கைகேயி சூழ்வினைப் படலம் - 1583

bookmark

1583.    

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்
     துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம்
     கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து
     அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,
     கேகயன் தனையை.

     கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து
என - மான் விழுந்தாற் போலவும்;  நாடகம்  மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வை
கூர்தர - துன்பம் மிக;  சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில்  வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும்
என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’  என்று கருதி;  அயோத்தி
வந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த;  அம் மடந்தை
தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவி
என்னுமாறு;  கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.

     ஓடும் மானையும் ஆடும்  மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.
திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு
வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம்.  அவ்வை -
தாய்; தவ்வை - தமக்கை.                                       4