ஆனந்தித்திருக்கிறார்கள். மனிதப் பிறவி கோடியுண்டானால் அதில் ஒரு பிறவியில் சிவபெருமானிடம் பக்தியுண்டாகிறது. அந்தப் பக்தி நிலையாக இருக்குமேயானால் அதுவே முக்திக்குக் காரணம் இந்த ஸ்தோத்திரம் தேவர்களுக்கும் கிடைத்தற்கு அரியது. சிவபக்தியோ அவ்விறைவனது பிரசாதத்தினாலேயே உண்டாகத் தக்கது, எந்த வகையிலாவது சிவபெருமானையே இடைவிடாமல் ஸ்தோத்திரஞ் செய்பவர்கள் சம்சார சாகரத்திலிருந்து கரையேறுவார்கள். தேவர்களும் சிவபெருமானைப் பூஜித்தே தம் உயர்பதவிகளை அடைந்தார்கள். ஆகையால் மனிதர்கள் முக்தியடைவதற்கு மகாதேவனைத் துதித்தலைத் தவிர வேறோரு மார்க்கமுங் கிடையாது சிவத்திருமாங்களால் சிவபெருமானை இடைவிடாமல் துதித்துவந்த தண்டி என்பவர் உயர்ந்த சிவகதியை அடைந்தார் பிரம்மா இத்துதியை இந்திரனுக்கு உபதேசித்தார். இந்திரன் மிருத்யுவுக்கும். மிருத்தியு உருத்திரருக்கும் உருத்திரர் தண்டிக்கும் முறையே உபதேசித்தனர் தண்டி என்பவர் பற்பல காலம் தவஞ்செய்து இந்த மந்திரரூபமான சிவ சஹஸ்ர நாமங்களைத் தனக்குக் கிடைக்கப் பெற்றார், அவர் சுக்கிரனுக்கும் சுக்கிரன். கவுத்தமருக்கும், கவுத்தமர் வைவஸ்வதமநுவுக்கும் வைவஸ் வதமநு பதரிகாசிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த தனக்கு இஷ்டராகிய நரநாராயணருக்கும் தர்மப் பிரஜாபதியின் புதல்வனான நாராயணர் இயமனுக்கும் இயமன் மிருகண்டுவுக்கும் மிருகண்டு மார்க்கண்டேயருக்கும் மார்க்கண்டேயர் புத்திசாலியான நாசிகேதருக்கும் நாசிகேதர் உபமன்யுவுக்கும், உபமன்யு செல்வமுண்டாகும்படி கிருஷ்ணமூர்த்திக்கும் முறையே உபதேசித்தனர். இந்த ஆயிரம் சிவத்திருநாமங்களும் இவ்வண்ணம் உலகத்தில் பிரசித்தி பெற்றன இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் காமபோகத்தையும் சர்வசித்தியையும் சுவர்க்கத்தையும் தேகாரோக்கித்தையும் தீர்க்காயுளையும் தனதான்ய விருத்தியையும் ஏற்படுத்தும் இதை நாள்தோறும் படிப்பவருக்கு யக்ஷர் தானவர் பைசாசம் முதலானவற்றால் ஒருவித விக்கினமும் உண்டாகாது. யாவர் ஜிதேந்திரியாராயும் பிரமசாரிகளாயும், பூரண மனத்துடன் இதை ஒரு வருஷகாலம் ஜபிப்பரோ, அவர் பசுபதியாகிய சிவபெருமானைக் கண் கூடாகத் தரிசிப்பார் இதைச் சிவ சந்நிதியில் ஸ்தோத்திரம் செய்தவர்கள் சகல பாவங்களையும் ஒழித்து அஸ்வமேத யாகப் பலனையும் சதுர்த்தசி விரத பயனையும் அடைவார்கள்! என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.
28. துலா புருஷ தானம்
ஸனத்குமார முனிவரை வியாச முனிவர் நோக்கி, மகாத்மாவே! தர்மம் ஒன்றினாலேயே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளையும் அடையலாம் என்று சொன்னீர்களே. ஆகையால் பண்டிதனாக இருப்பவன் தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது புலனாகிறது. சாத்வீகமாகிய தவம் தானம் விரதம் நியமம் முதலியவற்றால் சுவர்க்கத்தையடைலாம். கருமித்தனம் முதலான தீய குணங்களை ஒழித்து மனிதப் பிறவியில் தானஞ்செய்தவர்கள் சிவபதவியை அடைவார்கள். ரஜோகுணமாகியத் தவஞ்செய்தவர்கள் அதியாசையுடையவர்களாய் உலகத்தில் பிறந்து சுவர்க்க போகத்தை விரும்புவார்கள் தபோ குணமான தவத்தைச் செய்தவர்கள் குரூரமான குணத்துடன் உலகில் பிறப்பார்கள். தாமஸகுணமுடையவர்களுக்கு கண் முதலான இந்திரியங்களாலேயே பாவம் விளைகிறது. ஆகையால் ரஜோகுண தமோகுணங்களின்றிச் சத்துவ குணத்துடன் செய்யும் தவத்தையே தவம் என்று சொல்ல வேண்டும். சருகுகளையும் காற்றையுமே உணவாக உட்கொண்டு வனசஞ்சாரஞ் செய்து புலன்களை ஒடுக்கியவர்களைவிட தமது இருப்பிடத்திலேயே இருந்து இல்லற தர்மத்தை அனுசரித்து புலனடக்கம் செய்தவர்களே சிறந்தவர்கள்! ஆசையை ஒழித்துப் பிறருக்குத் தீமை செய்யாமல் தம்மிடத்திலேயே இருப்பவர்களுக்கு அதுவே தபோவனமாகும். நான்காவது மேம்பட்டதுமாகிய சன்னியாச ஆசிரமம் சிறந்ததாயினும் புலன் ஒடுக்கமில்லாமல் அது கை கூடாதகையால் புத்திமான்கள் இல்வாழ்க்கையிலிருந்தே புலனடக்கம் செய்து பரமபதம் அடைவார்கள் தவ காட்டிலிருந்து தவஞ்செய்து வந்த பசியோடு ஊரையடைந்தவர்களுக்கு இல்வாழ்க்கையிலிருந்து அன்னபானம் முதலானவற்றைக் கொடுத்து உபசரித்தவன் அத்தவசியின் புண்ணியத்தில் ஒரு பங்கைப் பெறுவான். ஆகையால் பிரமசரியம் முதலான நான்கு வித ஆஸ்ரமங்களில் இல்வாழ்வோனே ஏனைய மூன்று ஆஸ்ரமிகளுக்கும் துணையாக இருப்பதுடன் அவன் இவ்வுலகத்தில் இஷ்ட போகங்களை அனுபவித்துப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அந்த இல்லறவாசி பாவஞ் செய்துவிட்டால் என்ன தானஞ் செய்வதின் மூலம் தன் பாவத்தை ஒழித்துச் சுவர்க்கத்தை அடைவானோ அதை அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் சொல்வாராயினர்.
ஸத்யவாதி மைந்தரே! பாவத்தை ஒழித்து எல்லாச்சம் பத்துக்களையும் ஈந்து, இம்மை மறுமைப் பயன்களைக் கொடுக்க வல்லதான ஒரு தானத்தை உமக்குச் சொல்லுகிறேன். அதுவோ, நித்ய நைமித்ய கர்மங்களை முடித்துச் சுபகரமான முகூர்த்தத்தில் சிவபெருமானைத் தியானித்துச் செய்யத் தக்கது நரகத்தை அடையாமல் விலக்க விரும்புகிறவன் சுத்தமான திரவியத்தினால் இந்தத் தானத்தைச் செய்து தேவர் பிராமணர்களுக்கு உபயோகித்துச் சிரேஷ்டமான கதியை அடைகிறான். பூர்வத்தில் இந்தத் தானத்தைச் செய்த புத்திரர்களால் சதாநீக முனிவர் கடைத்தேறினார். தர்ம சாஸ்திரத்தில் சொல்லிய படிப் புண்ணிய ÷க்ஷத்திரத்தில் தானகாலமறிந்து சத்பாத்திரர்களுக்குத் தானம் செய்தால் விசேஷபயனை அடையலாம். பெரும் பெருளால் செய்யத் தக்கதும் உடல் தூய்மை உண்டாக்கத் தக்கதும் சுவர்க்க பதவியை அடையச் செய்வதும் பெரும் பாதகங்களையும் ஒழிப்பதுமான இந்தத் தானத்தைச் செய்தால் சத்தியமாக மோட்சத்தையடைவான். பிருகு வமிசத்தில் பிறந்த பரசுராமர் இருபத்தோரு தலைமுறைவரையில் க்ஷத்திரிய வதஞ்செய்த பாவத்தை ஒழிக்கப் பலவித தானஞ்செய்தும் அசுவமேதம் முதலியன நடத்தியும் அந்தப் பாவத்தை அகற்ற முடியாமல் வருந்தியிருக்கும் சமயத்தில் முக்கண்ணரான சிவபெருமானால் இந்தத் துலாபுருஷதானம் அவருக்குச் சொல்லப் பட்டது பாவத்தையே செய்து வந்தவனும் பிறன் மனைவியரைக் கூடிக்கலந்தவனும் மதுபானஞ் செய்தவனும் மாமிசம் தின்றவனும் குருபத்தினியைக் கூடியனுபவித்தவனும் உண்ணத் தகாதனவற்றை உண்டவனும் குழந்தை வதை செய்தவனும் யாகஞ்செய்வதற்கு அருகரல்லாதவருக்கு யாகஞ் செய்வித்தவனும் ஒரு நாளி உபவாசமிருந்து இந்தத் தானத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வியாச முனிவரே! துலாபுருஷ தானஞ்செய்பவன் முதலில் இந்திரன், வருணன், வாயு, நிருதி; புதன்; அக்கினி முதலிய தேவர்களுக்கும் பிரீதியாக ஹோமம் செய்யவேண்டும் கிரகதேவதை, இஷ்ட தேவதைகளுக்கும் வியாஹ்ருதியால் அதற்குப் பிறகு ஓமஞ் செய்ய வேண்டும் யத்தேவா தேவஹேடனம் என்னும் மந்திரத்தாலும் யதிதிவா என்னும் மந்திரத்தாலும் யஜ்ஜாக்ரதா என்ற மந்திரத்தாலும் பசு நெய்யினால் சாகல்லிய சூத்திரோக்தமாக ஹோமம் செய்ய வேண்டும். இவ்வாறு தேவப்ரீதியாக ஹோமஞ்செய்து. இரண்டு யக்கு ஸ்தம்பங்களை நிறுத்தி அவற்றில் கணபதியையும் ஸ்கந்தரையும் ஆவாஹனம் செய்து கந்த புஷ்ப தூபதீபங்களால் ஆராதித்து அவர்கள் அனுக்கிரகத்தைப் பெற்று, பினாகபாணியான சிவபெருமானை ருத்ர ஸூக்தத்தால் ஆசனம் முதலான ÷ஷாடசோப சாரங்களோடு பூஜித்து, பல திண்பண்டங்களை நிவேதித்து யானைத் தோலையணிந்தவரே! உமாபதியே! சூலபாணியே! என்று துதித்து, அடியேன் செய்த பூஜையை ஏற்றுக்கொண்டு அருள் புரியவேண்டும்! என்று பிரார்த்தனை செய்து பிரம்மகூர்ச்ச பவித்திரம் அணிந்து, ஸூர்யஸ்யைவது என்ற மந்திரத்தால் ஹோமம் செய்து தூபதீப நிவேதனம் முடித்து துலாபுருஷாயஸ்வாஹா என்று ஆகுதி செய்து பூர்ணாஹூதியை முடிக்க வேண்டும். துலைவை(திராசை) சித்தஞ்செய்து அதன் ஒரு தட்டில் திரவியத்தை வைத்து, மற்றொரு தட்டில் தான் ஏறவேண்டும் அதன்பிறகு துலையே! பூமிதேவியே! உன் தாயும் பிரமதேவனே உன் தந்தையுமாக இருப்பது சத்தியமானால் நீ சத்திய தர்மரூபமாகி உன் பேரில் ஏறியிருக்கிற என்னைத் தரிக்க வேண்டும் சத்தியத்தினாலேயே தேவர்களும் முனிவர்களும் நற்கதியை அடைந்திருக்கிறார்கள். அந்தச் சக்தியரூபமாகிய நீ என்னால் செய்யப்பட்டத் தானத்தை அங்கீகரித்து என் பாவத்தைப் போக்க வேண்டும் என்று துதித்துத் துலையினின்று இறங்கி விட வேண்டும், பாரமான தன் தேகத்தைவிடத் திரவியத்தைச் சாமானியமாக நினைப்பவனே இந்தத் தானஞ் செய்வதற்கு அருகனாவான். இந்தத்தானத்தை ஒருமுறை செய்தவன் சகல பாவங்களும் ஒழித்தவனாவான். இரண்டாம் முறை செய்தால் சிவ கணத்தலைவர்களில் ஒருவனாகச் சந்தேகமின்றித் திகழ்வான். மூன்றாம்முறை செய்தால் சிவ சாரூப்யத்தை (சிவனுருவை) அடைவான். இந்தத் தானம் பூரணை, வருஷப் புண்ணிய ÷க்ஷத்திரத்திலாவது தீர்த்தக் கரையிலாவது செய்யத்தக்கதாகும் அப்படிச் செய்தவன் கிருதகிருத்தியனாவான். இந்தச் சரிதத்தைக் கேட்டவனும் இதைச் செய்ய விரும்பியவனும் பாவங்கள் விலகி சுவர்க்க லோகத்தை அடைவார்கள். இவ்வாறு ஸனத்குமார முனிவர் கூறினார்.
29. பரசுராமர் கதை
ஸனத்குமார முனிவரை வியாசமுனிவர் நோக்கி, தல ஞானியே! பரசுராமர். இந்தத் தானத்தைச் சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்றுச் செய்தார் என்று சொன்னீர்களல்லவா? பரசுராமர் பரிசுத்தராயிற்றே! க்ஷத்திரிய குலத்தை சேர்ந்த அவர் தவஞ் செய்வதற்கும் சிவபெருமான் அவருக்கு இவ்விரதத்தை உபதேசிப்பதற்கும் காரணங்கள் என்ன? அவற்றையும் தயவு செய்து சொல்ல வேண்டும் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் கூறலானார். வியாசரே! சிவ பக்தரான பரசுராமரின் பிறப்பையும் அவர் சவுரிய வீரியங்களைப் பெற்ற வகையையும் துலாபுருஷ தானம் செய்த காரணத்தையும் நீர் விரும்பியதால் சொல்லுகிறேன் கேளும். முன்னொரு சமயம் தர்மவானான குசிகன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பலசாலியான ஒரு புத்திர பாக்கியத்தைப் பெற விரும்பி தன்னுடன் மிகவும் வருந்தக் கடுந்தவஞ் செய்து இந்திரனைத்தரிசித்து அவனையே புத்திரனாகப் பெற்றான். அப்புதல்வனுக்கு காதி என்ற பெயர் உண்டாயிற்று, காதி என்பவனுக்கு சத்யவாதி என்னும் ஒரு புதல்வி பிறந்தாள். அவளை ரிசிகமுனிவர் திருமணஞ் செய்து கொண்டார். ரிசிக முனிவர்காதி ராசனுக்குச் சந்ததி விருத்தி செய்ய விரும்பி ஒரு யாகஞ் செய்து, அதிலிருந்து தோன்றிய இரண்டு சருக்களையும் தன் மனைவியின் கையில் கொடுத்து, உன் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறரால் வெல்ல முடியாத க்ஷத்திரிய சிரேஷ்டன் ஒருவனும் உனக்குப் பிராமண தர்மங்களில் குறைவின்றி என்னைப் போல் விளங்கும் புதல்வன் ஒருவனும் பிறப்பார்கள். நீ இதையும் உன் தாய் இதையும் சாப்பிடுங்கள்! என்று கூறி அவற்றைக் கொடுத்து வனத்தை அடைந்து தவத்தில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் அவருடைய மாமனாரான காதிராஜன் தன் மனைவியுடன் ரிசிக முனிவரின் அச்சிரமத்திற்கு வந்தான். முனி பத்தினி சத்தியவதி தன் பெற்றோரைக்கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்று விரைந்து தன் கணவர் கொடுத்த சருக்கள் இரண்டையும் தன் தாயிடம் கொடுத்து தன் கணவன் கூறியதைச் சொன்னாள். தாயானவள் அவற்றை வாங்கிக் கொண்டு வஞ்சனை செய்ய விரும்பியவளாய்த் தான் உண்ணவேண்டிய சருவைச் சத்தியவதியிடம் கொடுத்து குமாரத்தி உட்கொள்ள வேண்டிய சருவைத் தான் உண்டாள். அதனால் சத்யவதி க்ஷத்ரிய குலகாளனான புத்திரனை குரூர தேஜஸுடன் கர்ப்பத்தில் அடைந்தாள். பிறகு ஒரு சமயம் ரிசிக முனிவர் தம் மனைவியின் பயங்கரமான கர்ப்பத்தைத் தம் ஞான திருஷ்டியினால் உணர்ந்து சத்தியவதியை நோக்கி பெண்ணே! நீ உன் தாயால் வஞ்சிக்கப்பட்டு விட்டாய் மகாதபசியாக உன் தம்பி பிறக்கப்போகிறான் அவன் தன் வேதிய தவத்தால் உலகங்கள் அனைத்திலும் புகழ் அடைவான்! என்றார். அதைக் கேட்டதும் சத்யவதி தன் கணவனைப் பணிந்து நாயகரே! பிராமணர்களுக்குள் துஷ்டனான பிள்ளை எனக்குப் பிறப்பான் என்று சகல சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் சொல்வது தகுதியல்ல! என்றாள். அதற்கு அவர் அடி பெண்ணே! அது என் கருத்தல்ல. உன் தாயின் செயலே அவ்வகையாகச் செய்தது! என்றார். அதற்கு சத்தியவதி நாதா! புதிய உலகங்களையும் படைக்க வல்லவரான நீங்கள் எனக்கு நல்ல புத்திரன் பிறப்பதற்குத் தயை செய்ய வேண்டும்! என்றான். அதற்கு ரிசிக முனிவர், ஐயோ நான் அக்கினி தேவனை நோக்கி அந்தச் சருவை உண்டாக்கும்போது, ஜெபித்த மந்திரம் அத்தகையதல்லவே! நான் விளையாட்டாகக் கூடப் பொய் சொல்லாதவனாயிற்றே! என்றார். அதைக் கேட்டதும் சத்தியவதி சுவாமி அப்படியானால் அவ்வகையில் ஒருவன் நம்மிருவருக்கும் ஒரு பேரனாவது பவுத்திரனாவாவது தோன்றட்டும்! என்று கெஞ்சினான். ரிசிகர் பெண்ணே! நான் புத்திரனிடத்திலாவது பவுத்திரனிடத்திலாவது ஏற்றத்தாழ்வு கருதமாட்டேன் உன் விருப்பத்தின்படியே ஆகட்டும்! என்றார். அதனால் அவர்களுக்குப் பவுத்திரராகவும் ஜமதக்கினி முனிவருக்கு புத்திரராகவும் தவம் புலனடக்கம் முதலி நற்குணங்கள் நிறைந்தவராகவும் பரசுராமர் தோன்றினார். காதிராசனின் மனைவி தவத்தில் மேம்பட்ட அக்கினிக்குச் சமானமான பிரமதேஜசுடன் கூடிய விசுவாமித்திரமுனிவரைப் பெற்றாள்.
வியாசரே! அவ்வாறு தோன்றிய பரசுராமர் க்ஷத்திரியர்களுக்கு உரிய தோள்வலிமையோடும் தனுர்வேதத்தின் (வில்வித்தையின்) எல்லையுணர்ந்தவராயும் சகல சாஸ்திங்களையும் கற்றறிந்தவராயும் ஜ்வாலையோடு கூடிய அக்கினிக்குச் சமமான காந்திமானையும் விளங்கச் சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒரு காலத்தில் ஹைஹய வமிசத்தில் தோன்றிய கிருதவீர்யனுக்குப் புத்திரனாக கார்த்தவீர்யார்ச்சுனன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் ஆயிரங்கைகளும் அதிதேஜசும் சூரியனுக்குச் சமமான காந்தியும் வாய்ந்தவன் அவன் திரிஷிதர் என்ற முனிவரை வழிபட்டு அவர் அருளால் அக்கினி பகவானையே அஸ்திரமாகப் பெற்று, அவ்வஸ்திரத்தால் பற்பல நகரங்கள் கிரமங்கள் நந்தவனங்கள் முதலானவற்றையெல்லாம் சுட்டெரித்து சமுத்திரத்தையும் முனிவர் ஆசிரமங்களையும் கொளுத்திக் கொண்டு ஆபஸ்தம்ப முனிவர் இருக்கும் ஆசிரமத்தையும் கொளுத்தினான். அந்த முனிவர் அதனால் கோபங்கொண்டு அவனை நோக்கி, நீ விரைவில் பரசுராமனால் தலை ஒழிக! என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தைப்பெற்று கார்த்தவீரியார்ச்சுனன் சில நாட்கள் சென்ற பிறகு ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அவர் கார்த்தவீரியனுக்கு மரியாதை செய்தார். அப்போது அவரிடத்திலிருந்த காமதேனு என்னும் தெய்வீகப் பசுவைப் பார்த்து வியப்புற்று, இது நான் நினைத்தவற்றையெல்லாம் கொடுக்கும்; ஆகையால் இதை எப்படியாவது அடையவேண்டும் என்று பேராசைப்பட்டு ஜமதக்னி முனிவரை நோக்கி மகரிஷியே நான் உமக்கு பற்பல பசுக்களைத் தருகிறேன். இந்தக் காமதேனுவை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் மறுக்கவே கார்த்தவீரியன் மூர்க்கத்தனமாகப் போர் செய்ய முயன்றான். அந்தச் சமயம் முனிவர் அருகிலிருந்த அவரது குமாரரான பரசுராமர் தம் ஆயுதங்களால் அவனுடன் போர் செய்து அவனது ஆயிரம் பூஜங்களையும் அறுத்தெறிந்து, மஹேந்திரகிரியை அடைந்து சிவ சந்நிதியில் தவஞ்செய்து கொண்டிருந்தார். அதையறிந்த கார்த்தவீரியார்ச்சுனன் புத்திரர்கள் ஜமதக்கினி முனிவரிடம் சென்று அவரைக் கொன்று விட்டார்கள். பின்னர் மகேந்திரகிரியில் தவஞ்செய்து கொண்டிருந்த பரசுராமர் சிவப்பிரசாதம் பெற்றுக் கொண்டு தம் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு தம் தந்தை மாண்டதற்காகப் பெரிதும் வருந்திப்பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று குமுறினார். கார்த்தவீரியனையும் அவனது புத்திரர்களையும் பவுத்திரர்களையும் கொன்று, தன் தந்தையின் உடலில் தைத்த அஸ்திர காயங்களைக் கண்டு மனம் கலங்கி, அந்த க்ஷத்திரிய குலத்தையே (அரசினத்தையே) நிர் மூலமாகச் செய்வேன்! என்று சபதஞ்செய்தார். அவ்வாறே க்ஷத்திரியர்களையெல்லாம் கொன்று பூவுலகம் முழுவதும் எவ்விடத்திலும் க்ஷத்திரியப்பூண்டு என்பது சிறிதுமில்லாமல் செய்து, பூமியைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்து விட்டு, தவச்செயலை மேற்கொண்டார்.
பிறகு பல காலம் கழித்து அவர் மீண்டும் வந்து பார்க்கும்போது, மாண்டுபோன க்ஷத்திரிய வம்சத்தினரின் பெண்கள் பிராமணர்களைக் கொண்டு பிள்ளைகளைப் பெற்று தங்கள் வம்சத்திற்கு சந்ததி விருத்தி செய்து கொண்டிருப்பதையும் அப்புத்திரர்கள் பிராமணர்களிடம் இராஜ்ஜியத்தை வாங்கிப் பரிபாலனஞ் செய்வதையும் அறிந்தார். அந்தக்குலம் தலையெடுக்க வொட்டாமல் ஆங்காங்கே சென்று க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவ்வாறு இருபத்தோரு தலைமுறை க்ஷத்திரிய குலத்தைக் கருவறுத்து ஒழித்தார். அதில் சில க்ஷத்திரிய மங்கையர் பிராமணரின் கிருபையால் சில பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பரசுராமர், தாம் செய்த க்ஷத்திரியக் கொலை நீங்கும்படி பூமி முழுவதையும் அநேகம் பசுக்களையும் காசிப முனிவருக்குத் தானஞ்செய்து அதன்பிறகு அஸ்வமேத யாகம் செய்து அதனாலும் தன் பாவம் ஒழியாது சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து, இப்பாவம் எப்படி நீங்கும்? என்று கேட்டார். சிவபெருமான் அவரை நோக்கித் துலாபுருஷதானம் செய்யும்படிச் சொன்னார். சர்வேஸ்வரனாகிய சிவபெருமானால் சொல்லப்பட்டச் சிறந்த துலாபுருஷ தானத்தைப் பரசுராமர் செய்து தம் பாவங்களிலிருந்து நீங்கிப் புனிதமானவராய் தவச் செயலை மேற்கொண்டார். வியாசரே க்ஷத்திரிய குலத்தைப் பலமுறை துவம்சம் செய்த பாவத்தைப் போக்கும்படியாக இந்தத் தானம் பரசுராமரால் செய்யப்பட்டது. பிரமஹத்தி முதலான பெரும் பாவங்களையெல்லாம் அழிக்கத்தக்க இந்தத் துலா புருஷதானத்தைப் பொன்னை கொண்டு செய்வதற்குச் சக்தியற்றவர்கள், வெள்ளி, தேன், நெய், வெல்லம், ஆடையணி முதலிய பொருள்களையாவது துலாவில் (திராசில்) ஏற்றி பொன் தக்ஷிணையுடன் தானம் செய்தால் புகழடைந்து, சுவர்க்கம் முதலான போகங்களை எய்துவார்கள். மனம் வாக்கு காயங்களால் செய்த பாவங்களும் கொலை முதலியவற்றால் நேர்ந்த பாவங்களும் இந்தத் துலா புருஷ தானத்தால் நீங்கி விடும் எந்தப் பாவத்தைச் செய்த போதிலும் துலாபுருஷ தானஞ்செய்தவன் அவற்றிலிருந்து நீங்கிப் பரிசுத்தனாவான் என்பதற்குச் சந்தேகமில்லை. நான் பால்யத்திலாவது இளமையிலாவது முதுமைத்தசையலாவது செய்திருக்கும் பாவங்களையெல்லாம் பொறுத்தருள வேண்டும். துலா புருஷ ரூபமாக இருக்கும் பரமசிவனே! நான் துலாவில் ஏறிப் பொன்னை நிறை காட்டி உம்மை நமஸ்கரிக்கிறேன்! என்று பிரார்த்தித்துப் பல அந்தணோத்தமர்களுக்கு அப்பொருளைத் தானமாக வழங்க வேண்டும். துலா புருஷ தானத்தை ஒரே வேதியனுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி ஒருவனுக்கே கொடுத்தால் பாபம் ஒழியாது. இந்தத் துலா புருஷ தானத்தைச் செய்தேன் பதினான்கு இந்திரப்பட்டம் வரையில் சுவர்க்கலோகத்தில் விருப்பமானவற்றையெல்லாம் அனுபவித்து வாழ்ந்திருப்பான்! இவ்வாறு ஸனத்குமார முனிவர் கூறினார்.
30. பாதாளலோக வர்ணனை
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி ஞானச் செல்வரே! எந்தத் தானத்தைச் செய்வதால் சகல தானங்களையும் செய்த பயனை அடையக்கூடுமோ அந்தத் தானத்தை எனக்காகவும் மானுடர்க்காகவும் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். அதற்கு ஸனத்குமார முனிவர், எல்லாத் தானங்களையும் செய்த பயனை அளிக்கவல்லதும் முக்தியைக் கொடுக்க வல்லதும் சம்சார துக்கத்திலிருந்து கரையேறச் செய்யவல்லதும் ஏழு உலகங்களுக்கும் அதிபனாகச் செய்யத்தக்கதும் சூரிய சந்திராதிகளுள்ள வரையில் சுவர்க்க பதவியில் தன் வமிசத்தாருடன் வாழ்ந்து, பிறகு விஷ்ணு பதவியைப் பெறச் செய்யத் தக்கதாகவும் உள்ளது பிரம்மாண்டதானம்! என்று கூறினார். அதைக் கேட்டதும் வியாசர் பிரம்மாண்டதானம் என்பது எத்தகையது? என்று கேட்டார். வியாசரே! அண்பாண்ட பிரம்மாண்டங்களையும் அவற்றிலுள்ள ஆன்மகோடிகளுடன் படைத்து காத்து துடைக்கும் ஆற்றலுடையவன் சிவபெருமானே என்று தன் ஞானத்தால் உணர்ந்து. யான் எனது என்னும் தற்போதும் ஒழிந்து யாவுஞ் சிவன் செயல் எனக்கொண்டு சுகதுக்கங்களும் கர்மஞானங்களும் அவனாலேயே திருவுளஞ் செய்யப்பட்டனவென்றும் மனத்துடன் உலக வியாபாரமின்றி இறைவனிடத்திலேயே மனதைப் பதித்திருத்தல் பிரமாண்ட தானம் எனப்படும் அத்தகையினர் எல்லாப்போக பாக்கியங்களையும் இம்மை மறுமைப் பயன்களையும் ஐயமின்றி அடைவார்கள்! என்று ஸனத்குமாரர் கூறினார். ஸனத்குமார முனிவரே! பிரமாண்டம் எப்படி உண்டாக்கப்பட்டது? அது யாரால் படைக்கப்பட்டது? அது எவ்வளவு பரப்பளவு வாய்ந்தது? அதற்கு ஆதாரம் என்ன? இவற்றை எனக்கு விளக்கிச் சொல்லவேண்டும்! என்று வியாசர் கேட்டார் ஸனத்குமார முனிவர் கூறலானார்.
வியாசரே! இந்தப் பிரமாண்டத்தின் பரப்பளவையும் உயரத்தையும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். இந்தப் பிரமாண்டத்திற்குக் காரணமாகவும் அவ்யக்தமாயும் அனாமயமாயும் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாயும் எல்லாவற்றிற்கும் லயஸ்தானமாயும் விளங்கும் சிவத்தினின்று ஆகாயம் உண்டாயிற்று. ஆகாயத்திலிருந்து வாயுவும்(காற்றும்) வாயுவிலிருந்து அக்கினியும் (நெருப்பும்) அக்கினியிலிருந்து ஜலமும் (நீரும்) ஜலத்திலிருந்து பிருத்வியும் (நிலமும்) தோன்றின. பஞ்ச பூதாத்மகமான பிரமதேவர் உண்டாகிப் பிரமாண்டத்தைச் சிருஷ்டி செய்தார். அவற்றுள் பாதள லோகங்கள் ஏழு சுவர்க்க லோகங்கள் ஏழு இந்த உலகங்களுக்கு ஆதாரமாக வெண்ணிறமான ஆதிசேஷன் விளங்குவான். அவன் விஷ்ணுவென்று சொல்லப்படுவான். பிரமவாக்கின்படி அந்த ஆதிசேஷன் எல்லா உலகங்களையும் தாங்கி நிற்பான். அந்தச் சேஷனுடைய குணானுபவங்களைத் தேவர் முனிவர் முதலானவர்களாலும் சொல்ல முடியாது. ஆயிரம் தலைகளும் தேவர் முனிவர்களால் செய்யப்படும் பூஜையும் சித்தர்களால் சொல்லப்படும் அனந்தன் என்ற பெயரும் எல்லாத் திக்குகளையும் பிரகாசிக்கச் செய்யும் ஸவஸ்திகா பூஷணம் போன்ற ஆயிரம் பணமுடிகளும் நெருப்புடன் பிரகாசிக்கும் வெண்மலை போலச் சுவாலையோடு சுழன்று கொண்டிருக்கும் ஈராயிரம் விழிகளும் நவமணிகள் இழைத்த கிரீட குண்டலங்களும் திவ்விய மணம் பொருந்திய மலர்மாலைகளும் வெண்ணிற ஹாரமும் நீலநிற ஆடையும் கைலாயகிரி போன்ற உயர்வும் கலப்பை இரும்புலக்கை முதலான ஆயுதங்களும் வருணன் கன்னிகையானவாருண அருகிலிருந்து செய்யும் உபாசனையும் பிரகாசிக்கும் விஷஜ்வாலையும் சங்காஷணாத்மகமும் ருத்திர ரூபமும் பிரளய காலாந்தத்தில் சர்வ லோகங்களையும் தன்னிடத்தில் ஒடுக்கும் வல்லபமும் சகல அண்டங்களையும் ஒரு கடுகு போலச் சுமக்கும் ஆற்றலுடையவனாக விளங்கும் ஆதிசேஷனுடைய உருவத்தை ஒருவராலும் வர்ணிக்க இயலாது அவனது தலை இரத்தினங்களின் மேல் படிந்திருக்கும் பூமியானது அம்மணிகளின் மீது பிரதிபிம்பத்தில் குசுமமாலை போலத் தோற்றமளிக்கும், அந்தச் சேஷன், சோர்வுற்ற காலத்தில் எல்லா மலைகளோடும் உலகம் முழுவதும் அசையும் அது பூகம்பம் எனப்படும் அவனுடைய குண விசேஷங்களைச் சித்தர், முனிவர், கந்தர்வர், உரகர், கின்னரர், யக்ஷர், தைத்திரியர், தானவர் முதலானவர்கள் அறியாதவர்களாகி அனந்தன் என்று சொல்வார்கள்.
அழிவில்லாதவனாக விளங்கும் அந்த ஆதி சேஷன், தன் மார்பில் அணிந்திருக்கும் செஞ்சந்தனதைத்தன் பெருமூச்சினால் பறக்கச் செய்து திக்குகளான மாதர்களை அடையச் செய்யவல்லவன். பலகாலம் தவஞ் செய்த கர்க்கர் அவனிடமிருந்து நிமித்த சாஸ்திரத்தையும் சகலமான ஜோதிஷ சாஸ்திரத்தையும் அடைந்தார். பாதள லோகங்களில் இரத்தின மயமான பூமியும் ரத்தினங்கள் இழைத்த உப்பரிகைகளும் மதில்களும் தங்கம் விளையும் பூமியும் உள்ளன. அங்குதிதி புத்திரர்களான தைத்தியர்களும் நாகராஜர்களும் இராக்ஷஸர்களும் வசிக்கிறார்கள். ஒளி வீசும் இரத்தினங்கள் உள்ள பாதளலோகமானது ஆனந்தத்தை அளவின்றி ஏற்படுத்தும் அதில் அதற்கு இணையான லோகம் கிடையாது. தேவதானவ கன்னிகைகளால் உண்டாகும் மோகத்தை விடுத்த விரக்தனுக்கும் பாதள லோகத்தில் விருப்பம் உண்டாகத் தடையிராது என்று திரிலோக சஞ்சாரியான நாரத பகவான் சுவர்க்க லோக வாசிகளான இந்திரன் முதலான தேவர்களுக்குச் சொல்லியிருக்கிறார் அங்கு பகலில் சூரியவொளியும் இரவில் சந்திரன் ஒளியும் கிடையாது. குளிர்ச்சிவெப்பங்களும் இல்லை இரத்தின ஒளியே இவை யாவுமாக விளங்கும் அங்கு தேவாமிர்கத்திற்கு இணையான பானவகை உணவு வகைகளும் திருப்தியை விளைவிக்கக் கூடிய அன்னபானங்களும் ருதுக்கள் ஆறிலும் புஷ்பிக்கும் மலர் வகைகளும் அம்மலர்களிலுள்ள தேனைப்பருகி ரீங்காரஞ் செய்யும் பொன் மயமான வண்டுகளின் கூட்டங்களும் வைடூரிய மயமான, மரங்களும், அவற்றின் தளிர்களை உண்டு களித்த கோகிலங்களின் குரலோசையும் ஸ்படிகத்தினாற் செய்த படிக்கட்டுகள் நிறைந்த தடாகங்களில் அன்றலர்ந்த பொன்மயமானத் தாமரை மலர்களும், அமிர்தமயமான தண்ணீரைப் பெருக்கும் ஆறுகளும், இரத்தின மயமான நீலாம்பர பீதாம்பரங்களைக் கொடுக்கும் மரங்களும், வஜ்ரகோமேதங்களால் உருவாக்கிய அணிமணிகளை வழங்கும் மலைகளும் வாயாது வாசனை வீசும் மலர்களையும் சந்தனத்தையும் கொடுக்கும் மரங்களும், வீணை, வேணு, மிருதங்கம் முதலிய வாத்தியங்களை எப்போதும் வாசித்துக் கொண்டிருக்கும் நாக கன்னிகைகளும் நிரம்பப் பெற்றுள்ள பாதாள லோகத்தில் ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பினும் அவனுக்குக் காலம் கழிந்ததாகவே தோன்றாது
31. நரகலோக வர்ணனை
வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து அனுபவிக்கும் துன்பங்களையும் சொல்லுகிறேன். ரவுரவம், சூகரம், ரோதம், தாலம், திவசனம் மகரஜ்வாலை தய்தகும்பம்; தப்தலவணம், விலோஹிதம் வைதரிணி; பூபவாதி; கிரமிலம்; கிருமி போஜனம்; அசிபத்ரவனம், லாலாபக்ஷம், அபாயம் வன்னிஜ்வாலை அதசிரசு, ஸந்தம்சம், காலசூத்ரம், தமசு, விசிரோ தனம், ஸ்வபோஜனம், அதிர்ஷ்டம், மஹாரவுரவம், சான்மலி முதலிய நகரங்களில் பாவிகள் சமைக்கப் படுவார்கள், வேதியர் முதலியோருக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொன்னவன் ரவுரவம் என்னும் நரகத்தையும் சிசுஹத்தி செய்தவனும் விசுவாசகாதகனும் சுராபானஞ் செய்தவனும் பிரமஹத்தி செய்தவனும் பொன் திருடியவனும் இப்பாவிகளோடு சிநேகஞ் செய்தவனும் சூகரம் என்னும் நரகத்தையும் ஆசாரியனைக் கொன்றவனும் உடன் பிறந்தாளோடு கூடிக் குலாவியவனும் தாயைக் கூடியனுபவித்தவனும் தப்தகும்பம் என்னும் நரகத்தையும் பதிவிரதைகளைப் பலாத்காரமாகப் புணர்ந்தவனும் தன் நாயகியைப் பிறனிடம் சேர்ப்பித்தவனும் தப்தலோஹம் என்னும் நரகத்தையும் ஆசிரியனை அவமதித்தவனும் தன் தாய் தந்தையர் குழந்தைகள்முதலானோரை வஞ்சித்துப் புசித்தவனும் தெய்வ நிந்தை செய்தவனும் வேதவிக்கிரயஞ் செய்தவனும் சேரத்தகாதப் பெண்களைச் சேர்ந்தவனும் தப்தகலம் என்னும் நரகத்தையும் தர்ம சாஸ்திர விரோதமாக நடந்தவன் அவிசிரோதம் என்னும் நரகத்தையும் தேவர், பிதுரர், முதலானோரைத் துவேஷித்தவனும், இரத்தினங்களைக் குறைத்து மதித்தவனும் புனிதமான இரத்தினங்களுக்குத் தோஷஞ் சொன்னவனும், தேவர், பிதுரர் முதலானோருக்கு நிவேதியாமல் தின்றவனும், லாலாபக்ஷம் என்னும் நரகத்தையும் அன்னபானங்களில் விஷம் கலந்து கொடுத்தவன் விச்சனம் என்னும் நரகத்தையும் அசத்தியவான்களோடு சிநேகித்தவனும் புசிக்கத் தகாதவற்றைப் புசித்தவனும் யாகஞ் செய்ய அருகதை அல்லாதாருக்கு யாகஞ் செய்வித்தவனும் யாகத்தில் செய்யும் ஸோம விக்ரயணம் என்னும் தானத்தை வாங்கியவனும் ருதிராந்தம் என்னும் நரகத்தையும் நண்பனைக் கொன்றவனும், மதுவைக் காரணமின்றி விரும்பியபோதெல்லாம் பருகியவனும், வாலிபத்தால் மத்தனாகித் தர்மசாஸ்திர விரோதமாக நடந்தவனும், தன் ஜீவன மார்க்கத்தை விட்டுக் கபடமார்க்கமாக ஜீவித்தவனும் வைதரிணி நரகத்தையும் மிருகங்களை இம்சிப்பவனும் வீடு முதலியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியவனும் வன்னி ஜ்வாலை என்னும் நரகத்தையும் தனது ஆஸ்ரம தருமத்தை விடுத்தவனும் பிறருடைய விரதங்களைக் கொடுத்தவனும் சந்தம்ஸம் என்னும் நரகத்தையும் பகற்காலத்தில் ரேதஸ்கவனஞ் செய்தவன் ஸ்வபோஜனம் என்னும் நரகத்தையும் அடைந்து பற்பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.
இத்தகைய நரகங்கள் அநேகம் உள்ளன. வர்ணாசிரமங்களுக்கும் தர்ம சாஸ்திரத்திற்கும் விரோதமாய் மனவாக்கு காயங்களால் பாவஞ்செய்தவர்கள் யாவரும் தலைகீழாகக் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். அந்த நரகவாசிகள் ஒரு காலத்திலும் தேவர்களைப் பார்ப்பதில்லை. அத்தகைய நரகங்களை அனுபவித்த பிறகு மரம் பறவை, மிருகங்களாகப் பிறப்பார்கள். தர்ம சாஸ்திரத்தில் கூறியபடி நடந்தவர்கள் சுவர்க்க போகத்தை அனுபவித்து நல்ல பிறவியை அடைந்து முறையாக முக்திநிலை அடைவார்கள். எவ்வளவு புண்ணியர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்ளோ அவ்வளவு பாவிகள் நரகத்தில் இருக்கிறார்கள். எந்தப் பாவத்தை புத்தியில்லாமல் செய்து விட்ட போதிலும் அந்தப் பாவத்திற்குத் தக்கபடி சுலபமாகவும் கஷ்டமாகவும் பிராய்ச்சித்தங்கள் மநுவாதி பெரியோரால் கூறப்பட்ட ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருப்பினும் அவற்றைச் செய்து தங்கள் பாவத்தை விலக்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இவ்வாறு நரகலோகத்தை அடைந்து கஷ்டங்களை அனுபவிப்பார்கள். பிராயச்சித்தங்களைச் செய்து கொள்ளச் சக்தியில்லாவிட்டால். நாம் பாவஞ் செய்தோமே என்னும் உணர்வுடன் சிவபெருமானை நோக்கித் தன் பாவங்களைப் போக்குமாறு காலை, உச்சி மாலைகளில் சிவஸ்மரணை செய்து கொண்டிருந்தால் அவை ஒழியும் என்னும் பாவ நீக்கத்தினாலும் புண்ணியப் பிராப்தியினாலும் சுவர்க்கத்தை அடைவார்கள் என்னும் வேதங்கள் கூறுகின்றன. ஜபம், ஹோமம், தியானம், முதலியவற்றால் சிவபெருமானையே தோத்திரஞ் செய்பவன் சர்வகர்ம பந்தங்களையும் ஒழித்து, தேவேந்திராதி போகங்களை அனுபவித்துச் சிவஞானத்தை அடைவான். சிவபக்தி உள்ளவனுக்கு ஒரு காலத்திலும் நரகம் என்பது சித்திக்க மாட்டாது.
வியாச முனிவரே சுகத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக இருப்பது மனம். ஆகையால் அதைச் சிவபெருமானிடமே நிறுத்தித் தியானித்தால் பிரமஞானம் உண்டாகும். அந்த ஞானமே பிரப்பிரமம்! ஞானமே தத்துவ சொரூபம் ஞானமே சராசராத்மகமான ஜகத்ரூபம் ஆகையால் ஞானத்தைவிடச் சிறந்தது வேறொன்றில்லை சிவ ஞானத்தை அடைந்து முக்தி நிலை எய்துவதற்கு இதுவே வழியாகும். பாதாளத்தின் மேலுள்ள நரகலோகம் இத்தகையதாகும். அதற்கும் மேலுள்ள பூவுலகத்தின் விபரத்தைச் சொல்லுகிறேன் கேளும்.
32. பூமண்டல வர்ணனை
வியாச முனிவரே பூ மண்டலத்தின் விஸ்தீரணத்தைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அது ஜம்புத்தீவு பலக்ஷத்தீவு சான்மலித் தீவு சூசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, புஷ்கரத்தீவு சாகத்தீவு என்ற ஏழு தீவுகளாய் உவர்நீர்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், தேன்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்த நீர்க்கடல் என்னும் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன. அவற்றில் ஜம்புத்தீவு எல்லாத் தீவுகளுக்கும் நடுவில் உள்ளது. அதன் மத்தியில் பொன்மயமான மேருபர்வதம் பூமியில் பதினாயிரம் யோசனை வேரூன்றியும் எண்பத்து நான்காயிரம் யோசனை உயர்ந்தும் உள்ளது. மேருமலையானது பூமியான தாமரை மலருக்கு ஒரு மொட்டுப் போல விளங்கும் இமாசலம் ஹேமகூடம் நிஷதம் என்னும் மூன்று மலைகளும் மேருவின் தென் திசையிலும், நீலம் ஸ்வேதம், சிருங்கி என்னும் மூன்று பர்வதங்களும் மேருவின்வட திசையிலும் பதினாயிரம் யோசனை அகலமும் இருபதினாயிரம் யோசனை உயரமும் நவரத்தினமயமான சாரலும் பதுமராக மணியைப் போன்ற செந்நிறமும் அக்னிஜ்வாலையைப் போன்ற பிரகாசமும் கொண்டு விளங்குகின்றன. மேருவின் தெற்குப் பக்கத்தில் பாரதம். கிம்புருஷம்
ஹரிவர்ஷம் என்னும் மூன்று நாடுகள் உண்டு வடக்குப் பக்கத்தில் ரம்யகம், ஹிரண்மயம் உத்தரகுரு என்னும் மூன்று நாடுகள் உண்டு இவ்வர்ஷங்கள் ஒவ்வொன்றும் ஒன்பதாயிரம் யோசனை பரப்பளவு உள்ளவை நடுவிலுள்ள இளாவிரத கண்டத்தின் மத்தியில் மேருமலை மிகவும் உன்னதமாக இருக்கும். மேருவின் கிழக்கில் மந்திரமும் தெற்கில் கந்தமாதனமும் மேற்கில் விபுலமும் வடக்கில் சுபார்ஸ்வமும் ஆக நான்கு மலைகள் நான்கு புறங்களிலும் நின்று பதினாயிரம் யோசனை அகலமும் ஒன்பதாயிரம் யோசனை உயரமுங் கொண்டு அம்மேருவுக்கு உறுதியாக கவிட்கம் பசைலங்களாக நிற்கின்றன. இம்மலைகளும் மந்திரகிரியில்கடப்பமரமும் கந்தமாதனகிரியில் ஜம்பு விருக்ஷமும் விபுலகிரியில் அரச விருக்ஷமும் சுபார்சுவகிரியில் ஆல மரமும் விளங்கும். இம் மரங்கள் ஆயிரம் யோசனை விஸ்தீரண முடையன். நாவல் மரத்தினாலேயே இத்தீபத்திற்கு ஜம்புத்தீவு(நாவலந்தீவு) என்று பெயர் அம்மரத்தின் பழங்கள் ஒவ்வொன்றும் யானையைப் போன்ற உருவமுடையனவாய்ப் பழுத்து நிலத்தின் மீது விழுந்து, அப் பழச்சாற்றிலிருந்து பெருகும் ஆறாகிய ஜம்புநதியாகிறது அதன் சாரத்தை அருந்துவோர் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள். அந்த நதி தீரத்தில் உள்ள மண் பொன் மயமாக வல்லது மேருவுக்குக்கிழக்கே பத்ராசுவமும் மேற்கே கதுமாலமும் உள்ளன. அவற்றிற்கு இடையிலேதான் இளாவிரத கண்டம் உள்ளது. கிழக்கில் மந்தர மலையின் அடியில் அருணமும் தெற்கில் கந்தமாதனத்தின் அடியில் மானதசரசும் மேற்கில் விபுலகிரியின் அடியில் சீதோதமும் வடக்கில் சுபார் சுவகிரியினடியில் மகாமடுவும் என நான்கும் மடுக்கள் உண்டு இந்த மடுக்களில் முறையே சுமித்திரக்கா விசித்திரை, வைப்பிரசை, திருதாக்கியம் என்னும் நான்கு நந்தன வனங்கள் உண்டு. இந்த நந்தன வனங்களின் நடுவில் முறையே தாமரை மலருடன் கூடிய தடாகமும் குமுதங்களுடன் கூடிய மானதசரசும் செந்தாமரையுடன் கூடிய விமலோதகமும் நீலோற்பலத்துடன் கூடிய மனோரதமும் என நான்கு ஓடைகளுண்டு நீதரஞ்சனம் குமுத குரர ஹாமால்யவான் என்ற மலைகள்(பர்வதங்கள்) பூர்வ பாகத்திலும் கேசர பர்வதம் தக்ஷிணபாகத்திலும், திரிகூடம், சிரம், பதகம், ரஜதம், நிஷதம் என்பவை தக்ஷிணபாகத்திலும் இருக்கின்றன. மேற்புறத்தில் சிசிவாசசு வைதூரியம் கபிலம், கந்தமாதனம், ஜாருதி, என்னும் பர்வதங்களும் வடபாகத்தில் சங்க சூடம், ரிஷபம், ஹம்சம் காலஞ்சரம் என்னும் பர்வதகேசரங்கள் உள்ளன.
