உலாவியற் படலம் - 1148
வீதியில் மகளிர் வந்து கூடிய தன்மை (1148-1152)
1148.
மான் இனம் வருவ போன்றும்.
மயில் இனம் திரிவ போன்றும்.
மீன் இனம் மிளிர வானில்
மின் இனம் மிடைவ போன்றும்.
தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப.
சிலம்பு இனம் புலம்ப எங்கும்.-
பூ நனை கூந்தல் மாதர் -
பொம்மெனப் புகுந்து. மொய்த்தார்.
பூ நனை கூந்தல் மாதர்- (தேன் நிறைந்த மலர்களைச் சூடலால்)
பூவிலிருந்து வரும் தேனால் நனைகின்ற கூந்தலையுடைய (மிதிலை
நகர்) மகளிர்; மான் இனம் வருவ போன்றும். மயில் இனம் திரிவ
போன்றும் - மான்களின் இனங்கள்(கூட்டமாக) வருவன போலவும்
மயிலின் கூட்டங்கள் திரிவன போலவும்; மீன் இனம் மிளிர்வ
போன்றும். மீன் இனம் மிடைவ போன்றும் - விண்மீன்களின்
கூட்டம் வானில் மிளிர்வது போலவும். மின்னற் கூட்டங்கள்
நெருங்குவன போலவும்; தேன்இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பினம்
புலம்ப - (கூந்தலில் உள்ள தேனுக்கு) வண்டுக் கூட்டங்கள் கூடிய
ஒலியெழுப்ப.(காலில் அணிந்துள்ள) சிலம்பும் அதன் இனங்களாகிய பிற
காலணிகளும் ஒலிதரவும்; எங்கும் ‘பொம்’ எனப் புகுந்து
மொய்த்தார் - காணுமிடமெல்லாம் (தெருவில்) விரைவோடு வந்து
நிரம்பினார்கள்.
முதல் இரண்டடிகளில் கண் விருந்தும் பின் இரண்டடிகளில் செவி
விருந்தும் அளித்தவாறு மகளிர் திரண்டனர் என்க. மிளிர - மிளிரும்.
எச்சத்திரிபு.
சிலம்பினமும் வண்டினமும் ஒலிக்க ஒலிக்க. மானினம் போலவும்
மயிலினம் போலவும் மகளிர் விழிக்கும் செவிக்கும் விருந்தாய்த்
திரிந்தனர் என்பதாம். உலாவியற் படலம் என்பதற்கேற்ப. முதற்
பாட்டிலேயே. மானாக. மயிலாக. மீனாக. மின்னாக உலாவ விட்டுள்ள
திறம் காண்க. கோசல விருந்தினரின் கோலம் காண. மகளிர். கூட்டம்
கூட்டமாகத் தெருவில் வருவதும். திரிவதுமாக இருந்தனர் என்பார்.
“மானினம் வருவ போன்றும். மயில் இனம் திரிவ போன்றும்”
என்றார். மகளிரின் அடியும் உடையும் நோக்க. மானின் துள்ளலும்
மயிலின் தோகையும் நினைவில் வர. மானையும் மயிலையும் உவமித்த
கவிஞர். மேல் நிமிர்ந்து பார்த்தவுடன். அம்மகளிர் அணிந்துள்ள
அணிகளின் ஒளிவெள்ளம். விண்மீனையும் மின்னலையும்
நினைவுக்குக் கொண்டு வந்ததனால். மீனினம் “மிளிர வானில்
மின்னினம் மிடைவ போன்றும்” என்றார். அவர்களின் பின்னழகு
கண்ட கவிஞரின் பார்வைக்குக் கூந்தலில் மொய்க்கும் வண்டுகளும்
மலர்களும் காட்சிப்பட்டதனால். “தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப....
பூநனைக் கூந்தல்மாதர்” என்றார். காட்சித்தேனை உண்டு திளைக்க
ஈண்டிய மகளிரின் அடர்த்தியைக் குறிக்க. “பொம்மெனப்புகுந்து
மொய்த்தார்” என்றார். 1
