கோமதிமஹிமை

கோமதிமஹிமை

bookmark

தாருக வனத்தினிலே - சிவன் 
  சரண நன் மலரிடை யுளம்பதித்துச் 
சீருறத் தவம் புரிவார் - பர 
  சிவன்பு கழமுதினை அருந்திடுவார், 
பேருயர் முனிவர் முன்னே - கல்விப் 
  பெருங் கடல் பருகிய சூதனென்பான் 
தேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர் 
  சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 

வாழிய, முனிவர்களே! - புகழ் 
  வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே, 
ஊழியைச் சமைத்த பிரான், - இந்த 
  உலக மெலாமுருக் கொண்டபிரான். 
ஏழிரு புவனத்திலும் - என்றும் 
  இயல்பெரும் உயிர்களுக் குயிராவான், 
ஆழுநல் லறிவாவான், - ஒளி 
  யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். 

தேவர்க் கெலாந்தேவன். - உயர் 
  சிவபெரு மான்பண்டொர் காலத்திலே 
காவலி னுலகளிக்கும் - அந்தக் 
  கண்ணுந் தானுமிங் கோருருவாய் 
ஆவலொ டருந்தவர்கள் - பல 
  ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே 
மேவிநின் றருள் புரிந்தான். - அந்த 
  வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 

கேளீர், முனிவர்களே! இந்தக் 
  கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே 
வேள்விகள் கோடி செய்தால் - சதுர் 
  வேதங்க ளாயிர முறைபடித்தால், 
மூளுநற் புண்ணியந்தான் - வந்து 
  மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும், 
நாளுநற் செல்வங்கள் - பல 
  நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்! 

இக்கதை உரைத்திடுவேன், - உளம் 
  இன்புறக் கேட்பீர், முனிவர்களே! 
நக்க பிரானருளால் - இங்கு 
  நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! 
தொக்கன அண்டங்கள் - வளர் 
  தொகைபல கோடிபல் கோடிகளாம்! 
இக்கணக் கெவரறிவார்? - புவி 
  எத்தனை யுளதென்ப தியார றிவார்? 

நக்க பிரானறிவான், - மற்று 
  நானறி யேன்பிற நரரறியார். 
தொக்க பேரண்டங்கள் - கொண்ட 
  தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற 
தக்கபல் சாத்திரங்கள் ஒளி 
  தருகின்ற வானமோர் கடல்போலாம் , 
அக்கட லதனுக்கே - எங்கும் 
  அக்கரை இக்கரை யொன்றில்லையாம். 

இக்கட லதனக்கே - அங்கங் 
  கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல் 
தொக்கன உலகங்கள், - திசைத் 
  தூவெளி யதனிடை விரைந்தோடும், 
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த 
  வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்! 
மெய்க்கலை முனிவர்களே! - இதன் 
  மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்! 

எல்லை யுண்டோ இலையோ? - இங்கு 
  யாவர் கண்டார் திசை வெளியினுக்கே? 
சொல்லிமொர் வரம்பிட்டால் - அதை 
. . . . . . 
(இது முற்றுப் பெறவில்லை)