இந்த மேருமலையின் உச்சியில் பதினாலாயிரம் யோசனை பரப்போடு விளங்குவது பிரமலோகம் உள்ளன. இதைச்சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்களின் உலகங்கள் அந்தப் பிரமலோகத்தின் எட்டுத் திக்குகளிலும் சந்திர மண்டலம் பிரகாசிக்கிறது. திருமாலின் திருவடியில் தோன்றிய கங்கை நதியானது அவ்விடத்தில் சீதை என்றும் அலகநந்தா என்றும் சுசுக்ஷõசு என்றும் பத்ரா என்றும் நான்கு திக்குகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சீதை என்னும் நதி கிழக்கிலும், அலக நந்தாநதி தென் திசையிலும் சுசுக்ஷõசு என்னும் நதிமேற்கிலும் பத்ரா நதி வடதிக்கிலும், பிரவாகித்து மலைகளை அதிக்கிரமித்து, கடலை அடைகின்றன. சுநீலம் நிஷதம் மாலியவான் கந்தமா தனம் என்ற நான்கு மலைகள், தாமரை மொட்டுப் போன்ற மேருமலையின் நாற்புறத்திலும் உள்ளன. பரதம், கேதுமாலம், பத்ராசுவம் குரு என்னும் நான்கு வர்ஷங்கள் மேருவாகிய தாமரைக்கு இதழ்கள் போலுள்ளன. இதன் நடுவில் தேவகூடமும் தென்னண்டை கந்தமாதனமும் வடவண்டைகைலாயமும் முறையே கீழ்மேல் பாகங்களில் நிஷத நீல பர்வதங்களும் மேருவின் நான்குபுறத்துச் சிகரங்களின் ஒவ்வொரு பாகத்திலும் இரண்டு கேசர பர்வதங்களும் இருக்கின்றன. அதில் சைலத்துரோணி என்ற ஓர் ஓடையுண்டு, அதைச் சுற்றிலும் மனரம்மியமான மலர்கள் பூத்திருக்கும். நந்தவனங்களும் காடுகளும் மற்றவையுமுள்ளன. அக்காடுகளில் எப்போதும் யக்ஷர்களும் கின்னரர்களும் கந்தர்வர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பூலோகச் சுவர்க்கம் என்ற பெயருண்டு தர்மஞ் செய்தவர்கள் அந்த லோகத்தில் சுகத்தை அனுபவிப்பார்கள் அதைப் பாவிகளோ பார்க்கவும் அடையவும் இயலாது. கிம்புருஷாதி எட்டு வர்ஷங்களில் வசிப்பவர்களுக்கு கோபம், துக்கம், அயர்வு, துவேஷம், பசி, தாகம், பயம்; சோம்பல் முதலியன கிடையாது. எப்போதும் நோயற்ற உடலும் துக்கமில்லாமையும் இருபத்திரண்டாயிரம் ஆயுளும் அடைவார்கள். கிருதம் திரேதம் என்னும் இரண்டு நதிகள் அந்த பூமியில் பாய்ந்து கொண்டிருப்பதால் மழை பெய்வதில்லை. அப்பூமியில் போகம் அளவிடப்பட்டுள்ளது. அதிகமாக அனுபவிக்க முயன்றாலும் பயன்படாது. அப்பூமியின் நதிதீரத்திலுள்ள மணற்பாகங்கள் பொன்னிறமாகவும் மலர்கள் பொன்னிறமாகவும் கரைப்புறம் இரத்தின மயமாகவும் வைடூரியமயமான பசும்புல்லும் உள்ள திட்டுக்களுமாக விளங்குவதால் அங்குள்ளவர்கள் விளையாடிப்பொழுது போக்குவார்கள்.
33. பாரத வர்ஷம்
வியாசரே! இனி, இமயமலையின் தென்பாகத்திலுள்ள பாரத வர்ஷத்தின் பரப்பைச் சொல்கிறேன். பாரத வர்ஷம் ஒன்பதாயிரம் யோசனை பரப்பளவுடையது. இதற்குக் கர்மபூமி என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்கு புண்ணியம் செய்தவர்கள் புண்ணியபூமியான தேவ லோகத்தையும் பாவஞ் செய்தவர்கள் நரகத்தையும் ஞானிகள் மோட்சத்தையும் அடைவார்கள். இப்பாரத வர்ஷமானது நவகண்டங்களாகப் பிரிக்கப்பட்டு இந்திரத்திம்னம் சுசேரு, தாமிரபர்ணம், சுபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்தீபம், காந்தர்வம், வாருணம், பரதம், என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றன. ஒன்பதாவதான பரதக்கண்டமானது. நான்கு சமுத்திரங்களால் சூழப்பட்டும், வடக்குத் தெற்கில் ஆயிரம் யோசனை விஸ்தீரணத்தோடு கூடியதாகவும் இருக்கும். இக்கண்டத்தின் கிழக்கே, கிராதர்களும் மேற்கில் யவனர்களும் தக்ஷிணபாகத்தில் ஆந்திரரும் வடக்கில் துருஷ்கரும் வசிக்கிறார்கள். இக்கண்டத்தின் நடுவில் பிராமண க்ஷத்திரிய, வைசிய சூத்திரர் என்னும் நான்கு வர்ணத்தோர்கள் கோடானு கோடியாக வசிக்கிறார்கள். இவர்கள் அஸ்வமேதாதி யாகங்களாலும் புண்யத் தீர்த்த ஸ்நானங்களாலும் தேவதாப் பிரதிஷ்டைகளாலும் கோதானம் முதலிய தானங்களாலும் நற்கதி அடைகிறார்கள். இந்தப் பூமியில் மஹோந்திரம், மலயம் சஹ்யம் சுக்திமான். ரிஷம், விந்தியம் பாரியாத்திரம் என்ற ஏழு குல பர்வதங்கள் (மலைகள்) இருக்கின்றன. வேதஸ்மிருதி நர்மதை சுரஸங் என்ற நதிகள் பாரியாத்திரம் என்னும் மலையில் உற்பத்தியாகி, நான்கு புறத்தினும் பரவி, இப்பூமியைப் பரிசுத்தம் செய்கிறது. விந்திய மலையிலிருந்து கோதாவரி, பீமாதி தாபி முதலிய மகாநதிகள் தோன்றி, தங்களிடம் ஸ்நானபானம் செய்பவர்களின் பாவங்களைப் போக்கித் தூய்மைப் படுத்துகின்றன கிருஷ்ணவேணி காவேரி முதலான நதிகள் சஹ்ய பர்வதத்தில் தோன்றி, தென்னாட்டைத் தூய்மை பெறச் செய்கின்றன. கிருதமாலா தாம்பிரபர்ணி முதலியநதிகள் மலயமலையில் தோன்றி அவ்விடங்களைச் சுத்தம் செய்கின்றன. குமாரி என்னும் நதி சுத்திமான் என்னும் பர்வதத்தில் உண்டாகிறது.
இப்பூமியில் நான்கு வருணத்தாகும் ஸ்நானபானங்களைச் செய்து சுகத்தையும் பரிசுத்தத்தையும் அடைகிறார்கள். இந்தக் கண்டத்தில் நான்கு யுகங்கள் உண்டு. மற்ற தீபங்களில் இத்தகைய யுகங்கள் இல்லை. இந்தப் பரத கண்டத்திலுள்ள ஜம்புத்வீபமானது. கரும பூமியாகையால் இதிலுள்ள ஜனங்கள் கோதானம் முதலிய தானங்களையும் அக்னிஹோத்திரம் முதலிய சத்கர்மங்களையும் தவம் முதலான யோகங்களையும் செய்து நற்கதியடைகிறார்கள். ஒன்பது வகை வருஷங்களுள் பாரத வருஷமே சிறந்தது. மற்றவைகள் யாவும் போகபூமிகளேயன்றிப் புண்ணியஞ்செய்து நற்கதி அடையத் தக்கவையல்ல. ஆகையால் பிறவிகள் பலவாகத் தோன்றினாலும் இப்பரத கண்டத்தில் ஒரு பிறவி எடுப்பது அருமையிலும் அருமையாகும். சுவர்க்க மோக்ஷங்களையடையக் காரணமாக இருப்பது இந்தப் பரத கண்டமாகையால் தன்னியர்களாக இருக்கும் தேவர்களும் இந்தப் புண்ணிய பூமியில் தோன்றினால் மறுபடியும் தேவாம்சமடையலாம் என்று விரும்புகிறார்கள். இவர்கள் இந்தப் பூமியில் தோன்றிச் சிவபெருமானைத் தியானித்து உயர்பதவி அடைகிறார்கள். ஆகையால் இப்பரத கண்டத்தில் தோன்றி ஈசனைத் தியானித்துப் பதவியடைவதை விட உன்னதமானது வேறின்மையால் இதுவே மேலானது. இப்பரதகண்டம் முப்பத்து நாலாயிரம் யோசனை விஸ்தீரணம் உடையதாய் உவர்நீர்க்கடல் இலட்சம் யோசனை விஸ்தீரண முடையதாய் ஜம்புத்தீபத்தை சூழ்ந்திருக்கும். இதற்கு இரட்டிப்பாக இருப்பது பலலட்சத்தீபம் அதில் கோமேதகம் சந்தரம் நாரதம் துந்துபி சோமகம் கமனஸ் விப்பிரராஜம் என்னும் வர்ஷமலைகளுள்ளன அப்பர்வதங்களில் எப்போதும் தேவர், கந்தர்வர் மகிழ்ச்சியுடன் வசிப்பார்கள். அங்குதப்தாசிகா கந்தர்வர் மகிழ்ச்சியுடன் வசிப்பவர்கள். அங்குப்தாசிகா பாபக்னி த்ருதிவா, கிருபா அமிருதா சுகிர்தா என்னும் ஏழு நதிகள் பாயும் அநேகம் சிறு நதிகளும் உள்ளன. அங்குள்ளவருக்கு மனோவியாதி தேகபீடை முதலியன இல்லை. அந்த நதிகளில் நீராடி அதன் நீரைப் பருகினோர் பதினாயிரம் ஆண்டு காலம் ஜீவித்திருப்பார்கள். அவ்விடத்தில் ஜம்புத்தீவைப் போல யுகாவஸ்தை இல்லை எப்போதும் திரேதாயுகத்திற்குச் சமமாகவே இருக்கும். அந்தணர் முதலான நான்கு வர்ணத்தாரும் இருக்கின்றனர் பிலக்ஷத்தீவு என்னும் பெயர் அவ்விருக்ஷணத்தினாலேயே உண்டாயிற்று. அவ்விடத்தில் சங்கரரையும் திருமாலையும் பிரமதேவரையும் வேதமந்திரங்களால் பூஜிக்கிறார்கள். இது கருப்பஞ்சாற்றுக் கடலால் சூழப்பட்டிருக்கும்.
அதற்குப்பின் சான்மலித்தீபத்தில் ஸ்வேதம் ஹரிதம், கீமுதம் ரோஹிதம் வைத்யுதம் மானவம் சுப்பிரபம் என்னும் ஏழு வர்ஷ பர்வதங்கள் இருக்கின்றன. சான்மலி என்னும் பெயர் அங்குள்ள அந்த மரத்தினாலேயே உண்டாயிற்று. அதற்கு இரட்டிப்பாக சுறாக்கடல் சூழ்ந்திருக்கும் சுக்லா, ரக்தா, ஹிரண்யா , சுந்த்ரா, சுக்ரா, விமோசனா நிவர்த்தி என்னும் ஏழு நதிகள் அவ்வர்ஷங்களில் உண்டாகின்றன. அப்பூமியில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். அவர்கள் யக்ஞம் முதலியவற்றால் விஷ்ணுவை வணங்குவார்கள். அங்கு தேவர்கள் உல்லாசமாக வசிப்பார்கள் அதற்கு இரட்டிப்பாகிய குசத் வீபத்தில் நான்கு வர்ணத்தார்களும் வாழ்வார்கள். ஆசார அனுஷ்டானங்களில் தவறமாட்டார்கள். சிவபெருமானையும் திருமாலையும் வழிபடுவார்கள் குசேசயம், ஹரிஜுதிமான் புஷ்பவான பர்வதம் மணித்ருமம் மஹாசைலம் மந்திராசலம் என்னும் ஏழு மலைகளும் தூதபாவை சிவை பவித்ரை சம்மதிவித்யை தம்பா, மஹி என்னும் ஏழுநதிகளும் மேலும் பல ஆறுகளும் இருக்கின்றன. அங்குள்ள குசையினாலே இது அப்பெயர் பெற்றது. இதை நெய்க்கடல் சூழ்ந்திருக்கும். அதற்கு இரட்டிப்பாகித் தயிர்க்கடலால் சூழப்பட்ட கிரவுஞ்சதீபமோ, கிரவுஞ்சம், வாமனம், அந்தகாரம் திவாவிருத்யம் புண்டரீகம் துந்துபி, கமனனம் என்னும் ஏழுமலைகளும் பலவிதமான மரங்களும் மலர்வனங்களும் தேவகந்தர்வர்களும் நான்கு வர்ணாத்தார்களும் நோயில்லாத வாழ்க்கையும் கொண்டதாக விளங்கும் கவுரி, குமுதவதி சந்தியா ராதரீ மனோஜலா, கியாதி, புண்டரீகா என்னும் ஏழு நதிகள் உண்டு. இங்குள்ளவர்கள் சிவபெருமானை யோக மார்க்கத்தால் தியானிக்கிறார்கள்.
அதற்கு இரட்டிப்பாகிய க்ஷீரசமுத்திரத்தால் சூழப்பட்ட சாகத்தீவானது உதயகிரி, ஜலதராம், பரேதா, சாமம் அஸ்தகிரி, அம்பிகாகிரி, கேசரி என்னும் ஏழுமலைகளைக் கொண்டது. நான்கு வர்ணத்தாரும் அங்குள்ளனர். சுகுமாரி, குமாரி, நளினா, வேணுகா, இக்ஷú, ரேணுகா, கபஸ்தி என்னும் ஏழுநதிகளும் அநேக மலைகளும் நதிகளும் உள்ளன. அங்குள்ளவர்கள் தர்மவான்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் சூரியனையே எப்போதும் யாகாதி கர்மங்களால் வழிபடுவார்கள். அதற்கு இரட்டிப்பாகிய புஷ்கரத்தீவானது மானதசரசு என்ற ஆயிரம் யோசனை விஸ்தீரணமுள்ளத் தடாகத்தையும் அதில் தாமரை மலர்கள் ஐந்து யோசனை உயர்ந்தும் இருக்கும். அங்குள்ளோர் இராகத்வேஷாதிகளும் உத்தமோத்தம் பேதமும் இன்றிச் சத்தியவான்களாய் பொன்மயமான அலங்காரத்தோடு ஜுரம் முதலான ரோகங்களின்றி பதினாயிரம் வருஷம் வாழ்வார்கள். அது சுகமான இடம் புஷ்கரம் தாதகி கண்டம் மகாவீதம் நியக்ரோதம் என்னும் இடங்களில் தேவர்களால் பூசிக்கப்பட்டவராய் பிரமதேவர் எழுந்தருளியிருப்பார். அது சுத்த நீர்க்கடலால் சூழப்பட்டிருக்கும். இவ்வாறு சப்த சமுத்திரங்களால் (ஏழுகடல்களால்) சூழப்பட்டிருப்பவை சப்த தீவுகளாகும். கடல் நீர் சந்திரன் விருத்தியாகையால் விருத்தியாகி சந்திரன் குறையும்போது குறைந்து விடும். சமுத்திரத்திலுள்ள வடமுகாக்கினி அந்த ஜலப்பெருக்கை பருகிவிடும் புஷ்கரத் தீவில் உள்ளவர்கள் அறுசுவையுடன் கூடிய அன்னபானம் முதலானவற்றையே அருந்துவார்கள். சுத்த நீர்க் கடலுக்குப் புறம்பே. உலகங்கள் இல்லை பிராணிகளுமில்லை ஆயினும் பொன்னிறமான பூமி அதற்கு இரட்டிப்பு விரிவாக ஆயிரம் யோசனை உயரமாக இருக்கும் அதற்கு அப்பால் அண்டச்சுவர் உள்ளது. அதுவரையிலுந்தான் பூமி இந்த ஏழு தீவுகளும் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணமாம். இதுவே எல்லாப் பிரணாகிகளுக்கும் ஆதார காரணமாக விளங்கும்.
34. மிருத்யுஞ்சய மந்திரம்
வியாச முனிவரே! சூரிய சந்திரரின் கிரணங்கள் செல்லும் எல்லையும் பூலோகம் என்று வழங்கப்படும். சந்திர மண்டலமானது பூமியிலிருந்து லக்ஷயோசனை உயரத்திலும் சூரிய மண்டலமானது அதன் மேல் லக்ஷயோசனை உயரத்திலும் அதன் மேல் கிரஹ மண்டலமும் நக்ஷத்திர மண்டலமும் புதனும், சுக்கிரனும் அங்காரகனும் பிரகஸ்பதியும் சனியும் அதன்மேல் சப்த ரிஷிகளின் மண்டலமும், அதன் மேல் லக்ஷயோசனை தொலைவில் ஜோதி சக்கரமுள்ள துருவ மண்டலமும் உள்ளன. இதுவரை மூன்று உலகங்களும் கோடி யோசனையுமாயின. அதன்மேல் மஹாலோகம் அதில் சநகர், சநந்தனர், சநாதனர்கபிலர் ஆசரி, ஓட வஞ்சசிக என்னும் வேதியர் எழுவர். அநேகசத்புருஷர்கள் பணி செய்ய வாழ்ந்திருப்பார்கள். அதன்மேல் ஜனலோகம்! அங்கே வைராஜர் என்னும் தேவர்கள் பசிதாகமின்றி வாழ்வார்கள். அதன்மேல் தபோலோகம் அங்கே தேவர்களும் தவவேதியர்களும் வசிப்பார்கள் அதன்பேரில் பிரமலோகம், அங்குள்ளவர்கள் நிர்மலமான மனமும் தர்மத்தில் விருப்பமும் ஞானமும் புலனடக்கமும் சத்தியமே நித்தியம் என்னும் சிந்தையும் உடையவர்கள். இவ்வகையாக மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் உமக்குச் சொன்னேன். இதுவே இந்த அண்டத்தின் விஸ்தீரணம் இவ்வண்டகடாகத்தில் பத்துப் பங்கு தண்ணீரும் பத்துப் பங்கு அக்கினியும்(நெருப்பும்) பத்துப் பங்கு வாயுவும்(காற்றும்) பத்துப் பங்கு ஆகாயமும் பத்துப் பங்கு பிராணிகளாயும் இருக்கும். இவ்வண்டத்திற்கு முதன்மையான புருஷர் சிவபெருமான்! அவர் ஆதியந்தமற்றவராகவும் அளவிடப்படாத பிரபாவத்தையுமுடைய அநந்தராகவும் எல்லாவற்றிற்கும் ஆதார பூதராகவும் விளங்குவார் அவரிடத்தினின்றும் அநேக கோடி அண்டங்கள் உண்டாயின. விறகில் நெருப்பும், பாலில் நெய்யும், எள்ளில் எண்ணையும் விளங்குவது போல எல்லா உயிர்களிலும் சிவபெருமானே உள்ளுறைப்பூதமாக விளங்குவார். சராசராத்மகம் என்ற விருக்ஷங்களுக்கு விதையாக இருக்கின்றனர். அந்த இறைவனிடமிருந்தே, மனம், புத்தி சித்தம் அகங்காரம் முதலியன தோன்றும். அவருடைய இச்சையில் மூலப்ரகிருதி தோன்றி, சிவபெருமானிடமிருந்து ஜகத்து உண்டாகிறது. சிவசக்தி சிவங்களின் ஐக்கியத்தில் எல்லாத் தேவமானுடகதி பேதங்களும் கர்மங்களும் உண்டாகும். சிவபெருமானே, திரிமூர்த்தி ஸ்வரூபமாக இருந்து சிருஷ்டி முதலான காரியங்களை நடத்துகிறார். எவரிடத்திலிருந்து உலகங்களனைத்தும் தோன்றி எவரிடத்தில் லயமடையுமோ எவர் சர்வத்துக்கும் காரணரோ அவரே சிவபெருமான்!
இவ்வாறு ஸநத்குமாரர் கூறியதாகச் சூதமுனிவர் சொன்னார். அவரை நோக்கி நைமிசாரண்ய முனிவர்கள் சூதமுனிவரே சிவபெருமானுக்கு அத்யந்தப் பிரியமாகவும் சகல சாஸ்திர இரகசியமாகவும் தர்மார்த்த காமமோக்ஷம் ஆகிய புருஷார்த்தங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறுகள்) ஆகிய புருஷார்த்தங்கள், நான்கையும் கொடுக்கவல்லதுமான ஷடாட்க்ஷர மந்திரத்தைப் பூர்வத்தில் கேட்டு மகிழ்ந்தோம். இன்னும் சிவத்திற்குப் பிரியமாயும் அஷ்டமாசித்திகளை அளிக்கத் தக்கதாயும் உள்ள எந்த மந்திரத்தால் மாண்டவ்யர் முதலான மாபெரும் முனிவர்களெல்லாம் தேவத்வத்தை அடைந்தார்களோ, அந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு சூதபுராணிகர் கூறலானார்.
நைமிசாரணிய முனிவர்களே! முன்பொரு சமயம் பரமசிவனார், குமாரக் கடவுளுக்கு உபதேசித்த மந்திரத்தையும் அதன் மான்மியத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள். அந்த மந்திரத்துவக்கத்தில் பிரணவத்தை உச்சரிக்க வேண்டும். அகாராதி கணங்களில் மூன்றாவதாகிய சகணத்தன் மூன்றாவது அக்ஷரமாகிய ஜ என்னும் எழுத்தைப் பஞ்சம சுரமாகிய உகாரத்தோடு கூட்டி இறுதியில் பிந்துவாகிய பூர்ணானுசுவரம் (மகாரம்) சேர்த்தும், எட்டாவது ஸவர்க்கத்தில் மூன்றாவது அக்ஷரமாகிய ஸ என்னும் எழுத்தை, இரண்டு பிந்துக்களுடன் கூட்டி இவ்விரண்டு எழுத்துக்களுக்கும் பிரணவத்திற்கும் மத்தியல் ஹவும் என்னும் பீஜாக்ஷரத்தைக் கூட்டி ஜபிக்க வேண்டும். இதுவே மிருத்யுஞ்சய மந்திரம். இது சிவபெருமானுக்கு ப்ரீதியானதும் சர்வசித்தியையும் கொடுக்கவல்லதுமாகும் பிரமஹத்தி, பிறன்மகளிர் கல்வி சுராபானஞ் செய்தல் பொன் திருடல், சிசுஹத்தி, குருபத்தினியைக் கலத்தல், நம்பிக்கைத் துரோகம், ஆசிரியரைக் கொல்லுதல், தாய் தந்தை, மாதர் முதலியோரைக் கொல்லுதல், முதலான் பாதங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க அக்கினியில் அகப்பட்ட இலவம் பஞ்சு போலச் சாம்பலாகிவிடும் ஒருவன் இந்த மந்திரத்தைப் பக்தி பூர்வமாக நூறுமுறை ஜபித்துச் சிவபெருமானின் சிரசில் ஒரு மலரையாவது சமர்ப்பித்தால் கோடி முறை இந்த மந்திர ஜபஞ் செய்த பயனை அடைவான். இம்மந்திரத்தை நாள்தோறும் முக்காலங்களிலும் நூறு தடவைக்குக் குறையாமல் ஜபித்தால் ஜபிப்பவனுக்கு ஒருகாலமும் அபமிருத்யு (துர்மரணம்) அடைகிறதில்லை. இந்த மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அங்க நியாச கரநியாச நியமத்தோடு ஜபித்தால் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களைப் போக்கிச் சிவசாயுஜ்யத்தை அடையலாம். அன்றியும் புலி திருடர் குஷ்டநோய், பேய்கள் ஜ்வரம் முதலியவற்றால் தொந்தரவடையும் காலத்திலும் இதை உச்சரித்தால், அப்பயங்கள் நீங்குவதோடு போர்முனைகளிலும் பகைவரை அழித்து வெற்றி பெறுவார்கள். பலவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இதை இரவு பகலாக இடைவிடாது மானசீகமாக ஜபித்தவர்கள் அத்துன்பங்களிலிருந்து நீங்கித் தங்கள் இஷ்ட சித்திகளை யெல்லாம் அடைவார்கள். தம் மனைவியுடன் கூடி உலக நடையில் இருப்பவனாயினும் இதற்குரிய மிருத்யுஞ்சய மந்திரத்தினால் இந்த மந்திர ஜபஞ் செய்வானாயின் எல்லாக் கோரிக்கைகளும் ஈடேறப் பெறுவான் இம்மந்திர ஜபம் செய்வோன் பிரமசரியம், உபவாசம், மவுனவிரதம் முதலியவற்றை அனுஷ்டிக்க வேண்டியதில்லை. கும்பமுத்திரை காட்டி சுகாசனத்திலிருந்து தன் இதயமாகிய சஹஸ்ர தள கமலத்தில் எழுந்தருளியுள்ள சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை இந்த மந்திரத்தால் தியானித்து மானசீகமாக ஒரு வருஷகாலம் தியான யோகத்திலிருந்தவன் அஷ்டமாசித்திகளையும் திவ்விய தேகத்தையும் சர்வக்ஞத்துவத்தையும் நீங்காத ஆனந்தத்தையும் ஆகாயமார்க்கத்தில் சஞ்சரிக்கும் படியான யோக்யத்தையும், பரமசிவத்தைக் பிரத்யக்ஷமாகத் தரிசிக்கும் சித்தியையும் அடைகிறான். இதை ஆதியில் பரமசிவன் உமாமகேஸ்வரிக்கும் சுப்பிரமணியருக்கும் சுப்பிரமண்யர், நந்திக்கும் அவர் ஸநத்குமார முனிவருக்கும் அவர் வியாச முனிவருக்கும் சொன்னதை நான் உங்களுக்கச் சொன்னேன் இந்த மந்திரத்தை அகஸ்தியர் முதலிய முனிவர்களெல்லாம் தியானித்து, பிணி மூப்பு முதலிய நீங்கியிருந்தார்கள்!
35. மிருத்யுஞ்சய பிரபாவம்
நைமிசாரணிய வாசிகளே! மந்திர ராஜமான மிருத்யுஞ்சய மந்திரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன். முன்பு ஒரு காலத்தில் இந்த விஷயத்தைப் பற்றி அனைத்துலக அன்னையான உமாதேவி சிவபெருமானிடம் கேட்கச் சிவபெருமான் பார்வதிதேவியை நோக்கிக் கூறியதாவது. உமையே! ஸத்யோஜாதாதி ஐந்து திருமுகங்களுடன் கூடிய என்னைச் சிருஷ்டிக் கிரமத்தாலாவது சங்காரக்கிரமத்தாலாவது மிருத்யுஞ்சய மந்திரத்தால் இதயத்தில் தியானிப்பவன் எனக்குச் சமமானவன், அவன் எல்லாப் பாவங்களும் நீங்கி, அஷ்டமா சித்திகளையும் அடைவான்! என்று கூறினார். நாதா! அபமிருத்யுவை ஒழிக்கத்தக்க மிருத்யுஞ்சயமந்திரத்தைக் கேட்டேன் துராத்மாக்கன் ஒரு காலத்திலும் அடையாத தாயும் பரிசுத்த மனமுடைய ஞானியர்களாலேயே அடையத் தக்கதாயும் வெப்பதட்பம் முதலான சுகதுக்கங்களால் வருந்தும் ஜகத்தை சுகமடையச் செய்யவல்லதாயும் இருக்கிற முக்தி நிலையை அடையும் மார்க்கத்தை எனக்காகவும் உலகினருக்கு இதம் உண்டாவதற்காகவுஞ் சொல்லவேண்டும் என்று உமாதேவி கேட்டாள். பிரியையே! இந்தப் பஞ்ச பூதாத்மகமான தேகத்தில் சர்வ வியாபியான என்னைச் சிவோஹம் என்ற ஞானத்தால் அறிந்து கொள்பவன், தன் ஜனன மரண பந்தத்திலிருந்து விடுபடுவான். நான் எனது என்று கருதுவதே பந்தமும் துக்ககரமானதுமாம் நான் அல்லன், என்னுடையதல்ல என்று பற்றுதலை விடுத்தலே சுகம். உடன்பற்றை விட்டவனை மனைவிமக்கள் உற்றார் உறவினர் முதலான பந்தங்கள் பாதிக்கப்படமாட்டா. இதுதான் பாசுபத யோகம்! என்றார் பிறை சூடிய பெம்மாள்.
நாதா! இந்திரிய நிக்கிரகம் (புலன் ஒடுக்கம்) செய்வது மிகவுங் கடினமானதாயிற்றே! நான் எனது என்னும் தற்போதம் ஒழிவதும் துர்லபம் ஆயிற்றே! இதைக் காட்டிலும் சுலபமான வழியை உபதேசிக்க வேண்டும் என்ற பார்வதி தேவி கேட்டாள். பெண்ணே! இராகத் துவேஷாதிகளை ஒழிப்பது கிரேத யுக திரேதாயுக, துவாபரயுகங்களில் கஷ்டமான இருக்கும் போது கலியுகத்தில் அதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? என்றார் உமையொரு பாங்கர் அதற்கு உமாதேவி சுவாமி! மனிதர்கள் யாவரும் பாவயுக்தர்களாக இருப்பதால், அவர்கள் பிறவிக்கடலைச் சாமானியமாகக் கடக்கக்கூடிய வழியைச் சொல்லவேண்டும்! என்று கேட்கச் சிவபெருமான் கூறலானார். தேவீ! உனக்குக் கிரியாயோகத்தைச் சொல்கிறேன். அதுவே மனிதரின் அதத்திற்கான முக்தி நெறி அது கவலைகளை ஒழிக்கத் தக்கதும் நல்லோரின் சித்தத்தினாலே கடைப் பிடிக்கத் தக்கதும் ஆகும். மூர்த்திகளில் ஆவாகனம் முதலானவற்றைச் செய்து, என்னைப் பூஜிப்பது கிரியாயோகம், ஞானயோகம் என்னும் இரண்டின் இந்திரிய நிக்கிரகமில்லாமல் (புலனொடுக்கம் இல்லாமல்) ஞானயோகம் கைகூடாது, ஆகையால் கிரியாயோகத்தைக் கடைப்பிடித்தவன் முறையே ஞானத்தையும் முக்தியையும் அடைகிறான். கிரியாயோக்தினால் தேவத்வம் உண்டாகிப் பின்னர் சிறந்த பிறவிகளை எடுத்து முக்தியை அடையாலம். அக்கினியானது காற்றுடன் சேர்ந்து திருணகாஷ்டங்களை நாசஞ் செய்வது போல, சிவலிங்க அர்ச்சனையாவது பாபங்கள் அனைத்தையும் நாசஞ்செய்து விடும் என்னுடைய நாமத்தைவீணாக உச்சரித்த போதிலும் அவர்கள் கர்ம நீக்கம் பெறுவார்கள். கர்ம பூமியில் பிறந்து, என்னை ஆராதிக்காதவனின் பிறவிபயனற்றது இரத்தினம், புஷ்பம், சந்தனம முதலியவற்றால் பூஜித்தாலும் பக்தியில்லாவிட்டால் எனக்குத் திருப்தியில்லை. அவை குறைந்திருப்பினும் பக்தி மட்டுமே இருக்குமானால் எனக்குத் திருப்தி உண்டாகும். எத்தகையோ கோடி ஜன்மங்களின் ஒரு ஜனனம் இந்தக் கர்ம பூமியில் கிடைப்பது அருமை அதிலும் மனிதஉடல் கிடைப்பது துர்லபம், அப்படிக்கிடைத்த அரிய உடலால் சிவலிங்க அர்ச்சனை செய்யாதிருப்பது என்ன துக்ககரமானது! என்றார் பரம சிவன்.
பார்வதிதேவி பரமனை நோக்கி, நாதா! நான்கு வருணத்தார்களும் என்ன மந்திரங்களால் லிங்கார்ச்சனை செய்யத்தகும்? என்று கேட்டாள். பிராமணர்கள் வேத மந்திரங்களாலேயும் புரானோக்தத்தாலேயும் பூஜித்து, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன் சூரியன், யஞ்வா, ஆகஎட்டும் சிவமூர்த்தம் என்று கருத வேண்டும் எல்லாத் தேவர்களும் மந்திரத்தை ஆஸ்ரயித்திருக்கிறார்கள் மந்திரமோ பிந்துவையும் பிந்து நாதத்தையும் நாதம் பரமாத்மாவையும், ஆஸ்ரயித்திருத்தலால் அப்பரமாத்மாவை முன்பு கூறிய மிருத்யுஞ்சய மந்திரத்தால் தியானிக்க வேண்டும். யகாரத்துக்கு எட்டாவது எழுத்தாகிய ஹ என்னும் எழுத்தைத் தீர்க்கமாக்கி (ஹா) அதன் பின்னர் பிந்து (ம்) சேர்த்து அங்கந்நியாச கரந்நியாசமாக ஜபிக்க வேண்டும் இவ்வாறு முறையாகப் பூஜிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் கைகூடும் என்று பெரியோர்கள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். இகத்திலும் பரத்திலும் சிவபூஜையே, எல்லாச் சித்திகளையும் கொடுக்கவல்லது, உலகத்தில் என்னைப்பூஜித்து எல்லாப் பயனையும் அடைய பஞ்சபிரஸ்வரூபத்தை உணர்ந்து நான் தோறும் என்னுடைய சாரூப்யத்தை அடைவான். அந்தப் பஞ்சப்பிரம மந்திரத்தைச் சொல்லுகிறேன் என்று கூறியருளினார். இது எல்லா மந்திரங்களிலும் உன்னதமானது, இதைப் பயின்று பூஜை செய்வதால் கிடைத்தற்கரிய தேவத்துவம், கந்தர்வத்வம் முதலான தன்மையும் அஷ்டமாசித்தியும் அடைவார்கள். மிருத்யு பயம்( மரண பயம்) கிரக பயம் முதலியன இந்த மந்திர ஸ்மரணையினாலேயே நீங்கிவிடும். இதைச் செபிப்பவர்களுக்கு இடி மழை காற்று முதலான ஐம்பெரும் பூதங்களால் உண்டாகும். ஆபத்துக்களும் ஒரு போதும் சம்பவிக்க மாட்டாது. இந்த மந்திரத்தை நூறு முறை ஜெபித்தவன் நூறு பிறவிகளில் செய்த எல்லாப் பாவங்களையும் ஒழிப்பான்! என்று சிவபெருமான் கூறியருளினார். இவ்வாறு ஸநத்குமார முனிவர் கூறியருளினார்.
36. பஞ்சப் பிரம மந்திரம்
வியாச முனிவரே! பஞ்சப் பிரம மந்திரத்தின் பிரபாவத்தை விளக்கமாகச் சொல்கிறேன். கேளும் அந்தரங்கமான, பரிசுத்தமான இடத்தில், தான் பரிசுத்தனாகவும் ஒருமுக மனமுடையவனாகவும் இருந்து, இந்தப் பஞ்சப் பிரம மந்திரத்தைப் பிரித்து அங்கந்நியாஸ கரந்நியாசங்களைச் செய்யவேண்டும் எப்படியென்றால்.
ஓம் ஹரம் ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் அகோரேப்ய சிரசே ஸ்வாஹா
ஓம் ஹ்ரூம்கோர கோரதரேப்ய சிகாய வஷட்
ஓம் ஹ்ரைம் ஸர்வ தஸ்ஸர்வேப்ய; கவசாய நம
ஓம் ஹ்ரௌம் நமஸ்தே ருத்ரரூபேப்ய
ஓம் ஹ்ர; அஸ்த்ராயபட் நேத்ராப்யாம்வஷட் பூர்புவஸூவரோமித திக்பந்த
என்னும் அங்கந்நியாசமும் அதுபோலவே கரந்நியாசமும் செய்ய வேண்டும். இவ்விதம் அகோர மூர்த்தியை நாத பிந்து கலைகளுடன் தன் இதயத்தில் பூஜிக்க வேண்டும். அதன் நடுவில் தண்டம் இளஞ்சந்திரன் அங்குசம், கொடி இவற்றையுடைய அகோரேஸ்வர் என்னும் தேவியைப் பூஜிக்க வேண்டும் ஓம் அகோரேசி ஹ்ரீம் ஹூம்பட் என்ற மூலமந்திரத்தால் ஜெபிக்க வேண்டும். இப்படி ஏகமனத்துடன் பூஜித்தால் விரும்பினவெல்லாம் கைகூடும் தியானம்.
மகா பாபியாக இருப்பினும் இந்தத் தியானத்தால் ஈஸ்வரனைப் பூஜித்து லக்ஷம் வில்வங்களால் சிவலிங்க அர்ச்சனை செய்பவன் எல்லாப் பாபங்களும் நீங்கப் பரிசுத்தனாவான். இந்த மந்திரத்தினாலே இலக்ஷம் தாமரைகளால் அர்ச்சனை செய்து ஹோமம் செய்தவன் அணிமா முதலான சித்திகளை அடைவான். பயற்றினால் பூஜித்து அதனாலேயே ஹோமம் செய்தவன் ஜராமரணங்களில்லாத உலகத்தை அடைவான். எள்ளினால் ஹோமம் செய்தால் கிரக பீடைகள் நசிக்கும் நெய்யோடும் சர்க்கரையோடும் பூஜித்த பாலுள்ள மரத்தின் சமித்துக்களால் ஹோமம் செய்தவனுக்கு ஆயுள் விருத்தி அடையும் அகோரேஸ்வரி சமேதராகிய அகோர மூர்த்தியின் பூஜையை இவ்வாறு செய்தவன் மூவுலகங்களிலும் துர்லபமான பதவியை அடைவான். இந்தப் பூஜையை செய்யும் போது அகோர மூர்த்திக்கு ப்ரீதியாக அகோரேஸ்வரி முத்திரையைக் காட்டி மனப்பூர்வமாகத் தியானித்தால் பூதப்ரேத பைசாசங்கள் கிரகவேதாளங்கள் சாகினி டாகினிகளால் சிறிதும் துன்பமுமின்றி தேவாசுர மனுஷர் சுவாதீனமாவார்கள் இந்தப் பூஜையைச் செய்தே மாமுனிவர்கள் எல்லோரும் மோக்ஷ சித்தியை அடைந்தார்கள். ஸத்யோஜாதக்கிரமத்தால் பூஜிப்போர் மோக்ஷத்தையும் ஈசான கிரமத்தால் பூஜிப்போர் சுவர்க்காதி போகத்தையும் அடைவார்கள். எந்தவகையிலாவது சிவபெருமானைப் பூஜித்தவன் இஷ்டசித்தியையும் மோக்ஷத்தையும் அடைவான் என்பதில் சிறிதும் சந்தேகமுமில்லை!
37. ஈஸான கல்பம்
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி சிவநேசச் செல்வரே! ஆன்ம கோடிகளுக்குப் புத்தி முக்திகளைக் கொடுக்கவல்லவர் சிவபெருமானே! அவர் தம்மை மந்திரோக்தமாகப் பூஜிக்காவிட்டாலும் பக்தியுடையவர்களுக்கும் அவரவர்களுடைய இஷ்ட காமியங்களைக் கொடுக்கும் போது மந்திர பூர்வமாக அர்ச்சனை செய்பவர்கள் அடையும் பயனை எடுத்துச் சொல்லவும் வேண்டுமா? உலகங்கள் அனைத்திற்கும் உள்ளுறை இறைவனும் மோக்ஷத்தைக் கொடுக்கத் தக்கவரும் அந்த மகா தேவனேயன்றி வேறு இல்லை என்று சந்தேக மறத்தெரிந்திருந்தும் விழித்துக் கொண்டிருந்தும் தூங்குவது போல் உழலும் மாந்தர்கள் விஷ்ணுவின் மாயையால் அகப்பட்டு மோக்ஷமார்க்கத்தையுடைய வழியறியாமல் உழலுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஸனத்குமாரர் கூறினார்.
தாவரஜங்கமங்களான பிராணிகள் யாவும் தத்தமது வினைக் கீடாகத் தநுகரணபுவன போகங்களை அனுபவிக்கிறார்கள். மனிதர்களுக்கு உணவு உறக்கம் பயம் கல்வி முதலியன பொதுவாக இருப்பினும் ஞானிகளுக்கே மனிதர்கள் என்னும் பெயர் தகுதியுடையதும் ஞானிகளல்லாருக்கு மிருகங்கள் என்னும் பெயர்தகுதியுடையதுமாகும். அந்தணர் முதலான நான்கு வர்ணத்தோராக இந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் எவ்வித முயற்சி செய்தேனும் சிவ ஞானத்தை அடைய வேண்டுவது அவசியமாகும். அப்படியில்லாமல் மானுடர் சமுசாரமாகிய காட்டில் நெடுங்காலம் உழன்று பெருந்துன்பங்களை அனுபவித்தும் அதனை வெறுத்தும் சிவபெருமானின் திருவருளை நாடி அவ்வெம்பெருமானின் திருவடியை அடையாது நரகத்தை அடைகிறார்கள். அங்கு கஷ்டங்களை அனுபவித்து இறந்த பிறகு புல்பூண்டு முதலிய தாவரங்களாகத் தோன்றி மீண்டும் திரியக்கு (பறவை) யோனியற் பலமுறை பிறந்தும், பிறகு மானுடரில் இழிந்தோராகப் பிறந்து சர்வலோக காரணபூதரான சிவபெருமானையடையாது மீண்டும் மீண்டும் சம்சார துக்கத்தில் வருந்தி அழுந்துவார்கள். இனி முன்பு நீர் கேட்ட பஞ்சப் பிரம விதானத்தைப் பற்றி பார்வதி தேவியாருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும்.
வியாசமுனிவரே! பஞ்சப் பிரமஸ்வரூபியான சிவபெருமானை காராம் பசுவின் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகம் செய்து, எள்ளினால் ஆயிரத்து எட்டுமுறைகள் ஹோமம் செய்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்குவர் அவ்விதமாகவே ஒவ்வொருதினமும் நூற்றெட்டுக்கும்பங்களில் மகாநதி தீர்த்தங்களை லக்ஷ்மி நீங்காமல் வசித்திருப்பாள். அவன் பிறவிகள் தோறும் புத்திரபாக்கிய முடையவனாக இருப்பான். ஒருநாள் முழுவதும் உபவாசமிருந்து அஸ்தமித்த பிறகு தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்தில் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து முத்தம் என்ற பயற்றினால் ஆயிரத்தெட்டு முறை ஹோமஞ் செய்தவர்கள் யக்ஷராக்ஷசபைசாசங்களைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு யுத்தகளத்தில் வெற்றியையடைகிறார்கள். மேலும் தக்ஷிணமூர்த்தி சன்னிதானத்திலேயே மூன்று தினங்களில் ஆயிரத்தெட்டுத் தடவைக்குங் குறையாமல் காராம்பசுவின் நெய்யோடு சமித்தினால் ஹோமஞ் செய்தும் அதன் தயிர் கலந்த அன்னத்தைக் கொண்டு ஹோமஞ் செய்தால் மனோரம்மியமான புத்திர பாக்கியங் கிடைக்கும். தாமரை மலர்களால் ஆயிரத்தெட்டுமுறை பூஜித்தவர்கள் பிரமஹத்தி முதலிய பாவங்கள் நீங்கி சிவ சாயுஜ்ஜியமடைவார்கள். பிச்சை எடுத்துண்ணும் ஏழையேயாயினும் தீர்த்ததால் அபிஷேகம் செய்து வில்வத்தைக் கொண்டு பூஜித்தவன் அஸ்வமேத யாகஞ் செய்த பயனை அடைவான் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகித்து பவித்ரபாணியாய் பரிமள சந்தனத்தால் அலங்காரஞ் செய்தவன் அபயப்பிரதானஞ் செய்த பலத்தை அடைவான், நெய்யோடு ஹோமஞ் செய்தவன் தரித்திரம் நீங்கச் செல்வத்தை எப்போதும் அனுபவிப்பான். இந்த ஈசான மந்திரத்தைத் தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று, கைகளை மேலே உயர்த்தி ஜபிப்போன், சர்வ பாபங்களிலிருந்தும் சந்தேகமின்றி நீங்குவான். இந்த மந்திரத்தை ஜலபானம் மட்டும் செய்து கொண்டு ஜலத்திலிருந்து ஏழு நாள் ஜெபம் செய்வோன் மது பானம், மலமூத்ராதி பக்ஷணம், தங்கத்தைத் திருடல், குரு மனைவியைக் கூடுதல், முதலான மகாபாவங்களிலிருந்தும் நீங்கித் தூய்மை பெறுவான். அரசர்களிடம் வாங்கத் தகாத தானத்தைப் பெறுதல். சூத்திரனுடைய அன்னத்தை எப்போதும் உண்ணல் முதலியன செய்திருக்கும் ஒருவன் முக்காலங்களிலும் இந்த மந்திரத்தை மனதினால் ஜபித்தால் அவனுக்கு யானை, சிங்கம், பகைவர் முதலியவைகளால் ஒருக்காலும் தீங்குண்டாகாது. இந்த ஈசான மந்திரத்தை மனத்தால் தியானிப்போன் இத்தேகத்துடனேயே சிவசாரூப்யத்தை(சிவனுருவை) அடைகிறான்.
