கைகேயி சூழ்வினைப் படலம் - 1656
அந்தணர் புகுதல்
வேதம் வல்லார் வருகை
1656.
முன் பயந்து எடுத்த காதல்
புதல்வனை முறையினோடும்
இற் பயன் சிறப்பிப்பாரின்.
ஈண்டிய உவகை தூண்ட,
அற்புதன் திருவைச் சேரும்
அரு மணம் காணப் புக்கார் -
நல் பயன் தவத்தின் உய்க்கும்
நான்மறைக் கிழவர் எல்லாம்.
தவத்தின் நல் பயன் உய்க்கும் - தம் தவத்தின் ஆற்றலால் நல்ல
பயன்களைத்தருகின்ற; நால் மறை கிழவர் எல்லாம் - நான்கு
வேதங்களுக்கும் உரிய அந்தணர்எல்லோரும்; முன் பயந்து எடுத்த காதல்
புதல்வனை - தாம் முற்படப் பெற்றெடுத்தஅன்புக்குரிய பிள்ளையை;
முறையினோடும் - முறைமையுடன்; இல் பயன் சிறப்பிப்பாரின் -
இல்வாழ்க்கைப் பயனில் மேம்பட மணஞ்செய்விப்பவர் போல; ஈண்டிய
உவகைதூண்ட- மிக்க மகிழ்ச்சி செலுத்த; அற்புதன் திருவைச் சேரும்-
இராமபிரான்அரசத் திருவைச் சேர்கின்ற; அருமணம் காணப் புக்கார் -
அரிய திருமணத்தைக் காணமண்டபத்தினுள் புகுந்தனர்.
தம் மூத்த மகனுக்குத் திருமணம் செய்விக்கும்போது எவ்வளவு
உவகை கொள்வாரோ அவ்வளவுஉவகையோடு அந்தணர்கள் இராமபிரான்
முடிசூட்டுவிழாவைக் காண மண்டபத்தினுள் புகுந்தனர். அற்புதன் - மாய
விளையாட்டுடையவன். 77
