சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் சங்க காலச் சேர மன்னன். கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன.
ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார் (ஆனால் இதில் பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன).
மேலும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காலம்:
இவனது காலத்தை கணிப்பதில் வரலாற்றறிஞர்களிடம் மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. அவை
சிலர் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி அந்த ஐவரும் நூற்றுவரும் பாண்டவ (5) கௌரவர்களே (100) எனக்கூறி இவனின் காலத்தை கி.மு. 3102 வரை எடுத்துச்செல்வர்.
வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் காலத்தை கி.மு. 200க்கும் பிற்பட்டது தான் என கூறுவர்.
வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு எனக்கூறுவர். அதனால் இவன் மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் உணவு அளித்தான் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது.