38. நற்புருஷ கல்பம்
வியாச முனிவரே! இனித் தற்புருஷமூர்த்தியின் பூஜாபயனை விளக்கமாகச் சொல்லுகிறேன் கேளும், வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துக்களால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமஞ் செய்தால் பிரமஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் இந்த மந்திரத்தை ஒரு மாதகாலம் ஜபித்தால் யக்ஷிணி பிரசன்னமாகி வேண்டியவைகளை அளிப்பாள். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் கரவீர புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் வசிய சித்தியாகும். ஆறுமாத காலம் கரணீகரபுஷ்பத்தால் அர்ச்சிப்பவன் விரும்பிய பொருளைத் தேவ கந்தர்வர் பூர்த்தி செய்வார்கள். நாள்தோறும் சிவலிங்கத்தைப் பூஜிப்போர். மனிதவுடம் போடு முக்தியை அடைவார்கள். இந்த மந்திரத்தால் உப்போடு திலகத்தைக் கட்டிப் பூசிப்போன் பகைவர்களையும் வயப்படுத்துவான். கீர்த்தியை விரும்பியவன் நெய்யினாலும் ஆயுள் விருத்தியை விரும்பியவன். அறுகம் புல்லினாலும் ஹோமம் செய்ய வேண்டும். சின சன்னிதானத்தை மெழுகிச் சுத்தஞ்செய்து கோலமிட்டவன் எல்லா வியாதிகளிலிருந்தும் விடுபடுவான் கடுகினால் ஹோமஞ் செய்தோன் சர்வஜன ரக்ஷகனாவான். சந்திர சூரிய கிரஹண புண்ணிய காலங்களில் இந்த மந்திரத்தை விஷ்ணு தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்தில் ஆயிரத்தெட்டு முறை ஜபிப்போன் மனோபீஷ்டத்தை அடைவான். ஓராண்டுக் காலம் தியானிப்பவனுக்குப் பரமசிவனே பிரசன்னமாகி வேண்டுவனவற்றை உவந்தளிப்பார். பஞ்சகவுவியத்தை உட்கொண்டு இந்த மந்திரத்தை ஜபிப்பவன் மோக்ஷத்தையடைவான். பர்வ காலத்தில் ஜபிப்பவன் சர்வ யாகங்களையுஞ் செய்தபலனை அடைவான் மயானத்தில் ஜபம் செய்பவனுக்கு எல்லாப் பிராணிகளும் வசவசியஞ் செய்ய விரும்பியவன் வெண்கடுகினாலும் வசியஞ் செய்ய விரும்பியவன் மேகநிற மலராலும் ஹோமஞ் செய்ய வேண்டும் சகல சித்தியையும் கொடுக்கக் கூடியதான இந்த மந்திரத்தை ஜபிப்பவன் அறம், பொருள். இன்பங்களை இங்கும் அனுபவித்து, மறுவுலகிலும் முக்திநிலை அடைவான்.
39. அகோர, வாமதேவ, ஸத்யோஜாத கல்பங்கள்
வியாச முனிவரே! அகோர மூர்த்தியில் பிரபாவத்தைச் சொல்கிறேன் அகோர மூர்த்தியை ஸ்மரிப்பதற்குத் திதி, வாரம் நக்ஷத்திரங்களைக் கவனிக்க வேண்டியதில்லை. அவரை எந்தச் சமயத்தில், ஸ்மரித்த போதிலும் அப்போதே எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கலாம். தூய நீராடி அன்றாடக் கர்மங்களை முடித்து, அகோர மூர்த்தியைப் பஞ்ச கவுவியத்தால் அபிஷேகஞ் செய்து அகோர மந்திரத்தைப் பதினாயிரம் தரம் ஜபித்துப் பசு நெய்யினால் ஆயிரம் முறை ஓமம் செய்தவன் மூவுலகங்களையும் சுவாதீனம் செய்து கொள்ளுவான். சதுர்த்தசியிலாவது அஷ்டமியிலாவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் எட்டாயிரம் ஜபித்து மண்டூகத்தின் கொழுப்பினால் ஆயிரம் ஹோமஞ் செய்தவனும், மனிதக் கபாலத்தில் தவளை நெய்யினால் தாமரை நூல் சேர்த்துத் தீபம் ஏற்றி அதில் தோன்றியமையை எடுத்து திகலமிட்டவனும் பிறர் கண்களுக்குப் புலப்படாதவனாகிறான் இவ்வாறே எருக்கு நூலினால் விளக்கெரிக்கத் திலகம் இட்டவன் அதிரிசயவித்தையும் பிரமலோகாதி கோலகங்களுக்குச் செல்லும் ஆற்றலும் எல்லாப் பொருள்களையும் ஊடுருவிப் பார்க்கும் வல்லமையும் பெறுவான். கார் எள்ளினால் பதினாயிரம் ஹோமம் செய்து பஞ்சுத்திரி சேர்த்து நெய் தீபத்தின் மையை திலகஞ் செய்தவன் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் சஞ்சரிப்பான். கோரோசனத்தால் ஆயிரம் ஹோமஞ் செய்தவனுக்கு பூதப் பிரேத பைசாசங்கள் எல்லாம் தன் வசமாகி, டாகினி, சாகினி ஜ்வரம் முதலிய பீடைகள் ஒழியும் ஹரிதாளத்தால் எண்ணாயிரம் ஹோமஞ் செய்து ஐயாயிரம் ஜபித்தவன் அஷ்டசித்திகளை அடைவான். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் லக்ஷம் வில்வங்களால் அர்ச்சித்து இலக்ஷம் ஜபஞ் செய்து பதினாயிரம் ஹோமம் செய்தவன் மூவுலகச் சித்தியும் ஜ்வரம் முதலான ரோகங்களின் நீக்கவும் அடைவான். அம்மந்திரத்தையே எப்போதும் ஜபிப்பவன் அடையக் கூடாத சித்தி ஒன்றுமில்லை, பிரமச்சரிய நிலையில் இருந்து பஞ்ச கவுவியங்களையே புசித்து, ஒருமாத காலம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் இந்த மந்திரத்தை ஸ்பரித்துக் கொண்டிருந்தவன் சுவர்க்கத்தையும் பாதாள லோகத்தையும் இந்தத் தேகத்துடனேயே அடையும் வல்லமையைப் பெறுவான். காய்கனிகளையே உணவாக உட்கொண்டு ஏகலிங்கார்ச்சனை செய்தவன் பிரமஹத்தி முதலான பாவங்களிலிருந்து நீங்குவான் கரபிøக்ஷ ஏற்றுச் சாப்பிட்டு ஆறுமாதகாலம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் சிவபூஜை செய்து இந்த மந்திரத்தை ஜபித்தவன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விலகுவான். நாள் ஒன்றுக்கு நூறுமுறை இந்த மந்திரம் ஜபிப்பவன் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பான். இது அகோரமூர்த்தியின் பிரபாவமாகும்.
வியாச முனிவரே! இனி வாமதேவ மூர்த்தியின் வல்லபத்தைச் சொல்லுகிறேன். தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகம் செய்வித்து, வெண்மையான மலர்களால் அர்ச்சனை செய்து, வாமதேவ மந்திரத்தை எண்ணாயிரம் ஜபித்து, வெண்மை, செம்மை, மஞ்சள் நிறமுள்ள பதினாயிரம் மலர்களால் ஓமஞ்செய்தவனுக்கு, மனோரத சித்தி ஏற்படும். மூன்று நாட்கள் உபவாசமிருந்து வாமதேவ மந்திரத்தை நாள் ஒன்றுக்குப் பதினாயிரம் ஜபித்து ஹாஸபக்ஷியின் (பருந்து) எலும்பைக் கையில் கட்டிக்கொண்டவன் பூதப் பிரதே ராக்ஷஸமானுட, மிருக பக்ஷியாதிகள் வசியமாகப் பெறுவான். காராம் பசுவின் நெய்யினால் எண்ணாயிரம் ஹோமம் செய்து வாமதேவ மந்திரத்தை எண்ணாயிரம் ஜபம் செய்தவனுக்கு யக்ஷணியானவள் சுவாதீனமாகிச் சம்பத்து முதலியவற்றைக் கொடுப்பாள். பரிமள மிகுந்த எண்ணாயிரம் மலர்களை வாமதேவ மந்திரம் ஜபித்து தக்ஷிணாமூர்த்திக்குச் சமர்ப்பித்தால் விரும்பியவனவெல்லாம் சித்தியாகும். யவையினாலாவது நெல்லினலாவது வாமதேவ சந்திரஞ் சொல்லி லக்ஷம் அர்ச்சனை செய்தவன் குபேர சம்பத்தை அடைவான். நாகபுஷ்பம், புன்னாகமலர் அசோகமலர், கர்ணிகாரம் பாதிரிமுதலிய மலர்களை வாமதேவ மந்திரஞ் சொல்லி தேன், நெய் கூட்டி ஆயிரம் ஹோமஞ் செய்தால் ஐஸ்வரிய விருத்தி அடைவான். கடுகினால் ஹோமஞ் செய்தவனுக்கு கிரக பாதைகள் நீங்கும் பெருங் கடுகினால் ஹோமஞ் செய்தவன் கிரகபந்தனம் செய்யும் வல்லமையை அடைவான் பலவிதமான மலர்களைக்கொண்டு வாமதேவ மந்திரத்தால் அர்ச்சனை செய்தவன் வறுமை நீங்கிச் சுகமடைவான். தகரம் மல்லிகை, செந்தாமரை முதலிய மலர்களால் பூஜித்தவன் நஷ்டராஜ்யலாபம் அடைவான். சுக்லபக்ஷ பிரதமை முதல் பூரணை வரையில் தினந்தோறும் எண்ணயிரம் மலர்களுக்கு குறையாமல் அர்ச்சனை செய்தவன். சிவ சாரூப்யத்தை( சிவனுருவை) அடைவான். திவ்ய சந்தனத்தினால் அபிஷேகித்துப் பரிமளமலர்களால் எண்ணாயிரம் ஹோமம் செய்தவன் சம்பத்துள்ளவனாகவும் தீர்க்காயுஷ்மானாகவும் பிறரால் வெல்ல முடியாதவனாகவும் ஆகிறான் இந்த வாமதேவமூர்த்தியே சூரியனாகப் பிரகாசித்தும் பர்ஜன்ய ரூபமாக வர்ஷித்தும் எல்லாப் பூதங்களையும் சிருஷ்டி முதலான காரிங்களைச் செய்வித்தும் எல்லா விருப்பங்களைக் கொடுத்தும் விளங்குவார். இது வாமதேவ மூர்த்தியின் பிரபாவமாகும்.
வியாசரே! இனி ஸத்தியோஜாத மூர்த்தியின் பிரபாவத்தைச் சொல்லுகிறேன். ஸத்தியோஜாத மூர்த்தியைக் கிருஷ்ணயஜூஸ் ஸம்ஹிதையில் கூறியுள்ளபடி, எண்ணாயிரம் முறை ஸத்தியோஜாத மந்திர ஜபம் செய்து, ஆத்மார்த்தமாக எட்டாயிரம் ஹோமம் செய்தவன் தன் மனோவிருப்பம் எல்லாவற்றையும் அப்போதே அடைவான். தேன், நெய், கூட்டிய எண்ணாயிரம் மலர்களைக் கொண்டு ஹோமம் செய்தவன் யக்ஷராக்ஷச பைசாசம் முதலானவை வசியமாகப் பெறுவான். இரசாயன சித்தியையும் அடைவான். காமக் குரோதங்களைப் போக்கி நிராகாரனாய் மவுனவிரதத்தோடு சுக்ல வஸ்திரமணிந்து இந்திரிய நிக்கிரகம் செய்து பயிற்றினால் எண்ணாயிரம் ஹோமஞ் செய்து ஸத்தியோஜாத மூர்த்தியைப் பூஜித்தவன் அஷ்டமாசித்தியும் பகைவரை நலிவுறச் செய்யும் ஆற்றலும் அடைவான். தேன் பால் ஆகியவற்றால் எண்ணாயிரம் ஹோமம் செய்தவன் நஷ்டராஜ்ய லாபத்தை அடைவான். வில்வம் எருக்கு அத்தி, அரசு முதலிய சமிதைகளால் எண்ணாயிரம் முறை சிவசந்நிதியில் ஸத்தியோஜாத மூர்த்திக்கு ப்ரீதியாக ஹோமம் செய்தவன். அளவற்ற ராஜ்யபோகத்தை அடைவாள். இந்த ஸத்தியோஜ மந்திரத்தை நாள்தோறும் ஆயிரம் முறை அன்போடு ஜபித்தவன் நோயின்றி கோடி மன்மதாகாரமான அதிசுந்தர தேகத்தை அடைவான். ஆடை ஆயிரம் மலர்மாலை முதலியவற்றால் அர்ச்சனை செய்தவன். சவுபாக்கியத்தை அடைவான். இதை வடவால விருக்ஷத்தின் கீழேயிருந்து இலட்சம் முறைகள் ஜபித்தவனுக்கு யக்ஷிணி சித்தி உண்டாகும் தண்ணீரின் நடுவேயிருந்து ஐயாயிரம் ஜபித்தவன் பிரமஹத்தி முதலான பாபங்களை ஒழிப்பான். ஐம்பதினாயிரம் ஜபித்தால் மகாபாதகங்களும் இருபத்தையாயிரம் ஜபித்தால் உபபாதகங்களும் ஒழியும். ஏகலிங்கார்ச்சனம் சய்து இலட்சம் முறை இந்த மந்திரஞ் ஜபித்தவன் சிவதரிசனம் அடையப்பெறுவான். இவையெல்லாம் இகலோககத்தை விரும்பியவர்கள் பெறுகிற பயன்களாகும். நிஷ்காமியனாய் இந்த மந்திரஞ் ஜபத்தைச் செய்தவன் ஞானமடைந்து சிவசாயுஜ்ஜிய மடைவான். இது ஸத்தியோஜாத மூர்த்தியின் பிரபாவம்.
வியாச முனிவரே! இனி சிவலிங்கமூர்த்தியின் பேதங்களையும் சாத்வீத பூஜாவிதியையும் அதனாலடையும் சாதனங்களையும் உமக்குச் சொல்லுகிறேன் கேளும்.
ஸ்வயம்புலிங்கம் பாணலிங்கம், ஜோதிர்லிங்கம் என்று பலனளிக்கவல்ல மூர்த்திகள் மூன்று இவையே வணங்கத்தக்கன பரிசுத்த மனத்துடன் நித்திய நியமங்களை முடித்து பக்தி நிறைந்த உள்ளத்தோடு ஆசாரமுடையவனாய் மிக உணவு கொண்டு சர்வ பூதங்களிடம் இதமுடையவனாய் மவுன விரதம் பூமியில் படுத்தல் இந்திரிய நிக்கிரகமுடையவனாய் முதியோரான சமயாசாரியிடம் சிவபூஜா விதானத்தைத் தெரிந்து கொண்டு பிரதட்சணை நமஸ்கார ஜப தியான யோகாப்பியாசம் முதலியவற்றால் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். யாவற்றுக்கும் பக்தியே காரணம்! மஹேஸ்வரனைப் பக்தியிலேயே அடைய வேண்டும்; எல்லா வருணாசிரமிகளும் பாலவிருத்தர்களும் ஆஸ்திக புத்தியோடும் சிரத்தையோடும் நாள்தோறும் சர்வபூத அந்தர்யாமியான பரமசிவனைத் தியானிப்பார்களானால் சர்வசித்திகளையும் அடைவார்கள் உலகம் முழுவதும் சிவஸ்வரூபமே என்று உணர்ந்து தியானிப்பவன் ஆறுமாதகாலத்தில் யோகியாவான். சிவபெருமானிடமே மனம் பதிந்துள்ள சமாதியும் யோகாப்பியாச சாமர்த்தியமும் கொண்டவனாய்த் தியானம், ஜபம், மனனம் முதலியவற்றைச் செய்தவன். ஜீவன் முக்தனாவான். இனி மந்திர பலன்களைச் சொல்லுகிறேன்.
கங்கை, முதலிய நதிகள் நர்மதை முதலிய நதிகள் பாற்கடல் முதலிய சமுத்திரங்கள், மகேந்திரம் முதலான மலைகள் சிவாலயங்கள் முதலியபரிசுத்தமான இடங்களிலும் மேற்றிசை நோக்கிய ஸ்வயம்பு லிங்கமுள்ள இடங்களிலும் காராம் பசுவின் சாணத்தினால் சுத்தம் செய்து, அவ்விடத்தில் சிவபெருமானைப் பஞ்சகவுவியங்களால் ஸத்யோஜாத மந்திரத்தால் அபிஷேகம் செய்து, வாமதேவ மந்திரத்தால் பிரதிஷ்டை செய்து தத்புருஷ மந்திரத்தால் பஞ்சாமிர்தம், சுத்தஜலம் ஆகியவற்றை அபிஷேகித்து ஈசானமந்திரத்தால் அர்ச்சனை செய்யவேண்டும் சிவலிங்கமானது ஸ்வயம்பு லிங்கமாயினும் பாணலிங்கமாயினும் தேவாசுரர்களால் பிரதிஷ்டிக்கப் பட்டதாயினும் லக்ஷணக் குறையாக இருப்பினும் உடைந்திந்தாலும் அசைவுற்று இருந்தாலும் இது சித்திகளையெல்லாம் கொடுக்கவல்லது என்று பூஜிக்க வேண்டும் சாமானியமாக கருதக்கூடாது. இவ்வாறு சிவலிங்கப் பெருமானை ஆறுமாதகாலம் அர்ச்சனை செய்தவன் சர்வசித்தியையும் அடைவான். சிவபூஜாக்ஷரத்தை எண்ணாயிரம் ஜபஞ்செய்து சிவபெருமானைத் தன் இதயத்தில் பிராணாயாமம் முதலானவற்றால் தியானித்தவன் எல்லாத் துயரங்களையும் ஒழித்து நிர்ப்பயமாக வாழ்வான் மலையின் உச்சியிலிருந்து இதை ஜபித்தவன் இத்தேகத்துடன் சிவதரிசனம் செய்வான். உண்ணத்தக்காத அன்ன பானங்களையும், பகல் நித்திரையும், ஸ்வப்பனத்தில் ரேதஸ்ஸ்கலிதமும் பிராமண நிந்தையும், கோநிந்தையும் தேவநிந்தையும், பதிவிரதாநிந்தையும், தர்ம சாஸ்திர விரோதமான நடத்தையும் கொள்வதால் வரும் பாவங்கள் அனைத்தும் ஈசான மந்திர ஜபத்தால் பஸ்மமாகி விடும். இதுவரை பஞ்சப பிரம விதானத்தைச் சொன்னேன் இனி சிவபக்தர்களின் பிரபாவத்தை முன்பு பரமசிவன் பார்வதிக்குச் சொன்னபடியே சொல்லுகிறேன்.
வியாச முனிவரே! தூய்மையான பக்தி சிரத்தையோடு சிவபெருமானை இடைவிடாமல் அர்ச்சனை செய்தும் தியானித்தும் யோகஞ் செய்தும் காலங்கழிப்பவர்களைச் சிவபெருமானாகவே பாவிக்க வேண்டும். நாசரகிதமான சிவலோகத்தைத் தவஞ் செய்யாதவர்கள் ஒருபோதும், அடைவதில்லை, தவத்தாலேயே தேவர்கள் தங்களது உயர் பதவிகளை அடைந்து வாழ்கிறார்கள். முனிவர்கள் தவத்தால் பிரமானந்தத்தை அடைகிறார்கள். இதைச் சத்தியம் என்று எண்ணவேண்டும். தன்னால் அடையக் கூடாத ஒவ்வொன்றையும் தவத்தாலேயே அடையலாம். ஆயினும் தவம் ஒன்றே கடினமானது. அந்தத் தவத்தை மும்மூர்த்திகளும் இன்னமும் கடைப்பிடிக்கிறார்கள். சிவபெருமானை யாது கருதிப் பூசிக்கிறார்களோ அவர்கள் அந்தப் பயனை அடைவது சத்தியம். அந்தத் தவம் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று மூவகைப்படும் தேவர்கள் தேவ பதவியை அடையச் செய்வதும், ஊர்த்துவ ரேதசுகளாகிய முனிவர்கள் செய்வதும் சாத்வீகமான தவமாகும் உலகத்திள்ளவர்கள் பலவிதமான போக பாக்கியங்களைக் கருதிச் செய்யும் தவம் ராஜஸதவமாகும் அசுரர்கள் ராக்ஷசர் முதலியோர் உடலைவருத்திப் பிடிவாதத்தால் செய்யும் தவம் தாமஸமாகும் இவற்றில் சாத்வீகமே சிறந்தது. அது ஜபம் தியானம் முதலானவற்றால் பக்தியோடு தேவர்களையும் சிவபெருமானையும் பூஜிப்பதாகும் அவ்வாறு சாத்வீகத் தவஞ் செய்வோர் இகத்தில் எல்லா சுகங்களையும் அனுபவித்துப் பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவார்கள். உத்தமமான தர்மத்திலேயே மனம் நாள் தோறும் நீராடல் சிவபூஜை காயத்ரீ முதலான ஜபங்ள் அவுபாசனாதி ஹோமம், ஆசாரம், அஹிம்சை. சிவ விரதங்கள் மவுன விரதங்கள் புலனடக்கம், மனதை வித்தியா விஷயத்தில் செலுத்துதல். சத்தியம், குரோதமின்மை கோதானம் முதலிய தானங்களைச் செய்தல் பொறுமை அந்தக் கரணங்கள் ஒடுக்கம் தயை வாவி கூபங்களை எடுத்தல் தேவாலய நிர்மாணஞ் செய்தல் சத்திரம் மடம் தோப்பு ஆசிரமம் முதலியனறியமித்தல் தீர்த்த யாத்திரை பிரஜாபத்தியம் முதலிய கிரச்சிரங்களை அனுஷ்டித்தல் சாந்திராயணஞ் செய்தல் மாதப்பிறப்பில் தர்ப்பணம் செய்தல் கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் ஸ்நானாதானாதிகளைச் செய்தல் முதலியவை இகத்தில் சவுக்கியத்தை அனுபவித்து இந்திராதி லோகங்களிலும் இஷ்ட காமியங்களை அனுபவிக்கச் செய்வனவாகும் அந்தியகாலத்தில் பரமசிவனைத் தியானித்து, அவருடைய ஸ்வரூபத்தைமனத்தில் தியானித்தலும் ரேசக பூரககும் பகங்களால் பிராண வாயுவை நிறுத்திச் சிவத் தியானம் செய்தலும் பிராணாயாமம் முதலியவற்றால் சர்வேஸ்வரனைத் தியானிப்பதுமாகிய இவை ஞானத்தால் அடையத்தக்கவை மோக்ஷத்தைக் கொடுக்கவல்லவை. பெண் தூக்கம் ஆசனம் வஸ்திரம் வாசனைத் திரவியம் தூபம் தாம்பூல பூஷணம், இராஜ்ய போகம் சுவர்ணம் தாமிரம் முதலியவை வீடு குதிரைகள் பசுக்கள், வித்வத் தன்மை வேத சாஸ்திரங்கள் ஆடல் பாடல், வீணா மிருதங்கத்தொனிகள் யானை குடை சாமரம் முதலியன டோக வடிவமாதலால் இவற்றை விரும்பியவன். யோக மார்க்கத்தை அடையமாட்டான் எள்ளுக்குள் தைலரசமிருந்து அந்த எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டச் செய்வது போல, மேற்கூறிய போகங்களின் இச்சையானவை, ஒருவனது மனத்தில் இருக்குமானால் அவனை அவை நல்ல யோகமார்க்கத்தில் செல்ல வொட்டாமல் உலக வியாபாரமாகிய செக்கிலிட்டு ஆட்டுவிக்கும் ஜராமரண பீடையுடைய பிராணிகள் ஏற்றத்தின் துலாக்கோலைப் போல பல பிறவிகளில் உயர்வும் இழிவும் அடைந்து துன்புறுகிறார்கள். எண்ணற்றப் பிறவிகளை அடைந்த பின்னர் மனித தேகம் ஒன்று கிடைப்பதும் துர்லபம். புண்ணிய கர்மச் சிறப்பினாலேயே மனித தேகம் கைகூடும், ஆகையால் கர்மாதிகள் விசேஷமானவை.
சுவர்க்க மோட்சங்களுக்குச் செல்லத் தக்க அரிய மானுட தேகத்தை அடைந்தும் உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாதவன் இறந்த பிறகு நெடுங்காலம் பெருந்துக்கத்தை அனுபவிக்கிறான். தேவாசுரப் பிறவிகளைவிட மனிதப் பிறவிச் சிறந்ததாக இருக்க அத்தகைய மானுடத்தை அடைந்தும் நரக வாதையை அடையாத வழியை ஏன் தேடிக் கொள்ளாதிருக்கிறார்கள்? தர்மத்திற்கு மூலமாக இருக்கும் மனித தேகம் எடுத்தும் மோட்சத்தைத் தேடாவிட்டாலும் நரகத்தையாவது தாவரப் பிறவியையாவது சம்பாதித்துக் கொள்ளாமல் இருப்பது உசிதம் இலாபத்தைக் கருதியே வியாபாரஞ் செய்பவன் இலாபங் கைகூடாவிட்டாலும் நஷ்டம் அடையாமல் இருக்கவும் மூலதனத்தையாவது காத்துக் கொள்வதும் சிறப்பான செயல் அல்லவா? அதுபோலவே தன் மூலதனமாகிய மனித தேகத்தை இழந்து போகாமல் இருப்பது சிறப்பு மானிடதேகத்திலும் அந்தணத்துவத்தைப் பெறுவது மிகவும் அருமை அத்தகைய அந்தணத்துவத்தை அடைந்தும், ஆத்மாட்சணம் செய்து கொள்ளாதவனை விட இழிந்த ஜந்து எது இருக்கிறது? புண்ணிய பூமியான ஜம்புத்தீவில் கிடைப்பது நிச்சயம் என்று கருதப்படாத மானுட யோனியில் ஜனித்தும் ஆன்மாவுக்கு நல்ல கதியைத் தேடிக் கொள்ளாதவன் ஆத்மத் துரோகியாவான். இதுவே கர்மபூமியாகையால், இவ்விடத்தில் தேடியவற்றை இவ்விடத்திலேயே அனுபவிக்க வேண்டுமேயன்றி அங்கு ஒன்றும் தேடமுடியாது. ஐம்புலன்களும் நல்ல நிலையில் இருக்கும் போதே ஆத்மாவிற்குச் சத்கதியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நித்தியமில்லாத இந்தத் தேகத்தை அடைந்தவன், நித்தியமான மோக்ஷத்தை அடைய முயற்சி செய்யாவிட்டால், தேகநஷ்டமும் மோக்ஷ நஷ்டமும் அடைந்து உபயப் பிரஷ்டனாவான். மனிதனுக்கு ஆயுள் குறைவு அதுவும் இரவில் நித்திரை பாதியைக் கொண்டு போகும், மற்றப் பாதியில் இளமையும் மூப்பும் பாதியைக் கொண்டு போகும். அதிலும் நோய் முதலிய பீடைகள் மனக்கவலைகள் அரைப் பங்கை கொண்டுபோகும் எப்போது தான் மாண்டு போவான் என்பதை ஒருவனும் அறியான் வருங்காலமறியாத மரணத்திற்கு அஞ்சிப்புண்ணிய கருமங்களைச் செய்யாமல் தைரியமாக இருப்பது தக்கது தானா? தருமமே பரலோக யாத்திரைக்குக் கட்டுச்சோறாரும் தானம் செய்திருப்பானாகில் அவன் சொர்க்க லோகம் செல்லும்போது அங்கு உதவிஉண்டாகும் தனத்தை வீட்டில் வைத்துவிட்டு இறந்தால் அது அவனோடு வரமாட்டாது. அவனும் சாப்பாடு கொண்டு போகாதவன் வழியிலே கஷ்டப்படுவதைப் போல பல துன்பங்களை அனுபவிப்பான் அதிதிகளை எதிர் கொண்டழைத்து, அர்க்கிய பாத்தியாதிகளால் பூஜித்தோர் அன்னபானங்களையும் யமமார்க்கத்தில் பெறுவார்கள் என்று நம்பிப் புண்ணியத்தைச் செய்து பாவத்தைத் தவிர்க்க வேண்டும். புண்ணியத்தால் சுவர்க்கம் முதலான உலகங்களையும், பாவத்தினால் நரக வாதனையையும் அடைகிறார்கள். ஒரு முறையாவது சிவபெருமானையே சரணாகதியென்று நம்பியவன் கோரமான நரகத்தையும் யமனையும் காணமாட்டான். அவன் சிவகாலம் மனித தேகத்தை அடைந்து கிரமப்படி புண்ணிய மிகுதியால் மோக்ஷத்தை அடைவான், சிவபெருமானையே கதியென்று எப்போதும் மனத்தில் திடங்கொண்டுள்ளவன் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததுபோல, பாவத்தில் தோயாதவனாகி மோக்ஷமடைவான், சிவ சிவ ஹரஹர என்று சிவநாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருப்பவன். நரக வேதனையையும் யம பாதையையும் அடைவதில்லை. ஆகையால் மானிடதேகம் எடுத்த புத்திமான். சிவபெருமானிடம் இடையறாத பக்தி செலுத்த வேண்டும். இவ்வாறு ஸனத்குமார முனிவர் வியாசருக்குச் சொன்னார்.
40. க்ஷத்திரிய தர்மம் (அரசினர் அறம்)
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி பிரமதேவனின் முகத்திலிருந்துத் தோன்றிய அந்தணர்களும் தோள்களிலிருந்து தோன்றிய க்ஷத்திரியர்களும் தொடைகளிலிருந்து தோன்றி வைசியரும் பாதத்திலிருந்துத் தோன்றிய சூத்திரருமாக உலகத்திலுள்ள மக்கள் நான்கு வர்ணத்தவர்களாக இருக்க அவர்களில் உயர் குலத்தோர் இழிகுலத்தாராகவும் இழிந்தோர் உயர்குலத்தோராகவும் பிறவி மாறுவதற்கு நியாயம் என்ன? அதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.
ஸனத்குமாரர் கூறலானார்: வியாசரே! உயர்ந்த பிறவியை அடைந்தும் அந்தப் பிறவியைக் காத்துக் கொள்ளும் பகையை அறியாமல் இழிந்த பிறவியை அடைகிறார்கள் ஆகையால் புத்திமான், தன் பிறவியைக் காத்துக் கொள்ள முயலவேண்டும் அந்தணன் க்ஷத்திரிய மங்கையிடம் பிள்ளையை உண்டாக்குவானாகில், அவன் பிராமணத்துவம் நீங்கி க்ஷத்திரியனாகிறான். இவ்வாறு தன்னிலும் குறைந்த குலத்தாருடன் சங்கமம் செய்வதால் பல சாதிகள் உண்டாகின்றன. அவுபாசன அக்னி ஹோத்திரங்களைச் செய்தவனும் வேதசாஸ்திரங்களை உணர்ந்தவனுமாகிய வேதியன், சூத்திரச் சோற்றை உண்டு, அது வயிற்றில் இருக்கையிலேயே இறப்பானாயின் சூத்திரப் பிறவியை அடைவான். சுபகரமான அந்தணனாகப் பிறந்தும் உண்ணத் தகாத பதார்த்தங்கள் அதாவது இறைச்சியை உண்டவன் க்ஷத்திரியனாகப் பிறப்பான். சூத்திரனாக இருப்பவனும் புத்திமானாகி நற்கர்மங்களைச் செய்வானாகில் வைசியப் பிறவியை அடைவான். சூத்திரன் தன் குல தர்மத்தை அனுசரித்து தன் மேல் குலத்தார் மூவருக்கும் பணி புரிவானேயாகில் வைசியனாகப் பிறப்பான். வைசியன் அறநூல்களை உணர்ந்து அவற்றின் படி நடந்து அதிதிகளைப் பூஜித்து. அதன் மிகுதியைச் சாப்பிடுவானேயாகில் க்ஷத்திரியனாகப் பிறப்பான் க்ஷத்திரியனாகப் பிறந்தவன் நல்வழியில் சம்பாதித்த திரவியத்தால் யாகங்களைச் செய்து. தேவர்கள் திருப்தி செய்வித்து, வேத சாஸ்திரங்களைப் பயின்று காரூகாபத்யம், ஆகவனீயம் தக்ஷிணாக்கினி ஆகியவற்றைப் பூஜித்து எப்போதும் தானம் கொடுப்பதால் நனைந்தகையனாய்ப் பூமியைப் பரிபாலிந்து தன் பத்தினி ருது காலத்தில் கூடிக்கலந்து அறம், பொருள், இன்பம் என்பனவற்றை அனுபவிக்க விரும்பி கோப் பிரமணர்களைக் காத்து புறமுதுகு காட்டாமல் போர் செய்து தேகத்தைக் கழிப்பானாயின் அவன் அந்தணப் பிறவியெடுத்து வேத சாஸ்திரங்களை உணர்ந்து யாகாதி காரியங்களைச் செய்து வேத பதவியை அடைவான். ஆகையால் பிராமணத்துவம் பெரு முயற்சியுடன் அடைய வேண்டியதாகி இருக்க, அதை அடைந்தும் காத்துக் கொள்ளாமல் கைவிடுதல் உசிதமல்ல இவ்வாறு ஸனத்குமாரர் கூறினார். அப்போது வியாச முனிவர் அவரை நோக்கி, மகாஞானியே போர்களத்தில் மடிந்துபோன க்ஷத்திரியன் பிராமணனாகப் பிறப்பான் என்று கூறினீர்களே, அந்த யுத்தத்தின் மகிமை என்ன? அதைக் கேட்க விரும்புகிறேன் என்றார்.
ஸனத்குமாரர் கூறலானார் வியாசரே! யாக காலத்தில் பெருந்தக்ஷிணை கொடுத்தால் வருகின்ற பயனும் யுத்தபூமியில் உயிரை விட்டவன் பெறும் பயனுக்கு ஈடாக மாட்டாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் தங்கள் ஆயுதத்தால் அடையும் பயன்களைச் சொல்லுகிறேன் கேளும் பகைவர்களின் படைகளை அழித்து வீர வெற்றியடையும் குரனுக்கு அறம் பொருள் இன்பம் எனப்படும் மூன்று விதப் புருஷார்த்தங்களும் கை கூடும், மேலும் பெரும் புகழையும் யாகஞ் செய்த பயனையும் அவன் அடைவான் பகைவனை வென்று அவனது வாகனத்தில் ஏறிக் கொண்டவன், விஷ்ணு பதவியை அடைவான் போர்க்களத்தில் பகைவர்களை ஆயுதத்தினால் அடித்து, பகைவரது ஆயுதத்தால் அடிப்பட்டு உயிர் துறப்பவன் அஸ்வமேதஞ் செய்த பயனை அடைவான். அரசன், அமைச்சன், தளபதி யுத்த வீரன் முதலியவர்களில் யாராவது விடப்பட்ட ஆயுதங்களால் உடலுள்ள உரோமங்கள் எத்தனை அழிகின்றனவோ அத்தனைக்காலம் புண்ணிய லோகத்தையும் வீர சொர்க்கத்தையும் அடைவான், பசு வதைச் செய்தவனாயினும் பிரமஹத்தி செய்தவனாயினும் பசுவின் நிமித்தமாகவும் பிராமணன் நிமித்தமாகவும் தன் தலைவனை முன்னிட்டுப் போர்க்களத்தில் உயிர் நீத்தவன் சுவர்க்கத்தை அடைவான். போர்க் களத்தில் பயமின்றி தன் படைகளை காத்துப் போராடியவனும் தன்னால் சாத்தியமின்றி உயிர் விட்டவனும் மேற்கூறிய பயனையே அடைவான். யுத்தகளத்தில் உயிர் நீங்கித்தன்தேகத்தைப் பூதப்பிரேத பைசாசங்களுக்கும் கழுகு கூளி பருந்து முதலிய பிராணிகளுக்கும் விநியோகஞ் செய்தவன் குறைவற்றப் பதவியை அடைவான். தானம், தர்மம், யாகம் முதலியயாவுஞ் செய்யக்கூடும் பிராணனை விடுதற்கு மட்டும் ஒருவனும் மனந்துணியாதலால் அதை வெறுத்துத் தைரியத்துடன் யுத்தம் செய்தவன் எல்லாத் தானங்களையுஞ் செய்த பயனை அடைவான். இனிக் கொல்லத் தக்கவர்களையும் கொல்லாமல் விடத்தக்கவர்களையும் சொல்கிறேன். வீட்டைத் தீயிட்டு விஷ மூட்டுபவன் அஸ்திரத்தால் அடிப்பவன். சமயம் அறிந்து மோசஞ் செய்யக் கருதியவன் முதலியவர்கள் வேதியராகவே இருந்தாலும் அவர்களைக் கொல்லலாம்! அவர்களைக் கொல்வதால் பிரமஹத்தி தோஷம் சம்பவிக்காது சிறிது தோஷமிருந்தாலும் அது சொற்பப்பிராயச் சித்தத்தால் ஒழியும் தன்னைக் கொல்லத்தக்கப் பகைவராக இருந்தாலும் யுத்த பூமியில் தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டவனும் நோயாளியும் பலவீனனும் வாலிபனும் பெண்களும் வில் ஒடிந்தவனும், நிராயுதபாணியும் நாணறுந்தவனும் ஆகிய இவர்களைக் கொன்றவன் பிரமஹத்தித் தோஷத்தை அடைவான். குடுமியவிழ்ந்தவனும் வெறிப் பிடித்தவனும் சருகைக்கையால் பற்றியவனும் பூமியை வாயால் கவுவியவனும் உன் ஊழியன் என்று சொன்னவனும் என்னைக் காக்க வேண்டும் என்றவனும் கிழவனும் யுத்தப் பயிற்சியில்லாதவனும் நபும்சகனுமாகிய இவர்களைக் கொன்றவனும் பிரமஹத்தி தோஷத்தைச் சந்தேகமின்றி அடைவான். வியாசமுனிவரே! பெரிய யாகங்களால் கஷ்டப்பட்டு அடையத் தக்க உயர்பதவியை யுத்தகளத்தில் தன் தேகத்தை விடுப்பதனால் சுலபமாக அடையலாம். ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும் சிøக்ஷ! வியாகரணம் சந்தஸ் நிருத்தம் சோதிடம் என்ற ஷடங்கங்களோடு அத்தியயனஞ் செய்து வனத்தை அடைந்து வானப்பிரஸ்தாசிரமத்தை ஏற்று யோகத்தைப் பயின்றவர்கள் அடையக் கூடிய கதியை(சங்கிரமயாகத்தை) யுத்தமாகிய யாகத்தில் தன் உடலான அவிசைக் கொடுத்தவன் சந்தேகமின்றி அடைவான்! இவ்வாறு ஸனத்குமாரர் உரைத்தார்.
41. கர்ப்ப வாசம்
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, மாதவரே கர்ப்பவசத்தில் ஜீவன்கள் அடையும் துன்பங்களை விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஸனத்குமாரர் கூறலானார். வியாச முனிவரே! நரக வேதனையிலிருந்த பிராணிகள் கர்ப்ப வாசத்தை அடைகிறார்கள். அதில் அவரவர்களுடைய புண்ணிய பாவங்களின் விளைவாக நால்வகை யோனிகளில் பிறக்கிறார்கள். அவை செடி முதலிய உத்பீஜமும், கிருமி, கீடம் முதலிய வேதஜமும் முதலை, ஆமை, பறவைகள் முதலிய அண்டஜமும் சதுஷ்பாத ஜந்துக்களாகிய மிருகங்களும் மானுடராகிய சாரயுசமும் ஆகும். பூமியானது ஜலத்தால் நனைந்தும் சூரியன் முதலிய தேஜஸால் தபிக்கப்பட்டும் வாயுவினால் வீசப்பட்டும், ஆகாச சம்பந்தமாக ஒரு விதை உண்டாக்கப் பெற்றுச் சரியான ருதுவில் பரிபக்குவப் பட்டு மீண்டும் மழையினால் நனைக்கப்பட்டு அதிலிருந்து முளையுண்டாகி அந்த முளையிலிருந்து இலைகள் வெடித்து, இலைகளிலிருந்து காம்புகளுண்டாகி அதிலிருந்தும் கிளைகளுண்டாகி, அவற்றிலிருந்து மலர், காய் கனி முதலியன உண்டாகின்றனயவை முதலியவை. பதினேழு வகைப்பட்ட திருணங்களிலிருந்து தோன்றும் ஓஷதிகளெல்லாம் பலனையே முக்கியமாகக் கொண்டவை. இவற்றை அறுத்தல், இடித்தல், சமைத்தல், முதலியவற்றைச் செய்த அறுசுவையோடு உண்டு ஆன்மாக்கள் விருத்தியாகின்றன. இத்தகைய அன்னமானது தன்னைப்புசித்தவர்களின் பிராணனைப் பாதுகாக்கும் அவ்வாறு புசிக்கையில் பிராணவாயுவானது அன்னம் வேறு, ஜலம் வேறுமாகப் பிரிக்கின்றது. அதனால் ஜடராக்கினியின் மேலே ஜலமும் ஜலத்தின் மேலே, அன்னமுமாக நிற்கும். அபானவாயுவானது ஜடராக்கினியை எழுப்ப ஜடராக்கினி வயிற்றிலுள்ள ஜலத்தை அதியுஷ்ணமாக்கும் அந்த ஜலத்தின் உஷ்ணத்தினால் அன்னமானது மீண்டும் பசனஞ் செய்யப்பட்டு அன்னரசம் வேறாகவும் அதன் திப்பிவேறாகவும் பிரிக்கப்பட்டு, காதுகள், கண்கள், நாசி, கை, நாக்கு, தந்தம் சின்னம் குய்யம், நகம், கபம், வெயர்வு என்னும் பன்னிரு மூலங்களால் மலமூத்திரங்கள் வெளிப்படும் அன்னரசமோ, இதயத் தாமரையில் எல்லா நாடிகளும், சொந்த முற்றிருத்தலால் பிராணவாயு அந்த இதயகமலத்தில் சந்தித்துள்ள நாடிகளின் முகத்திற் செலுத்த அந்நாடிகள் நன்றாக இரசமயமாகித் தம் மூலமாக அதனை உடல் முழுவதும் பரவச் செய்யும் இதயத்தில் வந்தபொழுதும் நாடிகளின் நடுவிலுள்ள பொழுதும் அந்த அன்னரசத்தை உடலின் அக்கினியானது இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் துவக்கு (மெய்) அகவும் ஒருபாகம் உதிரமாகவும் மாற்றும் உதிரத்தால் இறைச்சியும் உரோமங்களும் உண்டாகும், மாமிசத்திலிருந்து நரம்புகளும் தலைமயிரும் உண்டாகும் நரம்புகளிலிருந்து எலும்புகளும் நகங்களும் உண்டாகும் எலும்புகளிலிருந்து கொழுப்பு உண்டாகும். கொழுப்பிலிருந்து சுக்கிலம் உண்டாகும். இது தான் பிரசவத்திற்கு காரணமாகும்; சுக்கிலமானது பெண்ணின் ருதுகாலத்தில் அவளுடைய குறியில் சுரோணிதத்தோடு கலந்து அந்தப் பெண்ணின் இரத்த சம்பந்தத்தால் ஜீவன் தன் கர்மத்தினால் செலுத்தப் பட்டுப் பிண்டமாகும்.
சுக்கில சுரோணிதங்கள் கட்டிய பொழுது ஒரு தினத்திலேயே சிறிது கடினமாய், ஐந்து தினங்கள் வரையில் அப்படியே இருந்து அதன் மேல் புற்பதம் போலாகி ஏழு தினங்களுக்கு மேல் பதினான்கு தினங்களில் ரத்த மாமிசங்கள் நிரம்பிய மாமிசப் பையாகி இருபத்தைந்து தினங்களுக்குள் அந்தப் பீஜத்தின் மூளை தோன்றுவதாகி, ஒரு மாதத்தில் பஞ்ச பூத சம்பந்தமடையும், இரண்டு மாதத்தில் அது ஸ்தூல பிண்டமாகி மூன்று மாதத்தில் எல்லா அவயவங்களில் ஆரம்பம் அடைந்து நான்கு மாசத்தில் கைவிரல்கள் உண்டாகி ஐந்து மாதத்தில் முகம், நாசி, காதுகள், உண்டாகி ஆறுமாதத்தில் பல்வரிசை குய்யம், நகம், காதுத்துவாரம்உண்டாகும் ஏழு மாதத்தில் தொப்பூழ் குறியில் பிற அங்கங்களில் முழுத்தோற்றமும் உண்டாகி எட்டு மாதத்தில் தலைமயிர் முதலியவற்றுடன் பூரணமாகி. பரிபக்குவமடைந்து தாய் உண்ணும், அன்னரசத்தை கொப்பூழ் வழியாக உட்கொள்ளும், பிறகு ஜன்மாந்தர உணர்ச்சி உண்டாகித்தான் அனுபவித்த சுகதுக்கங்களையும் பிறவிகளையும் கருதி; தான் பலவித யோனிகளில் ஜனித்திருந்து அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அறிந்து இனி பூவுலகில் பிறவி எடுக்காமலிருக்கும் படியான வழியை யோசிக்கிறான். பிறவியெடுத்தவுடனே சிவஞானத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு ஜீவனானவன் கருமத்திற்கேற்ப துக்கங்களை அனுபவித்து முக்திக்குரிய உபாயத்தை நாடி எண்ணமிட்டுக் கொண்டு, வழிப்போக்கன் மலை செடி கொடி முதலியவைகளால் தடைப்படுவது போலக் கர்ப்பாசயப் பையால் கட்டப்பட்டுத் துன்புற்றும் கடலில் வீழ்ந்தான் துன்புறுவது போலவும் கர்ப்பத்தில் பூரித்த ஜலத்தால் வருந்தியும் இருப்புக் கொப்பரையில் ஜலத்தோடிட்டுச் சமைத்தாற்போல உதிராக்கினியால் வருந்தியும் காய்ச்சிய இரும்பூசியில் குத்தப்படுவான் போலத்தாயின் கர்ப்பத்திலுள்ள கரம்புகளால் குத்தப்பட்டும் வருந்துகிறான். துக்கங்களில் எல்லாம் கர்ப்பத்தில் அனுபவிக்கிற துக்கத்தைவிட அதிகமானது வேறொன்றில்லை! இந்த வேதனைகளெல்லாம் ஏழு மாதத்திற்கு மேல் ஜீவனுக்கும் புலப்படும் ஆலையிலிடப்பட்ட கரும்பைப் போலவும் செக்கிலிட்ட எள்ளைப்போலவும் பாபமாகிய இரும்பு உலக்கையால் அடிக்கப்பட்டும் கருவடிவமான ஜீவன் துன்பமடைகிறான். இரத்த மாமிசங்களால் நிரம்பப் பெற்று மலமூத்திரங்கள் பொதிந்து தலைமயிரால் மூடப்பட்டு ரோகங்களுக்கெல்லாம் வாசஸ்தானமாகவும் வாயே பெருந்துவாரமாகவும் உதடுகளில் கொள்ளும் ஈழை நீரும் சொரியவும் போகத்தில் அத்யந்தமான மோகத்தோடும் இராகத் துவேஷாதிகளால் நிரம்பப் பெற்றும் திரும்புவதற்கும் இடமின்றி இருக்கையில் பிரசூத வாயு முறித்துத்தள்ள யோனிவழியில் நெருக்குண்டு வெளிப்படுத்தப்பட்டு ஸ்மரணையில்லாமல் நிலமிசை தோன்றிப்பூமியை ஸ்பரிசித்தவுடன், தன் கர்ப்பகால வாசத்தின் எண்ணங்களையெல்லாம் மறந்து விடுகிறான். அஞ்ஞானம் மூடப்பட்டும் மீண்டும் பிறவியைத் தரத்தக்க உலக இன்பத்தையே விரும்புகிறான் மலமூத்திரத்தால் நனைந்து நிலத்தில் வீழ்ந்த ஜீவனுக்கு எலும்பின் கூடான உடம்பில் மூன்றரைக்கோடி உரோமங்களும் மூனரரைக் கோடி நாடிகளும் முப்பத்திரண்டு பற்களும் இருபது நகங்களும் ஒருபடி பித்தமும் குருணி கபமும் இருபது பலம் நிணமும் பத்துப் பலம் கபிலரத்தமும் பன்னிரண்டரை பலம் மேதையும் மூன்று பலம் அகாரக்தமும் பன்னிரண்டு பலம் மஞ்ஜையும் அரைப்படி வீரியமும் ஆயிரம் பலம் இறைச்சியும். நூறு நலம் இரக்தமும் தேகமானது அசுத்தமாக இருந்தாலும் பரிசுத்தராகிய பரமபதியால் அருளப்பட்டதாய் நித்தியமான ஆன்மாவுக்கு வாசஸ்தானமாக இருக்கிறது அந்தப் பரமபதியால் ஆன்மாக்களின் வினைக்கீடாக சுக்கில சுரோணிதங்களால் இந்தத்தேகம் ஆக்கப்பட்டது.
