உலாவியற் படலம் - 1198
தசரதனுக்குப் பல்லாண்டு பாடுதல்
1198.
சுழலும் வண்டும். மிஞிறும். சுரும்பும். சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்.
குழலினோடு உற. கூறு பல்லாண்டு ஒலி.
மழலை யாழ் இசையோடு மலிந்தவே.
சுழலும் வண்ம் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து உழலும் -
சுற்றிச் சுற்றி ஒலிக்கும் இயல்புடைய வண்டுகளும். அவற்றின் இனமான
மிஞிறும் சுரும்புகளும் சுற்றித்திரிதலுக்கு இடமான; வாச மது மலர்
ஓதியர் - நறுமணமும் தேனும் நிறைந்த மலர்களையுடைய
கூந்தலுக்குரிய பெண்டிர்; குழலினோடு உறக கூறு பல்லாண்டு ஒலி -
புல்லாங்குழலோடு பொருந்துமாறு. (தசரத வேந்தனைப்) பல்லாண்டு
வாழ்க என வாழ்த்தும் (இசை) ஒலி; மழலையாழ் இசையோடு
மலிந்த - அம்மகளிருடைய கொஞ்சு மொழிக்குச் சமமான யாழ்
இசையோடு மிக்கு ஒலித்தன.
மிடற்றுக்கருவி. துளைக்கருவி. நரம்புக்கருவி எனும் இசைபிறக்கும்
கருவி வகைகளின் இன்னொலியோடு வண்டினங்களின் ஒலியும்.
மகளிர் கூந்தலின் கொடையாகச் சேர்ந்து கொண்டன எனக்
கூறியவாறு. மன்னனுக்கு பல்லாண்டு (அஃறிணை) வண்டுகளும் பாடின
என்று குறிப்பால் உரைத்தார். 51
