சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் 'பாரதீய கோகிலா' என்றும், 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, 'மகளிர் தினமாக' இந்தியா முழுவதும் இன்று வரையில் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களைப் பற்றி மேலும் காண்போம் வாருங்கள்.
சரோஜினி நாயுடு அவர்களின் பிறப்பு :-
சரோஜினி நாயுடு அவர்கள், ஹைதெராபாத்தில், ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஆவார். இவர் ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். அவர் ஹைதெராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராவார். சரோஜினி நாயுடு அவர்களின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார், மேலும், அவர் பெங்காலியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எட்டு உடன் பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார், சரோஜினி நாயுடு அவர்கள். அவரது சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.
சரோஜினி நாயுடு அவர்களின் ஆரம்ப கால கல்வி :-
சரோஜினி நாயுடு அவர்கள், இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
சரோஜினி நாயுடு அவர்கள் கவிதை மீது கொண்ட பற்று :-
சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். பல கவிதைகள் எழுதிய அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதெராபாத் நிஜாம், வெளிநாடு சென்று அவர் படிக்க உதவித்தொகையும் வழங்கினார். தனது 16 வது வயதில், அவர் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் கல்விப் பயின்றார். அங்கு அவர், அவரது சமகால புகழ்பெற்ற மேதைகளான 'ஆர்தர் சைமன்' என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். காஸ் அவர்கள், சரோஜினி நாயுடு அவர்களின் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோயில்கள், சமூக சூழல், போன்றவற்றை ஒட்டியே எழுதுமாறு அவருக்கு அறிவுரைக் கூறினார். அவர் தற்கால இந்திய வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளைத் தனது கவிதைகளில் சித்தரித்தார். சரோஜினி நாயுடு அவர்களுடைய படைப்புகளான "தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)", "தி பார்ட் ஆஃப் டைம் (1912)", மற்றும் "தி ப்ரோகேன் விங் (1912)" இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.
சரோஜினி நாயுடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை:-
சரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். எனினும் இந்த இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா, பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.
இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினி நாயுடு அவர்களின் பங்கு:-
1905 ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.
சரோஜினி நாயுடு ஆற்றிய பணிகள்:-
சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920 ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், 'விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்' சட்டமான 'ரௌலெட் சட்டத்தினைப்' பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.
1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார். சரோஜினி நாயுடு அவர்கள், 1925 ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.
1925 ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல், நடந்த "வெள்ளையனே வெளியேறு இந்தியா" இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்றே அழைத்தார்.
ஆகஸ்ட் 15, 1947 ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் 'சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்' என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.
சரோஜினி நாயுடு அவர்களின் இறப்பு:-
சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