சதா மலமூத்திரங்களால் நிரம்பப் பெற்று அசுத்தமானதாய் பஞ்ச கவுவியம் முதலிய பரிசுத்த வஸ்துக்களால் பரிசுத்தஞ்செய்தாலும் சீக்கிரம் அசுத்தமாகக் கூடிய தாய், சுகந்த வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் துர்நாற்றம் வீசும் இந்த உடம்பைவிடத் துர்க்கந்தமானது பிறிதொன்றும் இல்லை மலையிலிருந்து அருவியாறுகள் பாய்வது போல இந்தத் தேகத்திலிருந்து கபம், மூத்திரம் மலம் புரீடாதிகள் நாள் தோறும் வெளியேறுகின்றன. தன் தேகமாக இருந்தும் மலமூத்திராதிகள் வரும் வழியை மண்கொண்டும் நீர் கொண்டும் தேய்த்து அலம்பி அருவருத்தும் மனிதர்கள் அந்தத் தேகத்திற்கே ஊழியஞ் செய்து கொண்டும் கந்த புஷ்ப வாசனாதிகளைச் சேர்த்து அழகு செய்தும் வருகிறார்கள் தன் உடலிலிருந்து வெளியாகும் புரேடங்களைக் கண்டும் அதனிடம் விரக்தியடையாதது ஏன்? இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் தங்கள் தேகத்திலிருந்து தோன்றும் அருவருப்புகளைக் கண்டும் அதன் மீதுள்ள பற்றுதலை விடாமல் மோகங்கொண்டு இருப்பவர்களைப் பற்றி என்ன வென்று சொல்வது? கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களினால் இடைவிடாமல் சுத்தஞ் செய்தாலும் மானிட தேகம் புனிதமாவது அல்ல. அது அவனுடைய மனத்தூய்மையினாலேயே புனிதமாக வேண்டும். நெருப்பிலிட்டுக் கொளுத்தினாலும் மனோசுத்தி இல்லாதவனுக்கு மோட்சம் உண்டாகாது. அது எப்படியென்றால் கங்கை முதலிய தீர்த்தங்களில் மீன் முதலிய நீர் வாழ்வனவும் சிவாலயங்களில் பறவைகள் முதலிய நிலமிசை வாழ்வனவும் சதா ஜீவத்திருந்தானும் புனிதமாகாததுபோல, சித்தி சுத்தியில்லாதவன் முக்தி அடையமாட்டான். ஆகையால் சகல விதமான பாவங்களைச் செய்தாலும் மோக்ஷம் அடைய மன சுத்தமே காரணமாக இருக்கிறது அது எப்படியென்றால் ஆண் பெண்கள் கட்டியணைத்துக் கலவி புரியும் சமயத்தில் வேறு எண்ணத்தோடு சம்பந்தப்படுவார்களானால் அதனால் உற்பத்தியாகும் குழந்தை தந்தை தாயைப்போல் இராமல் வேறு வடிவமாவதே சான்றாகும். தன் மனதிற்கு ரம்மியமில்லாத பெண்ணொருத்தி தன்னைப்பலவந்தமாக ஆலிங்கனம் செய்தாலும் தான் பிரியப்படுவதில்லை உண்பதற்கும் விளங்கும் பதார்த்தங்கள் யாவும் சமமாக இருந்தாலும் சிலர் ஒவ்வொன்றில் தன் மனத்தைச் செலுத்துவது போலக்காமக் குரோத லோபங்களில் ஈடுபடுவதும் இம்மனமேயாகும், அவற்றால் மனிதன் வசப்படுத்தப் படுகிறான். அப்படி வசப்பட்டதிலிருந்து விலகிப் பாவத்தை ஒழிப்பானாயின் மோக்ஷத்தை அடைவான். மனச்சுத்திக்காகவே (அகத்தூய்மைக்காகவே) தானம், யோகம் யாத்திரை முதலியவற்றைச் செய்கிறார்கள். ஞானம் என்னும் தூயநன்னீராலும் வைராக்கியம் என்னும் மண்ணினாலும் அஞ்ஞானம் என்னும் இராகத்துவேஷம் முதலானவற்றாலும் மலத்தைச் சுத்தி செய்து போக்குவானாயின் அவனே பிரமஞானியாகிறான்.
எவ்விதப் பிறவியை எடுத்தவர்களுக்கும் அஞ்ஞானத்தாலும் பலவித கர்மதோஷத்தினாலும் சம்சாரத்தைச் சுகமாக அனுபவிப்பவர்கள், சுலபமாக மோக்ஷமடைய அநேகம் கோடிக் கிரந்தங்களில் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அதாவது நான் என்னும் தற்போதம் கொள்வதே பெருந்துக்கமாகும் அதை ஒழிப்பதே பெருஞ்சுகமுமாகும். பற்பல அரசர்கள் மோக்ஷமடைந்திருக்கிறார்கள். கர்ப்பவாசஞ் செய்யும்போது உண்டாகும் ஞானமும், பெண்கல்வியின் முடிவில் உண்டாகும் ஞானமும் மயான ஞானபுராணம் கேட்கும் சமயம் ஏற்படும் ஞானமும் ஒருவனுக்கு நீங்காதிருக்குமேயானால் அவன் உலகசுகத்தை வெறுத்து மோக்ஷ சுகத்தை அடைவதில் சந்தேகமில்லை. பிறவியை எடுத்தவன் பெரியோரால் ஞானோபதேசம் செய்யப்பெற்றும் வினை வசத்தால் அதைக் கடைப்பிடியாமல் நல்வழியில் செல்லும்போது அலறுவான் போல மோக்ஷவழியிலிருந்து நீங்கி உலக வியாபாரங்களில் உழல்கிறான், வாலிபத்தில் புலன்கள் எல்லாம் நிரம்பப் பெருமையினால்தான் விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்து முடிக்கவும் சக்தியற்றவனாகி, பற்கள் முளைக்கும்போது துன்புற்று பாவக்கிரகங்களால் பீடிக்கப்பட்டு சாதாரண நோய்களையும் பெரியதாக அனுபவித்து, மலமூத்திராதிகளைப் புசித்து பசிதரகம் அடைந்த காலங்களில் அன்னபானாதிகளைப் பெறமுடியாமல் வருந்தி, பல வகையிலும் துன்புறுவான் குமாரப் பருவத்தில் காதுகுத்துதலால் வருந்தியும் வித்தியாப்பியாசத்தால் அடிபட்டு தன் மனம் போனபடி செல்லாமல் தன் தாய் தந்தையால் திருத்தப்பட்டும் துன்பம் அடைவான். யவுவன காலத்தில் பிறன் கல்வி செல்வம் உருவம் முதலியவற்றைக் கண்டு பொறாமை கொண்டும் ஒருவன் சொல்லிய அற்பவார்த்தைகளுக்கும் மானத்தால் கோபங் கொண்டும் பகற்காலத்தில் பொருள் தேட் கருதிவருந்தியும் இரவில் மன்மதாக் கினியால் தகிக்கப்பட்டும் மாதர்களிடம் மனதைச் செலுத்தி மெய் மறந்து இந்திரிய ஸ்கலிதம் செய்து கொண்டும், பலவீனனாகியும் மலமூத்திரங்களின் குழியாகியும், தான்பிறந்த இடமாகியும் மற்றும் அசங்கிதங்களெல்லாம் பொதிந்து கிடக்கும் இடத்தை உடையோராகிய மங்கையரிடம் விருப்பங்கொண்டு அதில் உழல்வதையே பரமசுகம் என்று எண்ணுகிறான். துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமாகவுள்ள மங்கையரிடம் அணுவளவும் சுகமில்லை என்று முன்புபஞ்சசூடை என்பவள் சொல்லியிருக்கிறாள் புருஷன் பெண்களிடம் வைத்த பிரியத்தால் அவர்கள் பிரியும் காலத்தில் மிகவும் வருந்தி யவுவன சுக்லத்தை அழித்து தேகம்குன்றி மயிர்நரைத்து, சந்நிபந்தங்கள் தளர்ந்து, பற்கள் உதிர்ந்து ஸ்திரீ புருஷர்களுக்கு பூர்வத்தில் ஆவலையுண்டாக்கிய அங்கங்கள் பிரியமற்றவனாகி கிழத்தன்மையால் பந்து மித்திரர்கள் ஊழியர்கள் முதலானோரால் அவமதிக்கப்பட்டு மனம் வருந்துகிறான். இத்தகையதுன்பங்களை அனுபவிக்கும் மனித தேகத்தைக் கண்டு வெறுக்காத வனைவிட அசேதனன் ஒருவனுமில்லை இளமைக் காலத்தில் தான் அறம், பொருள் இன்பங்களை நடத்தி, மோட்சத்திற்குரிய உபாயத்தை தேடிக் கொள்ள வேண்டுமேயன்றி வயோதிகத்தில் ஒன்றுஞ் செய்ய இயலாது.
42. பெண்களின் சுபாவமும், சுந்தரியின் சோதனைக் கதையும்
வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! பஞ்சசூடை என்பவள் பெண்களின் தோஷத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள் என்று சொன்னீர்களே? அவள் சொன்னவற்றை விளக்கிக் கூற வேண்டுகிறேன்! என்றார். ஸனத்குமாரர் கூறலானார். வியாசரே! பெண்களே தோஷங்களுக்கு இருப்பிடமாகவும் அற்ப புத்தியைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பு ஒரு சமயம் நாரத முனிவருக்கும், விபசாரியான பஞ்சசூடை என்ற ஓர் அப்ஸரப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும். நாரதர் உலக சஞ்சாரம் செய்து திரும்பும் போது பிரமனிடம் பிறந்த பெண்ணான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்து பஞ்ச சூடையே! என் மனத்தில் ஒருபெரிய சந்தேகம் உண்டு. அதை நீதான் தெளிவுபடுத்த வேண்டும்! என்றார். அதற்கு அவள், அது எனக்குத் தெரிந்த விஷயமானால் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை! என்றாள். பஞ்சசூடையே! உனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி நான் உன்னைக் கேட்கவில்லை. அழகியே! பெண்களின் சுபாவத்தைப் பற்றி நிச்சயமாக அறிய விரும்புகிறேன்! என்றார். பஞ்சசூடை நாரதரை நோக்கி. நாரதரே! பெண்களை ஒரு பெண்ணே நிந்திப்பது தர்மமல்ல இந்த விஷயம் தங்களுக்குத் தெரிந்தது தான். அதைப்பற்றி நீங்கள் என்னைக் கேட்பதும் தருமம் அல்ல! என்றாள். அதற்கு நாரதர் பெண்ணே! உண்மையைச் சொல்லுவது ஒரு போதும் தவறாகாது. பொய் சொன்னால் தான் தோஷம் உண்டாகும்! என்றார். பஞ்சசூடை சொன்னாள்.
நாரதரே! நற்குலத்தில் பிறந்தவர்களும் அழகிகளும் கணவர்களுடன் கூடியவர்களாக இருந்தாலும்கூட பெண்கள் உள்ளூறக் கட்டுப்பட்டு இருக்கமாட்டார்கள். இவ்வுலகத்தில் மங்கையரைக் காட்டிலும் பாவஜன்மங்கள் கிடையாது. என்பதை நீரும் அறிவீரன்றோ? கணவன் வேத சாஸ்திரங்களை உணர்ந்து செல்வந்தனாகவும் அழகியொருத்திக்கு சுவாதீனனாக இருந்தாலும் மங்கையர்கள் அவனை அன்பு பாராட்டி அணைக்காமல் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பரபுருஷரை விரும்பிக் கூடுவார்கள். மாதர்களான எங்களுக்கு, கணவனாக வாய்த்தவன் பேரழகனாக இருந்தாலும், வெட்கமின்றிப் பிற ஆடவரைக் கள்ளத்தனமாக கூடி மகிழ விரும்பும் பெருந்துர்க்குணம் உண்டு அருகிருந்தாலும் தன்னை அன்போடு நடத்தினாலும் கணவனை விட்டு விட்டுத் தான் விரும்பியவன் தொலைவில் இருந்தாலும் அவன் தன்மீது சிறிதும் அன்பு பாராட்டாமல் இருந்தாலும் அந்த அயலானிடத்திலேயே மனத்தைச் செலுத்தி மங்கையர்கள் மகிழ்வார்கள். மாதர்கள் ஒரு போதும் பதிபக்தியுடன் இருப்பதில்லை. ஆனால் தங்களை நாடிக் கொஞ்சும் ஆடவர் கிடைக்காமையாலும் பலர் கண்டு அவமதிப்பார்களே என்னும் பயத்தாலும் சந்தர்ப்பம் வாய்க்காமையாலும் பதிபக்தி செய்பவர்களாகத் தோற்றமளிப்பார்கள்! தக்கவன் என்றும் தகாதவன் என்றும் கிழவன் என்றும் வாலிபன் என்றும் அழகன் என்றும் அவலட்சணமானவன் என்றும் மங்கையர்கள் பார்க்கமாட்டார்கள், கணவனாவதை மட்டும் திருப்திகரமாகக் கொள்வார்கள். பயம் தயை செல்வம், உணவு தாய் தந்தையர், கணவன் இவர்களுக்குப் பயந்தும் கணவனுக்கு சுவாதீனப்பட மாட்டார்கள். நல்லகுல மங்கையரும் ஆடையாபரணங்களை அணிந்து தங்கள் மன விருப்பப்படியே திரியும் தாழ்ந்த குலப்பெண்களுக்குச் சமமாகவே நடக்க விரும்புகிறார்கள். கணவன், அதிக அன்போடு நடத்தி வருவானாயினும் கூனன், குருடன், நொண்டி குரூபி முதலிய அன்னிய ஆடவரையே ஆரணங்குகள் உள்ளூற விரும்புவதும் உண்டு மாதர்கள் மனம் விரும்பாத ஆடவனே உலகத்தில் இல்லை. பெண்கள் தங்களுக்கு ஆடவர்கள் நெருங்கி வராவிட்டால் கொள்ளப் பார்ப்பார்கள். தங்கள் மோக விருப்பத்திற்கேற்ற பிற ஆடவர் கிடைக்காததாலும் உற்றார் உறவினர்கள் உணர்ந்தால் தண்டிப்பார்களே என்ற பயத்தாலுமே அவர்கள் பயந்தவர்களாக இருப்பார்களேயன்றிச் சத்தியத்திற்குப் பயந்து நடப்பதில்லை. மங்கையர்கள் மரத்தின் இலைகளைப் போலவும் கடலின் அலைகளைப் போலவும் அலைகிற மனமும், கடலில் ஆழந்தைப்போலவும் கண்டறியப்படாத மன ஆழமும் கொண்டவர்கள் எத்தனை விறகுகளாலும் திருப்தியடையாத நெருப்பைப் போலவும் எத்தனை ஆற்று நீர்களாலும் திருப்தியடையாத பெருங்கடலைப் போலவும் எத்தனை உயிர்களாலும் பூர்த்தியடையாத யமபுரம் போலவும் எத்தனை ஆடவரை அடைந்தும் அவர்கள் திருப்தி அடையமாட்டார்கள். தேவ முனிவரே! மற்றொரு இரகசியமும் உண்டு. அதையும் உமக்குச் சொல்லுகிறேன். அழகான ஆடவனைக் கண்ட மங்கையிடம் மோகரசம் பெருக்கெடுக்கிறது. நீராடி. ஆடை அணிமணிகள் புனைந்து அலங்காரமாகக் கண்ணெதிரே செல்லும் விட புருஷனைக் கண்டதும் காரிகைக்கு காமரசம் தானே பிரவாகிக்கிறது. இச்சித்த பொருள்களை யெல்லாம் கொடுப்பவனாயினும் தன் கணவனிடம் மனம் விரும்பி நிலைநிற்க மாட்டார்கள் ஆடை, ஆபரணம், மலர், மணம், வாசனைத் திரவியம் முதலியவற்றை அளவில் அடங்காமல் கொடுத்தாலும் ஆசை அடங்கக் கொடுத்தாம் காமத்தில் திருப்தியடையமாட்டார்கள். அந்தகன், சமனன், மிருத்யு, பாதாளம் வடவாக்கினி, வானின் முனை விஷம் கிருஷ்ண சர்ப்பம். பிரளயாக்கினி இவற்றின் குரூரம் எல்லாம் மங்கையரின் குரூரத்திற்கு ஈடாகமாட்டா பிரம தேவர் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தபோது பாவங்கள் யாவையுஞ் சேர்த்தே பெண்களைப் படைத்திருக்கிறார்! என்று பஞ்சசூடை நாரதருக்குச் சொன்னாள்.
இவ்வாறு ஸனத்குமாரர் கூறியதும், வியாசர் அவரை நோக்கி, அறிஞரே! ஸனத்குமார முனிவரே! மங்கையர் மன்மதனால் பீடிக்கப்பட்டு மந்த புத்தியை உடையவர்களாய் நீங்கள் சொன்ன துர்நடத்தைகளையே இயற்கையாகக் கொண்டுள்ளார்கள். அத்தகைய மாதர்களிடம் எப்படி ரமிக்கிறார்கள்? ஆண் பெண்களில் மன்மதனை ஜெயித்தவர்கள் ஒருவரும் இல்லை என்றும் தெரியவருகிறது! மாதர்களைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்னோடு சேர்ந்து தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும், என்று அக்கினி சாக்ஷியாகச்சத்தியஞ் செய்து கொள்வதுங்கூட வீணானதே என்று நினைக்கிறேன். பெண்கள் சபலபுத்தியுடையவர்கள் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது திருமணத்தின் போது பதிவிரதா தர்மத்தை அனுசரிக்கும்படிச் சொல்லுகிற மந்திரங்கள்யாவுமே உபசாரமாகத் தோன்றுகின்றன வேயன்றி உண்மையென்று புலப்படவில்லை. இது விஷயத்தில் என்மனம் மிகவும் சந்தேகம் அடைந்திருப்பதால், தாங்கள் கேள்விப்பட்ட வகையிலேயே விபரமாக இன்னுஞ் சொல்ல வேண்டும் என்று கேட்டார், அதற்கு ஸனத்குமார முனிவர் சொன்னார்.
வியாச முனிவரே முன்பு அஷ்டாவக்ரர் என்ற முனிவருக்கும் திஸா என்ற பெண்ணுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும். அஷ்டாவக்ர முனிவர், வதான்ய முனிவர் என்பவரை கண்டு அவருடைய மகளான பிரபா என்ற கன்னிப்பெண் குணவதியாகவும் பதிவிரதையாகவும் நல்ல நடத்தையுடையவளாகவும் ரூபவதியாகவும் இருந்ததால் அவளைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு வதான்யுமுனிவர் அஷ்டவக்கிர முனிவரை நோக்கி, நீ வடதிசைக் கன்னியைக் கொண்டு வந்து மணஞ் செய்து கொள்ளும் என்றார். அதற்கு அஷ்டாவக்கிரா வடதிசையில் எங்கு சென்று யாரைக்காண வேண்டும்? என்று கேட்டார். அதற்கு வதான்யர் நீ இமயமலையை அடைந்து குபேரலோகத்தைக் கடந்து சித்த சாரணர் வசிக்கும் உருத்திர லோகத்தையும் கடந்து சென்றால் நீர் கொண்டமேகம் போலக் கருமையாகவும் பசும் புற்களையுடையதுமான ஒரு வனத்தைக் காண்பாய்! அந்த வனத்தில் பெருந்தவத்தினளாகவும் பேரழகியாகவும் தீøக்ஷயுடையவளாகவும் விளங்கும் ஒரு மங்கை இருப்பாள். அவளை நீ அவசியம் பார்க்கவேண்டுவும் நீ அவளைப் பார்த்து விட்டுத் திரும்பி வருவாயானால் என் பெண்ணை நான் உனக்கு திருமணம் செய்து கொடுக்கத் தடையில்லை நீ சத்தியம் தவறாமல் அவ்விடத்திற்குப்போய் வரவேண்டும் என்று கூறினார். அதற்கு அஷ்டாவக்கிரர் அப்படியே நீங்கள் சொன்ன இவத்திற்குப் போய் அந்தப் பெண்ணைக் கண்டு பேசி விட்டு வருகிறேன் நீங்கள் மட்டும் வாய்மை தவறாமல் உங்கள் பெண்ணை எனக்குத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சித்த சாரணர்கள் வசிக்கும் இமயமலையை அவர் தாண்டி எல்லாப் பாபங்களையும் ஒழிக்கும் பாஹுதா என்ற நதியைக்கண்டு விதிப்படி அதில் நீராடி அனுஷ்டானங்களை முடித்து அன்று அங்கு தங்கி மறுநாள் உதயத்தில் அங்கேயே நீராடி, உத்ருதிராணி கூபத்தில் மூழ்கி அங்கொரு நாள் இருந்து மறுநாள் கைலாயத்தை நோக்கிப் போனார். அப்போது யக்ஷர் வசிக்கும் தீரத்தையுடைய மந்தாகினியாற்றில் அவர் நீராடி அதன் கரையில் அனுஷ்டானஞ் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த யக்ஷர்கள் அவரை நோக்கி மாதவரே! எங்கள் தலைவனான குபேரன் உம்மைக் காண இங்கு வருவதால் நீங்கள் இங்கேயே சிறிது நேரம் இருக்க வேண்டும் என்று சொல்ல அவர் அவ்வாறே இருந்தார்.
குபேரன் அவ்விடம் வந்து அஷ்டாவக்கிர முனிவரைவிதிப் படிப் பூசித்து, சுவாமி! தங்கள் என் பட்டணத்திற்கு வந்து என்னால் செய்யப்படும் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டினான். அதற்கு இணங்கிய அஷ்டாவக்கிரர் அவனோடு சென்று குபேரப் பட்டணமான அழகாபுரியை அடைந்தார். அங்கு குபேரன், அம்முனிவரை அர்க்ய பாத்யாங்களால் உபசரித்து, திவ்விய ஆசனம் முதலியன உதவி மதுவர்க்கங்களைக் கொடுத்து உபசரித்தான், பிறகு அவன் ஞானியே! என்னிடமிருக்கும் அப்ஸர மங்கையரை நாட்டியஞ் செய்ய உத்தரவு கொடுத்தால் நடிக்கச் செய்கிறேன். நீங்களும் மகிழ்ச்சியடையலாம் என்றான். முனிவரும் இணங்கினார். அதனால் கிருதாசி, மிஸ்ரகேசி, ஊர்வசி, ரம்பை. முதலாக அப்சரமங்கையர் வீணா வேணு மிருதங்கம் முதலிய வாத்தியங்களோடும் பாடல்களோடும் நடனமாடினார்கள். அந்த ஆனந்தத்திலேயே தேவவருஷம் ஒன்று கழிந்தது. அதை உணர்ந்ததும் குபேரன் கும்பிட்டவனாய் எவ்வளவு காலங் கழிந்தது? இனி நான் என்ன செய்யத்தகும்? என்று கேட்டான். அஷ்டாவக்கிர முனிவர் குபேரனை நோக்கி நான் உன்னால் சிறப்பாகப் பூஜிக்கப் பெற்று பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் இனி என் விருப்பப்படி நான் செல்ல விடையளிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்று அங்கிருந்து வடதிசை நோக்கிப் புறப்பட்டு கைலாயம், மந்தரம் ஹேமம் ஹரபர்வதம் முதலான புனித மலைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு மேலும் சென்று சம்மாயும் மனோரம்மியமாகவும் புண்ணிய பூமியாகவும் விளங்கும் ஒரு வனத்தைக்கண்டார்.
இயற்கை வளங்கொழிக்கும் அந்த வனத்தில் அவர் ஓர் ஆசிரமத்தையும் கண்டார். அந்த ஆசிரமத்தில் சந்திரமண்டலத்தைப் போலப் பிரகாசமாயும் வைரத்தால், தூண்களும் வைடூரியத்தால் திண்ணைகளும் சந்திரகாந்தத்தால் இழைத்த சுவர்களும் நிலைக்கண்ணாடிகள் பதிக்கப் பெற்ற அறைகளும் பொற்கலசங்களும் ஸ்படிகச் சாளரங்களும் முத்துச்சரத்திரைகளும் தேவர்கள் சஞ்சரிக்கும் விமானங்களும் முத்துத்தோரணங்களும் கொண்ட ஒரு வீடு தென்பட்டது. அதன் வாசற் படியை அஷ்டாவக்கிர முனிவர் அடைந்து நான் எப்படி அதனுள்ளே நுழைவேன்? என்னை அதிதி என்று உபசரிப்பவர்கள் யார்? என்று எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது பல வித ஆபரணங்களால் அலங்கரிப்பட்ட ஏழு கன்னியர்கள் உள்ளேயிருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருத்தியும் சமமான அழகும் ஆபரணங்களும் இளமையும் ரதிதேவி போன்ற வடிவம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் முனிவரை கைகூப்பி வணங்கி சுவாமி! தாங்கள் எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என்று வேண்டினார்கள். பொற்கொடி போன்ற அப்பேரழகிகளின் வீணாகானம் போன்ற குரல் ஒலியை முனிவர் கேட்டு மனங்குளிர்ந்து அவர்கள் தம்மை அழைத்ததற்காக மகிழ்ந்து ஆச்சரியத்துடன் உள்ளே சென்றார். அங்கு ஒரு சப்ரகூட மஞ்சத்தின் மீது ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் மாசுமருவற்ற ஆடை புனைந்து அணிமணிகள் அனைத்தும் பூண்டு திவ்வியமான பேரழகுடன் மின்னற்கொடி போல விளங்கினாள். அவள் முனிவரைக் கண்டதும் எழுந்து வந்து வணங்கினாள், அவளை முனிவர் வாழ்த்தினார். அந்தக் கன்னிகை அவருக்குத் திவ்விய இருக்கை தந்து அமர்ந்திருக்கச் செய்தாள்.
அப்போது அஷ்டாவக்கிரர் அந்த எட்டு கன்னிகைகளையும் பார்த்து, பெண்களே! நான் சிரமபரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஆகையால் உங்களில் மனஞ்சலியாதவள் யாரோ அத்தகைய ஒருத்தி மட்டும் சிறிது நேரம் என்னிடம் பணிவிடை செய்வதற்காக இங்கு இருக்கலாம். மற்றவர்கள் அந்தப்புரத்திற்குச் செல்லலாம்! என்றார். அதைக் கேட்டதும் வனிதையர்களில் எழுவர் அஷ்டாவக்கிரரை கும்பிட்டு விட்டு அந்தப்புரத்திற்குச் சென்றார்கள். முனிவர் அங்கு ஒரு பஞ்சணையில் படுத்துக் கொண்டார். அருகிருந்த கன்னிகை மனஞ்சலிப்பில்லாமல் பலவிதமாகவும் அவரை உபசரித்தாள். அப்போது முனிவர் தமக்குப் பணிவிடை செய்பவளை நோக்கி, பெண்ணே! இராக்காலம் வந்து விட்டது. இனி நானும் தூங்க வேண்டும். ஆகையால் நீ வேறு ஒரு படுக்கையில் படுத்து உறங்கு! என்றார். கன்னிகையும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு சென்று மற்றொரு படுக்கையில் படுத்தாள். சிறிது நேரமேபடுத்த அம்மங்கைக்கு தூக்கம் வரவில்லை. குளிர்கிறதே என்ற பொய்க் காரணங்காட்டி அஷ்டாவக்கிரரின் படுக்கையை அடைந்து ஒரு பக்கமாகப் படுத்துக் கொண்டு, சுவாமி என் அருகில் வாரும் எனக்குக் குளிர்கிறது! என்று சொல்லி அவரைத் தன் இருகைகளாலும் இறுகத் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டாள். முனிவரோ மரம் போலவும் கல்லைப்போலவும் சலனமற்ற மனமுடையவராக இருந்தார். அந்தக் கட்டிளம் பெண்ணோ அவர் மனங்கலங்காமையால் துக்கப்பட்டு பாணங்களால் காமாவஸ்தைப் பட்டு அந்தணோத்தமரே! ஆண்களை விடப்பெண்களே காம விஷயத்தில் தைரியசாலிகள் என்பார்கள். நீங்கள் என் விஷயத்தில் தயவு செய்யாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? நானாகவே உம்மிடம் வந்தேனாகையால் என்னை மனவிருப்பத்தோடுக் கட்டியணைத்து மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும்! பற்பல ஆண்டுகள் உடல் வருந்தித் தவஞ் செய்து அடைய வேண்டிய சுவர்க்கலோக சுகத்தையெல்லாம் நான் இப்போதே உமக்குத் தருவேன்! இதனால் உம்முடைய தவக்குறைய மாட்டாது என்னைத் திருப்தி செய்வீரானால் எல்லா விதமான சுகங்ளையும் தங்கு தடையில்லாமல் நீர் அடையலாம். என் வீட்டையும் செல்வவளத்தையும் பாரும் நீரே இவற்றுக்கெல்லாம் எஜமானராவீர்! இங்குள்ள மரங்களின் அமிர்தமயமான பழங்களைச் சாப்பிட்டு ரமணீயமான வாவி கூப தடாகங்களில் விளையாடி நானும் என் தோழிகளுஞ் செய்யும் வீணாகானத்தால் களித்திருக்கலாம்! மங்கையர் மன்மதவாதையடைந்து, அதனால் தாங்களாகவே வலிய வந்து ஆடவரை வேண்டிக் கூடி மகிழ்ந்தால் ஆசைப்பட்டு வந்த மங்கை ஒருத்தி தரும் சுகத்தை விடச் சிறந்த சுகம் வேறு எதுவுமே இல்லை! இகை நீர் இழந்து விட வேண்டாம்! என்று பலவாறும் ஆசை மொழிகள் கொட்டினாள். ஆனால் அஷ்டாவக்கிர முனிவரோ, சுந்தரியே பிறன் மனைவியரை நான் கையாலும் தொட மாட்டேன் மேலும் நான் திருமணஞ் செய்து கொள்ள விரும்பியிருக்கிறேன்.. புத்திரப் பேற்றைக் கருதியே பெண் கலவி செய்யத்தகும் என்று அற நூல்கள் கூறுகின்றன ஆகையால் நான் திருமணஞ் செய்து கொண்டு நல்ல பிள்ளைகளைப் பெற்று உயர் பதவியை அடையப் போகிறேன். இந்த நியாயத்தைச் சத்தியம் என்று உணர்ந்து உனக்கு என்னிடம் உண்டான ஆசையை விட்டுவிடு! என்றார்.
ஓ! மாமுனிவரே வாயு, வருணன் அக்கினி என்ற மூவருமே ஒன்றாகத் திரண்டு வந்து பதிவிரதா தர்மத்தைப் பாராட்ட வேண்டும் என்று சொன்ன போதிலுங் கூட மாதர்கள் மன்மதா வஸ்தையை விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் என்றும் காம போகத்திலேயே விருப்பங் கொண்டவர்கள். பெண்களில் பதிவிரதையாகக் காணப்படுபவள் ஆயிரத்தில் ஒருத்தியும் உண்மையில் மனம் மொழி மெய்களாலும் பிறபுருஷரைக் கலவாத உத்தமியோ லக்ஷத்தில் ஒருத்தியும் கிடைப்பது அபூர்வம். பெண்கள் காம இச்சை கொள்ளும்போது, தங்கள் தாய்வழி, தந்தைவழி பெற்றோரின் கவுரவம் சகோதரனுடைய கண்ணியம் கணவனுடைய நல்லொழுக்கம், ஆசாரம் இவற்றை மதிக்க வேண்டும் என்று கூடப் பொருட்படுத்தாமல் ஆற்று வெள்ளம் ஓடும்போது கரையே இடித்துச் செல்வதைப் போலத் தங்கள் குலாசாரம் முதலானவற்றையெல்லாம் கெடுத்து விடுவார்கள். உலகத்திலுள்ள தோஷங்களையெல்லாம் சேர்த்துப் பெண் உருவமாகச் செய்த பிரமதேவர் அவர்களுக்குரிய தோஷத்தைச் சாமானியமாகச் சொல்லியிருக்கிறார்! என்றாள் கட்டழகி. பெண்ணே! நான் செய்ய வேண்டுவது என்ன? நீ எதை விரும்புகிறாய்? என்று அஷ்டாவக்கிர முனிவர் கேட்டார் அதற்கு அந்தச் சுந்தரி நீங்கள் என்னோடு கூடிச் சிறிது காலம் சுகம் அனுபவிக்க வேண்டும்! என்றாள்.
அப்படியே ஆகுக! என்ற அந்த முனிவர், அவளைத் தம் ஞானக் கண்களால் கண்டு, விருத்தையாகி ஒவ்வோரவயவங்களும் கண்களுக்கு ரமிக்காதனவாகி விளங்குவதால் இவள் இந்த வீட்டிற்குத் தலைவியாகவும், சாபத்தினால் இத்தகைய உருவத்தையும் பெற்றிருக்கிறாள்! என்று கருதினார். எனவே அந்தச் சுந்தரிக்கு இத்தகைய சாபம் வந்த காரணத்தை அறியவேண்டும் என்று ஞான திருஷ்டினால் நோக்கினார். அப்போது சந்தியா காலம்நேரம் வந்தது உடனே கன்னிகை அவரை நோக்கி, முனிவரே! சந்தியா காலம் வந்துவிட்டது அனுஷ்டானத்திற்கு எழுந்திருக்க வேண்டும் என்று கூறினாள். அப்போது முனிவர் எனக்கு ஸ்நானஜலம் வேண்டும்! என்றார் உடனே சுந்தரி விரைந்து சென்று ஒரு துண்டு வஸ்திரமும் திவ்வியமான தைலமுங்கொண்டு வந்து, அவர் உத்திரவு பெற்று அவரது உடம்பு முழுவதையும் தொட்டு எண்ணைத் தேய்த்துக் தைலமிட்டாள். பிறகு அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு உட்கார்ந்து நீராடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரத்தின மயமான பீடத்தில் முனிவரை அவள் உட்கார வைத்து அவரைக் குளிப்பாட்டினாள். பிறகு சந்தியாவந்தனாதிக் கிரியைகள் முடிந்ததும் அவள் முனிவரைத் தன் சமையலறைக்கு அழைத்துச் சென்று அமிர்தமயமான அறுசுவையுணவைச் சாப்பிட வைத்தாள். உடல் முழுவதும் நன்றாக எண்ணெய் தேய்க்கப் பெற்று நன்றாக நீராடி அதன் பிறகு சூடான சோற்றைச் சாப்பிட்டதால் அசதிதட்டி முனிவர் பஞ்சணையில் படுத்தார். சந்திரகாந்தி வீசிக்கொண்டிருந்த அன்றிரவு முழுவதும் அவருக்குத் தெரியாமலே கழிந்தது. மறுநாள் விடியற்காலையில் விழித்துக் கொண்டு இரவு கழிந்ததற்காக வியப்புற்று அந்த மங்கையை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அவருக்கு சுந்தரி முறைப்படி அன்ன பானங்களை வழங்கினாள். முனிவர் உணவருந்தி பகற்பொழுதைக் கழித்தார். அஷ்டாவக்கிர முனிவர் அனுஷ்டானம் முதலானவற்றை முடித்துக்கொண்டதும் படுத்து உறங்கலாம் என்ற சுந்தரி சொன்னாள். அவ்வாறே அவர் படுக்கையில் படுத்திருக்கும் போது அவரருகே சுந்தரி தன் படுக்கையை வைத்துக் கொண்டாள். அப்படி அருகே படுத்தவளை நோக்கி, முனிவர் சுந்தரியே! நான் என் மனதால் பிறபெண்களை ஒருபோதும் சிந்திப்பதில்லை. ஆகையால் நீ வேறு இடத்தில் படுத்துக்கொள்! என்று சொல்லி, அவளை அங்கிருந்து அகலும்படிச் செய்தார். அவளோ என்னைப் பிற பெண் என்று கருத வேண்டாம். நான் யாருக்கும் சுதந்தரியல்ல! என்னைக்கூடி கலப்பதால் உமக்குத் தர்ம நாசம் விளைந்து விடாது! என்னை உமக்குச் சொந்தமாகவே கருதலாம் என்றாள். அதற்கு அவர், பெண்ணே! ஒருபோதும் பெண்ணானவள் சுதந்தரியாக இருக்க மாட்டாள் என்ற பிரம்மாவே சொல்லியிருக்கிறார்! என்றார்.
ஐயா! என்னை மன்மதனின் மோக நெருப்பு வாட்டுவதால் நான் உம்முடைய பத்தினியாக இருக்க விரும்புகிறேன்! அதற்காக உமது காலடியில் சரணாகதியடைகிறேன் என்னை பிறன் மகளிர் என்று கருதினால் என்னைக் கல்யாணம் செய்து கொண்டு கூடல் இன்பத்தை அனுபவிக்கலாம். இதனால் ஒருபோதும் தோஷம் விளைந்து விடாது சுதந்தரியாக நான் இருப்பதால் என்னைச் சேர்வதால் உண்டாகும் தோஷம் எனக்கே சாருமேயன்றி, உம்மை ஒருபோதும் சாராது, இப்படியெல்லாம் வேண்டிக் கெஞ்சும் என்னை ஆதரிக்காமல் விட்டு விட்டால் அதனால் உமக்குப் பெருந்தோஷம் சித்திக்கும்! என்றாள் சுந்தரி. பெண்ணே! நீ பிற ஆடவனைப் பலவந்தம் செய்து உன் காம இச்சைக்கு என்னை இணங்க வைப்பதால் மூளும் பாவம் என்னைச் சேருமேயன்றி உன்னைச் சாராது. ஆகையால் நான் உன்னோடு கூடி மகிழ மாட்டேன். மேலும் பெண்கள் குழந்தைப் பருவம், சிறுமி பருவம், இளமை முதுமை முதலான எந்தப் பருவங்களிலும் சுவாதீனமுடையவர்களல்ல, அப்படியிருக்க நீ சுவாதீனமுடையவள் என்று சொல்வது எப்படி? என்றார் அஷ்டாவக்கிர முனிவர் நான் கன்னிப் பருவத்தில் இருந்து பிரமசரிய விரதத்தை அனுஷ்டிக்கிறேன். ஆகையால் என்னைப் பிறன் மனைவி என்று கருதாமல் என்னைத் திருமணஞ் செய்து கொள்ளும் என்றாள் சுந்தரி. அதற்கு முனிவர் பெண்ணே! நான் கல்யாணஞ் செய்து கொள்ள முயன்றதால் ஏற்பட்ட தடையை நீக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன். இங்கோ நீ உன்னை மணந்து கொள்ளச் சொல்கிறாய் நானோ வேறொரு பெண்ணை விரும்பியிருக்கிறேன். அவள் தந்தையோ என்னை அனுப்பியதாலேயே நான் இங்கே வந்தேன் இதனால் நம் இருவர் மன விருப்பமும் நிறைவேறுவதாக இல்லை! என்று சொன்னார். பிறகு இவள் இவ்வளவு ரூபவதியாக இருந்தும் ஆபரணம் ஆடைகள், முதலியவற்றில் குறைவற்றிருந்தும் நீ இவள் உருவம். பங்கப்பட்டிருப்பதற்குக் காரணம் தெரியவில்லை. அப்படியே நான் இவளைக் கல்யாணஞ்செய்து கொண்டாலும் என் பிரமசரிய விரதத்திற்கு குறைவில்லாமல் சாதித்துக் கொள்ள வேண்டும்! என்று தமக்குள்ளேயே யோசித்து தீர்மானித்துக் கொண்டார்.
இவ்வாறு ஸனத்குமாரர் கதை சொல்லும்போது வியாச மகரிஷி அவரை நோக்கி மாதவரே! அஷ்டாவக்கிர முனிவர் கடுந்த பசியாகவும் சாபங்கொடுக்கச் சக்தியுள்ளவராகவும் இருந்தும் ஏன் சாபங் கொடுக்காமல் இருந்தார்? என்று கேட்டார் ஸனத்குமாரர் கூறலானார். அஷ்டாவக்கிர முனிவர் நெடுநேரம் யோசித்து விட்டு அந்தச் சுந்தரியை நோக்கி பெண்ணே! உன் தேகத்தில் இத்தகைய குரூரமான கிழத்தனம் வந்த காரணம் என்ன என்பதை சத்தியமாகச் சொல்! என்றார், அதற்கு அவள் கூறினாள்.
ஓ ஜிதேந்திரியா! இப்பூமிதேவியும் ஆகாயவாணியும் அறிய நான் உண்மையைச் சொல்லுகிறேன், சுவாமி! என்னை உத்திரதிக்கு ஸ்திரீ என்று அறிந்துகொள்ளும் மிருகங்கள் பறவைகள் முதலியவைகளுக்கே ஆடை உறவினர் பிரியமிருக்கும் போது மனித உடம்பு கொண்டவர்களுக்கு அந்த இச்சை இருப்பதில் சந்தேகம் ஏன்? ஸ்திரீயின் சாபல்யம் இத்தகையது! உம்முடைய பிரமசரிய உண்மையை சோதிக்கவே இவ்விதமாகச் செய்தேன். எங்களுடைய சிங்காரச் சேஷ்டைகள் காதற் குறும்புகளையெல்லாம் கண்டும் மனம் சலனப்படாத உம் புலனடக்கத்தைக் கண்டு இந்திராதி தேவர்கள், உவந்து எல்லா உலகங்களிலும் தடையின்றிப் போக்கு வரவு செய்யத்தக்கச் சுதந்தரத்தையும் ஆற்றலையும் உமக்கு கொடுக்கச் சித்தமாக இருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள கேட்டீரோ, அவரே பெண் சுபாவம் இத்தகையது என்று நீர் அறிந்து கொள்ளச் செய்வதற்காகவே வடதிக்குப் பெண்களான எங்களிடம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறார். எங்களால் சலனப்படுத்த முடியாத உம் மன வலிமையை கண்டு மகிழ்ந்தோம். நீர் நலமான வழியைக் கடந்து சென்று, அந்தக் கன்னிகையை மணந்து நல்லபுத்திரனைப் பெறப் போகிறீர்! நீர் சத்தியமாக வினவியதால் இத்தகைய இரகசியங்களை நான் உமக்குப் போதித்தேன். இன்னும் என்ன கேட்க வேண்டுமோ கேட்கலாம்! என்றாள் சுந்தரி.
அஷ்டாவக்கிரர் அவளை வணங்கி, உத்திரதிக்காகிய மங்கையே! இனி நான் உன்னைக் கேட்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டும் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்து இளைப்பாறித் தன் உற்றார் உறவினர்களை வழிபட்டு வதான்ய முனிவரிடம் சென்றார். அவரைக் கண்டதும் வதான்ய முனிவர் நான் சொன்ன இடத்திற்குப் போய் வந்தாயா? என்று கேட்டார். அதற்கு அஷ்டாவக்கிரர் வதான்யரே! நீ சொன்னவாறு கந்தமாதனம் கடந்து, உத்திரதிக்கிலுள்ள நந்தவனத்தில் வசிக்கும் நங்கையைக் கண்டு உரையாடி விட்டு அவள் உத்தரவைப் பெற்றே உம்மிடம் திரும்பி வந்திருக்கிறேன்! என்றார். வதான்யர் மகிழ்ந்து ஓ புலனடக்கம் மிகுந்த சத்தியவானே! நல்ல லக்கினத்தில் என் கன்னிகையை திருமணம் செய்து கொண்டு மகிழ்வாயாக! என்றார் அதிசுந்தரியான அவர் பெண்ணை அஷ்டாவக்கிரர் திருமணஞ் செய்து கொண்டு மகிழ்ந்திருந்தார். ஆகையால் வியாஸ முனிவரே பெண்களின் சுபாவமே இத்தகையது தான் இலட்சத்தில் ஒருத்தியே பதிவிரதையாக இருக்கக் கூடும். அத்தகைய ஒருத்தியின் பெயரை நினைத்தவுடனேயே எல்லாப் பாவங்களும் ஒழியும் அஷ்டாவக்கிரரைப் போன்ற ஆடவர்கள் அகப்படுவதும் துர்லபம் ஆகையால் இந்த மகாத்மியத்தைப் படித்தாலும் கேட்டாலும் எல்லாப் பாவங்களையும் ஒழித்து பெண்களாயின் பதிவிரதைகளாகவும் ஆண்களாயின் புலனடக்கம் மிகுந்தவர்களாகவும் வாழ்வார்கள்!
43. அருந்ததியின் கற்பியல்பு
வியாசரே! முன்பொரு சமயம் வசிஷ்ட முனிவரின் மனைவியான அருந்ததி பெண்களின் இயல்பைப் பற்றிக் கூறியதையும் நான் சொல்கிறேன். ஒரு காலத்தில் இந்திரன், சூரியன், அக்கினி, தேவன் ஆகிய மூவரும். நம்மைப் பூவுலகில் விசேஷமாகப் பூஜிப்பதற்கு நான்குவகை ஆசிரமங்களில் இல்லறமே (கிரகஸ்தாசிரமமே) சிறந்தது. இல்லறத்திற்கு மனைவியாவள் குணவதியாகவும் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும். அந்தணர் மற்ற மூன்று வருணத்தார்களால் பூஜிக்கப்படுவதுபோல நாம் மூவரும் இல்லறத்தோரால் பூஜிக்கப்படுகிறோம். நம்மைப் பூஜிப்பதால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பயனை இல்லறவாசிகள் பெறுவார்கள். அதனால் இகலோக சுகத்தையும் பரலோக சுகத்தையும் அடைவார்கள், பெண்களிடம் பொய், பாசாங்கு, சாகசம், மாயை, மூர்க்கத்தனம். உலோபம் ஆசாரக் குறைவு தயையின்மை முதலிய தீக்குணங்கள் இயல்பாகவே இருந்தாலும் அவற்றை ஒழித்த நல்ல பெண்மணிகளும் இல்லற தர்மத்தைச் சரியாக நடத்திய பிராமணர் முதலான நாற்குலத்தினரும் முறைப்படி அரசு செலுத்திய மன்னர்களும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்! என்று சிந்தித்தார்கள். பிறகு அம்மூவரும் மாதர்களின் பதிவிரதைத் தன்மையைப் பரிசோதிக்க எண்ணினார்கள். முதலாவதாக வசிட்ட முனிவரின் பத்தினியான அருந்ததி தேவியிடம் சென்றார்கள்.
