கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளவா அமைந்தனை! பரிதி வாழி! (64)
கதிரும் இருளும்
என்னகாண் புதுமை! தங்க இழையுடன் நூலை வைத்துப்
பின்னிய ஆடை, காற்றில் பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
உன் கதிர், இருட்ப லாவை உரித் தொளிச் சுளையூட் டிற்றே! (65)
கரைபோக்கி எழில் செய்தாய்
இலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்!
அலை அலையாய் உமிழ்வாய் அழகின், ஒலியை யெல்லாம்!
இலைதொறும் ஈரம் காத்த கரைபோக்கி இயல்பு காப்பாய்!
மலையெல்லாம் சோலை யெல்லாம் நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்; (66)