கோவிந்த சுவாமி புகழ்

கோவிந்த சுவாமி புகழ்

bookmark

மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். 37

அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்;
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;38

பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன். 39