கணவனையே தெய்வமாகப் பாவித்திருக்கும் அருந்ததி தண்ணீர் கொண்டுவர குடத்தை எடுத்துச் செல்லும் வழியில் அவளை எதிரில் கண்டு. அக்கினி, சூரியன், இந்திரன் ஆகிய மூவரும் நின்றார்கள். அவர்களைத் தேவர்கள் என்று அறிந்த அருந்ததி அவர்களுக்கு மரியாதை செய்து, நீங்கள் இங்கு என்னை நாடி வந்த காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு அவர்கள் மூவரும் நாங்கள் உன்னை ஒன்று கேட்கவே வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவள் தேவர்களே நீங்கள் கேட்குப்போகும் கேள்விக்குரிய பதிலையும் பெண்களின் இயல்பையும் என் வீட்டுக்கு ஜலம் கொண்டு வைத்த பிறகு நானே சொல்கிறேன், நீங்கள் எனது பர்ணகசாலையில் இருந்து வழிநடந்த களைப்பை அகற்றிக் கொள்ளுங்கள்! என்றாள். அதற்கு தேவர்கள், நீ ஜலமெடுக்கப் போகவேண்டாம். நாங்கள் அந்தக் குடத்தை இங்கேயே நிரப்பி விடுகிறோம். எங்கள் கேள்விக்குப் பதில் தந்து எங்களை விரைவில் அனுப்ப வேண்டும், என்றார்கள். அருந்ததியும் ஒப்புக்கொண்டாள். அவர்களில்,
இந்திரன் பிறவியினால் பிராமனனிடம் எனக்குப் பயமில்லாததும், தவம் பிரமசரியம் அக்னிஹோத்ர அனுஷ்டானங்களால், என் பதவியை ஒருவன் அடைவதும் சத்தியமாக இருந்தால் அந்தச் சத்தியத்தால் இந்தக் கும்பம் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது! என்றான். அக்கினியோ, யாகம் பிதுர்சிரர்த்தம் இவற்றைவிட அதிதியை வழிபட்டு அன்னமளிப்பதில் நான் திருப்தி அடைவது சத்தியமானால் அதனால் இந்தக்குடம் இன்னுமொரு காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது! என்றான். சூரியனோ, நாள்தோறும் என் உதயத்தில் மந்தேஹர்ன என்று ராக்ஷதரை வேதியர் செய்யும் அர்க்யபிரதான்யமாகிய பிரமாஸ்திரம் நீக்குவது சத்தியமானால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது என்றான். அவற்றைக் கண்ட அருந்ததியோ இரகசிய ஸ்தானமும் இதர புருஷ சம்பாஷணையும் கிடைக்கும் வரையில் தான் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கிறார்கள் ஆகையால் மங்கையரை அதிகக் கவனமாக காக்க வேண்டும். இது சத்தியமானால் இதனால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பிப் பூர்ணகும்பமாகக் கடவது! என்றாள். அவர்கள் சொல்லியபடியே குடம் சிறிது சிறிதாக முழுவதும் நிரம்பியது. அதைக் கண்ட தேவர்கள் அருந்ததியை நோக்கி, பதிவிரதா சிரோன்மணியே! பெண்களின் மனோபாவம் எப்படி என்பதைப் பரிசோதிக்கவே நாங்கள் வந்தோம். இனி நாங்கள் செல்கிறோம் மங்கையரிலேயும் உத்தமர் மத்திமர் அதிமர் என மூவகையினராக இருக்கிறார்கள்! என்று சொல்லிவிட்டுத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றார்கள்
வியாசரே! இனி அருந்ததியின் சரிதத்தையும் திருமண காலத்தில் அருந்ததி பார்க்கும் காரணத்தையும் அருந்ததியைப் பார்ப்பதால் வரும் பயனையும் உமக்குச் சொல்லுகிறேன். முன்பு ஒரு காலத்தில் அக்கனிதேவன் சப்தரிஷிகளின் மனைவியரின் மீது மோகங்கொண்டான். அந்த மோகத்தால் அம்மங்கையரை எப்படி அனுபவிப்பது என்று மோகாக்கினியால் தகிக்கப்பட்டு மிகவும் வாடினான். அதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி ஸ்வாஹாதேவி தன் கற்பின் சக்தியால், அம்முனிபத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாகத் தானே வடிவமெடுத்து தன் கணவனைக் கட்டித் தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள். அவ்வாறு அவள் செய்து வரும் போது அருந்ததியைத் தவிர, மற்ற ஆறு முனிபத்தினிகளின் உருவங்களாக எடுக்கவே அவளால் சாத்தியப்பட்டது. அருந்ததியின் வடிவம் தனக்கு அமையாததைக்கண்டு சுவாகாதேவி பெரிதும் வியப்படைந்தாள். உடனே அவள் அருந்ததியிடம் சென்று, கற்புக்கரசியே! உலகத்தில் பலமங்கையரை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் உன்னைப் போன்ற பதிவிரதையை நான் கண்டதேயில்லை. நான் எல்லாதேவர்களுக்கும் முகமாக இருக்கும் அக்கினி தேவனுக்கு மனைவியாக இருந்தும், விதம் விதமான மோக உருவங்ளெடுக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தவளாக இருந்தும் உன்னுடைய வடிவத்தை மட்டும் எடுக்க எனக்கே சக்தியில்லையென்றால் மற்றவரால் சாத்தியப் படுமா? நீயே உத்தமி! ஆகையால் எந்தப் பெண்கள் கல்யாண காலத்தில் அக்கினி, அந்தணர், உற்றார் உறவினர் முன்னிலையில் அருந்ததியான உன்னைப்பார்த்து ஸ்மரிப்பார்களோ அவர்கள் சுகத்தையும் செல்வத்தையும் புத்திரப் பேற்றையும் பெற்றுப் பதிமதியாய் வைதவ்யமில்லாமல் பூவுலகில் தங்கள் வாழ்நாளை கழித்து உன்னைப்போல் புகழ் பெற்று புண்ணிய லோகத்தை அடைவார்கள் என்று கூறினாள். இதனாலேயே அருந்ததிதேவியின் பெருமையையும் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்யும் காரணத்தையும் அறிந்து கொள்ளும் இந்தச் சரிதத்தைப் பக்தியோடு கேட்டவர்கள். பெண்களாயின் அருந்ததி போலப் பதிவிரதா தர்மத்தையும் புருஷர்களாயின் இந்திராதி தேவர் போன்ற புகழையையும் பெற்று இல்லற இன்பத்தை அனுபவித்து. இறுதியில் சிவபதவியை அடைவார்கள்!
44. சாவித்திரியின் சரிதம்
வியாச முனிவரே! கற்பின் சிறப்பைப் பற்றி மற்றொரு சரிதத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன் கேளும். பல வளங்களும் நிறைந்து ஓங்கிய மந்திர தேசத்தில் அஸ்வபதி என்ற மன்னன் மனுநீதி முறைப்படி செங்கோல் செலுத்தி வந்தான். நெடுங்காலம் புத்திரப்பேறு இன்றி அவன் வருந்தி சரஸ்வதி தேவியை உபாசித்து, அவளைப் பிரத்யட்சமாகத் தரிசித்து தாயே! எனக்குச் சந்ததி விருத்தி உண்டாகும்படி அனுக்கிரஞ் செய்ய வேண்டும்! என்று வேண்டினான். அதற்கு சரஸ்வதி தேவி மன்னா! உனக்கு ஒரு புதல்வி பிறப்பாள்! என்று வரமளித்தாள். அந்த வரத்தைப் பெற்ற மன்னன் மனம் மகிழாமல் மீண்டும் வேண்டினான். அப்போது நாமகள் அவனை நோக்கி மன்னா! நீ அப்புத்திரியால் பற்பல செல்வங்களையும் அடைவாய்! என்று கூறி மறைந்தாள். சிறிது காலத்தில் மன்னன் அஸ்வபதியின் மனைவி ஒரு பெண்ணைப் பெற்றாள் அஸ்வபதி அந்தக் குழந்தைக்குச் சாவித்திரி என்று பெயர்சூட்டி வளர்த்து வந்தான். சாவித்திரி மங்கைப் பருவமுற்றதும் அவளுக்கு மணவினை முடிக்கத்தக்க கணவனைத் தேடுவதில் மன்னன் கவலை கொண்டிருந்தான். அப்போது அவனது அரசவைக்கு நாரதமுனிவர் வந்தார். மன்னன் அவரைப் பூஜித்து தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று திவ்ய ஆசனத்தில் அமர்த்தி தன் புதல்வியை அழைத்து அவருக்குக் காட்டி, முனிவரே! என் தவப்புதல்வியான இந்தக் கன்னிகைக்குத் தக்க மணமகன் கிடைக்காமல் வருந்துகிறேன் என்றான். அதைக் கேட்டதும் நாரதர், புன்சிரிப்பு பூத்து, அரசனே! நீ பெற்ற அரும்புதல்வியை உன் மனக்கருத்தின்படி மணஞ்செய்து கொடுக்காமல் அவள் விரும்பிய வரனையே மண முடித்துக் கொடுக்க வேண்டும்! என்று கூறி விட்டு சாவித்திரியின் கருத்தைப் பற்றி விசாரித்தார்.
அவள் சாலவ தேச மன்னனான சத்தியவான் என்றவனையே திருமணஞ் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினாள். அப்போது அஸ்வபதி மன்னன் நாரத முனிவரை நோக்கி, சுவாமி! அந்தச் சத்தியவானின்குணங்கள் எத்தகையன? என்று கேட்டான். எல்லாம் அறிந்த நாரத முனிவர் அவன் தூய்மையானவன். சொல் தவறாதவன் மன்மதனைப் போன்ற ஆணழகன். எல்லா வகையிலும் சிறந்தவன். ஆயினும் ஆயுட்காலம் ஓராண்டேயுள்ளவன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் அஸ்வபதி மன்னன் திடுக்கிட்டு தன் புத்திரியின் முகத்தைப் பார்த்து மகளே சாவித்திரி! ! திரிகால ஞானம் உணர்ந்த பிரம்ம புத்திரராகிய நாரதர் கூறிய வார்த்தைகளைக் கேட்டாயா? மேலும் அந்த சத்தியவானின் தந்தைத் தன் அரசைப் பகைவர்களிடம் பறி கொடுத்துவிட்டு மனைவியையும் புத்திரனையும். இவற்றையெல்லாம் யோசிக்காமல் நான் உன்னை அவனுக்குக் கொடுத்தாலும் அவன் ஒரு வருஷ காலமே உயிர் வாழ்வான் என்றால் அதை விடத் துன்பம் வேறு ஒன்றும் உண்டோ? ஆகையால் நீ வேறொரு நாயகனை மணப்பதே உசிதம்! என்று கூறினான். ஆனால் சாவித்திரியோ தன் தந்தையை நோக்கி, எந்தையே! பலமாதர்களால் அந்த அரசகுமாரரின் சிறப்பைக் கேட்டு, அவர் மேல் காதல் கொண்டு விட்டேன். ஆகையால் பிறன் ஒருவனை நான் மணஞ்செய்து கொள்ள மாட்டேன்! என்றாள். அப்போது நாரதர் அஸ்வபதி மன்னனை நோக்கி, அரசே! உன் மகள் சாவித்திரி கற்பில் சிறந்தவளாக இருப்பவளாகையால் தன் கணவனின் ஆயுளைப் பெருக்கி விதியையும் வெல்வாள்! நீ அவளது கருத்துப்படியே திருமணஞ் செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதனால் அஸ்வபதி மன்னன் தன் மனைவியான மாளவியோடும் மகளான சாவித்திரியோடும் இரதத்தில் ஏறிச்சென்று சத்தியவானின் குடும்பம் சஞ்சரிக்கும் நீரதவனத்தை அடைந்தான். அங்கிருந்த சாலவதேசத்தரசன் எதிர்கொண்டு வரவேற்றான். அரசர்கள் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் குசலம் விசாரித்த பிறகு அஸ்வபதி மன்னனே என் மகள் சாவித்திரி உன் புதல்வனைத் தன் கணவனாக உள்ளத்தில் வரித்திருக்கிறாள். ஆகையால் நான் அவளையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தேன் என்றான். உடனே சாலவமன்னன் பகைவரிடம் நாடிழந்த தீனனாக இருந்ததால் துக்கப்பட்டான். அஸ்வபதி மன்னன் அவனைத் தேற்றி பிராமணர்கள் ஏற்படுத்திய சுபமுகூர்த்தத்தில் சாவித்திரிக்கும் சத்தியவானனுக்கும் திருமணம் முடித்துத் தன் புத்திரிக்கு ஆடை, ஆபரணம் பொன்மணி, பணிப்பெண் முதலிய சிறப்புகளை வழங்கித் தன்னகரம் சேர்ந்தான். சாவித்திரியோ- கற்பில் அருந்ததியைப் போலத் தன் கணவனுக்குப் பணிவிடை செய்தும் மாமன் மாமியாரைச் சிறப்பாக உபசரித்தும் வந்தாள். இவ்வாறு இருக்கும்போது நாரத முனிவர் கூறியவாறு வருடம் ஒன்றும் நாட்கள் நான்கும் கழிந்தன. சத்தியவானுக்கு ஆயுட்முடிவுக் காலம் நெருங்கிவிட்டது.
வியாசரே! சாவித்திரி உள்ளம் துடித்து உமாதேவியை நோக்கி தன் கணவனின் ஆயுள் விருத்தியை வேண்டி விரதம் இருந்தாள். அந்தச் சமயத்தில் சத்தியவந்தன் வனத்திற்குப் போக விரும்பினான். ஆகையால் மாமன் மாமி உத்தரவு பெற்று சாவித்திரியும் தன் கணவனோடு சென்றாள். வனம் அடைந்த சத்தியவான் மரத்தில் ஏறி காய்கனிகள் கொய்தும் தருப்பைப் புற்களை அறுத்தும் சமிதையை ஒடித்தும் வந்தான். அவன் நிழலைப் போல அவனைப் பிரியாமல் சாவித்திரியும் பின் தொடர்ந்தாள். சத்தியவான் ஒரு மர நிழலை அடைந்ததும் தன் மனைவியை நோக்கி, கண்ணே கை கால்கள் நடுங்குகின்றன, கண்கள் சுழலுகின்றன என்று தன் தலையை அவள் மடியில் வைத்து நிலமிசைப்படுத்தான். அப்பொழுது வாடாத மலர் மாலையை மார்பிலணிந்து பாசமும் தண்டுங் கரத்தில் கொண்டு, யமதர்மராஜன் அங்கு வந்து சத்தியவானின் உயிரைக் கவர்ந்து செல்லமுயன்றான். அதைக் கண்டு சாவித்திரி தன் கணவன் தலையைத் தரையில் கிடத்தி மனம் வருந்தாமல் யமதர்மனை வணங்கி, என் கணவன் உயிரைப் பிரித்துக் கவர்வது ஏன்? என்றாள். அதற்கு தருமன் கற்புக்கு அரசியே! உன் கணவனின் வாழ்நாள் கழிந்ததாலும் அவன் நற்குணத்தனாதலாலும் நானே வந்து அவன் உயிரைக் கொண்டு செல்கிறேன். பிறப்பன எல்லாமே அழிவனவேயாகும், நீ கற்பிற் சிறந்தவளாகையால் என் உருவத்தை உன் மானுட தேகத்தோடு கண்டாய்! உன்புகழை நான் என்னவென்று சொல்லுவேன்! நான் போகின்றேன் நீ திரும்பிப் போகலாம்! என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றான். சாவித்திரி விடாமல் அவனைப் பின் தொடர்ந்தாள். யமதர்மன் வியப்புற்று சாவித்திரி சாவித்திரி! உடலோடு கணவனைப் பின் தொடர்ந்த கற்பினள் உன்னைப்போல் வேறு ஒருத்தியுமில்லை! உன் கணவனின் உயிரைத் தவிர நீ வேறு என்ன வரம் கேட்டாலும் கொடுக்கிறேன்! என்றான். உடனே புத்திக் கூர்மையுள்ள சாவித்திரி கால தேவனே! குருடரான என் மாமனார் கண்பார்வை பெறுமாறு அருள் செய்யவேண்டும்! என்று ஒரு வரம் கேட்டாள். யமதர்மன் அவ்வாறே அனுக்கிரகித்துவிட்டுச் சென்றான். சாவித்திரி விடாமல் மேலும் பின் தொடர்ந்தாள் அதைக் கண்டு கூற்றுவன் பதிவிரதையே! உன் கணவனின் உயிரைத் தவிர இன்னும் ஒரு வரம் வேண்டுமானால் கேட்டுக்கொள்! என்றான். அதற்கு சாவித்திரி, என் தந்தைக்குப் புதல்வர்கள் பிறக்கவேண்டும்! என்றாள். உடனே யமதருமன் நூற்றுவர் புதல்வர்களாகப் பிறப்பார்கள்! என்று கூறிவிட்டுச் சென்றான்.
சாவித்திரியும் அவனை விடாமல் மேலும் பின் தொடர்ந்து சென்றார்கள். அதைக்கண்ட காலதேவன் அவள் கற்பின் ஆற்றலைப் புகழ்ந்து உன் கணவனை தவிர இன்னும் ஒரு வரம் கேட்டுக் கொள்! என்றான். என் மாமனார் இழந்த ராஜ்ஜியத்தை அடையுமாறு அருள் செய்ய வேண்டும்! என்று வரம் கேட்டாள் யமதர்மன் அவ்வாறே வரங் கொடுத்து விட்டுச் சென்றான். மீண்டும் சாவித்திரி அவனை விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். யமதர்மன் வியப்புற்று சாவித்திரியை நோக்கி பெண்ணாகிய நீ வனத்தில் தனித்து வருவது தகுதியல்ல உன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போ! என்றான். ஆனால் சாவித்திரி விடாமல் தர்மதேவனே! நல்லோர் பெரியோரைக் கண்டதும் தம் துயரங்கள் எல்லாம் நீங்குவர் என்று மேலோர் கூறியிருக்க தரும நாயகரான உம்மை நான் தரிசித்துப் பணிந்து சரணமடைந்தும் இன்னும் மனக்குறையுடன் இருப்பது உமக்குத் தர்மமாகுமோ? உயிர் நீத்த உடல் ஆடையாபரண சுகந்த மலர் மாலைகளால் அலங்கரிப்பதைப் போல என் உடலை இனிப்பாதுகாத்து வருவதில் பயன் என்ன? என் கணவனைப் பிரிந்து நான் செல்லமாட்டேன்! என்று பலவாறாகவும் கூறித் துக்கப்பட்டாள். காலதேவனான யமதர்மன் அவளது பதிவிரதா தர்மத்திற்குப் பயந்தவனாகி நீ விரும்பும் இன்னொரு வரத்தைக் கேள்! என்றான். அதற்கு அவள் நான் கற்பில் தவறாது பல புதல்வர்களைப் பெற்று, என் மாமன் அவர்களோடு விளையாடிச் சந்தோஷப்படும்படி வரம் கொடுத்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்தாள். அதனால் மனமிளகிய யமதர்மராஜன் சற்றும் யோசிக்காமல் அவ்வாறே ஆகுக என்று வரம் கொடுத்து மறைந்துவிட்டான் சிறிது நேரத்தில் தன் கணவன் கிடக்கும் இடத்தை அடைந்து அவனை உபசரித்தாள். சாவித்திரி உடனே சத்தியவான் கண்விழித்தான். சாவித்திரி தன் கணவனைக் கட்டியணைத்து உபசரித்துத் தன் மாமன்மாமியாரிடம் அழைத்துக் கொண்டு போனாள். அங்கு அவளுடைய மாமன் தன் கண் பெற்றிருப்பதையும் இழந்த அரசை மீண்டும் அடைந்திருப்பதையும் கண்டு மகிழ்ந்தாள். பிறகு பல புத்திரர்களைப் பெற்று அநேக காலம் இன்பமாக வாழ்ந்திருந்தான். ஆகையால் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆடவன் நல்ல சாமுத்திரிகா லட்சணமும் பரிசுத்த வழியில் தோன்றிய தாய் தந்தையாரால் பிறப்பும் வாய்ந்த சிறந்த கன்னிகையைத் திருமணஞ் செய்து கொள்வானேயாகில் அவன் தேவனுக்கு இணையாவான். பதிவிரதையான உத்தமி ஒருத்தியை மணந்து பிரமசரியம் முதலிய நான்குவகை ஆசிரமிகளுக்கு துணை நிற்பார்களேயானால் அத்தம்பதிகள் இறுதியில் சிவலோகத்திலும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பார்கள்!
45. மனிதன் தன் மரணகாலத்தை உணரும் குறிகள்
வியாசரே! முன்பொரு சமயம் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடும்போது பஞ்சப்பிரம விதானத்தைப் பற்றிச் சிவபெருமான் கூறிவந்தார். அப்போது பார்வதியார் விரும்பியபடி பிண்ட உற்பத்தி முதலிய கர்ப்ப அவஸ்தைகளை எடுத்துரைத்தார். பிறகு உமாதேவி அப்பெருமானை நோக்கி அழியக் கூடிய மனித உடலின் முடிவு காலத்தையும் முக்தி அடையும் விழியையும் விளக்கியருள வேண்டும். காலச் சக்கரத்தைப்பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்கள் ஆயுட்கால முடிவை மனிதர்கள் முன்னரே அறிந்துணர்ந்து தங்கள் திருவடித் தாமரைக்குப் பக்தி செய்ய வேண்டுவதால் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வழியைச் சொல்லவேண்டும் என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் கூறலானார். தேவி! நிலம், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் அம்சமான உடலை எடுத்த மனிதர்கள் மரணக்குறிப்பை அறிந்து புகழைச் சம்பாதிக்கும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறேன் கேள். சுந்தரியே! தேகம் எல்லாம் வெளுத்தும் காதுகள் கண்கள் மூக்கு முதலியன, ஓசை, ஒளி நாற்றங்களை அறியச் சக்தியற்றும் இருக்கும் மனிதன் ஆறு மாதத்தில் மரிப்பான் எந்தச்சப்தத்தைக் கேட்டாலும் அது மிருக சப்தத்தைப் போலக் கேட்டால் அவன் ஆறுமாதத்தில் மரணமடைவான். சூரிய சந்திரமண்டலங்கள் கருத்திருக்க கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். இடது கை ஏழுநாள் துடித்தாலும் சர்வாங்களும் துடித்து நாவு உலர்ந்தாலும் அவன் ஒரு மாதத்தில் உயிர் துறப்பான். நாவின் வழி வாதபித்த கபங்கள் ஒழுகப்பெற்றவன் ஒரு பக்ஷத்தில் மடிவான் நெஞ்சும் வாயும் உலரப் பெற்றவன். ஆறு மாதத்தில் உயிர் நீப்பான். நாத்தடித்தும் குளிர்ச்சியால் பல்லிறுகக் கட்டப் பெறுவானாயின் ஆறு மாதத்தில் இறப்பான் தண்ணீர் நெய் எண்ணெய் கண்ணாடி முதலியவற்றால் தன் தேகச்சாயையைக் காணாமல் இருந்தாலும் அவன் ஆறு மாதத்தில் இறப்பான் தன் தேகச்சாயதலக் காணாமவிட்டாலும் சிரசில்லாத முண்டமாகக் காணப்படினும் ஒரு மாதத்தில் இறப்பான். இதுவரை அங்கத்தைப் பற்றிச் சொன்னேன்.
இனி வெளிக் குறியைப் பற்றி விவரிக்கிறேன்; சந்திர சூரிய மண்டலங்களைக் காந்தியின்றி ஆடையால் மூடப்பட்டதுபோல மங்கலாகக் காணும் மனிதன் பதினைந்து நாட்களில் உயிர்துறப்பான். அருந்ததியை ஆகாயத்தில் வாகனமில்லாமலும் சந்திரனிடம் களங்கமின்றியும் இரவில் நட்சத்திரங்கள் பிரகாசமின்றியும் மேகமின்றி மின்னவும் கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான் திசைகளைக் கண்டு மயங்குவோன் ஆறு மாதத்தில் உயிர் துறப்பான். ஆகாயத்தில் இரவுக் காலத்தில் வானவில்லைக் கண்டவனும் பகற்காலத்தில் விண் வீழ்கொள்ளி விழக் காண்பவனும் ; காகம் கழுகு முதலியன தன் தலைக்கு மேல் வட்டமிடக் கண்டவனும் ஆறு மாதத்தில் இறப்பான். ஆகாய வழியில் சப்தருஷி மண்டலத்தையும் சுவர்க்கமாகிய ஸ்வாதி மார்க்கத்தையும் எவன் காணவில்லையோ, அவன் ஆறு மாதத்தில் இறப்பான். பருவம், அமாவாசையின்றியே சந்திர சூரியமண்டலத்தை இராகு மறைப்பது போலக் காண்பவனும் திக்குகள் சுழலக் காண்பவனும் ஆறு மாதத்தில் அழிவான். நீல வர்ணமான ஈக்கள் சாதாரண உடம்பை மொய்க்கக்கண்டவன் ஒரு மாதத்தில் மரணமடைவான். தன் சிரசில். கழுகு, காகம், மாடப் புறா முதலியன உட்கார கண்டவன் ஒரு மாதத்தில் உயிர் நீப்பான் ஆகாயத்தில் கரிய யானை காணப்பட்டால், ஆறுமாதத்தில் மரிப்பான். நிறம் ஐந்தும் சுவை ஆறும் பிறழ்வுற்றுக் காணப்படின் ஆறு மாதத்தில் இறப்பான். நாவின்முனையும் மூக்கின் முனையும் புருவ நடுவும் காணாவிடில் மூன்று மாதத்தில் இறப்பான். சேற்றிடையில் மிதித்த பாதச்சுவடு சிதைவுற்றுத் தோன்றுமானால் மரணஞ்சமீபத்தவனாவான். நான்கு புறத்திலும் வானவில் தோன்றினாலும் பகலில் கண் எதிரில் பேயாடினாலும் ஒரு மாதத்தில் உடல் துறப்பான். பூரித்த தேகமுடையோர் இளைத்தாலும் இளைத்த தேகமுடையவர் பூரித்தாலும் ஒருமாதத்தில் உடல் நீப்பார்கள் பேய், பூதம், நரி, கழுதை, அசுரர்; கருங்காக்கை புலி, செந்நாய், பருந்து குரங்கு முதலியன தன்மேல் ஏறவும் அவை தன்னைத் தின்னவும் அவற்றைத் தான் தின்னவுமாகிய இவற்றில் ஒன்றைக் கண்டவன் பதினைந்து நாட்களில் பூவுலகிலிருந்து அகல்வான். குரங்கின் மேலேறிக் கொண்டு கீழ்த்திசை நோக்கிச் செல்வதாகக் கனவு கண்டவன் ஒருபட்ச காலத்தில் இறப்பான்.
ஒருவன் தன் மரண தினத்தை அறிந்து கொள்ள விரும்புவானாயின் தூய நீராடி, புனிதமான ஆடையணிந்து நித்திய கர்மத்தை முடித்து சுக்கில பட்சமும் அமர பட்சமும் என்று முறையே சொல்லப்படுகிற வலது கையையும் இடது கையையும் தண்ணீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைத்து, சுகந்தமான சந்தனத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு, உள்ளங்கை இரண்டினாலும் சிறிது நேரம் குழைத்து கைகூப்பிக் கும்பிட்டவனாய் உமாபதியை ஒருமித்த மனத்துடன் தியானித்து நூற்றியெட்டுதரம் தேவி மந்திரத்தை ஜபித்து, கைகளைப் பிரித்து நோக்க விரல்களின் கணுக்கள் ஒன்றில் கருமை நிறமாகக் காணப்படும், சிறு விரல் முதல் பெருவிரல் இறுதியாக கணுக்கள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாய் பதினைந்து துதிகள். ஆகையால் எந்தக் கையில் கருமை தோன்றுகிறதோ அந்தக் கைக்கு உரிய பக்ஷத்தில் அவன் இறப்பான் என்றும் கட்டை விரலின் அடிக்கணுமுதல் மேல் நோக்கிப் பிரதமையாதி திதிகளாக எண்ணிக்கொண்டு செல்கையில் எந்தத் திதியில் குறி காணப்படுகிறதோ அந்தத்திதியில் அவன் இறப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.
இனி சுவாசத்தினால் (மூச்சுக் காற்றினால்) உணரத்தக்க மரணக் குறிகளாவன; க்ஷணம், துடி, வலம் நிமிஷம், காஷ்டைகலை, முகூர்த்தம், இரவு பகல், பக்ஷம், மாதம், ருது வருஷம் யுகம் கற்பம்மகா கற்பம் என்னும் சிரமத்துடன் இம்முறையாகச் சிவ பெருமான் சங்கரித்து வருகிறார். நாசி வழியில் ஓடும் சுவாசமானது பிங்கலை வழியாக ஐந்து தினங்கள் செல்லுமாயின் மூன்று ஆண்டுகளிலும் பத்து தினங்கள் ஓடுமாயின் இரண்டு வருஷத்திலும், பதினைந்து தினங்கள் ஓடுமாயின், ஒரு வருஷத்திலும் உடல் நீப்பான் இரண்டு நாசிகளிலும் இருபது நாள் சுவாசம் ஓடுமாயின் ஆறு மாதத்திலும் இருபத்தைந்து தினங்கள் ஓடுமாயின் மூன்று மாதத்திலும் இருபத்தேழு நாட்கள் ஓடுமாயின் ஒரு மாதத்திலும் உயிர்விடுவான் வலது நாசி வழியாக ஆறு தினங்கள் சுவாசம் சென்றால் இரண்டு வருஷம் ஏழு மாதம் பதினெட்டு நாள் ஜீவிப்பான் எட்டு தினங்கள் சென்றால் இரண்டு வருஷம் நான்கு மாதம் இருபத்து நான்கு நாட்கள் வாழ்வான். ஒன்பது தினங்கள் சென்றால் ஒருவருஷம் ஏழுமாதம் பன்னிரண்டு தினங்கள் பிழைத்திருப்பான். பதினோரு தினங்கள் சென்றால், ஒன்பது மாதம், எட்டு நாட்கள் உலகில் இருப்பான் பன்னிரு தினங்கள் சென்றால், ஏழு மாதம் பன்னிரண்டு தினங்கள் பிராணனோடு இருப்பான். இருபத்து மூன்று தினங்கள் சென்றால் நான்கு மாதம் ஆறுநாட்கள் வாழ்வான். முப்பது தினங்கள் சென்றால் ஒருமாதம் பத்துநாள் ஜீவித்திருப்பான் முப்பத் தொரு நாட்கள் அப்படியே சென்றால் ஐந்து தினங்கள் பிழைத்திருப்பான். வாய்வழியே சுவாசம் செல்லுமாயின் மூன்று தினங்களில் இறுதி மூச்சை விடுவான். இது தான் காலச்சக்கிர கிரமம். இதை நான் உனக்குச் சொல்லி விட்டேன்! இவ்வாறு சிவபெருமான் பார்வதிதேவிக்குத் திருவாய் மலர்ந்தருளியபடியே ஸனத்குமார முனிவர் வியாசருக்குக் கூறினார்.
46. மரணத்தை வெல்லும் யோக நிலைகள்
வியாசரே! பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி நாதா நீங்கள் கூறிய மரணகாலக்குறிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் உலகினர் உயிரை எமன் வஞ்சித்துக்கவர்ந்து கொண்டு போகிறான் என்று சொல்கிறார்களே அவன் அப்பிராணனை எவ்வாறு வஞ்சித்துப் பிடித்துக் கொண்டு போகிறான்? அதையும் விபரமாகச் சொல்ல வேண்டுகிறேன்! என்றாள். அதற்கு சிவபெருமான் கூறினார். உமையே! உலகினருக்கு இதம் உண்டாவதற்காக அதையும் சொல்கிறேன்! பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) என்னும் பஞ்ச பூதங்களும் சேர்ந்ததே மனித உடலாகும் அவற்றில் ஆகாயம் சர்வவியாபியாக இருக்கிறது. மற்ற பூதங்கள் எல்லாம் ஆகாயத்திலேயே ஒடுங்கி மீண்டும் அதிலிருந்தே தோன்றுகின்றன. இந்த பஞ்சபூத உடல் காரணத்துடன் கூடியதாகையால், ஞானிகளாக இருந்தாலும் அவர்களுடைய உடலுக்கும் ஓர் அழிவு உண்டாகும் அது ஒரு போதும் நிலையானதல்ல! என்றார். அவரை பார்வதி தேவி நோக்கி, நாயகரே! முன்பு காம தேவனான மன்மதனை நீங்கள் சுட்டெரித்துவிட்டு அவன் பத்தினி இரதி பலவாறு துக்கித்து தங்களைப் பிரார்த்திக்க அவளுக்கு இரங்கி மீண்டும் மன்மதனை உயிர்பெறச் செய்தீர்கள்! யமதர்மராஜனை தங்கள் காலால் உதைத்து அவனது உயிரைப் போக்கி பிறகு பூமி தேவியின் பிரார்த்தனைக்கு இரங்கி, மீண்டும் அவனுக்கு உயிர் தந்தருளினீர்கள். கால தேவனான யமனை வென்றவர் தங்களைத்தவிர எவரேனும் உண்டு என்றால் அவர் யார் என்று அடியாளுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் தேவர்கள் அசுரர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், உரகர்கள் மானுடர்கள் முதலியோர்களாலும் வெல்ல முடியாத யமதர்மனைத் தியானத்தால் யோகஞ்செய்யும் ஞானிகள் தங்கள் உடம்புடனேயே வென்று விடுவார்கள்! என்றார். அதைக் கேட்டதும் உமாதேவி வியந்து புன்னகை செய்து, சுவாமி! அத்தகைய ஞானிகளின் சரித்திரத்தை எனக்கு விபரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டாள் சிவபெருமான் கூறினார்.
நிலா முகத்தவளே! பஞ்சபூதாத்மகமான தேகமானது பூத குணம் உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்திலிருந்து வாயுவும் (காற்றும்) வாயுவிலிருந்து தேயுவும் (நெருப்பும்) தேயுவிலிருந்து அப்பும் (நீரும்) அப்புவிலிருந்து பிருதிவியும் (நீலமும்) தோன்றும் இவ்வைந்தும் சேருவதால் உடலாக மாறுகிறது. பிருதிவிக்கு ஐந்து குணங்களும் தண்ணீரும் நான்கு குணங்களும் தேயுவுக்கு மூன்று குணங்களும் வாயுவுக்கு இரண்டு குணங்களும் ஆகாயத்துக்குச் சப்தம் என்னும் ஒரே குணமும் உண்டு. பூதங்கள் தத்தமது குணங்களை நீங்கிய காலத்தில் உடல் அழிவு அடைகிறது ஞானி ஓர் உடலை அடைய விரும்பியபோது, அந்தப் பஞ்சபூத குணங்கள் அவ்வற்றினின்று உண்டாகின்றன. யமனை வெல்ல வேண்டும் என்று விரும்பியவன் அவனது பூததேகத்தில் விளங்கும் ஆகாயத்தைத் தன் உள்ளே கண்டு அதினிடத்திலேயே எல்லாக் குணங்களும் இருப்பதாகத் தெரிந்து கொண்டு மனத்தைப் புறஞ்செல்லாமல் ஒடுக்கி, யோகத்தில் இருக்க வேண்டும்! என்றார் சிவபெருமான்.
நாதா! தியானம், யோகம் இவற்றால் யமனைவெல்லலாம் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும்! என்று தேவி கேட்க, சிவபெருமான் கூறலானார் தேவியே! அந்த யோகமார்க்கம் பக்தி சிரத்தையுடையவர்களுக்கன்றி நாஸ்திகனுக்கும் தூய்மை இல்லாதவனுக்கும் அதர்மிக்கும் கூறத்தகாதது அதைச் சாதுக்களான யோகிகளின் இதத்தைக் கருதி நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள்! சுகமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, யோகத்தைப் பயிலவேண்டும் நாள்தோறும் ஏகாந்தமான ஓர் இடத்தில் இருந்து தர்ஜனியால் இரண்டு நாழிகை காலம் காதுகளை மூடிக்கொண்டு பரமசிவத்தைத் தியானித்தால் வயிற்றிலுள்ள ஜடாராக்கினியிலிருந்து ஒரு சப்தம் உண்டாகி அவனுக்குக் கேட்கும் அன்றியும் அந்த ஓசை, ஊதுவது போலக் கேட்டு வயிற்றிலுள்ள ஆகாரத்தையெல்லாம் பசனம் செய்து விடும். ஜ்வராதி ரோகங்களைப் போக்கி உபத்திரவங்களை நீக்கிவிடும். இவ்வாறே நாள்தோறும் இரண்டு நாழிகை வரையில் பயின்று வந்தவன் மரணத்தை வென்று சுயேச்சையாகத் தரிசித்து எல்லாவற்றையும் கண்டு சர்வசித்தியை அடைகிறான். மழைக்காலத்தில் மேககர்ஜனையைப் போன்ற சப்தத்தைக் கேட்டு அப்யசித்தவன், யோகியாய் ஜனன மரணங்களை நீக்கச் சூக்ஷ்மத்திலும் சூக்ஷ்மமாகவுள்ள பிரமத்தைத் தரிசித்து பதரை நீக்கி மணியைக் கொள்பவன் போல, சம்சாரம் முதலான துக்கங்களை ஒழித்து, பரமஞானத்தை அடைகிறான். இது சப்த பிரம்ம யோகம் எனப்படும், இந்த யோகாபியாச முடையவர்கள், பசி தாகங்களைப் போக்கித் தாம் விரும்பியவற்றை அடைவார்கள். இதுவே முக்திக்குக் காரணம் இது யாவருக்கும் சொல்லக் கூடாதது. நாசரகிதமானது உபாதி வர்ஜிதமாகவுள்ளது; கால பாசத்தினால் மோகிக்கப் பட்டவர்களும் பாவிகளும் துர்ப் புத்திக்காரர்களும் சப்த பிரமத்தை அறியமாட்டார்கள். சப்தப் பிரமஞானம் உண்டாகும் வரையில் பிறவித்தளை விலகாது; சப்தப் பிரமத்தை அறிந்தவர்கள் ஜன்ம பந்தத்திலிருந்து நீங்குவார்கள். தன் உடம்பில் உண்டான உறக்கம் சோம்பல் தாமசம் காமக்குரோதாதிகள் முதலியவற்றை நீக்கிச் சுகமான ஆசனத்திலிருந்து நூறுவயது சென்ற கிழவனாக இருந்தாலும் இந்த யோகத்தைப் பயில்வானேயாகில் மிருத்யுஞ்சய சரீரத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் அடைகிறான். இதைப் பயின்றவனுக்கு சர்வேஸ்வரனிடம் மிகவும் நம்பிக்கை உண்டாகும்;
இந்த யோகத்திற்கு ஓங்கார மந்திர பீஜாக்ஷரங்கள் வேண்டுவதில்லை, பயிற்சியினாலேயே இதை அடையலாம். இந்தச் சப்தத்தில் ஒன்பதுவகைப் பேதங்கள் உள்ளன அவற்றையும் சொல்லுகிறேன். அவை கோஷம், காம்ஸ்யம், ஸ்ருங்கம், கண்டா வீணை , புல்லாங்குழல், துந்துபி, சங்கம், மோகம் போன்ற சப்தங்களாலும் விவேகி இத்தகைய ஒலிகளைக் கேளாது விடுத்தால் ஓங்காரத்தின் ஓசை உண்டாகும். அதையே அவன் கேட்க வேண்டும். அதுவே சிறந்தது அந்த ஓங்கார சப்தத்தை யதோத்மாகப் பயிலும் ஒருவனை புண்ணிய பாவங்கள் அணுகாது ஆறு மாதத்திற்கு அந்தச் சப்தத்தை அப்யாசித்தவன் மகாயோகியாய் எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பான், கோஷம் என்ற சப்தத்தைப் பயின்றவன் ஆத்ம சுத்தி எல்லா நோய் நீக்கம் வசீகரம் முதலான சித்திகளையும் அடைவான் காம்ஸ்யம் என்பதைப் பயில்பவன் எல்லா பிராணிகளின் கமனத்தையும் தடுக்கக் கூடியவனாவான். மேலும் விஷயங்களைத் தடுக்கவும் பூதம், பேய் முதலியவற்றை அடக்கவும் வல்லவனாவான். மூன்றாவதாகிய ஸ்ருங்கம் என்ற சப்தத்தைப் பயின்றவன் பகைவரை ஒழிக்கவும் தன் இஷ்டப் படி அவர்களை நடக்கச் செய்யவும் வல்லவனாவான். கண்டா என்னும் சப்தத்தைப் பயின்றவன் எல்லாத் தேவர்களையும் தன்னிடம் வரவழைக்கும் திறனுடையவனாவான், அல்லாமல் யக்ஷர், கின்னரர், கிம்புருடர், மானுடர் முதலானவர்களையும் வசப்படுத்த வல்லவனாவான். வீணை என்னும் சப்தத்தை அப்யாசஞ் செய்பவன் தூரதிருஷ்டியை அடைவான். புல்லாங்குழல் என்னும் சப்தத்தைப் பயின்றவன் எல்லாம் அறிந்தவனாவான் துந்துபி என்பதைப் பயின்றவன் நினைத்த உருவம் எடுக்க வல்லவனாவான். மோகநாகத்தை பயில்வோன் ஆகாயத்தில் சஞ்சரிக்க வல்லவனாவான். சர்வத்தையும், பார்க்கவும் வல்லமையும் பெற்று சர்வ சித்திமானுமாவான் இவ்வாறாக சப்தத்தின் விஷயத்தை விவரித்தேன், இனி எதைப் பற்றிக் கேட்க விரும்பினாலும் கேட்கலாம் என்றார் மங்கையொரு பாங்கரமான மகாதேவர். உமாதேவி சிவபெருமானை நோக்கி, நாதா! எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான ஆகாயத்திலிருந்து வாயு (காற்று) தோன்றுதலின் வாயுமயமான தேகத்தினால் ஆகாய சொரூபமான பிரமத்தை எப்படி அறியலாம்? என்று கேட்டாள் அதற்கு சிவபெருமான் கூறினார்.
தேவி! பூர்வத்தில் யோகிகளின் இதத்தின் பொருட்டு விவரித்துச் சொல்லிய அவ்விஷயத்தை உனக்குச் சொல்லுகிறேன் வாயுமயமான உடல் அழிந்து போகும் என்று கால ஞானத்தால் அறிந்துகொண்டு சரீரீயானவன் பிராணாயாமம் என்னும் யோகத்தைப் பயில்வானேயாகில் தனக்கு உண்டாகும் மரணத்தைப் பதினைந்து நாட்களில் விலக்க வல்லவனாவான். அவனது இதயத்திலிருக்கும் வாயுவானது சதா ஜடராக்கினியோடு கூடி, உள்ளும் புறமும் சஞ்சரிக்கிறது அந்த வாயு எங்கும் பரவியுள்ளது. அத்தகைய வாயுவைப் புறஞ்செல்லாது தன்னுள் அடக்கும் யோகி உலகத்தை ஜெயிக்கிறான். வாயுவானது துருத்தியிலிருந்து அதைப் பூரிக்கச் செய்வது போல பிராண வாயுவானது ஒருவனின் உள்ளடங்கியிருந்தால் அவனை யோகியாக்கும் ரேசக, பூரக, கும்பகங்களால் பிராண வாயுவைத் தன் வசப்படுத்திக் கொள்பவன் மகத்தாகிறான். அவன் பல்லாயிரம் தலைகளும், பல்லாயிரம் கைகளும், பல்லாயிரம் கால்களும் அமைந்த விராட்டின் சொரூபமாகிறான். இந்த வகைப் பிராணயாமமோ காயத்திரி மந்திரத்தை கிரசோடு கூட்டி வியாஹூதி பூர்வமாய் பிராணவாயுவை அடக்கி ரேசகாதி நிலையிலிருந்து மும்முறை சாவதானமாய் ஜபிப்பதே பிராணாயாமமாகும். அதைவிடச் சிறந்த யோக மில்லை. அதுவே சித்திகள் அனைத்தையும் கொடுக்கக் கூடியது. சந்திரன் சூரியன் முதலான கிரகங்கள் அழியும் என்றாலும் பிராணாயாமம் செய்வோர் ஒரு காலத்திலும் அழிய மாட்டார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பெய்தார். நூறு ஆண்டுக்காலம் வரையில் புண்ணிய தீரத்திலிருந்து தருப்பை நுனியின் ஜலத்தை அருந்தி, உயிர் காத்துக் கடுந்தவஞ் செய்தவன் பெறும் பயனை மேற்சொல்லியபடி ஒரு பிராணாயாமஞ் செய்தவன் பெறுவான் என்றால் அதன் பயனை என்ன வென்று சொல்வது? காலையில் எழுந்து ஒருதரமாவது விதிப்படி பிராணாயாமஞ் செய்த அந்தணர்கள் பிரமலோகத்தை அடைவார்கள். தனிமையாய்த் திவ்விய ஆசனத்திலிருந்து இந்தப் பிராணாயாமத்தை அப்யாசித்தால் ஜராமரணங்களை நீக்கி, வாயுவைப் போல ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லபமும் சித்தனைப் போன்ற உருவமும் மின்னலைப் போன்ற தேககாந்தியும், அறிவின் விசேஷமாகிய ஆற்றலும் பராக்கிரமமும் வாயு வேகமும் ஆரோக்கியமும் தேவர்களுக்கும் கிட்டாத பதவியும் அடையச் செய்யும் இதுவே பிராணாயாமத்தின் பயன். இனி தேயுவினால் (நெருப்பினால்) அடையுஞ் சித்தியைச் சொல்லுகிறேன் புனித ஆசனத்தில் சுத்தனாக இருந்து, மனித நடமாட்டம் பனிகுளிர் முதலிய இடையூறுகள் இல்லாத தன்னந்தனிமையான இடத்தில் ஒரே மனதாய் மேல் நோக்குடன் அரை முகூர்த்த காலம் இருபுருவங்களின் மத்தியில் ஈஸ்வர சம்பந்தமான வெண்மை செம்மை கருமை பசுமை வானவில் போன்ற சித்திரம் என்ற நிறங்கள் அமைந்த ஜோதியை இளஞ்சூரியனைப் போல விளங்கத் தரிசித்தவன் புலனடக்கம் பிற உடலில் புகுதல்(கூடுவிட்டுக் கூடுபாய்தல்) அணிமாதி அஷ்ட சித்திகள் ஞானநோக்கம் தொலைவிலுள்ள ஒலியையும் உற்றுக் கேட்கும் ஆற்றல் பார்ப்பதற்கு அருமையானவற்றைப் பார்க்கும் வல்லமை முதலானவற்றை அடைவான். இதை எப்பொழுதும் பழகுபவன் ஆகாய சஞ்சாரம் செய்பவனாவான். வேதாத்தியயனஞ் செய்தவர்களாயினும் ஞானிகளாயினும் முன்கர்மவசத்தால் என்னுடைய உருவத்தைப் பார்க்க வல்லபமிருப்பினும் பார்க்க மாட்டார்கள். என் பிரபாவத்தைக் கேட்கச் சக்தியிருந்தாலும் செவிடர் போலக் கேட்கமாட்டார்கள். முடத்தன்மையால் குருடர்களைப் போல என்னை அறியமாட்டார்கள். அத்தகைய வஸ்துவையானே அறிந்தவன் அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் அஞ்ஞான இருளுக்கு அதிகரித்த ஜோதிமயமான தேஜஸைத் தரிசித்தவன் மரணத்தை வெல்கிறான். இதை விட ஆன்மாக்களைக் கடைத்தேற்றும் வழி பிரிதொன்றில்லை. தேஜஸினால் உண்டாகும் சித்தியை நான் உனக்குச் சொன்னேன்.
