சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர். இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது. அப்பாடல் வருமாறு
பாடல்:
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?
இதன் பொருள்:
(பழங் காலத்து தமிழர்கள் வழக்கப் படி) பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும், பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும் அந்தப் பிறவிக் குழந்தையை ஆண்மகன் அல்லவென்று எண்ணி அதனை வாளால் காயப்படுத்துவர். இப்போது நான் காயமில்லாமல் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கிறேனே, நான் ஆண்மகன் ஆவேனா?
அன்றியும் என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா?
(உண்ணக்கூடாது என்று எண்ணி நீரையும் உண்ணாமல் கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான்) சங்ககாலத் தண்டனை இவ்வாறு இருந்தது.
