இரண்டாம் காட்சி

bookmark

நேரம் : மாலை மூன்று மணி

இடம் : "மஹாராஜா ஹொடே"லில் ஓர் அறை.

பாத்திரங்கள் : விசுவநாதன், அப்பாசாமி, பத்பநாபன், அனந்தகிருஷ்ணன், ராமநாதன், கங்காதரன்

பத்மநாபன் (மோட்டார் சப்தம் கேட்டு) : அடே விசுவம்! பேபி வருகிறது.

விசுவநாதன் : பொஸொட்டோ வுக்குப் போய் அங்கிருந்து சினிமா போகலாம்.

[வாசலில் மோட்டார் வந்து நிற்கிறது. கங்காதரனும் ராமநாதனும் இறங்கி உள்ளே வருகிறார்கள்.]

அனந்தகிருஷ்ணன் : அடே, ராமநாதன் கூடவா? இவனை எங்கே பிடித்தாய்?

கங்காதரன் : வழியில் அகப்பட்டான்; அழைத்து வந்தேன்.

ராமநாதன் : உளறாதே! நானல்லவா உன்னைப் பிடித்தேன்?

பத்ம (கையைத் தட்டி) : அடே பையா! இரண்டு பேருக்கு டிபன் கொண்டு வா! 

அனந்த : ஏன்? எல்லோருக்கும் கொண்டு வரச் சொல்லேன்? இன்னொரு முறைதான் சாப்பிடுவோமே?

விசுவ : சை! சை! பொஸொட்டோ வுக்குப் போக வேண்டும். மறந்துவிடாதே.

ராம : பாவிப் பசங்களே! புதுச்சேரிக்குப் போனீர்களாமே?

அனந்த : பாவியாவது? நீதான் கொடுத்து வைக்காத பாவி!

[இதற்குள் சிற்றுண்டி வருகிறது. சாப்பிடத் தொடங்குகிறார்கள்.]

அப்பா : பட்டணத்தில் ஒன்பது ரூபாய்க்கு விற்கும் 'சாம்பேன்' அங்கே மூன்று ரூபாய். எவ்வளவு வித்தியாசம் பார்!

ராம : உண்மையாகவே நீங்கள் குடித்ததாகவா சொல்கிறீர்கள்? என்ன துணிச்சல் உங்களுக்கு?

அனந்த : சுகமனுபவிக்கப் பிறந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்தானப்பா!

ராம : கங்காதரன் துணிந்த தல்லவா எல்லாவற்றையும்விட ஆச்சரியம்?

கங்கா : எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாய்த் தானிருக்கிறது. நாம் அவ்வளவு தூரத்துக்குப் போவது சரியல்ல என்ன நினைக்கிறேன்.

விசுவ : நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். காரியத்தில் ஒன்றும் குறைவில்லை.

கங்கா : ஒரு சமாசாரம்; இன்று எங்கள் வீட்டுக்கு 'யூத் லீக்' தொண்டர் இருவர் வந்தார்கள். சட்டசபையில் வரப்போகும் மதுவிலக்குப் பிரேரேபணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களை லா காலேஜில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

பதும : எனக்குத் தெரியும் அவர்களை, கதர்ப்பித்தர்கள்.

ராம : ரொம்ப சரி; ஒரு சிகரெட் கொடு.

பதும : அதுதான் கிடையாது. வாங்க வேண்டும்.

விசுவ : வழியில் வாங்கிக் கொள்ளலாம். கிளம்புங்கள்.

கங்கா : எங்கே போவதாக உத்தேசம்?

விசுவ : முன்னமே சொன்னேனே? சினிமாவுக்கு - வழியில் பொஸொட்டோ வில் இறங்கிவிட்டு.

கங்கா : எனக்குப் பிடிக்கவில்லை.

ராம : எனக்கும் பிடிக்கவில்லை.

பதும : சை! சை! ராமு! உனக்காகத்தானே முக்கியமாய்ப் போகவேண்டுமென்பது?

கங்கா : வோட்டு எடுத்துவிடலாம்.

விசுவம் : நல்ல யோசனை. பொஸொட்டோ வுக்குச் சாதகமானவர்களெல்லாம் கை தூக்குங்கள்.

[கங்காதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கை தூக்குகிறார்கள்]

கங்கா : பெரும்பான்மையோர் வாக்கின்படி நடக்க நான் கடமைப்பட்டவன்.

அப்பா : மாட்டேனென்றால் யார் விடுகிறார்கள்?

[எழுந்து வெளியே போகின்றனர்.]