இனி அப்புவால் (நீரால்) உண்டாகும் சித்தியைச் சொல்லுகிறேன். நீராடல் முதலானவற்றை முடித்துக் கொண்டு பரிசுத்தனாய் நிர்மலமான ஸ்தானத்தில் ஏகாந்தமாக இருந்து, சுகமான ஆசனத்தில் உட்கார்ந்து மனத்தைப் புலன்வழி செலுத்தாமல் தன் உடலை நிமிர்த்திக் கைகளைக் கூப்பி, வாயைப் பறவையின் மூக்குப் போலக் குனித்து வாய்வழியாக வாயுவை உட்கொள்ளுவானேயாகில் தாடையின் உட்பிரதேசித்திலிருந்து ஒருவகையான நீர் உண்டாகும். அது குளுமையான அமிர்த நீர் அதை அருந்தியவன் திவ்விய உடலை அடையப் பெற்று மாபெரும் தேஜஸ்வாய்ந்தவனாய்ப் பசிதாகங்களைப் போக்கி வலிமையில் யானையையும் வேகத்தில் குதிரையையும் போன்று விளங்கி வெகுத்தொலைப் பார்வையும் வெகுதொலை ஒலிக் கேட்கும் ஆற்றலும் பெற்று கந்தர்வ வித்தியாதரர் முதலான கணங்களைப் போன்ற தேஜஸும் புத்தியில் பிரஹஸ் பதியையும் தேவ வருஷங்கள் நூறு வரையில் வாழ்வையும் அடைவான். இன்னும் ஓர் இரகசியத்தையும் சொல்லுகிறேன் அது தேவர்களுக்கும் அடைவதற்கு அசாத்தியமானது அதாவது நாவை வளைத்து அதன் முனையை உள் நாக்கில் வளைத்து உள் நாக்குடன் சேர்க்க அதினின்றும் அமிர்தமயமாகக் குளுமையான நீர் உண்டாகும். அந்த அமிர்தத்தை அருந்தியவன் அமரத்துவத்தை அடைகிறான். நாவினை (ஜே) ரேபம்போலவும் மணிநாக்கின் வளைவைப் போலவும் வளைந்து மூலாதார ஸ்தானத்தைப் பந்தித்தால் புனிதமான இதய தாமரையிலிருந்து ஓர் பித்து உண்டாகி நாவின் நுனியை அடையும், ஆனந்தகரமும் ஜகத்காரமும் சம்சார துன்ப நீக்கமும் நிர்மலமான பிரமஸ்வரூப உணர்ச்சியும் நியமனை வெல்லுதலும் அமரத்துவமும் பசிதாக நீக்கமும் செய்யவல்லது இந்த அமிர்தமேயாகும். இதை லம்பிகாயோகம் என்பார்கள் மேற்கூறியவைகளில் ஒன்றைப் பயில்வானேயாகில் அவனுடைய தைரியத்தினாலே காலதேவனான யமனையும் வென்று பிரம்மானத்தத்தை அடைகிறான். உலக இன்பம் முழுவதும் சொப்பனம் போலும் என்று உணர்ந்து அவற்றில் வெறுப்புற்று சுவர்க்காதி போகங்களைக் கருதாமல் நிலையான என் திருவடியில் மனதை நிலைநிறுத்தியவர்கள் என் சாயுஜ்யத்தை அடைந்து கற்ப கோடிகாலம் வாழ்ந்திருப்பார்கள்.
இவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியாருக்குக் கூறியதை ஸனத்குமார முனிவர் வியாச முனிவருக்கு எடுத்துரைத்தார்.
47. சாயா புருஷ தரிசனமும் புராணம் கேட்டலும்
வியாசரே! உமாதேவி உலக நாதரை நோக்கி, நாதாதாங்கள் கூறிய காலஞானத்தையும் யோகசாதனத்தையும் உணர்ந்தேன் இன்னும் இது போன்ற விஷயங்களைச் சொல்லவேண்டும் என்று கேட்டாள். சிவபெருமான் கூறினார். தேவிஸ பாவங்கள் அனைத்தையும் ஒழிக்கத்தக்க சாயாப் புருஷ லக்ஷணத்தைச் சொல்லுகிறேன், கேள்! சுந்தரி பகலில் சூரியனையாவது இரவில் சந்திரனையாவது தனக்குப் பின்புறமாக்கி நீராடித் தூய ஆடை அணிந்துசந்தன புஷ்பங்களால் அலங்கரித்துக் கொண்டு என் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் தேவியான உனது நவாக்ஷரி மந்திரத்தையும் ஜபித்துத் தன் தேக சாயையை முதலில் பூமியில் பார்த்துப் பிறகு சிறிது நேரத்தில் ஆகாயத்தில் மீண்டும் அவ்வகையே பார்க்க வேண்டும் ஆகாயத்தில் தோன்றும் சாயை என்னுடையது அதை நிர்மலமான மனத்துடன் தரிசித்தால் பிரமஹத்தி முதலான பாவங்கள் எல்லாம் ஒழியும். கர்ம சீலர்களும் தவமுனிவர்களும் யாகஞ் செய்தவர்களும் அடையுங் கதியை அடைவதற்கு யோக சாஸ்திரத்தைப் பயிலவேண்டும். அந்த யோகத்திற்கு முக்கியமாக வேண்டுவது ஞானம். அந்த ஞானமோ முறையாக அடையத்தக்கது. அது முறையாக உண்டாவதற்குப் பாவ ஒழிய வேண்டும் பாவ ஒழிப்பிற்குப் புராணங்களைப் படிக்கக் கேட்க வேண்டும் புராணங்களைக் கேட்பதினாலேயே சம்சார பந்தத்தை(பிறவித்தளையை) நீக்கி ஞானத்தை எய்தலாம்.
அது அறம், பொருள், இன்பம் என்பனவற்றிற்குக் காரணமாயும் மோக்ஷத்துக்கு வழியாகவும் இருக்கிறது ஆகையால் மனிதப் பிறவி எடுத்தோர். அவசியம் புராணங்களை வாசித்தும் கேட்டும் தங்கள் ஜன்மசாபல்யத்தை அடையவேண்டும் யாகம், தானம், தவம், தீர்த்த யாத்திரை முதலியவற்றால் வரும் பயனைப் புராணம் கேட்பது ஒன்றினாலேயே பெறலாம், அறநெறியை விளக்கத்தக்கப் புராணங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் இதத்திலோ, பரத்திலோ சுகமடையமாட்டார்கள். உலகத்தின் படைப்பு முதலான கிரமங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் யாவருக்கும் அது விளங்காமையால் பல காலம் நீடித்து அறநூல் ஆராய்ச்சி செய்ய முடியாதவர்கள். சாமானியமாகப் புராணங்கள் கேட்பதாலேயே அவற்றையெல்லாம் உணரலாகும். புராணங்களில் ஆதிசிருஷ்டியும் சூரிய சந்திர வமிச விருத்தியும் மனுவந்தரக் கிரமமும் தானக்கிரமமும் ஆசாரமுறையும் கற்பங்களும் பிரமதேவரால் சுயம்புவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இத்தகையப் புராணங்கள் முப்பத்தாறு உள்ளன. அவற்றுள் ஒரு புராணத்தையாவது பக்தியோடு முற்றிலும் கேட்டவன். வனத்திலிருந்து நான்கு வேதங்களையும் ஒருமுறை பாராயணம் செய்து முடித்த பயனை அடையலாம். யாகம், தானம், தவம் முதலியவற்றினால் உண்டாகும் பலனைத் தர்ம சாஸ்திரங்களை வாசித்து உணர வேண்டும். இவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவிக்குக் கூறிய படியே ஸனத்குமார வியாசருக்குக் கூறினார். அந்த வியாச பகவானிடம் கேட்டபடியே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்வாறு சூதபுராணிகர் நைமிசாரணியமுனிவர்களுக்கு சொன்னார்.
48. மும்மூர்த்திகளின் தோற்றம்
நைமிசாரணியவாசிகள், சூத புராணிகரை நோக்கி, மகானே! சிவபெருமானை இலிங்கமூர்த்தத்திலும் பிறதேவர்களை விக்கிரவடிவிலும் உலகினர் பூஜை செய்வதற்குக் காரணம் என்ன என்பதை எங்களுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார்கள் அதற்கு சூதமா முனிவர் கூறலானார். முன்பு இந்த விஷயத்தை வியாசர் ஸனத்குமாரமுனிவரிடம் கேட்டு, என்னிடமும் அதைச் சொல்லியிருக்கிறார் அவர் எனக்குக் கூறியவாறே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள். நைமிசாரணிய முனிவர்களே! முன்பு தாவர ஜங்கமங்களெல்லாம் நலிவுற்றுப்பூமி முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டிருந்தது பிருமா, விஷ்ணு, ருத்திரர் மூவரும் அந்த ஜலத்திலிருந்து தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய வழியைப் பண்டிதர்களும் அறிய மாட்டார்கள். தாவர ஜங்கமங்கள் நலிவுற்று ஒரே நீர் மயமாக இருக்கவே பெரியதான வாயு தோன்றி அதை உலர வைத்தது. அதோடு துவாதச ஆதித்தர்கள் நான்கு திக்குகளில் நால்வரும் ஆகாயத்தில் எண்மருமாகப் பிரகாசித்து உலரச் செய்தார்கள். அப்போது பாதலலோகத்திலிருந்து காலக்கினி ருத்திரர் சர்வதேஜஸோடு, தோன்றினார். அவரும் சூரிய தேஜஸோடு நீரை உலர்த்தி யாருமறியாமல் பாதலத்தை அடைந்தார் இவ்வாறு நீர் உலர்த்தப் பட்டதும் ஏழு மேகங்கள் தோன்றி மழை பொழிந்து, முன்போல எங்கும் நீர் மயமாக்கின. இப்படியே மாறிமாறி உண்டாயிற்று. அதுவே இயற்கையாயிற்று. மும்மூர்த்திகளில் அதிதீக்ஷண்ய தேக காந்தியுடன் கூடிய ருத்திர மூர்த்தியை நோக்கி நான்முகனும் திருமாலும் வணங்கி உலகங்களைப் படைக்க வேண்டும் என்று இறைஞ்சினார்கள். அவ்வாறே ஆகுக என்று ருத்திரர் சொல்லி நீருக்குள் மறைந்தார். பிரம்மாவும் விஷ்ணுவும் அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஓராயிரம் ஆண்டுகள் வரை தவமிருந்தும், அவர் திரும்பி வரவில்லை. எனவே பிருமதேவர் விஷ்ணுவை நோக்கி, சிருஷ்டி எவ்வாறாவது? என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு என்வார்த்தையைக் கேள் காலதாமதம் வேண்டாம். உலகப் படைப்பில் நீ முயல்வாயானால் அதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கிறேன். என்றார். பிரமன் சிருஷ்டி செய்யத் துவங்கி அண்டஜம். ஸ்வேதஜம், உற்பீஜம். சாரயுஜம் என்னும் நால்வகை யோனிகளான கந்தர்வ யக்ஷ, ராக்ஷச, பைசாச மானுட, மிருக, பசு, பக்ஷி, தாவராதிகளைப் படைத்தார். இவ்வாறு படைத்த பிறகு நீரினுள் மூழ்கிய ருத்திரர் சிருஷ்டி செய்ய மீண்டும் எழுந்தபோது பிரபஞ்சம் படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கோபங்கொண்டு தன் முகத்திலிருந்து ஒரு தேஜஸை விடுத்தார் அது காலாக்கினியாகிப் பிரமனது சிருஷ்டிகள் அனைத்தையும் அழித்தது. அதைக்கண்ட பிருமதேவன் குழம்பி ருத்திரர்மூர்த்தியை நோக்கி ஈசானமூர்த்தியை! காலரூபியே! முக்கண்ணரே! வரதனே! நீலகண்டனே! பைரவனே! சம்போ! கபர்தினே! பசுபதியே! திரிசூலதாரியே! கபாலமாலினே! தேவ தேவா! பிரைசூடிய பெம்மானே சங்கரா! சரணம் சரணம்! என்று ஸ்தோத்திரம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன்; பிரமனே! உன் ஸ்தோத்திரத்தைக் கேட்டு மகிழ்ந்தேன் என்னை வேண்டியவர்களைக் காக்கிறேன். ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்! என்றார். அதற்கு நான் படைத்த பிரபஞ்சம் முன்புபோலவே இருக்க வேண்டும்! என்றார்! நான்முகன்.
என் முகத்தில் உண்டான தேஜஸை எவ்விடத்தில் ஒடுக்கலாம்? என்று ருத்திரர் கேட்கவே பிரமதேவன் சற்று ஆலோசித்துவிட்டு நாதனே! பிரபஞ்சத்திற்கு அனுகூலமாயிருக்க சூரியனிடம் இந்தத் தேஜஸை வைத்து விட்டு நீரே சூரியனிடமிருந்து சிருஷ்டி முதலான தொழில்களைச் செய்து பிரபஞ்சத்தில் நான்கு வர்ணத்தினராலும் பூஜிக்கப்பெற்றுக் கற்பாந்தத்தில் நீரே நாசஞ் செய்யவும் வேண்டுகிறேன்! என்றார். அவ்வாறு கூறிய பிரமனைப் பார்த்து ருத்திரர் புன்னகை செய்து என்னை இலிங்க மூர்த்தத்தில் பூசித்தாலன்றி உனக்குச் சிருஷ்டியாற்றல் கை கூடாது என்று கூறித் தேஜோமயமான இலிங்கவடிவமானார். அந்த வடிவோ பாதளத்திற்கு அடியில் படிந்தும் அண்டாண்ட சராசரங்களுக்கு அப்பாலும் உயர்ந்தும் ஓங்கியது. இவ்வாறான தேஜோமயலிங்கத்தின் அடியையும் முடியையும் அறிவதற்குப் பிருமதேவனும் மகாவிஷ்ணுவும் ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. சர்வ மயமாகிய பரமேஸ்வரரின் தேஜோமயமான லிங்கமாகிய இதைப் பூஜிப்பவர்கள் அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளையும் அஷ்டமா சித்திகளையும் அனைத்துலகிலும் சஞ்சரிக்கும் ஆற்றலும், படைத்தல் காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை செய்வதற்கான தகுதியையும் பெறுவார்கள், மேன்மையான பதவியை அடைய லிங்கபூஜையை தவிர வேறு கதியில்லை. ஆகையால் இந்த இலிங்கத்தை அர்ச்சித்து உங்கள் மனோரதங்களை அடைவீர்களாக! என்று அந்த வானொலி வாக்கு கூறியது. அதைக் கேட்டதும் அயனும் அரியும் அதன் அடிமுடியைத் தேடி விரும்பிதை விட்டு விட்டுப் பல காலம் அதையே பூஜிப்பாராயினர்.
49. நான்முகனும் மாலவனும் வரம்பெறுதல்
சவுனகாதி முனிவர்களே! இவ்விதமாகத் தோன்றிய இலிங்கத்தை விஷ்ணுமூர்த்தி எல்லா உபசாரங்களோடும் விதிவழுவாமல் பூஜை செய்து பலவாறாகவும் தோத்திரம் செய்து சதருத்திரிய நாமங்களால் அர்ச்சனை செய்து. திவ்விய நாமங்களால் பூஜித்தார். அவர் பூஜைக்கு மகிழ்ந்து இலங்கத்திலிருந்து மஹாதேவர் தோன்றி கருணைப்பார்வையோடு பிருமாவையும் திருமாலையும் நோக்கி, நீங்கள் சொல்லிய துதிகளைக் கேட்டு மகிழ்ந்தேன். விஷ்ணுவே! தேவர் அசுரர் மானுடர்களால் நீ பூஜிக்கப்பட்டவனாய் பகைவர் அனைவரையும் வென்றடக்க வல்லவனாய் ஒருவேளை என்னையுங் கூட வெல்ல வல்லவனாய் இருக்கும் வல்லமையை வரமாகக்கொடுத்தேன் பிருமதேவனே அழியாத சிருஷ்டி சக்தியையும் மனுவந்தராதிக்கிரமங்களைம் இந்திராதி பேதங்களையும் ஏக காலத்தில் நான்கு வேதங்களையும் நான்கு முகத்தாலும் உச்சரிக்கும் வல்லமையையும் உனக்குத் தந்தேன்! என்று சொல்லிமறைந்தார் ஆகையால் முனிவர்களே உலகத்தில் அறம் பொருள் முதலான புருஷார்த்தங்களைக் கொடுக்கவல்ல தவம் வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில் புத்திர பவுத்திராதி இராஜ்ய சம்பத்துக்களையும் சுவர்க்க போகங்களையும் மோக்ஷ சாம்ராஜ்யாங்களைம் கொடுக்க வல்லது சிவலிங்க பூஜையேயன்றி வேறில்லை என்று எனது குருவான வியாச மகரிஷியால் நான் கேட்டறிந்ததை இப்போது உங்களுக்குச் சொன்னேன் இன்னும் கேட்க வேண்டியது இருந்தால் கேளுங்கள்! இவ்வாறு கூறினார் சூதமுனிவர்.
50. உலகப் படைப்பு
சுவனகர் முதலான முனிவர்கள், சூதபுராணிகரை நோக்கி மகாத்மாவே! இதுவரை நீங்கள் சொன்னவற்றைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். இனி இந்த உலகம் பிரமதேவனால் எவ்வாறு படைக்கப்பட்டதோ அதையும் விபரமாகச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். நைமிசாரணியவாசிகளே! அகண்டாகாரமானவராயும் சத்துமகத்துமானவராயும் மமதாதிகள் அற்றவராயும் விஷ்ணு பக்தியுடையவராயும் பெருந்தேஜஸையுடையவராயும் கற்பம், காலம் முதலியவற்றை வரையறுப்பவராயும் வேதங்களில் ஹிரண்யகர்ப்பர் என்று சொல்லப்படுபவராயும் விளங்கும் பிருமதேவருக்கு நமஸ்காரம்! முனிவர்களே! சிருஷ்டி கர்த்தா பிரமதேவன் என்றும் ஸ்திதிகர்த்தா விஷ்ணு என்றும் சங்கார கர்த்தா உருத்திரர் என்றும் இவர்கள் மூவரும் சுத்த சாக்ஷõத்கார பரமசிவத்தினின்றும் தோன்றியவர்களே என்றும் உணர்வீர்களாக. பிரமதேவர் பலவிதமான சிருஷ்டிகளையும் உருவாக்க வேண்டும் என்ற கருத்துடையவராக முதலில் ஜலத்தைப் படைத்து, அதில் தம் வீரியத்தை விடுத்தார் அது பொன்மயமான ஓர் அண்டமாயிற்று பிரமதேவர் முன்பு சிவபெருமானிடம் பெற்றுள்ள வரத்தினால் சிருஷ்டி செய்யும் வல்லமையையுடையவராய் அந்தப் பொன்னிறமான அண்டத்திலிருந்தே தோன்றிச் சுயம்புவானார். அவர் சிறிது காலம் அந்த ஜலத்தில் வசித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த அண்டத்தை இரண்டாக்கி அதில் ஒன்றைச் சுவர்க்கமாகவும், ஒன்றைப் பூமியாகவும் பதினான்கு உலகங்களாகவும், பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் இடையே ஆகாயமாகவும் படைத்தார், இந்தப் பூமி பத்துத் திக்குகளுடன் கூடியதாய் ஜலத்தின்மீது மிதந்து கொண்டிருந்தது. இந்தப் பூமியில் காலம், மனம், வாக்கு, காமம், குரோதம் ஆசை ஆகியவற்றை உண்டாக்கினார் பிறகு மரீசி, அத்திரி, ஆங்கிரஸர், புலஸ்தியர், கிருது, வசிஷ்டர் என்னும் எழுவரைப் பிருமா தம் மானஸீகப்புத்திரர்களாகப் படைத்தார் அவர்கள் சப்த பிரமாக்கள் என்று வழங்க்படுகிறார்கள். அதன் பிறகு ஸனத்குமாரரை உண்டாக்கினார். அந்த ஸனத்குமாரர் அந்தச் சப்த பிரமாக்களிலும் சிறந்து விளங்கினார் அம்முனிகள் எழுவரிடம் பல வம்சங்கள் உதித்தன. மின்னல், இடி, மேகம், வானவில் பஜன்யன், முதலானவற்றைப் படைத்தார். இருக்கு, யஜுர், சாமம், அதர்வனம், என்னும் நான்கு வேதங்களையும் யாகத்தையும் படைத்தார் அவ்வேதங்களில் கூறிய முறைப்படி பலர் பலவிதமான யாகங்களைச் செய்து தேவர்களைத் திருப்தி செய்திருக்கிறார்கள். மீண்டும் பிருமதேவர் தம் முகத்திலிருந்து தேவர்களையும் மார்பிலிருந்து பிதுர் தேவர்களையும் புஷ்டத்திலிருந்து அசுரரையும் பிற அவயங்களிலிருந்து பலவிதமான பூதங்களையும் படைத்தார். இவ்வாறு தாம் படைத்த பிராணிகள் விருத்தியடையாமல் நலிவுறுவதைக் கண்ட பிருமதேவர் தம் தேகத்தை இரண்டாக்கி ஆண் பெண் வடிவங்களாய்த் தம் மகிமையால் மீண்டும் முன்போலப் படைத்து படைப்புத்தொழில் செய்ய மனுவைப் படைத்தார். அந்த வைரஜன் என்னும் மனுவோ பல்வகை ஜீவன்களையும் உண்டாக்கினார். இவ்வாறு ஆதியாகிய சிருஷ்டிக் கிரமத்தை வாசிப்பவரும் கேட்பவர்களும் கீர்த்தியும் தீர்க்காயுளும் புத்திர பாக்கியமும் அகண்ட ஐசுவரியமும் அடைந்து நல்வாழ்வு வாழ்ந்து. இறுதியில் சிவலோகத்தை அடைவார்கள்.
51. உலகவிருத்தி
நைமிசாரணிய முனிவர்களே! இவ்வாறு சிருஷ்டியிலே விருப்பங் கொண்ட பிருமதேவரின் மகிமையினால் சதரூபை என்ற பெண் ஒருத்தி உண்டானாள். தர்மத்தினால் அயானிஜையாகத் தோன்றிய அந்தச் சதருபை அநேக காலம் தவஞ்செய்து சுவாயம்புமனுவைத் திருமணஞ் செய்து கொண்டு பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். இந்தச் சுவாயம்பு மனுவினால் தான் எழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவின் காலம் என்று வரையறுக்கப் பட்டது. சுவாயம்பு மனுவுக்கும் சத்ரூபைக்கும் பல பெண்கள் பிறந்தார்கள். கர்த்தம பிரஜாபதிக்குக் காம்யை என்ற கன்னிகை தோன்றினாள். காம்யை என்பவளிடத்தில் சாம்ராட், அஷி, விராட், பிரபு என்ற நான்கு புதல்வர்கள் தோன்றினார்கள். உத்தான பாதன் இந்திரனுக்குச் சமமான குமாரர்களைப் பெற்றான். தர்மத்தின் கன்னிகை சுநீதியின் கர்ப்பத்தில் உத்தானபாதனுக்குப் புதல்வனாக துருவன் தோன்றினான். அந்த துருவன் இளமையிலேயே மூவாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்து அழியாது உயர் பதவியை அடைந்து சப்த ரிஷிகளின் மண்டலத்துக்கு மேலேயிருந்து, நவக்கிரங்களுக்கு ஆதாரமாய் ஜோதிஸ்சக்கரத்தின் சூத்திரத்தைக் கைப்பற்றிக் கொண்டு விளங்குகிறான், துருவனுக்குப் புஷ்டி என்னும் கன்னிகையும் தான்யன் என்னும் குமாரனும் பிறந்தார்கள். புஷ்டி என்பவளிடம் ரிபு ரிபுஞ்சயன் விப்பிரன்; விரகலன் விருகதேஜஸன் என்ற ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள். ரிபு என்பவன் புஷ்கரிணி என்பவளை மணந்து சாக்ஷúஸன் என்ற மனுவைப் பெற்றான். வைராஜ மனுவினிடம் அநட்வலை என்பவருக்கு ருரு, பூரு, சதத்விம்னன், தபஸ்வி, ஸத்யஸித்து, கவி, அக்னிஷ், மோமன், அதிராத்திரன், அதிமன்யு, சுயேசசன் என்ற பதின்மர் பிறந்தனர். ருரு என்பவன் ஆகனேயி என்ற பெண்ணை மணந்து அங்கன், சுமனஸ், கியாதி, கிருதி, ஆங்கிரஸ், ஸ்ரஜி என்ற அறுவரைப் பெற்றான். அங்கன் ஸுநீதி என்பவனிடம் வேனராஜனைப் பெற்றான். அந்த வேனனுடைய அரசாட்சியில் ஏற்பட்ட குறையினால் சந்ததி விருத்தியில்லாமல் வருந்தும்போது வேதியர் அவனது கையை மதனஞ்செய்ய அவனது வலது கையிலிருந்து பிருகு சக்கரவர்த்தி வில்லும் அம்பும் ஸூர்ய தேஜஸும் சகல சாஸ்திரவுணர்ச்சியும் கொண்டு க்ஷத்திரிய முதல்வனுமாகப் பிறந்து உலகைச் சமமாகத் திருத்தி ஆட்சி புரிந்தான். பற்பல இராஜரூப அஸ்வமேத யாகங்களைச் செய்தான் பிருது என்பவனால் திருத்தப்பட்டதாலேயே இந்த உலகத்திற்குப் பிருதுவி என்ற பெயர் உண்டாயிற்று. தேவர் முனிவர் பிதுர்க்கள் கந்தர்வர்கள் முதலிய எல்லோருக்கும் உணவு உண்டாகும்படி பலவிதமான தானியங்கள் விளையத்தக்க பயிர்களும் செடிகளும் விருத்தி செய்து இந்தப் பூமி முழுமைக்கும் சக்கவர்த்தியாக பிருதுவிளங்கினான். அவனது கொடையினாலே தான் யாவரும் தங்கள் பசியைத் தணித்துக் கொள்ளும் வழியை அறிந்தார்கள். பிருதுவுக்கு ஸூதமாகதர் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களைத் தன் படைகளுக்குத் தலைவர்களாக்கிக் கொண்டான்.
52. பிருது வம்ச விருத்தி
முனிவர்களே! பிருது சக்கரவர்த்திக்கு ஹவிர்த்தானி, ஹவிர்த்தாமன் என்ற இரண்டு புதல்வர்கள் மீண்டும் பிறந்தார்கள். ஹவிர்த்தாமன் சிகண்டினியை மணந்து பிராசீனபர்ஹி என்ற கன்னிகையையும் பிரசேதஸ் என்ற பெயருடைய பத்துப் புதல்வர்களையும் பெற்றான். பிராசீனபர்ஹி சமுத்திர குமாரியாவள் அவளிடம் தோன்றிய பதின்மரும், வேதங்களில் வல்லவர்களாகவும் ஒரேவிதமான தர்மானுஷ்டானம் செய்வோருமாகப் பத்தாயிரம் ஆண்டுகள் கடலில் மூழ்கித் தவஞ்செய்தார்கள். அப்போது உலகம் ஆள்வோரின்றி உலகம் முழுவதும் செடிகளும் கொடிகளும் மரங்களுமாகிப் பிரஜைகள் குறைந்தன. இவ்விதமாகத் தாவரங்கள் வளர்ந்ததையறிந்த தசபிரசேதசுக்கள் தங்கள் கோபாக்கினியால் அவற்றையும் ஜனங்களையும் நாசஞ் செய்ய முயன்றனர். இதைக் கண்ட சோமராஜன் அவர்களை அவ்வாறு செய்யதவாறும் கோபந்தணியுமாறும் வேண்டினான். மீண்டும் அவன் நான் ஒரு கன்னிகையைத் தங்களுக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இவ்வாறு செய்வதாள் இந்தப்பிரபஞ்சமே அழிந்து விடுமே என்று எண்ணித்தான் அவளை கல்யாணம் செய்து கொண்டால் பிரபஞ்ச விருத்தியுண்டாகும். அவளிடம் என்னுடைய அரைப் பங்கு தேஜஸாலும் உங்களுடைய அரைப்பங்கு தேஜஸாலும் தக்ஷப்பிரஜாப்தி உற்பத்தியாகப் போகிறான். அவன் உக்கிரமான பிரமதேஜஸோடு பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்யப் போகிறான் என்று சொன்னான். அதற்கு இசைந்த பதின்மரும் அவளைத் தர்ம மார்க்கமாகத் திருமணஞ் செய்து கொண்டார்கள். அவளிடம் தக்ஷப்பிரஜாபதி சந்திரன் அம்சத்தாலும் இருவரம்சத்தாலும் உண்டானான். தக்ஷன் சராசரங்களையும் சதுர்ப்பாத ஜந்துக்களையும், திரியக்குகளையும் சிருஷ்டிக்க எண்ணி முதல் சில கன்னியரை உண்டாக்கி, அக்கன்னியரில் பதின்மரைத்தான் மணந்தும் பதின்மூவரைக் காசிபருக்கும் மற்றோரை நக்ஷத்திரங்களுக்கும் கொடுத்தான். அக்கன்னியரிடமிருந்து தேவ அசுரர்களும், பக்ஷிகளும் நாகங்களும் இன்னும் அநேகமானவைகளும் உண்டாயின. அது முதற்கொண்டே சம்போகஞ் செய்வதால் சிருஷ்டியாகிறதேயல்லாமல் அதற்கும் முன்பு மனசங்கற்பத்தினாலும் பார்வையாலும் ஸ்பரிசத்தாலுமே படைப்புகள் உண்டாயின.
இவ்வாறு சூத முனிவர் கூறி அவரை சவுனகாதி முனிவர்கள் நோக்கி, சூதமுனிவரே! முன்பு தக்ஷப்பரஜாபதி பிரமதேவரின் பெருவிரலிலிருந்து தோன்றினான் என்று கூறினீர்களே! இப்போது தசப்பிரசேதசுக்களுக்குப் புத்திரனாக அவதரித்தான் என்றும் தன் புத்திரியைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் என்றும் சொல்வது சந்தேகமாக இருப்பதால் இதை விளக்கவேண்டும் என்றார்கள் சூத முனிவர் கூறலானார். உற்பத்தி நாசம் என்பது பிருமதேவன் முதலானவர்களுக்கும் கற்பந்தோறும் உண்டாவதாலும் பூர்வத்தில் சிருஷ்டியானது மானசீகமாக இருந்ததாலும் ஜேஷ்ட கனிஷ்ட கிரமமும் பெண் புத்திரன் என்ற கிரமமும் முறையே அனுசரித்துக் கல்யாணஞ் செய்யவேண்டும் என்ற கிரமமும் இருக்கவில்லை. ஆண் பெண் கூடிய பிறகே இத்தகைய முறைகள் ஏற்பட்டன. இதைப்பற்றிப் பண்டிதராக இருப்பவர்கள் சந்தேகப்படுவது தவறு. தக்ஷப்பிரஜாபதியால் ஏற்பட்ட பிரபஞ்சசிருஷ்டியின் ஆரம்பத்தைப் பக்தியோடு கேட்பவர்களும் படிப்பவர்களும் புத்திரச் செல்வமும் தீர்க்காயுளும் சிவலோக சாம்ராஜ்யமும் அடைவார்கள். இவ்வாறு சூத புராணிகர் சொன்னார்.
53. காசிபர் முதலானோர் பரம்பரை
நைமிசாரணிய முனிவர்கள், சூத முனிவரைப் பார்த்து சுவாமி! தேவர், தானவர், கந்தர்வர், இராக்ஷசர் முதலியவர்களின் சிருஷ்டியை விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! பூர்வத்தில் தக்ஷப்பிரஜாபதி தன்மனதால் சிருஷ்டி செய்து, அது விருத்தியடையாததைக் கண்டு யோசித்தான். வீரணப் பிரஜாபதியின் கன்னிகையைக் கூடிக்கலந்து அவளிடம் ஐயாயிரம் புத்திரர்களை உண்டு செய்தான். அவர்கள் ஐயாயிர வரையும் முன்பே பிரமனிடம் தோன்றிய நாரத முனிவர் பார்த்து சிறுவர்களே! உங்களுக்குச் சிருஷ்டி விஷயத்தில் என்ன தெரியும்? காசிப முனிவர் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வியிடம் சிருஷ்டி செய்யப் போகிறார். பூமியில் திக்குகளையும் பிரதேசங்களையும் செவ்வகையாகத் தெரிந்து கொண்டு சிருஷ்டி செய்யத் துவங்குங்கள்! என்று சொன்னார். அவர்கள் அவர் கூறியவாறே பூமி முழுவதையும் பார்த்துவரச் சென்றார்கள். அவர்கள் அவ்வாறு சென்றதை அறிந்த தக்ஷப்பிரஜாபதி, மீண்டும் ஹரியஸ்வர் என்னும் பெயரையுடைய ஐந்நூறு புதல்வரைப் பெற்று அவர்களைச் சிருஷ்டி செய்ய ஏவினான் அவர்களும் தங்கள் தந்தையரின் கட்டளைப்படி சிருஷ்டி செய்ய முயலும்போது நாரதர் அவர்களையும் சந்தித்து, மதியில்லாத சிறுவர்களே! பூமியின் பிரமாணத்தை அறியாமல் எவ்வாறு சிருஷ்டி செய்வீர்கள்? என்று கேட்டார் அவர்களும் பூமியின் பிரமாணத்தை உணரச்சென்று பல திசைகளிலும் அலைந்து அதன் பிரமாணத்தை உணராமல் கடலை நோக்கிச் சென்று திரும்பி வராதவர்களைப் போலச் சென்று விட்டார்கள். அப்புதல்வர்களும் திசைகளின் மேற்சொன்றதை அறிந்த தக்ஷப் பிரஜாபதி வீரணி என்னும் தன் மனைவியிடம் அறுபது கன்னிகைகளை உண்டாக்கி அவர்களில் பத்துப் பெண்களைத் தர்மப் பிரஜாபதிக்கும் பதின்மூன்று பெண்களைக் காசி பருக்கும் இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் நான்கு பெண்களை அரிஷ்டநேமிக்கும் இரண்டு பெண்களை பிரம்ம புத்திரருக்கும் இருவரை ஆக்கிரசுக்கும் இருவரை கிருகாசுவர்க்கும் மணஞ்செய்வித்தார்.
அவர்களில் அருந்ததி, வசு ஜாமி, லம்பை, பானு, ம்ருத்வதி, சங்கல்பா, முஹூர்த்தை, ஸாத்யை, விசுவை என்ற பதின்மர் தர்மப்பிரஜாபதியின் மனைவியர். அவர்களில் விசுவை என்பவள் விசுவே தேவர்களையும், ஸாத்யா என்பவள் ஸாத்தியாளையும், ம்ருத்வதி மருத்துக்களையும், வசு வசுக்களையும், பானு பானுக்களையும், முகூர்த்தை முகூர்த்தங்களையும், லம்பை என்பவள் கோக்ஷத்தையும், ஜாமி என்பவள் நாக வீதி என்னும் பெண்ணையும் அருந்ததி பூப்பிரதேசங்களையும்; சங்கல்பா சங்கற்பத்தையும் சத்தியத்தையும் பெற்றனர். வசு என்பவள் பெற்ற மக்கள் அயன், துருவன், சோமன், தரன், அநிலன், அநலன், பிரத்தியூஷன். பிரபாசன் எனப்படுவார்கள். அந்த வசுக்கள் எண்மரில் அயன் என்பவன் வேதண்டன், சிரமன், காந்தன், முனி என்ற நால்வரையும் துருவன் என்பவன் காலன், லோகப் பிரபாவம் என்ற இருவரையும் சோமன் என்பவன் வர்ச்சான் என்பவனையும் தரன் என்பவன் மனோஹரையிடம் திரவிணன் ஹூதஹவ்யவஹன். சிசிதஸ்பிராணன், ரமணன் என்பவர்களையும், அநிலன் என்பவன் சிவை என்னும் தன் மனைவியிடம் புரோஜவனையும் பெற்றார்கள். அநலன் என்பவன் கிருத்திகைப் பெண்கள் அறுவரையும் மணந்து அக்கினிப் புத்திரன், குமாரன் சரஸ்தம்பன், சாகன், விசாகன், கைகமேயன் என்ற அறுவரையும் பித்தியூஷன் என்பவன் தேவலன் என்னும் இருடியையும் உண்டு செய்தார்கள். தேவலவிருடி பிரஜாவான்களான இருவரைப் பெற்றனர். பிரஹஸ்பதியின் தங்கையை எட்டாவது வசுவான பிரபாசன் மணந்து தொஷ்டா என்பவனைப் பெற்றான். அவன் தேவதச்சனாய் சர்வாபரணங்களையும் விமானங்களையும் செய்யும் வல்லமையை அடைந்தான். தொஷ்டா விசுவரூபனைப் பெற்றான். இதுவே தர்மப் பிரஜாபதியின் வமிசம்.
முனிவர்களே, அதிதி, திதி தநு, அரிஷ்டை, சுரசை, இலை, சுரபி, விந்தை, தாம்சை, குரோதை சமை; கத்துரு சனி என்று பதின்மூவரும் காசிபருடைய மனைவியராவர். அவருள் அதிதி என்பவள் சாக்ஷúச மன்வந்தரத்தில் விஷ்ணு சக்ரன் அரிய மான் தாதா துவஷ்டா பூஷா, விவஸ்வான் சவிதா; மித்ரா வருணன் அம்சோபகன், அதிதேஜஸ் என்பவர்களைத் தூஷிதான் என்பவனால் பெற்றாள், இவர்களே ரைவதமன்வந்தரத்திலும் துவாத சாதித்தர்களாக இருந்தார்கள். சந்திரனின் மனைவியரான் அஸ்வினி முதலான இருபத்தேழு மாதர்களிடம் மிகவும் அழகு வாய்ந்த பல பிள்ளைகள் பிறந்தார்கள். அரிஷ்ட நேமி தன் மனைவியர் நால்வரிடம் பதினாறு பிள்ளைகளைப் பெற்றான். கிருதாசுவன் தேவர்களுடைய ஆயுதங்களாகிய அஸ்திர சாஸ்திரங்களைப் பிறப்பித்தான் சூரியன் நாள்தோறும் தோன்றி அஸ்தமனமாவது போல இவ்வாறு வான் முறையாகத் தோன்றி முப்பத்து முக்கோடிதேவர்களும் கற்பங்கள் தோறும் உண்டாகி லயமடைகிறார்கள். காசிபர் மனைவியரின் திதி என்பவளிடம் ஹிரண்யகசிபு என்பவன் அனுக்கிலாதன், ஹிலாதன் பிரஹலாதன் ஸம்ஹிலாதன் என்று நான்கு புதல்வர்களைப் பெற்றான் ஹிலாதனுக்கு ஹிலதனும் ஹிலதனுக்கு ஆயுஷ்மான், சிபிகாலன் என்ற மூவரும் தோன்றினர் பிரஹலாதனுக்கு விரோசனனும் விரோசனனுக்குப் பலியும் பலிக்குவாணா சுரன் முதலிய நூற்றுவரும் பிறந்தார்கள். ஹிரண்யாக்ஷஷக்கு குருகரன் சகுனி, பூதசந்தாபன் மகாநாதன், காலநாபன், என்ற ஐவர் பிறந்தார்கள் தனு என்பவள் காசிப முனிவரால் வீரிய பராக்கிரமத்தோடு கூடிய நூறு புதல்வரைப் பெற்றாள் அவர்களில் முக்கியமானவர்கள் தவிமூர்த்தன், சகுரன், பலிசிவன் பிரபு அயோமுகன், சம்பரன், கபிலன், வாமணன், விசுவாநரன் புலோமன் வித்திராவணன், மஹாசுரன், சுவர்ப்பானு என்பவன் பிரபாவை என்பவளையும், புலோமன், சசி என்பவனையும் பெற்றார்கள். விருஷபர்வா என்பவன் சர்மிஷ்டை என்ற பெண்ணை பெற்றாள். வைஸ்வானவனுக்குப் புலோமை காளிகை என்னும் இரு கன்னிகைகள் தோன்றினார்கள். மரீசியின் வமிசத்தில் அறுபதனாயிரம் தானவர்களும் பவுலோமர், காலகஞ்சர் ஆகிய பேதமுள்ளவர்களும் தோன்றினார்கள்.
மரீசியின் வமிசத்தில் தோன்றிய அவர்கள் பிருமதேவன் குறித்து வெகு காலந்தவஞ் செய்து, பொன்மயமான பட்டணங்களைச் சம்பாதித்து தேவர்களால் சாகாவரம் பெற்று வாழ்ந்தார்கள். விப்ரசித்து என்பவன் சிம்ஹிகையை மணந்து உக்கிர பராக்கிரமத்தோடு கூடி சைமிகேயளான இராகு சல்லியன் சுபலி பலன் மகாபலன் வாதாபி நமுச்சி வில்லவன் சிவசுகுபன் அரகன் நரகன் கால நாபன் சரமாணன் சரகற்பன் என்னும் பதினமூன்று பிள்ளைகள் உண்டாகி அவர்களால் அநேகம் புத்திரபவுத்திரர்களைப் பெற்றான். ஹிரணியகசிபன் குமாரனான சமக்கலாதனுக்கு நிவாதக வசிகளான அதிபராக்கிரமசாலிகள் பிறந்தார்கள். தாமரை என்னும் காசியபரின் மனைவிக்கு ஸ்வரத்தைச் சப்திக்கும் பக்ஷிகள் தோன்றின. அவரது மனைவியருள் காகி என்பவள் காக்கையையும், உலூகி என்பவள் கோட்டான் வகைகளையும், சேனி என்பவள் பெண் பருந்தையும், பாசி என்பவள் ஆண் பருந்தையும், கிருத்ரி என்பவள் சுகமான பக்ஷிகளையும், தாமரை என்பவள் குதிரை கழுதை முதலியவற்றையும் பெற்றாள். வினதை என்பவள் பறவையினத்தில் முதன்மையானவனும் வேகத்தில் வல்லவமான கருடனையும் அருணனையும் ஈன்றாள். கத்துரு என்பவள் பல தலைகளுடன் கூடியதாயும் ஆகாயத்தில் சஞ்சரிக்க வல்லதாயும் காமரூபியாயும் உள்ள சேஷன், வாசுகி, தக்ஷகன், ஐராவதன் மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், பத்மன், கார்க்கோடகன், தனஞ்சயன், மகாநீலன், மகாவர்ணன், திருதராஷ்டிரன், பலாக்கன், குகன், புஷ்பதந்தன், துர்முகன், சுமுகன் பகுசன் கரரோமன் பாணி முதலிய நாகர்களைப் பெற்றாள் வரை என்பவள் பலவான்களாகிய ஐம்பது புத்திரர்களையும் மரம் செடி கொடி முதலிவற்றையும் பெற்றாள். இலை என்பவள் புல்பூண்டு முதலியவற்றைப் பெற்றாள். சுவசை என்பவள் யக்ஷராக்ஷசர்களையும் முனி என்பவள் அப்சரஸ்களையும் அபிஷ்டா என்பவள் நானாவித ஜந்துக்களையும் பெற்றார்கள். காசிபரின் சந்ததியில் பற்பல புத்திரபவுத்திரர்கள் தோன்றி உலகத்தில் பரவினார்கள். இந்தச் சிருஷ்டிகள் யாவும் சுவாரேசிஷ மந்வந்தர சிருஷ்டி என்னும் பெயரையுடையன இனி வைவசுவத மன்வந்தர சிருஷ்டியின் வகையைச் சொல்கிறேன்.
முனிவர்களே! இந்த மன்வந்தர சிருஷ்டியின் துவக்கத்தில் பிருமதேவர் யாகங்களைச் செய்து முன்புபடைத்தது போலவே மானசீகமாக ஏழு புத்திரர்களை உண்டாக்கினார். முன்பு உண்டான தேவதானவர்களுக்குள் பெரிய கலகம் உண்டானதால் அசுரர்கள் நசித்துப் போனதைக் கண்ட திதி என்பவள் காசிபரைச் சரணடைந்து, தேவர் தலைவனான இந்திரனைக் கொல்லக் கூடிய புத்திரன் வேண்டும் என்று கெஞ்சினாள். காசிபர் அதற்கு இசைந்து நீ ஆயிரம் ஆண்டுகள் நியமத்துடன் புண்ணிய பூமியில் விரதத்தை அனுஷ்டிப்பாயானால் இந்திரனைக் கொல்ல வல்ல புத்திரன் உனக்குப் பிறப்பான். இவ்விரத நியமம் தவறினால் உன் மனோரதம் நிறைவேறாது என்று சொல்லிவிட்டுத் தவத்திற்குச் சென்றார். அவ்வாறே திதி என்பவள் பூலோகத்தில் தவஞ்செய்து கொண்டிருந்தாள். அப்போது இந்திரன் இவளுடைய கர்ப்பத்தில் தனக்கு பகைவன் வளர்கிறான் என்பதை அறிந்து அவள் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தொடு தாயார் என்ற முறை பாராட்டி பணிவிடை செய்ய மாறுவேடங் கொண்டு வந்தான். திதியின் விரதத்தின் ஆயிரம் ஆண்டுகளில் நூறு வருஷம் குறைவாக இருக்கும்போது அவள் அதிகப் பிரயாசையினால் சோர்வடைந்து பகற்காலத்தில் கூந்தலைப் பாதத்தில் அவிழ்ந்து விட்டுத் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது இந்திரன் வஜ்ரபாணியாய் பெண்மைக்குறியின் வழியாகக் கர்ப்பத்தில் பிரவேசித்து, பிண்டத்தை தன் குலிசத்தால் வெட்டும்போது கருவிலுள்ள குழந்தை சப்தமிட்டு அலறியது. உடனே இந்திரன் மாரோதி! மாரோதி! (அழாதே அழாதே!) என்று சொல்லிக் கொண்டே ஏழுபிளவாக்கி பின்னரும் எவ்வேழு பிளவாக்கிவிட்டு வெளியே வந்தான். அவ்வாறு வந்த இந்திரனைக் கண்டு திதி துக்கப்பட்டாள். அதற்கு இந்திரன் தாயே! நீ நியமம் தவறி இருந்ததால் உன் கர்ப்பத்தில் இருந்த என் சத்துருவை நான் துண்டித்தேன் ஆகையால் என்மீது கோபிக்க வேண்டாம்! என்றான். அவனைக் கண்ட திதி, என்னுடைய குற்றத்தினாலேயே நாசமடைந்த கர்ப்பம் பலவாகும். ஆகையால் அவற்றை உன் உலகத்திலேயே வைத்திருக்க வேண்டும்! என்றாள். அவ்வாறே இந்திரன் ஏழு லோகத்திலும் எவ்வேழு பெயர்களாக மாருதாள் என்னும் பெயரோடு வசிக்கும்படி வரங்கொடுத்து விட்டுத் தன் உலகம் சென்றான். இவ்வாறு பிரபஞ்சத்தைப் படைத்து பிருது முதலான சக்கரவர்த்திகளையும் இந்திரன் பிரஜாபதிகள் பர்ச்சன்யன் குபேரன் முதலிய சுவர்க்க வாசிகளையும் உண்டாக்கினார். வேனனுடைய பிள்ளையாகிய பிருதுசக்கரவர்த்தியை அகண்ட பிரபஞ்சத்தைப் பல்வேறு பாகங்களாக்கும் படி காசிபர் கட்டளையிட்டார். இவ்வாறு சூத புராணிகர் கூறினார்.
54. உலக நாயகர்கள்
நைமிசாரணிய முனிவர்கள் சூத புராணிகரை நோக்கி ஞானியே! பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிச் சொன்னீர்களே, அவர்களில் எவ்வெவ்வகையாக எவ்வெவ்வருக்குத் தலைவர்களாக இருந்தார்களோ அதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்! என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். முனிவர்களே! பிராமணர் நக்ஷத்திரம் நவக்கிரகம் ஓஷதிகள் யக்ஞம் தவம் முதலியவற்றிற்கு அதிபதியாகச் சந்திரனையும் ஜலத்திற்கு வருணனையும் அரசர்களுக்கு பேரனையும் ஆதித்தர்களுக்கு விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும் பிரஜாபதிகளுக்குத் தக்ஷனையும் மருத்துக்களுக்கு இந்திரனையும் தைத்தியதானவர்களுக்கு பிரகலாதனையும் பிதுர்க்களுக்கு பமதர்மனையும் விரதங்கள் மாதாக்கள் மந்திரம் பசு யக்ஷ ராக்ஷசர் அரசர்கள் சர்வ பூத பைசாசங்களுக்குச் சூலபாணியான பரமேசனையும், மலைகளுக்குச் சார்த்தூலத்தையும், பசுக்களுக்கு ரிஷபத்தையும் கொடி செடிகளுக்கு மரங்களையும் அதிபதிகளாகறியமித்தும் அஷ்ட திக்குகளுக்குள் கிழக்கில் சுதன்மனையும் தென் திசையில் நெய்வதன் என்பவனையும், மேற்கில் கேதுமானையும் வடக்கில் ஹிரண்ய ரோமனையும் அரசராக ஸ்தாபித்தார் இந்தச் சிருஷ்டியின் வைபவங்களைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் தீர்க்காயுள் பெற்றுப் புகழ்மிக்கவர்களாக இவ்வுலகில் வாழ்ந்து இறுதியில் சிவபதமடைவார்கள்.
