கங்கை காண் படலம் - 2426
2426.
‘என் புகழ்கின்றது, ஏழை
எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை,
மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்.
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
உயர் குணத்து உரவுத் தோளாய்!
‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- உயர்த்த உத்தமக்
குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின
னேன் - அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் - மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் - எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.
‘ஏழை எயினன்’ - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான்.
சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் ‘புகழ்க்கற்றை’ என்றார்.
மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும்
என்பதாகும். 36
