ஆற்றுப் படலம் - 29
சரயுவினின்று பல கால்கள் பிரிதல்
கண்ணன் : வெள்ளம்
29.
காத்த கால்மள்ளர் வெள்ளக்
கலிப்பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த்திவலை, பொன்னும்
முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று, அலையஆகி
நிமிர்ந்து பார்கிழிய நீண்டு,
கோத்த கால்ஒன்றின் ஒன்று
குலம் எனப்பிரிந்தது அன்றே.
மன்னர் காத்த கால்- உழவர்கள் காத்துநின்ற கால்வாயில்;
வெள்ளக் கலிப்பறை கறங்க- வெள்ளம் வருவதைத் தெரிவிக்கும்
கிணைப்பறை ஒலிக்க; கை போய்- ஒழுங்காகச் சென்று; சேர்த்த
நீர்த்திவலை- திரண்ட நீர்த்திவலையும்; பொன்னும் முத்தும்-
பொன்னும் முத்தும் ஆகியவைகளை; திரையின் வீசி- அலைகளால்
வீசி எறிந்து; நீத்தம் அன்று- வெள்ளம் பெருகியும்; அலைய ஆகி
நிமிர்ந்து- அலைகளால் உயர்ந்தும்; பார் கிழிய நீண்டு- நிலம்
கிழியும்படி நீளச் சென்று; கோத்த கால் ஒன்றின் ஒன்று- முறையாகத்
தொடர்கின்ற ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாயாக; குலம்
எனப் பிரிந்தது- குலம் பல கிளைகளாகப் பிரிவது போல் பிரிந்து
சென்றது, சரயு வெள்ளம்.
சரயு ஆறு பல வாய்க்கால்களாக அங்கங்கே பிரிந்து நீளப்
பாய்ந்தது. ஒரே குலம் பல கிளைகளாகப் பிரிந்து நெடிது தொடர்ந்து
வாழ்வது போன்றது. இது, கால்வாய் ஒன்று பலவாகப் பிரியினும்
உள்ளுறை நீர் ஒன்றே; உயிர்க்குலம் பல கிளைகளாகப் பிரிந்தாலும்
உயிர் ஒன்றே. இக் கருத்து அடுத்த பாடலின் கற்பனையாக விரிகிறது.
குலம் ஒன்றில் அனேகம் பெயர் உற்பவித்தாற் போல ஆற்றில்
கால்கள் பல பிரிந்தன’ என்பது ‘இராமாயணக் கருப்பொருள்’ தரும்
விளக்கம். (ஐயரவர்கள் நூலகப் பதிப்புக் காண்க.) 18