55. பிருது சக்கரவர்த்தியின் பிரபாவம்
பூர்வத்தில் தர்மவானும் அத்திரி என்னும் பிரஜாபதிக்கு இணையான வல்லமையோடு கூடியவனுமான அங்கப் பிரஜாபதி என்பவன் தோன்றினான். அவனுக்கும் மிருத்யுவின் பெண்ணான சுநிதி என்பவளுக்கும் வேனன் என்னும் ஒரு புத்திரன் பிறந்தான். அவன் தருமஞ் செய்வதில் மனமில்லாமலிருந்தான். அவன் மிருத்யுவின் தவுஹித்திரன் (பெண் வயிற்றுப் பெயரன்) எனவே மிருத்யு தோஷத்தால் , சுதர்மத்தை விட்டுக் காமத்தில் பிரியமுள்ளவனாய்த் தர்ம சாஸ்திரத்திற்கு விரோதமான ஏற்பாடுகளை உண்டாக்கி வர்ணாசிரமங்களைச் சரிவர நடத்தச் செய்யாமல் அதர்மவானாக இருந்தான். அவன் அரசாட்சியில் யாகாதி கிருத்தியங்கள் குறைந்தும், வேதசாஸ்திர பாராயணம் குன்றியும் தேவாலய பூஜைகள் நடவாமலும். யாகஞ் செய்ய முயலும் அந்தணர்களைச் சேவர்களால் தடுத்தும் தவஞ்செய்வோரின் தவநிலையைக் கெடுத்தும் ஆட்சி நடத்தி வந்தான். அவ்வேனனுடைய அக்கிரமத்தைக் கண்டு மரீசி முதலிய முனிவர்கள் அவனை நோக்கி நாங்கள் நீண்ட காலம் செய்து முடிக்க வேண்டிய யாகங்களைச் செய்து முடித்து உலகத்திற்கு நலம் பயக்கத் தீøக்ஷசெய்து கொண்டோம். இவ்விரதத்தைக் கூடாது என்று தடை செய்யாதே நீ இப்படிச் செய்வது முறையல்ல, நாங்கள் செய்வது புராதனமான தருமம், இவ்வித தருமத்தையும் குடிமக்களையும் காத்து இரக்ஷிக்கும் படியே நீ படைக்கப்பட்டிருக்கிறாய் குடிகளை இரக்ஷணை செய்வதில் இராஜாவென்னும் பெயர் கொடுக்கப் பட்டது. அந்தப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்! என்று எடுத்துரைத்தார்கள். ஆனால் வேனனோ சரித்துவிட்டு என்னை விடத் தர்மத்தை உண்டாக்க வல்லவன் யார்? நான் யாருடைய தர்மத்தைக் கேட்டு நடக்க வேண்டும்? எனக்கு மேலான அதிகாரி ஒருவருமில்லை! என்னை அதர்மன் என்று சொல்லிய உங்களுக்குத் தர்மம் தெரியாது.
நீங்கள் தான் மூடர்கள்! என்று பலவாறாகவும் இகழ்ந்துரைத்து மூவுலகங்களிலும் தன் அதர்மத்தைப் பரவச் செய்தான். முனிவர்கள் பலவகைகளில் முயன்றும் பயன்படாததால் அவர்கள் கோபங்கொண்டு அதிபலவானும் கொடியவனுமான வேன சக்கரவர்த்தியின் இடது தொடையில் பலாத்காரமாகத் தங்கள் தவவல்லமையால் கடைந்தார்கள். அந்தத் தொடையிலிருந்து குறுகிய வடிவமும். பருத்த உடலும் கரிய நிறமுமுள்ள ஒருவன் தோன்றிக் கும்பிட்டவனாக முனிவர்களை வணங்கி நின்றான். அத்திரி முனிவர் அவனை நோக்கி, சிறுவனே! உட்காருவாயாக! என்றார் அவன் மூலமாகவே புளினர் என்போர் தோன்றி வித்தியபர்வதத்தில் வசித்து அவனைப் போலவே அக்கிரமக்காரர்களாக இருந்தார்கள். மீண்டும் வேனனின் வலது கையில் முனிவர்கள் கடையவே அதனால் தாமரைபோன்ற அவனுடைய உள்ளங்கையில் கோடிச்சூரியப் பிரகாசமாகவும் அக்கினிக்கு ஒப்பான தேஜஸோடும் அஜசுவம் என்ற வில்லோடும் பற்பல அஸ்திரங்களோடும் பொன்மயமான கவசத்தோடும் பிருதுவென்னும் மன்னன் தோன்றினான். அவனது தோற்றத்தினால் திக்குகள் யாவும் பிரகாசித்துக் குடிகள் மகிழ்ந்தனர் இவ்வித புத்திரோற்பத்தியில் தகப்பனான வேனன் பெரும்பாவங்களைச் செய்திருந்த போதிலும் புத் என்னும் நரகத்தைப் போக்கி, சற்புத்திரனால் புண்ணிய லோகம் அடைந்தான். ஆகையால் மாதா பிதாக்கள் பாவஞ் செய்தவர்களாக இருப்பினும் நற்புத்திரனால் நற்கதி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை இவ்விதம் உண்டாக்கிய பிருதுவைச் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று பிருமா முதலான தேவர்களும் ஏழுகடல்களும் மாபெரும் நதிகளும் தங்களிடமுள்ள இரத்தினங்களை வாரிக்கொண்டு புண்ணிய நதிகளில் வந்து எல்லாக் குடிமக்களையும் காத்து தருமத்தை நிலை நிறுத்த வேண்டும்! என்று கூறி அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள், பிருது பூமண்டலங்களுக்கெல்லாம் அரசனாகி மகாதேஜஸோடும் புகழோடும் பிருது சக்கரவர்த்தி என்ற பெயரோடும் விளங்கித் தன் தந்தையால் புறக்கணிக்கப்பட்ட தர்மங்களையும் குடிகளையும் மிகவும் அன்போடு விருத்தி செய்து பாதுகாத்து, அரசன் என்ற சொல்லுக்கு இலக்கியமாக இருந்தான் அவனது ஆட்சிக் காலத்தில் குடிமக்கள் அடைந்த மகிழ்ச்சியை என்னென்று சொல்வேன்? அவன் ரதத்தில் ஏறிச் செல்லும்போது, நதிகள் நீர் விலகி வழி விடவும் மலைகள் தாழ்ந்து சமவழி காட்டவும் பசுக்கள் எல்லாவித ரசப்பொருட்களையும் சகலவித வஸ்திரங்களையும் கொடுக்கவும் அவன் மகிழ்ந்திருந்தான்.
இவ்வாறு பிருது சக்கரவர்த்தி செங்கோல் செலுத்திவரும் போது பிருமதேவர் ஒரு யாகஞ் செய்தார். அப்போது அப்பூரண குதியில் ஸுதன் மாகதன், என்று இருவர் தோன்றினார்கள். அருகேயிருந்த மாமுனிவர்கள் அவ்விருவரையும் நோக்கி; நீங்கள் பிருது சக்கரவர்த்தியின் புகழைப் போற்றித் துதி செய்யுங்கள்! என்று கூறினார்கள். ஸுதமாகதர்களே! மாமுனிவர்களே! நாங்கள் இப்பொழுது தான் தோன்றியவர்களாகையால் அந்த மாமன்னரின் பிரபாவங்களை எப்படி அறிவோம்? என்று கேட்டார்கள். அதற்கு அம்முனிவர்கள் இனி நடக்கவிருக்கும் விஷயங்களை எடுத்துத் துதி செய்யுங்கள் என்று சொல்ல, அவ்விருவரும் அவ்வாறே துதி செய்தார்கள். அதைக் கேட்ட பிருது சக்கரவர்த்தி பெரு மகிழ்ச்சியுடன் அவர்களில் ஸுதனுக்கு அனூபதேசம் என்ற இராஜ்ஜியத்தையும் மாகதனுக்கு மகத ராஜ்யத்தையும் கொடுத்தான். அப்போது அருகிலிருந்த தேவர்கள் அவ்விருவரையும் பார்த்து, இவ்வரசன் உங்கள் இருவருக்கும் இவ்வுலகத்தாருக்கும் விருத்தியுண்டு பண்ணப் போகிறான் என்று கூறினார்கள். அமரர் வார்த்தைகளைக் கேட்ட ஸுதமாகதரும் மற்றவர்களும் பிருது சக்கரவர்த்தியை அணுகி; எங்களுக்கு ஜீவனோ பாயத்தைக் கற்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதனால் பிருதுச் சக்கரவர்த்தி அதற்கு வழி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் வில்லையும் அம்பையும் எடுத்து பூமியிலிருந்து அவர்களுக்கு ஆகாரத்தை உண்டு செய்ய நினைத்தான். அப்போது பூமிதேவி பயமடைந்து பசுவின் வடிவமெடுத்து உலகமுழுவதும் திரியலானாள். பிருதுச் சக்கரவர்த்தியும் வில்லேந்தி அதைப்பின் தொடர்ந்து துரத்த, பூமி பயந்து இந்திராதி தேவர்களைச் சரண் அடைந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினாள். ஆனால் ஒருவரும் அபயம் கொடாமையால் அவள் மீண்டும் பிருதுசக்கரவர்த்தியையே சரணடைந்து அரசனே! நான் இல்லாமல் இவ்வுலகத்தை நீ எவ்வாறு பரிபாலனஞ் செய்வாய்? எல்லாக் குடிமக்களும் என்னிடமே வசிக்கிறார்கள். சர்வஜகத்துக்கும் நானே ஆதாரமாக இருக்கிறேன் என்னை முன்னிட்டு சண்டை செய்து கற்பங்கள் தோறும் பற்பல மன்னர்கள் மாண்டு போகிறார்கள். நீ புகழ் பெற வேண்டும் என்றால் என்னை ஹிம்சிக்க வேண்டாம். நீ தந்திரத்தோடு முயற்சி செய்தால் உன் மனோரதங்கள் எல்லாம் சித்துக்கும் குடிமக்களை நீ பாதுகாப்பாய். நான் பெண் பிறவியாகையால் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நீயோ பிருத்விபாலன் என்ற பெயரையடையப் போகிறாய். அதற்கு விரோதமாகத் தர்மத்தை அழிக்காதே? என்று பலவிதமான நல்வார்த்தைகளையும் சொன்னாள். அதைக்கேட்ட தர்மசீலனாகிய பிருது சக்கரவர்த்தி தன் கோபத்தை அடக்கி பூதேவியே! ஒருவனுக்காக பலரைக் கொல்வது தர்மம் அல்ல ஆனால் பலரின் நன்மைக்காக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரைக் கொல்வது தர்மமேயாகும். பிரஜைகளைக்காப்பதற்காக உன்னை நான் ஹிம்சிக்க விரும்புகிறேன். நீ என் சொல்லை இதமாகக் கொண்டு வசுந்தரை (வசு-சொத்து, தரா-தரித்தவள்) என்ற பெயரைப் பிரபலப்படுத்தி என் விருப்பத்தின் படிப் பிரஜைகளைக் காக்க வேண்டும்! என்றான்.
56. பூதேவி பசுவடிவங் கொண்ட கதை
பூமிதேவி கனிவோடு பிருது சக்கரவர்த்தியை நோக்கி அரசனே! நான் பசுவடிவில் நிற்பதால் எனக்கேற்ற கன்று ஒன்றைத் தேடி, பர்வதம் முதலிய மேடுபள்ளங்களைத் திருத்தினால் என் பாலை எல்லாவிடங்களிலும் பாயும்படிச் செய்கிறேன் என்றாள். பிருதுச் சக்கரவர்த்தி அதைக் கேட்டு மகிழ்ந்து தன் வில்லின் முனையால் மலைகளை உடைத்து வழிகள் உண்டாக்கிப் பூமியைச் சீர்திருத்தினான். முன் சிருஷ்டியில் இப்பூமியைச் சீர்திருத்தியவர்கள் ஒருவரும் இல்லாமலும் கிராமம். நகரம் அக்கிரஹாரம் தேசம் முதலிய பேதங்கள் இல்லாமலும், பயிர், பசு, கிருஷி, வர்த்தகம், கடை வீதி முதலியன இல்லாமலும் இருந்தன. பிருது சக்கரவர்த்தியால் திருத்தப் பட்ட சமபூமியிலே பிரஜைகள் வசித்திருந்தார்கள். ஆகாரங்கள், பல மூலங்கள் மரங்கள், மலர்கள், தேன் முதலிய பொருள்கள் தோன்றின. பிருது சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப் படி சுவாயம்பு மனு ஒரு கன்றுக்குட்டியாக வந்து பூமிதேவியான பசுவின் மடியைப் பருக, அதனின்றும் பால் பெருகிப் பூமியெல்லாம் நனைந்து அநேகமான பயிர்களும் இரச வஸ்துக்களும் உண்டாயின. அவ்வாறு தோன்றியவற்றை ஜனங்கள் ஆகாரமாக உண்டு வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு முனிவர்கள் சந்திரனை கன்றாகக் கொண்டு கறந்து வேதம் தவம் விரதம் முதலியவற்றை அதனால் உண்டு செய்தார்கள். தேவர்கள் இந்திரனைக் கன்றாக்கிக் கறந்து தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தையடைந்தார்கள். சூரியன் பொற்பாத்திரத்தில் பூமியைக் கறந்து தன் தேஜஸை உண்டாக்கினான். பிதுர் தேவர்கள் மயனைக் கன்றாக்கி அந்தக் கன்றால் வெள்ளிப் பார்த்திரத்தில் சுதா என்னும் பாலைக் கறந்து கொண்டார்கள். நாகர்கள் தக்ஷகன் என்பவனைக் கன்றாக்கிச் சுரைப் பாத்திரத்தில் ஐராவதனால் விஷ்தைக் கறந்து கொண்டார்கள். அது முதற் கொண்டே சர்ப்பங்கள் எல்லாம் காற்றைப் புசித்து வருகின்றன. அசுரர்கள் விரோசனனைக் கன்றாகச் செய்து இரும்புப் பாத்திரத்தில் மாயை ஆகிய பாலைமதுவென்னும் அசுரனைக் கொண்டு கறந்தார்கள். அதுமுதற்கொண்டே அசுரர்கள் மாயாவிகள் ஆனார்கள். யக்ஷர்கள் குபேரனைக் கன்றாக்கி, ஆமபாத்திரத்தில் மறைதலாகிய பாலைக் கறந்தார்கள். இராக்ஷசர்கள் தங்களரசனை சுமாலியைக் கொண்டு இரத்த மயமான பாலைக் கறந்தார்கள். அப்சரசுகளும் கந்தர்வர்களும் சித்ராதரனைக் கன்றாக்கி வசுர்ஜியைக் கொண்டு தாமரையிலையாகிய பாத்திரத்தில் தங்களுக்கு வேண்டிய பாலைக்கறந்து கொண்டார்கள். மலைகள் ஹிமவானைக் கன்றாக்கி மேருவைக் கொண்டு இரத்தினங்களையும் அவுஷதிகளையும் கறந்து கொண்டன பூர்வம் மதுகடவர்களை விஷ்ணு மூர்த்தி சங்கரித்தபோது அவர்களது மேதை(கொழுப்பு) எங்கும் பரவியதால் உலகிற்கு மேதினி என்றும், பிருது சக்கரவர்த்தியால் இந்த உலகம் பாகுபாடு செய்யப்பட்டதால் பிருத்வி என்ற பெயரும் வழங்கின. முனிவர்களே! குடிகளைக் காப்பதில் கருணையாளனாகவும் தேவமானுடரால் புகழத்தக்கவனாகவும், பிரம்ம, க்ஷத்திரிய வைசிய, சூத்திரர்களால் அரசனாக இருக்க விரும்பப்பட்டவனாகவும் மானுடருக்குள் முதல்வனாகவும் யுக்தத்தை முதலில் நியமித்தவனாகவும் மற்றெல்லாவிதப் பொருட்களையும் உணவை முன்னிட்டுக் கண்டு பிடித்தவனாகவும் விளங்கிய இந்தப் பிருது சக்கரவர்த்தியின் பிரபாவம் சிறப்பாக வேதங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. அத்தகைய சிறப்புடைய பிருது சக்கரவர்த்தியின் புகழை அரசினனாக க்ஷத்திரியன் போர்முனையில் ஸ்மரித்தால் பகைவர்களை வெல்வான். வைசியன் ஸ்மரித்தால் தனலாபம் அடைவான். சூத்திரன் ஸ்மரித்தால் புண்ணியம் அடைவான். கீர்த்தியை அடைய விரும்புவோர் யாராயினும் பவுர்ணமியில் சக்கரவர்த்தியைத் தியானித்துச் சரணடைய வேண்டும்
57. மனுவந்தரம்
இதுவரை வியாச மகரிஷி எனக்குக் கூறிய விஷயங்களைச் சொன்னேன்! இனி நீங்கள் கேட்க வேண்டியது எதுவாயிருப்பினும் கேட்கலாம் என்றார் சூத புராணிகர். அதற்கு நைமிசாரணிய முனிவர்கள் மந்வந்தரக்கிரமமும் மநுக்களின் பெயர்களையும் விவரமாக அறிய விரும்புகிறோம்! என்றார்கள். சுவாயம்பு வைவசுவதன், சாவர்னி, பவுத்தியன், ரவுச்சசியன், அசாவர்மூ முதலாகத் தோன்றிய மனுக்கள் பலராவார்கள், அவர்களில் சிலர் தங்கள் வாழ்நாளனைத்தும் இனி கழிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இனி சப்தரிஷிகளையும் அவர்களது புத்திரவர்க்கங்களையும் கூறுகிறேன். மரீசி அத்திரி, ஆங்கிரஸ், புலகர், கிருது புலஸ்தியர் வசிஷ்டர் ஆகிய இவ்வெழுவரும் பிரம புத்திரர்கள் இவர்கள் வடக்கே சுவாயம்பு மந்வந்தரத்தில் இருந்தார்கள். ஆக்நிதரர், அக்னிவாகர், மேதசு, மாதா, திதி, வசு ஜோதிஷ்மான். துதிமான் அவ்யர், சவனர், கபுரு ஆகிய இவர்கள் துஷிதாள் என்னும் தேவர்களோடு சுவாரோசிஷ மந்வந்தரத்தில் இருந்தவர்கள் ஹரிக்நர், சுகிர்தி, ஜோதிரயன், மூர்த்திரயன், ஸ்மயன், பிரதிதன், மநஹ்யன், நபன், சூரியன் ஆகிய இவர்கள் வீரிய பராக்கிரமத்தோடு கூடிய சுவாரோசிஷ மநுவின் புத்திரர்களாக இருந்தார்கள். வசிஷ்டருக்கு வாசிஷ்டாள் என்றும் ஊர்ஜரன் என்றும் பெயருடைய இஷர், ஊர்ஜாதர், ஊர்ஜர். மதுமாதவர், சுசி, சுக்கிரவகர், நபசர், நபர், ஆகிய புதல்வர்கள் வைவசுவத மந்வந்தரத்திலிருந்து வந்தார்கள். சாவர்ணி மந்வந்தரத்தில் கார்க்யர், பிருது, அக்னி, ஜன்மியர், தாதா, சபீநகர், கபீவரன் என்ற ஏழு முனிவர்களும் சத்தியாள் என்னும் தேவர்களும் இருந்தார்கள். தாமாமனுவின் புத்திரரான துதி. போதன் சவதபசியன் தபசூலன் தாமன் தபோவதி அகல்மாஷன் தந்வி தந்விசூலன் மகரிஷி ஆகிய பதின்மரும் மோபரர் என்னும் தேவர்களோடு இருந்தார்கள். ரைப்பிய மந்வந்தரத்தில் வராப்பிய மநுவிற்கு திருதிமான், அவ்யயன் அவ்யந்தன். சத்தியதரீசி நிருச்சவன், அரண்யன், பிரகாசன், நிரத்துரோகன், சத்தியவாக்கு பிருதி என்னும் புத்திரர்கள் இருந்தார்கள். சாட்சுச மந்வந்தரத்தில் கிருகு நகர் விசுவர், சுதர்மா விரஜசு, ஜாதி நாமா அசிகிஷ்ணு ஆகிய ஸப்த ரிஷிகளும் ஆத்தியர் பிரசூதர், ரிபுக்கள், லேகர் என்ற தேவகணங்களும் ஆங்கிரஸ் மகாமுனிவரின் புத்திரராகிய நத்வலேயர் என்போர் சிலரும் இருந்தார்கள், அத்திரி, வசிஷ்டர், கசியபர், கவுதமர் பரத்வாஜர் விசுவாமித்திரர் ஜமதக்னி ஆகிய ஸப்தரிஷிகளும் ஆதித்தர்கள், மருத்துக்கள் உருத்திரர் அஸ்வினி தேவதைகள் பாஸ்கரர் வசு மகாராஜிகர் சாத்தியர் என்னும் தேவர்களும் இக்ஷ்வாகு முதலிய அரசர்களும் அவர்களுடைய புத்திரர்களும் வைவசுவத மந்வந்தரத்தில் தர்ம காரியங்களைச் சரிவரநடத்திக் கொண்டும் உலகைக் காத்தும் புண்ணிய பதவியை அடைந்தார்கள். பரமேஷ்டியின் புதல்வராகவும் தக்ஷப்பிரஜாபதிக்குத் தவுஹிதராகவும் பிரியா என்னும் பெண்ணிடம் தோன்றி மேருசாவர்னி என்னும் பெயரையடைந்த சிலர், மேருவின் உச்சியில் தவஞ்செய்து அங்கு வாழ்ந்தார்கள்.
ருசி என்னும் பிரஜாபதிக்கு ரவுச்சா என்னும் மனு தோன்றினார். பூதை என்பவளிடம் பவுத்தியன் என்னும் மனு உதித்தான் இவர்கள் பவுஷய கற்பத்தில் மனுவாவார்கள். பவுஷ்ய கற்பத்திலேயே இராமன், வியாஸன், ஆத்திரேன். தீப்திமான், சுபருஷ்டுதன், அசுவத்தாமா, கிருபன், சவுசிகன், காலவன் ருரு ஆகிய முனிவர்கள் இருந்தார்கள். மரீசி முனிவருக்கு வீரவான், வனிவான், சுமந்தன், திருதிமான், வசு, வரிஷ்ணு, ஆரியன், விஷ்ணு, இராஜா, சுதமதி என்ற புதல்வர்கள் இருந்தார்கள் சாவர்னி மனுவிற்கு மேருசாவர்னி என்பவள் முதல் மகன் மோததிதி, பவுவசியன், காசிபன் வசு, ஜோதிஷ்மான், பார்க்கவன் த்விதிமான். அங்கிரசு, சவனன். வசிஷ்டன். ஆத்திரேயன் அவ்வியயன் பவுலகன் என்னும் புதல்வர் பதின்மூவரில் மூவர்தேவகணங்களாக இருந்தார்கள். ரோகிதர் என்னும் பிரஜாபதிக்குத் தீøக்ஷ என்னும் மங்கையிடம் திருஷ்டகேது தீர்த்தகேது பஞ்சஹஸ்தன், நிராகிருதி, பிருது ஸ்தவசு பூர்த்திம்நன் ரசீகன் பிரகதன், கயன், என்போர் தோன்றினாரகள் இந்தப் பிரஜாபதிக்கே அவரது வம்சத்திலேயே இரண்டாவது மந்வந்தரத்தில் அவிஷ்மம்நன் புலகன், சுகிர்தி, பார்க்கவன் ஆயோமுக்தி, ஆத்திரேயன், வசிஷ்டன் அவ்யயன் பவுலஸ்தியன், பிரியதி, நாபாகன், காசிபன் அங்கிரசு, நபசன் சத்தியன் என்ற தேவகணங்களும் முனிவர்களும் உண்டானார்கள். அவர்களில் தேவர்களுக்கு த்விஷிவந்தாள் என்று பெயராக இருந்தது. மூன்றாவது மந்தவரத்தில் அக்ஷத்வான் உத்தமோஜன் பூரிஷேணன், சதா நீகன், நிரமித்திரன். விருடிசேனன், ஜயத்ரதன், பூரித்தம்நன் சுவர்ச்சா என்போரும் அவிஷ்மா, காசிபன், புஷ்வமான் வாருணன், அத்திரேயன், வசிஷ்டன், அநகன், அங்கீரசு, க்ஷராதீஷ்யன், பவுலஸ்யன், அக்னிசுவரன், அக்னிதேஜசு என்பவரில் மூவர் தேவகணங்களும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள். அதே மந்வந்தரத்தில் பிரமபுத்திரராகச் சர்வத்திரகன் சுசர்மா தேவாநீதன் ÷க்ஷமகன், திரடேக்ஷீ பண்டகன் தரிஷன்பாகு; ஊரு என்பவர்கள் இருந்தார்கள் நான்காவது மந்வந்தரத்தில் த்விதி, வசிஷ்ட புத்திரர் ஆத்திரேயர்; பவுலகர், தபோரதி, ஆர்க்கவர், என்பவர்களாகவும் ஐவர் தேவ கணங்களாகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள் ரவுச்சிய மந்வந்தரத்தில் அங்கரசு திருதிமான், பவுலஸ்த்யன், அவ்யவான், பவுலகஸ்தன், அதருஷி, பார்க்கவன். நிருச்சவன், நிஷ்பிரபஞ்சன், ஆத்திரேயன் நிர்மோகன், காசிபன். சுதபசு, வாசிஷ்டு என்பவருள் மூவர்தேவகணங்களாகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள், சுநேத்திரன் க்ஷத்திரவிருத்தகன், நிர்ப்பயன், சுதபசு, காடன் என்னும்புத்திரர்கள் உண்டானார்கள். ஆக்கிநிதன்காசிபன், பவுலஸ்தியன், மாகதன், பார்க்கவன், அதிபாகியன் சுசி ஆங்கிரசன், யுக்தன், ஆத்திரேயன், சக்ரன், வாசிஷ்டன், அஜிதன் என்பவர்களில் எழுவர் தேவகணத்தாராகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள். பவுத்திய மந்வந்தரத்தில் தாங்கனகபேரு பிரத்தன், தத்திரன், அநுவுக்கிரன், அதிமானி பிரவீணன், விஷ்ணு சங்கிரந்தனன் தேஜஸ்வி, சம்பவன் என்பவரில் ஐவர் தேவ கணங்களாகவும் மற்றவர்கள் ரிஷிகளுமாக இருந்தார்கள். இதுவரை சென்று போன மந்வந்தரங்களையும் செல்ல வேண்டிய மந்வந்தரங்களையும் வியாசமுனிவர் சொன்னபடி சொன்னேன். இவ்வாறே மீண்டும் மீண்டும் தோன்றி யழிவதை ஸ்மரணை செய்பவர்கள் தீர்க்காயுளையுடையோராய் புண்ணியலோகத்தை அடைவார்கள். தேவ வருஷத்தில் ஆயிர வருடம் ஆனகாலத்துச் சூரியன், தன் தீட்சண்யமான கிரணங்களால் பிரபஞ்சத்தைக் கொளுத்தி நாசஞ் செய்கிறான். உலகத்தில் உள்ளவர்கள் பிரமனைச் சரணடைய பிரமன் ஆதிநாராயணனை அடைவான். அந்தக் காலத்தில் பிரளயகாலருத்திரன் தோன்றி சம்ஹரிப்பான். இப்படியே அநேகம் மந்வந்தரங்களும் அநேகப் பிரளயங்களும் உண்டாகியும் ஜகம் விருத்தியாகாமல் கடைசியாக வைவசுவத மந்வந்திரத்தில் கொஞ்சம் விருத்தியடைந்தது. இந்தப் புண்ணிய சரிதத்தைக் கேட்பவர்களும் படிப்பவர்களும் கைலாய பதவியை அடைந்து களித்து வாழ்வார்கள். இவ்வாறு சூதபுராணிகர் சொன்னார்.
58. சஞ்ஞிகைதேவி சாயாதேவியின் சரிதங்கள்
நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி மகா ஞானியே, வைவசுவத மந்வந்தரத்தின் முறைமையை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! பூர்வத்தில் காசிப முனிவருக்குத் தக்ஷப்பிர ஜாபதியின் புதல்வியிடம் விவசுவான் என்ற ஆதித்தன்(சூரியன்) உண்டானான். அவன் துவஷ்டா என்னும் முனிவரின் புதல்வியான சஞ்ஞிகையை மணந்து வாழ்ந்து வந்தான். சஞ்ஞிகையால் ஆதித்தனின் தேஜஸைச் சகிக்க முடியாததால் அவன் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். அவளிடம் முதலில் மனுவென்னும் பிரஜாபதியும்; யமனும் யமுனை என்னும் பெண்ணும் இரட்டைப் பேறாகப் பிறந்தார்கள். சூரியனுடைய ரூபம் அதிக தேஜஸாக இருந்ததால் அவன் பத்தினி தன் ஆத்மசக்தியால் ஒரு பெண்ணைத் தன்னைப் போன்ற சாயலுடன் உண்டாக்கி அவளுக்குச் சாயை என்னும் பெயரிட்டழைத்தாள். அப்போது அந்தப் பெண், சஞ்ஞிகையைப் பார்த்து, என்னை உண்டாக்கிய காரணம் என்ன என்று கேட்டாள். அதற்கு அவள் நான் என் தந்தையின் இல்லத்திற்குப் போய்வரும் வரையில் நீ என் கணவருக்குச் சந்தேகம் இன்றிச் சுகத்தைக் கொடுத்துப் பணி செய்வதுந் தவிர இச்சிறுவர்களையும் பேதமின்றிப் பாதுகாத்துவா! என்றாள். அதற்கு சாயை என்னால் இயன்ற மட்டும் உண்மை வெளியாகும் வரை செய்கிறேன். என்னுடைய மாறுவேடம் வெளியாகும் காலத்தில் நான் உண்மையை வெளியிட்டுவிடுவேன்! என்றாள். அவ்வாறே செய்க, என்ற சஞ்ஞிகை. தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள். புத்திரியைக் கண்ட துவஷ்டா மிகவும் கோபித்து, உன் கணவனின் உத்தரவின்றி நீ என்னிடம் வந்ததால் நீ ஒரு பெண் குதிரையாகக் கடவாய்! என்று சபித்துவிட்டார், அவள் அந்தச் சாபத்தைப் பெற்று உத்தர குரு என்னுமிடத்தில் பெண் குதிரையாகச் சஞ்சரித்து வந்தாள். சஞ்ஞிகை தன் தந்தையிடம் சென்றதையுணராத சூரியன் அவளால் உண்டாக்கப்பட்ட சாயையின் மாறுபாடு அறியாதவனாக அவளோடுக் கூடிக்கலந்தான். அதனால் சாவர்னி மனு, சனி என்போரையும் பத்திரை என்னும் பெண்ணையும் சாயை ஈன்றாள். அவள் சஞ்ஞிகை கேட்டுக் கொண்டபடி புத்திர்களைச் சமமாக நடத்தாமல் தன் புத்திரரிடத்தில் அதிக வாஞ்சையோடும் மாற்றாள் புத்திரரிடம் வெறுப்போடும் வஞ்சனை செய்து வந்தாள். அந்த வஞ்சனையை சாயாபுத்திரனான யமன் சகிக்க முடியாமல் வாலிபம் முதற் கொண்டு பேதம் பாராட்டியதால் கோபித்து அவளைக் காலால் உதைக்க, அந்த உதையைப் பொறாத மாற்றாந்தாய் உன் கால் புழுக்கக் கடவது என்று சபித்தாள். அதற்காக யமன் மனம் வருந்திச் சாபத்திற்குப் பயந்து தன் தந்தையான சூரியனிடம் சென்று, எந்தையே எங்கள் தாய் மூத்தோர் மூவரையும் முனிந்து இளைய புத்திரரிடம் அன்புபாராட்டுவதைக் கண்டு மனந்தாளாமல் தாய் ஒருவழியாகப் புத்திரரிடம் சமநோக்கு செய்யாததால் உதைப்பதாகச் சொல்லி என் காலை எடுத்தது தவறுதான். ஆனால் பிள்ளையின் குற்றத்தைச் சகிக்காமல் தாய் சபிப்பது தர்மமா? அவ்வாறு தூக்கிய கால் புழுச் சொரிக என்று சபித்து விட்டாள்.
ஆகையால் அந்தச் சாபத்தை மாற்றி என் குற்றத்தையும் பொறுத்து அருள வேண்டும் என்று வேண்டினான். சூரியன் தன் புத்திரனை நோக்கி, மகனே! தாயின் சாபத்தை விலக்குவது அரிது சக்தியவானாகவுள்ள உன்னை இவ்வாறு சபிப்பதற்கு ஏதாகிலும் பெரிய காரணம் இருக்க வேண்டும் அதைவிசாரித்து அறிவேன். என்று கூறி, அவனைச் சமாதானம் செய்துவிட்டுச் சாயாதேவியிடம் சென்று அதிககோபத்தோடு, புத்திரர்களிடம் சமநோக்கம் இருக்க வேண்டுமே அதில்லாமல் யமனைக் கோபித்துச் சாபமிடலாமா? என்று கேட்டான். அதற்கு சாயை இனி என் மாறுகோலத்தைத் தெரிவிக்காமல் இருப்பது தவறு என்று எண்ணி, உண்மையைச் சொல்லி விட்டாள். அதைக் கேட்டதும் சூரியன் அதிக கோபத்துடன் தன் மாமனான துவஷ்டாவிடம் சென்று விண்ணப்பித்தான். துவஷ்டா நல்ல வார்த்தைகளால் அவன் கோபத்தை மாற்றி உன் மனைவி உன் தேஜஸின் வெப்பத்தைச் சகிக்கச் சக்தியற்றவளாய் தன் மேனி கெட்டு உத்திர குரு என்னும் பசுமையான காட்டில் ஆத்மபலத்தால் பெண் குதிரை வடிவு கொண்டு உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு அவள் அங்கே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறினார். அதனால் கோபம் நீங்கிய சூரியன் மீண்டும் அவர் நோக்கி, என் இஷ்டப்படி நடந்தால் உன் தேஜஸை யாரும் சகிக்கும்படியாகவும் பார்வைக்கு ரம்மியமாக இருக்கும்படியாகவும் நான் செய்கிறேன்! என்றார். அதற்குச் சூரியனும் ஒப்புக்கொண்டான். துவஷ்டா அவனைச் சாணையிலேற்றிச் சாணை செய்து அதனால் தீட்சண்யம் அடக்கி, பார்ப்போர் மகிழக்கூடிய உருவத்தை அவனுக்குக் கொடுத்தார். சூரியன் துவஷ்டாவிடம் விடைபெற்றுத்தன் மனைவியான சஞ்ஞிகையை அடைய வேண்டும் என்ற ஆவலால் தனது யோக பலத்தால் தன் உருவை மாற்றிக்கொண்டு ஆண் குதிரையின் வடிவங்கொண்டு கூடிக்கலக்கமுயன்றான். அப்போது அவனைப் பத்தினி பரபுருஷன் என்னும் சந்தேகத்தால் விலகினாள். அதைக் கண்ட சூரியனாகிய ஆண்குதிரை; நாசிவழியாகத் தன்வீரியத்தை விட, அந்த வீரியத்தினால் அஸ்வினி தேவதைகள், நாசத்தியர் என்றும் தசரர் என்றும் பெயரையடைந்து மிகவும் அழகிய உருவத்தோடுதோன்றித் தேவ வைத்தியர்களானார்கள். அவர்களைக் கண்டு சூரியன் மகிழவே அதைக் கண்ட பெண் குதிரையான சஞ்ஞிகை தன் கணவன் என்று உணர்ந்து, அவன் தேஜஸ் குறைந்து அணுகக் கூடியவிதமாக இருப்பதைக் கண்டுமகிழ்ந்தாள். யமன் தாயின் சாபத்தால் பீடிக்கப்பட்டு தர்மத்தால் பிரஜைகளை இரட்சித்துத் தன் நல்லொழுக்கம், தவம் முதலியவற்றால் தென்திசைக்கு அதிபதியாகவும் பிதுரர்களுக்குத் தலைவனாகவும் சாஸ்தா என்னும் பெயருடன் வாழ்ந்தான். முன்பு சாயாதேவியிடம் தோன்றிய சாவர்னிமனு மேருமலையின் உச்சியில் மறுபதவியை அடையவேண்டும் என்ற ஆசையால் தவஞ் செய்துவருகிறான். அவன் தம்பியாகிய, சனிபகவான் கோரமான தவஞ்செய்து நவக் கிரகங்களில் ஒருவனானான். யமனின் தங்கையான யமுனை, வெகுகாலம் தவஞ்செய்து பூமியில் உள்ளவர்களைச் சுத்தஞ்செய்ய யமுனை என்னும் நதியாகப் பிரவாகித்து யாவரையும் புனிதராக்கி சகலவித சவுக்கியங்களுக்கும் ஆதாரமாய்க் காளிந்தி என்னும் பெயரில் நதியாக பிரவாகித்து வருகிறாள். இந்தச் சரிதத்தைப் பக்தி சிரத்தையோடு பூசித்துப் படிப்பவர்களும் கேட்பவர்களும் சகல பாவங்களையும் போக்கிப் புனிதராய், இகபரலோக சாம்ராஜ்யங்களை அடைவார்கள்.
59. வைவசுவத மனுவின் மரபு
சூரிய புத்திரரான வைவசுவதமனுவிடம் வலியவர்களாயும் சூரிய தேஜஸிற்கு ஒப்பானவர்களாயும் அறநெறிப்படி நடப்பவர்களாயும் இக்ஷ்வாகு, சிபி, நாபாகன், திருஷ்ணாசையாதி நரிஷியந்தன் நாபாகன், கருஷன், பிரியவிரதன் என்ற நவபுத்திரர்கள் தோன்றினார்கள். இவர்கள் அல்லாமலும் வேறு புதல்வரையும் உண்டாக்கப் பலகாலம் யாகஞ் செய்து ஒருவரும் தோன்றாமல் கடைசியாக இடை என்னும் பெண் ஒருத்தி மின்னற்கொடி போன்ற சாயலும் சிறுத்த இடையும் பெருத்த தினமும் சந்திரனைப் போன்ற முகமும், மேகம் போன்ற கூந்தலும் ஒல்லிய தேகமும் கொண்டு, திவ்யாலங்கிருத பூஷிதையாய்த் தோன்றினாள். அவ்வாறு தோன்றியவளை மனு பார்த்து பெண்ணே! நீ என்னோடு கூடிப்புத்திரரை உண்டு செய்வாயாக! என்றார். ஆனால் இடை என்ற அந்தப் பெண்! சக்கரவர்த்தியே! நான் மித்திராவருணர்கள் என்பவர்களுக்காக உண்டாக்கப் பட்டவள் அவர்களைத் தான் நான் அடையவேண்டும். உம்மால் என்னை அதர்மம் அடைய வேண்டியதில்லை! என்று சொல்லி, மித்திராவருணர்களிடம் சென்று அவர்களை வணங்கி, நான் உங்களுக்காகவே மனுவின் யாகத்தில் உண்டாக்கப்பட்டேன். ஆகையால் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாள். அவர்கள் இடையைக் கண்டு, தர்மம் தெரிந்தவளே! உன் நடையாலும் ஒழுக்கத்தாலும் குணத்தாலும் அழகாலும் நாங்கள் மகிழ்ந்தோம் நீ மகத்தான கீர்த்தியைப் பெற்று மனுச்சக்கரவர்த்தியின் குலத்தை விருத்தி செய்யக்கூடிய சுத்தியும்நன் என்னும் பெயருடைய புத்திரன் ஆகப்போகிறாய்! என்றார் இதைக் கேட்டுக் கொண்டு இடை தன் தந்தையிடம் செல்லும் வழியில் சந்திரனின் புதல்வனாகிய புதன் அவளைச் சந்தித்து, அவளது உருவலா வண்ணியங்களைக் கண்; மோகங்கொண்டு தன்னைக்கூடி மகிழ வேண்டும் என்று வேண்டினான். அவளும் அவனது விருப்பத்திற்கு இயைந்து இருவரும் அங்கேயே கூடிச் சங்கமம் செய்தார்கள். அதனால் புரூரவச் சக்கரவர்த்தி பிறந்தான். உடனே தன் பெண்வடிவு மாறுபட்டு சுத்தியும்நன் என்னும் புருஷனாகவும் இடையென்னும் பெண்ணாகவும் தோன்றி இருவருங்கூடி உத்கலன் கயன். விநதாசுவன்; என்ற மூன்று புத்திரர்களைத் தந்தனர் அவர்களில் உத்கலன் என்பவனுக்கு உத்கலம் என்ற தென்திசையையும் விநதாசுவனுக்கு மேல்திக்கையும் கயனுக்கு சுயநாட்டையும் கொடுத்துப் பாதுகாக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.
வைவசுவதமனு சூரியனின் விருப்பப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் பத்துப் பிரிவுகளாக்கித் தன் புதல்வருக்குக் கொடுத்தார். அவர்களில் மூத்தவனாகிய இக்ஷ்வாகு மத்திய நாட்டைப் பரிபாலித்து பிரதிஷ்டானம் என்ற ஒரு நகரத்தை உருவாக்கிப் புரூரவனை அதில் இருக்கச் செய்தான். மனுசக்கரவர்த்தியால் உண்டாக்கப்பட்ட ஆண் பெண் வடிவமான சுத்தியும் நன்நரசித்ரனுக்கு ஷகை என்னும் பெண்ணை விவாகஞ் செய்து புத்திரவிருத்தி செய்தான். அம்பரீஷனுக்குப் பாக்கிலீகன் என்னும் புத்திரனும் சையாதிக்கு ஆகர்த்தர் என்னும் சில புத்திரர்களும் சுகன்யா என்னும் ஒரு பெண்ணும் பறந்தார்கள். சுகன்யா சவன மகரிஷியை மணந்து கொண்டாள். ஆநர்த்தனுக்கு ரேவன் என்னும் புதல்வன் பிறந்து, ஆநர்த்தராஜ்யத்தில் குசஸ்தலி என்ற நகரத்தை நியமித்து அதில் வாழ்ந்து, ஸாவஹன் ககுத்மா என இரு புதல்வரை ஈன்றனன். அவர்களில் மூத்தவன் குசஸ்தலி இராஜ்ஜியத்தை அடைந்து பிரமலோகம் முதலிய இடங்களுக்குச் செல்லும் வல்லமை பெற்று பலகாலம் பிருமலோகத்தில் வசித்து; இஷ்டமான உருவங்களை அடைந்து. ரேவதி என்னும் ஒரு கன்னிகையைப் பெற்று அவளைத் துவாரகையில் பலராமனுக்குத் திருமணம் செய்வித்து மேருமலையில் தவஞ்செய்கிறான். ககுத்மா என்பவன் குகஸ்தலியை அடைந்து சில காலம் ஆட்சி செய்து மூப்பு மரணமின்றி வாழக்கருதிப் பிரமலோகத்தையடைய அப்போது இராக்ஷசர்கள் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அந்தக் ககுத்மாதவச் செயலில் இருந்ததாலும் ஆட்சியை தானவர் கைக் கொண்டதாலும் அவன் புதல்வர் நூற்றுவரும் பல நாடுகளிலும் பரவினார்கள். இக்ஷ்வாகு புத்திரரில் அந்நூற்றுவருடைய வமிசங்கள் பலவிடங்களில் பரவின. நாபாகனுக்குக் காரூடன் என்பவன் தோன்றித் தன்பெயரால் ராஜ்யம் ஒன்றை உண்டாக்கி, பற்பல க்ஷத்திரியரைப் பெருக்கினான் அவர்களில் ஒருவனே வமிசலிருத்தி செய்தவன். அரிஷ்டனுக்கு பிரஷத்தவன் என்பவன் பிறந்து குருவின் பசுவைக் கொலைசெய்து, அதனால் சாபம் ஏற்றுச் சூத்திரத்துவத்தை அடைந்தான். வைவசுவதமனுவின் முதல் மகனாகிய இக்ஷ்வாகுக்கு சூரர்களான புதல்வர்கள் நூற்றுவர் உண்டு. அவர்களில் விகுக்ஷி என்பவன் மூத்தவன் அவன் அயோத்தியில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பத்தாறு தேசங்களையும் ஆட்சி செய்தான் அவனுக்குச் சகுனி முதலிய பதினைந்து புதல்வர்கள் தோன்றி வடதேசங்களைக் காத்தனர்.
