கோலங் காண் படலம் - 1204
சீதையைத் தாதியர் அணிசெய்தல்
தாதியர் சீதைக்கு அழகு செய்தல்
1204.
அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
அணி என அமைக்குமாபோல்.
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை
உருவினை மறைப்பது ஓரார்.
அமிழ்தினைச் சுவை செய்தென்ன.
அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம்
ஏழைமை உடைத்து மாதோ!
அமிழ் இமைத்துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்கு
மாபோல் - (கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு இமைகளும்
அக்கண்களுக்கு அழகென்று (இறைவனால்) அமைக்கப்பட்டிருப்பது
போல; உமிழ் சுடர்க் கலன்கண் நங்கை உருவினை மறைப்பது
ஓரார் - (சீதைக்கு அணிசெய்யும் மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள்
சீதையின் (அழகிய) வடிவத்தை மறைக்கும் என்னும் உண்மையை
உணராதவர்களாய்; அமிழ்தினைச் சுவை செய்தென்ன -
(இயல்பாகவே) (அத்துணைச் சுவைகளையும் பெற்றிருக்கிற)
அமிழ்துக்கு. (கற்கண்டு சர்க்கரை முதலியவை கொண்டு) மேலும் சுவை
கூட்டும் முயற்சியைப் போல; அழகினுக்கு அழகு செய்தார் -
(இயற்கையிலேயே) பேர் அழகுவாய்ந்த (சீதையின் உறுப்புகளுக்கு)
(மேலும் புதிதாக) அழகு செய்யத் தொடங்கினார்கள்; இமிழ்திரைப்
பரவை ஞாலம் ஏழைமை உடைத்து - அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த
இந்நிலவுலகத்து மக்கள் (நன்மை புரிவதாக நினைத்துப் பிழைபுரியும்)
அறியாமையுடையவர்கள்.
மாது. ஓ - அசைகள். நினைக்கும் நினைவு நல்லதாயினும். அதற்கு
மாறான செயல் புரியத் தொடங்குதல் பேதைமை. சீதைக்கு
அணிசெய்யக் கருதுதலின் மேல் வைத்து அப்பண்பினை
விளக்கியவாறு. பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர். சீதை அணி
பறித்து அழகு செய்வாள் என (கம்ப : 6991) அவள் அழகின்
பெருமை அறிவித்தவாறு. “அணிகலம் அணிவோர் அணியிலோரே....
இவள்போல் உறுப்பே அணிகலமாக உடையோர்” (பெருங். 4:17)
ஏழைமை. அறியாமை குறித்து நின்றது. “செய்யாக் கோல மோடு
வந்தீர்” (சிலப் 16:11) எனக் கண்ணகியின் அணியா அழகு
புகழப்படும். 3
