கார்முகப் படலம் - 803
803.
‘பெய் கடல் பிறந்து. அயல்
பிறக்கொணா மருந்து பெற்று.
ஐய பொற் கலத்தொடு அங்கை
விட்டு இருந்த ஆதர்போல்.
மொய் கிடக்கும் அண்ணல் தோள்
முயங்கிடாது முன்னமே.
கைகடக்க விட்டு இருந்து
கட்டுரைப்பது என்கொலோ?’
பெய் கடல் பிறந்து - பல வளங்களும் நிறைந்த பாற்கடலிலே
தோன்றி; அயல் பெறற்கு ஒணா - வேறிடத்தில் பெற முடியாத;
மருந்து பெற்று - அமுதத்தைத் தம் நல்வினைப் பயனால்
அடைந்தும்; ஐய பொன் கலத்தொடு - (அதனை உடனே பருகாமல்)
அழகிய பொன்கலசத்தோடு; அம்கை விட்டிருந்து - தம் கையிலிருந்து
அதனை நழுவவிட்ட; ஆதர்போல் - அறிவற்ற மூடர்களைப் போல;
மொய் கிடக்கும் - வலிமை மிக்க; அண்ணல்தோள் - அப்
பெருமானின் தோள்கள் (காணப் பெற்றும்); முன்னமே முயங்கிடாது -
(கண்ட) அப்போதே தழுவிக் கொள்ளாமல்; கைக் கடக்க - கைநழுவிப்
போகும்படி; விட்டிருந்து - விட்டொழித்துப் பின்; கட்டுரைப்பது -
தனியிருந்து பலவாறாகக் கூறிப் புலம்புவது; என்கொல் - எதற்காக?
அமுதம் கண்ணிற்பட்டால் உடனே அது நிறைந்துள்ள
பொற்கலத்தைக் கைப்பற்றி உண்பது முறை. ஆனால். அப்படிச்
செய்யாது கைநழுவவிட்ட மூடர்போல இராமனைக் கண்ணால்
கண்டபோது நான் அவனைத் தழுவிக் கொள்ளாமல் விட்டுவிட்டு
இப்போது பலவாறு பேசி என்ன பயன்’ என்கிறாள் சீதை. ஆதர் -
அறிவில்லாதவர். 54