இக்ஷ்வாகு அரசு புரியும் போது, அவன் வீட்டில் சிரார்த்ததினத்தில் சமைக்கப்பட்டிருந்த முயலின் கறியை அவன் புத்திரனான விருக்ஷி என்பவன் சாப்பிட்டு சுவைத்தான். அதை தந்தையான இக்ஷ்வாகு உணர்ந்து மனம் வருத்திச் சினந்து ஆசிரியரை அதுபற்றி வினவினான், அதற்கு அவர் அவனை அரசுரிமைக்கு உடையவனாக்காமல் அனுப்பிவிடு என்றார். உடனே இஷ்வாகு குருமொழியைக் கேட்டு, தன் புதல்வனை அவ்வாறே அனுப்பி விட்டு, தானே அரசுரிமை ஏற்று ஆட்சி செய்து சில காலம் சென்றபிறகு, விருக்ஷி என்பவனுக்கு இளையவனான ஆயோதன் என்பவனை அரசனாக்கினான். ஆயோதனுக்கு காகுஸ்தனும் காகுஸ்தனுக்கு அரிநாபனும் அரிநாபனுக்குப் பிருதுவும் பிருதுவுக்கு விஷ்டாசுவனும் விஷ்டாராசுவனுக்கு இந்திரனும் இந்திரனுக்கு யுவாநாசுவனும் அவனுக்குச் சிராவனும் புதல்வராகத் தோன்றி வமிச விருத்தியாயிற்று சிராவன், தன் பெயரால் சிராவஸ்தி என்ற நகரத்தை அமைத்து, தர்மசீலனாய் ஆண்டு வந்தான் சிராவனுக்குப் பிரகத்சுவனும் அவனுக்கு குவலாசுவனும் உண்டாயினர். அவன் இராஜநீதி தவறாமல் அரசு செலுத்தும் போது அவனுக்கு வில்லாளிகளான நூறு புதல்வர்கள் தோன்ற அப்புத்திரர்களிடம் தன் இராஜ்ஜியத்தை ஒப்புவித்து வனஞ் சென்று தவஞ் செய்யவேண்டும் என்று அவன் கருதியிருந்தான். அப்போது அந்த குவலாசுவனிடம் உத்தங்க முனிவர் வந்து இக்ஷ்வாகு குலத்தரசனே! நீயே இந்தப் பூமியைக் காக்க வேண்டும் நீ வனஞ் செல்வது தகாது. என் ஆசிரமத்திற்கு அருகே மனிதவாடையில்லாத ஒரு மணற் பிரதேசத்தில் ஓர் அசுரன் பிரமதேவனிடம் பெற்ற வரத்தால் தேவர்களாலும் வெல்ல முடியாத பலவானாக பூமியில் வசிக்கிறான். அவன் பெயர் துந்து மதுவின் மைந்தனான துந்து என்னும் அவன் உலகத்தை நாசஞ் செய்யவேண்டும் என்று பூமியின் கீழேயிருந்து தவஞ் செய்து வருஷத்திற்கு ஒருமுறை சுவாசம் விடுகிறான். அப்போது பற்பல மலைகள் மரங்களோடு கூடிய பூமியானது ஏழு நாட்கள் வரையில் நடுங்குகிறது. கருந்தூள் செந்தூள் பரவிச் சூரிய மண்டலத்தை மறைக்கிறது. அவன் கண்களிலிருந்து தோன்றும் நெருப்புப் பொறிகள் பிரளயகாலாக்கினியைப் போல உலகம் முழுவதையும் எரிக்கின்றன. அவனது கொடுமைகளைச் சகிக்க என்னாலும் உலகினராலும் சாத்தியப்படாது நீயே அவனைக் கொல்லவேண்டும். நீ அவனைக் கொன்று விட்டால் உலகினர் யாவரும் சுகம் அடைவார்கள். பூர்வத்தில் அவனை அழிக்க வேண்டும் என்று நான் நெடுங்காலம் தவஞ்செய்ய, விஷ்ணுமூர்த்தி பிரசன்னமாகி, உத்தங்கரே! நீர் இந்தத் தந்துவை அழிக்க விரும்புவீராகில் உலகத்தில் க்ஷத்திரியர்களிலே சிறந்தவனாக விளங்கும் அக்குவலாசுவனுக்கு என் வல்லமையைக் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு செய்வதை விட தவஞ் செய்வது சிறந்தது அல்ல! என்று கூறினார். அதைக் கேட்டதும் குலவாசுவன் முனிவரே! நான் இனி மேல் ஆயுதங்களையே எடுப்பதில்லை என்று பிரதிக்ஞை செய்திருக்கிறேன். ஆகையால் என் புத்திரர்கள் அவனை வதஞ்செய்யத் தடையிராது என்று கூறித்தன் புதல்வர்களை அந்த முனிவருடன் அனுப்பினான். அவர் அவர்களைக் கொண்டு, அந்த அசுரனைக் கொல்ல இயலாது என்றார். அதன் பின் அரசன் தன் புதல்வர்களையும் தன்னோடு அழைத்துச் சென்று அந்த வனத்தை அடைந்து அசுரன் இருக்கும் இடம் வரையில் வெட்டும்போது துந்துவினுடைய சுவாசத்தினால் அவன் புதல்வரில் மூவர் நீங்கலாக மற்றவர்கள் உயிர் நீங்கினார்கள். அப்பொழுது உத்தங்க முனிவர் விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் குவலாசுவனுடலில் தன் அம்சத்தைச் செலுத்தினார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தது. இனி இவன் துந்துமாரன் என்ற பெயரை அடையப் போகிறான். என்று துந்துபிகளை முழங்கினார்கள். குலவாசுவன் துந்து என்பவனை நேரில் கண்டான். அப்போது அவன் தன் வாயிலிருந்து ஒரு ஜலவேகத்தை உண்டாக்கினான். அதைக் குலவாசுவன் அடக்கித் தன்னிடமிருந்த திவ்விய அஸ்திரங்களாலும் விஷ்ணுவின் கருணையினாலும் அவனைச் சம்ஹரித்து துந்துமாரன் என்னும் பெயரைப் பெற்றான். உத்தங்கமுனிவர் மனம் மகிழ்ந்து அவ்வரசனை நோக்கி, நீ செல்வம் முதலியவற்றில் குறைவின்றி வாழ்ந்து பகைவர்களை வென்று சிலகாலம் அரசு செய்து தவச் செயலை மேற்கொண்டு அழிவு இல்லாத உத்தமமான பதவியை அடைவாயாக! என்று வாழ்த்தினார். அவ்வாறே அவனும் சில காலம் அரசாண்டு பின்னர் தவச்செயலில் இருந்தான்.
துந்துவால் இறவாமல் தப்பிய புதல்வர்கள் மூவரில் திருடாசுவன் என்பவன் மூத்தவன் ஹம்சன், கபிலன், என்பவர்கள் இளையோர் அவர்களில் மூத்தவனான திருடாசுவனுக்கு ஹரிய சுவனும், ஹரியசுவனுக்கு நிகும்பனும் அவனுக்கு சங்கதாசுவனும் அவனுக்கு அக்ஷõசுவன் கிருதாசுவன் என்ற புத்திரர்களும் திருஷத்வதி என்ற பெண்ணும் பிறந்தார்கள். திருஷ்தவதிக்கு மூவுலகங்களிலும் புகழ் பெற்ற பிரசேனஜித் தோன்றினான். அவன் கவுரி என்னும் பெண்ணை மணந்து யுவனாசுவனைப் பெற்று வாழ்ந்து வரும்போது அவள் பேரில் கோபம் கொண்டு நதியுருவம் அடையும்படிச் சபித்தான். யுவனாசுவன் மகன் மாந்தாதா என்பவன் திரிலோகங்களிலும் ஏகசக்கராதிபத்தியஞ் செய்து சசிபிந்துவின் குமாரியான சைத்திராதை என்பவன் உருவப் பொலிவில் ரதியைப் போலவும், கற்பில் அருந்ததியைப் பேரலவும் விளங்கிப் பதினாயிரம் சகோதரர்களோடு விளங்கியதால் அவளை மணந்து தவசீலர்களான புருகுற்சன் முசுகுந்தன் என்ற இரண்டு புதல்வர்களைப் பெற்றான். புருகுற்சனுக்கு நர்மதை என்னும் பெண்மணியிடம் திரிசதசியு என்பவன் பிறந்தான். அவனுக்குச் சத்துரு நாசஞ்செய்யவல்ல திரிதன்வாவும் அவனுக்குத் திரையாருணியும் அவனுக்கு மஹாபலிஷ்டனான சத்தியவதனனும் பிறந்தார்கள். சத்தியவதனன் தன் ஆட்சியில் நூதன விவாகஞ் செய்து கொண்டவருடைய மனைவியரையும் இளமை மதப்புள்ளகன்னிகைகளையும் பலாத்காரமாகப் புணர்வதில் விருப்பமுடையவனாக இருந்தான். அவனுடைய துர்ச்செயல்களைக் கண்டு மனஞ் சகியாத அவன் தந்தையான திரையாருணி என்பவன் தன் மகனைக் கடிந்து தன் இராஜ்யத்தைவிட்டு வனத்தில் வேடருடன் வாழும்படி அனுப்பி விட்டான். சத்தியவதனன் தன் தந்தையின் கட்டளைப்படி அவ்வாறே வாழ்ந்து வந்தான். திரையாருணி தன் மைந்தன் செய்த அக்கிரமத்தைச் சகியாமல் விரத்தியுடன் வனஞ்சென்று தவஞ்செய்தான். அப்போது துவாதச வருஷப் பஞ்சம் சம்பவித்துப் பிரஜைகள் பெருங் கஷ்டத்தை அடைந்தார்கள். அப்போது அங்கு தவஞ்செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர் தன் புத்திரர்களை விட்டுவிட்டு கடற்கரையை அடைந்து அங்கே தவச் செயலில் இருந்தார். அதனால் அந்த முனிவரில் பத்தினி தன் புத்திரர்களைப் பராமரிக்கும் சக்தியற்று தன் புத்திரர்களில் ஒருவனைக் கழுத்தில் கட்டிக்கொண்டு போய்ச் சத்தியவதனனுக்கு விற்று அவன் தந்த பொருளைக் கொண்டு ஏனைய புதல்வரைக் காப்பாற்றி வந்தாள். சத்தியவதனன் விசுவாமித்திரரிடம் வைத்த அன்பினால், அப்பிள்ளையைப் பொருள் கொடுத்து வாங்கிக் காப்பாற்றி வந்தான். களமாகிய கழுத்தில் கட்டிக்கொண்டு வந்ததால் அவனுக்கு காவலன் என்ற பெயருண்டாயிற்று அந்தக் காலவன் என்பவன் மஹா தபஸ்வியாக விளங்கினான்.
60. சத்தியவதனன் சகரன் பரம்பரை
நைமிசாரணிய வாசிகளே! சத்தியவதனன் விசுவாமித்திரரின் புத்திரர்களையும் மனைவியையும் ஆதரித்து, மாமிசம் முதலான உணவு வகைகளை கொடுத்துதவி அவரது ஆசிரமத்தையும் அதிலுள்ள தீர்த்தங்களையும் காப்பாற்றி வந்தான் சத்திய விரதனைத் திரையாருணன் காட்டுக்கு ஓட்டியபோதும், வனத்திலே அவன் மிருகங்களை வதைக்கும் போதும், திரிகால நடப்புகளையும் அறிந்த வசிஷ்ட முனிவர் அருகிலே இருந்தும், மேல் நடக்க வேண்டியவற்றை அவர் அறிந்திருந்தும் அவர் சிறிதும் தடைசெய்யவில்லை. ஆயினும் சிறிது காலங்கழித்து அவர் சத்தியவதனனைச் சந்தித்து நீ தீச்செயல்கள் புரிவதை நிறுத்திக் கொள்வாயானால் நான் உன் தந்தையிடம் சொல்லி, உனக்கு ராஜ்யத்தை கொடுக்கச்செய்கிறேன் என்றார். அவன் அதைக்கேளாமல், தன் இச்சைப்படியே நடந்து வந்தான் அதைக் கண்ட அவன் தந்தை திரையாருணன், தன் குருவான வசிஷ்ட முனிவரை நோக்கி, சுவாமி! என் இராஜ்யத்தை ஆள எனக்குப் பிறகு சந்ததியில்லையே! இதற்கு என்ன செய்வது? என்று கேட்டாள். அதற்கு வசிஷ்டர் உன் குமாரனான சத்தியவதனன் மேலும் சிவ காலம் வனத்திலேயே இருந்தால் அவனது பாவங்கள் ஒழிந்து விடும் உன் ஆயுள் முடிவில் அவனுக்கே உன் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிடலாம்! என்று கூறிவிட்டு சத்தியவதனனை அழைத்து நான் பன்னிரண்டு வருஷம் தீøக்ஷயாக இருப்பேன் நீ சிறிதும் அக்கிரமமில்லாமல் எனக்குப் பணிவிடை செய்துவா? என்றார், அதன் அதற்கிணங்கி அவருக்குத் தொண்டு செய்து வந்தான். அவரும் தவயோகத்தில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் விசுவாமித்திரரின் குடும்பத்தைக் காக்க, உணவு, ஒன்றும் கிடைக்காமல் இருந்ததால் அவன் வசிஷ்டரின் ஆசிரமத்திலிருந்த காமதேனுவின் வமிசத்தில் தோன்றிய இஷ்டகாமியங்களைக் கொடுக்கத்தக்க பசு ஒன்றைக் கொன்று தானும் புசித்து விசுவாமித்திரரின் மனைவி முதலியவர்களுக்கும் ஊட்டினான். அதையறிந்த வசிஷ்ட முனிவர் வெகுண்டு அவனைக் கோபித்து அடா கொடியவனே! உன் அபசாரத்திற்காக உன்னை இப்போதே கொன்று விடுவேன். ஆயினும் உன் தந்தையிடம் உன்னை அரசனாக்குவேன் என்று நான் கொடுத்தவாக்கும் நீ எனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்வதாக ஒப்புக் கொண்டதும் என்னைத் தடை செய்கின்றன இந்த இரண்டு தடைகளும் இல்லாவிட்டால் உன்னை இப்பொழுதே சபித்துவிடுவேன் உனக்கு உரிமையில்லாத பிறன் மகளிரோடு நீ கூடிக் காமலீலை புரிவதும் வேடுவர்போல ஜீவஹிம்சை செய்து வாழ்வதும், பசுவைக் கொன்றதுமான மூன்று குற்றங்களைச் செய்து விட்டாய் உன் குற்றத்திற்காக முன்னதாக உன்சிரசில் சங்கினை அடிக்க வேண்டும். உன் தந்தையைக் கருதி நான் அவ்வாறு செய்யாது இருந்தேன். இப்போது அவை மூன்றையுஞ் சேர்த்து அடித்து விடுகிறேன்! என்று கூறி திரிசங்கு என்று கூப்பிட்டார். அது முதல் சத்தியவதனன் என்ற பெயர் நீங்கி அவன் திரிசங்கு என்னும் பெயரைப் பெற்றான். அது முதல் அவன் விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அப்போது ஒரு சமயம் விசுவாமித்திரர் தன் தவத்தை நிறுத்தி விட்டு, புத்திரர் முதலானவர்களைப் பார்க்க விரும்பி விரைந்து வந்தார் தன் குடும்பத்தைச் சந்தியவதனன் பாதுகாத்து வருவதைக் கண்டு அவர் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அவரைச் சாஷ்டாங்கமாக திரிசங்கு வணங்கி சுவாமி! வசிஷ்டமகரிஷி எனக்கு இராஜ்ஜியமில்லாமல் செய்து என்னைப் பாவியாக்கி விட்டார். நான் என் ராஜ்யத்தை அடையத் தயை புரிய வேண்டும்! என்றான்.
அஞ்சாதே! உன் பாவங்களையெல்லாம் ஒழித்து உன்னை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைப்பேன்! என்று விசுவாமித்திரர் கூறி அந்த ராஜ்ஜியத்திலிருந்த பஞ்சம் நீங்கும் படி மழை பெய்யச் செய்வித்து யாகம் முதலானவற்றையும் செய்து அவனுக்குப் பட்டம் கட்டி. அவனையே அரசனாகச் செய்து தன் விருப்பப்படிச் சென்றார். திரிசங்கு சிலகாலம் சென்ற பிறகு, கேகய வம்சத்தில் தோன்றியசத்தியரதை என்பவளிடம் அரிச்சந்திரனைப் புத்திரனாகப் பெற்று அவன் தக்க வயதடைந்ததும் அவனுக்கு இராஜ்யாபிஷேகம் செய்வித்து தவவனத்தை அடைந்தான். அங்கு அவன் வசிஷ்ட முனிவரை சந்தித்து, அவரையே தன் குருவாகக் கொண்டு நான் இந்தத் தேகத்துடனே சுவர்க்கத்தை அடையத்தயை செய்ய வேண்டும்! என்று இறைஞ்சினான். ஆனால் அது அசாத்தியம் என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார் எனவே திரிசங்கு வசிஷ்டரின் புத்திரர்களை அடைந்து அவர்களிடமும் அது போலவே கேட்டான். அவர்களும் அது அசாத்தியமே என்று சொல்லிவிட்டார்கள். அதனால் திரிசங்கு துணுக்குற்று. என் குருவும் குரு புத்திரருமாகிய உங்களால் முடியாது என்றால் அவ்வாறு செய்யவல்லவரையே நான் குருவாகக் கொள்வேன் என்றான். அவனை வசிஷ்ட புத்திரர்கள் நோக்கி நீ எங்களை அவமதித்ததால் நீசனாகுக என்று சபித்தார்கள். அந்தச் சாபத்தை அடைந்த பிறகு திரிசங்கு மீண்டும் விசுவாமித்திரரிடம் சரண் அடைந்து அவரைக் கண்ட கவுசிகரான விசுவாமித்திரர் தம் தவப்பயனால் திரிசங்கு சுவர்க்கம் என்னும் இடம் ஒன்றை நியமித்து, அவனை அங்கு தங்கச் செய்தார்.
முனிவர்களே! அரிச்சந்திரன் சக்கரவர்த்தியாக இருந்து பற்பல இராஜசூய அசுவமேதயாகங்களைச் செய்து, மூவுலகத்திலும் சத்தியவான் என்றப் பெயரைப் பெற்றான். அரிச்சந்திரனுக்கு லோகிதாகவனும் அவனுக்கு விருகனும் அவனுக்குப் பாகுவும் தோன்றினார். பாகு என்பவன் அரசாளும்போது, ஹைஹய வம்சத்தில் தோன்றியவர்களும் தாலஜங்க வம்சத்தில் தோன்றியவர்களும் அவனுடன் சண்டையிட்டு அவனைக் காட்டுக்குத் துரத்தினார்கள். பாகுமன்னன் தன் இராஜ்யத்தை இழந்து வனத்தில் பிருகு வமிசத்தில் உதித்த அவுரவர் ஆசிரமத்தில் புத்திர விருப்பத்தோடு தவஞ்செய்தான். அவுரவர் ஒரு பழத்தை அவனிடம் கொடுத்து உன் மனைவியை இதைச் சாப்பிடச் செய்! என்றார். அருகிலிருந்த அவ்வரசனது மற்றொரு மனைவி அந்தப் பழத்தில் நஞ்சைக்கலந்து வஞ்சனையாகக் கொடுத்தாள். சில நாட்கள் பாகு இறந்தான். அவன் மனைவியார் உடன் கட்டை ஏற முயலும் போது அவுரவமுனிவர் விஷத்தோடு கருவுற்றிருப்பவளைப் பார்த்து, ராணியே! கர்ப்பவதியான நீ உடன் கட்டை ஏறக்கூடாது! என்று தடுத்து அவள் வயிற்றிலிருந்த விஷம் அந்தச் சிசுவைத் துன்புறுத்தாதபடி தன் மந்திரத்தால் தடுத்தார். எனவே விஷத்துடனேயே அந்தக் குழந்தை பிறந்தது. அதன் காரணமாக சகரன்(கரம்-விஷம்: சகரன்-விஷத்தோடு தோன்றியவன்) என்று பெயரிட்டு அவனுக்கு வேத சாஸ்திரங்களைக் கற்பித்தார்கள். பிறகு அவன் தன் தந்தை பறிகொடுத்த நாட்டை மீண்டும் அடைந்து மிலேச்சர் முதலானவர்களை வென்றடக்கி, ஏகசக்கராதிபதியாக ஆட்சி செய்து வந்தான் அவன் அவுரவ முனிவரின் அருளால் அடைந்த ஆக்னேயாஸ்திரத்தால் பற்பல மன்னர்களை வெகு சுலபமாக வென்று வந்தான். அதனால் மற்ற அரசர்கள் மனஞ்சகியாமல் சகரனுடைய குருவான வசிஷ்டரிடம் சென்று அவரிடம் விண்ணப்பஞ் செய்தார்கள் ஆனால் குருசொல்லியும் சகரன் கேளாமல் அவன் பகைவர்களை வதைத்துக் குடிமக்களைப் பாதுகாத்து வந்தான். மிலேச்சர்களில் சதரள் என்பவர்களின் குடுமியைக் கத்தரித்து சங்கரிக்க வேண்டும் என்றும் யவனரை முழுத்தலையும் முண்டிதமாக இருக்க வேண்டும் என்றும் காமபோஜர்கள் மோவாயில் மயிர் வைத்திருக்கவேண்டும் என்றும் அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமானத் தண்டம் விதித்து சகரன் ஆட்சிசெய்து வந்தான். சந்ததி விருத்தியை விரும்பிய சகர சக்கரவர்த்தி வனத்தை அடைந்து தவஞ்செய்து ஒரு முனிவரின் கருணையால் வரம் பெற்றான். அதனால் அவன் மனைவியர் இருவரில் மூத்தவளிடம் வம்ச உத்தாரகனும் அற்பாயுளுடையவனுமான அசமஞ்சனும் இளையவளிடம் அதிசூரரான அறுபதினாயிரம் புதல்வரும் தோன்றினார்கள்.
அசமஞ்சன், தன் இளமைப் பருவத்தில் அந்த நகரத்திலுள்ள குழந்தைகளை யெல்லாம் நதியில் போட்டுக் கொன்று வந்தான். அதையறிந்த சகரன், தன் குருவாகிய வசிஷ்டரிடம் தர்ம சாஸ்திரத்தை விசாரித்து அவனைக் காட்டிற்கு அனுப்பி விடுவது என்று உணர்ந்து அவனை அவ்வாறே வனத்திற்கு அனுப்பி வைத்தான் அப்போது அசமஞ்சனின் மனைவி கர்ப்பவதியாக இருந்தாள் சில தினங்களில் குழந்தை பிறக்கவே, அதற்கு அம்சமான் என்று பெயரிட்டாள் மிலேச்சர்களால் குறைவுற்ற தானம் யாகம் முதலியவற்றை முன்பு போலவே விருத்தியாக்கி நிலைநிறுத்தி அசுவமேதயாகஞ் செய்ய நிச்சயித்தான். அதற்காக இலக்கணம் அமைந்த ஒரு குதிரையை அலங்கரித்து பூமியைச் சுற்றிவரச் செய்தான். அந்தக் குதிரைகீழைக்கடற் கரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது தேவேந்திரன் சகரசக்கரவர்த்தியிடம் பகை கொண்டு அந்தக் குதிரையை அபகரித்துக் கொண்டு பாதலத்தில் தவஞ் செய்து கொண்டிருந்த கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டுப் போய்விட்டான். சகரசக்கரவர்த்தி தன் அசுவமேதப் புரவியைக் காணாமல் தன் புதல்வர் அறுபதினாயிரவரையும் அதைத்தேடும் படி அனுப்பினான். அவர்கள் உலகமெங்கும் தேடியும் காணாமல். பூமயை வெடிக்கொண்டு பாதலஞ்சென்று அங்குகபில முனிவரின் தவச் சாலையில் அந்தக் குதிரை இருப்பதைக்கண்டார்கள். இந்த முனிவனே குதிரையை அபகரித்தவன் என்று அவரைப் பலவாறு தூஷித்துக் கூவினார்கள். முனிவர்யோகம் நீங்கி ஹுங்காரஞ் செய்தார். அதனால் அவர்கள் அனைவரும் எரித்து சாம்பலானார்கள்.நெடுநாள் கழிந்த பிறகு, சகரன்தன் பேரனான அம்சுமானை நோக்கி, நான் தீøக்ஷ செய்து கொண்டிருக்கிறேன் என்புதல்வர்கள் இறந்தாலும் யாகத்தைவிடக்கூடாது நீ அந்தக்குதிரையைக் கொண்டுவா, என்றான்.
அவ்வாறே அம்சுமான் அந்தக் குதிரையைத் தேடிச்சென்று பாதலத்தை அடைந்து, முனிவரையும் குதிரையையும் சகரபுத்திரர் எரிந்தனால் உண்டான சாம்பல் மலையையும் கண்டு விஷயத்தை அறிந்து முனிவரைப் பிரார்த்தித்து குதிரையை அவருடைய அனுமதியோடு பெற்றுக்கொண்டு, தன் மூதாதையருக்கு ஈமக் கடன் முடிக்க முயன்றான். அப்போது மாதுலனாகிய கருடன் தோன்றி, நீ ஆகாய கங்கையை வரவழைத்தாலன்றி இவர்கள் நற்கதி அடையமாட்டார்கள். சாபத்தீயினால் நரகத்தீயை அடைந்திருக்கிறார்கள் என்று அறிவித்தான். அது தன்னால் முடியாது என்று அம்சுமான் கருதி குதிரையைக் கொண்டு வந்து தன் பட்டனாரிடம் சேர்த்து யாகத்தை முடித்தான். சகரன் சிறிது காலத்தில் அம்சுமானுக்கு முடிசூட்டி விட்டுக் காலகதியை அடைந்தான். அம்சுமான், அநேககாலம் அரசு செய்து தன் புதல்வன் திலீபனுக்குப் பட்டங்கட்டித் தேகம் நீங்கினான் திலீபன், தன் காலம் முழுவதும் சகர புத்திரரை நற்கதியேற்றிச் சாத்தியப்படாமல் பகீரதன் என்னும் தன் புதல்வனுக்கு அரசுரிமையைக் கொடுத்து நற்கதியடைந்தான்.
பகீரதன் தன் முன்னோர் கபிலமுனிவரின் கடுஞ்சாபத்தால் கடுநரகமடைந்திருப்பதை அறிந்து அவர்களை நற்கதியடைய செய்ய வேண்டும் என்று நினைத்து கோகர்ண ÷க்ஷத்திரத்தில் தவமிருந்து ஆகாய கங்கையை வரவழைத்து, அவர்களையெல்லாம் நற்கதி அடையச்செய்தான் பகீரதனுக்கு சுருதமுயனனும் சுருத சயனனுக்கு நாபாகனும் அவனுக்கு அம்பரீஷனும் அம்பரீஷனுக்கு சிந்து தீபனும் அவனுக்கு அயுதாஜியும் அவனுக்கும் ருதுபர்ணனும் புத்திரராகப் பிறந்தார்கள். ருதுபர்ணன் அக்ஷவிருதயம் என்ற மந்திரத்தை அறிந்து நளசக்கரவர்த்தியிடம் நட்பு கொண்டிருந்தான். ருது பர்ணனுக்கு அநுபர்ணனும் அநுபர்ணனுக்கு கல்மாஷபாதல் என்னும் காரணப் பெயர் பெற்ற மித்திர சகனும் கல்மாஷாபாதனுக்குச் சர்வகர்மாவும் அந்த சர்வ கர்மாவுனுக்குத் தன்னை வென்ற இராவணனை நோக்கித் தன் வம்சத்தில் தோன்றிய ஒருவனால் இறக்கக்கடவாய் எனச் சாபமிட்ட அநரண்ணியனும் அவனுக்கு முண்டித் துருவனும், அவனுக்கு நிஷதனும் அவனுக்குத் தீர்க்கபாஹுவும் அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும் அஜனுக்குத் தசரதனும் தசரதனுக்குத் தர்மத்திற்கு இருப்பிடமாகவும் இராக்ஷஸ குலகாலனும் நூறு அஸ்வமேதஞ் செய்தவனுமாகிய ஸ்ரீராமனும் ஸ்ரீராமனுக்குக் குசனும் குசனுக்கு அதிதியும் அதிதிக்கு நிஷதனும் நிஷதனுக்கு நளனும் நளனுக்கு நபசும் நபசுக்கு புண்டரீகனும் புண்டரீகனுக்கு ÷க்ஷமதன்வாவும் ÷க்ஷமதன் வாவுக்குத் தேவாநீகனும் தேவாநீகனுக்கு அஹீநகுவும் அஹீநருவுக்குச் சகஸ்வானும் சகஸ்வானுக்கு வீரசேனனுமாகப் புத்திரர்களாக அநேக அரசர்கள் தோன்றினார்கள். இம்மன்னர்கள் வைவசுவதமநுமரபில் தோன்றிச் சிறப்புற்றவர்கள் இவர்கள் பரம்பரை முழுவதையும் சொல்லி முடிக்க எவராலும் முடியாது இந்த வைவசுவதமநு மரபைப் பற்றிக் கேட்டவர்கள், நீண்ட ஆயுளோடும் புத்திரப் பேற்றோடும் விளங்கி சூரிய மண்டலம் வழியாகச் சிவலோகத்தை அடைந்து நித்தியமான வாழ்வையடைவார்கள். இவ்வாறு சூதமுனிவர் கூறினார்.
61. பிதுர்தேவர் சிறப்பு
நைமிசாரணியவாசிகள், சூத முனிவரை நோக்கி, சுவாமி சூரிய பகவானின் பரம்பரையைக் கேட்டு மகிழ்ந்தோம் இனி சிரார்த்த தேவர்கள் யார்? பிதுர்க்கள் யாவர்? அவர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? அவர்கள் எத்தகைய பயன்களைத் தருவார்கள்? இவற்றையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். முனிவர்களே! நீங்கள் அருமையான விஷயத்தைக் கேட்டீர்கள் இந்த விஷயம் முன்பு ஸனத்குமார முனிவரால் மார்க்கண்டேய மகரிஷிக்கும் மார்க்கண்டேயரால் பீஷ்மருக்கும் பீஷ்மரால் தர்மராஜருக்கும் சொல்லப்பட்டன. அவ்விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதுர்க்கள் சிரார்த்தாதி கர்மங்களினாலேயே மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்துப் பூஜிக்க வேண்டும் அவ்வாறு சிரார்த்தங்களை முறைப்படி செய்தவர்கள் பிதுர்க்களால் விரும்பியனவற்றையெல்லாம் அடைவார்கள். சிலருடைய பிதுர்க்கள் புண்ணிய வசத்தால் சுவர்க்கலோகத்தையும் சில பிதுர்க்கள் பாவ வசத்தால் அதோ லோகத்தையும் அடைந்திருப்பார்கள். ஆகையால் ஒருவன் செய்யும் சிரார்த்தம் அவர்களை எவ்வாறு சென்று அடைகின்றன என்று கேட்பீர்களாயின், அதையுஞ் சொல்லுகிறேன்; கேளுங்கள்.
சுவர்க்க வாசிகளாகிய தேவர்களும் தங்கள் பிதுர்சிரார்த்தத்தைச் செய்து வருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பூர்வத்தில் பீஷ்மர் தர்மராஜனிடம் சொன்னதாவது தர்மநந்தனா! நான் ஒரு காலத்தில் என் தந்தையான சந்தனு மாமன்னருக்குச் சிரார்த்தம் செய்தபோது பூமியைக் கீறிப் பிதூர் ஆவாஹனஞ் செய்த இடத்திலிருந்து என் தந்தை தோன்றி அந்தப் பிண்டத்தைக் கை நீட்டிக் கேட்டார். நான் அதை அவர் கையில் கொடுக்காமல் தர்ப்பையின் மேலேயே வைத்தேன். அவர் அதைக் கையில் கொண்டு பெரிதும் மகிழ்ச்சியோடு எனக்குச் சில தர்மங்களைச் சொன்னார். அவர் சொன்னவை நீ தர்மவான் உன்னாலேயே நான் புத்திரப்பேறுடையவனானேன். உன்னாலேயே நான்கடைத்தேறினேன். அரசன் செய்யும் காரியத்தையே குடிமக்களும் பிரமாணமாகக் கொண்டு நடக்கிறார்கள். நானே நேராக வந்து, உன் கைப்பிண்டத்தைக் கையில் கொடுக்காமல் வேத மார்க்கத்தை நம்பி தர்ப்பையின் மீது என்னை உத்தேசித்து வைத்தாய் அதனால் உலகத்தில் அறநெறி நிலையாக வளரப்போகிறது. என்று நான் மகிழ்ந்தேன். நீ விரும்பிய காலத்திலன்றி உன் உயிர் நீங்காது நீ வாழ்வாய்! என்று கூறினார். அன்னிய லோகத்தை அடைந்த பிதுர்க்கள் சிரார்த்தத்தால் எவ்வாறு திருப்தியடைகிறார்கள்? என்று நான் கேட்டேன் அதற்கு என் தந்தை மகனேல, ஆதிதேவனுடைய புத்திரர்களான பிதுரர்கள் தேவர் அசுரர்! மானுடர், யக்ஷர், ராக்ஷசர், கந்தர்வர், கின்னரர், உரகர்களாலேயும் பூஜிக்கத்தக்கவர்கள். எந்த வர்ணாசிரமத்தில் பிறந்தவர்களானாலும் பிதுர்பூஜை அவசியம் செய்யவேண்டியவர்களே. தங்கள் பிதுர்கோத்திர நாமங்களைக்கூறி சிரார்த்தங்களைச் செய்தால் பிரமதேவனால் படைக்கப்பட்ட சிரார்த்த தேவர்கள் அதை அடைந்து பிதுரர்களாகிய நாங்கள் சுவர்க்க நரகங்களில் எங்கு இருந்தாலும் எங்களை அவர்கள் திருப்தி செய்கிறார்கள். இன்னும் இது விஷயமாக உனக்குள்ள சந்தேகங்களை மார்க்கண்டேய முனிவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்க! என்று கூறிவிட்டு என் தந்தை மறைந்தார். அதற்குப் பிறகு சிலகாலம் சென்றது. நான் இந்த விஷயத்தைப் பற்றி மார்க்கண்டேய முனிவரிடம் சென்று கேட்டேன். அவர் பீஷ்மா! நானும் நீயும் பிறரும் பிதுரர்களின் அனுக்கிரகத்தினாலேயே புகழ் முதலானவற்றை அடைந்திருக்கிறோம் நான் பல யுகங்களுக்கு முன்பு மேருமலையில் உச்சியில் கடுந்தவஞ்செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடை தேஜஸால் சுவர்க்க லோகத்திலிருந்து திவ்வியமான விமானம் ஒன்று அங்கு வரக்கண்டேன் அந்த விமானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அக்கினியைப் போலவும் சூரிய ஒளியையும் மழுங்கச் செய்யத் தக்க பேரொளியாகவும் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஓர் அங்குஷ்ட( பெருவிரல்) அளவே இருந்தார். அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து, நீங்கள் யார்? நான் எப்படி உங்களை அறிவேன்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் மார்க்கண்டேயனே! நீ என்னை அறியுஞ் சக்தியுடையவனே ஆயினும் நான் சொல்கிறேன். நானோ சகல லோக சிருஷ்டிகர்த்தாவான பிரமதேவரின் மானஸ புத்திரர்களுடைய வம்சந்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது நான் சந்நியாஸ ஆசிரமத்தை மேற்கொண்டிருக்கிறேன். நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றி அது முதலாகவே குமாரனாக இருப்பதால் ஸனத்குமாரன் என்று அழைக்கப்படுகிறேன். நீ பெரும் பக்தியுடன் தவஞ்செய்தமையால் உனக்குத் தரிசனம் தந்தேன். நீ என்ன வரம் வேண்டுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான் மாதவரே! பிதுர்க்களின் உற்பத்தியைப் பற்றி எனக்கு நன்றாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டேன் அதற்கு ஸனத்குமாரர் சொன்னார்.
முனிவனே! முன்பு பிரமதேவர் சில தேவர்களைச் சிருஷ்டி செய்து தன்னைப் பூஜிக்கும்படி உபதேசித்தார். அவர்கள் பிரமதேவரின் வாக்கை மீறித் தங்களைத் தாங்களே பூஜித்து கொண்டார்கள். தன்னைப் பூஜிக்காத அத்தேவர்களை பிரும்மா கோபித்து நீங்கள் ஞானவீனர்கள் ஆகுக! என்று சபித்தார். அவ்வாறே அமரர்கள் அறிவுகுன்றி நலிந்து போய் பிறகு பிரமதேவரைப் பணிந்து எங்களுக்கு ஞானம் உண்டாகும்படி அருள் புரிய வேண்டும்! என்று இறைஞ்சினார்கள். அதற்கு பிரமதேவர் தேவர்களே! என் புத்திரரைச் சந்தித்து அதற்குப் பரிகாரங் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அதன்படியே அவர்கள் பிரமபுத்திரரை வேண்டினார்கள். அதற்கு அவர்கள், தேவர்களே! உங்களை அந்தச் சாபம் பாதிக்காது உங்கள் விருப்பப்படியே செல்லுங்கள். புத்திரர்களே என்று அவர்களுடைய சாபத்தை விலக்கினார். அப்பொழுது பிரமதேவர் அவர்களை அழைத்து அமரர்களே! நீங்கள் புத்திரரால் புத்திரர்களே என்று அழைக்கப் பெற்றதால் அவர்கள் பிதுரர்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குவீர்களாக என்று அனுக்கிரஹஞ் செய்தார். அத்தகைய பிதுர்க்களை குறித்துப் பிண்டதானம் சிரார்த்தாதிகளைச் செய்தால். அப்பிதுர்த் தேவர்கள் திருப்தியடைந்து செய்தவனுடைய இஷ்ட காமியங்களைக் கைகூடச் செய்வார்கள். ஆகையால் விசுவதேவர் முதலாயினோரைச் சிரார்த்த காலங்களில் பூஜித்து, விரும்பியனவற்றை அடைதல் வேண்டும் என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.
62. பிதுர் பக்தியின் பயன்
ஸனத்குமார முனிவர், பீஷ்மரை நோக்கி, இராஜ சிரேஷ்டரே! பிதுர்த் தேவர்கள் எழுவர்! கவ்வியவாஹன் அனலன் சோமன், யாமன், அரியமான், அக்நிஷ்வாத்தன். பர்ஹிஷிதன் என்ற அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் தேகத்தோடும் மூவர் தேகம் இல்லாமலும் விளங்குவார்கள் இவர்களில் மூவரைத் தேவர்களும் ஏனைய நால்வரை அந்தணர் முதலான நாற்குலத்தாரும் வழிபடுகிறார்கள். பிதுர்க்களுக்குச் சிரார்த்த காலத்தில் வெள்ளிப்பாத்திரத்தினால் சிரார்த்தஞ் செய்யவேண்டும் மனைவியோடு கூடிய அக்நிமானாயின் சுதா என்னும் சப்தத்தினால் ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஜலத்திலோ அல்லது பிராமணனின் கையாலோ ஹோமஞ் செய்ய வேண்டும் அவ்வாறு செய்பவர்கள் இகலோக சவுக்கியத்தையும் பரலோகத்தில் சுவர்க்க லோகத்தையும் அடைவார்கள். தேவகாரியத்தைக் காட்டிலும் பிதுர்க் காரியஞ் சிறந்தது. அதை அதிக பக்தியுடன் செய்யவேண்டும் பிதுர்க்காரியத்தினால் அடையுங்கதியை யோக பலத்தினாலும் அடைய முடியாது! என்று கூறி திவ்வியமான ஞானத்தை உபதேசித்து விண்வழியே சென்றார். பீஷ்மரே இனி முன்பு நடந்த ஒரு சரிதத்தைச் சொல்லுகிறேன்.
பரத்வாஜ முனிவரின் மைந்தர்கள் யோக தர்மத்தை அடைந்தும் தம் துர்நடத்தையால் பிரஷ்டர்களானார்கள். வாக்துஷ்டன் குலோதனன், ஹிம்சிரன், பிசுனன்(கோனன்) கபி (குரங்கு) பிதுர்வர்த்தி என அவர்கள் நடத்தை காரணமாக அப்பெயர்களை பெற்றார்கள். ஸ்வஸ்ரூபன் (தங்கையைரட் சித்தவன்) என்று ஓர் புத்திரனும் இருந்தான். இவர்கள் எழுவரும் பிரஷ்டர்களாகவே இருந்து அப்பிறவிகளை ஒழித்து கவுசிக முனிவருக்கு புதல்வர்களாகத் தோன்றிகர்க்க முனிவரின் சீடர்களாகி குரு÷க்ஷத்திரத்தில் தங்கள் ஆசிரியருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கர்க்கமுனிவர் அவர்களை நோக்கி வேறோர் ஆசிரமத்திலிருந்து பசுவுங்கன்றும் ஓட்டிக்கொண்டு வரும்படிச் சொன்னார். அவர்கள் எழுவரும் அவ்வாறே சென்று பசுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வரும் போது அவர்களில் சிலருக்குப் பசியினாலும் அறியாமையானாலும் பாவத்தினாலும் அந்தப் பசுவைக் கொன்று புசிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவர்கள் அதைக்கூறவே அப்போது கபி ஸ்வஸ்ரூபன் என்பவர்கள் அது பாபம் அவ்வாறு செய்யக் கூடாது! என்று தடுத்தார்கள். பிதுர்வர்த்தி என்பவர் பிதுர்பக்தியுடையவனாக இருந்ததனால் நீங்கள் இதைக் கொல்வதானால் பிதுர்ப் பிரீதி செய்து இதைக்கொன்று புசிக்கலாம் என்றான். அதையே யாவரும் ஆமோதித்து அந்தப் பசுவைக் கொன்று சிரார்த்தத்துக்கு உபயோகித்து எழுவருமாக அதைச் சாப்பிட்டு விட்டார்கள், பிறகு அவர்கள் கன்றை மட்டும் குருவிடம் கொண்டு சேர்த்து சுவாமீ! பசுவைப் புலியொன்று கொன்றுவிட்டது! என்று பொய் கூறினார்கள். முனிவர் கபடமின்றி அதை ஒப்புக் கொண்டார். அவர்கள் எழுவரும் குலாசார தர்மத்தை கைவிட்டு கோவதை செய்து அதைச் சாப்பிட்ட பாவத்தாலும் குருவினிடம் பொய் சொன்ன பாவத்தாலும் தசார்ணம் என்னும் இடத்தில் வேடுவகுலத்தில் சகோதரர்களாகப் பிறந்தார்கள்.
கீழ்க்குலத்தில் பிறந்தும் அந்தக் குலத்து ஆசாரப்படி நடந்தும் பிதுர்பக்தியுடையவர்களாக இருந்ததாலும் அவர்களுக்கு முற்பிறவியின் ஞானம் உண்டாக்கிச் சிலகாலம் மனவருத்தத்துடன் காலம் கழித்தார்கள். காலஞ்சரம் என்னும் மலையில் மிருகங்களாகப் பிறந்தார்கள் அப்பொழுது பூர்வஜன்ம நினைவுடன் இந்தப் பிறவியை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்து சரத்தீபத்தில் சக்ரவாகப் பறவைகளாகப் பிறந்தார்கள். அப்போது ஜன்மாந்தர ஞானத்துடன் குருவிடம் பொய் கூறினும் பணிவிடையை முறைப்படி செய்ததால் கோவதை செய்த பாவத்தை ஒழிக்க வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள். சுமனஸ் சுவாக் சுத்தன் பஞ்சாலன் சித்திரத்ரிசகன் சுநேத்திரன் சுதந்த்ரன் என்னும் பெயர் பெற்று அவர்கள் சக்கரவாகப் பறவைகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது நீபதேசத்தரசன் வேட்டையாட வந்தான். சுதந்திரன் என்னும் பறவை அவனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு நான் இவனைப் போல ராஜாவாகப் பிறக்கும்படிப் பூர்வஜனன புண்ணியம் ஏதேனும் இருக்குமோ? என்று ஆசையுற்றுக் கூறியது அதைக் கேட்டுக் கொண்டு அருகிலிருந்த உடன் பிறப்பான இரண்டு பறவைகள் நீ அரசனாகப் பிறந்தால் நாங்கள் அமைச்சர்களாகிறோம் என்றன அப்போது சுவாக் என்னும் பறவை நீங்கள் ஞானத்தையடைய விரும்பாமல் இராஜ்ய செல்வத்தை விரும்பினீர்கள் ஆகையால் அவன் அரசனாகவும் நீங்கள் மந்திரிகளாகவும் சிவகாலத்தில் காம்பிலிய தேசத்தை அடைவீர்கள் என்று கூறியது அப்போது அம்மூன்று பறவைகளும் சுவாக் என்னும் சகோதரனை நோக்கி நாங்கள் போகத்தை அடைந்தால் எப்போது எங்களுக்கு ஞானம் தோன்றும்! அது எப்படி வரும்? என்று கேட்டான் அதற்கு சவாக், பிதுர் பக்தியுடையவர்களாகையால் மற்றொரு பிறவியில் நாம் எல்லோரும் ஒன்று கூடி மானிடப்பிறவியை அடைந்து ஞானவான்களாவோம்? என்று கூறியது.
63. கர்க்க முனிவரின் சீடர்கள்
ஏழு சக்கரவாகப் பறவைகளும், மானச சரஸில் அன்னப் பறவைகளாகப் பிறந்து நீரையும் காற்றையும் அருந்திக் கொண்டு தவத்தால் தங்கள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தன. வனத்தையடைந்த நீபதேச்தரசன் வேட்டையாடித் தன் படைகளோடு நகரத்தையடைந்து சிலகாலம் கழித்துத் தன் புதல்வனான ஹநூஹன் என்பவனுக்குப் பட்டங்கட்டி விட்டு, வனத்தையடைந்து தவஞ்செய்து கொண்டிருந்தான். அவனது தவத்தினால் அந்த வனம் பிரகாசித்ததால் வைப்பிராஜம் என்ற பெயரைப் பெற்றது. அன்னங்களுள் நான்கு யோக நிலையாகிய தவத்திலேயே விருப்புடனும் மூன்று மோக விருப்பத்துடனும் அப்பிறவியை கழித்தான். சுதந்திரன் என்ற பறவை காம்பிலிய நகரத்தின் அரச குமாரனான ஹநூஹன் என்னும் பெயருடன் பிறந்தது. சித்ரத்ரிசகன் சுநேத்திரன் என்னும் பறவைகள் அந்த நகரத்தில் ஒரு வேதியனுக்குப் பிள்ளையாகப் பிறந்து வேதங்களை கற்றுணர்ந்து, சாஸ்திரவான்களாக விளங்கினார்கள். பஞ்சாலன் என்ற பறவை ருக்வேதியாகத் தோன்றி ஆசாரியனாக விளங்கினான். சுத்தன் என்போன் வேதியனாகத் தோன்றி இரண்டு வேதங்களை உணர்ந்து கொண்டான். சுவாக் என்பவன் சாமவேதமுணர்ந்த வேதியனானான் சுமனஸ் என்பவன் யாகஞ் செய்விக்கும் தகுதியுடைய ஆசிரியனாகப் பிறந்தான். இவ்வாறு சிலகாலம் சென்ற பிறகு ஹநூஹன் என்னும் அரசன் பிரமதத்தன் என்னும் தன் புதல்வனுக்குத் தன் அரச உரிமையை வழங்கிவிட்டு வனத்தையடைந்து பெருந்தவஞ் செய்து உயர் பதவியை அடைய விரும்பிக் காலம் கழித்து வந்தான். அவ்வரசன் அவ்வாறு வனத்திற்குச் செல்லும்போது, பஞ்சாலனும் சுத்தனும் அவனுடன் தவவனத்தை அடைந்து தவஞ்செய்து சிறந்த பதவிகளை அடைந்தார்கள்; ஏனைய நால்வரும் அந்தக் காம்பலிய தேசத்திலேயே ஒரு ஏழைப்பிராமணனுக்குப் புத்திரர்களாகப் பிறந்து, திருதிமான், சுமஹாத்மா தத்துவதரிசி, நிருத்தகன் என்ற பெயர்களுடன் சாஸ்திரங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்து, யோக மார்க்கத்திலிருந்து முக்தியை அடைந்தார்கள்.
பீஷ்மரே! கோவதையான பெரும் பாவத்தை செய்தவர்களாயினும் பிதுர் திருப்தி செய்வித்த சிறப்பினால் பல பிறவிகளைக் கழித்த பிறகும் முற்பிறவி உணர்ச்சியோடும் முக்தியை அடைந்தார்கள் ஆகையால் ஒவ்வொருவரும் பிதுர்காரியத்தைப் பக்தி சிரத்தையுடன் அவசியம் செய்யவேண்டும் என்று மார்க்கண்டேய முனிவர் எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று பீஷ்மர் தர்மராஜனை நோக்கிக் கூறினார் என்று சூத முனிவர் நைமிசாரணிய வாசிகளுக்கு எடுத்து கூறினார், மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்து சிவபெருமானுடைய திருவடி நீழலையடைய வேண்டும் என்று விரும்புவோர் யாவரும் இந்தச் சிவமஹா புராணத்தைப் படித்தும் கேட்டும் பிறருக்குச் சொல்லியும், சிவபெருமானின் திருவடியில் மனதைச் செலுத்தியும் நல்வழியில் நிற்பார்களாக மஹாதேவா என்று ஒருமுறை சொன்னவுடனேயே பிரமஹத்தி முதலான பாவங்களெல்லாம் ஒழிந்து போமாயின் அந்தப் பெருமானுடைய மஹாபுராணத்தைப் பக்தியோடு வாசிப்பவரும் கேட்பவரும் நீங்காத சிவலோகத்தில் வாழ்வார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
இந்தச் சிவமஹா புராணத்தைச் சொல்லிய அந்தண உத்தமரை ஆடையணிகளால் அலங்கரித்து சிவபெருமானாகப் பாவித்து விஷ்ணுமூர்த்தியின் அபராவதாரமாகிய வியாஸரூபியே! தேவரீருக்கு நமஸ்காரம் செய்கிறோம்! என்று பூஜித்தால் அனைத்துலக நாயனாகிய சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தம் பதவியைத்தருவார். இந்தப் புராணத்தைச் சொல்லிவந்த புராணிருக்குக்கன்றும் பசுவுமாகத்தக்கதக்ஷிணை வைத்துத் தானம்செய்ய வேண்டும். பொன்னால் செய்த சிவலிங்கமூர்த்தத்தை அவருக்குக் கொடுத்து, சாஷ்டாங்கமாகக் கும்பிட்டு, தாங்கள் சொல்லிய புராணத்தைச் சிரவணஞ் செய்த பயன் எமக்குத் கைகூடுமாக! என்று சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தவர்களே, புராணம் கேட்ட பயனை அடைவார்கள். ஆகையால் இப்புராணஞ் சொன்னவரைச் சிவமாகவே பாவிக்க வேண்டியது அவசியமாகும்.
தர்மசம்ஹிதை முடிந்தது.
